Friday, September 23, 2011

மதுரையில் இருந்து சர்வதேச விமானங்கள் புறப்படுமா

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2011,00:11 IST
மதுரை : மதுரை சர்வதேச விமான நிலையத்திற்குரிய தகுதி பெற்றும் இதுவரை வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படவில்லை. ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் சார்பில், நவ.,15 முதல் துபாய்க்கு விமானம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில், மதுரை விமான நிலையத்தில் 17,500 சதுர மீட்டருக்கு நவீன ஒருங்கிணைந்த புதிய முனையம் கடந்தாண்டு செப்., 12ல் திறக்கப்பட்டது. இங்கிருந்து நவ.,15 முதல் துபாய்க்கு நேரடி சேவை தொடங்க ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் தயாராக உள்ளது. இதற்கு ஏதுவாக மதுரை சுங்கத்துறை கமிஷனர் நயினார் தலைமையில் சுங்கபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்ததாக இலங்கை, சிங்கப்பூருக்கும் நேரடி விமான சேவை துவக்கப்படுகிறது. மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடி சேவை துவங்க அனுமதி கேட்டு விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விண்ணப்பித்துள்ளது. அக்.,15க்குள் அனுமதி கிடைத்தால் மட்டும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் பறப்பது சாத்தியம் என்று இந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்களுக்கு சம்பள பாக்கி: ஏர் இந்தியா ஊழியர்களுக்கு மாதம் ஊக்கத்தொகையுடன் சம்பளம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் நிதிச்சுமையால், ஊழியர்களுக்கு இழுபறியாகத்தான் ஏர்இந்தியா நிறுவனம் சம்பளம் வழங்கியது. தற்போது ஆகஸ்ட் வரை சம்பளம் கொடுத்தாலும், மூன்று மாதங்களுக்குரிய ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடிக்கிறது. இந்த வகையில் மதுரை ஊழியர்கள் 20 பேருக்கு ரூ.4 லட்சம் ஏர்இந்தியா பாக்கி வைத்துள்ளது.

Source - Dinamalar.com

Wednesday, September 21, 2011

வாழ்க, வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

வாழ்க, வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

'அக்கம் பக்கம் பாக்கணும்!'

'ஒரு கண்ணில் தூசு விழுந்தால், மறு கண்ணும் கலங்கிப் போகும்’ என்பார்கள். உண்மைதான்! உடலின் வேறு எந்தப் பாகங்களுக்கும் இப்படியான தொடர்பு இருப்பதில்லை.
 'என்னன்னே தெரியலப்பா... ஒரு வாரமா வலது கையை மேலே தூக்கும்போதெல்லாம் வலி உயிர் போகுது. ஒருக்களிச்சபடி, ஒரே மாதிரியே படுத்ததால வந்ததா? அல்லது, டூ வீலர்ல 80 கிலோ மீட்டர் தூரம் போயிட்டு வந்தேனே, அதனாலயா? கம்ப்யூட்டர்ல அதிகம் வேலை பார்க்கவேண்டி இருந்துது. ஒருவேளை, இந்த வலிக்குக் காரணம் அதுதானா? ஒண்ணுமே புரியலப்பா!’ என்று அலுத்துக் கொள்வார்கள் அன்பர்கள் சிலர்.
கால்களில் வலி வந்தாலும் இப்படித்தான். 'அட, ஏம்ப்பா கேக்கறே? பாதி வழியில பெட்ரோல் இல்லாம வண்டி நின்னு போச்சு. பங்க் வரைக்கும் உருட்டிக்கிட்டே வந்ததுல, அன்னிக்கி ராத்திரி இடது கால்ல ஆரம்பிச்ச வலி, இன்னிய வரைக்கும் போகலை. ராத்திரி தூங்கும்போது, சுருக்குன்னு ஏதோ நரம்பு தெறிச்சி வெளியே வர்ற மாதிரி ஒரு உணர்வு; கடுமையான வலி!’ என்று புலம்பும் அன்பர்கள் இருக்கிறார்கள்.
ஒரு கையில், ஒரு காலில் வலி ஏற்படும்போதெல்லாம் மற்ற கையும் காலும் நடப்பவற்றையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால், கண்கள் அப்படியில்லை. விருட்டென்று சின்ன பூச்சி வந்து முகத்தில் மோதி, ஒரு கண்ணில் பட்டு, சட்டென்று கலக்கம் ஏற்பட, உடனே மற்றொரு கண்ணும் கலங்கிவிடும். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல், சகோதரப் பாசத்துடன் அழுது, கொஞ்சம் கண்ணீரைச் சிந்திவிட்டுத்தான் சகஜ நிலைக்கு வரும். பூச்சி பட்ட கண், கலங்கிச் சிவந்து, எரிச்சலைக் கிளப்பி, கண் மூடிக் கிடப்பதே இன்பம் என்பதுபோல், இமைகளால் மூடிக் கொள்ளும். ஆக, உடல் உறுப்புகளில் கண்கள் மிகவும் நுட்பமானவை. ஒற்றைச் சொல்லைக்கூடத் தாங்க முடியாமல் சிலர் பொசுக்கென்று அழுது அரற்றுவார்களே... அதுபோல் சின்ன பிரச்னையைக்கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து மருகுபவை கண்கள்.
அவற்றைப் பேணிக் காப்பது நம்முடைய மிக முக்கியமான கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.
சரி... கண்களுக்கான பயிற்சியைச் செய்யத் துவங்குவோமா?
முதலில்... உறுத்தாத, மெல்லிய விரிப்பு ஒன்றைத் தரையில் விரித்துக் கொள்ளுங்கள். வஜ்ராசனம் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். கால்களின் முட்டிப் பகுதிகளைத் தரையில் படும்படி மண்டியிடுங்கள். வீட்டுப் பாடம் எழுதி வரவில்லையென்றால், அல்லது ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது கவனிக்காமல் பக்கத்து இருக்கை நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தால், ஆசிரியர் கோபம் கொண்டு, 'ஏய்... எழுந்திரு! கிளாஸ் வாசல்ல போய் முட்டி போடு!’ என்று அதட்டுவாரே, நினைவிருக்கிறதா? அப்படி முட்டி போடுகிற கொடுமையெல்லாம் தற்காலத்தில் பெரும்பாலும் நடப்பதில்லை என்பது குழந்தைகளுக்கு மிகப் பெரிய விடுதலை.
அப்படி முட்டி போட்டு, அப்படியே குதிகாலை மடக்கிக்கொண்டு, நம்முடைய பின்பக்கத்தை கால்களின் மீது வைத்தபடி அமர்ந்துகொள்வதே வஜ்ராசனம். மிக அழகிய பயிற்சி இது. இப்படி வஜ்ராசனத்தில் தினமும் இருபது நிமிடங்கள் இருந்தால், கால்களிலும் ஆடுகால் தசைப் பகுதிகளிலும் இருக்கிற வலிகளெல்லாம் பறந்தோடிவிடும். இப்போது வஜ்ராசனத்தில் உட்கார்ந்து கொண்டுவிட்டீர்கள்தானே?!
அடுத்து, வாலிபால் விளையாடியிருக்கிறீர்களா? அப்போது இரண்டு கைகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு, பறந்து வருகிற பந்தை, கைகளால் டப்பென்று அடித்து விளையாடுவோம், இல்லையா? அதேபோல், வஜ்ராசனத்தில் அமர்ந்துகொண்டு, இரண்டு கைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்படிச் சேர்த்து வைக்கிற தருணத்தில், இரண்டு கைகளின் கட்டை விரல்களையும் அடுத்தடுத்து தெரிகிறாற்போல், 'எது குட்டை, எது நெட்டை’ என்று ஒப்பிட்டுப் பார்க்கிற பாவனையில் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, பிணைத்திருக்கிற கைகளை கண்களுக்கு நேரே நீட்டிக் கொள்ளுங்கள். அந்தக் கட்டைவிரல்களின் நகப் பகுதிகளை, உங்களது இரண்டு கண்களும் பார்க்கட்டும். நேரே நீண்டிருக்கும் கைகளை உங்களுக்கு வலப்பக்கமாக மெள்ளக் கொண்டு செல்லுங்கள். கிட்டத்தட்ட தோள் பகுதிக்கு பக்கவாட்டுப் பகுதி வரை, கைகள் செல்லட்டும். கண்களுக்கு நேரே இருக்கும்போது நகங்களில் பதிந்த பார்வை மட்டும் விலகாமல், தொடர்ந்து நகங்களைப் பின்தொடரட்டும். கழுத்தைத் திருப்பாமல், உங்களின் பார்வை மட்டும் நடுவில் இருந்து வலது பக்கத்துக்கு நகர வேண்டும். சில விநாடிகள் அப்படியே இருங்கள். நகங்களின் மீதான பார்வையை எந்தக் காரணம் கொண்டும் எடுத்துவிடாதீர்கள். இப்போது, கைகளை வலது பக்கத்தில் இருந்து மெள்ள இடது பக்கத் தோள்பகுதியின் பக்கவாட்டுப் பகுதிக்குக் கொண்டு வாருங்கள். அப்படிக் கொண்டு வருகிறபோது, மீண்டும் அந்தக் கைகளுடனேயே, நகங்களின்மீது பதிந்தபடி உங்களின் பார்வை பயணம் செய்யட்டும்.
இதுதான் முதல் நிலைப் பயிற்சி. அதாவது, கண்களுக்கு நேரே கைகளை வைத்துக் கொண்டு, இரண்டு கட்டைவிரல்களின் நகங்களைப் பார்த்தல்; அடுத்து, கைகள் வலது பக்கம் நகரும்போது, அந்த
நகப் பகுதிகளுடனேயே நம்முடைய கண்கள், அதாவது பார்வை மட்டும் பயணித்தல்; பிறகு, வலதில் இருந்து இடது பக்கத்துக்குக் கைகள் பயணிக்க, அந்தக் கைகளுடன், கட்டை விரல் களுடன், விரல்களின் நகங்களுடன் நம் கண்களும் பயணம் செய்யட்டும். இப்படி ஐந்து முறை செய்யுங்கள்.
இந்தப் பயிற்சியை மேற்கொள்வது கடினமாகத் தெரியவில்லைதானே? மிக எளிமையான பயிற்சி இது. கண்களுக்கான பயிற்சி என்றாலும், இது
கண்ணுக்கும் புத்திக்கும், மனசுக்கும் நினைவாற்றலுக்குமான விசேஷப் பயிற்சியும்கூட என்பதை அடுத்தடுத்த நாட்களில், இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுக் கிடைக்கிற பலன்களின் மூலமாக உணர்வீர்கள்.
கண்களை மூடிக்கொண்டு புத்தி ஏதேனும் ஒரு விஷயத்தில் ஒருமுனைப்படுவது என்பது ஒரு வகை. நகங்களின்மீது பார்வையையும் புத்தியையும் செலுத்தச் செலுத்த, உங்களையும் அறியாமல், உள்ளுக்குள் ஒருமித்த நிலைக்கு ஆளாவீர்கள். அதேபோல், கூர்மையான பார்வைப் பயிற்சி, கண்களின் அத்தனை நரம்புகளையும் உசுப்பிவிடும் தன்மை கொண்டது. ரயில் பயணத்தில் நேர்க்கோட்டில் பார்வையைச் செலுத்தினால், ரயில் பெட்டிகளின் உட்பக்கங்களையும் எதிரில் உள்ள மனிதர்களையும் மட்டுமே பார்க்க முடியும். அதே நேரம், நமக்குப் பக்கவாட்டுப் பகுதிகளில் பார்க்க, பக்கத்து இருக்கை மனிதர்கள், ஜன்னல், ஜன்னலுக்கு வெளியே உள்ள மரம், செடி, கொடிகள், ஆடு- மாடுகள், வயல்வெளிகள், டிராக்டர்கள், தட்டாம்பூச்சி பிடிக்கிற குழந்தைகள்... என பார்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
பார்வையில் விசாலம் இருப்பின், மனதிலும் விசாலம் பரவும்; மனமே விசாலமாகும்!
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

Source - Vikatan Magazine

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி


ற்புதங்களால் நிறைந்தது இந்த உலகம். பச்சைப் பசேல் வயல்வெளிகள் நம்மைத் தாலாட்டும்; மஞ்சள் கலந்த வெயிலின் சூழல் நம்மை ஈர்க்கும்; கருமை நிற இருளும், உலகம் மொத்தத்துக்குமான ஒற்றைப் பௌர்ணமி நிலவும் நம்மைக் கிறங்கடிக்கும்.
அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்து, படித்து வளர்ந்தவர்களும், வாழ்ந்தவர்களும் உண்டு, நம் தேசத்தில். ஆனால், வீட்டுக்கு வீடு மின்சாரம் வந்துவிட்டதும், குண்டு பல்புகளும், பிறகு டியூப்லைட்டுகளும் அலங்கரிக்கத் துவங்கின. இதையடுத்து சமீபமாக, இரண்டு விரல் அளவுக்குக் குச்சி பல்புகளும் கோலோச்சுவதற்கு வந்துவிட்டன.
மின்சாரம் வந்துவிட்ட காலகட்டத்தில், படிப்பதற்கு வசதியாக டேபிள் விளக்குகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. வீட்டில் உள்ள விளக்குகளையெல்லாம் அணைத்துவிட்டு, பெற்றோர்களும் உடன்பிறந்தவர்களும் தூங்கிக்கொண்டிருக்க... ப்ளஸ் டூ படிக்கிற பையனோ பெண்ணோ நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு அருகில் ஒரு மேஜை இருக்கும்; அந்த மேஜையின் மீது ஒரு முழம் உயர அளவில், தெருவில் உள்ள மின்கம்பங்களைப் போல் சிறிய கம்பம் ஒன்றிருக்கும். அதன் உச்சியில் குண்டு பல்பு பொருத்தப்பட்டிருக்கும். அந்த பல்புக்குத் தொப்பி அணிவித்திருப்பதுபோல், கூடு ஒன்றும் இணைத்திருப்பார்கள். பல்பின் வெளிச்சமானது வேறெங்கும் பரவி, யாருக்கும் இடையூறு செய்யாதபடி, அந்தத் தொப்பி தடுத்தாட்கொள்ளும். பல்பு வெளிச்சம், மேஜைப் பரப்பின் மீது மட்டும் பரவியிருக்கும். அந்த இடத்தில் புத்தகத்தை விரித்து வைக்க... வெளிச்சம் புத்தகத்துக்குப் பரவி, எழுத்துக்களைக் கண்களுக்குக் காட்டும். இப்படியான 'டேபிள் லேம்ப்’ வெளிச்சத்தில், விடிய விடியப் படித்து, உருவேற்றிக் கொண்டு, பரீட்சை எழுதி, வெற்றி பெற்று... பின்னாளில் அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் பதவி வகித்தவர்கள் நிறையப்பேரை அறிவேன். அவர்கள் தங்களை நம்முடைய உலக சமுதாய சேவா சங்கத்தில் இணைத்துக் கொண்டும் சேவையாற்றியுள்ளனர்.

அரிக்கேன் விளக்கில் படித்தவர்கள், தெரு விளக்கில் படித்தவர்கள், டேபிள் விளக்கில் படித்தவர்கள் என வளர்ந்த காலகட்டமெல்லாம் முடிந்துவிட்டது போலும்! இன்றைக்கு வெளிச்சத்தை விதம் விதமாகக் கக்குகிற விளக்குகளெல்லாம் தயாரிக்கப்பட்டுவிட்டன. வீடுகள் பலவற்றிலும் அந்த விளக்குகள் பொருத்தப்பட்டு கன ஜோராகக் கண்ணைப் பறிக்கும் அளவுக்கு வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டு இருக்கின்றன.
இந்த விளக்குகளால் பலவித நன்மைகள் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் சில தருணங்களில், இதுபோன்ற விளக்குகளும் வெளிச்சங்களும்தான் நம் கண்களைப் பதம் பார்க்கவும் செய்கின்றன.
எனக்குத் தெரிந்து, அரிக்கேன் விளக்கில் படித்தவர்களுக்குக் கண்களில் எந்தப் பிரச்னையும் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால், கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில், ஐந்தாறு வயதே ஆன குழந்தைகள்கூட, மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்கிறேன்.
ஒருமுறை, காரைக்குடியில் இருந்து தங்களுடைய எட்டு வயது மகனுடன் பெற்றோர் வந்திருந்தனர். அவர்களின் முகங்களில் சோர்வும் அயர்ச்சியும் தெரிந்தன. அந்தப் பையன் வெளுத்துப்போன நிறத்தில், சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருந்தான்.
அந்தப் பையனின் அம்மாதான் பேச ஆரம்பித்தாள்... ''எப்பப் பார்த்தாலும் டி.வி-யே கதியாக் கிடக்கறான், சுவாமி! கையில ரிமோட்டை வைச்சுக்கிட்டு, கண் கொட்டாம டி.வி-யையே பாத்துக்கிட்டிருக்கான். போதாக்குறைக்கு அதுல வீடியோ கேம்ஸ் வேற விளையாடிக்கிட்டு இருக்கான். சரியா சாப்பிடறதும் இல்லை; தூங்கறதும் கிடையாது. தினமும் கண்ணைக் கசக்கிக்கிட்டு, தூக்கம் வராம புரண்டு புரண்டு படுத்துக்கிட்டிருக்கான்.
ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனப்ப, அவங்கதான் கண்ணாடி போடணும்னு சொல்லிட்டாங்க. இந்தச் சின்ன வயசுல, சோடாபுட்டி கண்ணாடியோட அவனைப் பாக்கறதுக்கு பாவமா இருக்கு, சுவாமி!'' என்று சொல்லிவிட்டு, அழத் துவங்கினாள் அந்தப் பெண்மணி.
நீண்ட நேரம் ஓரிடத்தில் உட்கார்ந்திருந்துவிட்டு, பிறகு எழுந்திருக்கும்போது என்ன செய்கிறோம்... இடுப்பை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக முறுக்கி, ஒடித்து, வளைத்து நிமிர்த்திக் கொள்கிறோம், அல்லவா? அசைவற்றுக் கிடந்ததால் மரத்துப் போய்விட்ட கால்களை நன்றாக உதறிக் கொள்கிறோம்தானே?! விரல்களுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் சற்றுநேரம் இருந்தாலே நரம்புகள் அயர்ச்சியாகி, கொஞ்சம் கனம் கூடினது போல் ஆகிவிடுகின்றன. பிறகு விரல்களுக்குச் சொடுக்கு எடுக்கும்போது, நமக்கு ஏற்படுகிற விடுதலையையும் நிம்மதியையும் சொல்லிப் புரியவைக்க வேண்டுமா என்ன?
அப்படித்தான் கண்களும்! நேருக்கு நேராக, ஒரே நேர்க்கோட்டில் டி.வி. அல்லது கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது, கண்களுக்கு அது சிக்கலைக் கொடுக்கும். பார்வையில் சின்னச் சின்னதாகக் கோளாறுகளை ஏற்படுத்தும். திடீரென கண்களில் இருந்து நீர் வெளியேறியபடி இருப்பதும், நாம் அடிக்கடி கண்களைக் கசக்கிக்கொண்டு இருப்பதும் அதனால்தான்!
அதேபோல், அதிக வெளிச்சங்களைப் பாய்ச்சி அடிக்கிற விளக்குகளை உற்றுக் கவனிப்பது கண்களுக்குத் தீங்கானது. ஒருகட்டத்தில், அந்த வெளிச்சங்கள் பார்வையையே பறிக்கிற அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
அந்தச் சிறுவனைப் பார்த்து, மெல்லியதாகச் சிரித்தேன். அவனுடைய சிரசைத் தடவி, ஆசீர்வதித்தேன். ''கண்ணாடியைக் கொஞ்சம் பார்த்துவிட்டுத் தரட்டுமா?'' என்றேன். சட்டென்று அவனுடைய முகத்தில் சந்தோஷ மின்னல். அந்தக் கண்ணாடி அவனுக்கு பேரவஸ்தையாக இருப்பதை உணர்ந்தேன்.
அவனிடம், 'என்ன... கண்ணாடி அணிவது உனக்குக் கஷ்டமா இருக்கா?’ என்றேன். அவன் தலையசைத்தான். ''ஆனா, என்ன செய்யறது? கண்ணாடி போட்டாத்தானே கண்ணு சரியாத் தெரியும்? அப்பத்தானே படிக்க முடியும்... விளையாட முடியும்?'' என்றேன்.
இரண்டு நிமிட நேரம் மௌனமாக இருந்தவன், ''தாத்தா! கண்ணாடி போடுறது எனக்குக் கஷ்டமா இருக்கு. வேணும்னா இனிமே டி.வி. பாக்காம, வீடியோ கேம்ஸ் விளையாடாம இருக்கேன்'' என்று சொல்லிவிட்டுத் தனது கண்களைக் கசக்கியபடி, அழத் துவங்கிவிட்டான்.
அவனை மெள்ள அணைத்துக் கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டு, ஆறுதலாகச் சிரித்தேன்.
''நான் செய்யறபடி நீயும் செய்யறியா? அப்படிச் செஞ்சா, இன்னும் கொஞ்ச நாள்ல கண்ணாடியே போடாம பாக்கலாம்; படிக்கலாம்; எழுதலாம். சரியா? நான் செய்யறதைச் சரியா செஞ்சா போதும்!'' என்றேன்.
அந்தச் சிறுவன் ஆர்வத்துடன் தலையாட்டினான். மிகுந்த நம்பிக்கையுடன் சம்மதித்தான். அந்த நம்பிக்கை அவனுடைய கண்களிலும் மின்னின!
நான் செய்யச் செய்ய, அவனும் திருப்பிச் செய்தான். பின்னாளில், கண்ணாடி அணியும் நிலையில் இருந்து முழுவதுமாக விலகியிருந்தான் அந்தச் சிறுவன். அந்தப் பயிற்சியை உங்களுக்கும் சொல்லித்தரப் போகிறேன்.
நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்தானே?!
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள்! - திருமணம் என்றொரு சூதாட்டம்?

ரொமான்ஸ் ரகசியங்கள்!

திருமணம் என்றொரு சூதாட்டம்?
 ஒவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
சமீபத்தில் ஓர் இளைஞனைச் சந்தித்தேன். பெயர் நவீன். 24 வயது. சாஃப்ட்வேர் இன்ஜீனியர். நல்ல சம்பளம். வசதியான குடும்பம்.
குழம்பிய மனதோடு இருந்தவன், ''உடனே திருமணம் செய்துகொள் என்று என் பெற்றோர் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்'' என்றான்.
''சரியான வயதுதானே உனக்கு... கோ அஹெட்'' என்றேன்.
அடுத்து, அவன் கேட்ட கேள்வி, திகைக்க வைத்தது - ''என்னுடைய சரியான வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்வு செய்வது?''
திருமணத்தைப் பற்றி எத்தனையோ பழமொழிகளும், மேற்கோள்களும் இருக்
கின்றன. 'அது, லைசென்ஸ் கொடுக்கப்
பட்ட விபச்சாரம்’ என்கிற லெவலுக்கு விமர்சனம் செய்தார் பெர்னார்ட்ஷா. தந்தை பெரியாரோ, திருமணம் என்பதையே ஒரு 'அமைப்பு’ என உருவகப்படுத்தி கிழி கிழி என்று கிழித்தார். 'ஒவ்வொரு திருமணமும் படுக்கையில் முடிவுக்கு வந்து விடுகிறது.’, 'திருமணம் என்பது ஒரு சீட்டாட்டம். உங்கள் கையில் நல்ல கார்டு கிடைக்க அதிர்ஷ்டம் வேண்டும்’ என பல பொன்மொழிகளும் இருக்கின்றன.
நவீன் குழப்பத்தில் இருந்தாலும், அதுவே ஒரு தெளிவினால் ஏற்பட்டதுதான். ''சார்... ஒரு பெண்ணும் நானும் தீவிரமாகக் காதலித்தோம். ஆனால், கடவுள் நம்பிக்கை, சடங்குகள், சினிமா, பொழுதுபோக்குகள், புத்தகம் என்று எல்லாவற்றிலுமே தனக்கு என்ன ஆர்வமோ... அவற்றை என் மீது அவள் திணிக்க ஆரம்பித்தாள். 'விஜய் படத்துக்குப் போக வேண்டாம், சிவன் கோயிலுக்குப் போகக் கூடாது, கிரிக்கெட் பார்க்கக் கூடாது' என்றெல்லாம் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வைக்க ஆரம்பித்தாள்.
'இவளைக் கல்யாணம் செய்தால் வாழ்க்கை முழுவதும் நாம் அடிமைதான்' என்று உணர்ந்தபோது, 'ஸாரி... உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. நண்பர்களாகப் பிரிவோம்’ என்றேன். 'நோ பிராப்ளம்’ என்று பைபை சொல்லி விட்டாள்.''
நவீனை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.... அவன் தொடர்ந்தான். ''கொஞ்ச நாளில் அவள் என்னிடம் மறுபடி வருவாள் என்று உள்மனம் எதிர்பார்த்தது போலவே அவள் வந்தாள், தன் திருமண அழைப்பிதழோடு. நவீனப் பெண்களைப் பற்றிய என் நம்பிக்கைகளே ஆட்டம் கண்டன'' என்றான்.
''சரிப்படாது என்று எப்போது நீ சொல்லி விட்டாயோ, அப்போதே அவள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரத்தை அவள் பெற்றுவிட்டாளே...'' என்றேன்.
''கரெக்ட்தான். கொஞ்ச நாளிலேயே நானும் சரியாகிவிட்டேன்.''
''சரி, அடுத்து?''
''இப்போது என் அப்பா, அம்மாவுக்குப் பேரன், பேத்தி வேண்டுமாம். ஒரு பெண்ணை  பார்த்து விட்டார்கள். அவளிடம் பேசிப் பார்க்குமாறும் சொன்னார்கள். அவர்களுக்காக போய் பார்த்தேன். கணவனே கண்கண்ட தெய்வம் ரேஞ்சுக்கு இருந்தாள். கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேசவே கூச்சப்பட்டாள். சமைப்பது, வீட்டு வேலை செய்வது தவிர வேறு எதிலுமே நாட்டம் இல்லை. 'ஆபீஸ் முடிந்து நேராக வீட்டுக்கு வந்து விடுவீர்களா, கெட்ட பழக்கம் கிடையாதுதானே?’ என்றெல்லாம் தயங்கித் தயங்கிக் கேட்டாள். இவள் சரிப்பட மாட்டாள் என்று மனதில் பட்டுவிட்டது.''
''ஏன் அப்படி தோன்றியது?''
''எனக்கு பல்வேறு ஆர்வங்கள் இருக்கின்றன. சேட்டன் பகத் புத்தகம் படிப்பேன். கிரிக்கெட், ஃபுட்பால் என்று விளையாட்டுகள் டெக்னிக்கலாகத் தெரியும். இலக்கியப் புத்தகங்களை தேடித் தேடி வாங்குவேன். அந்தக் காலத்து எடித் பியாஃபிலிருந்து இப்போது வந்திருக்கும் செலீனா கோம்ஸ் வரை இசை கேட்பேன். வார இறுதியில் பிராந்தியும் பருகுவேன். ஆபீஸுக்கு லீவு போட்டு அன்னா ஹஜாரே ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்டேன். ஈரானிய சினிமா, உலக சினிமா டி.வி.டி-க்கள் என்றால் உயிர்..''
''ஓகே... அதற்கும் உன் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்?''
''இவற்றில் என் வாழ்க்கைத் துணைக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்தால்தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்? அப்பாவைக் காட்டிலும் அம்மா பல மடங்கு கிரேட் பர்சனாலிட்டி. ஆனால், அப்பாவுக்காக நிறைய தன்னை மாற்றிக் கொண்டார். அம்பையின் ஒரு கதையில் வருவதுபோல், அவரே அப்பா போல் மாறிவிட்டார். என்னுடைய உயிர் நண்பன் ஆனந்த், தவறாக ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து, கடைசியில் தற்கொலையில் உயிர்விட்டான். எனக்கும் அப்படி ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது'' என்றான்.
''பெண்கள் எல்லோரும் மோசமும் இல்லை... ஆண்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. உண்மையில் காதல் என்பது திருமணத்துக்கு அப்புறம்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வலுவாக மாறுகிறது. நவீன பெண்ணோ, பழமையான பெண்ணோ... எல்லோரும் மனிதர்கள்தான். முழுக்க முழுக்க உனக்குப் பிடித்தால்தான் திருமணம் என்று பிடிவாதம் பிடிக்காதே. ஈரானியப் படங்களில் கணவன் - மனைவி உறவும், காதலும், குடும்பப் பிடிமானமும் எத்தனை அழகாகச் சொல்லப்படுகிறது? சாக்ரடீஸுக்குக் கொடுமைக்கார மனைவி கிடைத்ததும், காரல் மார்க்ஸுக்கு ஜென்னி கிடைத்ததும் யாரும் திட்டமிட்டதல்ல. ஓரளவுக்கு மனதுக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய். அவளுக்காக விட்டுக்கொடு. உனக்காக அவளும் விட்டுக் கொடுப்பாள். பயம் என்கிற கண்ணாடியோடு இந்த உறவை நீ பார்த்தால், எதுவுமே தெளிவாகத் தெரியாது'' என்றேன்.
நவீன், சற்றுத் தெளிவானவன்போல் தெரிந்தாலும், ''அப்படியென்றால்... திருமணம் என்பது ஒரு சூதாட்டம் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?'' என்றான் சிரித்தபடி.
''சூதாட்டம்தான். ஆனால் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல அது. காதல், புரிதல், விட்டுக்கொடுத்தல், மனித நேயம் போன்ற டெக்னிக்கல் திறமைகளோடு விளையாட வேண்டிய சுவாரஸ்யமான விளையாட்டு!'' என்றேன்.
''ஐ வில் ட்ரை!'' என்று விடைபெற்றான் நவீன். அவனுக்குப் பதில் சொல்லிவிட்டேனே தவிர, அவன் கேட்ட கேள்வி என்னை ரொம்பவே டிஸ்டர்ப் செய்தது. உண்மையிலேயே திருமண உறவு என்பது சூதாட்டம்தானா?!
- நெருக்கம் வளரும்...

Source - Vikatan Magazine