Friday, June 10, 2011

இலவசங்களின் விலை!

இலவசங்களின் விலை!

சமஸ், ஓவியம் : ஹரன்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் அவருடைய திட்டங்களையும் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர் இப்போது தன்னுடைய ஆட்சியின் பயணத்தைத் தொடங்கி இருப்பது அதே கருணாநிதியின் பாதையில்தான்!
 முதலாவது சட்டமன்றக் கூட்டத் தொடரில், இந்த அரசு பயணிக்கப் போகும் பாதை கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. இலவச அரசியலில் எந்த வகையிலும் நாங்கள் தி.மு.க-வுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லாமல் சொல்கின்றன ஆளுநர் அறிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள்!
இலவசம் என்ற வார்த்தையை ஒரே அர்த்தத்தில் அல்லது ஒரே விதமான நோக்கத்தில் பார்க்க முடியாது. கல்வியிலோ, சுகாதாரத்திலோ, வேலைவாய்ப்புகளிலோ அரசு சார்பில் கட்டணம் அற்ற சேவையை அளிப்பது மக்கள் நல அரசின் கடமை. தவிர, தன் மக்களில் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்குச் சில சலுகைகளை அரசாங்கங்கள் அளித்துதான் ஆக வேண்டும்!
நம்முடைய அரசு, வளர் இளம்பெண்கள் ஆரோக்கியத்துக்காக உதவி வழங்குகிறது. ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு நிதி வழங்குகிறது. கருவுற்ற பெண்களின் ஊட்டச் சத்துக்காக நிதி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்குகிறது. இவை எல்லாம் கடமைகள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகிறது. பாடப் புத்தகங்கள், சீருடைகள், பஸ் பாஸ்கள், சைக்கிள்கள் வழங்குகிறது. இவை எல்லாம் மனித வள முதலீடுகள். ஆனால், இலவச அரிசியையும் மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறியையும் இப்படிப் பார்க்க முடியுமா?
நம் நாட்டில் ஒருவரைப் பரம ஏழை என்று சொல்ல அரசு வைத்திருக்கும் வரையறைகள் கேலிக்கு உரியவை. சர்வதேச அளவில் ஒரு நாளைக்கு ஒரு டாலர் சம்பாதிக்கவே அல்லாடுபவர்களை பரம ஏழைகளாக வரையறுக்கிறார்கள். தமிழகத்தில், இந்தக் கணக்கில் 30 சதவிகிதத்தினர் வரலாம். இவர்களுடைய பொருளாதார மீட்சிக் குத் திட்டங்களை அறிவித்தால், அரசை வரவேற் கலாம். ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள் வகுக்கும் திட்டங்கள் இவர்களுக்கானது அல்ல; இவர்களையும் சேர்த்தது. அதாவது, ஓட்டு உள்ள அனைவருக்குமானது. உதாரணமாக, தமிழக அரசின் 'கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி வழங் கும் திட்டம்’ அரிசி வாங்கும் 1.87 கோடி குடும்ப அட்டைதாரர்களும் பயனாளிகள் என்கிறது. இது எப்படி வறியவர்களுக்கானதாகும்?
அ.தி.மு.க. அரசு 2006-ல் ஆட்சியில் இருந்து விலகியபோது, தமிழகத்தின் கடன் 57,457 கோடி. இப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்து விலகியபோது, அந்தக் கடன் 1,01,541 கோடியாக உயர்ந்து நிற்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தமிழகத்தின் வருவாயுடன் ஒப்பிட்டால், 2006-ல் மாநிலத்தின் கடன் 22.5 சதவிகிதம்; 2011-ல் 19.58 சதவிகிதம். அதாவது, இரு கழக ஆட்சிகளுமே 20 சதவிகிதம் அளவுக்கான கடனை ஒரு பெரிய பிரச்னையாகஎடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அத்தியாவசிய உள்கட்டமைப்புத் திட் டங்களைத் தள்ளிப்போடும்போது மட்டும் நிதிச் சுமையைக் காரணமாகக் கூறுவதை ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே வழக்கமாகக்கொண்டு இருக்கிறார்கள்! 
ஜெயலலிதா இப்போது இந்தக் கடன் சுமை யைப் பெரிய சுமை என்று பேசத் தொடங்கி இருக்கிறார். ஆனால், அவர் அறிவித்து இருக்கும் புதிய இலவசத் திட்டங்கள் இந்தச் சுமையை மேலும் பல மடங்குகள் தீவிரம் ஆக்கும்!
ஆளுநர் அறிவிப்பின்படி, செப்டம்பர் 15-ம் தேதி தொடங்க உள்ள 'கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி வழங்கும் திட்ட’த்தின் கீழ், 2011-12-ம் ஆண்டில் 25 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிகிறது. ஆண்டுக்கு சுமார் 1,000 கோடி இந்தத் திட்டம் செலவு வைக்கலாம். 5 ஆண்டுகள் முடிவில் 6,000 கோடிகள் இதற்குச் செலவாகி இருக்கும். மாநிலத்தின் இன்றைய கடன் தொகையில் கிட்டத்தட்ட இது 6 சதவிகிதம்!
அரசுத் தரப்பில் இதற்கு விளக்கம் அளிப்பவர் கள், அடித்தட்டு மக்கள் எல்லாம் எப்போது இந்த வசதிகளை அனுபவிப்பது என்று கேள்வி எழுப்ப லாம். கடந்த ஆட்சியில், இலவசத் தொலைக் காட்சித் திட்டம் மீதான விமர்சனங்களை அப்படித்தான் எதிர்கொண்டது தி.மு.க. அரசு.
ஆனால், இன்னொரு பக்கம், அதே அரசுதான் அடித்தட்டு மக்களின் அன்றாட வழக்கங்களில் ஒன்றாக மது குடிப்பதை ஆக்கியது. ஏறத்தாழ  1 லட்சம் கோடி புரளும் தொழிலாக - மாநிலத்தின் வருவாயில் 25 சதவிகிதம் வருவாய் தரும் தொழிலாக மது வியாபாரத்தை மாற்றியது. மது வியாபாரத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தபோது, 'இந்த வருவாய் இல்லை என்றால், எப்படி இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துவது?’ என்று கேள்வி எழுப்பியது. அத்தியாவசியப் பிரச்னைகளுக்காக மக்கள் கேள்வி எழுப்ப முடியாமல் அவர்களை முடக்கியது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு புறம் இலவசங்களைக் கொடுத்துக்கொண்டே மறுபுறம், மக்களை மிக மோசமாகச் சுரண்டியது!
இப்போது புதிய அரசும் புதிய புதிய இலவசங்களைத் தொடங்குகிறது. உலகில் இலவசம் என்று எதுவுமே இல்லை; எல்லாவற்றுக்குமே மறைமுகமான ஒரு விலை உண்டு. இந்தப் புதிய இலவசங்களுக்கான விலையாக தமிழக மக்கள் கொடுக்கப் போகும் விலை என்ன?

Source - Vikatan Magazine

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

ந.வினோத்குமார்
ஓவியங்கள் : ஸ்யாம்
சென்னையில், சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, நீலப் படங்கள் எடுத்த டச்சு நாட்டைச் சேர்ந்த வில்ஹெல்மஸ் என்பவனுக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனை!
கடந்த வாரத்தில் நாளிதழ்களின் மூன்றாம் காலத்தில் சிறிய அளவில் வந்த செய்தி... பத்தோடு பதினொன்று எனச் சொல்லத்தக்க சாதாரணச் செய்திதானா? உங்கள் வீட்டில் பட்டாம்பூச்சியாக வளைய வரும் குழந்தைகள், பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பதை ஒரு நாளேனும் கற்பனையாவது செய்திருக்கிறீர் களா? அது பெரும்பாலான சமயங்களில் உண்மையாக இருக்கும் என்ற அதிர்ச்சியை உங்களால் ஜீரணிக்க முடியுமா?
''மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் பாலியல்ரீதியிலான தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். பெண் குழந்தைகள் மட்டுமல்ல, அதே அளவுக்கு ஆண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். ஊடகங்களில் அதுபற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே இருப்பதால், இந்தப் பிரச்னை சமூகத்துக்கு அதிகமாகத் தெரிவது இல்லை!'' என்கிறார் சிறார் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகச் செயல்படும் 'துளிர்’ அமைப்பின் களப் பணியாளர் நான்சி வெரோனிக்கா.
'' 'கஸ்டோடியல் வயலென்ஸ்’ முதற்கொண்டு பல நிலைகளிலும் பால் வேறுபாடு இன்றிப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஆனால், இந்த வன்கொடுமைகளில் 12 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வழக்குகளாகப் பதிவாகின்றன!
தகாத இடங்களில் தொடுதல், தன் அந்தரங்கப் பகுதிகளைத் தொட வைத்தல், நீலப் படங்கள் பார்க்க வைத்தல் போன்ற பாலியல் வன்கொடுமை வகைகளோடு, தொழில்நுட்ப ரீதியிலான வன்கொடுமைகளும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
இந்தக் குற்றங்களுக்கு உள்ளாகும் குழந்தைகள், அந்தச் சம்பவங்களைப்பற்றி தங்களின் பெற்றோரிடத்தில் சொல்ல முடியாத சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்புகூட தந்தையே தன் மகளைச் சீரழித்த சம்பவம் செய்தியாக வந்தது. அந்தச் சிறுமி தன் தகப்பனைப்பற்றி பாட்டியிடம் சொல்லி இருக்கிறாள். அதற்கு அந்தப் பாட்டி, 'உங்க அப்பாதானே? இது சீக்கிரமா சரியாயிடும். சாமியை வேண்டிக்கோ’ என்று சொன்னாளாம். ஆக, 'இது தவறு’ என்று தெரிந்திருந்தும், அவர்கள் பொருளாதாரரீதியாகவும், மனரீதியாகவும் அந்தக் கொடூரனைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலில் இந்தக் குற்றத்தை எதிர்த்து எங்கு செல்ல முடியும்?
ஒரு சிறுமி பள்ளி வாகனத்தில் ஏறாமல் அழுதுகொண்டு நின்று இருக்கிறாள். இதைப் பார்த்த ஒருவர் 'ஏன்?’ என்று கேட்டபோது அந்தச் சிறுமி, 'டிரைவர் மாமா என் பாவாடைக்குள்ளே கை விடுறார்’ எனச் சொல்லி இருக்கிறாள். அவருக்கு விபரீதம் புரிந்து இருக்கிறது.  அந்தச் சிறுமியின் வீட்டினருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கிறார். வீட்டில் இருந்தவர்களோ, 'அவள் எப்பவுமே அப்படித்தான். ரெண்டு அடி போட்டு அவளை வேனில் ஏத்துங்க’ என்று அசட்டையாகக் கூறி இருக் கிறார்கள். ஆக, அந்தச் சிறுமிக்கு 'குட் டச், பேட் டச்’ போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்துதான் என்ன பயன்? பெற்றோர்களின் இத்தகைய புறக்கணிப்புதான் தவறுகள் தொடர்ந்து நடக்க இடம் தருகிறது!
இந்தக் கொடுமைகளை வீடுகளில் பேசுவதற்கான சூழ்நிலை நம் சமூகத்தில் இல்லை. ஒருவேளை குழந்தைகளே தவறைப் புரிந்துகொண்டு, பெற்றோரிடம் சொன்னாலும், 'நீ அப்படி நடந்துக்கிட்டு இருப்பே... அதனால அவங்க உன்கிட்ட இப்படி நடந்துக்கறாங்க’ என்று குழந்தைகள் மீதே பழியைத் திருப்பிவிடும் போக்கே இங்கு இருக்கிறது.
ஆக, நம் கண்முன்னே இவை நடந்தாலும், அவற்றைத் தட்டிக் கேட்க முடியாமல், நாம் அனைவரும் வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கிறோம்!'' என்கிறார் நான்சி.
சிறார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளா னால், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கு கிறார் குழந்தைகள் மனநல நிபுணர் மருத்துவர் ஜெயந்தினி.
''வயது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது ஆணா, பெண்ணா; ஒரு முறை நடந்த சம்பவமா அல்லது தொடர்ந்து நடைபெற்ற சம்பவமா; என்ன வகையான பாலியல் கொடுமை, 'யாரிடமாவது சொன்னால், கொலை செய்துவிடுவேன், மார்க் குறைத்துவிடுவேன்’ என்பது போல ஏதாவது மிரட்டப்பட்டார்களா? இவை எல்லாவற்றையும்  கவனத்தில்கொண்டு தான் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கிறோம்.
பாலியல் வன்கொடுமைகளில் சிறார்களின் அந்தரங்க உறுப்புகள் கையாளப்பட்டு இருந்தால், ரத்தக் கசிவு, அந்தப் பகுதியில் எரிச்சல், வலி, சிறுநீர் கழிப்பது கஷ்டமாகிவிடுதல், நோய்த்  தொற்று போன்றவை ஏற்படலாம். மேலும் சில நேரங்களில், சிறுவர்களுக்குப் பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டு, அந்த வயதிலேயே சுய இன்பப் பழக்கம் ஏற்படலாம்.
இதுவே வாய் வழிப் புணர்ச்சிக்கு ஒரு குழந்தை பழக்கப்பட்டு இருந்தால், வாந்தி, வாயில் புண் ஏற்படுதல், சாப்பிடாமல் இருப்பது, பால் போன்ற நீர் ஆகாரங்களைக் கண்டால் குமட்டல் போன்றவை ஏற்படும். நீலப் படங்களைப் பார்க்கவைப்பதன் மூலம் சிறார்களுக்குத் தூக்கம் இன்மை, மன எரிச்சல், நிலைகொள்ளாமை, கோபம், காரணம் இல்லாத அழுகை, உடல் வலி, விளையாட்டில் ஆர்வம் இன்மை, படிப்பில் பின்தங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
தனக்கு ஏற்படும் வன்கொடுமைகளால் சிறார் அடையும் வேதனையை எழுத்தில் வடிக்க முடியாது. மனம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்கிற அளவுக்குச் செல்வார்கள்.  நாளடைவில் இந்த ஆறா நினைவு, ஆளுமைப் பண்புகளைப் பாதிக்கலாம். ஒரு பால் உறவில் ஈடுபாடு, திருமணத்தின் மீது வெறுப்பு, தாம்பத்ய உறவில் ஈடுபாடு இன்மை, அதனால் ஏற்படும் குடும்பப் பிரச்னைகள் எனப் பல பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடலாம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு, பெற்றோர்கள் குழந்தைகளைப் புரிந்துகொள்ள முயல்வதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும்தான்!'' என்கிறார் ஜெயந்தினி.
'சட்டம் என்று ஒன்று இருப்பதால்தான் நீதி என்பது ஓரளவாவது இருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக, நீதிமன்றங்களில் தீர்ப்புகள் கிடைக்கின்றனவே தவிர, நீதி கிடைப்பதில்லை’ என்பார்கள். அது இந்த விஷயத்திலும் மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. இந்த வன் கொடுமைகளைச் சட்டபூர்வமாக எப்படி அணுகுவது? என்பதுபற்றி கூறுகிறார் கீதா ராமசேஷன்.
சிறார் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு எதிரான சட்ட மசோதா வடிவமைப்புக் குழுவில் உறுப்பினராக ஆலோசனைகள் வழங்கியவர் இவர்.
''சிறார் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகத் தனியாக எந்த ஒரு சட்டமும் இது வரை இல்லை. ஆனால், அது தொடர்பான மசோதாக்களை வடிவமைக்க சட்ட அமைச்ச கத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. கற்பழிப்புக்கு உண்டான ஐ.பி.சி. சட்ட வரையறைகளைத்தான் இன்றும் இந்தக் குற்றங்களுக்குப் பயன்படுத்துகிறோம்.
இந்த வன்கொடுமைக் குற்றங்களை நாம் மூன்று தளங்களில் இருந்து அணுக வேண்டி இருக்கிறது.
முதலாவது, சாட்சி விசாரணை. ஒரு குழந்தையை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, குற்றச் சம்பவத்தை விசாரிப்பது என்பது மிகவும் அபாயகரமானது. அந்த வயதில் அந்தக் குழந்தையின் மனநலம்பற்றி நாம் கருத்தில்கொள்ள வேண்டும். ஆக, இந்த விசாரிப்புகளைத் தனிப்பட்ட முறையில் நடத்த வேண்டும். அப்போதுதான் கூட்டம், போலீஸ் பற்றிய அச்சம் எதுவும் இல்லாமல் ஓரளவு தைரியமாக நடந்ததைச் சொல்லும் அந்தக் குழந்தை.
இரண்டாவதாக, நீதிமன்றத்தில் இந்த வழக்கை குறிப்பிட்ட வழியில்தான் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சில வழிமுறைகளை அனைத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கும் அனுப்பி இருக்கிறது. நீதிமன்றங்களில் அந்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும், நீதிமன்றக் கட்டத்துக்கு முந்தைய காவல் துறையினரின் விசாரணைகளில் இதுபோன்ற வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவது இல்லை. அதுபோன்ற சமயங்களில், குழந்தைகள் நடந்ததைச் சொல்வதற்கு அச்சப்படலாம். சில உண்மைகளை மறைக்கலாம். மேலும், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் காவல் துறைப் பதிவுகளில் சில வேறுபாடுகள் இருப்பதும் தேவை இல்லாத குழப்பங்களை ஏற்படுத்தும். ஆக, இந்த விசாரணையை மிகவும் 'சென்சிட்டிவ்’ ஆக மேற்கொள்ள காவல் துறையினருக்கும் சில வழிமுறைகள் இருந்தால் நலம்.
மூன்றாவதாக, பாதுகாப்பு இல்லாத சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள்தான் அதிகமாக இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க இந்த அரசு என்ன செய்யப் போகிறது? இன்னொரு பக்கம், ஒரு வீட்டில் தந்தையும், தாயும் பணிக்குச் சென்றுவிட, குழந்தையைத் தெரிந்தவர்களிடம் விட்டுச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளும் அதிகம் இந்தக் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். அவர்களைப் பாதுகாக்கவும் இந்த அரசு என்ன செய்யப்போகிறது?''
- கேள்விக்குறியோடு முடிக்கிறார் கீதா ராமசேஷன்!


Source - Vikatan Magazine

Wednesday, June 8, 2011

நீரா ராடியா கைது ஆவாரா? - 2ஜி ஸ்பெக்ட்ரம்

நீரா ராடியா கைது ஆவாரா?

சி.பி.ஐ. ஒப்புதல் வாக்குமூலம் அம்பலம்
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்தான் எத்தனைவிதமான  திருப்பு முனைகள்!

நீரா ராடியா தொலைபேசி டேப் லீக்-அவுட்டும், சி.ஏ.ஜி. அறிக்கையும் முதல் முக்கியத் திருப்பு முனைகள். சி.ஏ.ஜி. அறிக்கையில் உள்ள கணக்கு வழக்குகள், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எந்த அளவுக்குப் பயன்பட்டதோ, அதே அளவு நீரா ராடியா டேப் விவகாரங்களையும் பயன்படுத்தியது சி.பி.ஐ... ஆனால், நீரா ராடியா இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சி.பி.ஐ. முன்பு, ராடியா நான்கு தடவை ஆஜராகிக் கொடுத்துள்ள வாக்குமூலங்கள் இப்போது வெளியில் கசிந்துள்ளது.
அதன் முழு விவரம்...
நாள்: 21.12.2010
இடம்: சத்ரபூர் பண்ணை வீடு
விசாரணை அதிகாரி:
சி.பி.ஐ. எஸ்.பி. விவேக் ப்ரியதர்ஷி
நீரா ராடியா சொல்கிறார்:''நான் வசித்து வந்தது இங்கிலாந்தில். என் தந்தை, க்ரவுன் மார்ட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நடத்திவந்தார். அவரிடம் நிறைய வியாபார உத்திகளைக் கற்றுக் கொண்டேன். என் குழந்தைகள் இந்திய கலா சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், 1994-ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன். என் மாமனார் லண்டனில், ஏர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை நடத்தினார். அவர் மூலமாக விமானப் போக்குவரத்துத் தொழில்​பற்றி அறிந்துகொண்டேன். அதன்படி, இந்தியாவுக்கு வந்து சஹாரா நிறுவனத்துக்கு விமானத் தொழில் தொடங்குவதற்கு உதவி​னேன்.
டாடாவுக்கு சிக்கல்
பின்னர், வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன் நிறுவனத்தைத் தொடங்​கினேன். 2001-ம் ஆண்டு முதல், டாடா நிறுவனத்துக்கும், 2005-ம் ஆண்டு முதல், யுனிடெக் நிறுவனத்​துக்கும்  பொதுத் தொடர்புப் பணிகளை மேற்கொண்டேன். டாடா நிறுவனத்தில், டாடா டெலி சர்வீஸ் விவகாரங்​களுக்கு உதவினேன். 2005-ம் ஆண்டு, டாடா நிறுவனத்துக்கு, அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்ததயாநிதி மாறன், பல்வேறு பிரச்னைகளை உருவாக்கிக்​கொண்டு இருந்தார். இதனால், டாடா குரூப் நிறுவனம் இதுபோன்ற விவகாரங்களுக்கு ஆலோ​சனை கூறவும்... உதவி புரியவும் என்னைக் கேட்டுக்கொண்டனர்.
இப்போது 'டிராய்’ அமைப்பின் (தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) தலைவராக இருக்கும் டாக்டர் ஜெ.எஸ்.சர்மா, அப்போது, தொலைத் தொடர்புத் துறை செயலாளராக இருந்தார். அவரை சந்தித்துப் பேசுவேன். அப்போது தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக இருந்த பிரதீப் பைஜாலையும் சந்திப்பேன். 2007-ல் நான் நோசிஸ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டன்ஸி நிறுவனத்தைத் தொடங்கினேன். இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர் கே.நரூலா. பின்னர் இதே நிறுவனத்தில் பிரதீப் பைஜாலும் பணியாற்ற வந்தார். இவருக்கு என்னுடைய நிறுவனத்தில் 10 சதவிகிதப் பங்குகளைக் கொடுத்தேன். 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் கொடுக்கப்பட்ட இரட்டைத் தொழில்​நுட்ப ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்கு விண்ணப்பித்து இருந்தது. இந்த உரிமம் கிடைப்பதற்காக என் உதவியைக் கேட்டனர். இந்த உரிமம் டாடாவுக்குக்கொடுக்கப்​​ படவில்லை.
தொலைத் தொடர்புத் துறையில் அணுகியபோது, விண்ணப்பம் முதலில் வரவில்லை என்றனர். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்​துக்கு இந்த இரட்டைத் தொழில்நுட்ப உரிமம் கொடுக்கப்பட்டுஇருந்தது. இதனால், தொலைத் தொடர்புத் துறையில் இருந்த சர்மா போன்ற​வர்கள், டாடா​வுக்கு உரிமம் கொடுக்கப்​ படாததுகுறித்து வருத்தம் தெரிவித்​தார்கள்.
இது தொடர்பாக, செல்லு​லர் ஆபரேட்டர்ஸ் அசோஸி​யேசனை சேர்ந்தவர்​கள் தொலைத் தொடர்புத் தாவா தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், டாடா டெலி சர்வீஸ் நிறுவனமும் இருந்தது. இரட்டைத் தொழில்நுட்ப ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வரவேற்றது டாடா. ஆனால், தொலைத் தொடர்புத் துறை, இந்தக் கொள்கை முடிவை அறிவிப்பதற்கு முன்பே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு இரட்டைத் தொழில்நுட்ப உரிமம் வழங்கி இருப்பதை எதிர்த்தது.
அதன் பிறகு, தொலைத் தொடர்புத் துறை, 10.1.2008 அன்று டாடா டெலி சர்வீஸ் நிறுவனத்துக்கு இந்த உரிமத்தைக் கொடுக்க கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. ஆனால், ஸ்பெக்ட்ரம் கொடுப்பதில், சீனியாரிட்டி வரிசையில் இருந்த கம்பெனிகளில் டாடா நிறுவனத்தைக் கீழே வைத்திருந்தனர். முறைப்​படி, மற்ற நிறுவனங்களுக்கு முன்பாகவே டாடா டெலி சர்வீஸ் நிறுவனத்துக்குத்தான் முதலில் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இரட்டைத் தொழில்நுட்பத்துக்கான உரிமக் கட்டணத்​தையும் டாடா நிறுவனம் ஏற்கெனவே செலுத்தி இருந்தது.
அப்போது கொடுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளில், ஸ்வான் நிறுவனத்துக்கு மட்டுமே டெல்லி சர்க்கிள் உரிமம் கிடைத்தது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் இருந்த பங்குகளின் அடிப்படையில், இந்த நிறுவனத்துக்கு எந்த அடிப்படைத் தகுதியும் இல்லை. எனக்குக் கிடைத்த தகவலின்படி, ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
வட கிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற டெலிகாம் சர்க்கிள்களுக்கு, 2006-ம் ஆண்டு சி.டி.எம்.ஏ. சர்வீஸுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமத்துக்கு டாடா டெலி சர்வீஸ் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. ஆனால், அப்போதைய அமைச்சர் தயாநிதி மாறன், இந்த ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்க மறுத்தார். இதற்குக் காரணமாக, பைசெல் என்ற நிறுவனம் டாடாவுக்கு முன்பே விண்ணப்பித்து இருந்ததாகச் சொல்லப்பட்டது. அதற்கு வழங்கிவிட்டுத்தான், டாடாவுக்குக் கொடுக்க முடியும் என்று கூறினர். ஆனால், பைசெல் நிறுவனத்தின் மனு, உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விவகாரங்களில் கிளியரன்ஸ் ஆகாமல் இருந்தது. முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்கிற கொள்கையின்படி, பைசெல் நிறுவனத்துக்குக் கொடுக்காமல் டாடாவுக்குக் கொடுக்க முடியாது என்று கூறினார்.
ஆனால், ஆ.ராசா அமைச்சரானபோது, அதாவது 10.1.2008 அன்று 25.9.2007 வரை விண்ணப்பித்தவர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன.
ரியல் எஸ்டேட் விவகாரம்
என்னுடைய வைஷ்ணவி நிறுவனத்தின் மூலம் 2005 முதல் யுனிடெக் நிறுவனத்துக்கு ரியல் எஸ்டேட் விவகாரங்களில் உதவி புரிந்தேன். டாடா டெலி சர்வீஸ்நிறுவனம், யுனிடெக் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தனர். டாடா ரியாலிட்டி நிறுவனம், தலைநகர் பகுதிகளில் நிலங்​களைத் தேடிக்கொண்டு இருந்தது. இந்த சமயத்தில், குஸேகான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களிடம் நிலங்கள் இருந்தன. அதனால், இந்த இரு நிறுவனங்களையும் நான் அறிமுகம் செய்துவைத்தேன். இதற்காக டாடா சுமார் 1,700 கோடியை யுனிடெக் நிறுவனத்துக்குக் கொடுத்தது. ஆனால், ரியல் எஸ்டேட் மார்க்கெட் நிலைமை சரியாக அமையாது போகவே, இந்த கூட்டு நடவடிக்கை கைவிடப்பட்டது.
அதன் பின், டாடா தனியாக ரியல் எஸ்டேட் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. டாடா நிறுவனம் கொடுத்த பணத்தை, யுனிடெக் திருப்பிக் கொடுத்துவிட்டது.
அடுத்து, யுனிடெக் நிறுவனத்தில் யுனிநார் நிறுவனம் முதலீடு செய்தது. யுனிடெக் டெலிகாம் விவகாரங்களை, டி.டி. அசோசியேட்ஸைச் சேர்ந்த தீபக் தல்வாரும், யுனிநார் விவகாரங்களை பெர்ஃபெக்ட் ரிலேஷனைச் சேர்ந்த தீபக் செரியனும் கவனித்தனர். எங்களுடைய நிறுவனம் அதிகாரபூர்வமற்ற வகையிலேயே, சில ஆலோசனைகளை யுனிடெக் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சந்திராவுக்கு வழங்கியது.
டாடாகாம் நிறுவனத்தோடு எனக்கு எந்த விதமான வியாபாரத் தொடர்பும் கிடையாது. ஆனால், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நஹாடாவை தொடர்பு கொள்வேன். ஒரு முறை அவர், தங்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்கப்போவதாகவும், அதற்கான முதலீட்டாளர்களைத் தேடிக்கொண்டு இருப்பதாகவும் கூறினார். இப்படியான பேச்சுவார்த்தைகள் தவிர, வேறு எந்தத் தலையீடும் எனக்கு இல்லை.
ஆனால்...
படம்: என்.விவேக்
வாக்குமூலம் தொடரும்..


Source - Vikatan Magazine

கனிமொழி, சரத்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!


கனிமொழி, சரத்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!
புதுடெல்லி, ஜூன் 8,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், இவ்விருவரும் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பின்னர் கனிமொழி, சரத்குமார் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மே 20 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மே 23 ஆம் தேதி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 24-ம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் பரிகோகே, அதன் மீதான உத்தரவை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும், இந்த ஜாமீன் மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, இவ்விருவரின் ஜாமீன் மனு மீதான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில், கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தன்னுடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதால், மகனை தாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதநேய அடிப்படையில் ஜாமீன் வழங்குமாறு கனிமொழி கோரியிருந்தார்.
இந்த வழக்கில் சாட்சிகளை தங்கள் செல்வாக்கால் வளைத்துவிடுவதற்கான சாத்தியம் உண்டு என்பதால், இருவருக்கும் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை அறிந்ததும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்த ராஜாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார்.
இதையடுத்து, கனிமொழியும் சரத்குமாரும் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் திகார் சிறையிலேயே அடைக்கப்படுவர்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளதால், இருவரும் இனி உச்ச நீதிமன்றத்தை நாடுவர் எனத் தெரிகிறது.
வழக்கின் பின்னணி...
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் சிபிஐ குற்றப்பத்திரிகையில் 'கூட்டுச் சதியாளர்' என சேர்க்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் முறையே 20, 60 மற்றும் 20 சதவீத கலைஞர் டிவி நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டுள்ளனர்.
கலைஞர் டிவியின் செயல்பாடுகளின் பின்னணியில் கனிமொழி முக்கியப் பங்கு வகிக்கிறார் என்றும்,
2009-ல் ஆ.ராசாவை தொலைத்தொடர்பு அமைச்சராக மீண்டும் நியமிப்பது தொடர்பாக திமுக தலைமையகம் மற்றும் இடைத்தரகர்களுடன் கனிமொழி தொடர்ந்து தொடர்புகொண்டு பேசிவந்துள்ளார் என்றும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.
சினியுக் ஃபிலிம்ஸ் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனத்தின் வழியாக கலைஞர் டிவி நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய ரூ.214 கோடி பணம் பால்வாவின் நிறுவனம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதே சிபிஐ-யின் குற்றச்சாட்டு.
கலைஞர் டிவியின் செயல்படாத இயக்குனராகவே கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இருப்பதால், அவரை சாட்சிப் பட்டியலில் சிபிஐ சேர்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Source - Vikatan Magazine

Tuesday, June 7, 2011

ரஜினி சிங்கப்பூர் ரிப்போர்ட்!

ரஜினி சிங்கப்பூர் ரிப்போர்ட்!

இரா.சரவணன்
படம் : ஜி.அழகிரிவேல்
''ஹலோ! நான் ரஜினிகாந்த் பேசறேன்... எவ்வளவு சீக்கிரம் திரும்பி வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா... பணம் வாங்கறேன்... ஆக்ட் பண்றேன். இதுக்கே நீங்க இவ்வளவு அன்பு காட்டுறீங்கன்னா, உங்களுக்கு நான் என்ன கொடுக்கிறது? என்ன சொல்றது? நீங்க கொடுக்கிற அன்புக்கு நான் என்னத்தைத் திருப்பிக் கொடுக்கப் போறேன் கண்ணா... நீங்க எல்லாம், நம்ம ஃபேன்ஸ் எல்லாம் தலை நிமிர்ந்து வாழ்ற மாதிரி நான் நடந்துக்கிறேன் கண்ணா... சீக்கிரமே வந்துடுறேன்'' - அந்த மின்சார காந்தக் குரல் தழுதழுப்பும் நெகிழ்ச்சியுமாக வெளியாக, ரஜினி ரசிகன் ஒவ்வொருவனின் விழிகளிலும் கண்ணீர் அணை கட்டிக்கொண்டது!
 'தலைவரின் குரலில் ஏன் இத்தனை தழுதழுப்பு? ஒருவேளை அவருக்கு உண்மையிலேயே பெரிய பிரச்னையோ?’ என அப்பாவி ரசிகனின் மனது பதறித் தவிக்கிறது. 'இது தலைவரின் நிஜப் படம்தானா?’ என இணையத்தில் வெளியான புகைப்படங்களைப் புலனாய்வு செய்த ரசிகன், 'அந்தக் குரலும் ஏன் மிமிக்ரியாக இருக்கக் கூடாது?’ என சந்தேகத்தில் மருளுகிறான். எளிமையும் உண்மையுமாகத் தன் வாழ்வியல் கோட்டை வகுத்துக்கொண்ட ரஜினியின் அசாத்திய சம்பாத்தியம் இந்த அன்புதான்!
ரசிகர்களோ, மீடியாவோ அறியாத ரகசியத்தில், ரஜினி தனி ஆம்புலன்ஸில் ஏர்போர்ட் கிளம்பும் தருணத்தில், அவரோடு நெருங்கிப் பேசிக்கொண்டு இருந்தவர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மாணவரான சுகந்தன். ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் சௌந்தரராஜனின் மகன். ரஜினி ரசிகன். நலம் விசாரித்த சுகந்தனிடம் வாஞ்சையோடு பேசிய ரஜினி, அவருடைய உள்ளங்கையில் ஆட்டோகிராஃப் போட்டார். ''ரஜினி சார் ரொம்ப நல்லா இருக்கார். நல்லாப் பேசுறார்.
ஏர்போர்ட்டுக்குக் கிளம்பும் அவசரத்தில்கூட என்னை அக்கறையோட விசாரிச்சு, 'அப்பா மாதிரி பெரிய டாக்டராவும், அப்புறம் தாத்தா (குமரி அனந்தன்) மாதிரி பெரிய தலைவராவும் வரணும்’னு வாழ்த்தினார். அப்போ, நான் அவர்கிட்ட ஆட்டோகிராஃப் கேட்டேன். பேப்பர் ஏதும் இல்லாததால், 'கையைக் காட்டு கண்ணா’ என்றவர், 'காட் இஸ் கிரேட்!’னு எழுதி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார். தனக்கு எவ்வளவு இக்கட்டான சூழலிலும் தன் ரசிகனின் மனம் வருந்திவிடக் கூடாதுன்னு நினைக்கிறார் பாருங்க... அதான் சார் ரஜினி!'' என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
''சிங்கப்பூர் கிளம்பிய ரஜினி சாரை நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன். ரொம்பத் தைரியமாவும் உற்சாகமாவும் இருக்கார். அவரைத் தனி ஆம்புலன்ஸில் கொண்டுபோக வேண்டியதே இல்லை. அவ்வளவு ஹெல்த்தியா இருந்தார். டாக்டர்களிடம் நல்லா சிரிச்சுப் பேசுறார். ஒரு டாக்டரா சொல்றேன், நிச்சயம் அவர் சீக்கிரமே குணமாகி வருவார். 'எந்திரன்’ மாதிரி இன்னொரு ஹிட் கொடுப்பார்!'' எனச் சிலிர்க்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.
சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில்தான் ரஜினி அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மருத்துவர்கள் சௌந்தரராஜன், முரளிதரன் உடன் இருக்க, ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்கிறார்கள். ''அனுமதிக்கப்பட்ட முதல் நாளே ரஜினியின் உடம்பில் இருந்த வீக்கம் வடிந்துவிட்டது. இரண்டு நாட்கள் டயாலிஸிஸ் நடந்தது. 'இனி பயம் இல்லை’ என்கிற அளவுக்கு ரஜினியே தைரியம் தெரிவித்ததால், மூன்றாவது நாளே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ரஜினி மாற்றப்பட்டார். இரண்டு நாள் டயாலிசிஸ் மூலமே ரஜினிக்கு கிட்னி ஓரளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பி இயங்கத் தொடங்கிவிட்டது. ரஜினி, உறவினர்களோடு நன்றாகச் சிரித்துப் பேசுகிறார். சிங்கப்பூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அவரைச் சந்திக்க விரும்புவதாகத் தகவல் சொல்லப்பட, 'ஓ... சந்திக்கலாமே’ என வரச் சொன்னார் ரஜினி. ஆனாலும், இப்போதைக்கு அவருக்கு ஓய்வு அவசியம் என்பதால், நாங்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. பேரக் குழந்தைகளோடு குழந்தையாக ரஜினி கொஞ்சி விளையாடிக்கொண்டு இருக்கிறார்!'' என்கிறார்கள் அங்கு இருக்கும் மருத்துவர்கள்.
''அடுத்து, ரஜினிக்கு கிட்னி மாற்று சிகிச்சை நடக்கப்போகிறதாமே?'' எனக் கேட்டால், ''மிகுந்த உற்சாகத்தோடு இருக்கும் ரஜினிக்கு கிட்னி மாற்று சிகிச்சை அநேகமாகத் தேவைப்படாது. இன்னும் சில நாட்களில் கிட்னி முழுமையான செயல்பாட்டைத் தொடங்கிவிடும்!'' என்கிறார்கள் நம்பிக்கையாக.
சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனையைச் சுற்றி ரஜினி ரசிகர்கள் வலம் வந்ததைப்போலவே சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையிலும் தமிழ் ரசிகர்களின் கூட்டம். ஆனால், 'சந்திக்க வாய்ப்பே இல்லை’ என ரஜினியின் உறவினர்கள் மறுத்துவிட்டதாலும் மருத்துவமனை நிர்வாகத்தின் கெடுபிடியாலும் ரசிகர்கள் தளர்ந்துபோனார்கள்.
தென் கிழக்கு ஆசியாவிலேயே மிக நவீனமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் வி.வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே சிகிச்சை. ரஜினியைப்போல் 30-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற புள்ளிகளுக்கு சிகிச்சை நடக்கிறதாம். இங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொல்லி ரஜினி குடும்பத்தினருக்கு வழிகாட்டியது அமிதாப் பச்சன் என்கிறார்கள். 373 வார்டுகள் கொண்ட மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டு இருக்கும் அறை எண்கூட ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துப் பகுதிகளிலும் கேமரா கண்காணிப்பு இருப்பதால், ரசிகர்களால் ஹாஸ்பிடல் வளாகத்தைக்கூட நெருங்க முடிய வில்லை.
உள்ளூர் மீடியாக்களின் தொடர் படையெடுப்பு பொறுக்காமல் வெளியே வந்த ரஜினி மருமகன் தனுஷ், ''இங்கே வந்ததுக்கு அப்புறம் ரஜினி சார் நல்லா இருக்கார். உற்சாகமா இருக்கார். உங்களைச் சந்தித்துவிட்டுத்தான் சென்னைக்குப் போவார்!'' என்று சொன்னார். அதுவே, இப்போதைக்கு அந்த வளாகத்தைச் சுற்றிக்கொண்டு இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கான ஆறுதல்!

Source - Vikatan Magazine


ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 4

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 4

அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்:மணியம் செல்வன்
பிரபல ரஷ்ய எழுத்தாளர், ஆண்டன் செகாவ். ரஷ்யாவில் ஒரு ஸ்டார் அந்தஸ்துடன் வாழ்ந்தவர். அவரைத் திருமணம் செய்து கொள்ள எத்தனையோ அழகான பெண்கள் ஏங்கினார்கள். அதையெல்லாம் அசட்டை செய்த செகாவ், தானுண்டு தன் எழுத்துண்டு என்று பல காலம் பிரம்மச்சாரியாகவே இருந்தார். ஆனால், அவருக்கும் ஒரு நாள் காதல் வந்தது. அந்த இளம் பெண் ணுக்கு... செகாவ் தன்னைக் காதலிப்பதில் சொல்லொண்ணா மகிழ்ச்சி. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
 
 
ஆனால், திருமணத்துக்கு வினோதமான கண்டிஷன்களைப் போட்டார் செகாவ். திருமணத்துக்கு பின் ஒரே ஊரில், ஒரே வீட்டில் வசிக்கக்கூடாது... மனைவி வேறொரு ஊருக்குச் சென்றுவிட வேண்டும்; அவ்வப்போதுதான் ஒருவரை ஒருவர் சந்தித்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும்; ஒரு சில நாட்களுக்குள் இருவரும் தத்தம் இல்லங்களுக்குத் திரும்பிவிட வேண்டும்.
இந்த நிபந்தனைகள் மிக வினோதமானவைகளாக இருந்தாலும், செகாவின் மீதுள்ள காதலால் அதற்கு ஒப்புக் கொண்டாள் அப்பெண். அந்த மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் நீடித்தது.
இதில் இருந்து தெரியும் உண்மை என்ன?
பிரிவு என்பது காதலை அதிகரிக்கும், பிணக்குகளைத் தீர்த்து வைத்து காதலர்களுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும். 'உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருள் இருக்கும்’, 'பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி...’ என்பதெல்லாம் தமிழில் ஹிட் பாடல்கள்.
செகாவ் அளவுக்கு நம்மூரில் பிரிந்திருந்து வாழ்க்கை நடத்துவது சாத்தியமில்லை என்றாலும் சின்னச் சின்னப் பிரிவுகள், ஊடல்கள், சண்டைகள் கணவன் - மனைவிக்கிடையேயான அன்பை அதிகரிக்கவே செய்யும்.
பிரபுவும், சாருலதாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். திரு0மணத்துக்கு முன் தத்தமது வீடுகளில் காலையில் பெட்காபி முதல் இரவு படுக்கை வரை எல்லாமே அவர்களுக்கு ரெடியாக இருக்கும். அதனால், எந்த வேலையும், பொறுப்பும் அவர்களுக்குப் பழக்கமில்லை. ஆனால், திருமணம் என்கிற தனிக்குடித்தன கூட்டுக்கு வந்தவர்கள்... சமையல், காய்கறி, மளிகை, கரன்ட் பில் என்று தங்கள் கடமைகளைச் செய்ய முடியாமல் திணறிப் போனார்கள். 'இந்த வேலையை நான்தான் செய்யணுமா? நீ செய்யக் கூடாதா?’ என்பதில் ஆரம்பித்து தினமும் தகராறுதான். அவர்களின் வாழ்க்கையில் காதலும், கவர்ச்சியும் இருந்தாலும், அதையெல்லாம் அவர்களின் சண்டைகள் ஓவர்டேக் செய்தன. ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் வாழ ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில், 'இனி... நமக்குள் சரிப்படாது, விவாகரத்து ஒன்றுதான் வழி’ என்று முடிவு செய்து கோர்ட்டுக்கு சென்றனர். முதலில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அடுத்து, 'சமாதானம் செய்துகொள்ள மேலும் ஆறு மாதங்கள் அவகாசம். அப்போதும் சமாதானம் ஆகவில்லை என்றால் விவாகரத்து வழக்கை ஆரம்பிக்கலாம்' என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தது கோர்ட். பிரபுவும், சாருவும் தத்தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சென்றிருக்கும். தன் அப்பா, அம்மாவுக்கு இடையில் சிறுசிறு சண்டைகள் எழுந்தாலும், அவை சீக்கிரமே அடங்கி இருவரும் சிரித்துப் பேசுவதைப் பார்த்தபோது, சாருவுக்கு வாழ்க்கையின் ருசி புரிந்தது. தன் தங்கையும், தங்கையின் கணவரும் வீட்டுக்கு ஜோடியாக வந்து போவதைப் பார்க்கும்போதெல்லாம், ஏக்கமாக உணர்ந்தான் பிரபு. 'திருமணமாகி பத்தே மாசத்துல இவ பிறந்துட்டா... ஃபர்ஸ்ட் வெடிங் ஆனிவர்ஸரியை குழந்தையோட கொண்டாடப் போறோம்’ என்று வெட்கமும், மகிழ்ச்சியும் வழிய தன் தோழி சொன்னதைக் கேட்ட தருணத்திலேயே, விட்ட இடத்தில் இருந்து பிரபுவுடன் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் போலிருந்தது சாருவுக்கு.
ஒருவரை ஒருவர் அத்தனை மிஸ் செய்வதை இருவருமே உணர்ந்தார்கள். தயக்கம், ஈகோ எல்லாத்தையும் வீசி எறிந்துவிட்டு, பிரபுதான் முதல் எஸ்.எம்.எஸ். கொடுத்தான். 'உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது... கடற்கரையில் சந்திக்கலாமா?’ அவ்வளவுதான்... சாரு விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள். அக்கம் பக்கம் மறந்து அவர்கள் அழுகையோடு கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டதைப் பார்த்தவர்கள், 'இந்த லவ்வர்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா...’ என்று முணங்கிச் சென்றார்கள்; சாருவும், பிரபுவும் சத்தமாகச் சிரித்துக் கொண்டார்கள்.
கணவன் - மனைவிக்கு இடையே சின்னச் சின்னப் பிரிவுகள் தேவை. அவை அன்பை வளர்க்கும். அதேநேரத்தில் இதில் ஒரு சிறிய அபாயமும் இருக்கிறது. நீண்ட நாள் பிரிவுகளின்போது சரிவர கம்யூனிகேஷனோ, டெடிகேஷனோ இல்லாவிட்டால்... அது நிரந்தரப் பிரிவுக்கோ அல்லது வேறு விதமான புதிய தொடர்புகளுக்கோ வழி ஏற்படுத்திவிடும். இதை 'அவுட் ஆஃப் டச்... அவுட் ஆஃப் மைண்ட்' (Out of touch, Out of mind) என்பார்கள். அந்த ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வது அவர்களின் எமோஷனல் பிணைப்புகளில்தான் இருக்கிறது!
சொல்ல மறந்துவிட்டேன்... இப்போது பிரபு-சாருவுக்கு இரண்டு குழந்தைகள். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறைகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சாரு, அம்மா வீட்டுக்குச் சென்றுவிட... 'எப்போடா லீவ் முடியும்..?’ என்று ஏங்கிக் கிடப்பான் பிரபு. அங்கு சாருவையும் வாட்டும் பிரிவுத் துயர். விடுமுறை முடிந்து வீடு திரும்பும் நாளில் குழந்தைகளுக்கு நிறைய கிஃப்ட் வாங்கி வைத்திருப்பான் பிரபு. சாருவுக்கு..?! அவளை எவ்வளவு மிஸ் பண்ணினான் என்பதை அவள் கண்கள் பார்த்துச் சொல்வான். இந்த நாட்களில் அவளுக்காக தான் சேமித்து வைத்திருந்த அன்பையும், காதலையும் திகட்டத் திகட்டக் கொடுத்து, பெறுவான்!
சில நாட்களுக்கு முன்பு 'அபவுட் ஷ்மெட்’ (About Schmidt) என்று ஒரு படம் பார்த்தேன். ஜாக் நிக்கல்சன் என்கிற அற்புதமான நடிகன் நடித்த படம். ஜாக், தன் மனைவியின் உணர்வுகளைப் பற்றி என்றுமே கவலைப்படாத மனிதன். அவளோ ஒரு நல்ல மனைவியாக அவனுடைய தேவைகளை சரிவர பார்த்துக் கொள்பவளாக இருந்தாள். திடீரென்று ஒருநாள் அவள் இறந்து போகிறாள். அப்போதுதான் அவளின் அன்பு அவனுக்குப் புரிகிறது. மனைவியை வாழ்க்கை முழுக்கப் புறக்கணித்த குற்ற உணர்வு அவனை ஓசையில்லாமல் உலுக்குகிறது. படத்தின் கடைசி காட்சி கவிதை போல் என் மனதில் நிலைத்து விட்டது.
நட்சத்திரங்கள் மின்னும் வானத்தின் கீழ், காரின் பேனட் டில் மேல் அமர்ந்து அந்த நட்சத்திரங்களுடன் ஜாக் பேசு கிறான்... 'அன்பான மனைவியே... இன்று எனக்கு யாருமில்லை. நீ இல்லாத தனிமை என்னைக் கொல்கிறது. அந்த நட்சத்திரங்களில் ஒன்றாக நீ இருப்பாய் என்று தோன்றுகிறது. உன்னைச் சரியாகக் கவனிக்காததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்... அன்பு மனைவியே..!’ என்று சொல்லி கண்கலங்குவான் ஜாக்!
- நெருக்கம் வளரும்

Source - Vikatan Magazine

உங்கள் குழந்தையும் இனி நம்பர்-1

உங்கள் குழந்தையும் இனி நம்பர்-1

அம்மாக்களே...ஊட்டி வளர்க்காதீர்கள்!
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
 இனிய நிலா பாரதி... பெயருக்கு ஏற்ப இனிமையான குழந்தை. ஒன்றரை வயதான அந்தக் குட்டி செல்லம் அடம் பிடிக்காமல் சாப்பிடும்; சரியான நேரத்தில் தூங்கும். அவளைப் பார்க்கிற எல்லாரும், 'இந்த வயசுல எப்படி சமர்த்தா இருக்கா பாருங்க...’ என்று ஆச்சர்யப்படுவார்கள். அவளின் மாமா மகன்... அருண்மொழிவர்மன், எல்.கே.ஜி. படிக்கும் அழகுப் பையன். ஆனால் எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, நினைத்ததைச் சாதிக்கும் முரட்டுக் குழந்தை. 'இதைச் செய்யாதே’ என்றால், அதைத்தான் சிரத்தையாக செய்வான்.
'ஏன் இப்படி குழந்தைகள் முரண்படுகிறார்கள் குணத்திலும், பண்பிலும்?’
ஒரு குழந்தையின் பண்பும், ஒழுக்கமும் அதன் ஒரு வயதிலிருந்தே ஆரம்பிக்கிறது என்பது ஆச்சர்யம்தானே?! அந்த வயதிலேயே, 'எனக்கு சாக்லேட்தான் பிடிக்கும், பிஸ்கட் கொஞ்சம்கூட பிடிக்காது’ என்பது போன்ற விருப்பங்களையும், விருப்ப மின்மைகளையும் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். 18 மாதங்களான ஒரு குழந்தை... இடம், பொருள், ஏவல் பார்த்து தன் குணத்தையும் செய்கைகளையும் தீர்மானித்துக் கொள்கிறது என்கிற உண்மையைப் பெற்றோர்கள் உணர்ந்தால், ஒப்புக் கொண்டால்... குழந்தையின் பண்புகளை வார்த்தெடுக்க முடியும்!
ஒரு குழந்தையின் நடத்தை இரண்டு வகைப்படும். ஒன்று... வீட்டுக்குள் உருவாக்கப்படும் நடத்தை. மற்றொன்று... சமூகத்தால் உருவாக்கப்படும் நடத்தை. ஒரு குழந்தை மற்றவர்களுடன் எப்படிப் பழகுகிறது, பேசுகிறது, மற்றவர்களை எப்படி மதிக்கிறது போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது... சமூக நடத்தை. முழுக்க முழுக்க அம்மா, அப்பா, உறவுகள் என அதன் சுற்றுப்புறத்தை சார்ந்தே அமைவது... வீட்டுக்குள்ளான நடத்தை. மரபணுக்களின் ஆதிக்கம்... குணம், நடத்தை போன்ற விஷயங்களில் அதீதமாக இருக்காது; சுற்றுப்புறம்தான் அதனை அதிகம் பாதிக்கிறது.
ஒரு குழந்தை.... சாப்பிடுதல், தூக்கம், இயற்கை கடன் கழித்தல், ஆடை உடுத்துதல் போன்ற அடிப்படை விஷயங்களில் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் இருப்பதற்கான அடிப்படை... அதன் வீட்டில்தான் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்; குழந்தையும் அங்குதான் கற்றுக்கொள்ளும்.
1 - 4 வயதில் குழந்தை வைத்திருக்கும் பெரும்பாலான அம்மாக்களின் புலம்பல்... 'எம்பொண்னு சாப்பிடவே மாட்டேன்றா’ என்பதுதான். இதில் எத்தனை அம்மாக்கள், தாங்கள் குடும்பத்தோடு சாப்பிடும்போது, குழந்தைக்கும் ஒரு தட்டில் சாப்பாடு வைத்து, 'சாப்பிடும்மா...’ என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்? மடியில் வைத்து ஊட்டிவிடுவதை பெரும் வேலையாகவே செய்துகொண்டு இருந்தால்... அக்குழந்தைக்கு சாப்பாட்டு விஷயத்தில் ஒழுங்குமுறை வராது. மாறாக, சாப்பாட்டின் மீது வெறுப்பு வரும்... சாப்பாட்டுத் தட்டையே தட்டிவிடவும் செய்யும். இதையெல்லாம், 'பேட்டல் ஓவர் பிளேட்' (ஙிணீttறீமீ ஷீஸ்மீக்ஷீ ஜீறீணீtமீ) என்கிறது மனவியல் மருத்துவம்.
அப்படியானால் இப்பிரச்னையை எப்படிக் கையாள்வது? வெரி சிம்பிள்! நீங்கள் உட்கார்ந்து சாப்பிடும்போது அதற்கும் ஒரு தட்டில் சாப்பாட்டை வைத்துச் சாப்பிடப் பழக்குங்கள். 'அய்யோ... அவளா சாப்பிட்டா, எல்லாத்தையும் தரையில கொட்டி, எனக்கு வேலை வைப்பா... சாப்பாட்டை வேஸ்ட் பண்ணுவா’ என்று காரணங்களை சொல்லும் அம்மாக்கள்... தன் குழந்தையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறீர்கள் என்பதே உண்மை. அதன் ஒழுக்கத்துக்கும் பண்புக்கும் நீங்களே முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்று அர்த்தம். அதைச் செய்ய வேண்டுமா அம்மாக்களே..?
இதேபோல்தான், டாய்லெட் போகும் விஷயத்திலும். சில குழந்தைகளுக்கு இயற்கையான மலச்சிக்கல் இருக்கும். கொஞ்ச நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும். ஆனால், 'ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறோம்' என்று அதற்கு இயற்கை உபாதை வருகிறதோ, இல்லையோ... 'மாலி பாப்பு, டாய்லெட் போடா செல்லம், போடா செல்லம்...’ என்று தொடர்ந்து வற்புறுத்தினால், அது குழந்தையின் மனதுக்குள் ஒரு மன அழுத்தமாக அமர்ந்துகொண்டு, இயல்பான நடவடிக்கையைப் பாதிக்கும்.
எனவே, எந்தச் செயலிலும் இம்மாதிரியான வற்புறுத்தல்கள், பிரச்னையை அதிகப்படுத்தி, குழந்தையின் இயல்பான செயல்பாட்டினைக் குறைக்கும். குழந்தையின் செயல்பாட்டினை குறைப்பதும்... இயல்பாக இருக்க விடுவதும் உங்கள் கையில். உங்களின் இந்த அணுகுமுறையில் தான் குழந்தையின் ஒழுக்கமும் பண்பும் ஒளிந்திருக்கிறது!
- வளர்ப்போம்...
படம்: எம்.உசேன்
மாடல்: கிருத்திகா
Source - Vikatan Magazine

சமச்சீர் கல்வி திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்


சமச்சீர் கல்வி திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்
சென்னை, ஜூன்.7,2011
சமச்சீர் கல்வி திட்ட முறையை திருத்துவதற்கான மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டத்தை திருத்துவதற்கான சட்ட முன்வடிவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.
இதையடுத்து இந்த சட்ட திருத்தம் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
திமுக, பாமக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவும், அமைச்சர் சி.வி.சண்முகமும் விளக்கம் அளித்தனர். பின்னர், இந்த சட்ட திருத்தம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சமச்சீர் கல்வி திருத்த சட்ட முன்வடிவின் விவரம்:
தமிழக அரசு பள்ளிக் கல்வியைப் பொறுத்த அளவில் 2010-ம் ஆண்டு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை சட்டம் இயற்றப்படுவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. 

இவை அனைத்தையும் பரிசீலித்ததின் பேரில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அனைவருக்கும் பொதுவான பள்ளிக்கல்வி முறையை கொண்டு வருவதற்கு அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை அங்கீகரித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த சட்டத்தின் ஒரு சிலவற்றை செல்லாது என நீக்கம் செய்துள்ளது. இதில் வேறு சில வகை முறைகளை திருத்துவதற்காக, அதிகாரம் வழங்கி உள்ளது.

1 மற்றும் 6-ம் வகுப்புக்கான சமச்சீர் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான முடிவுகள் பதவி வழி உறுப்பினர்களால் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள வாரியத்தின் பிற உறுப்பினர்கள் பாடத்திட்டம் உருவாக்கப்பட்ட பிறகுதான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரியம், மத்திய சட்டத்தின்படி கல்வி அதிகார அமைப்பாக பணியாற்றுவதற்கு அரசினால் அறிக்கை வாயிலாக குறித்துரைக்கப்படும் அதே வாரியமாக இருக்குமா? என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டத்தின்படி அறிமுகப்படுத்த, கருதப்பட்ட பாடத்திட்டத்தை பொறுத்த அளவில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடத் திட்டமானது பல்வேறு பாடங்களில் உதாரணமாக கணக்கியல், அறிவியல், ஆங்கிலம் போன்றவற்றில் தரத்தையும் உள்ளடக்கத்தையும் பொறுத்த அளவில் தகுதியில் குறைந்ததாக காணப்படுகிறது. இது குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கத்தை தகர்ப்பதாக இருக்கிறது.

புதிய முறைப்படி தயாரிக்கப்பட்ட புதிய பாட நூல்களை ஆய்வு செய்தால், அதில் ஆக்கப்பூர்வமான கல்வி கற்றல் மற்றும் பாடத்திட்டத்துக்கு வெளியே கல்விக் கற்றல் ஆகியவை தேசிய கலைத் திட்ட வடிவமைப்பால் பரிந்துரை செய்யப்பட்டபடி, ஏற்றதாக இல்லை என்பதை காணலாம்.
இது தமிழ்நாட்டு மாணவர்கள், உயர் கல்விக்காக தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ளும்போது, இந்த நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சமமாக இருக்காது.

எம்.பி. விஜயகுமார், முனைவர் முத்துக்குமரன் குழுக்களின் அறிக்கையில் கொடுக்கப்பட்ட முக்கியமான ஒரு சில பரிந்துரைகள் வகை செய்யப்படவில்லை. எனவே பாடத் திட்டம் ஒன்றை தக்க முறைகளில் உருவாக்குவதில் உதவி செய்வதற்கான ஆலோசனை அமைப்பு எதுவும் இல்லை.
பொதுவான பாடதிட்டத்தை வகுக்கவும் பாட நூல்களை வகுப்பதற்கான தகுதி வாய்ந்த அமைப்பு எதுவும் இல்லை.

இரண்டாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலுமான வகுப்புகளுக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் கொண்டு வந்துள்ள புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் அறிவிக்கப்படவில்லை.

சமச்சீர் கல்வி என்பது பொதுவான பாடத் திட்டத்தையும், பாட நூல்களையும் வகுப்பது மட்டுமல்லாமல் அதைவிட அதிகமானவற்றை கொண்டவைகளாகும். முனைவர் முத்துக்குமரன் குழுவினால் செய்யப்பட்ட பல்வேறு ஆலோசனைகளை மாணவர்கள் நலன் கருதி விரிவாக ஆய்வு செய்வது தேவையான ஒன்று.

மாணவர்களை மதிப்பிட்டு கணிக்கும் முறையில் மாற்றங்கள் தேவைப்படுகிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். எனவே சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த இயலாததாக ஆகியுள்ளது.

இந்த அரசு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வழிமுறைகளை வழங்கி, ஆலோசனை பெறுவதற்கு குழு ஒன்றை நியமிக்க கருதுகிறது. இதற்கு செயல் வடிவம் கொடுக்க சமச்சீர் கல்வி முறை சட்டத்தை திருத்துவது அவசியமாகிறது.

சமச்சீர் கல்வி சட்டத்தில் உள்ள சில பிரிவுகளை விட்டு விடுவதும் அவசியமானதாக உள்ளது. பாடத்திட்டங்களும், பாட நூல்களும், இந்த சட்டத்தின் நோக்கங்களை முழுவதுமாக நிறைவு செய்வதாக இல்லை. உலக சவால்களை எதிர்கொள்ள, மாணவர்களை தயார்படுத்துவதாகவும் இல்லை.

எனவே அனைத்துப் பிரிவினருக்கும் கல்வித் தரத்தை மேம்படுத்துவதை உறுதி செய்ய வல்லுனர்களைக் கொண்ட உயர் அதிகாரக் குழு நியமித்து புதிய பாடத் திட்டம் குறித்து ஆய்வினை மேற்கொள்ள உள்ளது. இதற்கு ஏற்ப இந்த சட்டம் திருத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - Vikatan Magazine


தயாநிதிமாறனுக்கு எதிராக அரசியல் சதி? - 2G லேட்டஸ்ட் புயல்!

தயாநிதிமாறனுக்கு எதிராக அரசியல் சதி?

2G லேட்டஸ்ட் புயல்!
டந்த சில நாட்களாக, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பெயர் தலைப்புச் செய்திகளில்! டெல்லி எதிர்க்கட்சிகள் வட்டாரத்திலும் சூடாக உச்சரிக்கப்படுகிறது அவர் பெயர்!
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் 2008 - 09 காலகட்டத்தில் நடந்த ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து டெல்லி பாட்டியாலா தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், தயாநிதி மாறனை குறி வைத்து காய் நகர்த்தப்படுவதை அர்த்தத்தோடு கவனிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் புயல் கிளப்பிய கட்சிகளில் முக்கியமானது பி.ஜே.பி. இதனால் எரிச்சல் அடைந்த காங்கிரஸ் கட்சி, ''வேண்டுமானால், பி.ஜே.பி. ஆட்சியில் இருந்த காலம் தொட்டே தொலைத் தொடர்புத் துறையின் விவகாரங்களை விசாரிக்கலாம்!'' என்றது. சட்டரீதியாக 2ஜி விவகாரம் கிடுகிடுக்க ஆரம்பித்தபோது உச்சநீதிமன்றமும் இதே கருத்தைக் கூறியது.
இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷனும் இதே கருத்தை வலியுறுத்தியது. பி.ஜே.பி. ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி, ''2004-ம் ஆண்டு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன்தான் பல்வேறு விதிமுறைகளை மாற்றினார். அதற்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் முறையாகத்தான் நடந்து கொண்டார்கள்!'' என்று நடுவில் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். ஆனாலும் சி.பி.ஐ. விசாரிக்கும் எல்லைக்கு அப்பால் இருந்த விஷயம் என்பதால் அப்போது அது அமைதி ஆனது!
இப்போதோ, ஆ.ராசா மீது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்த பிரசாந்த் பூஷண், தயாநிதி விஷயத்தையும் கையில் எடுக்க... மீடியாக்களில் விறுவிறுவென அடிபடுகிறது விவகாரம்.
''தயாநிதி மாறன் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் மலேசியாவைச் சேர்ந்த 'மேக்சிஸ்' நிறுவனத்துக்குச் சாதகமாக நடந்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன!'' என்று தொடங்கும் பிரசாந்த் பூஷணின் மனுவில்...
''சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன் நடத்தி வந்த ஏர்செல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பம் செய்தது. ஆனால், அதை வழங்குவதில் சுணக்கம் காட்டினார் தயாநிதி மாறன். அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்யப்பட்டது. சிவசங்கரன் தாக்கல் செய்த அத்தனை மனுக்களும் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவிகிதப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. இதன் பிறகு தொலைத் தொடர்புத் துறை ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்க முன்வந்தது. முதலில் தேவையற்ற காலதாமதம் செய்ததும்... அதன்பிறகு அதை வழங்கியதும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில்  உள்ளது!'' என்று சொல்லியிருக்கும் பிரசாந்த் பூஷண்,
''இந்த விஷயங்கள் நடந்தேறிய பிறகு மேக்சிஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் மூலமாக சில முதலீடுகளைச் செய்துள்ளது. சன் டைரக்ட்​டுக்கு 599 கோடியும், இதே குழுமத்தின் தெற்காசிய எஃப்.எம். லிமிடெட் நிறுவனத்துக்கு 111 கோடியும் முதலீடாக தரப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவு இடவேண்டும்!'' என்று கூறி இருக்கிறார்.
பி.ஜே.பி-யின் செய்தித் தொடர்​பாளர் ரவிசங்கர் பிரசாத் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தயாநிதி​மாறனை நோக்கி சில கேள்விகளை வைத்திருக்கிறார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ் நந்தா, சி.பி.ஐ-யின் இயக்குநர் ஏ.பி.சிங்​குக்கு ஒரு கடிதம்  அனுப்பி உள்ளார்.
''ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்​பாக ரவிசங்கர் பிரசாத் எழுப்பிய கேள்வி​களுக்கு உரிய விளக்கமோ, பதிலோ வரவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியாவும் மௌனமாக உள்ளனர். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஊழல் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டு இருக்கிறது. எனவே, எங்கள் கேள்விகளுக்கு சி.பி.ஐ. இயக்குநர் பதில் சொல்ல வேண்டும். மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது 74 சதவிகிதப் பங்குகளை ஏர்செல் நிறுவனத்திடம் வாங்கிய பிறகுதான் அந்த நிறுவனத்துக்கு அதிகமான ஏரியாக்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதா?
இந்தக் கேள்வி மக்கள் மனங்களில் நிழல் ஆடுகின்றன. இது தொடர்பாக சி.பி.ஐ. இயக்குநர் பதில் அளிப்பதுடன் இது தொடர்பான விசாரணையையும் துரிதப்படுத்த வேண்டும். இந்த ஊழல் குற்றச்சாட்டு மீது இடையூறு அற்ற விசாரணை நடத்த வசதியாக தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும். அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!'' என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த மாதிரியே 'தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார். ''தயாநிதி மாறன் விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பிரதமருக்குத் தெரியும். தயாநிதி மாறன் அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும். அல்லது அவரை பிரதமர் ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். சட்டரீதியான நடவடிக்கையை தயாநிதி மாறன் எதிர் கொள்ள வேண்டும்!'' என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.
கடந்த 26-ம் தேதி சோனியாவைச் சந்தித்த தயாநிதி சில விளக்கங்கள் அளித்துள்ளார். அடுத்து, கடந்த திங்கள் கிழமை அன்று அரசியல் பிரச்னைகள் தொடர்பான கேபினெட் கூட்டம் பிரதமர் தலைமையில் டெல்லியில் நடந்தது. அதன் உறுப்பினர்களில் ஒருவர் என்ற முறையில் தயாநிதி மாறனும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் தயாநிதியை அழைத்து பிரதமர் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபலை சந்தித்து, சில விளக்கங்களை தயாநிதி முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
தனக்கு எதிராகக் கிளம்பும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தயாநிதிமாறன் மீடியாக்கள் வாயிலாக விளக்கம் வெளியிட்டு உள்ளார். ''2004-07 ஆண்டுகளில் நான் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தேன். அப்போது மற்ற நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் நான் சலுகை காட்டியது இல்லை. உரிமம் தரும் விஷயத்தில் அரசுக்கு என்னால் ஒரு பைசா கூட இழப்பு ஏற்பட்டதும் இல்லை. துறை விதித்திருந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்கிற அளவுக்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே உரிய காலத்தில் முறைப்படி உரிமம் வழங்கப்பட்டது!'' என்று கூறியுள்ள தயாநிதி,
''ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கிய விவகாரத் தைப் பொறுத்தவரை 2004-ம் ஆண்டு மே 27-ம் தேதி நான் அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பு இருந்தே அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் அரசின் பரிசீலனையில் இருந்து வந்தது. அந்த நிறுவனத்திடம் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதைப் பற்றியும் நிறுவனத்தின் நிகர மதிப்பு பற்றியும் கடன் - ஈவு விகிதம் பற்றியும் தொலைத் தொடர்புத் துறை அதற்கு முன்பே பல கேள்விகளை எழுப்பி இருந்தது.
அந்த நிறுவனத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் தொலைத் தொடர்புத்துறை முழுமையாக ஆராய்ந்து, உரிமம் பெறுவதற்கான எல்லாத் தகுதிகளையும் அந்த நிறுவனம் பெற்ற பிறகே அவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது.
நான் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எனது சகோதரரின் எந்த ஒரு நிறுவனத்திலும் எந்தவித முதலீடும் செய்ததில்லை. சன் டைரக்ட் நிறுவனத்தில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்தபோது நான் அமைச்சர் பதவியில் இல்லை. மேலும் இந்த நிறுவனங்கள் எதிலும் எனக்கு பங்குகளும் எந்தவித பொறுப்புகளும் இல்லை!'' என்று கூறியுள்ளார் அவர்.
''ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கும் சன் குழுமத்துக்கும் உள்ள தொடர்பு எந்த அரசியல் நிர்பந்தங்களாலும் உண்டானது அல்ல. 1998-ம் ஆண்டில் இருந்தே தொடர்பு கள் இருக்கிறது. எனவே 2007-ம் ஆண்டு லைசென்ஸ் கொடுக்கப்பட்டதற்கு பிரதி பலனாகத்தான் அவர்கள் சன் குழும நிறுவனங்களில் முதலீடு செய்தார்கள் என்று சொல்வது தவறு. ஆஸ்ட்ரோ நிறுவனம் சன் குழுமத்தில் 2007-ம் ஆண்டு டிசம்பரில்தான் பணம் முதலீடு செய்துள்ளது. ஆனால் அதற்கு பல மாதங்களுக்கு முன்பே தயாநிதிமாறன் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டார். அந்த காலகட்டத்தில் அவர் ஆக்டிவ்வான அரசியலிலேயே இல்லை. மத்திய அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்தும் மனிதராகவும் இல்லை. மீடியாத் துறையில் படிப்படியாக வளர்ந்து புகழுடன் இருக்கும் இரண்டு பெரிய நிறுவனங்களுக்குள் நடக்கும் இயல்பான வர்த்தக பரிவர்த்தனைகளுக்குக் கூட இப்படி அரசியல் சாயம் பூசுகிறார்களே..!'' என்று தயாநிதிமாறன் ஆதரவாளர்கள் வருத்தத்துடன் சொல் கிறார்கள்.
இதற்கிடையே தொலைபேசி இணைப்புகளை வரம்புமீறி பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட புகார் குறித்தும் மீடியாக்களிடம் விளக்கம் அளித்தார் தயாநிதி மாறன். ''என் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்படி குற்றச்சாட்டுப் பரப்புகிறார்கள். எனக்கு எதிராக சிலர் செய்யும் அரசியல் சதிதான் இது. என் மீதான அத்தனைக் குற்றச்சாட்டுகளும் பொய் என்பதை நிரூபித்துக் காட்டுவேன். நான் குற்றமற்றவன் என நிரூபிக்க வாய்ப்பு கொடுங்கள். தவறு செய்திருந்தால் எத்தகையத் தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். 2009-ம் ஆண்டு வெளியிட்ட அதே செய்தியைத்தான் இப்போதும் வெளியிட்டு இருக்கிறார்கள். புகார் கூறப்பட்ட காலத்தில் நான் பரபரப்பு அரசியலில் இல்லை. கட்சி மற்றும் குடும்ப நேர்மையை சந்தேகிக்கும் விதமாக இப்படி குற்றச்சாட்டு பரப்புகிறார்கள். என் வீட்டில் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்பு மட்டுமே உள்ளது!'' எனச் சொல்லி அதற்கு ஆதாரமாக பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் கொடுத்த கடிதத்தையும் பத்திரிகையாளர்களிடம் காட்டினார் தயாநிதி மாறன்.
உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணும்... சி.பி.ஐ-யை நோக்கி பி.ஜே-பி-யும் நகர்த்தும் இந்த காய்கள் எந்த கோணத்தில் நகரும் என்பது போகப் போகவே தெரியும். ஜூலை மாதம் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த முக்கோணச் சிக்கலில் இருந்து விடுபட தயாநிதி மாறன் எடுக்கப் போகும் நடவடிக்கைகள், தமிழகத்திலும் டெல்லியிலும் அடுத்தகட்ட அரசியல் காட்சிகளை நிர்ணயிக்கும்!
_ சூர்யா, படம்: சு.குமரேசன்

Source - Vikatan Magazine

Monday, June 6, 2011

பற்கள் பராமரிப்பு A To Z - Video

பற்கள் பராமரிப்பு A To Z

பற்கள் பராமரிப்பு
A To Z
விளக்கமளிக்கிறார் டாக்டர் சந்திரகுப்தா
பகுதி - I
பகுதி - II

மனிதம் வளர்போம்! - கர்வம்


மனம் என்னும் வீட்டில் கர்வம் போன்ற விஷ ஜந்துக்களை
நுழைய விடாமல் தடுக்க, அன்பு எனும் ஒளியைப் பரப்பி
தூய்மை எனும் காற்றையும் நிரப்புங்கள்!
- பகவான் ஸ்ரீசத்யசாயிபாபா
ந்தச் செயலையும் தன்னால் செய்ய முடியும் என்பது தன்னம்பிக்கை. தன்னால் மட்டுமே செய்யமுடியும் என நினைப்பது கர்வம். தனது திறமை அல்லது பெருமையை தானே உயர்வாக நினைத்துக்கொள்வதைக் கர்வம் என்பார்கள். தங்களது அழகு, செல்வம், உத்தியோகம், அதிகாரம், திறமை, உடல் நலம் ஆகியவற்றால் கர்வம் கொள்பவர்கள் உண்டு.
தன்னை அறிவாளியாக நினைத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைப்பதுதான் கர்வத்தின் வெளிப்பாடு. தன்னம்பிக்கை நேர்மறையான சிந்தனை; இதனால் விளைவது நன்மை மட்டுமே! கர்வம் என்பது எதிர்மறையான சிந்தனை; இதில் விளைவது தீமைகளே!
வாரியார் சுவாமிகள், அழகான கதையன்று சொல்வார்.
ஒரு ஊரில், பெரிய மனுஷன் ஒருத்தர், ஊர்க்காரர்கள் விசேஷங்களுக்கு தான் செல்லாமல், தனது செருப்பை மட்டும் அனுப்பி வைப்பாராம். தனது செருப்பு வந்தால், தான் வந்ததுக்குச் சமானம் என்பது அவரது நிலைப்பாடு. அந்த அளவுக்குக் கர்வம். அவர் இறந்தபோது, ஊரார் எவரும் அவரின் வீட்டில் இல்லை. அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதற்கு அடையாளமாக, அவரின் வீட்டைச் சுற்றி, ஊரில் உள்ளவர்களின் செருப்புகளே கிடந்தன!
தான- தருமங்கள் செய்யும் பலரில், ஒரு சிலர் மட்டும் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்வார்கள். அது, கர்வத்தின் வெளிப்பாடு. கோயில்களில் வெளிச்சத்துக்காக உபயமாக வழங்குகிற டியூப்லைட்டுகளில்கூட தங்களின் பெயர்களை எழுதி, புகழுக்கு வெளிச்சம் தேடிக் கொள்பவர்களும் இருக்கின்றனர். எல்லை மீறாத கர்வம், எவருக்கும் எரிச்சலைத் தராது. தீமை பயக்கும் கர்வத்தைக் கொண்டுள்ள மனம், பிறரை மதிக்காது; அவர்களின் வெற்றிகளை அலட்சியப்படுத்தும்; மட்டம் தட்டிப் பேசும்; சகிப்புத்தன்மை என்பது மருந்துக்கும் இருக்காது; கூட்டு முயற்சியில் கைகோக்காமல், விலகியே இருக்கும்; எங்கும், எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி அலட்டிக்கொள்ளும். ஒரு மனிதனின் அனைத்து துர்க்குணங்களுக்கும் அஸ்திவாரம், கர்வம்தான்! 


குருக்ஷேத்திர யுத்தம் முடிவுக்கு வந்தது. அர்ஜுனன் மனதுக்குள், அவன் பெற்ற வெற்றி உற்சாகத்தைத் தர... அடுத்த கணம், அதுவே கர்வமாக உருவெடுக்கிறது. 'எத்தனை பாணங்களை எய்தோம்; எத்தனை எதிரிகளை வென்றோம்! இதோ.. இன்று தன்னிகரில்லாத வீரனாக நிற்கிறோம்!’ என்று இறுமாப்புடன் யோசித்தவன், தேரில் இருந்து இறங்க முனைந்தான். கைலாகு கொடுத்துத் தேரில் இருந்து இறங்குவதற்குச் சாரதி உதவ வேண்டும் என்பது மரபு. ''கிருஷ்ணா, கொஞ்சம் கை கொடேன். தேரை விட்டுக் கீழிறங்கவேண்டும்'' என்றான்.

அவனது மனஓட்டத்தை அறியாமல் இருப்பாரா ஸ்ரீகிருஷ்ணர்?! மனதுக்குள் சிரித்துக் கொண்டார். ''இத்தனைக் காலம் தேரினைச் செலுத்தி, களைப்பாகிவிட்டேன். நீயே இறங்கிக்கொள்ளேன்'' என்றார். அர்ஜுனனும் சம்மதித்தான். ஆனால், கர்வம் மட்டும் இறங்கினபாடில்லை. வெற்றி மமதையுடன் கீழே இறங்க... அவனையடுத்து ஸ்ரீகிருஷ்ணரும் கீழே இறங்கினார்.அவ்வளவுதான்... தேர் குபீரென்று தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்துபோனது. அதிர்ந்துபோனான் அர்ஜுனன்.
மெள்ளப் புன்னகைத்தார் ஸ்ரீகிருஷ்ணர். ''அர்ஜுனா! உனக்கு நினைவிருக்கிறதா?
போரில் உன் மீது கர்ணன் நாகாஸ்திரத்தை எய்தபோது, உடனே தேரை கீழே அழுத்தினேன்; உன் தலை தப்பியது. அந்த பாணத்தின் பாதிப்பை, கொடியில் இருந்த அனுமன் இதுவரை ஏற்றிருந்தான். இப்போது தேரை விட்டு நான் இறங்கியதும், அனுமனும் இறங்கிவிட்டான். அஸ்திரம் தனது வேலையைக் காட்டிவிட்டது. இதோ, தேர் சாம்பலாகிப் போனது!'' என்றார். எரிந்து சாம்பலானது தேர் மட்டுமா? அர்ஜுனனின் கர்வமும்தான்! ஸ்ரீகிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டான்.
''மற்றவர்கள் அத்தனை பேரும் மண்டைக்கனம் பிடித்து அலைகிறார்கள்; நான் அவர்களைப் போல் இல்லை; நான் கர்வம் அற்றவன்'' என்று ஒருவன் பெருமிதத்தோடு மனசுக்குள் தன்னைத் தானே பாராட்டிக் கொள் வானேயானால், அவனும் கர்விதான்! உஷார்!

Source - Vikatan Magazine

வாழ்க வளமுடன்! - 6

 6வாழ்க வளமுடன்! - 6

'கோபமோ சந்தோஷமோ எதுவானாலும், அதற் கான உங்களோட எதிர்விளைவை ஒரு அஞ்சு நிமிஷம் தள்ளிப் போடுங்க. ஒரு நிதானத்துக்கு நீங்க வந்ததுக்கு அப்புறம், அந்த கோபத்துக்கோ சந்தோஷத்துக்கோ 'ரியாக்ட்’ பண்ணுங்க. அப்ப எடுக்கற உங்க செயல்பாடும் முடிவும் சரியா இருக்கும்!''
- இந்தக் கூற்று, நூற்றுக்கு நூறு சரியே!
சந்தோஷம் என்றால் தன்னிலை மறந்து உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பதும், கோபம் வந்துவிட்டால், பூமிக்கும் வானுக்குமாக எகிறிக் குதித்து, ஆர்ப்பாட்டம் செய்து அலறித் தீர்ப்பதும், நம்மில் முக்கால்வாசி பேரின் இயல்பான குணம்.
உற்சாகக் குதியல் போட்டவர்கள், பிறகு ''அடடா..! இன்னிக்கி ரொம்பச் சிரிச்சுட்டேம்ப்பா! இதே அளவுக்கு அப்புறமா எவர்கிட்டயாவது செமடோஸ் வாங்கிக் கட்டிக்கிட்டு, அழப்போறேன் போலிருக்கு!'' என்று அலுப்பும் சலிப்புமாகச் சொல்வார்கள்.
அதேபோல், கோபத்தில் கூப்பாடு போட்டவர்களும், ''ஸாரி! கோபம் வந்தா எனக்குக் கண்ணுமண்ணே தெரியாதுன்னுதான் உனக்குத் தெரியுமே?! மன்னிச்சிடு... இனிமே இப்படிக் கோபப்பட்டு உன்னைத் திட்டமாட்டேன்'' என்று சட்டென்று இறங்கிவந்து மன்னிப்புக் கேட்பார்கள்.
இதில் ஒரு வேதனையான விஷயம் என்ன தெரியுமா? அந்தச் சந்தோஷக்காரரும் சரி, கோபக்காரரும் சரி... அதையடுத்து வருகிற சந்தோஷங்களுக்கும் கோபமான செயல்களுக்கும் மீண்டும் தங்கள் வழக்கம் போலவேதான் நடந்துகொள்வார்கள். எல்லாம் முடிந்ததும். 'ரொம்பச் சிரித்தது தப்பு’ என்றும், 'கோபத்துல ரொம்பவே பேசிட்டேன்’ என்றும் இயல்பு நிலைக்கு வருவார்கள். கிட்டத்தட்ட இவர்களின் சுபாவமாகவே மாறிவிடுகிறது, இந்தச் செயல்.
இந்தச் செயலுக்கும் நாம் விடுகிற மூச்சுக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. நல்ல செய்தியோ கெட்ட செய்தியோ... எது வந்தாலும் உணர்ச்சிவசப்பட்டு, தன்னையே மறந்து, எதிரில் இருப்பவர்களின் அன்பு, பாசம், நேசம், அவர்களின் ஸ்நேகம் ஆகியவற்றையெல்லாம் மறந்து, அந்தச் செய்திக்குள் அமிழ்ந்து போவது என்பது தவறான நடைமுறை.

பொதுவாகவே நம்முடைய மூச்சு சீராக, அதுபாட்டுக்கு அதன் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. உங்கள் சந்தோஷத்துக்கு, நீங்கள் திக்குமுக்காடி ஆடிப்பாடினால், உங்கள் மூச்சின் இயக்கத் தில் சட்டென்று மாற்றங்கள் நிகழும். அதேபோல், கோபப்படும் படியாக சம்பவம் ஏதும் நடந்துவிட்டால், 'ஆய்... ஊய்’ எனக் கத்துகிறோம்; 'விட்டேனா பார்; தொலைச்சுப்புடுவேன்; பின்னிப்புடுவேன்...’ என்றெல்லாம் சத்தம் போடுகிறோம். இந்த ஆவேசமும் கூச்சலும் நம் மூச்சுக்குச் சத்ரு என்பதை நாம் உணர்வதே இல்லை.
அதனால்தான் கோபப்பட்டுக் கத்துபவர் பலருக்கு மூச்சடைப்பு, மாரடைப்பு, ரத்த அழுத்தம் ஆகியன ஏற்படுகின்றன. மூச்சில் பரவுகிற உஷ்ணம், குழாய்களின் வழியே பாய்கிற ரத்தங்களுக்கும் செல்லும். அது, உஷ்ணத்தை மூளையில் கொண்டு சேர்க்கிறபோது, இன்னும் வேகமாக அனைத்து உறுப்புகளுக்கும் பரவும். நீங்கள் மோட்டார் பைக்கில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று சடன்பிரேக் போடுகிறீர்கள். வேகமாக ஓடிக்கொண்டிருந்த டயரை, இப்படிச் சட்டென்று நிறுத்தும்போது, உங்களின் மோட்டார் சைக்கிள் ஒரு திருகு திருகி, செல்லும் திசைக்கு மாறாக வேறு திசை நோக்கித் திரும்பி நிற்பது இயல்புதானே?! சீராகச் செல்லும் வாகனத்தில் சட்டென்று வேகம் கூட்டுவதும் தவறு; வேகமாகச் செல்லும் வாகனத்தில் சடன் பிரேக் போடுவதும் தவறு! இதற்காகத்தான் கியர் சிஸ்டம் இருக்கிறது. நாலாவது கியரில் இருந்து, மூன்று இரண்டு, ஒன்று என்றாக்கி பிரேக்கை அழுத்த... வண்டிக்கும் சேதமில்லை; நமக்கும் ஆபத்து இல்லை.
வண்டியில் ஏறி பயணம் செய்வதற்கே இப்படியெனில், வாழ்க்கைப் பயணத்தில் நாம் மூச்சை எப்படியெல்லாம் ஆராதிக்கவேண்டும்; ஆராயவேண்டும்; ஆழ்ந்த ஈடுபாடு காட்டவேண்டும்?! ஆகவே, கோபமோ சந்தோஷமோ... சட்டென்று உணர்ச்சிவசப்படாதீர்கள்; தாம்தூமென்று குதிக்காதீர்கள். ஒரு ஐந்து நிமிடம் மௌனமாக இருங்கள். அந்தக் கால அவகாசம், சிந்தனைக்கு இடம் கொடுக்கும். அப்படிச் சிந்திக்கும்போது, நடந்தவை குறித்து மிகச் சரியாக யோசிக்கமுடியும். அந்த யோசனையின் இறுதியில், தெளிவு பிறக்கும்; நல்லதொரு தீர்வு கிடைக்கும். அப்படித் தீர்வு கிடைத்துவிட்டால்... ஆத்திரமாவது, கோபமாவது! சந்தோஷத்தில் தலை, கால் புரியாமல் குதிக்கவும் மாட்டோமே?!
ஆக, எது வந்தாலும் ஏற்று, நிதானமாக யோசிக்கத் துவங்கிவிட்டால், மூச்சின் சீரான ஓட்டத்தில் எந்தப் பாதகமும் இல்லை. மூச்சு சீராக இருந்தால்தான், வாழ்க்கையும் சீராக இருக்கும்!
'என்னடா இது, சுவாமி மூச்சுக்கு முந்நூறு தடவை மூச்சு பற்றியே சொல்கிறாரே’ என்று அலுத்துக் கொள்ளாமல், நம் மூச்சுக் காற்றை, அதன் இயக்கத்தைக் கவனிப்போம், வாருங்கள்.
தலைவலி, காய்ச்சல், நெஞ்சு எரிச்சல் என ஏதேனும் பிரச்னை ஏற்பட, மருத்துவ மனைக்குச் சென்றிருக்கிறீர்கள்தானே?! அங்கே, மருத்துவர் உங்களிடம் கேள்விகள் பலவும் கேட்டுவிட்டு, அப்படியே 'ஸ்டெதஸ்கோப்’ எனும் உபகரணத்தை எடுப்பார். ஸ்டெத்தின் ஒரு முனையை உங்களது நெஞ்சுப் பகுதியில் வைத்தபடி, அதன் இன்னொரு நுனியில் உள்ள இரண்டு முனைகளைத் தன் காதுகளில் செருகிக்கொள்வார்.
'எங்கே... நல்லா மூச்சு விடுங்க...’ என்று சொல்லிவிட்டு, அந்த மூச்சின் தாள லயத்தை, 'லப் டப்’பைக் கேட்டுக்கொண்டே, முதுகுப் பக்கத்துக்குச் செல்வார். 'இன்னும் நல்லா இழுத்து விடுங்க’ என்பார்; உற்றுக் கவனிப்பார்.
உங்கள் உடலுக்குள் இருந்தபடி, உங்களை இயக்குகிற மூச்சு எங்கிருந்து புறப்பட்டு, எங்கே முடிந்து, பிறகு எங்கிருந்து துவங்கி, நடுவே எந்தெந்த இடங்களில் பயணித்து, எங்கே முடிகிறது... என்பதான மூச்சின் பயணத்தை உங்கள் டாக்டர் போலவே நீங்களும் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனித்தால்தான், மூச்சின் முக்கியத்துவம் தெரியும் உங்களுக்கு!
எப்படிக் கவனிப்பது? ஸ்டெதஸ்கோப் ஒன்று வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமா?
அதெல்லாம் வேண்டாம். நான் சொல்வது போல் செய்யுங்கள்.
சுகாசனத்தில் அமர்ந்துகொள்ளுங்கள். அதாவது, சாப்பிடுவதற்காகத்  தரையில் சப்பணமிட்டு அமர்ந்திருப்போமே, அதுதான் சுகாசனம். அப்படி உட்கார்ந்துகொண்டு, முதுகை நேராக்கி, நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்; தலையை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ சாய்க்காமல், நேர்க்கோட்டில் வைத்திருங்கள். அப்படியே கண்களை மூடி இரண்டு நிமிடம், இரண்டே இரண்டு நிமிடம்... மெள்ள மூச்சு இயங்குகிற பகுதியில் உங்களது கவனம் மொத்தமும் இருக்கட்டும்.
அந்த மூச்சுக்கும் உங்களுக்குமான தொடர்பு மட்டுமே இருக்க வேண்டும். ஆழ்ந்தும் கூர்ந்தும் கவனியுங்கள். அந்த மூச்சுதான் நீங்கள்; அந்த சுவாசம்தான் நீங்கள். கவனம் சிதறாமல், எந்தப் பிரயத்தனமும் செய்யாமல், ஒரு பாட்டு கேட்பதுபோல, புத்தகம் படிப்பதுபோல, குழந்தையைக் கொஞ்சுவதுபோல... மூச்சைக் கவனியுங்கள்.
'என்ன, நல்லா இருக்கியா?’ என்று, முடிந்தால் மூச்சுடன் பேசிப்பாருங்களேன்!
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

Source - Vikatan Magazine

சிறையில் கனிமொழி:மத்திய அரசு மீது கருணாநிதி சாடல்


சிறையில் கனிமொழி:மத்திய அரசு மீது கருணாநிதி சாடல்
திருவாரூர், ஜூன், 6,2011
மத்திய அரசின் உத்தரவாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ கனிமொழி சிறையில் உள்ளதாக, திமுக தலைவர் கருணாநிதி குறைகூறியுள்ளார்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி... திமுக கொள்கைகளை கூர்தீட்டுவதற்கு மக்கள் தந்த வாய்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.
தன்னை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த திருவாரூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியது:
"திருவாரூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்துள்ளீர்கள். என்னை முதல்வராக்க வேண்டும் என்றும் பல்வேறு தொகுதிகளில் வாக்கு அளித்தவர்களும், வாக்கு அளிக்க நினைத்தவர்களுக்கும், வாக்கு அளிக்க இயலாதவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்கள் என்னை ஏமாற்றினாலும், திருவாரூர் தொகுதி மக்கள் எனக்கு தூக்க முடியாத சுமையை ஏற்றி உள்ளனர். அது சுமையாக இருந்தாலும் சுகமான சுமையாக இருக்கிறது.
எம்.எல்.ஏ.வாக பணியாற்றுவேன்..
நான் நீங்கள் விரும்பியபடி முதல்வராக ஆகவில்லை என்றாலும், உங்கள் எம்.எல்.ஏ.வாக ஆகி விட்டேன். ஒரு எம்.எல்.ஏ.வாக செய்ய வேண்டிய பணியை உங்களுக்கு நான் நேரடியாக ஈடுபட்டோ அல்லது திமுகவின் முக்கிய பிரமுகர்களை வைத்தோ செய்து தருவேன் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்.
திமுக இந்த தேர்தலில் தோற்று விட்டது என்று யாராவது சொன்னால் நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது தோற்பது திராவிட இயக்கத்தின் உணர்வு, கொள்கைகள் அல்ல. அவைகளை மேலும் கூர்மைப்படுத்தி, வலிமைப்படுத்த இந்த தோல்வி அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமுக அரசு பாராட்டு...
புதிய ஆட்சி வந்திருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள். புதிய ஆட்சியில் ஆளுனர் உரை வந்திருக்கிறது. அந்த உரையை நான் படித்து பார்த்தேன். ஆளுனர் உரையை கூட நின்று நிதானமாக, அச்சு பிழையின்றி, தயாரிக்கிற பொறுமை இந்த ஆட்சிக்கு இல்லை என்பது ஆளுனர் உரையை படிக்கும் போதே தெரிகிறது. பிழை திருத்தும் பணி சரியாக நடைபெறவில்லை. பேரறிஞர் என்பதற்கு பேராறிஞர் என்று அச்சு கோர்க்கப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தில் 2-ம் பக்கத்தில் 3-வது பாராவில் அவர்களை அறியாமலே ஒரு உண்மையை குறிப்பிட்டு உள்ளனர். அதில், இந்த புதிய அரசும் ஏழைகளின் நலனையே முன்னிறுத்தி செயல்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்படி என்றால், பழைய அரசும் அப்படிதான் செயல்பட்டது. புதிய அரசும் அதை முன்னிறுத்தி செயல்படும் என்று தங்களை அறியாமலேயே தெரிவித்து உள்ளனர். அந்த பிழையை, பிழை என்று பாராமல் நான் நமக்கு கிடைத்த பாராட்டு என்று தான் எடுத்துக்கொள்வேன்.
புதிய தலைமைச் செயலகம்...
தமிழ்மொழியின் பெருமையை உலகம் அறிய செய்வோம் என்று கூறிப்பிட்டு உள்ளனர். பழைய சட்டமன்ற கட்டிடத்தில் செம்மொழி மைய அலுவலகம், நூலகம் இருந்தது. அது என்ன ஆகி விட்டது என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எவ்வளவு காலம் தான் சட்டமன்றம் செயல்படும் என்று சிலர் கேள்வி கேட்டனர். இதையடுத்து புதிய சட்டமன்றம் கட்டினோம்.
அந்த கட்டடத்தை பற்றி பாராட்டாத ஏடுகளே கிடையாது. அந்த கட்டிடத்துக்கு கிடைத்த புகழை, நசுக்க, சீரழிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அந்த இடத்தையே மாற்றி பழைய முறையிலேயே சட்டமன்றம் நடக்கும் என்று கூறினால் அதற்கு என்ன பெயர். மாற்றம் வரும், மாற்றம் வரும் என்று சொன்னார்கள். இந்த மாற்றம் தானா. இப்படிப்பட்ட மாற்றத்தை தான் தமிழர்கள் விரும்பினார்களா என்பதற்கு பதில் வேண்டாமா. மாற்றம் வேண்டும் என்பது காலாகாலமாக கூறி வருவது. அந்த மாற்றம் ஏற்பட்டே தீரும்.
வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற திட்டம் போட்டு முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவித்து அவ்வாறே 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. அந்த திட்டத்தையும் கைவிடப்படுவதாக அறிவித்தால் நியாயம் தானா? என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
குடிசை வீடுகளில் யார் இருக்கிறார்கள். சீமான்களா, பணக்கார அதிபர்களா? மிட்டா மிராசுகளுக்காகவா, மாடமாளிகையில் இருப்பவர்களுக்காக இல்லை. குடிசைகளில் உள்ள பாட்டாளி, பாட்டாளியின் மனைவி, குழந்தைகளுக்காக இந்த திட்டத்தை அறிவித்து ஆண்டுதோறும் இந்த திட்டத்திற்கு உதவித்தொகையை உயர்த்தி அறிவித்து வந்துள்ளேன். முதலில் ரூ.75 ஆயிரம் அதன் பின்னர் 1 லட்சத்து 25 ஆயிரம் என்றெல்லாமல் உயர்த்தினேனே அந்த பெரும் திட்டத்தை கைவிடுகிறேன் என்று இந்த அரசு கூறி உள்ளது.
தேர்தல் என்பதற்காக இலவச திட்டங்களை நாங்கள் அறிவிக்கவில்லை. தொடர்ந்து எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டம். இது நீண்ட கால திட்டம். திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இலவச மின்சாரம் திமுக ஆட்சியில் தான் அறிவிக்கப்பட்டது. இடையில் சில பிரச்சினை காரணமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்கான தடங்கல்களை மக்கள் சிரமப்பட்டு ஏற்றுக்கொண்டார்கள்.
திமுகவை இது போன்ற செயல்பாடுகளால், இது போன்ற நிகழ்வுகளால் வீழ்த்தி விடலாம் என்று எண்ணிப்பார்ப்பவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.
திகார் சிறையில் கனிமொழி...
என்னைப் பற்றி, எனது மகன்களை, மகள்களை பற்றி, பேரன்களை பற்றி பல்வேறு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் கருத்து விஷமாகி திராவிட இயக்கம் என்ற அந்த சொல்லையே வீழ்த்தி விடலாம் என்று. திராவிட இயக்கம் என்ற சொல்லை அழித்து விட, வீழ்த்தி விட எந்த கொம்பனும் பிறக்கவில்லை.
எனது மகள் கனிமொழி டெல்லி திகார் சிறையில் உள்ளார். எனது மூத்த மகள் செல்வி இங்கு வந்துள்ளார். அவர் திருவாரூர் தொகுதியில் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். அவரின் உழைப்பை யாரும் மறக்க முடியாது.
செல்வியோடு கனிமொழியும் ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்து தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டார். ஆனால் அவர் இன்று மத்திய அரசின் உத்தரவாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ சிறையில் உள்ளார்.
கனிமொழி செய்த தவறு என்ன? கலைஞர் டி.வி.யில் பங்கு தாரராக இருந்த ஒரே காரணம் தான். அதனால் தான் சிறையில் வாடுகிறார். அதுவும் ஒரு மலரை வைத்தால் 10 நிமிடத்தில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் அடைபட்டு இருக்கிறார். நானும், செல்வியும் டெல்லி சென்று பார்த்த போது, அவர் கலைப்படாதீர்கள் என்று கூறி விட்டு, செல்வியிடம் அப்பாவை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். நான் கவலைப்பட வில்லை. எதையும் எதிர்கொள்ளும் சக்தியை திராவிட இயக்கம் எனக்கு வழங்கி உள்ளது என்று கூறினார். கனிமொழியே சொல்லும் அளவுக்கு அந்த சக்தியை பெற்று உள்ளார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம்... நான் செய்த குற்றம்...
ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணம் விரயமாகி விட்டது என்று கூறினார்கள். அதன் பின்னர் அது குறைந்து 30 ஆயிரம் கோடி என்றார்கள். ஆனால் அதில் யார் குற்றவாளி என்ற குழப்பத்தில் கனிமொழி கைது செய்யப்பட்டு உள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதைப்பற்றி அதிகம் பேச வேண்டாம்.
கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். காரணம், கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இரு என்று நான் கூறினேன். அவர் வேண்டாம் என்று கூறினார். நான் வற்புறுத்திய காரணத்தால் தான் பங்குதாரராக கனிமொழி சேர்ந்தார். வேதனையை பகிர்ந்துகொள்வதற்காக நான் வரவில்லை. நீங்கள் எனது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்பதால் உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
திராவிட இயக்கத்தின் லட்சியத்துக்காக, கொள்கைக்காக, எந்த காரியம் செய்ய வேண்டுமோ? அதை செய்துவிட்டுத்தான் மறைவேன் என்று உங்களிடம் கூறி விடைபெற்றுக்கொள்வதற்காகத்தான் வந்தேன். இப்படி சொல்வதால் பொதுவாழ்க்கையில் இருந்து அல்ல. இந்த இயக்கத்தை எல்லோரும் ஒன்று சேர்ந்து காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்," என்றார் கருணாநிதி.


Source - Vikatan Magazine