Wednesday, July 13, 2011

உதயமானது தெற்கு சூடான்

உதயமானது தெற்கு சூடான்

''இன்று முதல் நாம் சுதந்திர மனிதர்கள்..!''
நைல் நதி ஓரத்தில் ஒரு நாடு புதிதாகப் பூத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையில் 193-வது கொடியாக தெற்கு சூடான் தேசத்தின் கொடி பறக்கிறது. கொசாவா, எரித்திரியா, கிழக்கு தீமோர், சொமாலிலான்ட் வரிசையில் புதிய வரவு, தெற்கு சூடான்!
கடந்த 9-ம் தேதி அந்த நாட்டின் தலைநகரான ஜூபாவில் ஜோன் காரங் நினைவகத்தின் முன்னால் சூடானியர்கள் கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள். தெற்கு சூடானியர்​களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்த காரங், சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துபோன சோகம் சூடானியர்களுக்கு இன்னும் தாங்க முடியாத வேதனை!
வடக்கு சூடான் நாட்டிடம் இருந்து தெற்கு சூடான் மக்களுக்கு விடுதலையை வாங்கித் தர வேண்டும் என்பதற்காக காரங் முதலில் போராடவில்லை. தெற்கு சூடானியர்களை ஒடுக்கும் படையில் மிக முக்கியமானவராக இருந்த காரங்... பின்னர் மனம் மாறி துப்பாக்கியைத் திருப்பிப் பிடித்த வரலாறு அவர்களுடையது.
வடக்கு சூடானில் அரபு முஸ்லிம்​களும் தெற்கு சூடானில் பழங்கு​டியினரும் அதிகம். பழங்குடியினர் புறக்கணிக்கப்படுவது உலகத்தின் எல்லா நாடுகளிலும் நடப்பதுதான். பழங்குடி சமூகத்தினர் அதிகம் வாழும் டிங்கா என்ற சின்ன கிராமத்தில்தான் காரங் பிறந்தார். இந்த சமூகத்தினருக்குப் படிக்கப் பள்ளிகள் கிடையாது. யாரும் படிக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த ஏற்பாடு. ஆனால், அதை மீறி கிறிஸ்துவ மிஷன் பள்ளிக்கூடம் ஒன்று இவரது பகுதியில் திறக்கப்பட்டது. அதில் படித்த காரங், உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தையும் விவசாயம்பற்றிய கல்வியையும் கற்றார். இவை இரண்டுக்கும் மத்தியில் ராணுவத் தந்திரங்கள், ஆயுதங்களின் செயல்பாடுகளையும் தெரிந்துகொண்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய காரங், தான் கற்ற பொருளாதாரம் மற்றும் விவசாயம் குறித்த வேலைக்குப் போகாமல், சூடான் ராணுவத்தில் சேர்ந்தார். திறமையின் அடிப்படையில், படைத் துறையின் அதிகாரி பதவி கிடைத்தது.
1983 காலகட்டத்தில்தான் தெற்கு சூடானில் போராட்டக்காரர்கள் மெள்ள எழுந்து ஆயுதங்களைப் பிடித்தார்கள். அன்றும் இன்றும் வடக்கு சூடானின் அதிபராக இருக்கும் ஓமர் அல் பஷீர், இந்தப் போராட்டக்காரர்களை அடக்குவதற்கு ராணுவத்தை அனுப்பினார். ஓமரின் கெட்ட நேரம் அன்றுதான் தொடங்கியது. இந்த ராணுவ அணிக்கு, ஜோன் காரங்தான் தலைமை தாங்க வேண்டும் என்றும் ஓமர் அறிவித்தார். 'சூடான் விடுதலை அமைப்பு’ என்ற சிறு குழுக்களைவைத்து சில நூறு பேர் அப்போது சண்டை போட்டுக்கொண்டு இருந்த காலம் அது. அதை அடக்குவதற்கு பெரும் படையுடன் காரங் வந்தார். அதற்காகவே சூடான் விடுதலை அமைப்பு குறித்த அத்தனை தகவல்களையும் காரங் திரட்டினார். 'இவர்கள் விடுதலை கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?’ - திடீரென்று ஒரு நாள் காரங்குக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது. யாரை ஒடுக்குவதற்காகத் துப்பாக்கியைத் தூக்கி வந்தாரோ... அதே சூடான் விடுதலை அமைப்புக்கு, ஆதரவு தரத் தொடங்கினார் காரங். இவரோடு வந்த பலரும் இவருடன் இணைந்துகொள்ள, மற்ற ராணுவ வீரர்கள் வந்த பாதையிலேயே திரும்ப ஓடினார்கள். 'சூடான் மக்கள் விடுதலை ராணுவம்’ என்ற அமைப்பு காரங் தலைமையில் அப்போதுதான் உருவானது.
கெரில்லா போர்த் தந்திரங்களில் தேர்ந்த காரங் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவரது அமைப்பை இரண்டாகப் பிளக்கும் காரியங்கள் நடந்தன. அதில் ஈடுபட்ட துரோகிகளின் பல்வேறு தாக்குதல்களில் இருந்தும் காரங் தப்பினார்.
''அந்தத் துரோகியைக் கொன்றுவிடுங்கள்!'' என்று ஓமர் உத்தரவிட்டார். தெற்கு சூடானைக் கைப்பற்றுவதற்கான புனிதப் போர் என்று இதனை ஓமர் சொன்னார். ஆனால், காரங் வசம் இருந்த நிலங்களை ஓமர் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. அப்பாவிகளைக் கொல்வது அரசாங்கங்களின் ராஜ தந்திரங்களில் ஒன்று அல்லவா? இரண்டு நாடுகளின் எல்லையில் வாழ்ந்த பழங்குடியினரை கண்ணை மூடிக்கொண்டு கொல்ல ஆரம்பித்தது வடக்கு சூடான் ராணுவம். சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஓமர் மீது இன்று குற்றச்சாட்டு கிளம்பி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக அவர் நிறுத்தப்பட்டு உள்ளார். மிக மிகக் கால தாமதமாகத்தான் இந்தக் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
அமெரிக்கா இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது. அதற்கு மூன்று காரணங்கள். வடக்கு சூடானின் அதிபர் ஓமர், சீனாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இரண்டு, தெற்கு சூடானின் பழங்குடியினர் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவ மதத்தில் ஈடுபாடுகொண்டவர்களாக மாறிக்கொண்டு இருந்தார்கள். மூன்றாவது, தெற்கு சூடானில் உள்ள எண்ணெய் வளம். புதிய தேசத்தை உருவாக்கினால், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எண்ணெய் வளத்தை தன்னுடைய பக்கம் திருப்பலாம் என்று அமெரிக்கா கணக்குப் போட்டது. ஓமரைப் போர்க் குற்றவாளியாக ஆக்கியதும், தெற்கு சூடான் விடுதலை ராணுவத்தின் தலைவர் காரங்குடன் ஓமரைப் பேச்சுவார்த்தை மேஜையில் உட்காரவைத்ததும் அடுத்தடுத்து நடந்த அதிரடித் திருப்பங்கள்.
சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை ராணுவத்துக்குமான ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முன்னிலையில் 2005-ம் ஆண்டு நடந்தது. ஓமரும் உட்கார்ந்து இருந்தார். காரங் எதிர் முனையில் இருந்தார். ''தெற்கு சூடானில் வாழும் மக்கள் என்ன நினைக்கிறார்களோ... அதற்கு இரண்டு தரப்புமே கட்டுப்பட வேண்டும். 'ஒன்றுபட்ட சூடானாக வாழ்வதா... பிரிந்து சென்று புதிய தேசத்தை அமைப்பதா?’ என்பதை அந்த மக்கள் முடிவெடுக்கட்டும்!'' என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த தேர்தல் 2011-ம் ஆண்டு நடக்கட்டும் என்று அறிவித்தார்கள்.
இடைக்காலத் தெற்கு சூடான் அரசின் துணை அரசுத் தலைவராக காரங் முடிசூட்டிக்கொண்டார். இயற்கையின் சதி காரங் விஷயத்திலும் நடந்தது. ஆம், பதவி ஏற்றுக்கொண்ட மூன்று வாரங்களில் இவர் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானது. சம்பவ இடத்திலேயே காரங் இறந்துபோனார். மிக மோசமான வானிலைதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. காரங் மரணம்,  சூடான் மக்களை அதிகமாகப் பாதித்தது. இவரது மரணத்தைக் காரணம் காட்டி, மீண்டும் வடக்கு சூடான் தனது அதிகாரத்தை அதிகப்படுத்துமோ என்று மக்கள் பயந்தார்கள். உலக நாடுகளின் பார்வை இருந்ததால், அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் நாள் வாக்கெடுப்பு நடந்தது. 'லட்சக்கணக்கான மக்கள் தம் வாழ்க்கையின் விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்றுகொண்டு இருக்கிறார்கள்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். 'நாம் இந்த நாட்டுடன் ஒன்றாக இருக்கக் கூடாது. உடனடியாகப் பிரிந்தாக வேண்டும்’ என்று 37.92 லட்சம் பேர் வாக்களித்தார்கள். பிரிவினை வேண்டாம் என்று 44 ஆயிரம் பேர் வாக்களித்தார்கள். அதாவது 98 சதவிகிதம் பேர் தெற்கு சூடான் உருவாக உத்தரவிட்டார்கள்.
காரங்குடன் இருந்து போராடிய சல்வா கிர், அடுத்த தலைமைப் பொறுப்புக்கு வந்தார். காரங் சமாதியில் நின்று சல்வா கிர், ''இன்று முதல் நாம் சுதந்திர மனிதனாக மாறியுள்ளோம்!'' என்று கர்ஜித்தார்.
ஜூலை 9-ம் தேதி புதிய தேசத்தின் பிறப்புக்கான தேதி குறிக்கப்பட்டது. தேவாயங்களில் மணி ஒலிக்க... பொது இடங்களில் மெழுகுவத்தி ஏற்ற... ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூன், தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர், வடக்கு சூடான் அதிபர் ஓமர் நிற்க, புதிய கொடி பறந்தது. இந்தியா சார்பில், துணை ஜனாதிபதி அன்சாரி கலந்துகொண்டார். தெற்கு சூடானில் முதன் முதலாகத் தூதரகம் திறந்த நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு.
இதில் இன்னொரு திருப்பம்... இந்த விழாவுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை தெற்கு சூடான் அழைத்தது. நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் தலைவரான உருத்திரகுமாரன், 'எங்களை அழைத்திருப்பது இந்த அரசுக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரம்!’ என்று அறிவித்துள்ளார். தெற்கு சூடான் உதயமானது, நாடு கடந்து வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை விதையை விதைத்து உள்ளது.
தெற்கு சூடானைவிட தமிழ் ஈழம் தனியாகப் பிரிவதற்கு பல்லாயிரம் காரணங்கள் உண்டு. சூடானுக்காக அமெரிக்கா துடிப்பதற்கு, அங்கே எண்ணெய் வளம் இருக்கிறது; தமிழ் ஈழத்தில் எண்ணெய் வளம் இல்லையே!
- ப.திருமாவேலன்

செங்கோட்டையனுக்கு செக் வைக்கிறாரா சசிகலா?

செங்கோட்டையனுக்கு செக் வைக்கிறாரா சசிகலா?

விவசாயத் துறையைக் கலக்கும் 'வில்லங்க' பொன்னுச்சாமி
'வேளாண்மைத் துறையில் அறிவிக்கப்​படாத அமைச்​சராக செயல்படுபவர், சசிகலாவின் உறவினர் பொன்​னுச்சாமிதான். டிரான்ஸ்ஃபர் தொடங்கி, போஸ்ட்டிங் வரை எல்லாமே பொன்னுச்சாமியின் கண் அசைவில்​தான் நடக்கிறது’ என்று வேளாண்மைத் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கசியவே... விசார​ணையில் இறங்கினோம்.
 யார் இந்தப் பொன்னுச்சாமி?
வேளாண்மை விதை சான்று இயக்குநர், வேளாண்​மைக் கூடுதல் இயக்குநர் - பணி மேலாண்மை, வேளாண்மைக் கூடுதல் இயக்குநர் - இயற்கை விவசாயம் என மூன்று பதவிகளை வகித்துக்கொண்டு இருக்கும் ஓர் அதிகாரி. இது எல்லாவற்றையும்விட, சசிகலாவின் சகோதரர் மனைவியான இளவரசிக்கு சொந்தக்காரர் என்பது இவரின் கூடுதல் தகுதி.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற விவசாயி, ''கடந்த வருடம் என்​னோட தோட்டத்துக்குப் போடுறதுக்கு, 'பாஸ்போ பேக்டீரியா’ உரத்தை விவசாய ஆபீஸில் இருந்து வாங்கினேன். அதைப் பிரித்தபோது, உள்ளே சாம்பல்தான் இருந்தது. கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு அதைப் பரிசோதனைக்கு அனுப்பினேன். 'அது உயிர் உரமே கிடையாது’ என ரிப்போர்ட் கொடுத்தார்கள். அப்போது வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வேண்டப்பட்ட ஒரு நிறுவனம்தான், இப்படி லிக்னைட் பவுடருக்குப் பதிலாக சாம்பலை பாக்கெட் செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தெரிய வந்தது.
வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு நான் புகார் அனுப்பினேன். என்னுடைய புகாரை விசாரிக்க, திருச்சியில் வேளாண்​மைத் துறை இணை இயக்குநராக இருந்த பொன்னுச்​சாமியை நியமித்தார்கள். ஆனால், என்னிடம் பொன்னுச்சாமி உரிய விசாரணை நடத்தாமலேயே, 'எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது’ என சொல்லி​விட்டார். முன்னாள் அமைச்சர் நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர், இந்த பொன்னுச்சாமி. மேலும் நேருவின் தம்பி ராமஜெயத்தின் தோட்டத்தை இவர்தான் கவனிக்கிறார் என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆட்சி மாறிய பிறகாவது நல்லது நடக்கும் என நினைத்தேன். ஆனால், இந்த ஆட்சியிலும் பொன்னுச்சாமியின் அதிகாரம் குறையவில்லை.  ஐ.ஏ.எஸ். அதிகாரி வகித்து வந்த பொறுப்பை, பொன்னுச்சாமிக்குக் கொடுத்து விட்டார்கள். சசிகலா குடும்பத்தைப் பிடித்துப் பெரிய பதவிக்கு வந்துவிட்டார். வேளாண்மைத் துறையில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களைவிட, இந்த ஆட்சியில் அதிக ஊழல்கள் நடக்கப்போகின்றன. அதனால், உடனடியாக அந்த அதிகாரி மீது முதல்வர் அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கேட்டுக்கொண்டார்.
வேளாண்மைத் துறை வட்டாரத்தில் பொன்னுச்சாமி​பற்றி விசாரித்தோம். ''சின்னம்மாவின் தயவில்தான் ஏ.டி-யாக இருந்தவருக்கு பதவி உயர்வு என்ற பெயரில் பல பொறுப்புகளைக் கொடுத்து இருக்கிறார்கள். வேளாண்மைத் துறையில் அனைத்தையும் முடிவெடுக்கும் அதிகாரம் இப்போது பொன்னுச்சாமி கையில்தான் இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும், தமிழக விவசாயி​களின் மேம்பாட்டுக்காக, உலக வங்கி கோடிக்கணக்கில் நிதி உதவி செய்கிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஆண்டு ஒன்றுக்கு 125 கோடி ஒதுக்குகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்துக்காக, 100 கோடி வழங்குகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்காக, 50 கோடி கொடுக்கிறது. எண்ணெய் வித்துகள் திட்டத்தில் 25 கோடியும், தேசியப் பருப்பு வகைகள் அபிவிருத்தித் திட்டத்துக்காக 15 கோடியும் ஆண்டுதோறும் கொடுக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக இப்படிக் கொடுத்த பணம் எல்லாம் எங்கே போனது? எல்லாம் வெறும் ரசீதுகளாக மட்டுமே கணக்குக் காட்டப்பட்டு ஃபைலில் தூங்குகிறது. இதைப்பற்றி விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட வேண்டும். பொன்னுச்சாமியை வைத்துக்கொண்டு, இந்த விசாரணையை முறையாக நடத்த முடியுமா? தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பொன்னுச்சாமியின் மகளின் திருமணம், திருச்சியில் கோலாகலமாக நடந்தது. அதற்குத் தலைமை தாங்கியதே முன்னாள் அமைச்சர் நேருதான்!'' என்று புகார் படித்தார்கள்.
சென்னை எழிலகத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் பொன்னுச்சாமியை சந்தித்தோம். ''சதிஷ்குமார் அனுப்பிய புகாரில் உண்மை கிடையாது. ஏற்கெனவே அதைப்பற்றி முழுமையான விசாரணை நடத்திவிட்டேன். முன்னாள் அமைச்சர் நேருவும் அவர் சகோதரர் ராமஜெயமும், நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு நண்பர்கள். ராமஜெயத்தின் தோட்டத்தை மாதிரிப் பண்ணையாக மாற்றி அமைக்கச் சொல்லிக் கேட்டார்கள், நானும் செய்து கொடுத்தேன். விதிகளை மீறி நான் எதுவுமே செய்யவில்லை. என் மகள் திருமணம் நடந்தபோது, நண்பர் என்ற முறையில் நேருவை அழைத்து இருந்தேன். உறவினர் என்ற முறையில், சசிகலாவையும் அழைத்து இருந்தேன். இரண்டு பேருமே திருமணத்துக்கு வந்தார்கள். இதை நான் எங்கேயும் மறைக்கவில்லை.
சொந்தம் என்பதற்காக, சசிகலா எனக்கு எந்த சலுகையும் செய்தது கிடையாது. நானும் என் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது இல்லை. எந்த விசாரணை கமிஷன் வேண்டுமானாலும் அமைக்கட்டும். நான் தப்பு செய்து இருந்தால்... தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும்!'' என்று நிதானமாகச் சொல்லி முடித்தார்.
சமீபத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் ஒருவரை, அமைச்சருக்குத் தெரியாமலே மாற்றிவிட்டார் என்றும் பொன்னுச்சாமி மீது ஒரு புகார் சொல்லப்படவே, உளவுத் துறை மூலம் விசாரணை நடக்கிறதாம். அமைச்சரை டம்மி ஆக்க சசிகலா இவரை நியமித்துள்ளார் என்ற சந்தேகமும் கோட்டை வட்டாரத்தில் வலுவாக உள்ளது!
- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: தி.விஜய், எஸ்.தேவராஜன்

தில்சன் வழக்கில் அடுத்த திருப்பம்

தில்சன் வழக்கில் அடுத்த திருப்பம்

தடயத்தை மறைத்த மூன்று அதிகாரிகள் எங்கே?
''தில்சனை சுட்ட ராமராஜைப் பிடித்தது சரி. ஆனால், கொலை நடந்த இடத்தில் ரத்தத்தைக் கழுவி, துப்பாக்கி குண்டு பாய்ந்த சுவரைச் சுரண்டி தடயங்களை மறைத்த யூனிஃபார்ம் அணிந்த மூன்று ராணுவ அதிகாரிகளை ஏன் போலீஸ் பிடிக்கவில்லை?'' என்று சென்னை இந்திரா நகர்வாசிகள் கேள்வி எழுப்புகிறார்கள்!
''தடயங்களை மறைத்தது மட்டும் இல்லாமல், கொலையாளி யார் என்பதையும் போலீஸுக்குச் சொல்லாமல் மறைத்த அந்த மூன்று ராணுவ அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்த்தே தீரவேண்டும்!'' என்று உரக்கவே குரல் கொடுக்கிறார்கள்.
சென்னை தீவுத் திடல் அருகே உள்ள ராணுவ உயர் அதிகாரிகள் குடியிருப்புக்குள் சுவர் ஏறிக் குதித்து வாதாங்கொட்டை பொறுக்கச் சென்ற சிறுவன் தில்சன், கடந்த 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டான். 'தில்சனை சுட்டது கர்னல் அஜய்சிங்’ என்கிற கோணத்தில்தான் போலீஸின் ஆரம்ப விசாரணை சென்றது. இதைக் கடந்த ஜூ.வி. இதழில், பதிவு செய்து இருந்தோம். இதற்கிடையில், க்ரைம் விவகாரங்களைக் கையாளுவதில் கில்லாடி என்று பெயர் வாங்கிய சி.பி.சி.ஐ.டி-யின் கூடுதல் டி.ஜி.பி-யான சேகர் தலைமையிலான டீம், ஜூலை 10-ம் தேதி அன்று ரிட்டயர்டு கர்னல் ராமராஜை இந்த விவகாரத்தில் கைது செய்தது!
'சர்வீஸில் இருக்கும் இளம் அதிகாரி அஜய் சிங்கைக் காப்பாற்றும் வகையில் ரிட்டயர்டு அதிகாரி ராமராஜ் மீது பழியைப் போட்டுவிட்டார்களோ?' என்கிற ரீதியில் சேகரை சூழ்ந்துகொண்டு பத்திரிகையாளர்கள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டார்கள்.
''பத்திரிகையாளர்கள் சிலர் எங்களுக்கு இணையாக விசாரணை நடத்தி செய்திகளைப் பரபரப்பாக எழுதினீர்கள். நாங்களும் கடைசி நிமிடம் வரை பொறுமையாகச் செயல்பட்டு துப்புத் துலக்கினோம். சந்தர்ப்ப சாட்சியங்கள், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கூவம் ஆற்றில் இருந்து எடுத்ததுபோன்ற ஆதாரங்களை எல்லாம் சேகரித்த பிறகுதான், ராமராஜ்தான் இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தோம்!'' என்றார்.
அஜய் சிங் என்ற ட்ராக், ராமராஜை நோக்கி மாறிச் சென்றது எப்படி?
''அஜய் சிங், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தது வாஸ்தவம். அந்த வழியாக அப்போது காரில் சென்ற அவர், சிறுவர்கள் சுவர் ஏறுவதைக் கவனித்து காரை நிறுத்தி, திட்டி இருக்கிறார். அதைக் கேட்ட சிறுவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள். அஜய் சிங்கின் கார் சென்ற பிறகு, பார்த்துவிட்டு, மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள். தில்சன் சுவர் ஏறி உள்ளே குதித்து இருக்கிறான். அப்போதுதான், திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு உள்ளது. உடனே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்திருக்கிறான் தில்சன். இந்தப் பதற்றத்தில், அஜய் சிங்தான் தில்சனை சுட்டு இருப்பார் என்று நினைத்துவிட்டார்கள்.
எங்கள் விசாரணையின்போதுதான் அஜய் சிங் சொன்ன தகவல்களை கிராஸ்செக் செய்து, அவர் சுடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி கொண்டோம். 'அப்படி என்றால், யார் சுட்டது?’ என்கிற அடுத்த ட்ராக்குக்குச் சென்றோம். 'மரத்தடியில் நின்ற தில்சனை ரிட்டயர்டு கர்னல் ராமராஜ், அவரது வீட்டு பால்கனியில் இருந்தபடியே துப்பாக்கியால் சுட்டு இருப்பாரோ?’ என்ற சந்தேகம் முதலில் எங்களுக்கு எழுந்து, அவரை விசாரித்தோம்.
ராமராஜிடம் ஏதாவது துப்பாக்கி இருக்கிறதா என்று அதன் பிறகு நாங்கள் விசாரித்தபோது, சரிவர பதில் இல்லை. அதன் பிறகு துருவித் துருவி விசாரித்தபோது, 'போரில் இந்திய ராணுவம் கைப்பற்றிய துப்பாக்கிகளை ராணுவத்தினருக்கு ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில், ராமராஜும் ஒரு துப்பாக்கியை வாங்கியதோடு, அதற்கு லைசென்ஸும் வைத்திருக்கிறார்...’ என்பதைத் தெரிந்துகொண்டோம். இந்தத் துப்பாக்கி பற்றி முறைப்படி அவரது மேலிடத்துக்குத் தெரிவிக்கவில்லை. ஆனால், சைசென்ஸ் புதுப்பிக்க லோக்கல் போலீஸுக்கு ராமராஜ் விண்ணப்பித்து இருந்ததை நாங்கள் கண்டுபிடித்தோம். இதுபோன்ற பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்த பிறகுதான், ராமராஜனுக்கு சம்மன் அனுப்பி, நேரில் வரவழைத்து விசாரிக்க முடிந்தது. அவரால் தப்பிக்க முடியவில்லை. தில்சனை சுட்ட துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் எடுத்துப்போய் கூவம் ஆற்றில் எறிந்துவிட்டதையும் ஒப்புக்கொண்டார். தீ அணைப்புத் துறையினர் உதவியுடன் அதை மீட்டோம்!'' என்று பெருமிதத்துடன் சொன்னார்.
- ஆர்.பி.  படம்: சொ.பாலசுப்ரமணியம்

Tuesday, July 12, 2011

வாழ்க வளமுடன்! - 9 - வேதாத்திரி மகரிஷி (சந்தோஷ சூட்சுமம்!)

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

சந்தோஷ சூட்சுமம்!

பயணங்கள் சுகமானவை. எத்தனை முறை சென்றாலும் ரயில் பயணம் எவருக்கும் அலுப்பதே இல்லை. ஓடும் ரயிலின் சீரான தடதட சத்தமும், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் லேசாக அசைந்து, அன்பான அம்மா போல நம்மைத் தாலாட்டி ஆட வைத்து அழைத்துச் செல்லும் பாங்கும் மிக ரசனையானவை.
பேருந்துப் பயணம் மட்டும் என்ன... ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டால், காற்று விறுவிறுவென ஜன்னலுக்குள் புகுந்து, நம் தலையைக் கோதிவிடுவதில் இருக்கிற சுகம், அலாதியானது; ஈடு இணையே இல்லாதது!
வாழ்வில், இப்படியான இனிமைப் பயணங்கள் நிறையவே உண்டு. இன்னும் சொல்லப் போனால், இந்த வாழ்க்கை என்பதே பெரும் பயணம்தான், இல்லையா? இந்தப் பயணமும் ஒருவிதத்தில் சுகமானதுதான். என்ன ஒன்று... ரயிலிலும் பேருந்திலும் அதன் வேகமும் அடிக்கிற காற்றும் நம் பயணத்தை சுவாரஸ்யமாக்கும். ஆனால், வாழ்க்கைப் பயணத்தில், நாம் சுவாசிக்கும் காற்றில்தான், சந்தோஷத்துக்கான சூட்சுமமே  அடங்கியிருக்கிறது.
மனவளக் கலைப் பயிற்சிக்கு வரும் அன்பர்களிடம், பொதுவாகச் சொல்வேன்... ''மனவளக் கலையில் நிறையவே பயிற்சிகள் உண்டு. எல்லாமே எளிமையானவை; மிகச் சுலபமாகப் புத்தியில் வாங்கிக்கொண்டு செயல்படுத்தக்கூடியவை. அதில், சுவாசப் பயிற்சியின்போது, ரொம்பவும் கவனம் எடுத்துக்கொண்டு கற்றுக் கொள்ளுங்கள். அதன் அவசியத்தை உணர்ந்து, அறிந்து, புரிந்துகொண்டு செயலாற்றுங்கள்'' என்பேன்.
ஒருமுறை அன்பர் ஒருவர், ''என்ன சுவாமி... மனவளக் கலைப் பயிற்சியின்போது, நீங்கள் கூடவே இருக்கிறீர்கள். போதாக்குறைக்கு, நம் அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள், சுற்றிச் சுற்றி வந்து ஆலோசனை சொல்கிறார்கள்; 'கைகளை இப்படி வைத்துக் கொள்ளுங்கள்; பாதங்களைத் தொடையின் மீது வைத்துக் கொண்டு, இந்த இரண்டு விரல்களாலும் மெள்ள அழுத்துங்கள்’ என்று சரிசெய்கின்றனர். எந்த விரல்களால், எந்த இடத்தில் இருந்து அழுத்தவேண்டும் என்று தெளிவாகச் சொல்லித் தருகின்றனர். அப்படியிருக்கும்போது, சுவாசப் பயிற்சியையும் அவர்களே பார்த்து சரிசெய்துவிடுவார்களே சுவாமிஜி! நீங்கள் இதற்கு இத்தனை கவலைப்படுவானேன்?'' என்று கேட்டார்.
கால்களைக் கைகளால் அழுத்துவது பற்றி அருகில் இருப்பவர்கள் எடுத்துச் சொல்வார்கள்; சரி செய்வார்கள். வஜ்ராசனம் எப்படி அமரவேண்டும் என்றும், அப்போது முதுகையும் கழுத்தையும் எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் திருத்துவார்கள். ஆனால், மூச்சுப் பயிற்சியில், 'இப்படி அமர்ந்து கொள்ளுங்கள்; முதுகை நேராக்கிக் கொள்ளுங்கள்; மூச்சை நன்றாக உள்ளிழுங்கள்’ என்று சொல்வது மட்டும்தான் எங்களின் வேலை. அந்த மூச்சை எப்படித் துவங்கி, எங்கே முடிக்கவேண்டும்; அது எங்கே முடிகிறது என, மெள்ள மூச்சை இழுத்துக் கொள்வதும் பிறகு விடுவதுமாக இருக்கிற சூட்சுமத்தை நீங்களேதான் அறியமுடியும். காற்று எனும் பந்து, மூக்கின் வழியே நுழைந்து, நெஞ்சின் எந்த இடத்தில் போய் இடிபட்டு நிற்கிறது என்பதை உங்களால்தான் உணரமுடியும். ஆகவே, சொல்லும்போது கவனமாகக் கேட்பதும், செய்யும்போது அந்த மூச்சுப் பந்தினூடே நீங்கள் பயணம் செய்வதும் அவசியம்'' என்பதை விளக்கினேன்.
சரி... மூச்சுப் பயிற்சிக்கு வருவோம்.
சுவாசப் பயிற்சியில் மொத்தம் ஏழு நிலைகள் இருக்கின்றன. இந்த ஏழு நிலைகளையும் எவர் ஒருவர் சரியாகச் செய்கிறாரோ, அவர்களின் மூச்சுக் குழாய் சுத்தமாகும்; சைனஸ் போன்ற பிரச்னைகளில் இருந்து அவர்கள் நிவாரணம் பெறுவார்கள் என்பது மருத்துவர்கள் பலரே வியந்து சொன்ன உண்மை! ஆகவே, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் மூச்சுப் பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள்; அருமையான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள் என்பது உறுதி!
வலது கையைத் தொப்புள் பகுதியிலும், இடது கையை வலது காதிலும் வைத்துக்கொண்டு, அடுத்து, இடது கையை தொப்புள் பகுதியிலும் வலது கையை இடது காதிலும் வைத்துக்கொண்டு... எனப் பயிற்சி செய்தீர்கள், அல்லவா?! இப்போது, வழக்கம்போல் சுகாசனத்தில் அமர்ந்துகொண்டு, வலது உள்ளங்கையால் இடது காதையும், இடது உள்ளங்கையால் வலது காதையும் பொத்திக் கொள்ளுங்கள். கண்களை மூடியபடி, மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். அவசரமே வேண்டாம்; நிதானம்தான் இங்கே முக்கியம். இதேபோல் ஐந்து முறை செய்யும்போது, உங்கள் நுரையீரலின் பின்பகுதி முழுவதும் நன்கு விரிவடைவதை உங்களால் உணரமுடியும். இதையடுத்து, வலது உள்ளங்கையால் வலது காதையும், இடது உள்ளங்கையால் இடது காதையும் மூடிக் கொள்ளுங்கள். அப்போது, உங்களின் இரண்டு கைகளும் மடங்கினாற்போல் நெஞ்சினில் இருக்காமல், உங்களின் தோள்பகுதியைப் பார்த்தபடி இருக்கட்டும். கிட்டத்தட்ட, உங்களின் இரண்டு கை விரல்களும் பின்னந்தலையில் வந்து சேரும்படி இருக்கட்டும். இந்த நிலையில் இருந்தபடி, மூச்சை ஆழ்ந்து, நிதானமாக ஐந்து முறை இழுத்து, வெளியே விடுங்கள். இந்தப் பயிற்சியால், நுரையீரலின் முன்பகுதியும் கீழ்ப் பகுதியும் மிக அருமையாக விரிவடையும். கொஞ்சம் பொறுமையுடனும் ஈடுபாட்டுடனும் பயிற்சி செய்தால், உங்களால் நுரையீரலில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாக உணரமுடியும். நுரையீரல் சீராகிவிட்டதென்றால், மூச்சுக் குழாயின் வழியே வருகிற காற்று, தங்குதடையின்றி வரத்துவங்கிவிட்டது என்று அர்த்தம். மூச்சில் தடையேதுமின்றி இருந்தால், செயலிலும் தடைகள் இருக்காது; தடுமாற்றங்கள் நிகழாது. தடுமாற்றம் இல்லாத செயல்பாடுகள் எல்லாமே வெற்றியைத்தான் தரும் என்று நான் சொல்லவேண்டுமா, என்ன?
இன்னொரு விஷயம்... இந்த ஏழு நிலைப் பயிற்சிகளிலும், மூச்சை உள்ளிழுக்கலாம்; வெளியேற்றலாம். ஆனால், மூச்சை நிறுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. யோகாசன முறையில், அப்படி மூச்சடக்குவதை கும்பகம் என்பார்கள். மனவளக் கலை உடற்பயிற்சியில், இந்தக் கும்பக முறை, எந்த இடத்திலும் இல்லை என்பதை அன்பர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மூச்சுப் பயிற்சியின் ஏழாவது நிலையையும், ஏழு பயிற்சிகளால் நமக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன என்பதையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
அதற்கு முன், 'அப்பாடா...’ என்று ஒருமுறை மூச்சைத் தளர்த்திக்கொண்டு, ரிலாக்ஸ் செய்யுங்களேன்!
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா


Source - Vikatan Magazine

மிரட்டும் நில மோசடி அஸ்திரம்...

மிரட்டும் நில மோசடி அஸ்திரம்...

திகிலில் தி.மு.க. புள்ளிகள்!
'கருணாநிதியின் குடும்பத்தினர், மந்திரிகள் மற்றும் கூலிப் படை​யினரால் மிரட்டி பறிக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் மீட்கப்பட்டு, உரியவர்​களிடம் ஒப்படைக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்​படும்!’ - தேர்தல் பிரசார நேரத்தில் ஜெயலலிதா சொன்னதுதான் இது! இப்போது, முதல்வரான ஜோரிலேயே அதை நிறைவேற்றத் தொடங்கவே, ஆக்ஷன்கள் தூள் பறக்கின்றன!
மாநிலம் முழுவதும் தி.மு.க. புள்ளிகளின் தலைகள், 'நில மோசடி’ புகாரில் உருள ஆரம்பித்து உள்ளன. சில இடங்களில் கைதும் நடந்து இருக்கிறது. இந்த அதிரடிக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது கோவையில்தான். கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர், மாவட்ட பஞ்சாயத்துத் துணைத் தலைவர் போன்ற பதவிகளை வகிக்கும் ஆனந்தன், 'க்ரீன் ஹோம் லேண்ட்ஸ்கேப் பிரைவேட் லிட்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்துகிறார். இவர் மீது ஸ்ரீசர்மா என்பவர், கோவை சிட்டி கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், ''ஆனந்தனின் ரியல் எஸ்டேட் கம்பெனி சார்பில், தாளியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கலிக்க நாயக்கன் பாளையத்தில் 'வெஸ்டர்ன் வேல்ஸ்’ என்ற பெயரில் லே-அவுட் போட்டாங்க.  முன் பணமா 20 ஆயிரம் செலுத்தி, ஒரு பண்ணை வீட்டுக்கான நிலத்தை புக் பண்ணினேன். மீதிப் பணத்தை மாசம் 2,500 வீதமா செலுத்தறதா ஒப்பந்தம். அதன்படி, தவணைப் பணத்தை தொடர்ந்து கட்டிட்டு வந்தேன். கடைசி அஞ்சு மாசத் தவணை நிலுவையில் இருந்த நேரத்தில், பணத்தை வாங்க மறுத்துட்டாங்க. சந்தேகப்பட்டு 2004-ம் வருஷம் அந்த நிலத்தோட 'வில்லங்க சான்று’க்கு அப்ளை பண்ணி வாங்கிப் பார்த்தால், என் இடத்தின் ஒரு பகுதியை பாபு ஹென்றி சாமுவேலு என்பவருக்கும், இன்னொரு பகுதியை ராமமூர்த்தி என்பவருக்கும் வித்தது தெரிஞ்சது. உடனே அந்த நிறுவன ஓனர் ஆனந்தன்கிட்ட கேட்டப்ப, 'என் மேல் புகார் பண்ணினா, நீ உயிரோடவே இருக்க மாட்டே... உன்னை ஒண்ணும் இல்லாமப் பண்ணிடுவேன்’னு மிரட்டினார். ஆனாலும், அப்பவே போலீஸ்ல புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லை.
இத்தனை வருஷமா ஆனந்தன்கிட்ட, 'என் பணத்தைக் கொடுங்க’னு கேட்டுப் பாத்துட்டேன். ரெண்டு மூணு தடவை அந்த ஆபீஸ்ல போயி உண்ணாவிரதம்கூட உட்கார்ந்தேன். மிரட்டல்தான் கிடைச்சது. எனவே, ஆனந்தனிடம் நான் இழந்த பணத்தை மீட்டுக் கொடுங்கள்!'' என்று சொல்லி இருந்தார் ஸ்ரீசர்மா.
இதை அடுத்து, ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். சிறை சென்ற ஆனந்தன் மீது கோவையைச் சேர்ந்த டாக்டர் வேலுசாமி ரவீந்திரனும், இதேபோல இன்னொரு புகார் கொடுத்து இருக்கிறார். கூடவே ஆனந்தனின் தம்பி மதன கோபால் மீது, துடியலூர் செவ்வாழைத் தோட்டத்தை சேர்ந்த ரங்கராவ் என்பவரும் நில அபகரிப்பு புகார் ஒன்றைக் கொடுக்கவே, பரபரப்பு தொடர்கிறது.
கோவையைத் தொடர்ந்து, திருச்சியில் அடுத்த அதிரடி. திருச்சியில் மாஜி அமைச்சர் கே.என்.நேருவால் கட்டப்பட்டு இருக்கும் கலைஞர் அறிவாலயத்துக்காக தனி நபர் ஒருவரின் இடத்தை முறைகேடாகப் பறித்து உள்ளனர் என்பது குற்றச்சாட்டு. ஏற்கெனவே, மரியம் பிச்சை மரண சர்ச்சையில் தப்பிய நேரு, இதில் நிச்சயம் சிக்குவார் என்று மலைக்கோட்டை அ.தி.மு.க-வினர், காவல் துறையின் அடுத்த கட்ட ஆக்ஷனை எதிர்ப்பார்த்துக் காத்துக்​கிடக்கிறார்கள்!
அடுத்து, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கோ.அபிஷேகபுரம் கோட்டத் தலைவரான அறிவுடை நம்பியை உள்ளே தள்ளியது போலீஸ். செந்தண்​ணீர்புரம் ஏரியாவைச் சேர்ந்த கமலா என்பவருக்கு சொந்தமான ஒரு வீடு, உறையூரில் இருக்கிறது. இதை வாடகைக்கு எடுத்த அறிவுடை நம்பி, வாடகை கொடுக்காமல் இருப்பதோடு, வீட்டை அபகரிக்கும் முயற்சியிலும் இறங்கினாராம். 'வீட்டை காலி செய்யச் சொன்னால், கமலாவைக் காலி செய்துவிடுவேன்’ என்று அவர் மிரட்டல் விடுத்ததாகப் புகார். இதேபோல், உறையூர் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த காமராஜ் என்பவரும், கோட்டத் தலைவர் மீது புகார் கொடுத்து இருக்கிறார்.
தி.மு.க-வினர் மீது நில அபகரிப்புப் புகார்கள் குவிவதை அடுத்து, 'வாராவாரம் திங்கட் கிழமைகளில் என்னிடம் நேரடியாக வந்து இந்த புகார்களைக் கொடுக்கலாம்’ என்று அறிவித்து இருக்கிறார், திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து. கூடவே, யார் யார் மீது புகார் வந்திருக்கிறது என்பதை ரகசியமாகப் பாதுகாத்து, அவர்கள் முன் ஜாமீன் வாங்கிவிடாமல் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று தன் ஜூனியர்களுக்கும் ஸ்பெஷல் ஆர்டர் போட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கோவை, திருச்சியில் இப்படி என்றால், இந்த 'நில மோசடி ஆக்ஷன் ஜுரம்’, அடுத்து சேலத்தையும் ஆட்டிவைக்கிறது. அதிலும், தி.மு.க-வின் பவர் பாயின்ட்டான வீரபாண்டியாரின் மகன் மீதே புகார் பாய்ந்ததுதான் ஹை லைட். சேலத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், வீரபாண்டியாரின் மகனும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ராஜா மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த ஆட்சியிலேயே ஒரு புகார் கொடுத்து இருந்தார்.
'என் அப்பா ஜெயக்குமார் பேரில் ஜாகீர் அம்மாபாளையத்தில் 10 ஏக்கர் நிலம் பல்வேறு சர்வே எண்களில் உள்ளன. நாங்கள் 37 ஆண்டுகளாக அந்த இடத்தை அனுபவித்த நிலையில், அதில் 4.41 ஏக்கர் நிலத்துக்கு மாணிக்கம் மகன் சரவணன் என்பவர் போலியாக ஒரு பட்டா தயார் செய்து, அந்த நிலத்தை சேலம் சங்கர் நகரைச் சேர்ந்த தங்கவேலு என்பவருக்கு விற்பனை செய்து உள்ளார். நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக 2007 மே 13-ல் சேலம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், தங்கவேல், அந்த நிலத்தை தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவுக்கு விற்பனை செய்துவிட... நிலத்தை வாங்கிய முன்னாள் எம்.எல்.ஏ ராஜா, நிலத்தைச் சுற்றி வேலி அமைத்துவிட்டார். பறிபோன எங்கள் நிலத்தை மீட்டுத் தாருங்கள்!’ என்பதுதான் அந்த புகாரின் சாராம்சம்.
அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்தபடியால், முத்துக்குமாரின் புகார் புஸ்வாணம் ஆகியது. இப்போது அந்த பழைய புகாருக்குப் புத்துயிர் கொடுத்த போலீஸார், ராஜா மீது எஃப்.ஐ.ஆர். போட்டு இருக்கின்றனர். ராஜா எந்த நொடியிலும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக புகார் கொடுத்தவரே திடீர் என ஜகா வாங்கினார்.
புகார் கொடுத்த முத்துக்குமார், பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் மற்றும் ராஜாவின் வழக்கறிஞர் மூர்த்தியுடன் டி.ஐ.ஜி அலுவலகத்துக்கு வந்து, 'நாங்கள் காம்ப்ரமைஸ் ஆகிக்கொள்கிறோம். என் புகார் மீது நடவடிக்கை வேண்டாம்’ என்று சொல்லிச் சென்றார். ஆனால் இதில், 'முத்துக்குமார் குடும்பம் ராஜாவால் மிரட்டப்பட்டு இருக்கிறது’ என்கிற ரீதியில் இப்போது விசாரணையைத் திருப்பி இருக்கிறது போலீஸ். அநேகமாக, மிரட்டல் புகாருடன் சேர்த்து ராஜா வளைக்கப்படலாம் என்கிறார்கள். ராஜாவுக்கு முன்பாக அவரது அப்பா வீரபாண்டியாரையும் வேறு சில நில அப​கரிப்பு வழக்குகளில் இழுத்துவிட்டுக் கைது செய்ய, சேலம் போலீஸ் வேலை பார்ப்பதாகவும் பேசப்படுகிறது.
நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க என்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள போலீஸ் விங், 'எந்தெந்த மாஜிக்கள் எங்கெங்கே சொத்துகள் வாங்கி இருக்கிறார்கள்? அதில் என்னென்ன வில்லங்கம்? எப்படி உசுப்பிவிட்டால், பாதிக்கப்​பட்டவர்கள் புகார் மனுவுடன் வெளியே வருவார்கள்?’ என்று ஆராய்ந்து வருகிறார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளில் படு காஸ்ட்லியான அளவில் நடந்த நில பத்திரப் பதிவுகள் குறித்து மாநிலம் முழுவதும் குடைந்து எடுத்து விசாரித்து வருகிறது இந்தப் படை. அழகிரி, ஸ்டாலின், பொன்முடி, துரைமுருகன் ஆகிய நான்கு பேரின் ஜாதகங்களைத்தான் மிக உன்னிப்பாக அலசுகிறார்கள் இவர்கள். அதிலும் பொன்முடி மீதுதான் உடனடி குறியாம். 'மிரட்டி நிலத்தைப் பிடுங்கினார்’ என்ற வழக்கில் அவர் சிக்கியே தீருவார் என்கின்றனர், சில காக்கிகள்!
இந்த நிலையில், கோவை ஆனந்தன் புகாரை விசாரித்து வரும் கோவை நீதிமன்றம், 'நில மோசடி தொடர்பாக கோர்ட்டில் சிவில் வழக்கு நடைபெற்று வந்தாலும், ஆக்கிரமிப்பாளரை கிரிமினல் நடவடிக்கை மூலம் கைது செய்யலாம்’ என்று அதிரடியாக வழங்கியுள்ள உத்தரவு, தமிழக அரசை உற்சாகத்தின் உச்சிக்குக் கொண்டுசென்று உள்ளது. இதன் மூலம் நில அபகரிப்பு விவகாரத்தில் உருட்டப்படும் முக்கியப் புள்ளிகளை வெகு லகுவாகக் கைது செய்ய முடியும்.
''இதற்கெல்லாம் தி.மு.க-வின் ரியாக்ஷன், பதில் நடவடிக்கை என்ன?'' என்று சில தி.மு.க. அரசியல் புள்ளிகளிடம் கேட்டபோது, உள்ளூர பயம் இருந்தாலும்கூட அதைக் காட்டிக்கொள்ளாமல், ''தான் ஆட்சிக்கு வந்ததும், ஆகாதவர்கள் மீது கஞ்சா வழக்கு போடுவது ஜெயலலிதா ஸ்டைல். இப்போது அந்தப் பழிவாங்கும் ஸ்டைலுக்கு நில மோசடி என்று புது கலர் கொடுத்து இருக்கிறார். சட்டப்படி இதை எதிர்கொள்வோம். சிறுதாவூர் நில விவகாரத்தில் குற்றத்தைச் சுமந்துகொண்டு இருக்கும் ஜெயலலிதாவுக்கு எங்கள் மீது வழக்குப் போட என்ன யோக்கியதை? இவரது ஆக்ஷன்களைக் கண்டு, எங்களுக்குத் துளியும் அச்சம் இல்லை. 'நாங்கள் சந்திக்காத வழக்கா... விசாரணைகளா? உன்னால் முடிந்த வரை வழக்குகளைப் போட்டுப் பார்’ என்று எங்கள் தளபதி சொன்ன வார்த்தைகள்தான் எங்களுக்கு டானிக்!'' என்கிறார்கள்.
- ஆர்.லோகநாதன், எஸ்.ஷக்தி, வீ.கே.ரமேஷ்
படங்கள்: 'பிரீத்தி’ கார்த்திக்,
க.தனசேகரன், தி.விஜய்

Source - Vikatan Magazine

Monday, July 11, 2011

பெரிது பெரிது பெண்மையின் சக்தி!

பெரிது பெரிது பெண்மையின் சக்தி!

பெண் என்பவள் ஆதாரசக்தி, வாழ்வின் ஆதாரம். பெண் இல்லை எனில் சிருஷ்டியே இல்லை. அவளை முன்னிறுத்தியே சிருஷ்டி நடந்து வருகின்றது. பெண் தான் கர்ப்பம் தரிக்கின்றாள். குழந்தையைப் பெற்று எடுத்து வளர்க்கின்றாள். அத்தகைய ஒரு மாபெரும் சக்தியை நம் இதிகாசங்களோ, புராணங்களோ இழித்துப் பேசி இருக்கின்றது என்ற கூற்றே தவறு அல்லது தவறான புரிதல் என்று சொல்லலாம்.
ஆண் சார்புடையவன். பெண்ணின் துணை இல்லாமல் ஒரு ஆணால் வாழ்க்கை நடத்த முடியாது. ஆனால் ஆணின் துணை இல்லாமல் பெண்ணால் வாழ முடியும். இன்னும் சொல்லப் போனால் திருமணமே செய்து கொள்ளாமல் பெண் தனித்து வாழ்வாள். ஆனால் ஆண் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் கூட எந்த விதத்திலாவது ஏதாவது ஒரு உறவின் முறைப் பெண்ணை ஏதோ ஒரு சமயம் நாட வேண்டி உள்ளது என்பதே உண்மை. கணவனை இழந்த பெண்களோ, அல்லது சிறு வயதிலேயே கணவன் விட்டு விட்டுச் சென்றாலோ பெண்கள் அஞ்சுவதில்லை. தன் மக்களைத் தாங்களே எப்பாடு பட்டாவது தாங்கி வளர்க்கின்றார்கள். அதே ஒரு ஆணால் தன்னந்தனியாக மனனவியோ, அல்லது வேறு ஒரு பெண்ணின் துணையோ இல்லாமல் தன் மக்களை வளர்க்க முடியாது என்பதும் உண்மை. கணவனை இழந்த பெண்களை விடவும், மனைவியை இழந்த ஆண்களே மனதளவில் மிகவும் பாதிக்கப் படுவது, ஆய்வில் மட்டுமில்லாமல் கண் கூடாகவும் தெரியும் ஒரு உண்மை.
பெண் தன் சக்தியை முழுமையாகக் காட்டினால் ஆண்களால் தாங்க முடியாது என்பதே உண்மை. ஆனால் பெருமளவும் பெண்களின் சக்தி சரியான முறையில் பிரயோகம் செய்யப் படுவதும் இல்லை. தவறான உள் நோக்கத்துடனேயே பிரயோகம் செய்யப் படுகின்றது. வியாபார நோக்கில் இன்றைய நாட்களில் பெரும்பாலும் தன் சக்தியைப் பெண் விரயம் ஆக்குகின்றாள். ஒரு போகப் பொருளாகத் தன்னைத் தானே ஆக்கிக் கொண்டு விட்டாள்.
தன்னிடம் உள்ள ஆத்ம சக்தியைப் பெரும்பாலான பெண்கள் உணரவே இல்லை. ஆத்ம சக்தியை உணர்ந்த பெண்கள் தொழுவதற்கு உரியவர்களாக ஆகிறார்கள். அவர்கள் மீது அனைத்து ஆண்களுக்கும் ஒருவித பயம் கலந்த பக்தி உண்டாகிறது. ஆனால் அதே ஒரு பெண்ணாக இருந்தால் தன் கணவனின் ஆத்மசக்தியைத் தனக்கும் சேர்த்துத் துணையாக்கிக் கொண்டு தன் இல்லறத்தை நல்லறமாக்கிக் கொள்ளுவது மட்டுமில்லாமல், தன் குலத்தையே தழைக்கச் செய்வாள். உண்மையில் பெண்கள் ஆண்களை விடப் பலம் படைத்தவர்கள் மனோரீதியாக.
முதலில் சொன்னதற்கு உதாரணம் புனிதவதியார். கணவன் கொடுத்த மாம்பழத்தை சிவனடியார்க்குப் படைத்த அவர், பின்னர் இறை அருளால் மற்றொரு மாம்பழத்தை வரவழைக்கக் கண்ட அவரது கணவன் பரமதத்தன், அவரிடம் இருந்து ஒதுங்கினான். ஏனெனில் அவரின் இறைத் தன்மையைக் கண்டு அவன் பயமும், மரியாதையும் கலந்த ஒரு உணர்வு அவனிடம் உண்டாகியது. பவளமல்லிப் பூவைத் தலையில் சூட முடியுமா???இறைவனுக்கே படைக்கப் பட்டவை அல்லவா அவை??? தானே மலர்ந்து, தானே உதிரும் அந்தப் பூவைப் பொறுக்கி இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்க முடியும் அல்லவா?? அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம், மற்ற சில வேலைகளுக்கும் பயன்படும். ஆகவே இப்படிப் பட்ட பெண்களைப் புனிதவதியார் என்றழைக்கப் படுவதில் தவறே இல்லை. பிறப்பால் மட்டுமின்றி அவர்களின் புனிதத்தன்மை ஏதோ ஒரு காலகட்டத்தில் வெளிப்பட, அவர்கள் பிறந்ததின் நோக்கம் புலப்பட, சாதாரண வாழ்வு வாழ அவர்கள் படைக்கப் படவில்லை என்பது புலனாகின்றது.
இதைப் போய்த் தவறு என்று சொல்லி, புனிதம் என்று பெண்ணை ஒதுக்கிய ஆணாதிக்கம் என்று பேசுபவர்கள் புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாதவர்கள். அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது. என்றாலும் முதலில் கலங்கிய அந்த அம்மையார் பின்னர் தெளிந்தார் அல்லவா? தன் வாழ்வின் நோக்கம் புரிந்து கொண்டார் அல்லவா?? ஒருவேளை இதைப் புரிந்து கொண்டு, அதனாலேயே ஒளவை திருமணத்திற்கு முன்பே, மூப்பை வேண்டிப் பெற்றாளோ???
(இந்த வரலாற்றில் புனிதவதியாரின் தூய ஆன்மிக உணர்வோடு கூட, அவரை மதித்து, அவர் விரும்பிய படி வாழ இடம் அளித்து, அவரது வாழ்க்கையில் இருந்து தானாகவே கழன்று சென்று விட்ட பரமதத்தனின் பெருந்தன்மையும் புலப்படுகிறது. வேறோர் நகருக்குச் சென்று இன்னொரு மங்கையை மணந்து வாழ்ந்த போதும், முன்பு தன் வாழ்க்கையில் வர நேர்ந்துவிட்ட புனிதவதி என்ற தெய்வப் பெண்ணை அவன் மறக்கவில்லை. நெஞ்சில் வைத்துப் போற்றவே செய்தான். தனக்குப் பிறந்த மகளுக்கும் "புனிதவதி" என்றே பெயரிட்டு வளர்த்தான். என்னே ஒரு உன்னதமான பண்பாடு! - ஆசிரியர் குழு)
அடுத்த உதாரணம் வள்ளுவனின் வாசுகி. வள்ளுவர் எப்படிப் பட்ட மனிதர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. வள்ளுவரோடு வாழ வந்த வாசுகியோ, கணவனின் தனித்தன்மையை உணர்ந்து, அவரின் ஆன்மீகத்தையும், இறை உணர்வையும் புரிந்து கொண்டதோடு அல்லாமல், அதற்கு உறுதுணையாகவும் இருந்து வந்திருக்கின்றாள். அதனாலேயே வள்ளுவரின் திருக்குறள் பெற்ற பெருமை இன்றளவும் பேசப் படுகின்றது.
இது போலவே அகத்தியரின் மனைவியான லோபாமுத்திரை. அழகியும், அரசகுமாரியும் ஆன அவள் இயற்கையாகவே பேரறிவு வாய்ந்தவள். அதோடு அம்பிகையை நாள் தோறும் வணங்கி அம்பிகையின் மகாமந்திரம் ஆன ஸ்ரீவித்யா மந்திரத்தைப் பரிபூர்ணமாய் அறிந்து அதன்படி தவம் செய்தவள். எனினும் ஒரு குள்ள முனிக்கு வாழ்க்கைப் பட்டதோடு அல்லாமல், அதே ஸ்ரீவித்யா மந்திரத்தை தன் கணவர் ஆன அகத்தியருக்கு ஹயக்ரீவர் மூலம் வழங்கச் செய்தவள். ஆம், லோபாமுத்திரையின் கணவன் என்பதாலேயே அகத்தியருக்கு அந்த யோகம் கிட்டியதாய்ச் சொல்லுகின்றது புராணம்.
குடும்பத்தைத் தாங்கும் ஒரு பெண், தன் தனி ஒரு குடும்பத்தை மட்டுமின்றி சமூகத்துக்கே பெரிய உதவி புரிகின்றாள். நல்மக்களை வளர்ப்பதன் மூலம் நாட்டையே உயர்த்துகின்றாள். கணவனது உடல், உள்ளம் மட்டுமில்லாமல் அவனின் ஆன்மாவையும் காப்பது பெண்களே.
Source - Tamil Hindu