Thursday, June 23, 2011

யாருடைய எலிகள் நாம்?

யாருடைய எலிகள் நாம்?

சமஸ்
டந்த வாரம் பலராலும் கண்டுகொள்ளப்படாத செய்திகளில் ஒன்று... நாட்டின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் சுரேந்தர் சிங் மருந்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள 9 மருந்து நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பி உள்ள கடிதம்!
 ஜனநாதன் இயக்கத்தில், மனிதர்களை எலி களைப்போல மருத்துவப் பரிசோதனையில்பயன் படுத்தும் 'ஈ’ படம் பார்த்திருப்பீர்களே? அதே மாதிரி கடந்த ஆண்டு இந்தியாவில் மனிதர்களைப் பயன்படுத்தி நடந்த மருத்துவப் பரிசோதனைகளில் (உடல்கூறு) ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளில், 670 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்களில், இழப்பீட்டுத் தொகை வெறும் 8 பேருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதேபோல், மருந்துகளுக்காக நடந்த பரிசோதனையில் இறந்த 25 பேரில் 5 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. 'எப்போது மற்றவர்களுக்கான இழப் பீட்டுத் தொகையை வழங்குவீர்கள்?’ என்பதுதான் சுரேந்தர் சிங்கின் கடிதம். இந்தக் கடித விவரம் பத்திரிகைகளில் வெளியாகிவிட்டதால், பாதிக்கப்பட்டோருக்கான தொகையை விரைவில் அளித்துவிடுவதாக அறிவித்து இருக்கின்றன மருந்து நிறுவனங்கள்!
கோடிகள் புரளும் துறை!
ஒரு புதிய மருந்து, சந்தையை வந்தடைய சராசரியாக .3,600 கோடி வரை செலவா கிறது. இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம், மனிதர்கள் மீதான பரிசோதனை. புதிதாக உருவாக்கப்படும் மருந்து, மனிதர்கள் மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று சோதிக்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளில், இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குக் கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு. தவிர, நோயாளிகளின் பாதுகாப்புக்கான செலவும் அதிகம். மூன்றாம் உலக நாடுகளில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது, செலவில் 60 சத விகிதம் வரை குறையும். மேலும், ஏழை மக்களின் அறியாமை, எளிதில் வளையக் கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பு இன்மை ஆகியவற்றின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பரிசோதனையை நடத்த ஆரம்பித்தன மருந்து கம்பெனிகள்.
அபாயத்தின் வளர்ச்சி!
இந்தியாவில் மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு தொடங்கும் உயிர்த் தொழில்நுட்பவியல் பூங்காக்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சாவி. 2005-ல் 100 பரிசோதனைகள் நடந்த நிலை மாறி, இப்போது குறைந்தபட்சம் இந்தியா வில் 1,000 பரிசோதனைகள் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தப் பரிசோதனைகளில் இறந்தவர்கள் 132 பேர். இப்போது 670 பேர்.
அறியாமையும் சுய லாபமும்!
இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமை யையும் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகள் தொடர்பான விதிகள் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம், நோயாளிகளுக்கு நோயாளி மாறுபடுகின்றன. இதனால் மருந்து நிறுவனங்களால் சட்டத் தில் இருந்து எளிதாகத் தப்ப முடிகிறது. ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப் பரிசோதனையின் ஒரு கட்டமாக மேற்கொள்ளப் பட்ட மருந்து ஆராய்ச்சியில், 14 ஆயிரம் சிறுமி கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தச் சிறுமிகளில் பெரும்பான்மையினர் பழங்குடியினர். அவர் களுக்கோ, அவர்களுடைய பெற்றோருக்கோ இப்படி ஒரு பரிசோதனை மேற்கொள்ளப் படுவதே தெரியாது. இந்தக் குழந்தைகளில் 6 குழந்தைகள் உயிர் இழந்ததைத் தொடர்ந்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இப்படி நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் 49 குழந்தைகள் உயிர் இழந்தது கடந்த ஆண்டு தெரியவந்தது. சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 4,142 குழந்தைகளில் 2,728 குழந்தைகள் ஒரு வயதுக்கும் உட்பட்டவர்கள்!
புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனை கள் நடத்த அனுமதி அளித்துள்ளது அமெரிக்க அரசு. இனி, இந்தியாவில் உள்ள  குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் களம் இறங்கப்போகின்றன என்பதே இதன் நேரடியான பொருள்!
எத்தகைய அற உணர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சியாளர்களையும் வழிநடத்துகிறது! யாருடைய எலிகள் நாம்?

Source - Vikatan Magazine

சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா?

சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா?

பா.பிரவீன்குமார்
ழல் அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவோரின் சொர்க்கம்...  சுவிட்சர்லாந்து.  காரணம், வங்கி ரகசியத்தைப் பாதுகாக்கும் அந்த நாட்டின் சட்டம்!
யார் யார் எல்லாம் சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்?
எந்த நாட்டைச் சேர்ந்தவரும், சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம். ஆனால், 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். தற்போது 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கி இருக்கிறார்கள்.
நம் ஊரில் அடையாளம், இருப்பிடச் சான்று மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் விண்ணப்பத் தைப் பூர்த்திசெய்து கொடுத்து வங்கிக் கணக்கு தொடங்குவதுபோல, சுவிஸ் நாட்டில் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல. புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பில் வங்கிகள் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் பெயருக்குத்தான். பல கோடிகளைக் கொட்டும் நபருக்கு இந்தக் கெடுபிடிகள் எதுவும் இல்லை. புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கிக் கொடுப்பதற்காகவே, நிறைய நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன என்று கூறுகிறார்கள் 'அனுபவஸ்தர்கள்’.
''வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு முன்னர் வங்கி சேவையில் உங்களுக்கு உள்ள தேவைகள், உங்கள் பணம்பற்றிய தகவல், அடுத்த 12 மாதங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்வீர்கள் என்பதுபோன்ற விவரங்களை அளிக்க வேண்டும். கணக்கு தொடங்க உங்களது பாஸ்போர்ட் போதுமானது. தபால் மூலம் அனுப்பி கணக்கு தொடங்க வேண்டி இருந்தால், உங்களுக்கு வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கும் நிறுவனத்துக்கு பாஸ்போர்ட் நகலை அனுப்பினால் போதும். மேலும், உங்கள் இருப்பிடத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, சமீபத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி ரசீது போன்றவற்றில் ஒன்றைக் கொடுக்கலாம். உங்கள் பொருளாதாரப் பின்னணி மற்றும் பணம் வரும் பின்னணிபற்றிய ஆவணங்களை அளிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். நேரில் சென்று கணக்கு தொடங்குவதாக இருந்தால்,  மூன்று மணி நேரத்தில் முடித்துவிடலாம்'' என்கிறார்கள் அவர்கள்.
வங்கிக் கணக்கு தொடங்கக் குறைந்தபட்ச டெபாசிட் இவ்வளவு இருக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. 500 சுவிஸ் பிராங்க் இருந்தாலே வங்கிக் கணக்கைத் தொடங்கிவிடலாம். ஆனால், சில வங்கிகள் மட்டும் தொகையைக் கொஞ்சம் அதிகம் எதிர்பார்க்கின்றன. குறைந்தபட்சம் எவ்வளவு தெரியுமா? 10 லட்சம் சுவிஸ் ப்ராங். நம் ஊர் பணத்துக்குக் கிட்டத்தட்ட ரூ.53 கோடி!
சுவிஸ் வங்கி கணக்கு தொடங்க எவ்வளவு நாள் ஆகும்?
தபால் மூலம் கணக்கு தொடங்குவதாக இருந்தால், குறைந்தது 10 நாட்கள் ஆகும். இதற்கு முதலில் வங்கிக் கணக்கு தொடங்க உதவும் நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர், அவர்கள் விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்பிவைப்பார்கள். அதில் நீங்கள் கையெழுத்திட்டு, தகுந்த ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதை அந்த நிறுவனம் நீங்கள் விரும்பும் வங்கியில் கொடுப்பார்கள். நீங்கள் கணக்கு தொடங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ள, வங்கி தனியாக ஒரு கடிதம் அனுப்பும். அதை நீங்கள் நேரடியாக வங்கிக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு, வங்கி உங்களுடைய கணக்கை ஆரம்பிக்கும்.
பணத்தை எப்படி டெபாசிட் செய்வது?
கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி தேர்ட் பார்ட்டி பேமென்ட் ப்ராசஸர் பணத்தை டெபாசிட் செய்யலாம். இதனால், பணத்தை யார் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாது. இது தவிர, மணி ஆர்டர், பர்சனல் செக் போன்ற முறைகளையும் கையாளலாம்.
இந்தியாவில் கிளை உள்ளதா?
சுவிஸ் வங்கிக்கு எந்த நாட்டிலும் கிளைகள் இல்லை!
சுவிஸ் வங்கி ஏன் பிரபலமாக உள்ளது?
சுவிட்சர்லாந்து 1505-ம் ஆண்டு முதல் எந்த நாட்டுடனும் போரிடுவது இல்லை என்பதால், அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கிறது. சுவிஸ் தன்னுடைய பணப் பரிமாற்றத்துக்கு தங்கத்தைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. அதனால், உலக அளவில் மிகவும் நிலையான மதிப்பைக்கொண்ட பணமாக சுவிஸ் பணம் கருதப்படுகிறது. இன்டர்நெட் பேங்கிங், சுலபமான முதலீட்டு முறைகள் போன்ற சிறப்பான வங்கி சேவை, கிரிமினலாக இல்லாதவரை உங்களைப்பற்றிய தகவல் வெளியே போக வாய்ப்பே இல்லாத சூழல் ஆகிய காரணங்களால் அனைவராலும் சுவிஸ் வங்கிக் கணக்கு பெரிதும் விரும்பப்படுகிறது.
வாடிக்கையாளர் இறந்துவிட்டால், கணக்கு என்ன ஆகும்?
அவரது வாரிசுதாரருக்குப் பணம் கிடைக்கும். ஆனால், அவர்தான் வாரிசுதாரர் என்று நிரூபிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. பிரபல தலைவரோ, நடிகராகவோ இருந்து இறந்தால், அது அங்கு உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். சம்பந்தப்பட்ட வங்கிக்கு எளிதில் அது தெரிந்துவிடும். மற்றபடி அவர்களுக்கு வங்கிக் கணக்கு உள்ள நபரின் இறப்பு தெரியப்போவது இல்லை. எனவே, வாரிசுதாரர் 10 ஆண்டுகளுக்குள் வந்து, தான்தான் சட்டபூர்வ வாரிசு என்று நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், 10-வது ஆண்டின் முடிவில் அந்தக் கணக்கு செயலற்றதாகிவிடும்!
ஆனால், இந்தப் பிரச்னைகள் எல்லாம் வராமல் இருக்க, வாரிசுகளிடம் சுவிஸ் வங்கிக் கணக்குபற்றிய விவரத்தைத் தெரிவிக்கும்படியும், அல்லது தன் மரணத்துக்குப் பிறகு வாரிசுதாரர் படிப்பதற்கு என்று ஒட்டப்பட்ட உறையில் எல்லா விவரங்களையும் எழுதி வைக்கும்படியும் தன்னுடைய வாடிக்கையாளர்களை சுவிஸ் வங்கி அறிவுறுத்துகிறது.
வங்கிக் கணக்கை ரத்து செய்ய முடியுமா?
எப்போது வேண்டுமானாலும் வங்கிக் கணக்கை ரத்து செய்துகொள்ள முடியும். அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டு இருந்தால், அதை எடுக்க ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படும். மற்றபடி எந்தச் செலவும் இன்றி சுவிஸ் வங்கிக் கணக்கை ரத்து செய்துகொள்ளலாம்

Source - Vikatan Magazine

''பெட்டி பெட்டியாக டாலர், தங்கம், வைரம்!'' - குமுறும் சாய்பாபா பக்தர்கள்

'பெட்டி பெட்டியாக டாலர், தங்கம், வைரம்!''

குமுறும் சாய்பாபா பக்தர்கள்
டந்த ஏப்ரல் 24-ம் தேதி அன்று, புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபா இந்த மண்ணுலக வாழ்வை நீத்தார். அப்போதே சாய்பாபாவின் 40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளையும், புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையம், பெங்களூருவில் உள்ள ஹைடெக் மருத்துவமனை உள்ளிட்ட வெளிநாட்டில் உள்ள சொத்துகளையும் யார் நிர்வகிப்பது என்ற கேள்வி வலுவாக எழுந்தது!
சத்ய சாய் அறக்கட்டளையின் தலைவராக இருந்த பாபாவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வர, அவரது அண்ணன் மகன் ஆர்.ஜே.ரத்னகர் என்பவருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த போட்டி. ஒரு வழியாக ஆந்திர அரசு சமரசம் செய்ததில், ஆர்.ஜே.ரத்னகர் தலைவர் ஆனார்!
கடந்த இரண்டு மாதங்​களாகவே பிரஷாந்தி நிலையத்தில் உள்ள 'சாய்​பாபாவின் யஜுர் மந்திர் அறையைத் திறப்பது எப்போது?’ என்ற கேள்விகோடிக்​​கணக்கான பக்தர்​கள் மத்தியிலும், அறக்கட்​டளை உறுப்பினர்​களின் மன​திலும் எழுந்தது.
சாய்பாபா அறக்கட்டளையின் தலைவரான ஆர்.ஜே.ரத்னகர், ''நாம் மட்டுமே யஜுர் மந்திர் திறப்பின்போது உடன் இருந்தால், பக்தர்களின் மனதிலும், ஆந்திர அரசுக்கும் தேவையற்ற சந்தேகம் வரும். எனவே, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.பி.மிஸ்ரா, கர்நாடக ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி வைத்யநாதா மற்றும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நம் கூடவே இருக்கட்டும்!'' என்று சொன்னாராம். எனவே, அவர்களையும் அந்த அறைத் திறப்புக் குழுவில் இணைத்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து கதவு திறக்கப்பட்டது.
''சாய்பாபாவின் யஜுர் மந்திர் அறையைத் திறந்த​போது 11.57 கோடி ரொக்கமும், 98 கிலோ தங்க நகைகளும், 310 கிலோ வெள்ளி நகைகளும், ராமர், கிருஷ்ணர், அனுமன் என மூன்று சிலைகளும், இரண்டு ஜோடி தங்கக் காலணிகளும் அங்கே இருந்தன. அந்த மூன்று சிலைகளும் விலை உயர்ந்த ஆபரணங்களால் செய்யப்பட்டவை. அங்கே இருந்த பொருட்களின் மதிப்பை 20 பேர்கொண்ட குழு 36 மணி நேரம் கணக்கிட்டது. இந்தப் பொருட்கள் அனைத்தும் நீதிபதிகளின் முன்னிலையில், பிரஷாந்தி நிலைய ஸ்டேட் பேங்க் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டது...'' என்று அனைத்து மீடியாக்களுக்கும் பத்திரிகைச் செய்தியை அனுப்பினார்கள் அதிகாரப்பூர்வமாக!
ஆனால், இது குறித்து பிரஷாந்தி நிலைய வட்டாரத்தில் விசாரித்தபோது, ''பிரஷாந்தி நிலையத்தில் உள்ள யஜுர் மந்திர் கட்டடத்தில் மொத்தம் ஆறு அறைகள். அந்த அறைகளில் உள்ள அனைத்துப் பொருட்களுமே தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டவை. இப்போது வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட ரொக்கங்களைவிட இன்னும் பல மடங்கு இருந்திருக்கும். அதேபோல பெட்டி பெட்டியாக வைரம், பிளாட்டினம் ஆகியவையும் இருந்தன. ஆனால், அவற்றை அவர்கள் மறைத்துவிட்டனர். கட்டுக் கட்டாக அமெரிக்க டாலர்களும், யூரோக்களும் இருந்தன. அவற்றையும் அறக்கட்டளைக் குழு மறைத்துவிட்டது. சாய்பாபாவின் கோடிக்கணக்கான சொத்துகளின் பத்திரங்களும், அவர் பயன்படுத்திய தங்க மந்திரக்கோல், கிரீடம் ஆகியவையும் மறைக்கப்பட்டன. சாய்பாபாவின் ரகசிய அறையில் இருந்து கண்டெடுத்த கோடிக்கணக்கான பொருட்களை எல்லோரும் திட்டமிட்டே மறைத்துவிட்டனர். அதோடு, 'யஜுர் மந்திர் அறையை இதற்கு முன்னரே திறந்து, பல்லாயிரக்கணக்கான கோடிகளைச் சுருட்டி​விட்டனர்’ என்ற பேச்சும் இருக்கிறது. நாங்கள் யாரையும் குறிப்பிட்டுக் குற்றம்​சாட்டவில்லை. ஆனால், அறக்கட்டளையின் தலைவர் ஆர்.ஜே.ரத்னகர் இன்னும் தெளிவாகச் செயல்பட வேண்டும் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்​கொள்கிறோம்...'' என்று பக்தர்கள் சிலர் தங்களது பெயரைச் சொல்ல விரும்பாமல் மர்மமாகச் சொல்லி முடித்தனர்.
இந்த நிலையில், சத்யசாய் அறக்கட்டளைக்கு சொந்தமான காரில் பெங்களூருவுக்கு 9 கோடிக்கும் அதிகமான ரொக்கம் கடத்தப்பட்டபோது, ஓடிகொண்டா சோதனைச் சாவடியில் ஆந்திர போலீஸார் அதைக் கைப்பற்றியதாகவும் செய்திகள் கசிந்தன. கார் டிரைவர் ஹரீஸை போலீஸ் விசாரித்தபோது, 'பெங்களூருவில் உள்ள ஒருவருக்குக் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னார்கள்’ என்பதை ஒப்புக்கொண்டாராம். கடந்த சில நாட்களாகவே புட்டபர்த்தியில் இருந்து பெங்களூரு வரும் தனியார் பேருந்துகளிலும் லட்சக்கணக்கான ரொக்கப் பணம் கைப்பற்றப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
''இதை எல்லாம் பார்க்கும்போது, சாய்பாபாவின் சொத்துகள் யாராலோ அபகரிக்கப்பட்டு வருகிறது என்பது மட்டும் தெரிகிறது. பாபாவின் சொத்துகளைக் காக்க ஆந்திர அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் பாபாவின் பக்தர்கள்.
ஆந்திரத்தை ஆளும் அரசுதான் இதற்கு எல்லாம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- இரா. வினோத்

Source - Vikatan Magazine

நாங்கள் பார்க்காத விசாரணை கமிஷனா? - ஸ்டாலின்

நாங்கள் பார்க்காத விசாரணை கமிஷனா?

ஸ்டாலினின் ஆவேச முகம்
''எத்தனை விசாரணை கமிஷன்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். நாங்கள் பார்க்​காத விசாரணை கமிஷனா? பார்க்காத சர்க்காரியா கமிஷனா? கடந்த முறை உன் ஆட்சியில் போடப்பட்ட மேம்பால வழக்கு என்னாச்சு? இந்த முறையும் முடிந்தால், பொய் வழக்கைப் போடு பார்க்கலாம்...'' - அடிவயிற்றில் இருந்து ஸ்டாலின் குரல் கொடுக்கவும், எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறது தொண்டர் கூட்டம். கோவையில் நடந்த தி.மு.க-வின் உயர் நிலை செயல் திட்டக் குழுவின் தீர்மானங்களை விளக்கும் பொதுக் கூட்டத்தில்தான் இப்படி ஓர் ஆவேசம்!
முதலில் பேசிய கோவை மு.ராம​நாதன், ''நடந்து முடிந்த இந்தத் தேர்தலில், 'ஏன் ஜெயித்தோம்?’ என்று ஜெயித்தவர்களுக்கும் தெரியவில்லை... 'ஏன் தோற்றோம்?’ என்று தோற்றவர்​களுக்கும் தெரியவில்லை. 233தொகுதிகளிலும் நம் கூட்டணிக்காக சூறாவளி சுற்றுப்பயணம் செய்தா​லும், கொளத்தூரில் நீங்கள் வென்று​விட்டீர்கள். ஆனால், கோயம்​புத்தூரில் நாங்கள் தோற்றுவிட்டோம். எங்களை மன்னியுங்கள்...'' என்று ஸ்டாலினை நெகிழவைத்தார். ஸ்டா லினுக்கு உடல்நிலை சரி இல்லாததால், மளமள​வென நிகழ்ந்த இந்தக் கூட்டத்​தில், அடுத்து எழுந்த மு.கண்​ணப்பன் நீட்டி முழக்க... தொண்டர்கள் கடுப்பாகி கை தட்டியே அவரை அமர​வைத்து​விட்டனர்.
இறுதியாகப் பேசிய ஸ்டாலின், ''ஓர் அமைச்சராக, துணை முதல்வராக கோவைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முறை வந்திருக்கிறேன். அப்போது எல்லாம் இல்லாத ஓர் ஆனந்தம், கழகத்தின் பொரு ளாளர் என்ற முறையில் இன்று ஏற்பட்டு இருக்கிறது. எனக்கு முன் பேசியவர்கள் தோல்வியைக் குறித்துப் பேசினார்கள். அவர் களுக்குச் சொல்கிறேன்... நீங்கள் வருந்தும் வகையில் நம் கழகம் கரைந்துவிடவில்லை. ஆட்சி அதிகாரத்தில் நம்மை அமர்த்திய கடந்த தேர்தலில் நாம் பெற்ற வாக்கு களுக்கும், இந்தத் தேர்தலில் நாம் பெற்றிருக்கும் வாக்குகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த இடைவெளியை கூடிய விரைவில் நிரப்பி விடலாம், கவலை வேண்டாம். தோல்வியைக் கண்டு வெட்கப்படுபவர்களா நாம்? தி.மு.க. அளவுக்கு வெற்றியை சுவைத்த, அதே அளவுக்குத் தோல்வியையும் தோளில் தாங்கிய வேறு ஒரு கட்சியை இந்த நாட்டில் காட்டுங்கள் பார்க்கலாம்? இன்று நம்மால் எதிர்க் கட்சி இடத்தைக்கூட பிடிக்க முடியவில்லை. சட்டமன்றத்தில் நாம் எதிர்க் கட்சியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் நிச்சயம் சிறப்பான எதிர்க் கட்சியாக செயல்படுவோம்.
'தலைவருக்கு மக்கள் ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்’ என்று நம்மவர்களே சிலர் ஆசுவாசப்பட்டுச் சொல்கிறார்கள். நானும் சொல்கிறேன். சுமார் 50 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய மக்கள் நலப் பணிகளை, வெறும் ஐந்தே ஆண்டுகளில் சுழன்று சுழன்று செய்து முடித்த நம் தலைவருக்குச் சிறிய ஓய்வு தேவைதான். ஆனால், அவர்தான் ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர் ஆயிற்றே! அதனால்தான், 'பொது நல விஷயங்களில் சின்னப் பிரச்னை நேர்ந்தாலும், அரசுக்கு எதிராக வெடித்துக் கிளம்ப வேண்டும்’ என்று எங்களை உசுப்பி இருக்கிறார். அதன் விளைவாகத்தான் ஏதோ ஆளும் கட்சிக் கூட்டம் நடத்துவதுபோல், இவ்வளவு பிரமாண்டமாக இங்கே கூடி நின்று கூட்டம் நடத்துகிறோம்.
தலைவர் சொல்லியதுபோலவே, பொது நலப் பணி களுக்கு ஜெயலலிதாவால் கடும் இன்னல் காலம் ஆரம்பமாகிவிட்டது. முதல் சாதனையாக 'சமச்சீர் கல்வி ரத்து’ என்ற உத்தரவைப் போட்டு, பெற்றோர்களின் தலையில் அடித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையில் குட்டிய பிறகும் அவர் திருந்தவில்லை. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் கறுப்பு மையிட்டு அழிக்கவும், ஸ்டிக்கர் வைத்து ஒட்டவும் உத்தரவு போட்டு மேலும் சிறுமைப்பட்டு இருக்கிறார். அரசு ஆணையாகப் பிறப்பிக்காமல், ஓர் ஆணையை கல்வித் துறையின் அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அந்த ஆவணம் என் கைக்கு வந்திருக்கிறது (அதைக் காட்டினார்). இது எப்படி உன்னிடம் வந்தது என்று கேட்காதீர்கள்... அங்கே நம்மவர்கள் சிலர் இருக்கிறார்கள். கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதையை மறைக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதற்கு ஒரே காரணம், நம் தலைவருக்கு நெருங்கிய இடத்தில் கவிக்கோ இருப்பதுதான். அடுத்து 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ என்ற வாக்கி யத்தில் அண்ணாவை நீக்கச் சொல்லி இருக்கிறாராம். பாருங்கள், அந்தக் கட்சியின் பெயர் 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’. ஆக, பழையபடி தனது ஃபார்முலாவைக் கையில் எடுக்க ஆரம்பித்து இருக்கும் ஜெயலலிதாவைப் பார்த்து ஒன்று சொல்லிக்கொள்கிறேன். புதிய சட்டமன்றக் கட்டடத்தை வைத்தோ, அல்லது நாங்கள் நிறைவேற்றிய வேறு மக்கள் நலத் திட்டங்களை வைத்தோ, எங்கள் மீது வழக்குத் தொடர நினைத்தால்... தாராளமாகத் தொடர்ந்துகொள். அதை சந்திக்க நாங்கள் தயார். கடந்த முறை எங்கள் மீது போட்ட மேம்பால வழக்கில் குற்றப் பத்திரிகைகூட தாக்கல் செய்ய உன்னால் முடியாமல் போனதை நினைவில்கொள்.
புதிய சட்டமன்றம் கட்டியதே பெரிய முறைகேடு என்கிறாய்... ஆனால், அன்றைக்கு இந்த அம்மையார் முதல்வராக இருந்தபோதுதானே, 'இந்த பழைய சட்டசபை பழுதடைந்துவிட்டது, மழை பெய்தால் ஒழுகுகிறது. அதனால், மகாபலிபுரம் சாலையில் புதிய சட்டப் பேரவை பிரமாண்டமாகக் கட்டப்படும்’ என்று திட்டம் போட்டார். பிறகு அந்த இடத்தை மாற்றி ராணி மேரி கல்லூரி இடத்தைக் குறிவைத்து, அதை இடிக்கப் பார்த்து வாங்கிக்கட்டிக்கொண்டார். இப்போது என்னவோ புதிய சட்டசபையை தி.மு.க. அரசு கட்டியதே எங்களுக்காகத்தான் என்பதுபோல் பேசுகிறார். எதிர் காலத்தில் நீ ஒரு அடி பாய்ந்தால், பதினாறு அடி பாய நாங்கள் தயார்!'' என்று சீறி முடித்தார்!
- எஸ்.ஷக்தி, படங்கள்:வி.ராஜேஷ்

Source - Vikatan  Magazine

ரஜினி ரிட்டர்ன்ஸ்! ................

ரஜினி ரிட்டர்ன்ஸ்!
இரா.சரவணன்
''இந்த விஞ்ஞான உலகத்தில்கூட எந்த விளையாட்டை விளையாடினாலும், காசை மேலே தூக்கிப் போட்டு யார் முதலில் ஆடுவது என முடிவு செய்றாங்க. காசை மேலே தூக்கிப் போடுவது மட்டும்தான் மனிதனின் வேலை. பூவா... தலையான்னு தீர்மானிப்பது ஆண்டவன் வேலை!'' - படத்தில் அல்ல... படுக்கையில் இருந்தபடி ரஜினிகாந்த் சொன்ன வசனம் இது.
 சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் ரசிகர்களுக்கு ரஜினி எழுதிய கடிதத்தில், 'என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம், மருத்துவம், மிகச் சிறந்த மருத்துவர்கள் என இருக்க... இன்னொரு பக்கம் நான் நலம் அடைய, பிரார்த்தனை கள், பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள் ஆகியவைதான் என்னைக் காப்பாற்றின. ரஜினிக்கு எவ்வளவு மக்களின் அன்பு இருக்கிறது என்பதை உலகத்துக்குக் காட்டிவிட்டீர்கள். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை!’ என்று நெகிழ்ந்து இருக்கிறார்.
ரஜினியிடம் இருந்து ஒரு வார்த்தை வராதா என ஏங்கிய ரசிகனுக்கு, இது அடை மழை ஆனந்தம். சிறுநீரக மாற்று சிகிச்சை வரை அவசியம் என்கிற அளவுக்குப் பரபரக்கப்பட்ட ரஜினியின் உடல்நிலை இப்போது, டயாலிசிஸ்கூட அவசியம் இல்லை என்கிற அளவுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. 
இன்னும் 20 நாட்கள் சிங்கப்பூரில் ஓய்வு எடுக்க இருக்கும் ரஜினி, சென்னையில் கால் வைக்கும்போது 'பழைய ரஜினி’யின் சுறுசுறுப்பில் துளி அளவும் குறைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக யோகா பயிற்சியை மேற்கொள்ள ரஜினி விரும்ப, 'இப்போதைக்கு வேண்டாம்’ எனத் தவிர்த்தார்கள் மருத்துவர்கள். 'ரெஜு வெனேஷன் தெரபி’ மட்டுமே ரஜினிக்கு இப்போது வழங்கப்படுகிறது. குறைவான உணவு, பிரார்த்தனை, நல்ல தூக்கம், மாடி யில் வாக்கிங் என ரஜினியின் பொழுதுகள் இப்போது ஆரோக்கியமாகக் கழிகின்றன.
சென்னைக்குத் திரும்பிய உடன் செய்ய வேண்டிய வேலைகளாகப் பல முக்கிய விஷயங்களை ரஜினி பட்டியல் போட்டுவைத்து இருக்கிறார். இதோ அந்தப் பட்டியல்...
முதல்வரைச் சந்திக்கிறார்!
ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி சேர்க்கப்பட்டபோது, 'அவருடைய உடல்நிலை குறித்த தகவல்களைத் தினமும் கார்டனுக்குச் சொல்லுங்கள்!’ என உத்தரவே போடப்பட்டது. ரஜினியின் சிகிச்சைக்கு அரசுத் தரப்பிலான எத்தகைய உதவியையும் வழங்கத் தயார் எனவும் கார்டனில் இருந்து சொல்லப்பட்டது. 'பழைய’ வருத்தங்களை எல்லாம் மறந்துவிட்டு, ஜெயலலிதா காட்டிய இந்த அக்கறை ரஜினியை வியக்கவைத்தது. அதனால்தான், குணமான உடனேயே முதல் வேலையாக ஜெயலலிதாவுடன் பேசினார். சென்னைக்கு வந்த உடன் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக் கவும் இப்போதே தேதி கேட்கப்பட்டு இருக்கிறது. 'எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்!’ என கார்டனும் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது.
கருணாநிதிக்குப் பரிசு!
உடல்நிலை சரி இல்லை எனத் தெரிந்த உடனேயே முதல் ஆளாக ரஜினியைப் பார்க்க ஓடியவர் கருணாநிதிதான். இதற்கு நன்றி கூறி, சமீபத்தில் ரஜினி கருணாநிதிக்கு போன் செய்தார். அப்போது, கருணாநிதி பகிர்ந்து கொண்ட விஷயம் ரஜினியையே அதிரவைத்தது. ''உங்க உடம்புக்குப் பெரிய சிக்கல்னு டாக்டர்கள் மூலமா செய்தி வந்தது. 'அவரால் நடக்கவே முடியாது’ன்னு சொன்னாங்க. அதனால்தான் பதறி அடிச்சு ஓடி வந்தேன். உண்மையைச் சொல்ல ணும்னா, அன்னிக்கு எனக்கும் உடம்பு சரி இல்லை. மற்றபடி, கடந்த ஆட்சியில் என்னால் ஏதாவது சங்கடம் வந்திருந்தா, தவறா எடுத்துக்காதீங்க!'' என கருணாநிதி சூசகமாகச் சொல்ல, ரஜினி பதறிப்போனாராம். 'நேரில் சந்தித்து உங்களிடம் நிறையப் பேச வேண்டும்!’ என்று மட்டுமே சொன்ன ரஜினி, சென்னைக்கு வந்ததும் கோபாலபுரம் செல்கிறார். கருணாநிதிக்குக் கொடுப்பதற்காகவே விசேஷப் பரிசு ஒன்றும் இப்போது ரஜினி கையில்.
மன்றத் தலைவர்களுக்கு அழைப்பு!
சௌந்தர்யா திருமணத்தின்போது ரசிகர்களுக்கு விருந்துவைப்பதாகச் சொன்னார் ரஜினி. ஆனால், ரசிகர்கள் எவ்வளவு பேர் திரளுவார்கள் என்பதைக் கணக்கிட முடியாததாலும், தேர்தல் பரபரப்பாலும் விருந்து தள்ளிப்போனது. ரசிகர்களின் பிரார்த்தனை களைக் கேள்விப்பட்டு சிலிர்த்துப்போன ரஜினி, அனைத்து மாவட்டத் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார். ரஜினிக்காகப் பிரார்த்தனை நடத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பட்டியலும் தீவிரமாகத் திரட்டப்படுகிறது. 'அரசியல் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம்!’ என மன்றப் பொறுப்பாளர் சுதாகருக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது.
'ராணா’வுக்குத் தயார்!
ஷூட்டிங்கில் கலந்துகொள்கிற அளவுக்கு ரஜினியின் உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. வேகமாக நடக்கவோ, விறுவிறுவெனப் பேசவோ ரஜினியால் முடியவில்லை. ஆனால், ஒரு மாத காலத்துக்குள் இதெல்லாம் சரியாகிவிடும் என உறுதியாக நம்புகிறார் ரஜினி. ரஜினிக்கு சிரமத்தை ஏற்படுத்தாதபடி 'ராணா’வின் கதை சற்றே மாற்றப்பட்டு வருகிறது. ரஜினியின் போர்ஷனும் குறைக்கப்படலாம் என்கிறார்கள்.
வடிவேலுவுக்கு வாய்ப்பு!
'ராணா’ படத்தில் இருந்து வடிவேலு நீக்கப்பட்டதால், ரஜினி குறித்து அவர் ஆவேசமாகச் சீறினார். தேர்தலுக்குப் பிறகு திரைத் துறையே வடிவேலுவை ஓரமாகத் தள்ளிவைத்துவிட்டது. தன்னை வசை பாடிய மனோரமா வுக்கு 'அருணாச்சலம்’ படத்தில் வாய்ப்பு அளித்து அசத்திய ரஜினி, அதே பாணியில் 'ராணா’வில் வடிவேலுவைச் சேர்க்கச் சொல்லி இருக்கிறார். வடிவேலு உடன் கஞ்சா கருப்புவும் படத்தில் இருப்பார் என்கிறது யூனிட். இது குறித்து வடிவேலுவுக்குத் தகவல் சொல்லப்பட... தழுதழுப்பே பதிலாக வந்ததாம்.
மருத்துவர்களுக்கு விருந்து!
தான் மீண்டு வந்ததற்கு மிக முக்கியக் காரணமாக ரஜினி கருதுவது டாக்டர்களைத்தான். இசபெல்லா, ராமச்சந்திரா மற்றும் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை களில் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் களை வீட்டுக்கு அழைத்து விருந்துவைக்கத் திட்டமிட்டு இருக்கிறார் ரஜினி. மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில், ''உங்களை எல்லாம் சென்னைக்கு அழைத்துப்போய் 'எனக்கு மறுவாழ்வு அளித்த தெய்வங்கள்’ எனச் சொல்ல வேண்டும்!'' என உருகினார் ரஜினி.
கடிதத்துக்கு ரியாக்ஷன்!
தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிக்கு உருக்கமான ஒரு கடிதத்தை ஃபேக்ஸ் அனுப்பி இருக்கிறார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். 'இது உங்களுக்கு மறு பிறப்பு. போன பிறவி யில் ஒரு நடிகராக மட்டுமே இருந்தீர்கள். மகத்தான மாற்றத்தை உண்டாக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருந்தாலும், அதனை நீங்கள் பயன்படுத்தவே இல்லை. இந்தப் பிறவியிலாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக நீங்கள் போராட வேண்டும். உங்களுக்குக் கிடைத்த உயரிய சிகிச்சைகள் சாதாரண குடி மகன்களுக்குக் கிடைப்பது சாத்தியம் இல்லை. அடிப்படை மருத்துவத்துக்கே வழியற்ற நிலைமை தமிழகத்தில் நிலவுகிறது. அதனைத் தீர்க்கும் விதமான முன்னெடுப்பைச் செய்வதுதான் உங்களைக் கொண்டாடும் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் பதிலீடாக இருக்கும்!’ என அழுத்தமாக எழுதி இருக்கிறார் சௌந்தர்ராஜன்.
உயிர் மீண்ட நெகிழ்வில் இருக்கும் ரஜினியை அந்தக் கடிதம் ரொம்பவே உசுப்பி இருக்கிறதாம். சமூகம் சார்ந்த கைகோப்புக்கான அழைப்பு எப்போதும் ரஜினியிடம் இருந்து கிளம்பலாம்!

Source - Vikatan Magazine

Tuesday, June 21, 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர்-1 - Jun

உங்கள் குழந்தையும் இனி நம்பர்-1

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
 மாற வேண்டியது பிள்ளைகள் அல்ல !
சூப்பர் மார்க்கெட்டில் கண்ட காட்சி இது... நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்த அம்மா, அப்பா மற்றும் அவர் களின் பையன் நின்றிருக்க, கையடக்க வீடியோ கேம் ஒன்றை எடுத்துக்காட்டிய படி, ''கேபிள் இல்லாமல், ரிமோட்டிலேயே விளையாடலாம்; 25,000 கேம்ஸ் இருக்கு; ரீ-சார்ஜபிள் பேட்டரி கொண்டது’' என்று கடைக்காரர் சொல்லிக் கொண்டே செல்கிறார். அச்சிறுவனின் கண்களில் ஆசை விரிந்துகொண்டே போகிறது.
''என்ன விலைங்க?'’ என்று கேட்ட அப்பாவுக்கு, ''3,000 ரூபாய் சார்'’ என்று திரும்பி வந்த பதில் கடுமையான ஷாக் தருகிறது! அவ்வளவு பணம் கையில் இல்லாததால், ''கிருஷ்... இந்த கேம் வேணாம்... வேற ஏதாவது வாங்கிக் கோப்பா'’ என்று அன்பாகச் சொல்கிறார். ''எனக்கு அந்த கேம்தான் வேணும்ப்பா...’' என்று சிணுங்கலுடன் அவனுடைய அழுகை ஆரம்பமாகிறது. எந்தச் சமா தானங்களும் எடுபடாமல், அழுகையும் அடமும் அதிகமாகிறது. சுற்றியிருப் பவர்கள் வேடிக்கை பார்ப்பது அவமானமாகத் தோன்றவே, 3,000 ரூபாயைக் கொடுத்து வாங்கிக் கொண்டு, அவசரம் அவசரமாக நகர்கிறார்கள்.
'இந்தக் கால பசங்களுக்கு நினைச்சது அந்த நிமிஷமே நடந்துடணும். ரொம்ப அழுத்தமான குழந்தைங்க...’ என்ற விமர்சனம்தான் பலருக்கும் உடனடியாக மனதில் தோன்றும். ஆனால், இந்த விஷயத்தில் தவறு என்பது... முழுக்க முழுக்க அந்த பெற்றோர் மீதுதான். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டில் நான்கைந்து குழந்தைகள் இருக்கும். ஒரு குழந்தை, 'இந்த பொம்மை எனக்கு வேணாம்’ என்று சொன்னால்... அதை எடுத்து விளையாட அடுத்த குழந்தை ரெடியாக இருக்கும்.
இப்போது, அம்மாதிரியான சூழ்நிலை இல்லை என்பதும்... 'நான் எல்லாம் சின்னக் குழந்தையில எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? எங்கம்மா தீபாவளிக்கு மட்டும்தான் டிரெஸ் வாங்கித் தருவாங்க. அதுவும் எங்க அண்ணன், தம்பி எல்லாருக்கும் ஒரே மாதிரி டிரவுசர், சட்டைதான். என் புள்ள அப்படிக் கஷ்டப்படக் கூடாது. அவனை நான் மகாராஜா மாதிரி வளர்ப்பேன்’ என்கிற பெற்றோர்களின் உணர்வுப் பூர்வமான மனநிலையும்தான் பல பிரச்னைகளை உற்பத்தி செய்கின்றன. குழந்தை என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவதால், இப்படியே பழகிப்போன குழந்தை, சமயங்களில் சூழ்நிலை சாதகமாக இல்லாமல் போகும்போது, அதை உணராமல் அடம்பிடித்து... நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்கிறது. இது, குழந்தைப் பருவத்தோடு நில்லாமல், வாழ்க்கை முழுவதற்கும் நீடிக்கும் என்பதுதான் சோகம். ஒரு கட்டத்தில் அழுது சாதிக்க முடியாமல் போனால்... அது பெற்றோர்கள் மீது வெறுப்பாக மாறும் அபாயமும் உண்டு. எனவே, பெற்றோர் தங்களை மாற்றிக் கொள்வதுதான் உத்தமம்!
எப்படி?
'அம்மா எனக்கு இந்த தீபாவளிக்கு ஷெர்வானி டிரெஸ் வேணும்; ஸ்போர்ட்ஸ் ஷூ வேணும்’ என்று குழந்தை தன் ஆசை பட்டியலை சமர்ப்பிக்கும்போது, 'செல்லம்... இந்த வருஷம் தீபாவளிக்கு இவ்வளவு பணம்தான் இருக்கு. உனக்கு, அப்பாவுக்கு, அம்மாவுக்கு டிரெஸ் வாங்கணும்... உங்க பாட்டி - தாத்தாவுக்கு நீ டிரெஸ் எடுத்துக் கொடுக்கணும்... பட்டாசு, பலகாரச் செலவு வேற இருக்கு?’ என்கிற 'உண்மை’களை புரிய வைப்பதிலும், அதை அவன் சரியாகப் புரிந்து கொள்வதிலும்தான் இருக்கிறது ஒரு குழந்தையின் 'அனுசரித்து’ச் செல்லும் குணம்! சில விஷயங்களையும் ஆசைகளையும் தள்ளிப்போடும் குணத்தையும் குழந்தைக்குள் வார்த்தெடுப்பது பெற்றோர் கையில்தான் இருக்கிறது! பெற்றோர்தான் தங்கள் குழந்தைக்கு முதல் முன்மாதிரியாக இருக்க முடியும்; இருக்கவும் வேண்டும்.
இரண்டாவது... நடத்தை. குழந்தைகள் கையில் காசு கொடுத்துப் பழக்குவது. 8 வயது குழந்தையிடம் 10 ரூபாயைக் கொடுத்து, 'ஏதாவது வாங்கி சாப்பிட்டுக்கோ ராஜா’ என்பது அக்கறை அல்ல; பல ஆபத்துகளின் ஆரம்பப் புள்ளி!
அதுவே கையில் காசு கொடுத்து 'ஸ்கூல் சேவிங் ஸ்கீம்ல கட்டு’ என்று சொல்வது சிறு வயதில் இருந்து சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கும். அப்படிப் பழகும் குழந்தைகள், பின்னாளில் 10 ரூபாய் வருமானத்திலும் 5 ரூபாயை சேமிக்கப் பழகும். பணத்தின் மதிப்பு தெரியாமலேயே வளரும் குழந்தை, தன் வாலிப வயதில் வாழ்க்கையை சிக்கலுக்குள் தள்ளிக் கொள்ளும். அதற்கு நாமே ஒரு காரணமாக இருக்கலாமா? யோசியுங்கள்.
உங்கள் குழந்தை நல்லவனாக... வல்லவனாக வளருவதும், அவன் பொல்லாதவனாக தடம் மாறுவதும் இதில்தான் இருக்கிறது!
- வளர்ப்போம்...


Source - Vikatan Magazine

Sunday, June 19, 2011

''மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை அரசே ஏற்கும்!'' - அதிரடி சகாயம்... ஆடிப்போன மாநகராட்சி!

''பேருந்து நிலையத்தை அரசே ஏற்கும்!''

அதிரடி சகாயம்... ஆடிப்போன மாநகராட்சி!
'இன்னும் ஒரு வாரத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி... சீர் செய்யாவிட்டால், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை மோட்டார் வாகன விதி எண் 245(1)-ன் படி அரசே ஏற்கும்!’ - மதுரை மாநகராட்சி ஆணை யருக்கு கலெக்டர் சகாயம் அனுப்பி இருக்கும் இந்த நோட்டீஸைப் பார்த்து, அலறிக் கிடக்கிறார்கள், மாநகராட்சி அதிகாரிகள்.
ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே தி.மு.க-வினரின் ஆதிக்கம்தான். மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தி.மு.க-வின் கையிலேயே இருப் பதால், இவர்களைத் தட்டிக்கேட்க ஆளில்லாமல் போனது. ஆரம்பத்தில் சுமார் 156 கடைகள்தான் இருந்தன. பயணிகள் வசதிக்காக போஸ்ட் ஆபீஸ், ஓய்வெடுக்கும் அறை, சுகாதாரமான டாய்லெட் வசதி இருந்ததைப் பார்த்துவிட்டு (ஏமாந்து!) ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கொடுத்தார்கள். ஆனால், இந்தச் சான்றிதழ் வாங்கிய பிறகு, இஷ்டத்துக்கு புகுந்து விளையாடிய தி.மு.க-வினர், நடைபாதைகளை மட்டுமில்லாமல் பயணிகள் தங்கும் அறையையும் கடைகளாக்கிக் காசு பார்த்துவிட்டார்கள். இவர்களின் ஆக்கிரமிப்புக்கு போஸ்ட் ஆபீஸும் தப்பவில்லை!
இப்போது கிட்டத்தட்ட 250 கடைகள் இருப்பதாகச் சொல்கிறது மாநகராட்சி. இதில் மூன்றில் ஒரு பங்கு கடைகள் முறையான அனுமதி இல்லாதவை. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரே நபரே இங்கு 14 கடைகளை வளைத்துப் போட்டிருக்கிறாராம். அனுமதி பெற்ற கடைக்காரர்கள்கூட பயணிகள் நடமாட முடியாதபடிக்கு அக்கம் பக்கத்தில் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து உள்ளார்கள்.
ஒரு கடைக்கு மாத வாடகை யாகக் குறைந்தபட்சம் 10 ஆயிரமும் அதிகபட்சமாக 25 ஆயிரமும் வசூலிக்கிறது மாநகராட்சி. ஆனால், இங்கே கடைகளை வளைத்துப் போட்டி ருப்பவர்கள்   80 லட்சம் வரை பகடி வசூலித்துக்கொண்டு உள்வாடகைக்கு விட்டு இருக் கிறார்கள். இப்படி கடைகளை எடுக்கும் வியாபாரிகள், டூப்ளி கேட் சரக்குகளையும் எடை குறைவான பொருட்களையும் அப்பாவிப் பொதுமக்கள் தலையில் கட்டி, போட்ட பணத்தைத் திருப்பி எடுக்கிறார்கள்!
இங்குள்ள கட்டணக் கழிப்பிடங்களில் சிறுநீர் கழிப்பதற்கே 3 அழுதால்தான் உள்ளே விடுவார்கள். கேள்வி கேட்டால், ''இங்க எதுக்கு வர்றே... பிளாஸ்டிக் பையில் பிடிச்சு வீட்டுக்கு கொண்டு போ!'' என்பார்கள் நக்கலாக. 'இதற்கு எப்படி ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கொடுத்தார்கள்?’ என்று வியக்கும் அளவுக்கு குடிநீர், சுகாதாரம் எல்லாமே இங்கு மகாமட்டமாக இருக்கும். இந்த அவலங்களுக்குத்தான் சாவு மணி அடித்து இருக்கிறார் சகாயம்!
இது குறித்து சகாயத்திடம் பேசியபோது, ''மாட்டுத்தாவணி பேருந்து நிலைய அவலங்கள் குறித்து எனக்குப் பொதுமக்கள் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள். என்னதான் நடக்குதுன்னு பாக்குறதுக்காக நான் மக்களோடு மக்களாக யாருக்கும் தெரியாமல் தனியே அங்கே விசிட் போனேன். கழிப்பறையில் என் கண் முன்னாடியே 3 வசூல் பண்ணுனாங்க. அப்போதைக்கு எதையும் வெளிக்காட்டிக்காம வந்துட்டேன். மாகராட்சிக்குன்னு மேயர் இருக்காங்க, கமிஷனர் இருக்காங்க. அவங்களோட அதிகாரத்துல குறுக்கிடக் கூடாதுன்னுட்டு. 'இதையெல்லாம் சரி செய்யுங்க’ன்னு அவங்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்தேன். ஆனா, அவங்க சரியான நடவ டிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகுதான் நானே டிரான்ஸ்போர்ட் அதிகாரிகளைக் கூட் டிட்டு முறைப்படி பேருந்து நிலையத்துக்கு விசிட் போய், அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு போட்டேன்.
பேருந்து நிலையத்துக்கு ஆர்.டி.ஓ. மூணு வருடங்களுக்கு ஒரு முறை உரிமம் கொடுக்கணும். ஆனா, அதைக்கூட கடந்த ஆறு வருடங்களாக வாங்காமல் இருக்கிறார்கள். உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தால், ஆர்.டி.ஓ. மூலமாக அதை நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்னு விதி இருக்கு. அதன் அடிப்படையில்தான் 'ஒரு வாரத்துக்குள் பேருந்து நிலைய சீர்கேடுகளைச் சரிசெய்யவில்லை என்றால், அரசே ஏற்கும்’னு ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்தேன். 'சீர்கேடுகளைச் சரிசெய்துகொண்டு இருக்கிறோம்’னு பதில் கொடுத்து இருக்கிறார்கள். அதிகாரிகளை அனுப்பி சரிபார்ப்போம். திருப்தி இருந்தால் சரி... இல்லாவிட்டால், சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்!'' என்று உறுதியாகச் சொன்னவர்,
''எடை குறைவான பொருட்களை விற்பது சம்பந்தமான புகார்கள் தொடர்பாக நேற்றுக்கூட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சோதனை நடத்தி, தராசுகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். மாட்டுத்தாவணியில் மட்டும் இல்லாமல் ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கிறார்கள். இதே போல் திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி நகராட்சிகளிலும் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி ஆர்.டி.ஓ-க்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்...'' என்றும் கூறினார்.
கலெக்டர் அனுப்பி இருக்கும் ஷோகாஸ் நோட்டீஸ் குறித்து மாநகராட்சி கமிஷனர் செபஸ்டியனிடம் கேட்டதற்கு, ''இத்தனை நாளும் ஆக்கிரமிப்புகள் குறித்து யாரிடம் புகார் செய்யவேண்டுமோ, அவர்களே ஆக்கிரமிப்புகளை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். நாங்கள் சொல்வதை யாரும் கேட்பதாக இல்லை. அதனால் ஆக்கிரமிப்புகளை எடுக்க முடியாத சூழல்! இப்போது கலெக்டர் எங்களுக்குப் பக்கபலமாக இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நாங்களும் ஆர்வமாய் இருக்கிறோம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வார காலத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் காட்டுவோம்!'' என்றார் அழுத்தமாக!
'அந்தந்த சாமிக்கு அந்தந்த பூசாரிதான் சரிப்பட்டு வரும்’னு தெரிஞ்சுதானே சொல்லி இருக்காங்க!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Source - Vikatan

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்.. - பர்ஸைப் பதம் பார்க்கும் பலே எஸ்.எம்.எஸ்-கள்!

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பெண்கள்..

பர்ஸைப் பதம் பார்க்கும் பலே எஸ்.எம்.எஸ்-கள்!
'அழகுப் பெண்களுடன் கொஞ்சி மகிழ ஆசையா?’... 'இளமையான இல்லத்தரசிகளுடன் இனிய பொழுதைக் கழிக்க விருப்பம் என்றால், எங்களை அழைக்கவும்...’ - இப்படிக் கிளுகிளுப்பூட்டும் எஸ்.எம்.எஸ். எந்த நேரத்திலும் உங்கள் மொபைலுக்கு வரலாம். சபலப்பட்டு அந்த எண்களுக்குப் பேசினால், குறைந்தபட்சம் 50 ஆயிரமாவது காலியாகிவிடும், ஜாக்கிரதை. இதில் சிக்கிப் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லவும் முடியாமல் மெள்ளவும் முடியாமல் பலர் தவிக்க,  பெயர், விவரம் வேண்டாம் என்ற நிபந்தனைகளுடன் நம்மிடம் ஒருவர் பேசினார்!
சென்னை டைடல் பார்க்கில் லகரங்களில் சம்பாதிக்கும் இளைஞர் அவர். சொந்த ஊர் கரூர். ''போன வாரம் என் மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், 'அழகிய ஹை கிளாஸ் பெண்களுடன் என்ஜாய் செய்யலாம். நம்பிக்கையான இடம். தொடர்புக்கு, நாடாஷா - 095607 18428’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. முதலில் நான் அதை அலட்சியம் செய்துவிட்டேன். ஆனால், தொடர்ந்து அந்த எஸ்.எம்.எஸ். வரவே அந்த எண்ணுக்குப் பேசினேன். எதிர்முனையில் சோனாலி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிய ஒரு பெண், 'எங்கள் நண்பர்கள் அமைப்பு நாடு முழுவதும் கிளைகளைக்கொண்டது. இதில் உறுப்பினராகச் சேருபவர்களுக்கு மட்டுமே இந்த சேவை(!) கிடைக்கும். எங்களிடம் அனைத்து முக்கியமான நகரங்களிலும் ஏராளமான கல்லூரி மாணவிகள், நர்ஸ்கள், டாக்டர்கள், வசதியான இல்லத்தரசிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்​கள். அவர்களும் சரியான துணை கிடைக்காமல் ஏக்கத்தில் இருப்பவர்கள்தான். எனவே, நீங்கள் உறுப்பினரானால், அவர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கலாம்’ என்றார்.
நானும் உறுப்பினராக சம்மதித்தேன். அதற்கு அவர், 'முதலில் 20,000 டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கான வங்கி கணக்கு எண் எஸ்.எம்.எஸ். செய்யப்படும்’ என்று சொன்னார். அடுத்து வந்த எஸ்.எம்.எஸ்-ல் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் சேமிப்பு கணக்கு எண் 037801509604 - பெயர் மிஸ்.ரிங்கு’ என்று வந்தது. மீண்டும் நான் சோனாலியிடம் தொடர்புகொண்டு, 'நான் உங்களை எப்படி நம்புவது?’ என்று கேட்டேன். அவர், 'இந்தத் தொழில் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறது. உங்களுடன் உல்லாசமாக இருக்கப்போகும் பெண்ணை பேசச் சொல்கிறேன். நம்பிக்கை ஏற்பட்டால் மட்டும் பணம் போடுங்கள்’ என்றார்.
தொடர்ந்து வந்த அழைப்பில், அனு வர்மா என்பவர் பேசினார். சென்னையில் டாக்டராக இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், 'வெளியே எங்கேயும் தங்க வேண்டாம். எனது பங்களாவிலேயே பொழுதைக் கழிக்கலாம்’ என்றார். எனக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டவுடன், அந்த வங்கி எண்ணில் 20,000 டெபாசிட் செய்துவிட்டு அனுவர்மாவிடம் பேசினேன். அவர், 'நீங்கள் 'பி’ கிளாஸுக்குப் பணம் செலுத்தி இருக்கிறீர்கள். நான், 'ஏ’ கிளாஸ். என்னுடன் பழக 32,000 கட்டவேண்டும். நான் உங்களுக்காக எனது அடையாறு வீட்டில் தயாராக இருக்கிறேன். பணம் வங்கிக் கணக்கில் சேர்ந்தவுடன் முகவரி தருகிறேன்’ என்றார்.
நானும் உடனே எனது வங்கி கணக்கில் இருந்து 12,000 இ டிரான்ஸ்ஃபர் செய்தேன். அடுத்து அந்த எண்ணைத் தொடர்புகொண்டபோது அவர் மொபைலை எடுக்கவே இல்லை. மறுநாளும் மொபைலை எடுக்கவில்லை. மூன்றாம் நாள் நான் தொடர்புகொண்டபோது, 'என் மாமனார் இறந்துவிட்டதால் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது’ என்றார். அதன் பின்பு கூப்பிட்டபோதும் தட்டிக் கழித்தவர், பின்பு மொபைலை நிரந்தரமாக அணைத்துவிட்டார்...'' என்றார்!
இவர் மட்டும் அல்ல... சென்னை, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் தினமும் நூற்றுக்​கணக்​கான சபலப் பேர்வழிகள் இந்த கும்பலிடம் ஏமாறுகிறார்கள். கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான ராமசுப்ரமணியன் என்பவர் இந்த மோசடி குறித்து, தமிழக முதல்வருக்கும் காவல் துறைக்கும் புகார் அனுப்பி இருக்கிறார். அவரிடம் பேசினோம். ''சில மாதங்களுக்கு முன்பு எனது நண்பர்கள் சிலருக்கு இதுபோன்ற எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில்கள் வந்தன. அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க எண்ணி, அவர்களின் 97692 10461, 90041 96271 ஆகிய எண்களில் தொடர்புகொண்டோம்.
மிகவும் செக்ஸியாகப் பேசியவர்கள், 'மிகவும் நம்பகமான இடம்; போலீஸ் தொல்லை கிடையாது. இல்லத்தரசிகளின் வீட்டுக்கே செல்லலாம். கல்லூரிப் பெண்கள் என்றாலும்கூட, எங்கள் உறுப்பினர்களின் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறோம். அங்கு நீங்கள் ஜாலியாக இருக்கலாம்’ என்று பேசினார்கள். அவர்கள் பேசியதைப் பதிவு செய்துகொண்டோம். தொடர்ந்து அந்த கும்பல் பற்றிய விவரங்களை கடந்த டிசம்பர் மாதமே அப்போதைய கோவை ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், கமிஷனர் சைலேந்திரபாபு ஆகியோருக்கு அனுப்பினேன். மேலும், இந்த மோசடி கும்பல்கள், தமிழ் நாளிதழ் ஒன்றிலும், 'மை இண்டியன் கேர்ள். மனதை கவரும் அழகிகளின் காதல் நிறைந்த பேச்சுகள்’ என்று நிறைய மொபைல் எண்களைக் கொடுத்து விளம்பரம் செய்து இருந்தார்கள். அதையும் போலீஸிடம் குறிப்பிட்டேன். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
அதனால், அம்மா ஆட்சிக்கு வந்த பின்பு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கடந்த வாரம் முதல்வரின் தனிப் பிரிவுக்கு இதைப் புகாராக அனுப்பி இருக்கிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் என்னிடம் பேசி, அந்தக் கும்பல் அனுப்பிய மெயில்கள் எந்த ஐ.பி. எண்ணில் இருந்து வந்தது என்பதைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டனர். அந்த எண்ணையும் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளேன்...'' என்றார்!
இது குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் சுதாகரிடம் பேசினோம். ''இதுபோன்ற சம்பவங்கள் குறித்துக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், புகாராக எதுவும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐ.டி-களுடன் வந்து புகார் கொடுத்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அந்த மோசடி கும்பல் இந்தியாவுக்குள் இருந்து செயல்படுவதாகத்தான் தெரிகிறது. அதனால், கண்டிப்பாகப் பிடித்துவிடலாம்...'' என்றார்.
இன்னும் பலர் ஏமாறும் முன்னர்... அதிரடிகள் அரங்கேறட்டும்!
- டி.எல்.சஞ்சீவிகுமார், படம்: வி.ராஜேஷ்


Source - Vikatan Magazine

வாழ்க வளமுடன்! - 7

வாழ்க வளமுடன்! - 7

ருவம், அருவம் என்பவை நம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை. ஜாங்கிரி எனும் இனிப்புப் பதார்த்தம் உருவம்; அதனுள் இருக்கிற இனிப்புச் சுவையானது அருவம்.
கடவுள் உருவமில்லாதவர். அவருக்குக் கைகளோ, கால்களோ இல்லை. முகமோ, கண்களோ கிடையாது. கடவுள் என்பது மிக உன்னதமான சக்தி. அந்தச் சக்தியை, அதன் வீரியத்தை எப்படிச் சொன்னாலும், நம்மால் புரிந்து கொள்ள முடிவது கடினம். அதற்காகத்தான் முன்னோர்கள், கடவுளுக்கு உருவம் கொடுத்தார்கள்; கடவுளின் மிகப் பிரமாண்டத்தை, அதன் பேரொளியை நாம் உணரவேண்டும் என்பதற்காகத்தான், விக்கிரகத்தையும் ஆலயங்களையும் பிரமாண்டமாக அமைத்தார்கள்.
'நமக்கு ஏதேனும் துன்பமோ பிரச்னையோ என்றால், ஓடோடி வந்து நமக்குக் கரம் கொடுப்பார்; கை தூக்கி விடுவார்’ என்று உணர்த்துவதற்காகத்தான், கடவுளுக்கு ஏராளமான கரங்களையும் படைத்தார்கள்.

கடவுள் எனும் சக்தியை முதலில் உணரவேண்டும்; அந்தச் சக்தியை உணர்வதற்கும் அறிவதற்கும், அறிந்து தெளிவதற்கும் நமக்குள் ஓரளவேனும் சக்தி வேண்டும். ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் நம்மூர் மைதானத்தில் நடக்கிறது என்றால், அதில் கலந்துகொள்வதற்கு முன்பாக, 100, 200, 300 மீட்டர் தூரம் வரை ஓடிப் பயிற்சி பெற வேண்டும்; முதலில் அதற்கு நமக்குத் தெம்பு வேண்டும்.
100 மீட்டர் தூரத்தை மூச்சிரைக்காமல் எளிதாக ஓடிக் கடந்தால்தான், அடுத்து 200 மீட்டர் வரை ஓடிச் செல்ல, மனமும் கால்களும் தயாராகும். அந்த 200 மீட்டர் இலக்கும் அருமையாக முடிந்துவிட... 400, 500, 600 மீட்டர் என ஓட்டங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். பிறகு, 1000 மீட்டர் ஓட்டப் பந்தயம் கடினமாக இருக்காது; வெற்றியை அடைவதும் சுலபமாக இருக்கும்.
'அட... பார்க்கறதுக்கு நோஞ்சான் மாதிரி இருக்கான். ஆனா, குதிரைப் பாய்ச்சல்ல ஓடி, மிரட்டிட்டானே!’ என்று பாராட்டுவார்கள் பார்வையாளர்கள். குதிரையின் வேகத்துக்கு இணையாக என்று சொல்லும்போது, எல்லோருக்கும் குதிரையின் உருவம் மட்டுமே மனக்கண்ணில் தோன்றும். ஆனால், அதனுள் இருக்கிற அதிவேக சக்தியை நம்மால் பார்க்க முடியாது; உணரத்தான் முடியும்.
கடவுள் சக்தியாகட்டும்; குதிரைச் சக்தியாகட்டும்; இவை எல்லாமே நம் மூச்சுக்கு இணையானவை என்பதை உணருங்கள். இன்னும் சொல்லப்போனால், மூச்சு என்பதிலும் உருவமில்லை; அதுவொரு அருவம்தான்! ஆகவே, கடவுளைப் போலவே நம் மூச்சுக்கும் உருவமில்லை; ஆனால், உயிர்ப்பானது; சக்தியானது நம் மூச்சு!
அந்த மூச்சின் வீரியத்துக்குத் தக்கபடி, நம் அன்றாடப் பொழுதுகள் அமைகின்றன. அதேபோல், நம் அன்றாட வாழ்வுக்குத் தக்கபடியே, நம் மூச்சின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஒருநாளின் 24 மணி நேரமும் நல்ல பொழுதாக அமைவதற்கும், நம் மூச்சானது எந்தச் செய்கூலியும் சேதாரமும் இன்றி இயங்குவதற்கும் நமக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். அது, சாமர்த்தியம்!
இந்தச் சாமர்த்தியம் தேவையெனில், அதில் தேர்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டும் எனில், சில பயிற்சிகள் தேவை. அதில் முக்கியமானதும் முதன்மையானதுமானது...
மூச்சுப் பயிற்சி!
''ரெண்டு பக்கமும் பெடல் இருக்கு; சீட்ல உட்கார்ந்துக்கிட்டு, ரெண்டு கால்களாலயும் அந்தப் பெடல்களை மிதிச்சா, சைக்கிள் ஓடும். கீழே விழாம இருக்கிறதுக்கு, ஹேண்டில்பாரை கவனமா பிடிச்சு பேலன்ஸ் பண்ணணும். அவ்ளோதான். சைக்கிள் ஓட்டுறது ரொம்ப சிம்பிள்!'' என்று சைக்கிள் ஓட்டும் வித்தையை வாய் வார்த்தையாக எளிமையாகச் சொல்லிவிடலாம். ஆனால், பயிற்சிதான் முக்கியம்!
பெடல் செய்து, சைக்கிளை வேகமாக ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டோம். இப்போது, ஓடிக்கொண்டிருக்கிற சைக்கிளை நிறுத்தவேண்டும்; அல்லது, வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; எனில் 'பிரேக்’ போடவேண்டும் அல்லவா?! குதிரைக்குக் கடிவாளம் போன்று, வாகனங்களுக்கு பிரேக்! அதேபோல், உருவமற்ற மூச்சை உற்றுக் கவனிக்கிற சாமர்த்தியத்தில்தான், நம் ஆரோக்கியத்துக்கான வேகம் இருக்கிறது; நோய்களுக்கான பிரேக் இருக்கிறது.
ஆரோக்கியம் அதிகரிக்கவும், நோய்கள் தாக்காமல் ஓடிப் போவதற்குமான விஷயம்தான், மூச்சுப் பயிற்சி.
முதலில், சுகாசனத்தில் அமர்ந்துகொள்ளுங்கள். முதுகை நேராக்கிக் கொள்ளுங்கள். உங்களின் வலது உள்ளங்கையால், வயிற்றின் தொப்புள் பகுதியை மூடிக்கொள்ளுங்கள். அடுத்து, இடது கையை நெஞ்சுப் பக்கமாகக் கொண்டு வந்து, இடது விரல்களால் வலது காதை மூடிக் கொள்ளுங்கள். உங்களது இடது கையின் முதல் பாதியும் புஜமும், நெஞ்சுப்பகுதியை, அதாவது மார்பை அழுத்தியபடி இருக்கட்டும். மீண்டும் ஒருமுறை, உங்கள் முகமும் முதுகும் நேராக இருக்கிறதா என்று கவனித்துக் கொள்ளுங்கள்.
என்ன, சரியா? அடுத்து, அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்தபடி, கண்களை மூடிக்கொண்டு, ஆழ்ந்து, நிதானமாக, எந்தப் படபடப்பும் இல்லாமல், பதற்றமும் தொற்றிக் கொள்ளாமல், எந்தத் தடையேதும் இல்லாமல் மூச்சை நன்றாக உள்ளிழுத்து, வெளியே விடுங்கள். மூடியிருக்கும் கண்கள், மூடினபடியே இருக்கட்டும்; நிமிர்த்திய முகமும் முதுகும் அப்படியே இருக்கட்டும்; இடது கை நெஞ்சுப்பகுதியை அழுத்தியதிலும், வலது காதைப் பொத்திக்கொண்டதிலும் மாற்றங்கள் ஏதுமின்றி இருக்க, தொப்புளில் வலது கையை வைத்த படி, ஒரு ஐந்து முறை நன்றாக மூச்சை இழுத்து, பிறகு நன்றாக வெளியே விடுங்கள்.
உங்கள் நுரையீரலானது, நன்றாக விரிவடைந்து, மொத்த மூச்சையும் உள்வாங்கிக் கொள்வதை உங்களால் உணர முடியும்!
என்ன... ஐந்து முறை செய்துவிட்டீர்களா? அடுத்து, உங்களின் இடது கையின் உள்ளங் கை, தொப்புள் பகுதியை மூடிக்கொண்டிருக் கும்படி செய்யுங்கள். இப்போது, வலது கையின் முன்பகுதியும் புஜமும் நெஞ்சுப் பகுதியை அழுத்த, வலது கை விரல்களால், இடது காதைப் பொத்திக் கொள்ளுங்கள். மீண்டும் முதுகு, முகம் - இந்த இரண்டும் நேராகவே இருக்கிறதா என்று கவனியுங்கள். கண்களை மூடிக்கொண்டு, மூச்சை உள்ளிழுத்து, அதேபோல் வெளிவிடுங்கள்.
'அடடா... பொது பைப்ல தண்ணீ வர டைமாச்சே இது...’ என்கிற பரபரப்பு வேண்டாம். 'இப்படிக் காலங்கார்த்தால, கால் மணி நேரம் உக்கார்ந்திருந்தா, குளிச்சு, கிளம்பி, பஸ் பிடிச்சு, ஆபீசுக்குப் போறதுக்கு லேட்டாயிடுமே’ எனும் பதைபதைப்பு தேவையே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, 'இப்படி உட்கார்ந்து கண்ணை மூடி மூச்சுப் பயிற்சி செஞ்சா, மனைவியும் குழந்தைகளும் 'இவர் சாமியார் ஆயிடுவார் போல இருக்கே...’ என்று நினைத்து பயப்படுவார்களோ என்று கவலைப்பட வேண்டியதும் இல்லை. மூurce -ச்சுப் பயிற்சி என்பது சாமியார் ஆவதற்கான டிப்ளமோ கோர்ஸ் அல்ல; நம் வாழ்வை எளிமையாகவும் வளமையாகவும் ஆக்கிக்கொள்வதற்கான, எனர்ஜி டானிக்! மிக அருமையான புத்துணர்ச்சி போஷாக்கு!
ஆகவே, மூச்சுப் பயிற்சி குறித்த குழப்பமோ கலவரமோ அவசியமே இல்லை, அன்பர்களே! சொல்லப் போனால், குழப்பக் கலவரங்களையெல்லாம் அடித்து விரட்டுவதற்கான ஆயுதம்தான், இந்த மூச்சுப் பயிற்சி என்பதை மறந்து விடாதீர்கள்!
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

Source - Vikatan Magazine

ரசிகர்களுக்கு ரஜினி கடிதம் - உங்களை மகிழ வைப்பதுதான் என்னுடைய லட்சியம்


ரசிகர்களுக்கு ரஜினி கடிதம்

ஜுன் 18, 2011
ரஜினி சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது  ரசிகர்களுக்கு ஆடியோ மூலம் பேசி விட்டு சிங்கப்பூருக்கு மேல்சிகிச்சைக்கு சென்றுவிட்டார்.

அதன் பின்பு சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டு முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தொலைபேசியில் பேசினார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பது :

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன், அன்பார்ந்த ரசிகர்களுக்கு, பேனா, பேப்பர் எடுத்து எழுதும்போது வார்த்தைகள் வரவில்லை.

எனக்கு, தமிழக அரசு எந்த நேரத்திலும் எந்த உதவியையும் செய்ய எனக்கு உறுதிமொழி கொடுத்த தமிழக முதல்வருக்கும், என்றுமே என் மீது பாசத்தை வைத்திருக்கும் என்னுடைய அருமை நண்பர் கருணாநிதியுடனும் பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன்.

முதலில் உங்களிடம் பேசாமல் இருந்ததற்கு மன்னிக்கவும். இந்த விஞ்ஞான உலகத்தில் கூட, எந்த விளையாட்டை விளையாடினாலும் காசை மேலே தூக்கிப் போட்டு, ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு செய்கிறார்கள்.

காசை மேலே தூக்கிப் போடும்வது தான் மனிதனுடைய வேலை. பூவாக விழுவதா, தலையாக விழுவதா என்பது ஆண்டவனுடைய செயல்.என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு பக்கம் பணம், விஞ்ஞானம், மருத்துவம், உலகத்திலேயே மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்க....

இன்னொரு பக்கம், நான் நலம் அடைய கடவுள் பிரார்த்தனை, பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள் தான் என்னை காப்பாற்றியது என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நான் நம்புகிறேன்.

ரஜினிக்கு எவ்வளவு மக்கள் அன்பு இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டிவிட்டீர்கள். நான் இப்போது குணமடைந்து கொண்டு இருக்கிறேன் என்றால், நீங்கள் எல்லோரும் என் மீது வைத்திருக்கின்ற அன்பு தான் காரணம்.

என்னை ஒரு அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, உங்கள் வீட்டு ஒரு பிள்ளையாக நினைத்து எனக்கு செய்த பூஜைகள் தான் காரணம்...
ஜென்ம ஜென்மத்திற்கும் உங்களுடைய அன்பை என்றும் மறக்க மாட்டேன். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

இனிமேல், உங்களை மகிழ வைப்பதுதான் என்னுடைய லட்சியம். கூடிய விரைவில், ராணாவில், உங்களை மகிழ வைக்க தோன்றுகிறேன். நான், உங்களுடைய எல்லா நன்மைக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.

என்றும் உங்களுடையை,
ரஜினி.


என்று அக்கடித்தில் குறிப்பிட்டு இருந்தது.