Wednesday, June 29, 2011

மனிதம் வளர்போம்! - லதானந்த்

மனிதம் வளர்போம்! - லதானந்த்


பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும் - திருக்குறள்
(பிறரைப் பற்றிப் புறம் கூறுகின்றவனின் தவறுகளை மற்றவர் ஆராய்ந்து பழி சொல்வார்கள்.)
ருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிப் பிறரிடம் அவதூறாகவோ அல்லது எதிர்மறையாகவோ சொல்வதே, புறங்கூறுதல். இந்தக் கால இளைஞர்களின் பாஷையில் சொன்னால், 'பற்ற வைத்தல்’ அல்லது 'போட்டுக் கொடுத்தல்’!
இதிலும் 'கோள்’ என்றும் 'குறளை’ என்றும் இரண்டு வகை உண்டு. ஒருவரது துர்க்குணங்களைப் பற்றி, அவர் இல்லாதபோது அடுத்தவரிடம் சொல்லுவது கோள்; கற்பனையாக... இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டிக் கூறுவது, குறளை. முன்னதைவிட அடுத்தது மிகவும் தீயது!
ஆண்டாள் தனது 'திருப்பாவை’யில், பாவை நோன்பு பற்றிக் குறிப்பிடுகிறாள். உணவில் நெய்யும் பாலும் சேர்க்காமல், மலர் சூடிக் கூந்தல் முடிக்காமல், மையிடாத கண்ணுடன் நோன்பு இருப்பார்களாம். 'செய்யக்கூடாதன’ என்று சொல்லப்பட்டவைகளையும் செய்யமாட்டார்களாம். குறிப்பாக, 'தீக்குறளைச் சென்றோதோம்’ என்கிறாள். இங்கே, தீக்குறளை என்பது தீய செயலான புறங்கூறுதலையே குறிக்கிறது.
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
- என்பது ஆண்டாள் வாக்கு.மனிதனின் ஐம்புலன்களில், வாய் மூலம் இழைக்கிற பாவப் பட்டியலில், புறங்கூறுதலையும் சேர்த்திருக்கிறது புத்த மதம். வள்ளுவர்கூட, புறங்கூறாமை பற்றித் தனி அதிகாரமே இயற்றியுள்ளார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புறங்கூறுதல் முக்கிய இடம் வகிக்கிறது. கைகேயியிடம் கூனி மூட்டிய புறங்கூறுதல் எனும் தீ, ராமாயணத்தில் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தியது. அதேபோல், சகுனி கௌரவர்களிடம் புறங்கூறி, பற்ற வைத்த தீவினையே மகாபாரதப் போருக்கு முக்கியக் காரணம்!
குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் உறவினர்கள் மீதே அம்பு விட மனம் கலங்கிய அர்ஜுனன், பலவிதமான சந்தேகங்களை, கீதாசார்யனான ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டான். 'இறையருள் பெற்றவனின் லட்சணங்கள் என்ன?' என்பது அர்ஜுனனின் கேள்விகளுள் ஒன்று. அதற்கு, '26 நற்குணங்களைக் கொண்டவன் இறையருள் பெற்றவனாகிறான்’ என, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறி, பட்டியலிடுகிறார். அவற்றில், கோள் சொல்லாதிருத்தலும் ஒன்று!
ஒருவர் அருகில் இல்லாதபோது, அந்த நபரின் எதிர்மறைக் குணங்களே நினைவுக்கு வருவது, பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இன்னும் சிலர் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், மேலதிகாரிகளிடம் தங்களது அலுவலக சகாக்களைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். உயரதிகாரியிடம் தான் கொண்டுள்ள விசுவாசத்தைக் காண்பிக்கும் ஓர் உத்தி இது என்ற நம்பிக்கை ஒரு காரணம்; தான் செய்யும் தவறுகளில் இருந்து அதிகாரியின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கமும் இதில் உண்டு.
மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் உத்தியாக வும், பிறரை விடத் தாங்கள் சிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் சாதனமாகவும் சிலர் புறங்கூறுதலைக் கையாளுகின்றனர். இன்னும் சிலருக்கு மற்றவர்களின் ரகசியங்களை அம்பலமாக்குவதில் அற்ப மகிழ்ச்சி! பிறர் துன்பப்படுவதில் மகிழ்ச்சி காணும் சாடிஸ்ட் மனப்பான்மை உள்ளவர்களும் புறங்கூறுதலில் ஈடுபடுவார்கள். தங்கள் பிரச்னையைத் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள இயலாதவர்கள், மற்றவர்களிடம் உதவி நாடும்போது, புறங்கூறுகிறார்கள் என்பது உளவியலாளர்கள் கருத்து.
அதேநேரம், தீமை விளைவிப் போரைப் பற்றி உரியவர்களுக்குத் தகவல்கள் அளிப்பது, உண்மை களை சாட்சியமாக அளிப்பது போன்றவை கோள் சொல்லுதலின் கீழ் வராது.
மாதப்பன் திறமைசாலியான ஊழியர். ஆனால், புறங்கூறுவதில் மன்னன். அக்கவுன்ட்டன்டான அவர், கிளை அலுவலகத்தில் இருந்து வட்டார அலுவலகத்துக்கு மாறுதலாகி வந்தார். வந்தவுடன் தனது வேலையைத் தொடங்கி விட்டார். வட்டார அலுவலக மேலாளரிடம், தான் முன்பு வேலை பார்த்த கிளை அலுவலகத்தில் பணிபுரிந்த அனைவரைப் பற்றியும் கோள் சொல்ல ஆரம்பித்தார். வெகு சீக்கிரத்திலேயே புதிய அலுவலகத்தில் மேலாளரின் பூரண நம்பிக்கையையும் பெற்றார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வட்டார அலுவலகங்களைக் கட்டுப்படுத்தும் மண்டல அலுவல கத்துக்கு, பதவி உயர்வுடன் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பும்படி, மாதப்பனின் மேலாளரிடம் உயரதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். மாதப்பனையே அவர் பரிந்துரை செய்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரோ மாதப்பனை விடச் சற்றே தகுதி குறைவான வேறொருவரை பரிந்துரை செய்தார்.
என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ரொம்ப சிம்பிள்!
'இவரை நமக்கும் மேலே இருக்கிற அலுவலகத்துக்கு அனுப்பி வைச்சா, நம்ம அலுவலகம் பத்தி நிச்சயம் போட்டுக் கொடுத்துடுவாரு!''
(தொடரும்

Source - Vikatan Magazine

வாழ்க வளமுடன்! - 8 - வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி


'சுவாமி. என் பையனுக்கு பன்னிரண்டு வயதாகிறது. ஆனாலும் இன்னும் விளையாட்டுத்தனமாகவே இருக்கிறான். ஒரு உற்சாகத்தில் விளையாடப் போனால், இருட்டி ஏழானதும் வீட்டுக்கு வருகிறான். அப்படி வருகிறவனைப் படிக்கச் சொன்னால், அவனும் ஒன்பது மணி வரைக்கும் படிக்கத்தான் செய்கிறான். ஆனால், எதுவும் அவனுடைய மனதில் பதிவதே இல்லை. ஒவ்வொரு தேர்விலும் குறைவாகவே மார்க்குகள் வாங்குகிறான். அவனுடைய ஜாதகத்தில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்கின்றனர், சிலர். இதற்கு என்ன பரிகாரம் செய்வது, சுவாமி!'' என்று தன் மகனுடனும் கணவனுடனும் வந்திருந்த பெண்மணி கேட்டாள். அப்படிக் கேட்கும்போதே அழுதுவிட்டாள், அந்தத் தாயார்!
நான் அந்தப் பையனையும் தாயையும் ஒருகணம் பார்த்தேன். அந்தப் பெண்ணின் தந்தை, மிகுந்த கவலையுடன் இறுக்கமாக அமர்ந்திருந்தார்.
அந்தப் பெண்ணிடம், ''உங்கள் மகன் விளையாடப் போய்விடுகிறான், சரி. அவனை நீங்கள் அழைத்து வருவீர்களா? அல்லது, நீங்கள் அழைப்பதற்கு முன்பே அவனாக வந்துவிடுவானா?'' என்றேன். உடனே அந்தப் பெண், ''எங்கே சுவாமி... எந்த வீட்ல, எந்த ஃப்ரெண்டோட விளையாடறான்னு தேடுறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடும் எனக்கு. அவன் கையைப் பிடிச்சு, தரதரன்னு இழுத்துக்கிட்டு வர்றதுலயே, என் பாதி ஜீவனே போயிடுது'' என்று அலுத்துக் கொண்டாள்.

''சரி...புத்தகத்தை எடுத்து, அவனாகவே படிப்பானா? அல்லது நீங்கள் சொல்லித்தான் படிப்பானா?'' என்று கேட்டதும்... ''ஐயய்யோ... அப்படி அவனே புஸ்தகத்தைத் திறந்து படிச்சான்னா, அன்னிக்கி மழை கொட்டித் தீர்த்துடும் சுவாமி. படிபடிபடின்னு படிச்சுப் படிச்சுச் சொன்னாத்தான் சார், புஸ்தகத்தையே தொடுவாரு'' என்று சொல்லிவிட்டு, அந்தப் பையனைப் பார்த்து முறைத்தாள்.
பிறகு அந்தப் பையனிடம், ''நீயும் நானும் விளையாடுவோமா?'' என்று கேட்டேன். அவன் உடனே சரியென்றான். அந்தப் பெற்றோரை சற்றே தள்ளியிருக்கும்படி சொல்லிவிட்டு, அவனுடைய உச்சந்தலையில் கைவைத்து, ஆசீர்வதித்தேன். ''உங்கள் பள்ளியில், மதிய உணவின் போது, பிரார்த்தனை செய்துவிட்டுச் சாப்பிடும் பழக்கம் உண்டா?'' என்று கேட்டேன். ஆமாம் என்றவன், அந்தப் பிரார்த்தனைப் பாடலைப் பாடிக் காட்டினான். அவனுடைய குரலும் தெளிவான உச்சரிப்பும் அழகுற இருந்தன. வார்த்தைகளுக்கு அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதற்குத் தக்கபடி ஏற்ற இறக்கத்துடன் பாடிய விதம், அவனுடைய புத்திசாலித்தனத்தை, கிரகிக்கும் திறனைக் காட்டின.
''நாம் விளையாடுவதற்கு முன்னதாக, சின்னதாக உடற்பயிற்சி ஒன்றைச் செய்வோமா? அது உடற்பயிற்சி மட்டுமின்றி, மனப்பயிற்சியும் கூட!'' என்றேன். உடனே அவன், ''ஓ... விளையாட்டில் ஜெயிக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கணும்; அதுக்கு அப்புறமா விளையாடணும். அதானே?!'' என்று உற்சாகத்துடன், கண்டுபிடித்துவிட்டதான குதூகலத்துடன் கேட்டான். நானும், ''கிட்டத்தட்ட அப்படித்தான்!'' என்றேன் சிரித்துக்கொண்டே!
அந்தப் பையனை எனக்கு எதிரே, முதுகை நேராக வைத்துக் கொண்டு உட்காரச் சொன்னேன். வலது உள்ளங்கையை, தொப்புளிலும் இடது உள்ளங்கையை வலது காதிலும் வைத்துக் கொள்ளச் சொன்னேன். அப்படியே செய்தான். கண்களை மூடிக்கொண்டு, மூச்சை நன்றாக உள்ளே இழுத்துவிட்டு, பிறகு வெளியே விடச் சொன்னேன். கண்களை மூடிக் கொண்டவன், சட்டென்று திறந்தான். 'ஜெயிக்கணும்னு எப்ப வேண்டிக்கறது?’ என்று கேட்டான்.
அவனுடைய ஞாபக சக்தியும், ஜெயிப்பதில் உண்டான முனைப்பும் என்னை ரொம்பவே கவர்ந்தது.
''உனக்கு எந்த விளையாட்டு ரொம்பப் பிடிக்கும்?'' என்று கேட்டேன். அவன், ''ஃபுட்பால்'' என்றான். அட... கிரிக்கெட் ஆட்டத்துக்கு கிறங்கிப் போகிறவர்களுக்கு மத்தியில், கால்பந்தை ரசிக்கிற சிறுவன். வியப்பும் சந்தோஷமுமாக, அவனுடைய தலையைத் தடவி, கன்னத்தில் செல்லமாகத் தட்டினேன்.
''முதலில், கண்களை மூடிக்கொள்; கால்பந்து விளையாட்டில் 'கோல்’ அடிப்பது ரொம்பவே முக்கியம், இல்லையா? அப்படிச் சரியாக
'கோல்’ அடித்தால்தானே, விளையாட்டில் நமக்கு வெற்றி கிடைக்கும். ஜெயிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்; அடுத்ததாக, நன்றாக மூச்சை உள்ளே இழு; அப்படி மூச்சு விடுகிறபோது, அந்த மூச்சுக் காற்றை, காற்று அடைக்கப்பட்ட பந்தாக நினைத்துக் கொள். மூச்சு எனும் பந்தை, மெள்ள, நிதானமாக, அவசரமே இல்லாமல் உள்ளே இழுத்துக்கொள்.
கால்பந்து விளையாட்டில், 'கோல் போஸ்ட்’ என்கிற இடம்தானே நம்முடைய இலக்கு. கவிழ்த்துப் போட்ட 'ப’ வடிவத்திலான கம்பமும், அங்கே கட்டப் பட்டிருக்கிற வலையும்தானே முக்கியம்?! அந்த இடத்தை இலக்காகக் கொண்டு, பந்தை உதைத்துக்கொண்டே சென்று, ஓங்கி ஒரு உதை உதைக்க... அது சரியானபடி பறந்தோடிச் சென்றுவிட்டால், 'கோல்’ அடித்துவிட்டதாகக் கணக்கு. இந்தக் கணக்கு, வெறும் கால்பந்து விளையாட்டுக்கு என்று நினைக்காதே. மொத்த வாழ்க்கைக்குமான சூத்திரமும் இதுதான்!
ஆகவே, உன் மூச்சு உனக்குள் ஓரிடத்தை இலக்காகக் கொண்டு, பயணிக் கும். பிறகு அந்த இடத்தை அடையும் போது, உள்ளுக்குள் ஒரு நிம்மதி; சின்ன தான சந்தோஷம்; மெல்லியதான அமைதி என்று பரவும். அந்த உணர்வுதான், 'கோல்’! அதுதான் வெற்றிக்கான சாட்சி.
என்ன... புரிகிறதா? எங்கே... உன்னுடைய மூச்சு என்கிற பந்தை, மெள்ள மெள்ள உதைத்துக் கொண்டு, அது எங்கே செல்ல வேண்டுமோ... அந்த இலக்கை நோக்கி, நிதானமாக வா, பார்க்கலாம்'' என்றேன். அப்படியே செய்தான். பிறகு அந்தப் பந்தை, 'கோல் போஸ்ட்’ இடத்தில் இருந்து, வெளியே கொண்டு வந்துவிடு. அதாவது, மூச்சை வெளியே இழுத்து விடு. இப்படி, மூச்சை உள்ளிழுப்பது கோல் என்றும்; மூச்சை வெளியேற்றுவதை பந்தை வெளியே தள்ளிக் கொண்டு வருவது என்றும் நினைத்துக்கொண்டே, கால்பந்து விளையாட்டை, விளையாடு'' என்றேன்.
அப்படியே செய்தான். இந்த முறை, இடது கை, தொப்புள் பகுதி; வலது கை இடது காது... என்று வைக்கச் செய்து, விளையாடச் சொன்னேன். 'புரியுது புரியுது... 'கேம்’ல இடம் மாறுறது மாதிரி, இங்கே கையையும் காதையும் மாத்திக்கணும், கரெக்ட்டா?'' என்று கேட்டான். என் பதிலுக்குக் காத்திருக்காமல், சட்டென்று செயலில் இறங்கினான்.
பிறகு அவனிடம், ''இந்த விளையாட்டை, இதேபோல் தினமும் செய்கிறாயா?'' என்று கேட்டேன். ''நிச்சயமா செய்றேன். நல்லாருக்கு இந்த விளையாட்டு'' என்றான். அவனிடமே, ''நீ தினமும் எப்போது படிக்க நினைக்கிறாயோ, அதற்கு முன்னதாக ஒரு ஐந்து நிமிடம் இந்த விளையாட்டை விளையாடிவிட்டுப் படி! விளையாடிய சந்தோஷத்துடன், படிக்கும்போது, நீ படிக்கின்ற யாவையும் மனதுள் பதியும்; மதிப்பெண்ணும் கிடைக்கும்'' என்றேன்.
பிறகு நான்கைந்து வருடங்கள் கழித்து அந்தப் பையனைப் பார்த்தபோது, அவனுடைய அம்மா... ''என் பையன், டென்த்ல ஸ்கூல்லயே ஃபர்ஸ்ட்!'' என்றாள் பெருமிதத்துடன்!
மூச்சுப் பயிற்சி என்கிற கால்பந்து விளையாட்டை நீங்களும் விளையாடிப் பாருங்கள்; வாழ்க்கை வசப்படும்!
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

Source - Vikatan Magazine

கிரைண்டர்... மிக்ஸி... மின்விசிறி...

கிரைண்டர்... மிக்ஸி... மின்விசிறி...

முதல்வர் படிக்க ஒரு கடிதம்
ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், அவர் பார்வைக்குப் போய்ச் சேர்ந்ததா என்பது தெரி​யாது! அந்தக் கடிதத்தின் நகலை ஜூ.வி-க்கு அனுப்பி இருந்தார் நம் வாசகர் ஒருவர். அது அப்படியே உங்கள் பார்வைக்கு...
 'மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
கோயம்புத்தூர் மாவட்ட கிரைண்டர் தயாரிப்​பாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவனாகிய நான் தங்களின் நலன் விரும்பி. தங்கள் ஆட்சி மீண்டும் வர, எமது கோவை மாவட்ட மக்களே பிள்ளையார் சுழி போட்டவர்கள். மாவட்ட வளர்ச்சிக்காக உங்கள் மீது மாபெரும் நம்பிக்கைவைத்து எதிர்பார்ப்பு​களுடன் காத்திருக்​கிறார்கள் இந்தப் பகுதி மக்கள்.
கருணாநிதி குடும்பத்தினர் செய்த ஊழல், கபளீகரம் ஆகியவையே கடந்த தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. உங்களுக்கும் இது தெரியும். தாங்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் தமிழகத்தில் ஊழல் அற்ற, யாருடைய தலையீடும் இல்லாத, நேர்மையான, மக்களாட்சி நடக்கும் என்று சொன்னீர்கள். உங்களின் அந்த நம்பிக்கையில் மண் விழும் காட்சிகள் ஆரம்பமாகி உள்ளன. உங்களின்.......... குடும்பத்தினர் ஆடும் ஆட்டம் அப்படி!
தேர்தல் அறிக்கையில் நீங்கள் கூறியவாறு, ஏழை மக்களுக்கு இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி வழங்கும் திட்டப் பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், கோவையில் இருக்கும் ...........
(மூன்று நபர்களின் பெயரை அவர் குறிப்​பி​டுகிறார்!)  ஆகியோர் தங்களுக்கு வேண்டிய கிரைண்டர் தயாரிப்போர் சிலரின் துணையுடன், சிண்டிகேட் அமைத்து தமிழக அரசின் இலவச கிரைண்டர் ஆர்டரைப் பெற களத்தில் இறங்கி உள்ளனர். இதற்கு அமைச்சர் ................ அவர்களும் உடந்தை. இந்த சிண்டிகேட் கும்பலுக்குத்தான் இனி வரும் எல்லா ஆர்டரும் போகுமாம். கிரைண்டருக்கு அதிக விலையை டெண்டர் மதிப்பில் இடம்பெறச் செய்து, அதற்கு உண்டான தொகையை தமிழக அரசிடம் இருந்து பெற்று, தங்கள் பாக்கெட்டில் நிரப்ப வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். ஒரு கிரைண்டருக்கு 1,000 வீதம் பல நூறு கோடிகளை இந்தக் கும்பல் கொள்ளையடிக்கப்போகிறது. மக்களின் வரிப் பணத்தைச் சுரண்ட நினைக்கும் இந்தக் கும்பலின் கூட்டு தொடர்ந்தால், உங்கள் ஆட்சிக்குத்தான் கெட்ட பெயர்.
இது குறித்த விவரங்களை மாநில உளவுப் பிரிவு போலீஸாரிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள். புட்டுப் புட்டு வைப்பார்கள். இல்லை எனில், சமீபத்தில் சென்னையில் நடந்த பொருட்களின் தரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பின்னணியை நீங்கள் ஆராய்ந் தால், நான் சொல்வது உண்மை என்று தெரியும். இந்த விவகாரம் விரைவில் எதிர்க் கட்சி​களுக்கும் கசியப் போகிறது.
அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து, தேசத்துக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தி, மக்கள் பணத்தைக் கொள்ளை​யடித்து ஊழல் செய்ததற்கும், தரம் அற்ற கிரைண் டருக்கு அதிக விலை நிர்ணயித்து அரசுப் பணத்தை (மக்கள் வரிப் பணம்) விழுங்க நினைப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
கிரைண்டர், மிக்ஸி அல்லது மின்விசிறி அசெம்பிள் செய்ய குறைந்த எண்ணிக்கையில் ஆன உதிரிப் பாகங்கள் போது​மானவை அதன் மொத்த அடக்க விலையை மூலப் பொருட்களின் தரத்தைக்​கொண்டு, யார் வேண்டுமானாலும் நிர்ணயிக்க லாம். தங்களது முழுக் கண்காணிப்பில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அடங்கிய ஒரு  கமிட்டி ஏற்படுத்தி, தமிழக மக்கள் அனைவரும் அறிந்து​கொள்ளும் வகையில், ஓப்பன் டெண்டர் மூலமாக அதன் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இதை நீங்கள் செய்யத் தவறினால், 'ஆட்சிதான் மாறி உள்ளது; காட்சிகள் மாறவே இல்லை’ என்று தமிழக மக்கள் எண்ணும் சூழல் உருவாகும்.
அண்ணா ஹஜாரே மற்றும் பாபா ராம்தேவ் உள்ளிட்​டோரின் சமீபத்திய செயல்பாடுகளால், இந்திய மக்கள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் .............. தலையீட்டை தமிழக அரசின் நிர்வாகத்திலும், ஆட்சியிலும் நீங்கள் அனுமதித்தால், தி.மு.க. மீதுகொண்ட வெறுப்பு உங்கள் மீதும் திரும்பும்.
அம்மா, நீங்கள் மோடியைப்​போல, நிதீஷ்குமார்போல சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும் என்றே மக்கள் நினைக்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால்... வரும் உள்ளாட்சித் தேர்தல் வரைகூட உங்களின் வெற்றிக் கோஷம் ஒலிக்காது. இறுதியாக, காமராஜரின் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறேன். ஊழல் அற்ற, நேர்மையான நல்லாட்சியைத் தாங்கள் தர இயலாத நிலை ஏற்பட்டால், தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். உங்களின் அதிரடி முடிவுக்​காக நம்பிக்கையுடன் காத்திருக்​கிறேன். நன்றி!’
இப்படிக்கு,
இரட்டை இலைக்கு வாக்களித்தவன்.
என்ன செய்யவேண்டும் ஜெ.?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பாலபாரதி இந்த விவகாரம் குறித்து, ''பொதுநல நோக்கு கொண்ட நிறுவனங்கள் வசம் இலவச பொருட்கள் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாம். முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, உடனடியாக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அடங்கிய குழுவை  நியமிக்க வேண்டும். அந்த குழுவில் சீனியர் அதிகாரிகளுக்கும் இடம் கொடுக்கலாம். நிறுவனங்கள் தயாரித்துத் தரும் பொருட்களின் தரத்தை தீவிரமாக ஆராய்வதுடன், குறைந்தது இரண்டு வருட கேரண்டி கொடுக்கப்பட வேண்டும். ஓப்பன் டெண்டர் சிஸ்டத்தை அமல்படுத்தி ஒப்பந்த ஆர்டர் வழங்கினால்தான் மக்கள் வரிப்பணம் பாழாகாது!'' என்று தெரிவித்தார்.
- தி.கோபிவிஜய்

Source - Vikatan Magazine

Monday, June 27, 2011

கருணாநிதி குடும்பத்தின் மீது 'கார்' அட்டாக்!

கருணாநிதி குடும்பத்தின் மீது 'கார்' அட்டாக்!

அடுத்த பூகம்பம் ஆரம்பம்
'இன்று இல்லாவிட்டால், நாளை நல்ல காலம் வரும். நாளை இல்லாவிட்டால், அதற்கு மறுநாள் நல்லதாக விடியும்!’ என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். ஆனால், அந்தக் கட்சியின் குடும்பப் புள்ளிகளை மையம்கொண்டு அடுத்தடுத்து சுழல்கிறதே சர்ச்சை றாவளிகள்.
2ஜி அலைக்கற்றையில் ஆரம்பித்த அதகளம், இப்போது ஓர் அயல்நாட்டு காரில் வந்து நிற்கிறது. மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'மஸராட்டி’ என்ற சொகுசு கார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த காரை வாங்கிய அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர், சென்னையில் ஒருவருக்கு அதை விற்பனை செய்தார். 2 கோடி மதிப்பு உடைய காரை மிக மிகக் குறைந்த மதிப்பாகக் காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கிளம்பியது. அதனால், அகமதாபாத் வருவாய் புலனாய்வுத் துறையினர், சென்னை வருவாய் புலனாய்வுத் துறையின் உதவியுடன் மஸராட்டி காரைத் தேடி வந்தனர். கடந்த 21-ம் தேதி மயிலாப்பூரை சேர்ந்த பஷீர் அகமது என்பவரிடம் இருந்து, அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்குப் பின்னர்தான், விவகாரம் வேறு ரூட்டில் விஸ்வரூபம் எடுத்துப் பயணிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு காரின் நம்பர் ஜிழி06 ணி 0001. 'இதை மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பயன்படுத்தினார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர்தான் அவருக்கு இந்த காரை பரிசாகக் கொடுத்தார்!’ என்று முதலில் செய்தி கசிந்தது. ஏற்கெனவே காலாவதி மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரம் ஒரு பி.எம்.டபிள்யூ. காரை பரிசாகக் கொடுத்ததாக, இதே சபரீசன் மீது புகார் கிளம்பியது நினைவு இருக்கலாம்.
நாம் சென்னை தி.நகரில் இருக்கும் மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்துக்கு சென்றபோது, அந்த காரின் நம்பர் பிளேட்டைக் கழற்றி எடுத்துவிட்டார்கள். யாரும் அதை படம் எடுக்க முடியாதபடி காரை கவர் போட்டு மூடி இருந்தார்கள். இந்த கார் விவகாரம், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட, 'கருணாநிதி குடும்பத்தில் யார் யார், என்னென்ன கார்களை பயன்படுத்துகிறார்கள், அவற்றின்நம்பர்கள் என்ன என எல்லா விவரங்களும் எனக்கு உடனடியாகக் கொடுங்கள்!’ என உளவுத் துறையிடம் கேட்டு இருக்கிறார். கருணாநிதி குடும்பத்தினரிடம் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சொகுசு கார்கள் இருக்கின்​றனவாம். மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி 'ஹம்மர்’ சொகுசு காரை பயன்படுத்துகிறார். கருணாநிதியின் பயணத்துக்கு என்று 'லம்போகினி,’ 'ஆஸ்டன் மார்டின்,’ 'மாடிஃபைடு பென்ஸ்’ ஆகிய மூன்று கார்கள் உள்ளன. கருணாநிதி பெரும்பாலும் பென்ஸில்தான் பயணிக்கிறார். இந்த காரில், ஏ.சி. காற்று கீழ்ப்புறத்தில் இருந்து வருவது ஸ்பெஷல். 'கருணாநிதியின் சொந்தபந்தங்கள் பயன்படுத்தும் அனைத்து சொகுசு கார்களுக்கும் முறையாக வரி கட்டப்பட்டு உள்ளதா?’ என்று அதிகாரிகள் இப்போது தீவிர விசாரணையில் குதித்து இருக்கிறார்கள்.
இதனிடையே தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கார் சபரீசன் பயன்படுத்தியது அல்ல. உதயநிதி ஸ்டாலின்தான் பயன்படுத்தினார். அதற்கான வீடியோ ஆதாரம் ஒரு தனியார் தொலைக்காட்சி வசம் உள்ளது என்றும் இன்னொரு பரபரப்பு கிளம்பி இருக்கிறது.
முன்னணி கார் நிறுவனத்தின் மேலாளர் ஒருவரிடம் பேசியபோது, ''இந்தியா முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் முறையாக வரி கட்டாமல் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. அதைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அகமதாபாத்தைச் சேர்ந்த கார் டீலர் ஒருவர் அங்கு உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன் தொடர்ச்சியாகவே, தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி பயன்படுத்திய ஹம்மர் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதே ஆண்டில் ஜோதிபாசுவின் மகன் சந்தன்பாசுவின் உயர் ரக காரும் சிக்கியது. 2006-ல் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் மகன் அஜய் சௌதாலா பயன்படுத்திய 'டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிரேடோ’ கார் வரி ஏய்ப்பு காரணமாக பறிமுதல் செய்யப்பட்டது. சஞ்சய் பண்டாரி என்ற கார் கடத்தல் மன்னன் அப்போது கைது செய்யப்பட்டான். இந்தியா முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான கார்கள் சிக்கி இருக்கின்றன. வெளிநாட்டுப் பயணிகளுக்காக இந்த காரை டிராவல்ஸ் நடத்துபவர்கள் இறக்குமதி செய்தால், வரி விலக்கு உண்டு. இதைப் பயன்படுத்தி காரை இறக்குமதி செய்யும் கும்பல், பிறகு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்குப் பெரும் தொகைக்கு விற்றுவிடுகிறது. அரசாங்கம் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தினால் இது போன்ற வரி இழப்பைத் தடுக்க முடியும்!'' என்றார்.
மத்திய வருவாய் புலனாய்வு கூடுதல் இயக்குநர் (சென்னை) ராஜனிடம் பேசினோம். ''சென்னையில் நாங்கள் பறிமுதல் செய்த சொகுசு கார் பஷீர் அகமது என்பவருக்குச் சொந்தமானது. அவரது மயிலாப்பூர் வீட்டில்தான் அதைப் பறிமுதல் செய்தோம். இதற்கு முன்பு அந்த காரை அரசியல் பிரபலங்கள் யாரும் பயன்படுத்தினார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. எங்களின் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும்...'' என்றார்.
இது குறித்து, சபரீசனைப் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும், பதில் பெற இயலவில்லை! அவர் விளக்கம் வந்தால் வெளியிடத் தயாராக உள்ளோம்.
- தி.கோபிவிஜய்


Source - Vikatan Magazine

தயாநிதிமாறன்.. ப.சிதம்பரம்.. அடுத்து?

தயாநிதிமாறன்.. ப.சிதம்பரம்.. அடுத்து?

சுவாமியின் குற்றப் பத்திரிகை
னதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, அடுத்த ஏழு வாரங்களுக்கு கௌரவப் பேராசிரியராக அவதாரம் எடுக்கப்போகிறார். (அப்பாடா! ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கியவர்கள் பெருமூச்சு​விடலாம்!)
ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில், சம்மர் கோர்ஸ் நடத்துவதற்காக சுவாமி செல்வது வழக்கம். அதற்காக, கடந்த புதன்கிழமை கிளம்பியவரை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தோம்.
''2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறதே? அதில் இடம் பெறப்போகும் வி.ஐ.பி-க்கள் பட்டியல் பற்றி சொல்லுங்​களேன்?''
''இந்தக் கேள்விக்கு என்னுடைய '2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம்' புத்தகத்தில் விரிவாகப் பதில் எழுதி இருக்கிறேன். அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களின் பினாமிகள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இந்த ஊழலில் சிக்கி இருக்கிறார்கள். இந்த வி.ஐ.பி-க்கள் எல்லோரையும் சினிமாவில் வருவதுபோல், ஒரே ஃப்ரேமில் கைது செய்துவிட முடியாது. இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே மூன்றாவது
குற்றப் பத்திரிகையில் இடம்பெறுவார்கள். எனக்குக் கிடைத்த தகவல்படி, அடுத்தடுத்து 11 குற்றப் பத்திரிகைகள் வரை தாக்கல் ஆகப்போகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் விரைவில் சிக்குவார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். அடுத்து சிக்கப்போகிறவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இவருக்குப் பிறகு, மிகப் பெரிய பெயர் வரும். அது யார் என்று இப்போது நான் வெளியே சொல்ல மாட்டேன்!''
''அவர் தமிழகத்தைச் சேர்ந்தவரா?''
''நிச்சயமாகத் தமிழகத்தில் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க-வில் முக்கியமானவர்கள் எல்லாம் சிக்கிவிட்டார்கள். கருணாநிதிக்கு ரொம்ப வயதாகி​விட்டது. அவரை எந்த முறையில் கொண்டு​வரலாம் என்று ஆலோசித்து வருகிறோம். தயாளு அம்மாள், சாட்சிகள் வரிசையில் வருகிறார். ராஜாத்தி அம்மாளின் பெயரும் இருக்கிறது. இவை எல்லாம் பெரிய சமாசாரம் இல்லை. அதைவிட உயர் பதவியில் இருப்பவர்களை வளைத்துப் பிடிப்பதுதான் விஷயம். ஸ்பெக்ட்ரம் உரிமத்தால் பலன் பெற்றவர்கள் என்கிற பட்டியலும் தயார் ஆகும்போது, அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சிலர் சிக்கலாம். கடைசியில், சோனியா காந்தி பெயரும் வரும். இவர்களை எப்போது வழக்கில் கொண்டுவருவேன் என்பதை நான்தான் முடிவு செய்வேன்(!). ஏனென்றால், இதை சி.பி.ஐ. செய்யாது. ஆட்சியில் இருப்பவர்களை அது நெருங்காது. காலம் வரும்போது, நான் நீதிமன்றம் மூலம் இதே சி.பி.ஐ-யை வைத்து சோனியாவை விசாரிக்கச் சொல்வேன். சோனியாவுக்கு இரண்டு தங்கைகள். அனுஷ்கா, நாடியா. இருவரும் அவரவர் கணவரைவிட்டுப் பிரிந்தவர்கள். இருவரும் அடிக்கடி துபாய்க்குப் போய் வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் டீலிங்கில் வந்த பணத்தை இவர்கள் சீனாவில் 'மக்காவ்' என்கிற இடத்தில் உள்ள வங்கியில் பதுக்கிவைத்து இருக்கிறார்கள். எவ்வளவு தெரியுமா? 35 ஆயிரம் கோடி. சுவிஸ் வங்கியில்கூட பணம் போட்டு இருப்பவர் ஒரு கிரிமினல் என்று தெரிந்தால், அவரது முதலீடு விவரங்களை வெளியே சொல்லிவிடுவார்கள். மக்காவ்வில் இந்த வசதி இல்லை. என்ன குற்றம் செய்து இருந்தாலும், அங்கு இருந்து ஒரு 'பிட்' தகவலைக்கூட பெற முடியாத அளவுக்கு சீக்ரெட் பாங்க் அது. அதன் விவரங்கள் விரைவில் வெளிவரப்போகிறது.
மத்தியில் நிதித் துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயித்த கமிட்டியில் ஒருவராக இருந்த ப.சிதம்பரம், ஆ.ராசாவுடன் இணைந்துதான் முடிவு எடுத்து இருக்கிறார். இதை ஒரு ஃபைலில் ஆ.ராசாவே குறிப்பிட்டு இருக்கிறார். (அதன் நகல்களை நம்மிடம் காட்டுகிறார்) பல பேட்டிகளில் ஆ.ராசாவும், சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதற்கு, பத்திரிகை 'கட்டிங்'குகளே சாட்சிகள். இப்படி இருக்கும்போது, ஆ.ராசா மட்டும் திகார் ஜெயிலில் இருக்க... இன்னொரு காரணகர்த்​தாவான அவர் மட்டும் மத்திய மந்திரியாக நீடிப்பது எந்த வகையில் நியாயம்? நிதித் துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது வழக்குப் போட பிரதமரிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அந்தத் துறையில் இருந்து சிதம்பரம் மாற்றப்பட்டுவிட்டார். ஆகவே, எனக்கு இப்போது பிரதமரின் அனுமதி தேவைப்படாது. இது தொடர்பாக நான் நீதிமன்றத்தில் போட்ட வழக்கு ஆகஸ்ட் 24-ல் வருகிறது. இதோ... நான் உங்களிடம் காட்டும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். அவற்றைப் பரிசீலித்து நல்ல முடிவு சொல்வார்கள் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன். சி.பி.ஐ. விசாரணை நடக்கும் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி, கோ-அக்யூஸ்டாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்கிற விவாதம் வரப்போகிறது. அதுவரை பொறுத்திருங்கள்!'' என்று சிரித்தார்.
இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் புயல் அடங்​காதோ!
- ஆர்.பி.


Source - Vikatan Magazine

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை! - மசாஜ் மாஃபியாக்கள்... பெண்கள் உஷார்

ச்சீச்சீ 'சிங்காரி' சென்னை!

மசாஜ் மாஃபியாக்கள்... பெண்கள் உஷார்
'விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால், அதை சட்டபூர்வமாக ஆக்கிவிட வேண்டியதுதானே?’ - விதவிதமாக நடக்கும் விபசார யுக்திகளைப் பார்த்து வெறுப்பின் உச்சத்தில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் எழுப்பிய கேள்வி இது! காருக்குள் விபசாரம், பாருக்குள் விபசாரம், மசாஜ் சென்டரில் விபசாரம் என சிங்காரச் சென்னை, இப்போது 'சிங்காரி’ சென்னையாகவே மாறிவிட்டது.
 இதில் மசாஜ் சென்டர்களில் நடக்கும் விபசாரம் எல்லை மீறிப் போவதாகக் கவலை கொள்கிறார்கள், உண்மையான மசாஜை எதிர்பார்த்துச் செல்லும் வாடிக்கையாளர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஒருவரின் கணவர் சென்னையில் நடத்திவந்த மசாஜ் சென்டரில் வாடிக்கையாளர்களுடன் விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்துவதாக தாய்லாந்தைச் சேர்ந்த 15 பெண்கள், போலீஸில் புகார் அளித்தார்கள். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு, வளசரவாக்கத்தில் 'மசாஜ் சென்டரில் விபசாரம்’ என்று புகார் வந்ததை அடுத்து, அங்கு போலீஸார் ரெய்டு நடத்தி விபசாரத் தொழில் செய்த பெண் தாதா ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் கோடம்பாக்கத்தில் 'தீர்க்காயுசு ஆயுர்வேதா மசாஜ் சென்டர்’ என்ற பெயரில் கேரளப் பிரமுகர் ஒருவர் நடத்திய மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களை போலீஸ் கைது செய்தது. இப்படி கைது செய்யப்பட்டவர்களில் கணிசமான பெண்கள் குடும்பப் பெண்கள் என்பதும், குடும்பத்துக்குத் தெரியாமல் ஈடுபட்டார்கள் என்பதும் அதிர்ச்சி தரும் தகவல்!
இந்த கும்பலிடம் குடும்பப் பெண்கள் எப்படிச் சிக்குகிறார்கள் என்று விபசாரத் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''சென்னையில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு பியூட்டி பார்லர் என்பது அத்தியாவசியமாகிவிட்டது. பழக்கம் இல்லாத பெண்களும், உடன்பழகுபவர்களின் சிகை மற்றும் மிகை அலங்காரங்களைக் கண்டு தங்களையும் அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். முதலில் 'ஐ-ப்ரோ’ சீர் செய்துகொள்ள அங்கு செல்லத் துவங்கும் பெண்களை பியூட்டி பார்லர் நடத்தும் பெண்கள், பேசிப் பேசியே மசாஜ் செய்து கொள்வது வரைக்கும் இழுத்து வந்துவிடுவார்கள். அடுத்த கட்டமாக அக்கறையுடன் பேசுவது போல் அந்தப் பெண்களின் குடும்ப உள் விவகாரங்களைக் கறந்துவிடுகிறார்கள்.
தொடர்ந்து, 'மசாஜ் செய்ய கற்றுக் கொண்டால் கைத் தொழில் கற்றுக் கொண்டது போல இருக்கும்; தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்’ என்று ஆசைகாட்டி 'பார்ட் டைம்’ தொழிலுக்கும் இழுத்து வந்துவிடுகிறார்கள். முதலில் சில ஆயிரங்களைக் கண்ணில் காட்டுபவர்கள், பின்பு குறிப்பிட்ட நபருக்கு 'ஸ்பெஷல்’ மசாஜ் செய்தால் கணிசமான தொகை கிடைக்கும் என்று மனதைக் கரைத்து ஒரு கட்டத்தில், 'இது எல்லாம் தப்பே இல்லை’ என்று விபசாரத்தில் ஈடுபடுத்தி விடுகிறார்கள். தினசரி கஸ்டமர் வரும் நேரத்துக்கு மட்டும் இரண்டொரு மணி நேரம் வந்து போனாலே 2,000 முதல் 5,000 வரை கிடைப்பதால் சபலப்படும் சில குடும்பப் பெண்களும் இதில் சகஜமாகி விடுகிறார்கள்.
சமீபத்தில் வடபழனியில் ஒரு மசாஜ் சென்டரில் ரெய்டு நடத்தியபோது சிக்கிய ஆறு பெண்களில் நான்கு பேர் குடும்ப பெண்களே. கையும் களவுமாகப் பிடித்த​போது அவர்கள், எங்கள் காலில் விழுந்து, 'வீட்டுக்கு இந்த விஷயம் தெரிந்தால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறுவழி இல்லை...’ என்று சொல்லி கழுத்தில் இருந்த தாலிச் சங்கலி வரைக்கும் கழற்றிக் கொடுக்க முன்வந்தார்கள். குடும்பமே நாசமாகிவிடும் என்பதால், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தோம். இவ்வளவுக்கும் அவுங்க எல்லோருமே நன்றாக படித்த பெண்கள்!'' என்றார் அவர்.
''சென்னையில் வெளியாகும் ஒரு ஆங்கில நாளிதழின் இணைப்பு இதழில் மட்டும் தினசரி சுமார் 200-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் விளம்பரங்கள் வெளி​யாகிறது. அவற்றில் பாதிக்குப் பாதி விபசாரத்தில் ஈடுபடுபவைதான்...'' என்கிறார் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் உயர் அதிகாரி. வங்கியில் மசாஜ் சென்டர் மற்றும் பியூட்டி பார்லர் நடத்த கடன்வாங்கிய அந்த சென்டர்கள் மட்டும், மாதந்தோறும் மிகச்சரியாக கடன் தொகையை செலுத்தி விடுகின்றன. இன்னும் சிலரோ கடன் காலம் முடியும் முன்பே கடனை கச்சிதமாகக் செலுத்தி விட்டார்களாம். 'எப்படி இப்படி?’ என்று அந்த அதிகாரி விசாரித்தபோதுதான் 'செய்யும் தொழிலே வேறு’ என்ற விவகாரம் அந்த அதிகாரிக்குத் தெரியவந்து... 'இத்தனை நாளும் விபசாரத் தொழிலுக்கா கடன் கொடுத்தோம்?’ என்று நொந்து போனார் அவர்!
மசாஜ் செய்வதில் ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ் என இரு வகை உண்டு. இதில் ஆயில் மசாஜுக்குதான் மவுசு அதிகம். அதிலேயே ஆயுர்வேதிக் ஆயிலில் ஆரம்பித்து வயாக்ரா ஆயில் வரை ஏகப்பட்ட வெரைட்டிகள் உண்டாம். மசாஜ் செய்துகொள்ளும் முன்பு இரண்டு பெண்கள் வாடிக்கையாளரின் ஒட்டு மொத்தத் துணி​யையும் உருவி, 'பப்பி ஷேம்’ ஆக்கிவிடுவார்கள். இடுப்பில் கையளவு மட்டுமே ஒரு வெள்ளைத் துணியை கட்டி விடுகிறார்கள். அவர்கள் தேய்க்கும் தேய்ப்பில் அந்தத் துணியும் சிறிது நேரத்தில் காணாமல் போய் விடும். மசாஜின் முடிவில், 'வேறு எதுவும் வேண்டுமா?’ என்று கேட்கிறார்கள். அந்த சமயத்தில், 'சரி’ என்று சொல்வதைத் தவிர வாடிக்கையாளருக்கு வேறு வழி இருக்காது. மசாஜுக்கு சுமார் 1,500 தொடங்கி 5,000 வரையும் விபசாரத்துக்கு 5,000 முதல் 10,000 வரையும் சுமார் ஒரு மணி நேரத்தில் கறந்துவிடுகிறார்கள்!
சபலப்படும் ஆண்களைவிட, குடும்பப் பெண்களே இதில் அதிகம் இழப்பவர்களாக இருக்கிறார்கள், உஷார்!
- நமது நிருபர்

Source - Vikatan Magazine