Thursday, August 18, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள்! - பொய் சொல்லப் போறேன்...பொய் சொல்லப் போறேன்...!

ரொமான்ஸ் ரகசியங்கள்!

பொய் சொல்லப் போறேன்...பொய் சொல்லப் போறேன் !
ஓவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
ஆண் - பெண் உறவில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. 'நன்மை விளையும் என்றால்... பொய் சொல்வதில்கூடத் தவறில்லை' என்கிறார் திருவள்ளுவர்.
லதா - சஷாங் ஜோடி, திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், தங்களின் ஃப்ளாஷ்பேக் காதலைப் பற்றி பரஸ்பரம் பிரஸ்தாபித்து, திருமணமே நின்று போன கதையை, கடந்த இதழில் பார்த்தோம். அதன் மூலம் வரும் நீதி... சில உண்மைகளைக் கல்லறைகளைத் தோண்டி வெளியெடுப்பதில் பயன் ஒன்றும் இல்லை என்பதுதான்!
அப்படியென்றால் 'ஆண் - பெண் உறவில் வெளிப்படைத் தன்மை இருக்கவே கூடாதா... அதைச் சொன்னால் பிரச்னைதான் ஏற்படுமா?' என்பது போன்ற கேள்விகள்... ஏன், கோபமேகூட எழலாம். ஆனால், பலநூறு ஆண்டுகளாக, வழிவழியாக புகட்டப்பட்டிருக்கும் பாடங்களின் வழி நடக்கும் மானிட சாதியின் மிச்சம்தான் நாம் என் பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் முதலில் நமக்கு வேண்டும்.
'அந்தரங்கம் புனிதமானது’ என்பார்கள். ஆனால், அது ரகசியமானது என்பது மட்டும்தானே சரியானதாக இருக்கும். அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது மானுட விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிலம், வீடு, கார் போல்... சக மானுட துணையும் ஒரு நுகர்பொருள் ஆகிவிட்டது.
தன் மனைவியின் பழைய காதல் வாழ்க்கையை அறிந்துகொண்டு அதைப் பெருந்தன்மையோடு அணுகும் அறிவு முதிர்ச்சியான கணவன் பற்றிய பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’, 'அந்த ஏழு நாட்கள்’ போன்றவை அந்த ரகம். 'அவள் அப்படித்தான்’, 'அவர்கள்’ போன்ற படங்கள் பெண்களின் காதல் வாழ்க்கையை மிக முற்போக்காகக் காட்டிய உன்னதமான படங்கள். தமிழ் இலக்கியங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனையோ கதைகள் அப்படி வந்திருக்கின்றன.
உலகின் வெவ்வேறு திசைகளில் ஆண், பெண் உறவு மாற்றம் என்பது காட்டாறுபோல் பாய்ந்து ஓடிக் கொண்டுஇருக்கிறது. அந்த டிரெண்டை புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பின்னோக்கித் தள்ளப்படுவோம் என்பது வரலாற்று உண்மை.
சரி, மேட்டருக்கு வருவோம். ஆண் - பெண் உறவில் எதை வெளிப்படையாகச் சொல்லலாம்? எதைச் சொல்லக்கூடாது என்பது ஒரு கலை.
கணவன் - மனைவி இருவருமே ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொள்ளக்கூடிய புரிதல் கொண்ட துணையா என்பதுதான் அது. அவர் அப்படிப்பட்ட மிகச்சரியான துணை என்பதில் நீங்கள் 'கன்வின்ஸ்’ ஆகிவிட்டால்... உங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றிய எந்த உண்மைகளையும் சுதந்திரமாகச் சொல்லலாம். அதேநேரம், அவர் தொட்டாற்சிணுங்கி டைப், மிகவும் பிற்போக்கான சிந்தனைகள் கொண்டவர் என்பது புரிந்தபின், அவரிடம் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. இது உங்களின் தவறு அல்ல. அதனால் குற்ற உணர்ச்சி எதுவும் தேவை இல்லை.
'உண்மைகளைக்கூட சுதந்திரமாகப் பேச முடியாத ஒரு உறவு தேவைதானா?' என்கிற ஒரு கேள்வி, ஒரு நிலையில் உங்களுக்கு ஏற்படக்கூடும். இது வெறும் காதல் ஃப்ளாஷ்பேக் என்கிற குறுகிய வட்டத்தோடு நிறுத்திவிட முடியாது. இந்த சிந்தனை, பூமி அதிர்ச்சி சுழல்போல பல திசைகளையும் பாதிக்கக் கூடியது.
உதாரணமாக... நித்யாவின் கதை. சென்னையைச் சேர்ந்த மிடில் கிளாஸ் பெண் அவள். ஒரே ஒரு ஹால், சமையலறை கொண்ட சிறிய வீடு. அப்பா அரசாங்க வேலையில் குமாஸ்தா. அம்மா குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் எளிய ஹவுஸ் வொய்ஃப். இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. கம்ப்யூட்டர் அறிவில் தேர்வுபெற்று ஒரு நல்ல வேலையில் சேர்ந்தாள் நித்யா.
ரவிச்சந்திரன் என்றொரு வாலிபன் அவள் வாழ்வில் வந்தான். ஆரம்பத்தில் மிகவும் பெருந்தன்மையான ஆண்மகன் போன்ற தோற்றத்தைக் காண்பித்தான். காதல் கவிதைகள் பேசினான். தன் ரத்தத்தால் காதல் கடிதங்கள் எழுதினான். நித்யாவும் காதல் வயப்பட்டாள். ரிட்டையர்ட் ஆகிவிட்ட நிலையில், நித்யாவின் வருமானத்தை மனதில் வைத்து குடும்பத்தைக் கொஞ்சமேனும் கரை சேர்த்துவிடலாம் என்று நினைத்த தந்தை, தடுமாறினார். ஆனாலும், மகளுக்குத் திருமணம் செய்து வைப்பது கடமை என்பதை உணர்ந்து, ஏகப்பட்ட கடன் வாங்கி அவள் விருப்பப்படியே திருமணத்தை நடத்தினார்.
பெற்றோரின் விருப்பத்துக்காக வரதட் சணை பெற்றுக்கொண்ட ரவிச்சந்திரனை ஜீரணிக்க முடியவில்லை. என்றாலும், பொறுத்துக் கொண்ட நித்யாவுக்கு, ரவிச்சந்திரனின் முழு நிஜமுகம் பிற்பாடு தான் மெள்ள தெரிய ஆரம்பித்தது. 'நான், என் குடும்பம், என் அப்பா, என் அம்மா’ இதுதான் அவனுடைய எளிமையான ஃபிலாசபி. நித்யாவின் குடும்பத்தைத் தன் குடும்பமாக என்றுமே அவன் ஏற்றுக் கொண்டதில்லை. தவிர்க்க முடியாது சந்திக்க நேரிட்டால்... போனால் போகிறது என்கிற தொனியிலேயே பேசி கட் செய்வான்.
கணவனின் குணம் கண்டு அதிர்ந்தாலும், எதிர்காலத்தை மனதில் கொண்டு அப்படியே ஏற்றுக் கொண்டாள் நித்யா. தன் தங்கைகளின் பள்ளிக்கூட ஃபீஸுக்குக்கூட கணவனுக்குத் தெரிந்து உதவ முடியவில்லையே என்று நொந்து கொண்டவள், ஆபீஸில் லோன் போட்டு ஈடு செய்தாள். கணவனுக்குத் தெரிந்தால் ரணகளமாகும் என்பதால்... மறைத்தாள். இந்த நிகழ்வுகள் நீண்ட தொடர்கதை ஆகிவிட்டது. இன்று தன் குடும்பத்துக்குப் பல வகைகளில் உதவி செய்கிறாள் நித்யா. தன் பெற்றோரை, உடன் பிறந்தவர்களை மிகவும் அன்போடு கவனித்துக் கொள்கிறாள். ஆனால், எதுவுமே கணவனுக்குத் தெரியாமல்தான்.
இதையெல்லாம் 'பொய்' என்று சொல்வதா? 'பொய்' என்கிற வார்த்தை இதற்குப் பொருந்துமா? இல்லவே இல்லை. பெருந்தன்மையற்ற ஒரு கணவன் வாய்த்ததால், எதற்காக இப்படிப்பட்ட உன்னதமான விஷயங்களை அவனிடம் சொல்லி தன் குடும்பத்தின் அமைதியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற புரிதலால் நித்யா எடுத்த முடிவு இது.
அற்புதமான ஆண் - பெண் உறவில் 'பொய்மை' என்கிற இத்தகைய களை தோன்றுவதற்குக் காரணம், 'நல்லவர்'கள் அல்ல. பிற்போக்குத்தனமான பழமைவாதிகள்தான்!
- நெருக்கம் வளரும்...

Source - Vikatan Magazine

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 - கணக்கில் புலி... மொழியில் கிளி !

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

கணக்கில் புலி... மொழியில் கிளி !
 குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
''என்டமாலஜி (Entomology)என்பது எதைப் பற்றிய படிப்பு?'' என்று டீச்சர் கேள்வி கேட்க, ''பூச்சிகளைப் பற்றிய படிப்பு!'' என்றான் விகாஸ்.
''பேத்தாலஜி (Pathology) என்பது எதைப் பற்றிய படிப்பு?'' என்ற கேள்விக்கு ''நோய்களைப் பற்றிய படிப்பு!'’ என்று 'டக்’கெனப் பதில் சொன்னாள் திலகா.
''அக்ரானமி (Agronomy)என்றால்..?''
''உழவுத் தொழில் பற்றிய படிப்பு!'' என்றான் ரவி.
கேள்வி கேட்டுக் கொண்டிருந்த டீச்சர், ''எல்லாரும் 'டக்டக்’னு பதில் சொல்றாங்க. ஜி.கே. காம்படிஷனுக்கு நீயும்தானே ஒரு வாரமா தயார் பண்ணினே? ஏன் ஒரு கேள்விக்குக்கூட பதிலே சொல்லல..?'' என்று கோபமாகக் கேட்க, ''மிஸ்... என் மெமரியில எதுவுமே இருக்க மாட்டேங்குது...'' என்று பரிதாபமாகப் பதில் சொன்னான் நந்தன்.
நம்மில் சிலர் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது மனப்பாடம் செய்த 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி’ என்ற மாணிக்கவாசகரின் பாடலை, இன்றும்கூட அப்படியே சொல்வோம். இது 'நீண்டகால நினைவாற்றல் திறன்’ (Long term memory). . மாலையில் படித்து, காலையில், 'ஐயோ மறந்து போச்சே’ என்று புலம்பினால்... அது 'உடனடியாக மறையும் நினைவாற்றல் திறன்’ (Short term memory). பரீட்சைக்கு மட்டும் படித்து, அந்த வருட பரீட்சையோடு மறந்து போனால், அது 'குறைந்த கால நினைவாற்றல் திறன்’ (Mid term memory).
அடிப்படையில், ஒரு மாணவனுக்கு தான் படிப்பதை நினைவு செல்களில் சேகரித்து வைத்திருந்து, எப்போது தேவைப்படுகிறதோ... அப்போது அதை முழுமையாக மீட்டெடுக்கும் கலையும் திறமையும் கைவரப் பெற்றிருந்தால், அவன் எப்போதும் நம்பர் ஒன்தான்! படிக்கிற பாடத்தை... என்ன பாடம் படிக்கிறோம், அது எதைப் பற்றியது, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எல்லாம் முழுமையாகப் புரிந்து படித்தால்தான் அது மனதில் நிற்கும். பெரும்பாலான குழந்தைகள் அப்படிப் படிப்பது இல்லை. உதாரணமாக, இயற்பியலில் 'பாஸ்கல் விதி’ பற்றிப் படிக்கிறார்கள் என்றால்... புத்தகத்தில் 'பாஸ்கல் விதி’ என்று எழுதப்பட்டிருக்கும் இரண்டு, மூன்று வரிகளைத் திரும்பத் திரும்ப சொல்லி மனப்பாடம் செய்கிறார்களே தவிர, அதனை முழுமையாகப் புரிந்து படிப்பதில்லை.
நினைவாற்றலை அதிகப்படுத்தக் கூடிய வழிமுறை... புரிந்து படிப்பது, படித்ததை நினைவு செல்களில் சேகரித்து வைத்து, தேவைப்படும் தருணம் மீட்டெடுப்பது. இதனை வளர்ப்பதற்கு மாணவர்கள் என்ன செய்யலாம்? அந்த வித்தை மிகமிக எளிமையானதுதான். வகுப்பில் டீச்சர் பாடம் எடுக்கும்போதே கருத்தூன்றி கவனித்தால், அது முழுமையாக புரிந்து நினைவு செல்களில் தங்கிவிடும்... காலகாலத்துக்கும்! வகுப்பில் நடத்திய பாடத்தை 24 மணிநேரத்துக்குள் மீண்டும் நினைவுபடுத்தி, நினைவு செல்களில் பதிய வைக்க வேண்டும். இதனை பின்பற்றுகிற மாணவர்கள்... பரீட்சையில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் ஜெயிக்கிறார்கள்!
''என் மகள் கணக்குல ஃபார்முலா, தியரம்னு எல்லாத்தையும் அப்படியே நினைவுல வெச்சுக்கிறா. ஆனா... இங்கிலீஷ் கிராமர் சுட்டுப் போட்டாலும் வரமாட்டேங்குது. ஆக்டிவ் வாய்ஸ், பாஸிவ் வாய்ஸ் வித்தியாசம் தெரியமாட்டேங்குது, டென்ஸ் பத்தி திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்து எனக்கு அலுத்துப் போச்சு’'
- ஒரு பாடத்தில் 'குட்’, இன்னொரு பாடத்தில் 'பேட்’ என்று தங்கள் பிள்ளைகள் இருப்பது பற்றி, இப்படி புலம்பும் பெற்றோர்கள் இங்கே நிறைய. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொருவிதமான இன்டெலிஜென்ஸ் இருக்கும். 'லாஜிக்கல் இன்டெலிஜென்ஸ்’ அதிகமிருக்கும் குழந்தை... கணக்கில் புலி. 'லிங்குஸ்டிக் இன்டெலிஜென்ஸ்’ இருக்கும் குழந்தை... மொழிகளில் கிளி! இந்த 'மல்டிபிள் இன்டெலிஜென்ஸ்’ பற்றி ஏற்கெனவே உங்களிடம் பேசியிருக்கிறேன்... நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் (எங்களுக்கேவா என்கிறீர்களா?!).
குழந்தைகளுக்கு எந்த இன்டெலிஜென்ஸ் அதிகமிருக்கிறதோ... அதில் அவர்களை 'கிங்’ என்று மாற்றுங்கள். ஸ்போர்ட்ஸ் இன்டெலிஜென்ஸ் இருக்கிற குழந்தைக்கு, மியூசிக்கல் இன்டெலிஜென்ஸும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை புரிந்து கொண்டால்... எந்த சப்ஜெக்டில் உங்கள் குழந்தையின் விருப்பமும் விருப்பமின்மையும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உங்களின் அந்தப் புரிதலில் தான் குழந்தை 'நம்பர் ஒன்’ ஆவது ஒளிந்து இருக்கிறது.
குழந்தையின் திறமை ஒளிர்வதும்... ஒழிந்து போவதும் அதன் நினைவு ஆற்றல், இன்டெலிஜென்ஸ், ஐ.க்யூ ஆகியவற்றைப் பொறுத்தது.
- வளர்ப்போம்...

Source - Vikatan Magazine

கப்சிப் விஜயகாந்த்

கப்சிப் விஜயகாந்த்

அம்மா மீது பயமா? அட்றா சக்கை பிளானா?
ப.திருமாவேலன்
படம் : வி.செந்தில்குமார்
''தேர்தல் முடிந்து முடிவும் அறிவிக்கப்பட்ட பிறகு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மாண்புமிகு முதல்வராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் உட்காருவார்கள். அவருக்கு எதிர் வரிசையில் மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவராக புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் அமர்வார்கள்!'' என்று கோவையில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடையில் ஜெயலலிதா முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னார். அவர் சொன்னதுதான் நடந்தது. ஜெயலலிதா, முதல்வர் ஆனார். விஜயகாந்த், எதிர்க் கட்சித் தலைவர் ஆனார். முதல்வர் செயல்படுகிறார். ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் செயல்படுகிறாரா? இதுதான் இன்றைய அரசியலின் பிரதானக் கேள்வி!
 கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது, போயஸ் கார்டனில், சிறுதாவூரில், கொடநாட்டில் ஜெயலலிதா நிம்மதியாகப் பதுங்கிக்கொண்ட ரோலை இப்போது விஜயகாந்த் கைப்பற்றிவிட்டதாகவே தெரிகிறது.  எதிர்க் கட்சித் தலைவர் பதவி என்பது சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், அது முதலமைச்சருக்கு இணை யான பொறுப்பு. சபையில் யார் பேசும் போதும் முதல்வர் குறுக்கிடலாம். முதல்வர் எழுந்தால், பேசிக்கொண்டு இருப்பவர் உடனடியாக உட்கார வேண்டும். அதைப் போலத்தான் எதிர்க் கட்சித் தலைவரும் யார் பேசும்போதும் குறுக்கிடலாம். அவர் எழுந்தால், மற்றவர்கள் உட்கார்ந்து விடுவார்கள். இன்னும் சொன்னால், முதல்வர் பேசும்போதும் தயக்கம் இல்லா மல் குறுக்கிட்டுக் கேள்விகள் கேட்கக்கூடிய அதிகாரம் எதிர்க் கட்சித் தலைவருக்கு உண்டு. அவ்வளவு அதிகாரம் பொருந்திய பதவியை விஜயகாந்த் 'சும்மா’ வைத்திருப் பதன் சூட்சுமம் என்ன?
சட்டசபையில் மிக முக்கியமான நிகழ்வு, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது. அன்றைய தினம் விஜயகாந்த் சபைக்கே வரவில்லை. அடுத்தடுத்த நாட்கள் நடந்த விவாதங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. எதிர்க் கட்சித் தலைவர் பேசியே ஆக வேண்டிய அன்று மட்டும் விஜயகாந்த் வந்தார். அன்றும் 'அம்மா’வை விமர்சிக்கவில்லை. பொதுவாகவே, எப்போதும் இலவசங்களை விஜயகாந்த் எதிர்ப்பார். கடந்த ஆட்சியில் கருணாநிதியைக் காய்ச்சி எடுத்ததே இலவசங்களை வைத்துத்தான். 'அரிசி ரெண்டு ரூபாய்க்குக் கொடுத்தா போதுமா? கொழம்புவைக்க இருபத்தஞ்சு ரூபா வேணுமே’ என்று விஜயகாந்த் கேட்ட கேள்விதான் தீயாகப் பரவியது. அதை மறந்துவிட்டு, இப்போது விஜயகாந்த் சொல்வதை வாசியுங்கள்...
''2011-12ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்... ஏழை, நடுத்தர மக்கள் பயனடையும் வகையில், இலவச அரிசி, கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி, கறவை மாடுகள், ஆடுகள், லேப்டாப் கம்ப்யூட்டர், வேட்டி, சேலை என சுமார் 50 இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் இல்லை என்று கூறுவோர், கண் இருந்தும் பார்க்க மறுக்கும் கருத்துக் குருடர்கள் ஆவார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மொழியில் கூற வேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு இந்த பட்ஜெட்டைப் பாராட்டி மகிழலாம். அந்த அளவுக்கு ஏராளமான சலுகைகள் உள்ளன'' என்று விஜயகாந்த் சொல்லச் சொல்ல... பூரிப்பில் முகம் மலர்ந்து கொண்டே இருந்தார் முதல்வர் ஜெயலலிதா!
ஜெ. முதல்வரானதும் ஏற்பட்ட முதலாவதும் பெரியதுமான சறுக்கல் சமச்சீர்க் கல்வி விஷயத்தில் நடந்தது. ஜூன் 4-ம் தேதி இந்த ஆண்டுக்கான படிப்பைத் தொடங்கி இருக்க வேண்டிய பிள்ளைகள், ஆகஸ்ட் 9 வரை என்ன படிப்பது என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டு இருந்தார்கள். தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இந்த விஷயத்தில் கொந்தளித்தன. அ.தி.மு.க. கூட்டணியில் அசைக்க முடியாத வகையில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் போராட்டத்தைத் தயக்கம் இல்லாமல் முன்னெடுத்தது. ஆனால், அப்போதும் விஜயகாந்த் மௌனமாகவே இருந்தார். கேப்டன் டி.வி-யின் மெயிலில் மக்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில்கூட, 'நாங்கள் கேட்டது குதிரை. கருணாநிதி தந்தது கழுதை.’ என்று மையமாகப் பதில் சொன்னார். சமச்சீர்க் கல்வியை அவர் ஆதரிக்கிறாரா, இல்லையா என்பதே தெரியாமல் இருந்தது அந்தப் பதிலில்.
இப்போதுகூட சட்டசபையில் அவர் பேசும்போது, ''சமச்சீர்க் கல்வி என்ற பெயரால் கடந்த தி.மு.க. ஆட்சியில் பொதுப் பாடத் திட்டம் மட்டுமே கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தக் காலகட்டத்தில் வரவேற்கக்கூடியது என்றாலும், அது உண்மையில் சமச்சீர்க் கல்வி கிடைக்க வழி வகுக்குமா என்பதே என் கேள்வி'' என்று கேட்டது... சுற்றி வளைத்து எந்த முடிவுக்குமே வர முடியாத வார்த்தைகளின் கோவையாக அமைந்துவிட்டது.
இயல்பில் விஜயகாந்த், வெள்ளந்தியாகப் பேசக் கூடியவர். அடுக்கு மொழியோ, அலங்கார வார்த்தைகளோ இல்லாமல், மனதில் பட்டதை அப்படியே சொல்லக் கூடியவர். ''என்னை மாதிரிதான் மற்ற கட்சிகளும் பேசணும். வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுனு பேசணும். அவங்களைத்தான் மக்கள் நம்புவாங்க. நான் தயவு தாட்சண்யம் பார்க்காம, நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்காம, மக்களுக்கு இன்னிக்கு என்ன தேவையோ, அதைப்பத்தி நான் மட்டும்தான் பேசுறேன். எனக்கு எந்தப் பயமும் இல்லை'' என்று சொல்லிக்கொண்ட விஜயகாந்த், இன்று அளவுக்கு மேல் அடக்கி வாசிப்பதற்குக் காரணம், உள்ளாட்சித் தேர்தல்!
''உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்போது கேப்டன் செயல்படுகிறார். அது வரை இந்தக் கூட்டணியில் எந்தச் சிக்கலோ, மனஸ்தாபங்களோ ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறார். இன்றைக்கு அ.தி.மு.க-வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி மிக மனப்பூர்வமாக அமைக்கப்பட்டது. அந்த முடிவை எடுப்பதற்கு முன்னால், மிகத் தீவிரமாக தீராத யோசனைகளில் கேப்டன் ஆழ்ந்து இருந்தார். பல்வேறு சாதக பாதகங்களை அலசிய பிறகுதான், கூட்டணியை உறுதி செய்தார். அதன் பிறகு, கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கோபக் கொந்தளிப்பு காட்டியபோதுகூட, கேப்டன் அமைதியாகத்தான் இருந்தார்.
'ஒரு கூட்டணிக்குள் போயாச்சு. கேட்ட தொகுதி கிடைக்கலைனு சொல்லிட்டு வெளியே வந்தால், சில்லியா இருக்கும். அவங்ககிட்ட நம்ம கோரிக்கையை வைப் போம்’னு கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் சாந்தமாகப் பதில் சொன்னார்.
'விஜயகாந்த் வேகமா இருப்பார்னு பார்த்தா, நம்மைவிட பக்குவமா இருக்காரே!’ என்று மார்க்சிஸ்ட் தலைவர் ஒருவர் கமென்ட் அடித்துவிட்டுப் போனார். அதை அடக்கம் என்று சொல்ல முடியாது. கூட்டணி தர்மம், கட்டுப்பாடு என்று சொல்லலாம். இப்போதும் தேவை இல்லாமல் கேப்டன் எந்த கமென்ட்டும் அடிப்பது இல்லை. அதற்காக அவர் ஜெயலலிதாவின் அடிமையாக மாறிவிட்டார் என்று சொல்ல முடியாது. சொல்ல வேண்டிய ஆலோசனைகளைப் பக்குவமாகச் சொல்கிறார்.'' என்று தே.மு.தி.க. வட்டாரம் சொல்கிறது.
''இன்றைக்கு 29 பேர்தான் எம்.எல்.ஏ-க் களாக ஆகி இருக்கிறார்கள். 30 ஆண்டுகளாக கேப்டனுக்காக ரசிகர் மன்றம் நடத்தி எதையும் அனுபவிக்காத எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கட்சி தொடங்கி, கைக் காசைப்போட்டு இன்று வரை கட்சியை வளர்த்து வரும் நிர்வாகிகள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் சின்னப் பதவிகளாவது வாங்கித் தர வேண்டும் என்று விஜயகாந்த் துடிக்கிறார். தேவை இல்லாமல் கூட்டணியில் குழப்பம் செய்து வெளியே வந்தால், என்ன ஆகப்போகிறது? எனவேதான், ஒரு மௌன சாட்சியாக இருந்து அத்தனையையும் தனது கேமராவில் பதிவு செய்துகொண்டு வருகிறார். இதைப் பயம் என்று சொல்கிறார்கள் சிலர். பிளான் என்கிறார்கள் சிலர். எதுவாக இருந்தாலும் விஜயகாந்த்துக்கு நன்மைதான்'' என்றும் அவரது மனம் அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.
ஆக்ஷன் ஹீரோ திடீரெனக் குடும்ப சென்டிமென்ட் படத்தில் நடித்தால் போரடிக்கும் அல்லவா? அப்படித்தான் இருக்கிறது விஜயகாந்த்தின் நடவடிக்கைகள்.
'எப்பவுமே அடிதடியில நடிச்சிட்டே இருந்தா... எனக்கும் போரடிக்காதா?’ என்று விஜயகாந்த் சொல்வார்.
நமக்கு எல்லாமே சினிமாதானே!

Source - Vikatan Magazine

Wednesday, August 17, 2011

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி


'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று ஏங்குபவர்களும் தேடுபவர்களும் எல்லா காலகட்டத்திலும் இருக்கின்றனர். வருடாவருடம் வயது ஏறிக்கொண்டே போவதைப் போல, இப்படித் தேடுவோரின் எண்ணிக்கையானது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவுக்குள் கம்ப்யூட்டர் வந்த புதிதில், அதைக் கற்றுக்கொண்டவர்கள் மிக மிகக் குறைவுதான். ஆனால், அடுத்த சில வருடங்களிலேயே கம்ப்யூட்டரைக் கற்றுக்கொண்டவர்களும் பயன்படுத்துபவர்களும் அதிகரித்தார்களே? இருபது வருடங்களுக்கு முன்பு வரை, வீட்டுக்கு வீடு சைக்கிள் என்றிருந்த நிலை இருந்தது. பிறகு படிப்படியாகப் பல வீடுகளில் மொப்பெட், பைக் போன்ற இரு சக்கர வாகனங்களைக் காணும் நிலை ஏற்பட்டது. சமீப வருடங்களாக சென்னை, கோவை போன்ற தமிழகத்தின் பெருநகரங்களில், சாலைகளில் எல்லாம் கார்களின் ஆக்கிரமிப்புதான்!
ஆசைகளும் தேவைகளும் பெருகிவிட்டதே இதற்குக் காரணம். இவற்றுக்கு நடுவே, உண்பதிலும் உறங்குவதிலும் குழப்பங்கள் வரத்தானே செய்யும்?! குறிப்பாக, சாப்பாட்டு விஷயங்களும் பெருகிவிட்டன. இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பத்தைக் கடந்து ஏகப்பட்ட உணவுகள் எண்ணெய்ப் பதார்த்தங்களாகவும், எளிதில் செரிக்காத உணவுகளாகவும் அறிமுகமாகிவிட்டன.
பணிச் சூழல்கள் ஒருபக்கம், படுத்துத் தூங்குவதில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் இன்னொரு பக்கம், வாகனப் பெருக்கத்தால் ஏற்படுகிற மாசு மற்றொரு பக்கம், அவற்றின் இரைச்சல்களால் ஏற்படுகிற மன உளைச்சல்கள் இன்னொரு பக்கம் எனத் திணறுகின்றனர், அன்பர்கள் பலரும்! இவர்கள் சத்தான உணவையும் நிம்மதியான தூக்கத்தையும் தேடுகின்றனர். ஒருநாள் உணவைக்கூட ஒழித்துவிடலாம். வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு, இரண்டு வாழைப்பழங்களை மட்டும் தின்றுவிட்டு, அன்றைய நாளை நகர்த்திவிடலாம். ஆனால், தூக்கத்துக்கு என்ன செய்வது?
இலவம் பஞ்சு மெத்தையும் ஜிலுஜிலு ஏ.ஸி-யும் இருந்தால் போதுமா? தூக்கம் வரவேண்டாமா? அப்படி நிம்மதியான தூக்கம் வருவதற்கு, ஆரோக்கியமான உடலும் அமைதியான மனமும் அவசியம் இருக்கவேண்டும்தானே?!
அவற்றைத் தரவல்லதுதான் மனவளக்கலைப் பயிற்சி. எத்தைத் தின்றால், பித்தம் தெளியும் எனத் தவிப்பவர்களுக்கான பயிற்சி இது! இந்தப் பயிற்சியை மேற்கொண்டால், உடலும் மனமும் தக்கையாகும்; வறட்டுப் பிடிவாதங்களும் முரட்டுக் குணங்களும் காணாமல் போகும். பிடிவாதம் இல்லையெனில், அங்கே விட்டுக்கொடுத்தல் வந்துவிடும். ஈகோ இல்லாத இடத்தில், அமைதியின் ஆட்சி சிறப்புற நடைபெறும். 'மனமது செம்மையானால்... மந்திரம் சொல்ல வேண்டாம்’ என்றாரே திருமூலர். மனத்தை மயிலிறகென வைத்துக் கொண்டால், மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. மகிழ்ச்சியில் உள்ளம் நிறைந்திருந்தால், அந்த மகிழ்ச்சி வீடெல்லாம் நிறைந்திருக்கும். அதற்கான அனைத்தையும் வழங்கவல்லது, இந்த மனவளக்கலைப் பயிற்சி.
சரி... மனவளக்கலையின், நரம்பு- தசைநார் மூச்சுப் பயிற்சியில் உள்ள ஏழு நிலைகளையும், அதை மேற்கொண்டால் விளையக்கூடிய பலன்கள் சிலவற்றையும் பார்த்தோம்.
இன்னும் சில பலன்களைப் பார்ப்போமா?
ஏழு நிலைப் பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு, அவற்றைச் செவ்வனே கடைப்பிடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்னையில் இருந்து மிக எளிதில் நிவாரணம் பெறலாம். 'அடச்சே..! காலைல என்ன சாப்பிட்டேன்னு மத்தியானமே மறந்துருச்சுப்பா!’, 'இன்னிக்கி இன்னன்ன காரியங்களை மறக்காம செய்யணும்னு ஒரு லிஸ்ட் எழுதி வைச்சிருந்தேன். பாழாப்போன என் ஞாபக மறதியால, அந்த லிஸ்ட்டைப் பார்க்கவே மறந்துட்டேன்னா பார்த்துக்கோயேன்!’ என்றெல்லாம் அலுத்துக் கொள்பவர்கள், இந்தப் பயிற்சியை மேற்கொண்டீர்களென்றால், மறதியில் இருந்து மறக்காமல் வெளியே வந்துவிடுவீர்கள்.
அன்பர்கள் சிலர், 'சனியின் பிடியில் இருந்துகூட தப்பித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது; சளியில் இருந்து தப்பவே முடியவில்லை; நிவாரணம் பெறமுடியவில்லை’ என அலுத்துக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். சதா காலம் ஒழுகின மூக்கும் சிந்தின கையுமாக இருப்பவர்கள், அதில் இருந்து மிக எளிதாக விடுதலை பெறலாம். சளித் தொந்தரவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், நமக்கு உடல் சோர்வையும் மூளைச் சோர்வையும் தரவல்ல கொடூரமான வில்லன், சளி!

சளிப் பிரச்னை இல்லையெனில், தலைச் சுற்றலோ தலை பாரமோ இருக்காது. இவை இரண்டும் இல்லையெனில், சோம்பலுக்கு இடமில்லை. எட்டு மணி நேரத்தைக் கடந்தும்கூட சுறுசுறுப்பாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன், மிக வேகமாக வேலையில் ஈடுபடலாம். அரை மணி நேரம் வேலை பார்த்ததுமே வருகிற களைப்பும் சோர்வும் பல காத தூரம் பறந்தோடிவிடும். எப்போதும் துடிப்பு; எந்நேரமும் விழிப்பு; எல்லா தருணங்களிலும் சுறுசுறுப்பு என உங்கள் வேலையில் கவனம் செலுத்த, இந்தப் பயிற்சிகள் பெரிதும் உதவும்.
உடலின் நரம்பு மண்டலம், காற்று மண்டலம், தசை மண்டலம் ஆகியவற்றில் சின்னதாகவோ பெரிதாகவோ என்ன விதமான நோய்கள் வந்திருந்தாலும், அதை மிக எளிதாக விரட்டிவிடலாம். சீக்கிரமே அவற்றில் இருந்து நிவாரணம் அடையலாம்.
மன நோயால் பாதிக்கப்பட்டவர்களைக்கூட இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வைத்தால், மெள்ள மெள்ள அவர்கள் மன நோயில் இருந்து விடுபடுவதை அன்பர்கள் பலர் வியப்பும் பூரிப்புமாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். வலிப்பு முதலான நரம்புக் கோளாறு நோய்களும், ஏழு நிலைப் பயிற்சியால் எட்டாத திசைக்குச் சென்றுவிடும் என்பது உறுதி!
முக்கியமாக, அன்பர்கள் பலரும் தங்களது மகன் அல்லது மகளை அழைத்துக் கொண்டு, அறிவுத் திருக்கோயிலுக்கு வருகின்றனர். அந்த வேளையில், மனவளக்கலைப் பயிற்சிக்கு முன்பு வரை, கிரகிக்கும் திறன் குறைவானவர்களாக அந்தக் குழந்தைகள் இருந்ததாகவும் பயிற்சிக்குப் பிறகு அவர்களது கிரகிக்கும் திறனும் ஞாபக சக்தியும் கூடி, தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருப்பதாகவும் தெரிவித்து, எனக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்துள்ளனர்.
கிரகிக்கிற திறன், ஞாபக சக்தி, புத்திக்கூர்மை, எதையும் புத்திக்குள் பதிவு செய்து கொள்கிற ஆற்றல்... இவை மட்டும் ஒரு மாணவனுக்கு, நாளைய தலைமுறைக்கு, உங்கள் வீட்டின் செல்லக் குழந்தைகளுக்குப் போதுமா?
இந்தப் பயிற்சிகள் இன்னொன்றையும் தருகின்றன. பயிற்சியால் கிடைக்கிற சிந்தனையும் தெளிவும் அவர்களுக்குள் ஒழுக்கத்தை விதைக்கின்றன!
உயிரினும் மேலானது அல்லவா ஒழுக்கம்?!
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

Sunday, August 14, 2011

தகவல் தர மறுக்கும் தலைவர்கள்!

தகவல் தர மறுக்கும் தலைவர்கள்!

கப்சிப் வருமான வரித் துறை
த்திய அமைச்சர் அழகிரி தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கு விவரத்தைக் கேட்டு விண்ணப்பம் செய்தார். ஃபேக்ட் இந்தியா அமைப்பின் உறுப்பினர் கோபால கிருஷ்ணன். ஆனால், வருமான வரித் துறை தகவல்களைக் கொடுக்கவில்லை. கனிமொழி, டி.ஆர்.பாலு, ப.சிதம்பரம், தங்கபாலு ஆகியோரது கணக்குகள் குறித்துக் கேட்டபோது, 'கொடுக்கலாமா? வேண்டாமா?’ என்று சம்பந்தப்பட்டவர்களிடமே விளக்கம் கேட்டது வருமான வரித் துறை. 'எந்த விவரத்தையும் தரக் கூடாது’ என்று அவர்கள் சொன்​னதால், தரவில்லை.
தா.பாண்டியனின் கணக்கைக் கேட்டபோது 'அவர் ஐ.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை’ என்று பதில் வந்தது. கருணாநிதியின் கணக்கு விவரங்களைக் கேட்க, அவருடைய ஆடிட்டர் டி.சிவசுப்பிரமணியம் மூலம், 'கணக்கு விவரங்களைத் தரக் கூடாது’ என்று கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதில் கொடுமை... கருணாநிதி முதல் முறையாக முதல்வரான போது, 'எம்.எல்.ஏ-க்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது சொத்துக் கணக்குகளை சட்டசபைக்கு அளிக்க வேண்டும்’ என்று ஒரு தீர்மானத்தை 27.8.1969-ல் நிறைவேற்றினார். ஜெயலலிதாவுக்கோ வருமான வரித் துறையே தகவல் தர மறுத்துவிட்டது. விஜயகாந்த்துக்கு 'தகவல் அறியும் சட்டத்தில் வருமான வரித் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது’ என்று சொல்லி நிராகரித்தனர். ஸ்டாலின் கணக்குகளுக்கும் பதில் தர மறுத்துவிட்டனர்.
ஆ.ராசா, அவர் மனைவி பரமேஸ்வரி மற்றும் கூட்டுக் குடும்பம் சார்பில் மூன்று பான் கார்டுகள் வைத்திருக்கிறார்கள். இந்த கார்டுகளுக்கான வருமான வரிக் கணக்கு விவரங்களைக் கேட்டபோது, அவர்களின் ஆடிட்டர் முத்துகுமாரசாமி மூலம் 'தரக் கூடாது’ என்று சொல்லிவிட்டார்கள்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த யசோதா இரண்டு பான் கார்டு நம்பர்களைப் பயன்படுத்தி இருக்கிறாராம். 2006 தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, வேட்பு மனுவோடு அவர் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலில் கொடுத்த பான் கார்டு நம்பரை வைத்து, யசோதாவின் வருமான வரிக் கணக்கைக் கேட்டார் கோபால கிருஷ்ணன். அதற்கு, 'அது அவருடைய பான் நம்பர் இல்லை’ என்று பதில் வந்தது. அதன் பிறகு 2011 தேர்தலில் காட்டிய சொத்துக் கணக்கில் இருந்த வேறொரு பான் கார்டு நம்பரை அனுப்பி, விளக்கம் கேட்டபோது, அதற்கு வருமான வரித் துறை இன்று வரை பதில் அனுப்பவில்லை.
அரசியல்வாதிகள் இருக்கட்டும்... அரசியல் கட்சிகளின் நிலையும் இதே கதைதான். காங்கிரஸ் கட்சியின் வருமான வரிக் கணக்குகள் மட்டும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி, 2010-11 ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு 467.57 கோடி நன்கொடை வந்ததாக கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை 2006-​2007, 2009-2010 ஆகிய இரண்டு வருடங்களுக்கு வருமான வரிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்திருப்பதாக பதில் அனுப்பியது வருமான வரித் துறை. இதிலும் சில முரண்பாடுகள். 2008-ம் ஆண்டு படப்பையில் இரண்டு இடங்களை வாங்கிய விவரங்கள் வேட்பு மனுவோடு தாக்கல் செய்த சொத்து விவரத்தில் உள்ளது. ஆனால், இந்த சொத்து வாங்கப்பட்ட காலத்தில் அவர் ஐ.டி. ரிட்டர்ன்ஸே தாக்கல் செய்யவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அனுப்பப்பட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த சொத்துகளுக்கு வருமான வரி கட்டப்பட்டதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், ஜெய்ஸ்ரீ ஐ.பி.எஸ்., வீரபாண்டி ஆறுமுகத்தின் மருமகள் பிருந்தா ஆகியோர் மட்டும்தான் கணக்குவிவரங்களைக் கொடுத்​தவர்கள்.
கோபால கிருஷ்ணன் என்ன சொல்கிறார்?
''வரி ஏய்ப்பை வருமான வரித் துறையே ஊக்குவிப்பதுபோல இருக்​கிறது. சமூகத்தில் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள், பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் ஆகியோரின் சொத்துக் கணக்குகள் வெளிப்​படையாக இருக்க வேண்டும் என்பது நீதி. அந்த அடிப்படையில் இவர்களின் வருமான வரிக் கணக்குகளை, வருமான வரித் துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளின் சொத்துக் கணக்குகளை தகவல் அறியும் சட்டத்தில் கேட்க முடியாது என்ற நிலை இருந்தது. இதனை எதிர்த்து வழக்குப் போட்டபோது 'அவர்களும் சொத்துக் கணக்கைக் கொடுக்க வேண்டும்’ என்று சமீபத்தில் உத்தரவு போட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதனால், வருமான வரி கணக்குகளையும் வெளியிடுவதில் தவறு இல்லை. அப்போதுதான் மறைக்கப்படும் லஞ்ச ஊழல் பணம், சொத்துகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும். அரசுக்கும் வருவாய்; மக்களுக்கும் பயன்!'' என்றார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நிலைமை நாளுக்கு நாள் கவலைக்​கிடமாகப் போய்க் கொண்டு இருக்கிறது!
- எம்.பரக்கத் அலி
சட்டம் என்ன சொல்கிறது?
சென்னையின் முன்னணி ஆடிட்டரும் வழக்கறிஞருமான கே.வைத்தீஸ்​வரன், ''ஒருவரின் வருமான வரிக் கணக்கு தாக்கல் விவரம் எதற்காக கேட்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதை கொடுப்பதா? வேண்டாமா? என்று தகவல் அறியும் சட்டம் முடிவு செய்கிறது. அது பொதுநலன் கருதி கேட்கப்படுகிறதா? அல்லது தனிப்பட்ட நலனுக்காக கேட்கப்படுகிறதா? என்று பார்க்கப்படுகிறது. பொது நலன் கருதி என்றால் கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், இந்த விவரத்தை கொடுத்தால் நாட்டுக்கோ அல்லது பொது நலனுக்கோ கேடு ஏற்படும் என்றால் மறுக்கப்படும்.
வருமான வரித் துறை அதிகாரிகள், தகவல் அறியும் சட்டப்படி நியாயமான விஷயத்துக்கு தகவல் தர மறுக்கும்பட்சத்தில் மத்திய தகவல் ஆணையத்துக்கு விண்ணப்பித்து வரி கணக்கு தாக்கல் விவரத்தை பெற முடியும்''
- சி.சரவணன்

Source - Vikatan Magazine

''தங்கம் விலை இன்னும் ஏறும்!''

''தங்கம் விலை இன்னும் ஏறும்!''

ரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால், அவர்கள் பேசுவது... ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலையைத்தான்! இந்த நிமிடத்தில், 24 காரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை 26,000-ஐ தாண்டிவிட்டது. இன்னும் சில மாதங்களில் அது
27,000-க்கு மேல் அதிகரிக்கும்என்பது நிபுணர்களின் கணிப்பு. 'ஏன் இந்த உயர்வு?’ என அறிந்து கொள்ள, சென்னை யில் உள்ள நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் பாபி எஸ்.ஸ்ரீனிவாசனை சந்தித்தோம். ''தங்கம் விலை உயர்வுக்குப் பல காரணங் கள் இருக்கின்றன. இருந்தாலும், சிலவற் றைச் சொல்கிறேன்...'' என்று ஆரம்பித் தார்.
கையிருப்பு குறைவு!
''உலகத்தில் தங்கம் வெட்டி எடுப் பது குறைந்துகொண்டு வருவதும், பூமிக்கு அடியில் தங்க இருப்பு குறைவாக இருப்பதும் முக்கியக் காரணங்கள். பூமிக்குள் இருந்து இதுவரை சுமார் 1,70,000 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் தோராயமான மதிப்பு 7.2 டிரில்லியன் (டிரில்லியன் என்பது லட்சம் கோடி) அமெரிக்க டாலர். ஆனால், உலக அளவில் புழக்கத்தில் இருக்கும் கரன்ஸிகள், நிறுவனப் பங்குகள், சேமிப்புகள், டெபாசிட்கள் போன்றவற்றின் மதிப்பு சுமார் 60 டிரில்லியன் டாலர். இது தங்கத்தின் மதிப்பைவிட சுமார் 8.5 மடங்கு அதிகம். அதாவது, உலக அளவில் மக்களி டம் அதிகப் பணம் இருக்கிறது. ஆனால், தங்கம் குறைவாக இருக்கிறது என்பதால், அவர்கள் என்ன விலை என்றாலும் அதை வாங்கத் தயாராகவே இருக்கிறார்கள். இதனால்தான் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஊழல் பணத்தை தங்கமாகப் பதுக்குகிறார்கள். இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீட்டில் 1,500 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
உலகம் முழுக்கத் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 3,550 டன்னாக இருக்கிறது. ஆனால், நமக்குக் கிடைப்பது 2,450 டன்தான். அதாவது, பற்றாக்குறை சுமார் 1,100 டன். மேலும், உலக அளவில் பூமிக்கு அடியில் வெறும் 22,000 டன் தங்கம்தான் மொத்தமே இருப்பதாகக் கணக் கிடப்பட்டு உள்ளது. தங்கத்தை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது என்பதால், அதன் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும், தங்கத்தை எடுப்பதற்கான செலவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அதன் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது.
மற்ற முதலீடுகளில் லாபம் இல்லை!
உலக அளவில் பங்குச் சந்தை கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை. கடந்த ஓர் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை கொடுத்த வருமானம் மைனஸ் 8 சதவிகிதம். அதே நேரத்தில், இதே காலத்தில் தங்கம் கொடுத்திருக்கும் வருமானம் 42 சதவிகிதம்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல வங்கிகள் அண்மை ஆண்டுகளில் மஞ்சள் கடுதாசி (திவால்) கொடுத்து வருகின் றன. இதனால், வங்கிகளில் சேமிப்புக் கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்தவர்கள் கதி அதோ கதிதான். விளைவு, அசலுக்கு மோசமில்லாமல் பாதுகாப்புக் கருதி ஃபிக்ஸட் டெபாசிட்களில் செய்வதை தவிர்த்துவிட்டு, தங் கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ள வங்கிகள், தங்கள் கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களைக் கொடுத்து தங்கமாக மாற்றுகின்றன.
டாலர் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்கா டாலரின் வெளி மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம். அதாவது, அமெரிக்க டாலராக வைத்திருப்பதற்கு பதில் தங்கமாக வாங்கி வைத்துவிட்டால், அதன் விலை எப்படியும் உயரும். தேவை ஏற்படும்போது தங்கத்தை விற்று செலவு செய்துகொள்ளலாம் என்கிற மனநிலை அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை பரவிவிட்டது. இது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
முதலீட்டுக் கோணம்..!
ஒரு காலத்தில் அணிந்து அழகு பார்க்க மட்டுமே தங்கத்தை மக்கள் பயன் படுத்தினார்கள். இப்போது அதை லாபகரமான முதலீ டாகப் பார்க்கிறார்கள். சாதாரண மக்கள் பவுன் கணக்கில் வாங்கினால், கோடீஸ்வரர்கள் கிலோ கணக்கில் வாங்குகிறார்கள். நாடுகளோ டன் கணக்கில் வாங்கிக் குவிக்கின்றன. அண்மையில்கூட, தென் கொரியாவின் மத்திய வங்கி (நம் ஊர் ரிசர்வ் பேங்க் போல்) 25,000 கிலோ தங்கத்தை வாங்கி இருக் கிறது. சீனா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாட்டு மக்கள் தங்கத்தில் முதலீடுசெய்வது அதிகரித்துள்ளது.
தொழில் துறை பயன்பாடு அதிகரிப்பு
இந்தியாவில் தொழில் துறை குறிப்பாக செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மருத்துவத் துறையில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த உபயோகம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், விலை தொடர்ந்து அதிகரித்து அதிக லாபகரமான முதலீட்டு வாய்ப்பாக இருக்கும். சில ஆயிரம் ரூபாய் இருந்தால்கூட தங்கம் வாங்க முடியும் என்பதால், அதனை மக்கள் பெரிதும் விரும்பத் தொடங்கி விட்டனர். மேலும், இதனை அவசரத்துக்கு அடமானம் வைத்து கடன் பெறுவதும் சுலபம். விற்றுப் பணமாக்குவதும் சுலபம் என்பதும் அதனை வாங்குவதற்கான முக்கியக் காரணம்!'' என்கிறார் ஸ்ரீனிவாசன்.
- சி.சரவணன், படம்: எம்.உசேன்

Source - Vikatan Magazine

ரத்தம் தெறிக்கும் மதுரை!

ரத்தம் தெறிக்கும் மதுரை!

யாருக்காக கொல்லப்பட்டான் பாண்டியராஜன்?
நில மோசடி வழக்குகளில் சிக்கி, 'மிஸ்டர் குண்டாஸ்’ ஆகிவிட்ட பொட்டு சுரேஷ் மீது இப்போது கொ​லை வழக்கும் பாய்ந்து விட்டது! 'ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை பொட்டு சொல்லித்தான் போட்டுத் தள்ளினோம்’ என்று எஸ்ஸார் கோபி வாக்குமூலம் கொடுத்ததால், அந்த வழக்கில் பொட்டு சுரேஷை முதல் குற்றவாளியாக்கி, ரிமாண்ட் செய்திருக்கிறது போலீஸ்!
பாண்டியராஜன் கொலை வழக்கில் கோபியை விசாரிக்க 10 நாள் காவலில் எடுக்க மனு போட்டது போலீஸ். ஒரு நாள் மட்டும் கஸ்டடிக்கு அனுமதித்தது நீதிமன்றம். ''அந்த ஒரு நாள்லயே கோபி ஏகப்பட்டதைச் சொல்லிட்டான்...'' என்கிறார்கள், விசாரணை டீமில் இருந்த போலீஸ் அதிகாரிகள் சிலர்.
''எஸ்ஸார் கோபியின் சின்னம்மா மகள் தயாளு​வைத்​தான் 'அட்டாக்’ பாண்டி கல்யாணம் கட்டியி​ருக்கார். தா.கி. கொலை வழக்கில் எஸ்ஸார் உள்ளே இருந்தப்ப, அழகிரி வீட்டில் பாதுகாப்பைக் கவனித்த  'அட்டாக்’ பாண்டி, எஸ்ஸார் தரப்பினருக்கு எதிரான விஷயங்களை அழகிரி குடும்பத்தாரிடம் போட்டுக் கொடுத்தார். இதுவும் இன்னும் சில விஷயங்களுமாகச் சேர்ந்து அட்டாக்குக்கும் எஸ்ஸாருக்கும் இடையில் பகை ஏற்பட்டது.
இந்த நிலையில், 'தினகரன்’ பத்திரிகை அலுவலக எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, தனக்கு பதவி மற்றும் கான்ட்ராக்ட்கள் கேட்டு 'பொட்டு’விடமே முஷ்டி மடக்கினார் அட்டாக். மிரண்டு போன பொட்டு, எஸ்ஸார் கோபி மூலமாக 'அட்டாக்’கைத் தட்டி வைக்க நினைத்தார். இதைக் கேள்விப்பட்டு  கடுப்பான அட்டாக், தன் உறவினரான ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனை அனுப்பி, பொட்டுவை மிரட்டியிருக்கார். பொட்டு வீட்ல பெட்ரோல் குண்டு வீசுனதும் பாண்டி​யராஜன்தான்னு சொல்றாங்க.
அப்ப பொட்டு சுரேஷ், அதிகாரம் பொருந்திய மனிதராக இருந்ததால்  தனக்கு நெருக்கமான உளவு அதிகாரியின் மூலமாக பாண்டி​யராஜனை தூக்கிட்டுப்போய் புதூரில் ரெண்டு நாள் அடைத்து வைத்தார்கள். அடிக்கவும் செய்தார்கள். அப்படியும் விடாம, 'இவன் கதைய முடிச்சாத்தான் அட்டாக் பயப்படுவான்’ன்னு கோபிக்கு சிக்னல் குடுத்துருக்காங்க என்பதாக எங்கள் விசாரணை தகவல் சொல்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த கோபி கோஷ்டி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேர்தல் அலுவலகம் அமைக்க இடம் கொடுத்த விவகாரத்தை வெச்சு, பாண்டியராஜனை அடிச்சு ரோட்ல போட்டு, காரை ஏத்திக் கொன்னுருக்கு. விஷயம் தெரிஞ்சு, எல்லாரையும் அப்பவே மதுரை பெரிய இடத்துல சத்தம் போட்டிருக்காங்க. அப்ப, 'எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்’னு சொல்லி தைரியம் கொடுத்த பொட்டு, அந்தக் கொலையை விபத்தா முடிச்சிருக்கார். அவனியாபுரம் இன்ஸ்பெக்டரா இருந்தவரும்  இதுக்கு உடந்தை. விசாரணையில், கோபியே இதை எல்லாம் சொன்னான். பக்காவா வீடியோ எடுத்துருக்கோம்!'' என்று போலீஸ் தரப்பு சொல்லி அதிர்ச்சியைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது. அவர்களே தொடர்ந்து பேசினர்...
''கோபியிடம் அழகிரிக்கு எழுதுனதாக சொல்லப்​படும் லெட்டர் சம்பந்தமாவும் விசாரிச்சோம். பண்ணை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி, ஒரிஜினல் லெட்​டரையே எங்ககிட்ட கொடுத்துவிட்டார். 'இதை நான் சொல்லச் சொல்ல இன்னாரு எழுதுனாரு’ன்னு ஒருத்தர் பேரையும் சொன்​னார்.
'அழகிரிக்காகப் பல காரியங்களைச் செஞ்​சும், எங்களுக்கு அதுக்கான அங்கீகாரம் கிடைக்​கல. அழகிரிக்காக எதுவுமே செய்யாத பொட்டு மாதிரி ஆளுங்க கோடிகோடியா சம்பாதிச்சு, நெனச்சத சாதிக்கிறப்ப... நமக்குப் பதவி குடுக்கக்கூட அழகிரி யோசிக்கிறாரு’ங்கற வருத்தத்துலதான் அதை எழுதினேன். 'இந்த லெட்டரை வெச்சே அண்ணன்கிட்ட இல்லாததும் பொல்லாததுமா போட்டுக் குடுத்துருவான் பொட்டு’ன்னு எனக்கு நெருக்கமானவங்க சொல்லவே, லெட்டரை அழகிரிக்கு அனுப்பாம வச்சிருந்தேன். அதான் உங்க சோதனையின்போது கிடைச்சிருக்கு. அப்பவே இதைக் கிழிக்காம விட்டதுதான் தப்பாப் போச்சு’ன்னான்.
'பொட்டு சுரேஷை சாதாரணமா நெனச்சிடாதீங்க. அழகிரிகிட்ட இருந்து எங்க சொந்தக்காரங்கள எல்லாம் பிரிச்சதே அந்தாளுதான். 'என்னையும் பிரிச்சுட வேண்டாம்னு உங்க புள்ளைக்கிட்ட சொல்லுங்கம்மா’ன்னு பொட்டுவோட அம்மா காலில் விழுந்ததாலதான் மன்னனை மட்டும் அழகிரி பக்கத்துலயே விட்டாங்க. எங்கள மாதிரி ஆளுங்க கத்தி எடுத்துட்டு சுத்துவோம். ஆனா, அதை எடுக்காமலே காரியங்களை செய்வான் பொட்டு. இல்லாட்டி, இதுவரைக்கும் பிரச்னையே வராம இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா?’ன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் எஸ்ஸார் கோபி. பாண்டியராஜன் கொலைக்குப் பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் எட்டு பேர் கை மாறி, திருச்சியில இருந்துச்சு. அதையும் கோபியோட கடிதத்தையும் கோர்ட்ல ஒப்படைச்சு இருக்கோம்...'' என்று முடித்தனர்.
பாண்டியராஜன் கொலை வழக்கில் கோபியின் அண்ணன் மருதுவும், திருப்பரங்குன்றம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கார்த்திகேயனும் தலைமறைவாக உள்ளனர். இதில் மருது, லீலாவதி கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது, நன்னடத்தைச் சான்றிதழ் பெற்று அண்ணா பிறந்தநாள் கோட்டாவில் விடுதலை ஆனவர். கொலை வழக்கில் சிக்கியிருப்பதால், அந்த நன்னடத்தை சான்றிதழை ரத்து செய்து மீண்டும் மருதுவை சிறையில் அடைப்பது குறித்தும் சட்ட ஆலோசனை நடத்தும் போலீஸ், கார்த்திகேயனைப் பற்றி இப்படிச் சொல்கிறது...
''எஸ்ஸார் பிரதர்ஸ் எது சொன்னாலும் செய்யக்கூடியவர் கார்த்திகேயன். திருமங்கலம் இடைத்​தேர்தலில் ஸீட் குடுக்கலைங்கிற ஆத்திரத்துல அழகிரிகிட்ட கடுமையா சண்டை போட்டுருக்கார் எஸ்ஸார். அதுல அப்செட் ஆன அழகிரி, 'நான்கூட சாதாரண கார்லதான் போறேன். கோபி  ஃவோக்ஸ்வேகன்ல  போறான்யா! பத்து வருஷம் முன்னாடி சாதாரண காளியம்மா மகனா இருந்தவனுக்கு இதெல்லாம் எப்படி வந்துச்சு? நெனச்சுப் பாக்காம என்னையவே மிரட்டுறான்யா’னு கார்த்திகேயன்கிட்ட வருத்தப்பட்ட அழகிரி, தன் விசுவாசிகளை 'கோபியோட சகவாசம் வெச்சுக்க வேணாம்’னு சொல்லிட்டு, கார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் குடுக்க ஆரம்பிச்சாரு.
இது கோபி தரப்புக்குப் பிடிக்கல. 'எங்களை மீறி நீ அண்ணன் வீட்டுக்குப் போகக் கூடாது’ன்னு கட்டைய போட்ருக்காங்க. சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயன், தன் பிள்ளைகளுக்குக் காதுகுத்து வெச்சப்ப, 'விழாவை அவனியாபுரத்துல வெச்சா, அவனுக (எஸ்ஸார் பிரதர்ஸ்) தங்களோட படங்களைப் போட்டு பெருசு பெருசா ஃபிளெக்ஸ் வெப்பாங்க. நான் வரமாட்டேன்’னு சொல்லிட்டாரு அழகிரி. அதனாலதான் தயா மகால்ல விழாவை வெச்சாரு. ஆனாலும், கோபி கூட்டத்தைப் பகைச்சிக்க முடியாம, அவங்க அண்ணன் தம்பிக நாலு பேரு படத்தையும் பத்திரிகையில போட... அதைப் பாத்துட்டு டென்ஷனான அழகிரி, அந்த ஃபங்க்ஷனுக்கே போகலையாம்!
இவ்வளவு பிரச்னைக்கு நடுவுலயும் திருப்பரங்​குன்றம் தொகுதியில நிக்கணும்கிறதுக்காக 2010-ல் கோபி அலைந்தார் . ஆனா, தொகுதியைத் திட்டம் போட்டு காங்கிரஸுக்கு ஒதுக்கிட்டாங்க. இதுக்கு கார்த்திகேயனும் பொட்டும்தான் காரணம்னு நெனச்ச கோபியோட ஆளுங்க, தேர்தல் சமயத்துல கார்த்திகேயன் வீட்ல பெட்ரோல் குண்டை வீசி டூவீலரை கொளுத்தினாங்க. 'இப்போதைக்கு ஒரு கம்ளெயின்ட் குடுத்து வெச்சிரு. அடுத்தும் நம்ம ஆட்சி தான்... அவனுகள வெச்சிக்​கிறேன்’னு அப்பவே கார்த்திகேயன்கிட்ட அழகிரி சொல்லியிருக்காரு.ஆனா, தேர்தல் முடிவுகள் ஏடாகூட​மானதால, எஸ்ஸார் கோஷ்டிதப்பிச்​சிருச்சு. இப்ப என்னடான்னா, 'கார்த்தி​கேயன்​தான் இன்ஸ்​பெக்டருக்கு 50 ஆயிரம் குடுத்து பாண்டி​யராஜன் கொலை வழக்கை சரிக்கட்​டுனாரு’ன்னு கோபி வாக்குமூலம் குடுத்துருக்கான்...'' என்றனர்.
விசாரணையின்போது, மதுரையை மையப்படுத்தி நடந்த கொலைகள், அடிதடிகள், கட்டப் பஞ்சாயத்துகள், பேரங்கள் உள்ளிட்டவை குறித்து ஒரு பெரிய பட்டியலே கொடுத்த கோபி, யாரைப் பிடித்தால் எதைக் கறக்கலாம் என்பதையும் போலீஸுக்கு ஸ்கெட்ச் போட்​டுக் கொடுத்தாராம். இதை வைத்து, அடுத்த கட்டத்துக்கு முன்னேறுகிறது போலீஸ்.
பொட்டு சுரேஷ் பாளை சிறையில் இருப்பதால், மோதலைத் தவிர்க்கத்தான் அட்டாக்​கையும் எஸ்ஸாரையும் திருச்சி ஜெயிலில் வைத்தார்களாம். இதில் வேடிக்​கை, பொட்டுவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முட்டிக்கொண்டு நின்ற எஸ்​ஸாரும் அட்டாக்கும் இப்போது  நேசமாகி விட்டார்களாம். போலீஸ் எதிர்பார்த்ததும் இதைத்தானாம்! இப்போது இருவருமே கோபத்தில் தகிப்பதால், ''உள்ளே இருப்பது​தான் பொட்டுக்கு பாதுகாப்பு'' என்று போலீஸ் தரப்பில் இருந்தே எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு இருக்கிறதாம்.
எஸ்ஸார் வாக்குமூலம் குறித்து மதுரை எஸ்.பி-யான ஆஸ்ரா கார்க்கிடம் கேட்டதற்கு, ''பொட்டு சுரேஷ் சொல்லித்தான் பாண்டியராஜனை கொன்றதாக கோபி வாக்குமூலம் கொடுத்துள்ளான். அதனால், பொட்டுவையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளோம். இதில் முக்கியமான மேலும் மூன்று நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்காங்க. அவங்க யாருன்னு இப்போதைக்குச் சொல்ல முடியாது. குற்றவாளிகளுக்கு ஆதரவா போலீஸார் யாராவது செயல்பட்டு இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். பொட்டு பற்றி மேலும் பல அதிர்ச்சியான தகவல்களைக் கோபி சொல்லியதால், அது சம்பந்தமா விசாரிக்கிறதுக்காக கூடிய சீக்கிரமே பொட்டுவை கஸ்டடியில் எடுப்போம்!'' என்றார்.
''போலீஸார் தன்னிடம் மிரட்டி வாக்குமூலம் வாங்கியதாக கோபி கோர்ட்டில் சொல்லி இருக்கிறாரே..?'' என்று கேட்டபோது, ''பின்னாடி தப்பிச்சிக்கலாம்கிற திட்டத்துல எல்லா குற்றவாளிகளும் சொல்றதுதான் இது! நாங்க அவனை மிரட்டவும் இல்லை, அடிக்கவும் இல்லை!'' என்றார் எஸ்.பி.!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Source - Vikatan Magazine

சமச்சீர் சாதனையாளர்கள்!

சமச்சீர் சாதனையாளர்கள்!

மிழகக் கல்வியாளர்களின் நாற்பது ஆண்டுக் கனவு, நிறைவேறி இருக்கிறது. தடை பல கடந்து வெற்றிக்​கொடியை நாட்டி இருக் கிறது, சமச்சீர்க் கல்வித் திட்டம்!
பலரும் இதற்காக முயன்று இருந்​தாலும், 'இவர் கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை’ என்று சொல்லும் அளவுக்கு சில அமைப்புகள்தான் இதற்கு முக்கியக் காரணம்! இதில், பிரின்ஸ் கஜேந்திரபாபு என்ற தனி மனிதரின் போராட்டம் முக்கியமானது. 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’ எனும் அமைப்பின் மூலம், சமச்சீர்க் கல்விக்காகப் போராடி வருகிறார் இவர்.
தொலைபேசியிலும் நேரிலும் பலரின் பாராட்டு களில் நனைந்துகொண்டு இருந்த அவரை நாம் சந்தித்தபோது, ''மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் பாடத் திட்டங்களில் மதவாதக் கருத்துகளைச் சேர்த்து, பிரச்னை உண்டானது. அடுத்து வந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங், அனைத்து மாநிலங்களின் பாடத் திட்டங்களையும் திருத்தியமைக்க உத்தரவிட்டார். 2005-ல் உருவாக்கப்பட்ட 'தேசிய பாடத் திட்டக் கொள்கை’யின்படி, புதிய பாடத்திட்டம் இருக்க​வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா 10 லட்சத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி) வழங்கியது. தமிழகத்திலும் 2006-ல் தொடங்கிய இந்தப் பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆனது. 2009 அக்டோபரில் 'வரைவு பொதுப் பாடத்திட்டம்’ என இணையதளத்தில் இது வெளியிடப்பட்டது. இறுதியாக, என்.சி.இ.ஆர்.டி-யின் பாடத்திட்டக் குழுவும் இதை ஆராய்ந்து, 'இது சரியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று 2009 நவம்பர் 25-ல் அறிவித்தது. அடுத்த இரண்டாவது நாளில், சமச்சீர்க் கல்விக்கான அவசரச் சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்தது. இதனால்தான் சமச்சீர்க் கல்வி தமிழகத்துக்கு வந்தது. கருணாநிதி கொண்டுவந்தார் என்பதற்காக எதிர்ப்பவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
2006-ல் இருந்து கல்வியாளர்களும் மாணவர் அமைப்பினரும் சமச்சீர்க் கல்விக்காகப் போராடினர். 2006 செப்டம்பரில் முத்துக்குமரன் குழு அமைக்கப்பட்டு, 2007 ஜூலையில் அறிக்கை தந்தது. அதை ஆராய விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு... அதுவும் அறிக்கை தந்தது. ஆனால், தி.மு.க. அரசு சமச்சீர்க் கல்வி பற்றி வாய் திறக்கவே இல்லை. தமிழகக் கல்விக் குழு தயாரித்த 'பொதுப் பாடத் திட்ட’த்தை என்.சி.இ.ஆர்.டி. அங்கீகரித்தபின்பு, அதை தி.மு.க. அரசும் அங்கீகரிக்கவேண்டிய கட்டம் வந்தபோது, திடீரென சமச்சீர்க் கல்விக்கான அவசர சட்டத்தைக் கொண்டு​வந்தார்கள்.
நவம்பர் 30-ம் தேதி கெசட்டில் வெளி​யிட்டு, 2010 பிப்ர​வரியில்தான் சட்டப் பேரவை மூலம் இந்த சட்டம் நிறைவேறியது. இதன்படி புத்தகத்தை அச்சடிக்க உத்தரவு பிறப்பித்த பிறகு, தனியார் பள்ளிகள் தரப்பில் சமச்சீர் பாடத் திட்டத்தை எதிர்த்து, நீதிமன்றம் சென்றனர். விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன் மற்றும் ஜனார்த்தன்ராஜா பெஞ்ச், 'சமச்சீர் பாடத் திட்டம் செல்லும். ஆனால், அந்தப் பாடத் திட்டத்தின்படி தனியார் பள்ளிகள் புத்தகங்களைத் தீர்மானித்துக் கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்தது. அதே ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றமும் இதை உறுதிசெய்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக, ஒரு சட்டம் கொண்டுவந்து... அதனால் இரண்டு மாதம் குழந்தைகள் மனச் சித்ரவதைக்கு உள்ளாகி, ஒரு வழியாக அதே நீதிமன்றத்தால், பொதுப் பாடத்திட்ட உரிமை மீண்டும் நிலைநாட்டப்பட்டு உள்ளது!'' என்று முடித்தார் பிரின்ஸ்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தினரும் (எஸ்.எஃப்.ஐ.) அடுத்​தடுத்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானவை. 2009 ஜூலை 14-ம் தேதி, தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் மீது போலீஸ் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் படுகாயம் அடைந்​தனர்.
''இந்தத் தாக்குதலில், அனீஃபா என்ற மாண வருக்கு தலையில் படுகாயம். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து! மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகே உயிர்பிழைத்தார். சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்ததாக இப்போது தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தி.மு.க. ஆட்சியில், அதற்காகப் போராடிய மாணவனுக்குக் கிடைத்த பரிசு அப்படி!'' என்றார், எஸ்.எஃப்.ஐ. மாநிலச் செயலாளர் ராஜ்மோகன்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (ஆர்.எஸ்.ஒய்.எஃப்) ஆகிய அமைப்புகள் செய்த போராட்டங்கள் ரொம்பவும் அதிரடி!
''எல்லோருக்கும் பொதுவான பாடத்​திட்டம் கூடாது என்பது சமூக அநீதி. உலகமயமாக்கலுக்கு ஏற்ப பொதுப் பாடத்திட்டம் இல்லை என்கிறது அ.தி.மு.க. அரசு. எனவே, 'மீண்டும் குலக் கல்வியைக் கொண்டுவரும் ஜெ. அரசின் முயற்சியை முறியடிப்போம்’ என்றுதான் களத்தில் இறங்கினோம். சென்னையில் 600 பேர் மறியல் செய்து, 63 பேர் சிறையில் அடைபட்டோம். கடலூர், திருச்சி, மதுரை என பல ஊர்களிலும் போராடியவர்களுக்கு ஒரு வாரத்துக்கும் மேல் சிறை. கடலூரில் 15 வயது மாணவர் ஒருவரை 21 நாள் சிறார் சிறையில் அடைத்தது இந்த அரசு!'' என்றார், இந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் கணேசன்.
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் அரசியல் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால், தமிழ்ச் சமூகத்தின் சமநீதிக்கான ஒரு படிக்கல்லைத் தொட்டிருக்கும் இந்தத் தருணம், விடாப்பிடி போராட்டங்களுக்குக் கிடைத்த அர்த்தமுள்ள ஒரு பரிசுதான்!
- இரா.தமிழ்க்கனல்
படங்கள்: வீ.நாகமணி
'உண்மைக்குப் புறம்பானது...’
கடந்த 10.8.2011 தேதியிட்ட ஜூ.வி-யில் 'கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் இடம் பெற்றிருந்த மாறன் சகோதரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தொடர்பான தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர்கள் தரப்பில் இருந்து உறுதியாக மறுக்கப்படுகிறது.
''கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீடு, மகாலிங்கபுரம் 2 கிரவுண்ட் சன் கேபிள் விஷன் சொத்து, 1.84 ஏக்கரில் பண்ணை வீடு என்று கூறப் பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை மற்றும் மிகைப்​படுத்தப்பட்டவை.
'ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை வாங்கிய சமயத்தில் அதன் மதிப்பு 13,384 கோடி என்று கலாநிதி மாறன் தெரிவித்திருந்தார்’ என்று வெளியாகி உள்ள செய்தி அபத்த மானது. உண்மையில் 'செபி’ வரையறைகளின்படி தாக்கல் செய்த ஆவணங்களின்படியே, ஸ்பைஸ் ஜெட்டின் 37 சதவிகித பங்குகளின் மதிப்பு   797 கோடி என்று தெளிவாக டிக்ளேர் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் எஸ்.டி. கூரியர் கம்பெனிக்கோ மற்றும் சன் மெடிக்கல் காலேஜுக்கோ அதன் மருத்துவமனைக்கோ மாறன் சகோதரர்களின் குடும்பத்தினருக்கும் வேறு உறவினர்​களுக்கும் எந்த வகையிலும் சம்பந்தம் கிடையாது. மேலும், ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை, மாறன் சகோதரர்கள் கட்டப் போகும் மருத்துவ​மனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள் என்ற தகவலும் விஷமத்தனமானது. உண்மைக்குப் புறம்பானது' என்று கூறி மறுத்துள்ளார்கள்.
குறிப்பிட்ட அந்தக் கட்டுரையை வெளியிட்டதில் நமக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது. யாரையும் புண்படுத்து​வதோ, அவதூறுக்கு ஆளாக்குவதோ நம் எண்ணமும் அல்ல. இருப்பினும் இதன் மூலம் யார் மனம் காயப்பட்டிருந்தாலும் அதற்கு மிகவும் வருந்துகிறோம்.
_ ஆசிரியர்

Source - Vikatan Magazine