ரொமான்ஸ் ரகசியங்கள்!
பொய் சொல்லப் போறேன்...பொய் சொல்லப் போறேன் !
ஓவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
ஆண் - பெண் உறவில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. 'நன்மை விளையும் என்றால்... பொய் சொல்வதில்கூடத் தவறில்லை' என்கிறார் திருவள்ளுவர்.அகிலன் சித்தார்த்
லதா - சஷாங் ஜோடி, திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், தங்களின் ஃப்ளாஷ்பேக் காதலைப் பற்றி பரஸ்பரம் பிரஸ்தாபித்து, திருமணமே நின்று போன கதையை, கடந்த இதழில் பார்த்தோம். அதன் மூலம் வரும் நீதி... சில உண்மைகளைக் கல்லறைகளைத் தோண்டி வெளியெடுப்பதில் பயன் ஒன்றும் இல்லை என்பதுதான்!
அப்படியென்றால் 'ஆண் - பெண் உறவில் வெளிப்படைத் தன்மை இருக்கவே கூடாதா... அதைச் சொன்னால் பிரச்னைதான் ஏற்படுமா?' என்பது போன்ற கேள்விகள்... ஏன், கோபமேகூட எழலாம். ஆனால், பலநூறு ஆண்டுகளாக, வழிவழியாக புகட்டப்பட்டிருக்கும் பாடங்களின் வழி நடக்கும் மானிட சாதியின் மிச்சம்தான் நாம் என் பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் முதலில் நமக்கு வேண்டும்.
'அந்தரங்கம் புனிதமானது’ என்பார்கள். ஆனால், அது ரகசியமானது என்பது மட்டும்தானே சரியானதாக இருக்கும். அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது மானுட விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிலம், வீடு, கார் போல்... சக மானுட துணையும் ஒரு நுகர்பொருள் ஆகிவிட்டது.
தன் மனைவியின் பழைய காதல் வாழ்க்கையை அறிந்துகொண்டு அதைப் பெருந்தன்மையோடு அணுகும் அறிவு முதிர்ச்சியான கணவன் பற்றிய பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’, 'அந்த ஏழு நாட்கள்’ போன்றவை அந்த ரகம். 'அவள் அப்படித்தான்’, 'அவர்கள்’ போன்ற படங்கள் பெண்களின் காதல் வாழ்க்கையை மிக முற்போக்காகக் காட்டிய உன்னதமான படங்கள். தமிழ் இலக்கியங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனையோ கதைகள் அப்படி வந்திருக்கின்றன.
உலகின் வெவ்வேறு திசைகளில் ஆண், பெண் உறவு மாற்றம் என்பது காட்டாறுபோல் பாய்ந்து ஓடிக் கொண்டுஇருக்கிறது. அந்த டிரெண்டை புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பின்னோக்கித் தள்ளப்படுவோம் என்பது வரலாற்று உண்மை.
சரி, மேட்டருக்கு வருவோம். ஆண் - பெண் உறவில் எதை வெளிப்படையாகச் சொல்லலாம்? எதைச் சொல்லக்கூடாது என்பது ஒரு கலை.
கணவன் - மனைவி இருவருமே ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொள்ளக்கூடிய புரிதல் கொண்ட துணையா என்பதுதான் அது. அவர் அப்படிப்பட்ட மிகச்சரியான துணை என்பதில் நீங்கள் 'கன்வின்ஸ்’ ஆகிவிட்டால்... உங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றிய எந்த உண்மைகளையும் சுதந்திரமாகச் சொல்லலாம். அதேநேரம், அவர் தொட்டாற்சிணுங்கி டைப், மிகவும் பிற்போக்கான சிந்தனைகள் கொண்டவர் என்பது புரிந்தபின், அவரிடம் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. இது உங்களின் தவறு அல்ல. அதனால் குற்ற உணர்ச்சி எதுவும் தேவை இல்லை.
'உண்மைகளைக்கூட சுதந்திரமாகப் பேச முடியாத ஒரு உறவு தேவைதானா?' என்கிற ஒரு கேள்வி, ஒரு நிலையில் உங்களுக்கு ஏற்படக்கூடும். இது வெறும் காதல் ஃப்ளாஷ்பேக் என்கிற குறுகிய வட்டத்தோடு நிறுத்திவிட முடியாது. இந்த சிந்தனை, பூமி அதிர்ச்சி சுழல்போல பல திசைகளையும் பாதிக்கக் கூடியது.
உதாரணமாக... நித்யாவின் கதை. சென்னையைச் சேர்ந்த மிடில் கிளாஸ் பெண் அவள். ஒரே ஒரு ஹால், சமையலறை கொண்ட சிறிய வீடு. அப்பா அரசாங்க வேலையில் குமாஸ்தா. அம்மா குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் எளிய ஹவுஸ் வொய்ஃப். இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. கம்ப்யூட்டர் அறிவில் தேர்வுபெற்று ஒரு நல்ல வேலையில் சேர்ந்தாள் நித்யா.
ரவிச்சந்திரன் என்றொரு வாலிபன் அவள் வாழ்வில் வந்தான். ஆரம்பத்தில் மிகவும் பெருந்தன்மையான ஆண்மகன் போன்ற தோற்றத்தைக் காண்பித்தான். காதல் கவிதைகள் பேசினான். தன் ரத்தத்தால் காதல் கடிதங்கள் எழுதினான். நித்யாவும் காதல் வயப்பட்டாள். ரிட்டையர்ட் ஆகிவிட்ட நிலையில், நித்யாவின் வருமானத்தை மனதில் வைத்து குடும்பத்தைக் கொஞ்சமேனும் கரை சேர்த்துவிடலாம் என்று நினைத்த தந்தை, தடுமாறினார். ஆனாலும், மகளுக்குத் திருமணம் செய்து வைப்பது கடமை என்பதை உணர்ந்து, ஏகப்பட்ட கடன் வாங்கி அவள் விருப்பப்படியே திருமணத்தை நடத்தினார்.
பெற்றோரின் விருப்பத்துக்காக வரதட் சணை பெற்றுக்கொண்ட ரவிச்சந்திரனை ஜீரணிக்க முடியவில்லை. என்றாலும், பொறுத்துக் கொண்ட நித்யாவுக்கு, ரவிச்சந்திரனின் முழு நிஜமுகம் பிற்பாடு தான் மெள்ள தெரிய ஆரம்பித்தது. 'நான், என் குடும்பம், என் அப்பா, என் அம்மா’ இதுதான் அவனுடைய எளிமையான ஃபிலாசபி. நித்யாவின் குடும்பத்தைத் தன் குடும்பமாக என்றுமே அவன் ஏற்றுக் கொண்டதில்லை. தவிர்க்க முடியாது சந்திக்க நேரிட்டால்... போனால் போகிறது என்கிற தொனியிலேயே பேசி கட் செய்வான்.
கணவனின் குணம் கண்டு அதிர்ந்தாலும், எதிர்காலத்தை மனதில் கொண்டு அப்படியே ஏற்றுக் கொண்டாள் நித்யா. தன் தங்கைகளின் பள்ளிக்கூட ஃபீஸுக்குக்கூட கணவனுக்குத் தெரிந்து உதவ முடியவில்லையே என்று நொந்து கொண்டவள், ஆபீஸில் லோன் போட்டு ஈடு செய்தாள். கணவனுக்குத் தெரிந்தால் ரணகளமாகும் என்பதால்... மறைத்தாள். இந்த நிகழ்வுகள் நீண்ட தொடர்கதை ஆகிவிட்டது. இன்று தன் குடும்பத்துக்குப் பல வகைகளில் உதவி செய்கிறாள் நித்யா. தன் பெற்றோரை, உடன் பிறந்தவர்களை மிகவும் அன்போடு கவனித்துக் கொள்கிறாள். ஆனால், எதுவுமே கணவனுக்குத் தெரியாமல்தான்.
இதையெல்லாம் 'பொய்' என்று சொல்வதா? 'பொய்' என்கிற வார்த்தை இதற்குப் பொருந்துமா? இல்லவே இல்லை. பெருந்தன்மையற்ற ஒரு கணவன் வாய்த்ததால், எதற்காக இப்படிப்பட்ட உன்னதமான விஷயங்களை அவனிடம் சொல்லி தன் குடும்பத்தின் அமைதியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற புரிதலால் நித்யா எடுத்த முடிவு இது.
அற்புதமான ஆண் - பெண் உறவில் 'பொய்மை' என்கிற இத்தகைய களை தோன்றுவதற்குக் காரணம், 'நல்லவர்'கள் அல்ல. பிற்போக்குத்தனமான பழமைவாதிகள்தான்!
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine