Tuesday, December 13, 2011

கீதை காட்டும் பாதை 15 : மின்சாரக் கண்ணா!

கீதை காட்டும் பாதை 15 : மின்சாரக் கண்ணா!

- என்.கணேசன்


அவதார ரகசியத்தை உணர்வதால் மட்டுமே இறைவனைச் சேரலாம் என்றால் அந்த அளவு சூட்சும அறிவு இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி தானாக எழுகிறதல்லவா? அதற்கும் ஞான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.
'விருப்பு, பயம், கோபம் இவற்றை விட்டு நானே நினைவாகி, என்னையே அடைக்கலம் என்று நம்பி ஞான அக்னியால் பரிசுத்தமாகி என்னுடன் ஒன்றாக ஐக்கியமடைந்தவர்கள் பலர்.'
பெரும்பாலானோர் இறைவனை நினைப்பதே ஏதோ ஒரு பொருளுக்கோ, செல்வத்திற்கோ, நிலைக்கோ ஆசைப்பட்டுத் தான். அது எதுவும் தேவை இல்லாத போது அடுத்த தேவை உணரப்படும் வரை இறைவன் வசதியாக மனிதர்களால் மறக்கப்பட்டு விடுகிறார். அடுத்ததாக அவர்கள் இறைவனை வழிபட இன்னொரு காரணம் பயம். கும்பிடாவிட்டால் ஏதாவது பிரச்னையை உண்டாக்கி விடுவாரோ, தங்களைக் காப்பதை அவர் நிறுத்தி விடுவாரோ என்ற பயமும் சிலருக்கு இருக்கிறது. அதனால் எதற்கு வம்பு என்று வணங்கி இறைவனை திருப்தியாகவே வைத்துக் கொள்ளும் ஜாக்கிரதை உணர்வின் காரணமாகவும் இறைவனை வணங்குகிறார்கள்.
ஆனால் விட்டு விட வேண்டிய மூன்று குணங்களில் முதலிரண்டாக இவற்றையே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். இந்த இரண்டும் உண்மையான இறையுணர்வுக்கு உகந்ததல்ல. தேவையாலும், பயத்தாலும் பூஜிக்கப்பட வேண்டியவனல்ல இறைவன். அடுத்ததாக அவர் சொல்வது கோபம். கோபம் இருக்கும் நேரத்தில் அது ஒன்று தான் பிரதானமாக இருக்கிறது. எல்லா நல்ல தன்மைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன. சொல்லாலும், செயலாலும் தனக்கே தீங்கு இழைத்துக் கொள்ளும் பலவீனமான நிலையில் இருக்கிற மனிதன் மனதில் எந்த நல்ல விஷயமும் புக முடியாது. அப்படி இருக்கையில் இறையுணர்வு எப்படி உள்ளே புக முடியும்?
இந்த மூன்றையும் விலக்கி விடும் போது இறைவனின் நினைவிலேயே தங்கி விடுவது எளிதாகிறது. இறை ஞானம் என்ற அக்னியால் மற்ற அழுக்குகளும் சுட்டெரிக்கப்பட்டு அகம் பரிசுத்தமாகிறது. அகம் பரிசுத்தமாகும் போது மனிதன் தானாக இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான்.
அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் சுலோகம் மிகவும் பொருள் பொதிந்தது. 'மனிதர்கள் எவ்வழியில் என்னை நாடினாலும் அதே வழியில் நான் அவர்களிடம் நெருங்குகின்றேன், பார்த்தனே! ஒவ்வொரு விதத்திலும் மனிதர்கள் பின்பற்றும் வழி எனதே ஆகும்.'
இறைவனை ஒவ்வொருவரும் காணும் விதங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.
அப்படி காணும் விதங்கள் ஒன்று போலவே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை. கண்ணனை பாரதியார் தாயாக, தந்தையாக, அரசனாக, சற்குருவாக, இறைவனாக, சேவகனாக, சீடனாக, காதலனாக மற்றும் காதலியாகக் கண்ட கவிதைகள் மிகவும் பிரசித்தம். இப்படி ஒருவரே பல விதமாய் இறைவனைக் காண்பது அபூர்வம். பலரும் இறைவனை ஏதாவது ஒரு வழியில் காண்கிறார்கள், வழிபடுகிறார்கள். இந்த வழிகளில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று இறைவன் பார்ப்பதில்லை. ஏனென்றால் எல்லாமே தன் வழிகள் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அப்படி அவரவர் நாடிய வழியிலேயே அந்தந்த மனிதர்களை நெருங்குவதாக அவர் கூறுகிறார்.
இதே கருத்து தான் திருவாய்மொழியிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவரென அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் வழிவழி அடைய நின்றாரே.
இறைவன் அவரவர் தன்மைக்கேற்ப நெருங்குவதை இன்னொரு உதாரணம் மூலமாகவும் விளக்கலாம். இறைவன் மின்சாரத்தைப் போன்றவர். மின்சாரம் ஒன்றே ஆனாலும் அது பாயும் மின் கருவிகளுக்கேற்ப விதவிதமான பலனைத் தருகிறது. மின்சாரம் விளக்குகளில் பாயும் போது ஒளியாகிறது, வானொலியில் ஒலியாகிறது, தொலைக்காட்சியில் ஒலியும், ஒளியும் ஆகிறது, சூடேற்றும் கருவியில் உஷ்ணமாகிறது, குளிர்சாதனக் கருவியில் குளிர்ச்சியாகிறது. இப்படி கருவிகளின் தன்மைக்கேற்ப, ஊடுருவும் மின்சாரம் பலனளிப்பது போல இறைவனும் அவரவர் தன்மைக்கேற்ப மனிதர்களை அனுக்கிரகிக்கிறார்.
இறைவனின் நோக்கு விசாலமானது. குறுகிய எண்ணங்களும், கோட்பாடுகளும் அவருடைய அகராதியில் கிடையாது. இதை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் உணர்வதில்லை. அவர்களுடைய வழிபாடுகள் குறித்த சிந்தனைகள் திட்டவட்டமானவை. ஏதாவது ஒரு ஆன்மிக நூலை மேற்கோள் காட்டி அப்படித்தான் இறைவனைக் காண வேண்டும், வணங்க வேண்டும், வழிபாட்டு முறை இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வழி தான் சிறந்தது, மற்றவை எல்லாமே தாழ்ந்தது என்று மிக கெட்டியாக வழிமுறைகளைப் பிடித்துக் கொள்ளும் இவர்கள் இறைவனைத் தவற விட்டு விடுகிறார்கள்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும், வேடுவனான கண்ணப்ப நாயனாரும் இறைவனை வழிபட்ட முறைகள் சாஸ்திரங்களால் ஒத்துக் கொள்ளப்பட்டவை அல்லவே. ஆண்டாள் இறைவனுடன் கலந்ததாகவும், கண்ணப்ப நாயனாரிடம் இறைவனே "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க" என்று சொன்னதாகவும் படிக்கிறோமே. இவர்கள் வழிபட்ட முறைகளை இறைவன் ஏற்றுக் கொண்டதையும், ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் சொன்னதையும் பார்க்கையில் இறைவனை நாங்கள் அணுகும் முறை தான் சிறந்தது என்று யாரும் சொல்வதில் உண்மையில்லை என்ற முடிவுக்கே அல்லவா நாம் வரவேண்டி இருக்கிறது.
அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். 'மனிதர்கள் செயல்களுக்குப் பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் வழிபடுகிறார்கள். ஏனென்றால் இந்த மனித உலகில் செயல்களால் வெகு விரைவில் பலன் கிடைக்கிறது.'
முன்பே சொன்னது போல வழிபாடு என்றாலே இறைவனிடம் யாசித்தல் என்பது தான் பொதுவாக இருக்கிறது. அதைக் கொடு, இதைக் கொடு என்று பட்டியல் வைத்துக் கொண்டு தான் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இறைவன் கொடுப்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் வந்தால் பேரம் பேசும் வேலையும் நடக்கிறது. 'நீ எனக்கு இதைச் செய்தால் நான் உனக்கு அதைச் செய்கிறேன்' என்று பேரம் பேசுகிறார்கள். இறைவனுக்கு இவர்களிடமும் வேலையாக வேண்டியிருப்பது போன்ற பாவனையில் இறைவனை அணுகுகிறார்கள். இதில் மேல்மட்டம், கீழ்மட்டம் என்றெதுவும் இல்லை. எல்லா மட்டங்களிலும் யாசிக்கும் வேலை தான் நடக்கிறது.
ஒரு சக்கரவர்த்தியிடம் ஒரு பிச்சைக்காரன் நிதி கேட்டுப் போனான். பிச்சைக்காரன் போன போது சக்கரவர்த்தி பிரார்த்தனையில் இருந்தார். 'அந்த நாட்டை நான் வெல்ல அருள் புரி, இந்த நாட்டை வெல்ல அருள் புரி, அந்த செல்வத்தைக் கொடு, இந்த செல்வத்தைக் கொடு...' என்று இடைவிடாமல் கோரிக்கைகளைச் சக்கரவர்த்தி சத்தமாக வைத்துக் கொண்டிருந்தார்.
பொறுத்து பொறுத்துப் பார்த்த பிச்சைக்காரன் கிளம்பி விட்டான். 'நானே தேவலை போல இருக்கிறது. என்னை விடப் பெரிய பிச்சைக்காரனாய் இந்த சக்கரவர்த்தி இருக்கிறார். என்னை விடப் பெரிய பட்டியல் வைத்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு பிச்சைக்காரன் தன்னை விட மோசமாக தேவைகளில் இருக்கும் பிச்சைக்காரனிடம் பிச்சை எடுப்பது நியாயமல்ல' என்று நினைத்துக் கொண்டான்.
ஒரு விதத்தில் அவன் நினைத்தது உண்மையே. இரண்டுமே பிச்சை தான். பிச்சைக்காரன் உணவையும், காசுகளையும் பிச்சை கேட்டால், அரசர் நாடுகளையும், பல செல்வங்களையும் பிச்சை கேட்கிறார். பிச்சைக்காரனின் பிச்சைத்தட்டு சிறியது, சக்கரவர்த்தியின் பிச்சைப்பாத்திரமோ பெரியது.
இப்படித் தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது என்பது யாசகம் கேட்பதாய் இருக்கிறது. தேவைகளைப் பொருத்த வரை அரசன் முதல் ஆண்டி வரை சரி சமமாகவே இருக்கிறார்கள்.
ஆனால் இதைக்கூட ஸ்ரீகிருஷ்ணர் இழிவாகச் சொல்லாமல் ஒரு தகவலைச் சொல்கிறாற் போலவே சொல்வது கவனிக்கத் தக்கது. பலனை எதிர்பாராமல் செயலைச் செய்யச் சொன்னவர், தன்னை அடையும் வழியில் கூட விருப்பைக் களையச் சொன்னவர், பெரும்பாலானோர் பலனைக் கருதி வழிபடும் விதத்தைக் குறைபாடாகச் சொல்லாமல் அப்படி லௌகீக எதிர்பார்ப்பில் செய்யும் வழிபாட்டுச் செயல்களுக்கு விரைவில் பலன் கிடைப்பதாகச் சொல்கிறார்.
ஏன் லௌகீக செயல்களில் விரைவில் பலன் கிடைக்கிறது தெரியுமா? கேட்டதில் பெரும்பாலானவற்றை இறைவன் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அப்போதும் போதாமல், மேலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு நிற்கிற மனிதனுக்கு அப்போதாவது புத்தி வருகிறதா என்று பார்க்கிறார். அப்படித் தரவில்லையென்றால் இது மட்டும் கிடைத்திருந்தால் நான் மிகவும் திருப்தியுடன் இருந்திருப்பேன் என்கிற பொய்யான அபிப்பிராயத்திலேயே மனிதன் வாழ்ந்திருப்பான். ஆசைகளை எத்தனை தான் நிறைவேற்றினாலும் புதிது புதிதாக வேறு வேறு ஆசைகள் கிளம்புவதை உணர்ந்து, முடிவில்லாத இந்த ஆசைகள் காட்டும் ஆசையில் மனிதன் சலிப்படைந்து, ஒரேயடியாய் இதை விட்டொழித்து கடைத்தேறத்தான் விரைவில் பலன் தருகிறார்.
இது மனிதன் அனுபவித்து, அறிந்து தெளிய வேண்டிய சமாச்சாரம். தானாகத் தெளிவடைந்தால் ஒழிய இதை விட்டொழிக்க முடியாது. இது கடக்க வேண்டிய பாதையே ஒழிய, ஒதுக்கக் கூடிய பாதை அல்ல.
கடற்கரையில் கிடக்கும் கிளிஞ்சல்களைப் பொக்கிஷம் போல சேர்த்து வைத்துக் கொள்ளும் குழந்தைகளைப் பார்த்து 'இதெல்லாம் மதிப்புடையவை அல்ல, சும்மா குப்பைகளைச் சேர்க்காதீர்கள்' என்று பெற்றோர் சொன்னால் குழந்தைகள் கேட்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்து எடுத்து வீசிப்பாருங்கள். ஆத்திரமடைந்து அழுது தீர்ப்பார்கள். ஆனால் வளர்ந்து விட்ட பிறகு அதைத் தானாகவே வெளியே வீசி விடுவார்கள். கிளிஞ்சல்கள் விஷயத்தில் குழந்தைகள் வளர்ந்து விடுபடுகிறார்கள். ஆனால் ஆசைகள் விஷயத்தில் மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் வளர்ந்து பக்குவம் பெற்று விடுபடுவதில்லை. அதுவே பொதுவான உலக இயல்பாக இருக்கிறது.
மேலும் பிரார்த்தித்துப் பெறும் பொருள்களை மனிதனால் அளக்க முடிகிறது. அதனால் சீக்கிரம் கிடைத்ததாக மனிதன் உணர்கிறான். ஆனால் பொருளல்லாத மற்ற மேம்பட்ட உணர்வுகளையும் அனுபவங்களையும் மனிதனால் அளக்க முடிவதில்லை. அதனால் அவற்றைப் பிரார்த்தித்துக் கேட்பவர்களும், கிடைத்தால் உண்மையாக உணர்பவர்களும் வெகு சொற்பமே.
பாதை நீளும்....

முந்தைய அத்தியாயம் - கீதை காட்டும் பாதை 14 - நல்லதுக்கு காலமுண்டு!

கீதை காட்டும் பாதை 14 - நல்லதுக்கு காலமுண்டு!

கீதை காட்டும் பாதை 14 - நல்லதுக்கு காலமுண்டு!

என்.கணேசன்
து வரை சொன்ன யோக ரகசியங்கள் ஆதிகாலத்திலேயே தன்னால் உபதேசிக்கப்பட்டது என்றும், பின் வழிவழியாக சொல்லித்தரப்பட்டு பாதுகாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் மறக்கப்பட்டு விட்டது என்றும் ஸ்ரீகிருஷ்ணர் ஞான யோகத்தின் துவக்கத்திலேயே சொல்ல, அர்ஜுனனிற்கு சந்தேகம் வருகிறது. "நீயோ இந்தக் காலத்தவன், நீ எப்படி ஆதிகாலத்திலேயே உபதேசித்திருக்க முடியும்?" என்று கேட்கிறான்.



கீதையின் மிகப் பெரிய சிறப்பு 'நான் உபதேசித்துக் கொண்டே போகிறேன், நீ கேட்டுக் கொண்டே வா' என்ற விதத்தில் இல்லாதது தான். கண்மூடித்தனமாக பின்பற்றுதல் இங்கு ஊக்குவிக்கப்படவில்லை. நிறைய இடங்களில் அர்ஜுனன் கேள்விகள் அறிவுபூர்வமான சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றன. அறிவுக்கு ஒத்து வராததை அர்ஜுனன் உடனடியாக ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல அதை வெளிப்படையாகவே சொல்லவும் செய்கிறான்.

எதிர் கேள்விகள் கேட்பது மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. என்னை எப்படி நீ சந்தேகப்படலாம் என்பது போன்ற கோபத்தையும் ஸ்ரீகிருஷ்ணர் எழுப்பவில்லை.

ஸ்ரீகிருஷ்ணரைத் தன் நெருங்கிய உறவினராகவும், நண்பனாகவும் மட்டுமே கண்டு வந்த அர்ஜுனனின் இந்த நியாயமான கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கிறார்.

"அர்ஜுனா! எனக்கு எத்தனையோ ஜென்மங்கள் கழிந்து விட்டன. உனக்கும் அப்படியே. அந்த ஜென்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.

நான் பிறப்பற்றவனாகவும், அழிவற்றவனாகவும், சகல பூதங்களுக்கும் ஈசனாகவும் இருந்த போதிலும் என்னுடைய மாயையினால் இயற்கையை வசமாக்கிக் கொண்டு அவதாரம் செய்கின்றேன்.

பரதகுமாரனே! எப்போதெல்லாம் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன்.

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்."

அர்ஜுனனும், ஸ்ரீகிருஷ்ணரும் அந்தந்த உருவத்தில் மட்டும் மஹாபாரத காலத்தினவரே தவிர, இருவருக்கும் அது ஒரே ஒரு பிறவி அல்ல. எத்தனையோ பிறவிகள் முன்பே எடுத்திருக்கின்றனர். ஆனால் இறை நிலையில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கு அனைத்துப் பிறவிகளும் நினைவு இருப்பதும் மனித நிலையில் இருக்கும் அர்ஜுனனுக்கு அவை குறித்த எந்த நினைவும் இல்லாமல் இருப்பதே வித்தியாசம்.

கீழ்நிலையில் இருந்து இறைநிலையை அடையும் வரை மனிதன் எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கிறது. அவனது ஆத்ம ஞானத்தை மறைக்கும் எத்தனையோ திரைகளை விலக்க அந்தப் பிறவிகள் அவனுக்குத் தேவையாக இருக்கின்றன. உண்மையான 'நான்' என்பதை அவன் உணரும் முன் எத்தனையோ பொய்யான 'நான்'களை அந்தப் பிறவிகளில் பாவித்து பின் அதெல்லாம் 'நான்' அல்ல என்று தெளிவடைய வேண்டி இருக்கிறது. அதே போல ஒரு பிறவியில் செய்த கர்மங்களின் பலன்கள் அனுபவிக்க மீதி இருந்தால், அப்போதும் அவனுக்கு இன்னொரு பிறவி தேவைப்படுகிறது.

இந்த நிலைமை மனிதனுக்குத் தானே இறைவனுக்கில்லையே, பின் ஏன் இறைவன் பிறவி எடுக்கிறார் என்ற கேள்வி எழுவது இயற்கை. அனைத்தும் அறிந்தவருக்கு இனி அறியவோ, தெளியவோ ஏதுமில்லை என்பதால், இறைவன் கர்மங்களால் கட்டுண்டவர் அல்ல என்பதால் இந்தக் கேள்வி எழுகிறது. அதற்கு பதிலாகத் தான் ஸ்ரீகிருஷ்ணர், தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தன்னை சிருஷ்டித்துக் கொள்வதாகவும், நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிக்க ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் எடுப்பதாகவும் கூறுகிறார்.

தனிமனிதன் பிறவி எடுப்பது தன்னைக் கண்டு கொண்டு உய்வடைய என்றால் இறைவன் அவதாரம் எடுப்பது தர்மத்தை நிலைநாட்ட - தர்மத்தைக் கடைபிடிப்பவர்களைக் காப்பாற்ற. அதர்மம் மேலோங்கும் போது துன்புறும் நல்லவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் விதமாகவே இறைவன் தோன்றுகிறார். பிறப்பும் இறப்பும் இல்லா இறைவன் அவ்விரண்டிற்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதும், பிறவியினால் வரும் அனைத்து அசௌகரியங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதும், நல்லவர்கள் மேல் உள்ள எல்லையில்லாத கருணையினால் தான்.

அதர்மம் வெளிப்பார்வைக்கு எப்போதுமே பலமுள்ளதாகத் தான் தோன்றும். அதற்குக் கிடைக்கும் ஆரம்ப வெற்றிகள் அதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும். அதனாலேயே அது அதிக கர்வத்தையும் ஏற்படுத்தும். அத்துடன் அதர்மத்தின் தன்மையே ஒரு அளவோடு நிற்காமலிருப்பது தான். அப்படி கர்வத்துடன் அதர்மம் அத்துமீற ஆரம்பிக்கும் போது 'நல்லதுக்கு காலமில்லை' என்ற விரக்தியை பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்துவதுண்டு.

அப்படி அதர்மம் மேலோங்கும் எல்லா சமயங்களிலும் இறைவன் தோன்றுவதாக கீதை சொல்கிறது. அந்த எல்லா சமயங்களிலும் இறைவன் தனி உருவம் எடுத்தே தோன்ற வேண்டும் என்பதில்லை. இறைவன் பலர் மனதிலும் எண்ணமாகவும், சக்தியாகவும், தைரியமாகவும் உருவெடுக்கலாம்.

அடக்குமுறை, அராஜகம் ஆகியவற்றிற்கு அசைந்து கொடுக்காமல், ஆசை காட்டும் போது விலை போகாமல், அதர்மத்தை உறுதியாக எதிர்த்து நிற்கும் அபூர்வ மனிதர்களைக் காணும் போது மனிதசக்திக்கும் மீறிய சக்தி அவர்களை உந்துவதை நம்மால் உணர முடியும். அந்த சக்தி இறைவனுடையதாகவே இருக்கிறது. அந்த சக்தியின் முன் அதர்மம் தோற்று விடுகிறது.

பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரையான வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு விளங்காமல் போகாது. ஒவ்வொரு காலத்திலும் அநியாயங்களும், அக்கிரமங்களும் தலை விரித்தாடும் போது, அதைச் செய்கிறவர்களின் அதிகாரம் எல்லையில்லாததாக இருக்கும் போது அவர்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்றே எண்ணத் தோன்றும். புராண காலத்தில் கூறப்பட்ட அரக்கர்களை விட மோசமாக அவர்கள் நடந்து கொண்டு தங்கள் பலத்தை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் அசைக்க முடியாதவர்கள் என்று எண்ணப்பட்ட அவர்கள், வானளாவிய அதிகாரம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த அவர்கள் கடைசியில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு இருக்கிறார்கள். அதை செய்யக்கூடிய மனிதனோ, மனிதர்களோ உருவாகியிருப்பது தெய்வ சங்கல்பத்தாலேயே. அதை செய்து முடிக்கிற வரையில் இறைசக்தி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

அப்படியானால் தனி அவதாரம் இறைவன் எடுப்பது எப்போது? அது நீண்ட கால இடைவெளிகளிலேயே நிகழ்கிறது. தீமைகளும் அதர்மங்களும் சில தனி மனிதர்களிடத்தில் மட்டும் இல்லாமல் பெரும்பாலான மனிதர்களிடமும் காணப்படுகையில், சமூகத்தில் சீர்கேடுகள் புரையோடிப் போயிருக்கையில், ஒரு முழுமையான சீர்திருத்தமும், மாற்றமும் தேவைப்படுகையில், ஒரு அவதார புருஷர் பிறவி எடுக்கிறார். அந்த அவதார புருஷர் மகத்தான மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறார். அவர் வருகையால் சமூகத்தின் மனப்போக்கும், வாழ்க்கை முறையும் அடியோடு மாறி ஒரு மறுமலர்ச்சி ஏற்படுகிறது.

மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் :

"அர்ஜுனா! திவ்யமான என்னுடைய அவதார ரகசியத்தையும் என்னுடைய செயல்களையும் எவனொருவன் அறிந்து கொள்கிறானோ அவன் உடலை விட்டுப் பிரிந்தபின் மறுபடியும் பிறக்க மாட்டான். அவன் என்னையே அடைந்து விடுவான்."

இறைவனுடைய அவதார ரகசியத்தையும், எல்லாவற்றிலும் இறை சக்தியின் செயல்பாடுகளையும் அறிய முடிந்தவனுக்கு மேலும் அறிந்து கொள்ள எதுவுமில்லை. அறியாமை நீங்கி விடுவதால் அதனால் விளையும் கர்மவினைகளும் அவனைப் பிணைப்பதில்லை. எனவே மரணத்திற்குப் பிறகு மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லாத அவன் இறைவனை அடைந்து விடுவான்.

"பிறவாமை வேண்டும்" என்று காரைக்கால் அம்மையாரும், "இருப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமற் கா" என்று பட்டினத்தாரும் இறைவனிடம் வேண்டியதைப் படித்திருக்கிறோம். பிறவிப் பெருங்கடலில் சிக்கி, சுக துக்க அலைகளால் ஓயாமல் அலைக்கழிக்கப்பட ஞானிகள் விரும்புவதில்லை. எனவே அதில் சிக்காமல் இருப்பதே அவர்களின் லட்சியமாக இருக்கிறது. அதற்கான வழியையே இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கிறார்.
பாதை நீளும்..

கீதை காட்டும் பாதை 13 - பாவம் செய்யத் தூண்டுவது எது?

கீதை காட்டும் பாதை 13 - பாவம் செய்யத் தூண்டுவது எது?

- என்.கணேசன்

நன்மை எது தீமை எது என்பதை சாதாரண அறிவுள்ள மனிதன் கூட அறிவான். நல்ல செயல்களால் நன்மையும் தீய செயல்களால் தீமையும் விளையும் என்பதையும் அவன் அறிவு அவனுக்கு உணர்த்துகிறது. ஆனால் செயல் என்று வரும் போது தினசரி வாழ்க்கையில் தீய செயல்களில் சர்வ சாதாரணமாக அவன் ஏன் ஈடுபடுகிறான்? அவன் அறிவையும் மீறி அவனைத் தீய செயல்களில் ஈடுபடத் தூண்டுவது எது என்ற யதார்த்த கேள்வி அர்ஜுனன் மனதில் எழுகிறது.

அர்ஜுனன் கேட்கிறான். “வார்ஷ்ணேயா (விருஷ்ணி குலத்தில் பிறந்த கிருஷ்ணா), மனிதன் தானாக விரும்பாவிட்டாலும் பலாத்காரமாக ஏவப்பட்டவன் போல பாவம் செய்கிறானே! அவனை அப்படி பாவம் செய்யத் தூண்டுவது எது?”

இந்தக் கேள்வி நம் மனதிலும் எழாமல் இருக்க முடியாது. கர்ம யோகத்தின் மிக உயர்ந்த கருத்துகளைப் படிக்கும் போது இவையெல்லாம் உண்மை என்ற உணர்வு நம்முள் ஏற்பட்டாலும் அர்ஜுனனைப் போல நம் மனதிலும் குழப்பத்துடன் அந்தக் கேள்வி எழுகிறது. “படிக்க எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. உண்மை என்றும் தோன்றுகிறது. ஆனால் நடைமுறை என்று வருகையில் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லையே. அதற்கு எதிர்மாறாக அல்லவா நாம் பெரும்பாலும் நடந்து கொள்கிறோம். அது எதனால்?”

ஸ்ரீகிருஷ்ணர் இதற்குப் பதிலளிக்கிறார்.
“அது தான் காமமும் கோபமும். அது ரஜோ குணத்திலிருந்து உண்டாவது. அது எல்லோரையும் பாவம் செய்யத் தூண்டுவது. மனிதனின் பரம விரோதி அது தான் என்பதை அறிந்து கொள். புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.

ஆசை என்னும் காலாக்னியானது ஞானியின் அறிவை சூழ்ந்து கொண்டு அன்றாட விரோதியாக உள்ளது.



புலன்கள், மனம், அறிவு ஆகியவையே காமத்தின் இருப்பிடம். அது ஞானத்தை மறைத்து மனிதனை ஆட்டிப்படைத்து மயக்கத்தில் ஆழ்த்துகின்றது.”

காமம் என்ற சொல்லைத் தமிழில் பொதுவாக ஒரு குறிப்பிட்ட உணர்விற்கு நாம் பயன்படுத்தினாலும் இங்கு அந்த சொல் ஆசை என்ற விரிவான அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய எல்லாத் தவறுகளுக்கும் ஆரம்பம் ஆசையில் இருந்து தான் ஆரம்பமாகிறது. சாங்கிய யோகத்தில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படி சென்று முடிகிறது என்று ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியதைப் பார்த்தோம்.

சரி என்று தோன்றுவதை நடைமுறைப்படுத்த முடியாமல் தவறை நோக்கிச் செல்லும் நம் வாழ்க்கை முறைக்கு ஆசையும் அதன் மூலமாக வரும் கோபமும் தான் காரணம் என்றும், அதனால் அதுவே நம் உண்மையான விரோதி எனவும் ஸ்ரீகிருஷ்ணர் மறுபடியும் கூறுகிறார்.

உண்மையான ஞானம் நம்முள் ஒளிர்கிற போது மிகத் தெளிவாக இருக்கிறோம், எந்தப் பிரச்னையும் இல்லை. ஞானம் மறைந்திருக்கும் போது தான் ஆசை தலையெடுக்கிறது. ஆசை வந்து விட்டாலோ அதனுடன் அத்தனை பிரச்னைகளும் கூடவே வந்து விடுகின்றன. ஞானத்தை மனிதனின் ஆசாபாசங்கள் மறைத்து விடுகின்றன.

இங்கு ’புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப் பட்டிருக்கிறது’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் உதாரணம் ஆழ்ந்த பொருள் கொண்டது. இந்த உதாரணங்கள் முறையே மனிதர்களின் சத்வ, ரஜோ, தாமச குணாதிசயங்களுக்கு ஏற்ப சொல்லப்பட்டிருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால் சத்வ குணம் நற்குணங்கள், அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ரஜோ குணம் சுறுசுறுப்பானது என்றாலும் அது ஆசை, பரபரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. தமோ குணம் அறியாமை, சோம்பல், ஜடத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்த மூன்று குணங்களுமே ஞானத்தை மறைக்கும் தன்மை உடையவை. இம்மூன்று குணங்களையும் கடந்தால் மட்டுமே ஞானம் சாத்தியம். இந்தக் குணங்கள் இருக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் அவை ஞானத்தை மறைத்துக் கொண்டே இருக்கும்.

புகையினால் நெருப்பு மூடப்பட்டிருப்பது சத்வகுணம் உள்ளவர்களுக்கான உதாரணம். புகை மறைத்தாலும் இடையிடையே தீயின் ஜுவாலைகளும் தெரியாமல் இருப்பதில்லை. இந்த மறைத்தல் அரைகுறையானது. இடையிடையே ஞானமும் ஒளிரும். அதே நேரத்தில் புகையும் மறைக்கும். சத்வ குண ஆசைகள் உயர்ந்தவையாக இருந்தாலும் அவையும் ஞானத்திற்கு அவ்வப்போது ஒரு திரையே.

அழுக்கினால் கண்ணாடி மூடப்பட்டிருப்பது ரஜோ குணத்தவர்களுக்கான உதாரணம். அழுக்கு அதிகமாக கண்ணாடியில் மண்டிக் கிடக்குமானால் உருவம் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அது மிக மங்கலாகவும், தெளிவில்லாமலும் இருக்கும். இங்கு ஞானம் சத்வ குணத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மறைக்கப்படுகிறது.

கருப்பையினால் கரு மூடப்பட்டிருப்பது தாமச குணத்திற்கான உதாரணம். இங்கு ஞானத்தைக் காண வாய்ப்பே இல்லை. வளர்ச்சி அடையும் வரை ஞானம் மறைந்த நிலையிலேயே இருக்கும்.

காற்று வீசி புகையை விலக்கினாலும், இயல்பாகவே புகை குறைந்தாலும் தீயைப் பார்க்க முடிவது போல சத்வ குணத்தவருக்கு ஞான தரிசனம் எளிதில் கிடைக்கலாம். அழுக்கைத் துடைத்து நீக்கினால் மட்டுமே கண்ணாடியில் தெளிவாகக் காண முடிவது போல முயற்சி எடுத்தால் மட்டுமே ரஜோ குணத்தவருக்கு ஞானத்தைக் காண முடியும். வளர்ச்சி பெற்று கருப்பையிலிருந்து வெளிவரக் காலம் எடுத்துக் கொள்வது போல் தாமச குணத்தவருக்கு மேலும் அதிக காலம் தேவைப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி அடைந்து பக்குவம் பெற்றுத் தயாரான பின்னரே அவர்கள் ஞானமடைய முடியும்.

தீயின் இயல்பு சுடுவது. எல்லாவற்றையும் அறிந்தவனே ஆனாலும் அவன் ஆசை என்னும் தீயினால் சூழப்பட்டால் துன்பம் என்ற சூடுபட்டே ஆக வேண்டும். எனவே அன்றாடம் அவனை சூழக்கூடிய ஆசை என்னும் தீயை விரோதியாக எண்ணி அதனிடம் ஞானி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆசை ஆரம்பத்தில் சேருமிடம் புலன்கள். புலன்களைக் கட்டுப்படுத்தி வைத்திரா விட்டால் அங்கு ஆசைகள் அடைக்கலம் சேரும். புலன்வழிச் செய்திகளில் மனம் மயங்கி நிற்கும் போது ஆசைகள் மனத்தையும் ஆட்கொள்கிறது. புலனின்பத்தில் ஈடுபட்டு அதன் நினைவுகள் குறித்த சிந்தனைகள் அறிவிலும் அதிகமாகப் பதியுமானால் ஆசைகள் அறிவையும் ஆட்கொள்கிறது. இப்படி புலனிலிருந்து அறிவு வரை ஆதிக்கம் செய்ய முடியும் போது ஆசைகள் நம் அறிவை மறைத்து விடுகிறது.

சரி, இந்த ஆசையின் ஆதிக்கத்திலிருந்து எப்படித் தான் மீள்வது? அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் வழி சொல்கிறார்.

”நீ புலன்களைக் கட்டுப்படுத்து. பின்னர் ஞானத்தையும், பகுத்தறிவையும் அழிக்கும் இந்தக் காமம் என்ற பாவியை நீ ஒழித்து விடு.

புலன்கள் நுட்பமானவை தான். ஆனால் அவற்றை விட மனம் நுட்பமானது. மனத்தைக் காட்டிலும் அறிவு மிகவும் நுட்பமானது. அறிவைக் காட்டிலும் ஆன்மா மிக நுட்பமானது.

தோள்வலி மிக்கவனே! அறிவைக் காட்டிலும் மிக நுட்பமான ஆத்மாவை அறிந்து, மனதை ஆத்மசக்தியால் அடக்கி, காமம் என்னும் கொடிய விரோதியை அழித்திடுவாயாக!”

ஆசையின் ஆரம்ப நுழைவிடமான புலன்களைக் கட்டுப்படுத்தி கவனமாக இருந்தால் அதுவே ஆசையை ஒழிக்க மிக சுலபமான வழி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

புலன்கள், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கும் மனிதனிடம் உள்ளன. புலன்களை விட அதிகமாக மனமும், மனதை விட அதிகமாக அறிவும், அறிவை விட அதிகமாக ஆன்மாவும் சக்தியிலும், நுட்பத்திலும் உயர்ந்தவை.

ஐன்ஸ்டீன் மிக அருமையாகக் கூறுவார். “ஒரு பிரச்னையை உருவாக்கிய நிலையில் இருந்து கொண்டே அதனைத் தீர்த்து விட முடியாது”. அது முற்றிலும் உண்மை. அதிலேயே உழன்று கொண்டிருக்கையில் தீர்வும் தெரியாது, தீர்க்கும் சக்தியும் இருக்காது. அதைத் தீர்க்க வேண்டுமானால் அதை விட மேம்பட்ட, அதிக நுட்பமான உணர்வு நிலைக்குச் சென்றால் மட்டுமே தீர்வுக்கு வழி சுலபமாகத் தெரியும், தீர்த்து வைக்கும் சக்தியும் கிடைக்கும்.

எனவே ஆசைகள் புலன்கள், மனம், அறிவு என்ற மூன்றையும் ஆட்கொண்டு நமக்கு விரோதியைப் போல சதா துன்பத்தில் ஆழ்த்தி வருவதால் அந்த விரோதியை அந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஆத்ம ஞானத்தால் மூன்றையும் அடக்கி ஆசையை அழித்து விடச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இத்துடன் கர்மயோகம் நிறைவுறுகிறது. இனி ஞான யோகம் ஆரம்பிக்கிறது.
பாதை நீளும்...

கீதை காட்டும் பாதை 12 : உபதேசம் தவிர்ப்போம்.. உதாரணமாக இருப்போம் !

கீதை காட்டும் பாதை 12 : உபதேசம் தவிர்ப்போம்.. உதாரணமாக இருப்போம் !

- என்.கணேசன்
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:
"பார்த்தா.. பாமரன் பற்றுதலுடன் எல்லாச் செயல்களையும் செய்வது போல் பண்டிதன் மனிதகுல நலனிற்காக பற்றின்றி செயல் புரிய வேண்டும்.
கர்மத்தில் பற்றுள்ள பாமரனின் மனதை பண்டிதன் குழப்பி விடக்கூடாது. அதற்கு மாறாக பண்டிதன் பற்றின்றி எல்லாக் கர்மங்களையும் செய்ய வேண்டும். பாமரனையும் அவ்விதமே செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.
ஞானி கூட அவனது இயல்பின்படியே நடக்கின்றான். எல்லா உயிர்களும் அவற்றின் குணங்களையே பின்பற்றுகின்றன. அப்படி இருக்கையில் நிர்ப்பந்தப்படுத்துவதால் என்ன பயன்?"
இந்த இடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாமரனின் மனோதத்துவத்திற்கேற்ப தன் உபதேசத்தைத் தொடர்கிறார். பாமரன் தன் சுயநலத்திற்காக ஒரு செயலை மிகுந்த அக்கறையுடன் செய்கிறான். கர்மயோகி அதே அக்கறையுடன் அந்த செயலை மனிதகுல மேம்பாட்டிற்காகச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
பொதுச் செயல் என்று வந்து விட்டாலே பலருக்கும் ஒரு அலட்சிய மனோபாவம் வந்து விடுகிறது. அந்த அலட்சியத்தைத் தவிர்த்து தனக்காகவும், தான் நேசிக்கின்ற மனிதர்களுக்காகவும் செய்கின்ற போது ஒரு காரியத்தை எப்படி ஆத்மார்த்தமாகச் செய்வோமோ அதே போல் ஆத்மார்த்தமாக அந்த காரியத்தைப் பொதுநலனுக்காகச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
எல்லோரும் அவரவர் இயல்பின்படியே நடக்கின்றனர். ஞானியானாலும் சரி, பாமரனானாலும் சரி, மற்ற உயிரினங்களானாலும் சரி அவரவர் இயல்பின்படி நடப்பதே இயற்கையாக இருக்கிறது. அப்படி இருக்கையில், எத்தனை உயரிய தத்துவமானாலும் கேட்பவர் அறிவுக்கே எட்டாத தத்துவமானால் அதை அவரிடம் உபதேசிப்பது வீண் தான்.
அறிவுக்கு எட்டும் போதே அதை நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வருவது எப்படிப்பட்ட பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது என்பது ஆன்மிகப் பாதையில் சிறிது தூரம் சென்றவர்களுக்குக் கூடத் தெரியும். அப்படி இருக்கையில் ஒருவனது அறிவுக்கே எட்டாத விஷயத்தை அவனுக்கு உபதேசிப்பதும், அவனை அந்த வழியின்படி நடக்க நிர்ப்பந்திப்பதும் பயனில்லாத செயல் அல்லவா? ஏதோ தனக்கிருக்கும் சில்லறை அறிவுக்கேற்ப வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு போகும் அவன், தன் வாழ்க்கை ஓட்டத்தை அறிந்தவன். அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி முடக்கிவிடக் கூடாது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
நிர்ப்பந்தத்தால் யாரும் எந்த நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. தானாகக் கனிவதற்கும், தடியால் அடித்துக் கனிய வைப்பதற்கும் உள்ள வித்தியாசம் கனியின் ருசியில் கண்டிப்பாகத் தெரிந்து விடும். எனவே உண்மையான ஞானிகள் எதையும் யாரிடமும் கட்டாயப்படுத்துவதில்லை. நிர்ப்பந்தங்கள் இருக்கையில் வேஷங்களும், நடிப்புகளும் அதிகமாகி மனிதன் உண்மையை விட்டு விலகி ஒரு பொய் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான். எனவே எந்த ஒரு கட்டாயமும் ஆன்மிக மார்க்கத்தில் எதிர்விளைவுகளையே விளைவிக்கும்.



அப்படியானால் அறியாதவர்களை அப்படியே விட்டுவிடுவதா? அறிவுக்கு எட்டாததை விளக்கவும் கூடாது, கட்டாயப்படுத்தவும் கூடாதென்றால் அறிந்தவர்கள் அவர்களை எப்படித்தான் உயர்த்துவது?
இந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான், நல்ல முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி அவனையும் அப்படியே வாழ உற்சாகப்படுத்து என்கிறார். பல சித்தாந்தங்களையும், வேதாந்தங்களையும் விட அதிகமாக கண்முன் இருக்கும் உதாரணம் ஒருவனை மேல்நிலைக்கு மாற்ற வல்லது. எனவே புரியாதவனிடம் பிரசங்கம் செய்யாமல் நல்ல உதாரணமாக வாழ்ந்து காட்டி புரிய வை என்கிறார்.

இரண்டாம் உலகப் போரும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்க பத்திரிகையாளர் இருவர் கண் முன்னால் இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை அப்போது அறிவித்திருந்தார். உடனே மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. ஆனாலும் அவர் காட்டிய வழியில் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேய சிப்பாய்களை ஓரிடத்தில் எதிர் கொள்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒரு குழு முன்னே செல்கிறது. ஆங்கில சிப்பாய்கள் தடியால் அடித்து காயப்படுத்துகிறார்கள். ஒரு சுதந்திரப் போராட்ட வீரன் கூட திருப்பி அந்த சிப்பாய்களைத் தாக்க முற்படவில்லை. அடிபட்டு ஒரு குழு வீழ்கிறது. அடுத்த குழு சிப்பாய்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது. அதுவும் அப்படியே அடிபட்டு வீழ்கிறது. அந்தக் குழுவினரிலும் ஒருவர் கூடத் திரும்ப ஆங்கிலேயர்களைத் தாக்க முனையவில்லை. மூன்றாவது குழு முன்னேறுகிறது. ஆங்கிலேய சிப்பாய்கள் அவர்களை அடிக்க முடியாமல் விக்கித்து நிற்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே!
இந்த நிகழ்ச்சியை மெய்சிலிர்க்கப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் அதைப் புகைப்படம் எடுத்து ஒரு அதிசய செய்தியாக தங்கள் நாட்டில் வெளியிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி உலகின் எந்த மூலையிலும் நடந்ததில்லை என்றும் சத்யாகிரகம் முன் அடக்குமுறை பலமிழந்து போனதைத் தங்கள் கண்களால் காண முடிந்தது என்றும் எழுதினார்கள். அத்தனை பெரிய கூட்டத்தினர் சாத்வீக முறையில் போராடிய விதத்தை நேரில் கண்டிராவிட்டால் தங்களாலேயே இந்தச் செய்தியை நம்ப முடிந்திருக்காது என்று எழுதினார்கள்.
வெறுமனே அந்த செய்தியைப் படிக்காமல் அந்த சுதந்திர போராட்ட வீரர்கள் நிலையில் நம்மை இருத்திப் பார்த்தால் தான் அந்த நிகழ்வின் மகத்துவம் புரியும். பல அடிகள் வாங்கி காயமடைந்த பின்னும் அங்கிருந்து ஓடாமல், திருப்பித் தாக்கவும் முற்படாத அத்தனை போராட்ட வீரர்களும் மகாத்மா காந்தியின் சத்யாகிரகத்தைப் படித்தோ, பிரசங்கங்களைக் கேட்டோ அப்படி உருவானவர்கள் அல்ல. மகாத்மா காந்தியின் நிஜ வாழ்க்கையில் சத்யாகிரகத்தைக் கடைபிடித்ததை முன்னுதாரணமாக நேரில் கண்டு உருவானவர்கள் அவர்கள். அதனால் தான் அறிவுபூர்வமாக அவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ, இதயபூர்வமாக அவர்களால் அதை ஏற்று பின்பற்ற முடிந்திருக்கிறது. அறிவுபூர்வமாக மட்டும் புரிந்திருந்தால் வாங்கிய முதல் அடியிலேயே புரிந்தது காணாமல் போய் ஓட்டமோ, பதில் தாக்குதலோ நடந்திருக்கும். கலவரம் வெடித்திருக்கும்.
எனவே பாமரனிடம் பக்கம் பக்கமாகப் பேசாமல் வாழ்ந்து காட்டு, புரிந்து கொள்வான் என்கிற இந்த வகை உபதேசம் மிகவும் பொருள் பொதிந்தது. இன்றைய அரசியல், ஆன்மிக, சமூகத் தலைவர்களுக்கு எட்ட வேண்டிய உபதேசம் இது. இன்று வாய் கிழியப் பேசும் தலைவர்களும், அறிவுஜீவிகளும் பெருகி விட்டார்கள். முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டும் மனிதர்களைப் பார்ப்பது தான் அரிதாக இருக்கிறது.
அப்படி கஷ்டமான காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டால் உடனே ஏற்படுவது ஆத்ம திருப்தி. ஆனால் சிறிது ஏமாந்தால் கூட இன்னொன்றும் கூடவே தலையைத் தூக்கி நிற்கும். அது தான் கர்வம். 'என்னால் தானே இப்படி முடிந்தது' என்கிற எண்ணம் வந்து விட்டால், கர்மயோகம் அங்கு காணாமல் போய் விடும். 'நான்' என்கிற அகங்காரத்தை மேலும் வளர்க்கும் எண்ணம் தான் மேலோங்கும். பொது நலன் அமுங்கி விடும்.
எனவே தான் உடனடியாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்: "இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் எல்லா தொழில்களும் நடைபெறுகின்றன. ஆணவத்தால் மதி மயங்கியவனே தான் செய்ததாக நினைக்கின்றான்.

தோள்வலி படைத்தவனே! இயற்கையின் குணத்தையும், அதில் தன் செய்கையையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவனே 'எல்லாம் இயற்கையின் இயக்கமே' என்று பற்றில்லாமல் இருப்பான்."
எல்லாமே இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் நடக்கின்றன. எந்த ஒரு உயர்ந்த காரியத்திற்கும் இயற்கை எதிராக இருந்தால் அது கண்டிப்பாக நடக்க முடியாது. ஒவ்வொரு பெருங்காரியத்தையும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு நிலையிலும் இறைவனின் ஆசிர்வாதம் அதற்கு இருந்திருப்பதை உணரலாம். எத்தனையோ அனுகூலமான விஷயங்கள் பல பாகங்களில் இருந்தும் வந்திருப்பது புரிய வரும். எதிரான விஷயங்கள் பலமிழந்து போக வைக்கப் பட்டிருப்பதையும் உணரலாம். எனவே தான் மகான்கள் "எல்லாம் அவன் செயல்" என்று சுருக்கமாகச் சொல்லி முடித்து விட்டார்கள்.
அடுத்த ஒரு சுலோகத்தில் கர்மயோகத்தை அடக்கிச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்: "உள்ளே இருக்கும் ஆன்மாவிடம் மனத்தை நிலை நிறுத்தி உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து விடு. பலனைப் பற்றிய கவலை இல்லாமலும் 'எனது' என்ற உணர்வின்றியும் மன வேதனையை உதறித் தள்ளி போர் செய்"
செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்ற தைரியம் தானாக வந்து விடும். பலனைக் குறித்த கவலையோ, கலக்கமோ, வேதனையோ தானாக விலகி விடும். தான் செய்கின்ற ஒவ்வொன்றையும் அப்படி அர்ப்பணிக்க முடிந்தவன் எல்லா அலைகளாலும் தொட முடியாத உறுதியான உயரமான பாறையிலே நிற்பவனைப் போன்றவன் ஆகிறான்.
இதே கருத்து குரானிலும் சொல்லப்பட்டிருக்கிறது. "யாராக இருந்தாலும் நல்ல காரியத்தைச் செய்கையில் தனது நோக்கத்தை அல்லாவிடம் அர்ப்பணம் செய்து விட வேண்டும். அவ்விதம் செய்பவன் அல்லாவின் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டவனாகிறான்." (குரான் 31.22)
எல்லா மதங்களிலும் இது போன்ற கருத்துகளை நாம் காண முடியும். இப்படி பற்றில்லாமலும், கர்வம் இல்லாமலும், இறைவனுக்கு அர்ப்பணித்துச் செய்கின்ற உயர்ந்த செயல்களாலேயே மனிதகுல மேம்பாடு சாத்தியமாகும்.
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம் - கீதை காட்டும் பாதை 11 : முன்மாதிரி யார்?

கீதை காட்டும் பாதை 11 : முன்மாதிரி யார்?

கீதை காட்டும் பாதை 11 : முன்மாதிரி யார்?

என்.கணேசன்



செயல்படாமல் இருக்க முடியாத தன்மையை உடைய அர்ஜுனனுக்கு கர்ம யோகம் தான் சிறந்த வழி என்றும் அதிலும் செயலின் நோக்கமும், பாவனையும் மிக முக்கியம் என்றும் உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.
"சிறந்த மனிதன் என்ன செய்கிறானோ அதையே தான் மற்றவர்களும் செய்வார்கள். அவன் காட்டும் உதாரணத்தையே உலகம் பின்பற்றுகிறது.
பார்த்தா! மூன்று உலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை எதுவுமே இல்லை. நான் அடைய வேண்டியது என்று ஒன்று இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை. அப்படியிருந்தும் கூட நான் எப்போதும் செயல் புரிந்தவனாகவே இருக்கிறேன்.
நான் தூக்கமின்றி செயலில் ஈடுபடாவிட்டால் மனிதர்கள் ஒவ்வொரு வழியிலும் என்னைப் பின்பற்றி தொழில் செய்யாதிருந்து விடுவார்கள்."
யாரை மிக உயர்வாக நினைக்கிறார்களோ, அவர் செய்வதைப் பின்பற்றித் தானும் அப்படியே செய்ய முற்படுகிற தன்மை மனிதர்களுக்கு இருக்கிறது. எனவே சிறந்த முன்மாதிரிகள் இருப்பது ஒட்டு மொத்த சமுதாயமே சிறப்படைய ஒரு உந்துசக்தி என்பது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உண்மை.
இக்காலத்தில் நடக்கும் எத்தனையோ சீரழிவுகளுக்கு நமக்கிடையே நல்ல முன்மாதிரிகள் மிகவும் குறைவு என்பதும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று வாய் நிறையப் பேசுபவர்கள் அதிக அளவில் இருந்தாலும், அதன்படி வாழ்ந்து காட்டி மனதில் பதிய வைக்கிற மனிதர்கள் இக்காலத்தில் மிக மிகக் குறைவே அல்லவா?
அவதார புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கு செய்ய வேண்டிய கடமையோ, அதன் மூலம் அடைய வேண்டிய நன்மைகளோ இந்த உலகில் இல்லாவிட்டாலும் சும்மா இருந்து ஒரு மோசமான முன்னுதாரணமாக இருந்து விடாமல் கர்ம யோகியாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
மகாபாரதப் போரில் ஆயுதம் ஏந்துவதில்லை என்ற கொள்கையில் இருந்த ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனிற்கு சாரதியாக இருக்க ஒத்துக் கொள்கிறார். பரம்பொருளானவர் பார்த்தனுக்கு சாரதி அல்லது தேரோட்டியாக இருப்பதா என்று கௌரவம் பார்க்கவில்லை. தொழில் எதுவாக இருந்தாலும் அதில் பெருமை, சிறுமை என்பதில்லை என்று அறிவுறுத்தும் கண்ணன், தன் விஷயத்திலும் அதைக் கடைபிடிக்கத் தயங்கவில்லை.
அந்தக் காலத்தில் சாரதி என்பவனுடைய கடமைகள் எளிதானதாக இல்லை என்பதை இந்தக் கட்டத்தில் நாம் நினைவில் கொள்வது முக்கியம். தேரில் போர் புரியும் வீரன் யுத்தம் ஆரம்பிக்கையில் தேர் ஏறி அது முடிந்த பின் விட்டு விட்டுப் போவது போல சாரதி இருந்து விட முடியாது. அதிகாலையில் குதிரையைக் குளிப்பாட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது ஒரு சாரதியின் வேலை. அதே போல மாலை போர் முடிந்த பின்னும் குதிரைக்குத் தண்ணீர் காட்டி, கொள்ளு கொடுத்து, அதன் உடலில் உள்ள உண்ணிகளை அகற்றி விட்டு அதை இளைப்பாற வைப்பது வரை சாரதியின் வேலை தொடர்கிறது.
இத்தனையும் ஸ்ரீகிருஷ்ணர் செய்தார் என்பது வியாசரின் மகாபாரதம் முழுமையாகப் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தன் பட்டுப் பீதாம்பரத்தின் நுனியில் கொள்ளு எடுத்துக் கொண்டு போய் குதிரைகளுக்குக் கொடுக்கும் கண்ணனின் செயல்களை வர்ணிப்பதில் வியாசருக்கு சலிப்பே இல்லை.
இதெல்லாம் ஒரு காரணத்தின் பொருட்டே அக்காலத்தில் செய்யப்பட்டது. சாரதிக்கும், குதிரைக்கும் இடையே மிக நெருங்கிய அன்பு இருந்தால் தான் யுத்தகளத்தில் சாரதியின் எல்லாக் கட்டளைகளையும் குதிரை உற்சாகமாக நிறைவேற்றும். அந்த நெருக்கத்தை ஏற்படுத்தத் தான் குதிரைக்குத் தேவையான அத்தனை வேலைகளையும் சாரதி செய்கிறான். அதனுடன் இருக்கும் நேரத்தை அதிக அளவில் வைத்துக் கொள்கிறான். யுத்தகளத்தில் குதிரை சாரதி இழுத்த இழுப்பிற்கு இயங்காவிட்டால் தேரில் இருப்பவன் தோற்பது உறுதி. எனவே சாரதி என்ற வேலையை ஏற்றுக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் அதை மிகவும் கச்சிதமாக எந்த அருவருப்பும் கொள்ளாமல் ஆனந்தமாக அதை ஆத்மார்த்தமாகச் செய்தார் என்பதை மகாபாரதம் சொல்கிறது.
அதே போல தேரில் இருந்து போர் புரியும் வீரன் எந்தப் பக்கம் தேரைத் திருப்ப வேண்டும் என்று வாய்ச் சொல்லால் சொல்ல பல நேரங்களில் முடியாது. யுத்த களத்தின் ஆரவாரத்தில் அவன் சொல்வது சாரதி காதில் சரியாக பல சமயங்களில் விழாது. எனவே எந்தப்பக்கம் போக வேண்டும் என்பதை வீரன் தன் சாரதியின் தோளை மிதித்து தான் சமிக்ஞை செய்வான். வலது தோளை மிதித்தால் வலது புறம் செல்ல வேண்டும், இடது தோளை மிதித்தால் இடது புறம் செல்ல வேண்டும்.
இறை அவதாரமான தான் அர்ஜுனன் காலால் மிதிபடுவது கேவலமானது என்று நினைக்காத ஸ்ரீகிருஷ்ணர் மகாபாரதப் போரின் பதினெட்டு நாள்களிலும் அர்ஜுனனின் கால்மிதிகளை வாங்கிக் கொண்டு சாரதி வேலை பார்த்திருக்கிறார் என்பதையும் நினைத்துப் பார்த்தால் தான் கண்ணன் கர்மயோகியாய் இருந்ததன் பெருமை விளங்கும்.
அது மட்டுமல்ல ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தை எந்த அளவு போற்றினார் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். மஹாராஷ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் புண்டலீகன் என்ற கிருஷ்ணபக்தன் தன் வயதான பெற்றோருக்கு எல்லா விதமான சேவைகளையும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். ஓரிரு நாள் சேவை செய்வது எளிது. ஆனால் பல காலம் தொடர்ந்து அப்படி சேவை செய்வது என்பது உண்மையில் மகத்தான விஷயமே.
தன் பக்தனின் சேவையை மெச்சி விட்டலன் என்ற வடிவில் ருக்மிணி சகிதம் புண்டலீகன் முன்பு காட்சியளித்தார் ஸ்ரீகிருஷ்ணர். அவர் வந்த போது தாய் தந்தையரின் உடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தான் புண்டலீகன். தான் வணங்கும் தெய்வத்தை நேரிலேயே காணும் பாக்கியம் கிடைத்த போதும் அந்த வேலையைக் கை விட்டு கடவுளை வணங்க அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் அவன் துணி துவைத்த அழுக்கு நீர் பகவானின் காலைத் தொடுவதையும் விரும்பவில்லை.
"என் பெற்றோரின் வேலையில் ஈடுபட்டிருப்பதால் தங்களை உடனடியாக கவனிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இறைவனே என்னை மன்னியுங்கள். நான் வேலையை முடிக்கும் வரையில் இந்த செங்கல்லில் நில்லுங்கள்" என்று கூறிய புண்டலீகன், விட்டலனும் ருக்மணியும் அழுக்கு நீர் கால்களில் படாமல் நிற்க ஒரு செங்கலையும் அவர்கள் பக்கம் தள்ளி விடுகிறான்.
துகாராம் இதை மராத்திய மொழியில் அழகாக வியந்து பாடுவார்:
"என்ன பைத்தியக்கார அன்பிது
விட்டலனை நிறுத்தி வைத்ததே
என்ன முரட்டுத் துணிவிது
விட்டலன் நிற்கக் கல்லைக் காட்டியதே"
தன் பக்தனின் கர்ம சிரத்தையை மெச்சிய இறைவன் அங்கேயே ருக்மிணியுடன் நிரந்தரமாக சிலையாக நின்று விடுகிறார். இன்றும் பண்டரிபுரத்தில் இறை விக்கிரகம் ஒரு செங்கல்லில் நிற்பதாகவே இருக்கிறது. தன்னைவிட அதிகமான முக்கியத்துவத்தை தன் கடமைக்குக் கொடுத்த பக்தனை மெச்ச முடிந்த இறைவனை நீங்கள் வேறெங்கே பார்க்க முடியும்?
இறைவன் ஒரு உதாரணமாக இருப்பதைக் குறிக்கும் வாசகம் பைபிளிலும் வருகிறது. "என் நுகத்தடியை நீங்கள் வாங்கிக் கொண்டு என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். என் நுகத்தடியைத் தூக்குவது எளிது. என் சுமை பளுவாக இல்லை"
பற்றுதலை விட்டு விட்டால் உழைப்பாகிய நுகத்தடியை சுமப்பது எளிதாகிறது என்று கிறிஸ்துவமும் இந்த வாசகம் மூலம் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் சுமை என்பது எதிர்பார்ப்பாலும், விளைவின் மீது வைக்கும் அதீதப் பற்றினாலும் ஏற்படுகிறது. கடமையை பலன் எதிர்பாராமல் செய்யும் போது அது ஏசுநாதர் சொன்னது போல மிக எளிமையாகிறது.
இனி ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை - 10 : செயலில் பாவனை மிக முக்கியம்!

கீதை காட்டும் பாதை - 10 : செயலில் பாவனை மிக முக்கியம்!

கீதை காட்டும் பாதை - 10 : செயலில் பாவனை மிக முக்கியம்!

- என்.கணேசன்
ஸ்ரீகிருஷ்ணர் இது வரையில் சொன்னதையெல்லாம் கேட்ட பிறகு அர்ஜுனனுக்கு அவர் பற்றற்ற நிலையையே உண்மையான அறிவு என்று சொல்வது புரிந்தது. உடனே அவன் "செயலைக் காட்டிலும் அந்த அறிவே சிறந்தது என்றால் இந்தக் கொடுமையான காரியத்தில் என்னை ஏன் புகுத்துகிறாய்? புதிராகப் பேசி என்னைக் குழப்பாமல் எதைச் செய்தால் எனக்கு மோட்சம் கிடைக்குமோ அந்த ஒரு வழியை மாத்திரம் எனக்குச் சொல்" என்று பொறுமையிழந்து சொல்கிறான்.
வாழ்க்கையின் சிக்கலான கேள்விகளுக்கு எளிமையான ஓரிரு வார்த்தைகளில் பதில் கிடைத்தால் தேவலை என்று தோன்றுவது மனிதனுக்கு இயல்பே. அர்ஜுனனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஓரிரு வார்த்தைகள் பதிலில் வாழ்க்கையின் ரகசியங்கள் முழுமையாக விளங்கி விடுவதில்லை. எனவே ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் மூன்றாம் அத்தியாயமான கர்மயோகத்தில் அர்ஜுனன் கேள்விக்கு விரிவான பதிலை சொல்ல ஆரம்பிக்கிறார்.
"பாவமற்ற அர்ஜுனா! இந்த உலகில் அடைய வேண்டிய இரண்டு நிலைகள் பற்றி உனக்கு கூறியிருக்கிறேன். ஒன்று சாங்கியர்களின் ஞான யோக நிலை, மற்றொன்று யோகிகளின் கர்மயோக நிலை.
ஒருவன் தொழிலே செய்யாமல் இருப்பதால் செயலற்ற நிலையை அடைவதும் இல்லை. இன்னொருவன் துறவியாவதால் ஈடேறுவதுமில்லை.
எந்த மனிதனும் ஒரு கணம் கூட இயங்காமல் இருப்பதில்லை. இயற்கையில் உள்ள குணமே மனிதனைத் தொழில் புரிய வைக்கின்றது."
ஒரு மனிதனால் செயலற்று இருக்க முடியுமா என்றால் முடியாது என்பதே உண்மையான பதில். சும்மா இருப்பது சுகம் என்று தோன்றினாலும் சும்மா இருப்பது சுலபமில்லை. அதை முயன்று பார்த்தவர்களுக்குப் புரியும். வேலை எதுவும் இல்லை என்றால் யாரிடமாவது பேச்சுக் கொடுப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, ஏதாவது வேடிக்கை பார்ப்பது என்று எதிலாவது ஈடுபடுவார்கள். அதையும் மீறி சும்மா இருக்க நேர்ந்தால் கடைசியில் காலையாவது ஆட்டிக் கொண்டிருப்பார்கள். அமைதியாக அமர்ந்திருப்பது அவர்களுக்கு இயலாத காரியமே.
இது புறத்தில் நடக்கும் வேலைகள். மனிதனின் அகத்தில் நடக்கும் வேலைகளுக்கோ ஓய்வே இல்லை. ஆழ்ந்த உறக்க நிலைக்குச் செல்லும் நேரம் தவிர மனதின் அலைதலுக்கு ஒரு அளவே இல்லை. 'கள் குடித்த குரங்குக்கு தேளும் கடித்து பேயும் பிடித்துக் கொண்ட நிலை'யை மனதின் நிலையாக சுவாமி விவேகானந்தர் வர்ணிப்பார். குரங்கின் இயல்பே ஒரு கணம் சும்மா இருக்க முடியாதது. அது கள்ளும் குடித்து, அதைத் தேளும் கடித்து, பேயும் பிடித்தால் அதை விட ஒரு அதிக செயல்களும், குழப்பமும், ஆர்ப்பாட்டமும் உள்ள ஒரு நிலையை ஒருவரால் சித்தரித்து விட முடியாது. அப்படிப்பட்ட நிலையில் தான் பெரும்பாலும் மனித மனம் இருக்கிறது. வெளியே சும்மா இருப்பது போலத் தோன்றினாலும் உள்ளே உள்ள நிலைமை இப்படியாக இருக்கையில் செயலற்ற நிலை என்பது பரிபூரணமாக அமைவது கோடிகளில் ஒருவருக்குத் தான் சாத்தியம்.
உலகில் உள்ள பெரும்பாலான பிரச்னைகள் மனிதனால் சும்மா இருக்க முடியாததாலேயே ஏற்படுகின்றன. செய்ய உருப்படியான வேலைகள் இல்லாதவர்களே சும்மா இருக்க முடியாமல் அடுத்தவர்கள் விஷயங்களில் அனாவசியமாய் தலையிட்டும், செய்யக் கூடாதவற்றை செய்தும் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு அவரவர் இருந்தார்களேயானால் எத்தனையோ அனாவசியப் பிரச்னைகளும், குழப்பங்களும் குறையும்.
எனவே ஞான மார்க்கம் சிறந்தது என்றாலும் அந்த மார்க்கத்தில் செல்வது அவ்வளவு சுலபமில்லை என்று ஸ்ரீகிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார். ஆரம்பத்தில் துறவியாகப் போவது மேல் என்ற முடிவுக்கு அர்ஜுனன் வந்ததல்லவா. அது சொன்ன அளவுக்கு கடைபிடிப்பது சுலபமில்லை என்று புரிய வைக்கிறார்.
மனிதனின் இயற்கையாக உள்ள குணங்கள் பண்பட்ட அறிவால் மாறினால் ஒழிய அவை தன்னிஷ்டப்படி அவனை ஆட்டிப்படைக்கவே செய்யும். வெளித்தோற்றத்தை மாற்றிக் கொள்வதால் எந்த உண்மையான மாற்றமும் ஒருவரிடத்தில் உண்டாகி விடப்போவதில்லை.
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.. "கர்மேந்திரியங்களை அடக்கும் ஒருவன் புலன்களுக்கான சாதனங்களை மனதில் சிந்தித்த வண்ணம் இருப்பானாயின் அத்தகைய மூடனை ஒரு மோசக்காரன் என்றே கூற வேண்டும்."
போலித் துறவிகள் இன்றைய சமூகத்தில் மலிய இதுவே காரணம். தோற்றங்களை மாற்றத் தெரிந்த அவர்களுக்கு தங்கள் சிந்தனைகளையும், எண்ணப்போக்கையும் மாற்றத் தெரியவில்லை என்பதே உண்மை. அவர்களில் சிலரது ஆரம்ப நோக்கம் உயர்வாகவே இருந்திருக்கலாம்.
ஆனால் அந்த நோக்கத்தின் பிரதிபலிப்பாகவே எண்ணங்களும் வாழ்க்கை முறையும் இருந்தால் மட்டுமே அவர்களால் தெய்வீக நிலையை அடைய முடியும். இல்லா விட்டால் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் முட்டாள்களாகவே இருந்து விட நேரிடும். ஸ்ரீகிருஷ்ணர் அவர்களை கடுமையாக மூடர்கள், என்றும் மோசக்காரர்கள் என்றும் வர்ணிக்கிறார்.
இதே கருத்தை திருவள்ளுவரும் கூறுகிறார்.
"ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா
பேதையின் பேதையார் இல்."
உயர்ந்த புனித நூல்களைப் படித்துணர்ந்தும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லியும் அதன்படி தான் அடங்கி நடக்காமல் இருப்பவனைப் போன்ற முட்டாள்களில் மோசமான முட்டாள் யாரும் இருக்க முடியாது என்கிறார் வள்ளுவர். அறியாதவன் தறிகெட்டு நடப்பதில் பெரிய அதிசயமில்லை. ஆனால் அறிந்தவன் அப்படி நடந்தால் அறிவு இருந்தும் அது அவனுக்குப் பயன்படாமல் போவது பரிதாபமே அல்லவா?
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார், "உனக்கு இடப்பட்டுள்ள கடமையை நீ செய். செயலற்று இருப்பதை விடச் செயல் மேலானது. செயலற்றிருந்தால் உடம்பே உனக்கு பாரமாய் போய் விடும்.
பற்றின்றி செய்யப்படும் தொழில்கள் தவிர மற்ற தொழில்கள் எல்லாம் மனிதனுக்கு விலங்கு. ஆதலால் அர்ஜுனா, பற்றை விட்டு விட்டு எத்தொழிலையும் ஈஸ்வர கடமை எனக் கருதிச் செய்"
மொத்தத்தில் செயலற்று இருப்பது சுலபமல்ல, மனிதனின் இயல்பான குணங்கள் அவனைப் பலவிதங்களில் செயல்படத் தூண்டும் என்பதால் மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்வது மேன்மையானது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். கடமைகளைச் செய்யாதவன் சும்மா இருந்து விடப் போவதில்லை. தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவான், வீணாய் போவான் என்பதால் கடமைகளையே செய்து கடைத்தேறுவது புத்திசாலித்தனம் என்கிறது கீதை. அதையும் பற்றில்லாமல் இறைவன் விதித்த கடமை என்ற உணர்வுடன் சிறப்பாகச் செய்யவும் கீதை வலியுறுத்துகிறது.
முன்பே விளக்கியது போல பற்றில்லாமல் செய்வது என்றால் வேண்டா வெறுப்பாக செயல்புரிவதல்ல. மாறாக விளைவுகள் குறித்த கவலையோ, பயமோ, அதீத பற்றோ இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன் செயல் புரிவதன் நோக்கம் முக்கியம் என்கிற செய்தியை இங்கே கூடுதலாகச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
எந்த ஒரு செயலும் எந்த பாவனையுடன் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பு அமைகிறது. சாதாரண மனிதன் சுயநலத்தோடு ஒரு செயலைச் செய்வதால் அதன் மதிப்பு அற்பமாகவே இருக்கிறது. கர்மயோகி சுயநலமின்றி செயல்புரிவதால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததாகி விடுகிறது.
டால்ஸ்டாய் கூறுகிறார்... "மக்கள் ஏசுநாதரது தியாகத்தை வெகுவாகப் புகழ்கிறார்கள். ஆனால் உலக வாழ்வில் உள்ள இந்த மக்கள் தினந்தோறும் தம் ரத்தம் சுண்ட எவ்வளவு ஓடியாடி உழைக்கிறார்கள்! இரண்டு கழுதைச் சுமையை முதுகிலே தாங்கிக் கொண்டு வளைய வரும் இந்த மக்களுக்கு ஏசுநாதரை விட எவ்வளவு அதிகக் கஷ்டமும் அவமானமும் ஏற்படுகிறது! இதில் பாதியளவாவது இறைவனுக்காகப் பாடுபடுவார்களேயானால் உண்மையில் இவர்கள் ஏசுவையும் மிஞ்சி விடுவார்களே!."


எனவே எதையும் எவ்வளவு பாடுபட்டு செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த பாவனையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம். வினோபா அழகாகக் கூறுகிறார். "கர்மத்தை ரூபாய் நோட்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். பாவனை என்ற முத்திரைக்குத் தான் மதிப்பே அன்றி செயல் என்ற காகிதத்துக்கு மதிப்பில்லை."
ஒரு கதையை நீங்கள் படித்திருக்கக் கூடும். மூன்று பேர் ஒரு கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு கல்லுடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழிப்போக்கன் மூன்று பேரிடமும் என்ன செய்கிறீர்கள் என்று தனித்தனியே கேட்டான். ஒருவன் சொன்னான்.. "கல்லுடைத்துக கொண்டிருக்கிறேன்." இரண்டாமவன் சொன்னான்.. "வயிற்றுப் பிழைப்புக்கு வேலை செய்து கொண்டிருக்கிறேன்." மூன்றாமவன் சொன்னான்.. "கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்." மூவர் செய்வதும் ஒரே வேலை என்றாலும் பாவனைகள் இங்கு வேறு வேறாகத் தான் இருக்கின்றன. மூவருக்குமே கூலி கண்டிப்பாகக் கிடைக்கத் தான் போகிறது என்றாலும் ஒவ்வொருவரும் அந்த வேலையால் அடைகிற நிறைவு ஒரே போல இருக்கப் போவதில்லை அல்லவா?
பாவனை மேன்மையாக இருந்தால் மட்டுமே சிறிய செயலோ, பெரிய செயலோ அதன் மதிப்பும், அதில் கிடைக்கும் நிறைவும் உயர்வாக இருக்கும். ஒவ்வொரு கடமையையும் 'இது இறைவன் எனக்கு விதித்தது. இதை நான் சிறப்பாகச் செய்ய வேண்டும்' என்ற பாவனையுடன் செய்து பாருங்கள். வாழ்க்கையே தெய்வீகமாக மாறி விடும்.
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

Next
கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

- என்.கணேசன்
நிலைத்த மதியுடையவனை விவரிக்கையில் ஸ்ரீகிருஷ்ணர் ஓர் அருமையான உதாரணத்தைச் சொல்லி சாதாரணமான மனிதர்களில் இருந்து எப்படி நிலைத்த மதியுடையவன் வித்தியாசப்படுகிறான் என்பதை விளக்குகிறார்.
"சாதாரணமான ஜீவன்களுக்கு இரவாக இருக்கையில் புலன்களை அடக்கிய மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான். மற்ற எல்லா ஜீவன்களும் விழித்துக் கொண்டிருக்கையில் அவன் உறங்குகின்றான்."
நிலைத்த மதியுடையவனும், ஆசைகளில் அலை மோதும் சாதாரண மதி உடையவனும் விழித்திருக்கும் நேரங்களும், உறங்குகின்ற நேரங்களும் நேர் எதிரானவை. சாதாரணமான மனிதன் உறங்குகையில் தான் கவலைகள், லாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மறந்திருக்கிறான். ஆனால் நிலைத்த மதியுடைய ஞானியோ விழித்திருக்கையிலேயே அவற்றில் எல்லாம் விடுபட்டு அமைதியாக இருக்கிறான். உலக விஷயங்கள், ஆசாபாசங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ மற்றவர்கள் விழித்திருக்க அவன் நிம்மதியாக உறங்குகின்றான்.
சாதாரண மனிதன் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நிலைத்த அறிவையுடையவனுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். அதே போல நிலைத்த அறிவுடையவன் முக்கியம் என்று நினைக்கும் விஷயங்கள் சாதாரண மனிதர்களுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும்.
சாதாரணமான மனிதனுக்கு பணம், பதவி, அதிகாரம், புகழ் எல்லாம் தான் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகவும், வெற்றியாகவும் தோன்றும். அதன் பின்னால் ஓடி ஓடிக் களைத்தாலும், அதனால் எத்தனை பாடு பட்டாலும், அவன் தன் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதில்லை. மாறாக அவனது ஓட்டமும், அவற்றின் மேல் உள்ள ஆசையும் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றன. உறக்கத்தில் மட்டுமே அவன் அதையெல்லாம் மறந்திருக்கிறான். சில சமயங்களில் உறங்கக் கூட மறக்கிறான். அவனது ஆசைகளினால் ஏற்படும் கவலையின் தாக்கத்தில் அவன் உறங்கக் கூட முடியாமல் தவிக்கிறான்.
மாறாக நிலைத்த மதியுடையவனுக்கு பணம், பதவி, புகழ், அதிகாரம் ஆகியவை துக்கத்துக்கான தூண்டில்கள் என்றும், எந்த நேரமும் எப்படியும் மாறக்கூடியவை என்றும் தெளிவாகத் தெரிவதனால் அந்தத் தூண்டில்களில் சிக்காமல் விலகி இருக்கிறான். அவன் முக்கியம் என்று உணரும் ஆத்ம சிந்தனைகளும், தர்ம நியாயங்களும் சாதாரண மனிதனுக்கு வெற்றுப் பேச்சுகளாகவும் யதார்த்த வாழ்க்கைக்கு பயனில்லாததாகவும் தோன்றுகின்றன. இப்படி இருவரும் உலகையும், வாழ்க்கையையும் அணுகும் கோணங்கள் நேர் எதிர் கோணங்களாக இருக்கின்றன.
சாதாரணமான மனிதன் புறத்தோற்றத்துக்கு மிக அதிக முக்கியத்துவம் தருகிறான். அடுத்தவர் கண்ணில் அழகாகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும், பாராட்டுக்குரியவனாகவும் தெரிய ஆசைப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சகல முயற்சிகளும், உழைப்புகளும் அந்த நோக்கத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. பிரபலமாக இருந்தால், பலர் பொறாமைப்படுகிற மாதிரி இருந்தால் அதுவே வெற்றி என்று நினைக்கிறான். எத்தனை குறைபாடுகள் தன்னிடம் இருந்தாலும் அவை மற்றவர்களுக்குத் தெரியாத வரை அவன் அதுகுறித்து கவலை கொள்வதில்லை. ஆக அவன் கவனம் புறத்திலேயே இருக்கிறது. அகமோ ஒழுங்குமுறை இல்லாமல் இருக்கிறது. அகத்திற்கும், புறத்துக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக அதிகமாக அவன் அமைதியின்மையும், துக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
ஆனால் நிலைத்த மதியுடையவன் புறத்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவன் தன் வெற்றியை அடுத்தவர்கள் அபிப்பிராயத்தில் பார்ப்பதில்லை. எப்படித் தெரிகிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம் என்று நினைக்கிறான். அவன் மகத்தான செயல்களை செயல்களைச் செய்வதில் நிறைவடைகிறான்.
அந்த செயல்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்து அவன் கவலை கொள்வதில்லை. அவன் அகத்தூய்மையில் அதிக கவனம் வைக்கிறான். அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். அவனுடைய அகத்திற்கும், புறத்துக்கும் இடையே இடைவெளி இருப்பதில்லை. எனவே நடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருப்பதில்லை. உள்ளொன்று புறமொன்று இல்லாததால், அடுத்தவருக்குத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் அவன் உணராததால் அமைதியும் நிறைவும் இயற்கையாகவே அவனுக்கு அமைந்து விடுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உதாரணத்தையும் கூறுகின்றார்.
"நதிகளிலிருந்து எப்போதும் தண்ணீர் கடலில் விழுந்த வண்ணமிருந்தாலும் அது நிரம்பி வழிவதில்லை. அது போல எல்லா ஆசைகளும் யாரிடத்தில் அடங்கி விடுகின்றனவோ அவன் சாந்தியடைகிறான். ஆசைகளில் ஆசை வைப்பவன் மனச்சாந்தி அடைவதேயில்லை."
இதை எட்வின் ஆர்னால்டு அருமையாக விளக்குகிறார். "ஆன்மா மகாசமுத்திரத்தைப் போன்றது. எல்லா பிரதேசங்களில் இருந்தும் தினந்தோறும் வெள்ளத் தண்ணீர் வந்து விழுகின்றது. ஆனால் அதன் காரணமாக சமுத்திரம் ஒருபோதும் ததும்பி வழிவதில்லை. அதன் தண்ணீர் கரையைத் தாண்டிச் செல்வதில்லை. நதிகளிலிருந்து ஏராளமான தண்ணீர் வந்து விழுந்தும் கூட சமுத்திரம் பொங்குவதில்லை. குற்றம் குறையற்ற நிறை மனிதனும் அப்படித்தான். அவன் ஆன்மாவாகிய கடலில் புலன்களின் உலகத்திலிருந்து மாயையாகிய நதிகள் வந்து விழுகின்றன. எனினும் அவன் நிலை குலைவதில்லை."
நிலைகுலைய சந்தர்ப்பங்களே இல்லாத போது அமைதியுடன் இருப்பது பெரிய விஷயமில்லை. அதற்குப் பெரிய தகுதியும் வேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் இருந்தும் அலைக்கழிக்க ஆயிரம் சந்தர்ப்பங்கள் வரும் போது தன்னிலை குலையாமலிருப்பது தான் உண்மையான ஞானம். அது அத்தனை சுலபமில்லை என்பதை நாம் நம் அனுபவங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
உபாசனா போன்ற தியான வகுப்புகளுக்குச் சென்று அங்கு பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர்கள் அந்த பத்து நாட்களில் தங்களில் பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். ரம்மியமான இயற்கை சூழல் உள்ள இடம், தியானத்திற்கேற்ற சுற்றுப்புறம், காலையில் இருந்து இரவு வரை நல்லோர் சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவுகள், நல்ல புத்தகங்கள் போன்ற அனைத்துமே ஒரு பெரிய மாற்றத்தை அந்த பத்து நாட்களில் அடைவது இனி வரப் போகும் நாட்கள் எல்லாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை அவர்களிடம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் வழக்கமான வாழ்க்கை சூழலுக்குத் திரும்பியவுடன் அந்த பத்து நாட்கள் மாற்றம் காணாமல் போய் விடுவதை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். யதார்த்த உரசல்களில் மேலோட்டமாய் அடைந்த அமைதி தேய்ந்து காணாமல் போய் விடுவதில் ஆச்சரியம் இல்லை.
சமுத்திரம் நதி நீரையும், வெள்ள நீரையும் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியாதோ அது போல நாமும் புலன்கள் அனுப்பும் தகவல்களையும், தானாக வந்து சேரும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மறுத்து விலக முடியாது. வந்து சேர்வது அவற்றின் இயல்பு. அவற்றில் நம் அமைதியை இழந்து விடாமல் இருக்கும் ஆழமான ஞானத்தைப் பெற்று உறுதியாக நிற்கும் வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளே வேண்டாம் என்று சொல்வது வாழ்க்கையையே புறக்கணிப்பது போலத் தான். நம் காலுக்கு செருப்பு போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய கல்லும் முள்ளும் இல்லாத பாதைகளே வேண்டும் என்று ஆசைப்படுவது அறிவீனம்.




அகம் மாறும் போது புறம் தானாக மாறி விடுகிறது. நிலைத்த மதி உடையவன் பெரும்பாலானோரைப் பின்பற்றி பந்தயக்குதிரையாய் ஓடி மற்றவர்களை ஜெயிக்க முற்படுவதில்லை. தன்னை ஜெயித்து, தன்னுடைய அறியாமையை ஜெயித்து தெளிவு பெறுகிறான். என்னைப் பாதிக்கிற எந்த சபலத்தையும், சூழ்நிலைகளையும் அனுப்பாதீர்கள் என்று அவன் இறைவனிடம் விண்ணப்பம் செய்வதில்லை. வருவதைத் தெளிவுடன் சந்தித்து பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறான். வருகின்றவற்றை உள்ளே இருந்து ஏதோ ஒன்று வரவேற்றால் அல்லவா அவை உள்ளே நுழையும். வரவேற்பில்லை என்றால் வருபவை தானாக விலகி விடுமல்லவா? எனவே அவன் உலகை மாற்ற முயற்சிப்பதில்லை. அது முடியாத காரியம் என்பதை அவன் அறிவான். மாறாக தன்னை மாற்றிக் கொண்டால் உலகம் தானாக மாறி விடும் என்பதையும் அவன் அறிவான். இப்படித் தான் நிலைத்த மதியுடையவன் நிறையவே சாதிக்கிறான். அதே நேரத்தில் தன் அமைதி நிலை மாறாமல் இருக்கிறான்.
இத்துடன் சாங்கிய யோகம் நிறைவு பெறுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சாங்கிய யோகத்தில் மேலோட்டமாய் சொன்ன கர்மயோகத்தை விரிவாகவே விளக்க முற்படுகிறார். இனி மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தில் பயணிப்போம்
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை 8 : ஆசையிலிருந்து அழிவு வரை..!

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 9 - திருமணம் என்றொரு சூதாட்டம்?

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 9

திருமணம் என்றொரு சூதாட்டம்?
ஒவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
சமீபத்தில் ஓர் இளைஞனைச் சந்தித்தேன். பெயர் நவீன். 24 வயது. சாஃப்ட்வேர் இன்ஜீனியர். நல்ல சம்பளம். வசதியான குடும்பம்.
குழம்பிய மனதோடு இருந்தவன், ''உடனே திருமணம் செய்துகொள் என்று என் பெற்றோர் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்'' என்றான்.
''சரியான வயதுதானே உனக்கு... கோ அஹெட்'' என்றேன்.

அடுத்து, அவன் கேட்ட கேள்வி, திகைக்க வைத்தது - ''என்னுடைய சரியான வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்வு செய்வது?''
திருமணத்தைப் பற்றி எத்தனையோ பழமொழிகளும், மேற்கோள்களும் இருக்
கின்றன. 'அது, லைசென்ஸ் கொடுக்கப்
பட்ட விபச்சாரம்’ என்கிற லெவலுக்கு விமர்சனம் செய்தார் பெர்னார்ட்ஷா. தந்தை பெரியாரோ, திருமணம் என்பதையே ஒரு 'அமைப்பு’ என உருவகப்படுத்தி கிழி கிழி என்று கிழித்தார். 'ஒவ்வொரு திருமணமும் படுக்கையில் முடிவுக்கு வந்து விடுகிறது.’, 'திருமணம் என்பது ஒரு சீட்டாட்டம். உங்கள் கையில் நல்ல கார்டு கிடைக்க அதிர்ஷ்டம் வேண்டும்’ என பல பொன்மொழிகளும் இருக்கின்றன.
நவீன் குழப்பத்தில் இருந்தாலும், அதுவே ஒரு தெளிவினால் ஏற்பட்டதுதான். ''சார்... ஒரு பெண்ணும் நானும் தீவிரமாகக் காதலித்தோம். ஆனால், கடவுள் நம்பிக்கை, சடங்குகள், சினிமா, பொழுதுபோக்குகள், புத்தகம் என்று எல்லாவற்றிலுமே தனக்கு என்ன ஆர்வமோ... அவற்றை என் மீது அவள் திணிக்க ஆரம்பித்தாள். 'விஜய் படத்துக்குப் போக வேண்டாம், சிவன் கோயிலுக்குப் போகக் கூடாது, கிரிக்கெட் பார்க்கக் கூடாது' என்றெல்லாம் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வைக்க ஆரம்பித்தாள்.
'இவளைக் கல்யாணம் செய்தால் வாழ்க்கை முழுவதும் நாம் அடிமைதான்' என்று உணர்ந்தபோது, 'ஸாரி... உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. நண்பர்களாகப் பிரிவோம்’ என்றேன். 'நோ பிராப்ளம்’ என்று பைபை சொல்லி விட்டாள்.''
நவீனை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.... அவன் தொடர்ந்தான். ''கொஞ்ச நாளில் அவள் என்னிடம் மறுபடி வருவாள் என்று உள்மனம் எதிர்பார்த்தது போலவே அவள் வந்தாள், தன் திருமண அழைப்பிதழோடு. நவீனப் பெண்களைப் பற்றிய என் நம்பிக்கைகளே ஆட்டம் கண்டன'' என்றான்.
''சரிப்படாது என்று எப்போது நீ சொல்லி விட்டாயோ, அப்போதே அவள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரத்தை அவள் பெற்றுவிட்டாளே...'' என்றேன்.
''கரெக்ட்தான். கொஞ்ச நாளிலேயே நானும் சரியாகிவிட்டேன்.''
''சரி, அடுத்து?''
''இப்போது என் அப்பா, அம்மாவுக்குப் பேரன், பேத்தி வேண்டுமாம். ஒரு பெண்ணை பார்த்து விட்டார்கள். அவளிடம் பேசிப் பார்க்குமாறும் சொன்னார்கள். அவர்களுக்காக போய் பார்த்தேன். கணவனே கண்கண்ட தெய்வம் ரேஞ்சுக்கு இருந்தாள். கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேசவே கூச்சப்பட்டாள். சமைப்பது, வீட்டு வேலை செய்வது தவிர வேறு எதிலுமே நாட்டம் இல்லை. 'ஆபீஸ் முடிந்து நேராக வீட்டுக்கு வந்து விடுவீர்களா, கெட்ட பழக்கம் கிடையாதுதானே?’ என்றெல்லாம் தயங்கித் தயங்கிக் கேட்டாள். இவள் சரிப்பட மாட்டாள் என்று மனதில் பட்டுவிட்டது.''
''ஏன் அப்படி தோன்றியது?''
''எனக்கு பல்வேறு ஆர்வங்கள் இருக்கின்றன. சேட்டன் பகத் புத்தகம் படிப்பேன். கிரிக்கெட், ஃபுட்பால் என்று விளையாட்டுகள் டெக்னிக்கலாகத் தெரியும். இலக்கியப் புத்தகங்களை தேடித் தேடி வாங்குவேன். அந்தக் காலத்து எடித் பியாஃபிலிருந்து இப்போது வந்திருக்கும் செலீனா கோம்ஸ் வரை இசை கேட்பேன். வார இறுதியில் பிராந்தியும் பருகுவேன். ஆபீஸுக்கு லீவு போட்டு அன்னா ஹஜாரே ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்டேன். ஈரானிய சினிமா, உலக சினிமா டி.வி.டி-க்கள் என்றால் உயிர்..''
''ஓகே... அதற்கும் உன் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்?''
''இவற்றில் என் வாழ்க்கைத் துணைக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்தால்தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்? அப்பாவைக் காட்டிலும் அம்மா பல மடங்கு கிரேட் பர்சனாலிட்டி. ஆனால், அப்பாவுக்காக நிறைய தன்னை மாற்றிக் கொண்டார். அம்பையின் ஒரு கதையில் வருவதுபோல், அவரே அப்பா போல் மாறிவிட்டார். என்னுடைய உயிர் நண்பன் ஆனந்த், தவறாக ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து, கடைசியில் தற்கொலையில் உயிர்விட்டான். எனக்கும் அப்படி ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது'' என்றான்.
''பெண்கள் எல்லோரும் மோசமும் இல்லை... ஆண்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. உண்மையில் காதல் என்பது திருமணத்துக்கு அப்புறம்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வலுவாக மாறுகிறது. நவீன பெண்ணோ, பழமையான பெண்ணோ... எல்லோரும் மனிதர்கள்தான். முழுக்க முழுக்க உனக்குப் பிடித்தால்தான் திருமணம் என்று பிடிவாதம் பிடிக்காதே. ஈரானியப் படங்களில் கணவன் - மனைவி உறவும், காதலும், குடும்பப் பிடிமானமும் எத்தனை அழகாகச் சொல்லப்படுகிறது? சாக்ரடீஸுக்குக் கொடுமைக்கார மனைவி கிடைத்ததும், காரல் மார்க்ஸுக்கு ஜென்னி கிடைத்ததும் யாரும் திட்டமிட்டதல்ல. ஓரளவுக்கு மனதுக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய். அவளுக்காக விட்டுக்கொடு. உனக்காக அவளும் விட்டுக் கொடுப்பாள். பயம் என்கிற கண்ணாடியோடு இந்த உறவை நீ பார்த்தால், எதுவுமே தெளிவாகத் தெரியாது'' என்றேன்.
நவீன், சற்றுத் தெளிவானவன்போல் தெரிந்தாலும், ''அப்படியென்றால்... திருமணம் என்பது ஒரு சூதாட்டம் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?'' என்றான் சிரித்தபடி.
''சூதாட்டம்தான். ஆனால் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல அது. காதல், புரிதல், விட்டுக்கொடுத்தல், மனித நேயம் போன்ற டெக்னிக்கல் திறமைகளோடு விளையாட வேண்டிய சுவாரஸ்யமான விளையாட்டு!'' என்றேன்.
''ஐ வில் ட்ரை!'' என்று விடைபெற்றான் நவீன். அவனுக்குப் பதில் சொல்லிவிட்டேனே தவிர, அவன் கேட்ட கேள்வி என்னை ரொம்பவே டிஸ்டர்ப் செய்தது. உண்மையிலேயே திருமண உறவு என்பது சூதாட்டம்தானா?!
- நெருக்கம் வளரும்...

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 8 = பொய் சொல்லப் போறேன்...பொய் சொல்லப் போறேன் !

ரொமான்ஸ் ரகசியங்கள்!

பொய் சொல்லப் போறேன்...பொய் சொல்லப் போறேன் !
ஓவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
ஆண் - பெண் உறவில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. 'நன்மை விளையும் என்றால்... பொய் சொல்வதில்கூடத் தவறில்லை' என்கிறார் திருவள்ளுவர்.
லதா - சஷாங் ஜோடி, திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், தங்களின் ஃப்ளாஷ்பேக் காதலைப் பற்றி பரஸ்பரம் பிரஸ்தாபித்து, திருமணமே நின்று போன கதையை, கடந்த இதழில் பார்த்தோம். அதன் மூலம் வரும் நீதி... சில உண்மைகளைக் கல்லறைகளைத் தோண்டி வெளியெடுப்பதில் பயன் ஒன்றும் இல்லை என்பதுதான்!

அப்படியென்றால் 'ஆண் - பெண் உறவில் வெளிப்படைத் தன்மை இருக்கவே கூடாதா... அதைச் சொன்னால் பிரச்னைதான் ஏற்படுமா?' என்பது போன்ற கேள்விகள்... ஏன், கோபமேகூட எழலாம். ஆனால், பலநூறு ஆண்டுகளாக, வழிவழியாக புகட்டப்பட்டிருக்கும் பாடங்களின் வழி நடக்கும் மானிட சாதியின் மிச்சம்தான் நாம் என் பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் முதலில் நமக்கு வேண்டும்.
'அந்தரங்கம் புனிதமானது’ என்பார்கள். ஆனால், அது ரகசியமானது என்பது மட்டும்தானே சரியானதாக இருக்கும். அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது மானுட விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிலம், வீடு, கார் போல்... சக மானுட துணையும் ஒரு நுகர்பொருள் ஆகிவிட்டது.
தன் மனைவியின் பழைய காதல் வாழ்க்கையை அறிந்துகொண்டு அதைப் பெருந்தன்மையோடு அணுகும் அறிவு முதிர்ச்சியான கணவன் பற்றிய பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’, 'அந்த ஏழு நாட்கள்’ போன்றவை அந்த ரகம். 'அவள் அப்படித்தான்’, 'அவர்கள்’ போன்ற படங்கள் பெண்களின் காதல் வாழ்க்கையை மிக முற்போக்காகக் காட்டிய உன்னதமான படங்கள். தமிழ் இலக்கியங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனையோ கதைகள் அப்படி வந்திருக்கின்றன.
உலகின் வெவ்வேறு திசைகளில் ஆண், பெண் உறவு மாற்றம் என்பது காட்டாறுபோல் பாய்ந்து ஓடிக் கொண்டுஇருக்கிறது. அந்த டிரெண்டை புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பின்னோக்கித் தள்ளப்படுவோம் என்பது வரலாற்று உண்மை.
சரி, மேட்டருக்கு வருவோம். ஆண் - பெண் உறவில் எதை வெளிப்படையாகச் சொல்லலாம்? எதைச் சொல்லக்கூடாது என்பது ஒரு கலை.
கணவன் - மனைவி இருவருமே ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொள்ளக்கூடிய புரிதல் கொண்ட துணையா என்பதுதான் அது. அவர் அப்படிப்பட்ட மிகச்சரியான துணை என்பதில் நீங்கள் 'கன்வின்ஸ்’ ஆகிவிட்டால்... உங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றிய எந்த உண்மைகளையும் சுதந்திரமாகச் சொல்லலாம். அதேநேரம், அவர் தொட்டாற்சிணுங்கி டைப், மிகவும் பிற்போக்கான சிந்தனைகள் கொண்டவர் என்பது புரிந்தபின், அவரிடம் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. இது உங்களின் தவறு அல்ல. அதனால் குற்ற உணர்ச்சி எதுவும் தேவை இல்லை.
'உண்மைகளைக்கூட சுதந்திரமாகப் பேச முடியாத ஒரு உறவு தேவைதானா?' என்கிற ஒரு கேள்வி, ஒரு நிலையில் உங்களுக்கு ஏற்படக்கூடும். இது வெறும் காதல் ஃப்ளாஷ்பேக் என்கிற குறுகிய வட்டத்தோடு நிறுத்திவிட முடியாது. இந்த சிந்தனை, பூமி அதிர்ச்சி சுழல்போல பல திசைகளையும் பாதிக்கக் கூடியது.
உதாரணமாக... நித்யாவின் கதை. சென்னையைச் சேர்ந்த மிடில் கிளாஸ் பெண் அவள். ஒரே ஒரு ஹால், சமையலறை கொண்ட சிறிய வீடு. அப்பா அரசாங்க வேலையில் குமாஸ்தா. அம்மா குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் எளிய ஹவுஸ் வொய்ஃப். இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. கம்ப்யூட்டர் அறிவில் தேர்வுபெற்று ஒரு நல்ல வேலையில் சேர்ந்தாள் நித்யா.
ரவிச்சந்திரன் என்றொரு வாலிபன் அவள் வாழ்வில் வந்தான். ஆரம்பத்தில் மிகவும் பெருந்தன்மையான ஆண்மகன் போன்ற தோற்றத்தைக் காண்பித்தான். காதல் கவிதைகள் பேசினான். தன் ரத்தத்தால் காதல் கடிதங்கள் எழுதினான். நித்யாவும் காதல் வயப்பட்டாள். ரிட்டையர்ட் ஆகிவிட்ட நிலையில், நித்யாவின் வருமானத்தை மனதில் வைத்து குடும்பத்தைக் கொஞ்சமேனும் கரை சேர்த்துவிடலாம் என்று நினைத்த தந்தை, தடுமாறினார். ஆனாலும், மகளுக்குத் திருமணம் செய்து வைப்பது கடமை என்பதை உணர்ந்து, ஏகப்பட்ட கடன் வாங்கி அவள் விருப்பப்படியே திருமணத்தை நடத்தினார்.
பெற்றோரின் விருப்பத்துக்காக வரதட் சணை பெற்றுக்கொண்ட ரவிச்சந்திரனை ஜீரணிக்க முடியவில்லை. என்றாலும், பொறுத்துக் கொண்ட நித்யாவுக்கு, ரவிச்சந்திரனின் முழு நிஜமுகம் பிற்பாடு தான் மெள்ள தெரிய ஆரம்பித்தது. 'நான், என் குடும்பம், என் அப்பா, என் அம்மா’ இதுதான் அவனுடைய எளிமையான ஃபிலாசபி. நித்யாவின் குடும்பத்தைத் தன் குடும்பமாக என்றுமே அவன் ஏற்றுக் கொண்டதில்லை. தவிர்க்க முடியாது சந்திக்க நேரிட்டால்... போனால் போகிறது என்கிற தொனியிலேயே பேசி கட் செய்வான்.
கணவனின் குணம் கண்டு அதிர்ந்தாலும், எதிர்காலத்தை மனதில் கொண்டு அப்படியே ஏற்றுக் கொண்டாள் நித்யா. தன் தங்கைகளின் பள்ளிக்கூட ஃபீஸுக்குக்கூட கணவனுக்குத் தெரிந்து உதவ முடியவில்லையே என்று நொந்து கொண்டவள், ஆபீஸில் லோன் போட்டு ஈடு செய்தாள். கணவனுக்குத் தெரிந்தால் ரணகளமாகும் என்பதால்... மறைத்தாள். இந்த நிகழ்வுகள் நீண்ட தொடர்கதை ஆகிவிட்டது. இன்று தன் குடும்பத்துக்குப் பல வகைகளில் உதவி செய்கிறாள் நித்யா. தன் பெற்றோரை, உடன் பிறந்தவர்களை மிகவும் அன்போடு கவனித்துக் கொள்கிறாள். ஆனால், எதுவுமே கணவனுக்குத் தெரியாமல்தான்.
இதையெல்லாம் 'பொய்' என்று சொல்வதா? 'பொய்' என்கிற வார்த்தை இதற்குப் பொருந்துமா? இல்லவே இல்லை. பெருந்தன்மையற்ற ஒரு கணவன் வாய்த்ததால், எதற்காக இப்படிப்பட்ட உன்னதமான விஷயங்களை அவனிடம் சொல்லி தன் குடும்பத்தின் அமைதியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற புரிதலால் நித்யா எடுத்த முடிவு இது.
அற்புதமான ஆண் - பெண் உறவில் 'பொய்மை' என்கிற இத்தகைய களை தோன்றுவதற்குக் காரணம், 'நல்லவர்'கள் அல்ல. பிற்போக்குத்தனமான பழமைவாதிகள்தான்!
- நெருக்கம் வளரும்...

ரொமான்ஸ் ரகசியங்கள்! 7 - கணவனின் காதலியும்... மனைவியின் காதலனும் !

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 7

கணவனின் காதலியும்... மனைவியின் காதலனும் !
 அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்
கணவன் - மனைவி, காதலன் - காதலி... இந்த உறவுகளின் இனிமையான தொடர்புக்கு அடிப்படையானது 'டிரான்ஸ்பரன்ஸி’ எனப்படும் வெளிப்படைத்தன்மை. இது கொஞ்சம் சிக்கலானது. தன்னுடைய ரகசியங்கள், அந்தரங்கங்கள் எல்லாவற்றையும் இருவரும் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டுமா? இதற்கு... 'ஆமாம்', 'இல்லை' என்று இரண்டு பதில்களையுமே சொல்லலாம்.
முன்பின் தெரியாத இரண்டு நபர்கள் நிரந்தர உறவு கொண்டு குடும்பம் என்கிற நீண்டகால அமைப்பை நிறுவுவதுதான் திருமணம் என்கிற பந்தம். கணவன் - மனைவி இருவருக்கும் திருமணத்துக்கு முன்பு வேறு காதல் இருந்திருக்கலாம். நெருங்கிய நட்பு இருந்திருக்கலாம். அவை எல்லாம் வெறும் கடந்த காலம்தான். அலமாரியில் வைத்துப் பூட்டப்பட்ட உயிரற்ற எலும்புக்கூடுகள்தான் என்றாகிவிட்ட நிலையில், 'உண்மைகளைச் சொல்கிறேன் பேர்வழி’ என்று அத்தனையையும் தன் துணையிடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
மேல்நாடுகளில் இந்த விஷயம் சர்வ சாதாரணமானது. 'உன் குழந்தைகளும் என் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடுகிறார்கள்’ என்பது அங்கே சகஜமான ஒன்று. ஆனால் நம் சமூகத்தில் 'பொஸஸிவ்னஸ்’ எனப்படும் உரிமை எண்ணம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அது பல நேரங்களில் ஆபத்தான வடிவங்களுக்கு மாறக்கூடியது.
ஒரு கேஸ் ஹிஸ்டரியை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம். சென்னையைச் சேர்ந்த ஜோடி... லதா-சஷாங். இருவரும் நன்றாகப் படித்தவர்கள். இவர்களுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. 'அரேஞ்டு 'கம்’ லவ் மேரேஜ்’ என்று சொல்லலாம். இணையதளத்தில் ஒரு திருமண நிலையத்தின் தளத்தில்தான் இருவரைப் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்கள் இவர்களின் பெற்றோர். நேரில் வந்து பெண் பார்த்து இரு தரப்பினருக்கும் பிடித்துவிட்டது. நிச்சயதார்த்தம் நடந்தது. சஷாங்குக்கு நார்வே நாட்டுக்கு வேலை நிமித்தம் செல்லக் கூடிய வாய்ப்பு விரைவில் வரக்கூடும் என்கிற நிலையில், அதை வைத்துத் திருமண தேதியை நிச்சயித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.
குறைந்தது ஆறு மாதமாவது பிடிக்கும் என்கிற சூழலில்... இருவரும் காதலர்கள் போல் பழக ஆரம்பித்தார்கள். கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்தது. ஒருவரை ஒருவர் பிரிய முடியாத அளவுக்கு நெருங்கிப் பழகினார்கள். மணிக்கணக்காக செல்போனில் பேசினார்கள். ஊர் சுற்றினார்கள். சின்னச் சின்ன உடலின்பங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
ஒரு நாள் கடற்கரையில் சஷாங்கின் மடியில் சாய்ந்திருந்த லதா, ''சஷாங்... உனக்கு இதுக்கு முன்னாடி ஏதாவது காதல் அனுபவம் இருந்திருக்கா?'' என்று வில்லங்கமான கேள்வியைக் கேட்டாள். சஷாங் சிரித்தபடி, ''இல்லாமல் இருக்குமா?'' என்றான். லதாவும் சிரித்தபடி, ''என்ன அது சொல்லு?'' என்று கேட்டாள். ''விடு... அதெல்லாம் முடிஞ்சு போன கதை. இப்ப எதுக்கு அதெல்லாம்?'' என்று அவாய்ட் செய்த சஷாங்கை லதா விடவில்லை. சொல்லியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள். சஷாங் அவன் 'ஃப்ளாஷ்பேக்’கைச் சொல்ல ஆரம்பித்தான்.
சஷாங்கின் அலுவலகத்திலேயே டிரெய்னியாக வந்து சேர்ந்தாள் அனுபமா கவுர். பஞ்சாபி பெண். சஷாங்கின் அழகும், படிப்பும், பேச்சும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சஷாங்கும் அவள் அழகில் மயங்கிவிட்டான். இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஏறக்குறைய இரண்டு வருடங்கள் காதல் நீடித்தது. விஷயம் இரண்டு வீட்டுக்கும் தெரிந்து ரணகளம் ஆனது. தமிழன், பஞ்சாபி என்கிற தேசிய வேற்றுமைப்பாடு விஸ்வரூபம் எடுத்தது.
இருவருக்கும் வேறு வழி தெரியவில்லை... பிரிவதைத் தவிர. உணர்ச்சிகரமாகப் பேசி, ஒரே ஒரு முத்தத்துடன் காதலை முறித்துக் கொண்டார்கள். அனுபமாவுக்கு இன்னொரு பஞ்சாபி இளைஞனுடன் திருமணமானது. இன்னும் அவள் சஷாங்கின் அலுவலகத்திலேயே மற்றொரு டிபார்ட்மென்டில்தான் வேலை செய்கிறாள். ஆனால், அவள் முகத்தில் சந்தோஷம் இல்லை. எப்போதாவது சஷாங்கை சந்திப்பாள். ஆறுதல் சொல்லி, சந்தோஷமாக இருக்கும்படி கேட்டுக் கொள்வான்.
எல்லாவற்றையும் சஷாங் சொல்லி முடிக்க... லதா மௌனமாக இருந்தாள். அவளை உலுக்கி, ''ஏய், என்ன ஃபீல் பண்றியா? அதான் சொன்னேனே... அதெல்லாம் முடிஞ்சு போன கதைனு'' என்றவன், ''சரி... நான் எவ்வளவு ஃபிராங்கா என் காதலைப் பத்திச் சொன்னேன். உனக்கு ஏதாவது லவ் இருந்திருக்கா?'' என்றான். சற்று நேர அமைதிக்குப் பிறகு, ''இருந்திருக்கு'' என்றாள் மெதுவாக. அவள் மனதில் சஷாங்குக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு பொங்கியிருந்தது.
அவன் பெயர் நாகேந்தர். பெங்களூருவில் ஒரு கான்ஃப்ரன்ஸுக்காகச் சென்றிருந்தபோது சந்தித்த சென்னைப் பையன். பார்த்ததும் பிடித்துவிட்டது. ஒரு காபி ஷாப்புக்குச் சென்றவர்கள், அன்று மாலையே ஒரு திரைப்படத்துக்குப் போனார்கள். இருவரையும் பற்றிப் பகிர்ந்து கொண்டார்கள். மொத்தம் ஐந்து நாட்கள் நடந்த கான்ஃப்ரன்ஸில் ஏதோ ஐம்பது வருடப் பழக்கம் போல் ஓர் உறவு தென்பட்டது. ஊருக்குத் திரும்பும் தினத்தில் 'ஐ லவ் யூ’ சொல்லிக் கொண்டார்கள். சென்னையிலும் அவர்களின் காதல் செழித்து வளர்ந்தது.
நாகேந்திரனுக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்டுகள் என்கிற உண்மை, லதாவுக்கு மெதுவாகத்தான் தெரிந்தது. சிலர் அவளிடம் நேரில் வந்து சண்டை போட்டது மட்டுமின்றி, அவனிடம் ஜாக்கிரதையாகப் பழகும்படி எச்சரித்தார்கள். நாகேந்திரனோ... தான் அப்படி இருந்தது உண்மைதான் என்றும், லதாவை எப்போது சந்தித்தானோ அப்போது முதல் உண்மைக் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டதாகவும், அவனை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டான். ஆனால், லதா மன்னிக்கத் தயாராக இல்லை. பெற்றோரிடம் மாப்பிள்ளை பார்க்கச் சொல்ல... அப்படி வந்தவன்தான் சஷாங்.
லதா சொல்லி முடித்ததும், சஷாங் தரப்பிலும் ஆழ்ந்த மவுனம். இதுவரை கலகலப்பாகச் சென்று கொண்டிருந்த காதல், திடீரென்று தடம் புரண்டது போல் ஓர் உணர்வு. இருவரும் கடற்கரையில் இருந்து எழுந்தார்கள். ஒரு சின்ன இடைவெளி விழுந்திருந்தது இருவரிடமும். ''அந்த அனுபமா தினமும் உங்களைப் பார்க்கிறாளா?'' என்றாள் லதா. ''இதே கேள்வியை நானும் கேட்கலாமா? அந்த நாகேந்தர் உன் கூட தினமும் பேசறானா? அவனைப் பார்த்தா உனக்குப் பாவமா இருக்கா?'' என்று திருப்பிக் கேட்டான் சஷாங்.
சாதாரண ஊடல் போல் ஆரம்பித்தது... சமாதானம் செய்ய யாரும் இல்லாததால் நாளுக்கு நாள் அதிகரித்தது. இருவரும் நவீன யுகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிப்படையான பேச்சை எதிர்கொள்ளும் நேர்மை இல்லாதவர்கள். லதா - சஷாங் உறவு விரைவில் முறிந்தது என்பது சோகமான விஷயம்.
கணவன், மனைவிக்கிடையே வெளிப்படைத்-தன்மையே இருக்கக்கூடாதா? எதில் இருக்கலாம்? எதில் இருக்கக்கூடாது? இது ரொமான்ஸ் ரகசியங்களிலேயே மிக முக்கியமானது!
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 6

ரொமான்ஸ் ரகசியங்கள்!

அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்:மணியம் செல்வன்
'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' (A smooth sea, never made a skillful sailor) என்பார்கள். அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி - மழை மிரட்டிப் பார்க்கும் கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்... அவர் அனுபவம் மிக்க திறமையாளராக ஆகிவிடுவார்.

ஆண் - பெண் மண வாழ்க்கையும் அப்படித்தான். திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும்போது இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வரும். அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்.
தொடக்க நிலையில் வரும் சிறுசிறு தடைகளை(Hiccup)வெற்றிகரமாக தாண்டிவிட்டால், அதன் பிறகு சுவையான வாழ்க்கை காத்திருக்கிறது. அதேநேரம் அந்த இனிய உறவை வாழ்நாள் முழுவதும் வெற்றிகரமாக தொடர்ந்து நடத்திச் செல்ல சில புரிதல்களும் தேவை. அதன் ஃபார்முலாக்களை ஒரு உதாரண தம்பதியின் மூலம் சொல்கிறேன்.
அந்தத் தம்பதி சென்னை புறநகர் பகுதியில் வசிப்பவர்கள். 'வாலன்டரி ரிட்டையர்மென்ட்’ வாங்கியவர்கள். ஒரு மகன், மகள். இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். பணம் காசுக்குக் குறைவில்லை. இவர்கள் மிக ஆச்சர்யமான தம்பதி... ஏதோ நேற்றுதான் திருமணம் ஆனவர்களைப் போல் அத்தனை அந்யோன்மாக, சந்தோஷமாக சிரித்துப் பேசியபடி இருப்பார்கள்.
சென்னையில் நடந்த ஒரு புத்தகக் கண்காட்சி விழாவில் அந்தத் தம்பதியை தற்செயலாகப் பார்த்தேன். எழுத்தாளர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், பிஸினஸ்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களிடமும் சென்று பேசியபடி இருந்தார்கள். பலரைப் பாராட்டிக் கொண்டும் இருந்ததைப் பார்த்தேன். குறிப்பாக, ஓர் இளம் சினிமா கவிஞரிடம் அவர் எழுதிய பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டி அவர்கள் பாராட்டியதைக் கவனித்தேன். கவிஞரும் மிக உற்சாகமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
எனக்கு அவர்கள் மேலிருந்த ஈடுபாடு இன்னும் அடர்த்தியாக, ஒரு கட்டத்தில் தனியாக இருந்த அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனே கை கொடுத்து, 'ஃப்ரெண்ட்லி' ஆகிவிட்டார்கள்.
'கல்யாணம் ஆனதில்இருந்து இப்படித்தான் அந்யோன்யமாக இருக்கிறீர்களா? சண்டையே வருவதில்லையா?'' என்றேன்.
'அதை ஏன் கேட்கிறீர்கள்? கல்யாணம் ஆன புதிதில் தினமும் சண்டைதான். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டைகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்று ஒரு கட்டத்தில் பேசிக்கொண்டோம். சில சிம்பிள் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், புரிதல்கள் என்று அட்டவணை போட்டுக் கொண்டோம். அதன்படி நடந்து கொண்டதில் நாளுக்கு நாள் எங்களுக்கு அன்பு கூடியது!' என்றார் கணவர்.
'ஆச்சர்யமாக இருக்கிறதே... இப்படி பேசி வைத்துக் கொண்டுகூட வாழ முடியுமா?' என்றேன்.
'ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வாருங்கள்... நல்ல விருந்து சாப்பிட்டு விட்டுப் பேசலாம்' என்று அன்புடன் அழைத்தார் அப்பெண்மணி. அடுத்த ஞாயிறே அவர்களின் வீட்டில் ஆஜரான நான், அங்கிருந்த சில மணி நேரங்களிலேயே அவர்களுடைய 'சக்சஸ் ஃபார்முலா'வின் பல விதிகள் எனக்குப் புரிந்துவிட்டன.
இருவரும் ஒருவரின் மீது ஒருவர் கடுஞ்சொற்கள் வீசுவதில்லை. தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள். இவர் இன்ன வேலையைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. என்னிடம் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் உள்ளே காபி தயாரித்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் இருக்கும் மகளிடம் போனில் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் வீட்டைக் கூட்டிக் கொண்டிருந்தார். சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை மனைவி கணவனுக்குக் கொடுத்தார். கணவனுக்கு நகம் வெட்டினார். இருவரிடமும் சகஜமான 'தொடுதல்’ இருந்தது. 'இன்றைக்கு இரவு நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம்’ என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் மனைவி.
இருவரும் வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளவில்லை. காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, அரை மணி நேரம் யோகா, நாற்பது நிமிடங்கள் வாக்கிங், அடுத்து பேப்பர். வீட்டு வேலைகள் தொடர்கின்றன. தினமும் புத்தகம் படிக்கும் பழக்கமும் இருவருக்கும் இருந்தது.
இருவருக்குமான அன்பும் ஒருவரை ஒருவர் சார்ந்திருந்ததையும், அது திட்டமிட்டு வளர்க்கப்பட்டிருந்ததையும் அதிசயமாகப் பார்த்தேன். கணவன்- மனைவி இருவரின் உறவும் மேற்பட அவர்களிடமிருந்து நான் அறிந்து கொண்ட சில ஃபார்முலாக்களை, பத்து விதிகளாகச் சுருக்கிச் சொல்கிறேன்...
1. ஒருவரின் மீது ஒருவர் எப்போதும் கடுஞ்சொற்களைப் பேசக் கூடாது.
2. வீட்டு வேலைகளைச் செய்வதில் சமத்துவம் வேண்டும்.
3. சிறிய தவறு செய்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.
4. இருவரில் யார் எந்தத் தவறு செய்தாலும், பெரிதாக்காமல் உடனே மன்னிக்க வேண்டும்.
5. தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டையாக மாற்றிவிடக் கூடாது.
6. வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.
7. யார் மீதும் யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சுதந்திரம் என்பது மிக முக்கியம்.
8. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.
9. வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
10. 'எந்நாளும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும்.
ஆனந்தமான ரொமான்ஸ் வாழ்க்கையின் பத்து அடிப்படை ரகசியங்களாகவே இவை எனக்குத் தோன்றுகின்றன. மனித மனம் என்பது காட்டாறு போன்றது. அதை முறையாகக் கட்டுப்படுத்தத்தான் இதைப் போன்ற பல விதிமுறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.
‘To love and to be loved is the greatest happiness of human existence’எனும் பொன்மொழி... எத்தனை சத்தியம்!
- நெருக்கம் வளரும்...

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1
பெற்றோர்களே... நீங்கள் நம்பர் 1 ஆகுங்கள்!
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
'என் குழந்தை, கிளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கணும். எங்க யும், எதுலயும் அவதான் ஃபர்ட்ஸ்டா வரணும்’ என்கிற ஆசையில் இருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் இருக்கிற குறைபாடு களைக் கண்டு உணர்வது இல்லை.
''ஏண்டா... எப்பப் பார்த்தாலும் 'கரி’னு எழுத வேண்டிய வார்த்தையை 'கறி’னு மாத்தி மாத்தி எழுதறே? எத்தனை முறை சொல்லித் தர்றது?'’ என்று அலுத்துக்கொள்ளும் முன், ஏன் அவன் அப்படி எழுது கிறான் என்று யோசித்தது உண்டா? யோசித்திருந்தால்... அந்தக் குழந்தைக்குக் 'கற்றலில் குறைபாடு’ உள்ளது என்பதைக் கண்டறிந்து இருக்கலாம்.
ஆம், 5-10 சதவிகித குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை உள்ளது. இந்தக் குழந்தைகள் படிப்பில் பின் தங்கியே இருப்பார்கள். இந்தக் 'கற்றலில் குறைபாடு’ பிரச்னை யில் பல வகைகள் உண்டு. நன்றாக எழுதத் தெரிந்த குழந் தைக்கு, அதை வாசிப்பதில் பிரச்னை இருந்தால், குழந் தைக்கு 'டிஸ்லெக்ஸியா' (Dyslexia) எனும் குறைபாடு இருக் கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

'கிஸீபீ’ என்பதை ‘Dna’ என்றும், ‘Diary’ என்பதை ‘Dairy’ என்றும், ‘Trial’ என்பதை ‘Trail’ என்றும்... இப்படிச் சில வார்த்தைகளுக்குத் தொடர்ந்து ஸ்பெல்லிங்கை மாற்றி எழுதினால், 'டிஸ்லெக்ஸியா கிராபியா' (Dyslexia graphia) எனப்படும் 'எழுதுவதில் குறைபாடு' நம் குழந்தைக்கு உள்ளது என்று உணர வேண்டும். சிம்பிளான கூட்டலும், கழித்தலும் தெரியும். ஆனால், அதையே கொஞ்சம் யோசிக்கும் வகையில் கொடுத்தால், உதாரணமாக, கடன் வாங்கிக் கழிக்கும் கழித்தல் முறை கணக்கு போடும்போது தடுமாறிக் கொண்டே இருந்தால்... அது 'டிஸ்லெக்ஸியா கால்குலியா' (Dyslexia calculia)’ எனப்படும் 'கணக்கிடுவதில் குறைபாடு' என்று உணர வேண்டும்.
வீட்டில் பேசும் தாய்மொழி ஒன்றாக இருந்து, படிக்கும் மொழி வேறாக இருந்தால்... அவர்கள் படிப்பதிலும், படித்ததை எழுதுவதிலும், சொல் வதிலும் பிரச்னைகள் இருக்கும். உதாரணமாக, 'இந்த பேனாவைப் பற்றி இரண்டு வரி எழுது' என்று ஆசிரியர் சொன்னால், குழந்தை எழுதத் தெரியாமல் திருதிருவென விழிக்கும். ஆனால், 'இந்த பேனா என்ன கலர், என்ன வகை ரீஃபில், எத்தனை ரூபாய்?' என்று ஒவ்வொரு கேள்வியாக தாய்மொழியில் கேட்டால், 'டக் டக்’ பதில் வந்துவிழும்.
ஆக, இந்தக் குழந்தைக்கு அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு இருக்கிறது. ஆனால்... வேற்று மொழியில் எழுதி வெளிப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. அதேபோல், 'எனது லட்சியம் மருத் துவர்’ என்ற வாக்கியத்தை படிக்கத் தெரிந்து இருக்கலாம். ஆனால், அதனை புரிந்து படிக் கிறார்களா என்பதுதான் பிரச்னை. வாசிக்கத் தெரிந்து இருக்கிறது என்பதே புரிந்து இருக்கிறது என்று அர்த்தம் ஆகாது.
சரி... இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியாதா..? இந்தப் பிரச்னை நம் மூளையில் 'மொழி’ சம்பந்தப்பட்ட பகுதியில் ஏற்படும் குறைபாட்டால் வருவதால்... இதனை சரிசெய்ய இயலாது. இம்மாதிரி குறைபாடு உடைய குழந்தைகள், தாய்மொழியிலேயே கற்பது நல்லது; சிரமத்தின் அளவு குறையும்.
இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு படிப்பது மட்டும்தான் சிரமமே தவிர, வரைவது, விளையாடுவது, இசைக்கருவிகள் வாசிப்பது போன்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸில் 'கிங்’ ஆகவும், மற்ற எல்லா விஷயங்களிலும் எந்தப் பிரச்னையும் இன்றி வெகு இயல்பான, ஸ்மார்ட்டான குழந்தைகளாகவும் இருப்பார்கள். படிப்பில் பின்தங்கி இருந்தாலும், இவர்கள் சராசரி குழந்தைகளைவிடவும் மேலான 'ஐ.க்யூ’ உடைய குழந்தைகள்.
'ஆனாலும், இயற்கையால் வந்த இந்தக் குறை பாட்டால்... எனது குழந்தை படிப்பில், பரீட்சை யில் தோற்க வேண்டுமா?’ என்பவர்களுக்கு, ஆறுதலான, ஆதரவான பதில் இருக்கிறது. பொதுவாக எல்லாக் குழந்தைகளும் மூன்று மணி நேரம் பரீட்சை எழுதுவார்கள். ஆனால், இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு எழுதுவதில் சிரமம் இருப்பதால், அரசு இக்குழந் தைகளின் சிரமத்தை உணர்ந்து 14 வருடங்களுக்கு முன் சில சலுகைகளைக் கொடுத்துள்ளது.
இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு பரீட்சையின்போது எக்ஸ்ட்ராவாக 1 மணி நேரம் வழங்கப்படும். இக்குழந்தைகளின் பதிலில் 'கன்டென்ட்’ இருக்கிறதா என்று பார்க்க வேண் டுமே தவிர, ஸ்பெல்லிங் மிஸ்டேக், கிராமர் மிஸ்டேக் எல்லாம் பார்க்கத் தேவையில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கணக்கில் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு, கால்குலேட்டரை பயன் படுத்தலாம் என்றும் அனுமதி அளித்துள்ளார்கள்.
இவர்கள் இரண்டாம் மொழியாக என்ன பாடத்தை எடுத்துள்ளார்களோ, அதற்குத் தேர்வு எழுத வேண்டாம் என்றும், தேர்வை இவர்கள் சொல்ல, இன்னொருவர் எழுதக் கூடிய 'ஸ்க்ரைப்’ முறையையும் பின்பற்றலாம் என்றும் சலுகை அளித்துள்ளது அரசு. தகுதி வாய்ந்த குழந்தைநல மருத்துவரிடம் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா குறைபாடு உள்ளது என்று சான் றிதழ் வாங்கி, அதனை தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பித்து, அவர்கள் கொடுக்கும் சான்றிதழை வைத்து இந்த சலுகைகளைப் பெற முடியும். எனவே, கவலை மறந்து உங்கள் குழந்தைகளின் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் ஆதர்ஷ மூளையாக இருங்கள் தோழிகளே!
குழந்தைகள் 'நம்பர் ஒன்’ ஆவது அவர்கள் கைகளில் பாதியும், உங்கள் அன்பில் மீதியும் பொதிந்து இருக்கிறது. அவர்களை அன்பால் வழிநடத்துங்கள். உங்கள் குழந்தை 'நம்பர் ஒன்’ என விளங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பு வதுபோல, தங்கள் பெற்றோர்தான் 'நம்பர் ஒன்’ எனக் கொண்டாட அவர்கள் மனதும் ஏங்கும்தானே?! அதற்கும் உங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ளுங்கள்... குழந்தைகள் உடனான உங்கள் புரிதலால்!
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நிறைவடைந்தது
தொகுப்பு: நாச்சியாள்