Saturday, April 30, 2011

கீதை காட்டும் பாதை - 3 : சுதர்மமே சிறந்தது!

கீதை காட்டும் பாதை - 3 : சுதர்மமே சிறந்தது!

- என்.கணேசன்
இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் அவசியமான ஒரு தத்துவத்தை பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அது தான் சுதர்மம்.

பகவத்கீதையின் ஆரம்பம் "தர்மம்" என்ற சொல்லில் துவங்குவதை முன்பு குறிப்பிட்டிருந்தேன். பகவத் கீதை "மம" என்ற சொல்லில் முடிகிறது. 'மம' என்றால் "என்னுடைய" என்று அர்த்தம். "தர்மம்" மற்றும் "என்னுடைய" என்ற சொற்களுக்கிடையில் 700 சுலோகங்கள் கொண்ட பகவத் கீதை ஒளிர்கிறது. இதைக் குறிப்பிடும் பல அறிஞர்கள் "என்னுடைய தர்மம்" என்பதன் விளக்கமே பகவத் கீதையின் முழு சாராம்சமும் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையே. அர்ஜுனனுக்கு தர்மம் எது என்று விளக்கிய கீதையைப் படிக்கையில் அவரவர் தர்மத்தை ஒவ்வொருவரும் உணராமல் இருக்க முடியாது. சுதர்மம் பகவத் கீதையின் மிக முக்கியமான தத்துவம்.
ஆன்மாவின் நிரந்தரத்தையும், உடலின் அழியும் தன்மையையும் கூறிய பகவான் சுதர்மம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். அரசகுலத்தவனான அர்ஜுனனுக்கு அறப் போரைக் காட்டிலும் சிறந்த சுயதர்மம் இல்லை என்றும், தேடாமலேயே வரும் தர்மயுத்தம் சொர்க்கத்தின் கதவைத் திறந்து வைத்திருப்பதைப் போன்றது என்றும், அதிர்ஷ்டசாலிகளிகளுக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய பாக்கியம் என்றும் சொல்கிறார். அந்த அறப்போரை நடத்தாமல் போனால் கடமையையும், கௌரவத்தையும் கொன்று பாவத்தை அடைய நேரிடும், பழி வந்து சேரும் என்று எச்சரிக்கிறார்.
இப்படி எல்லா கோணங்களிலும் கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு வலியுறுத்தும் சுதர்மத்தை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
ஒரு மனிதன் பிறக்கும் போதே அவன் சுதர்மமும் பிறந்து விடுகிறது. ஒருவன் எதற்காக படைக்கப்பட்டானோ அதைச் செய்வது அவன் சுதர்மம். ஒருவனுடைய சுதர்மம் அவன் உண்மையான இயல்பையும், மனப்போக்கையும் ஒத்து அமைவது. அந்த சுதர்மத்தை ஒட்டியே அவன் திறமைகளைப் பெற்றிருப்பான். அதை செய்வதாலேயே அவன் அமைதி அடைய முடியும். இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது. சுலபம், சிரமம் என்றெல்லாம் கணக்கிட்டு எடுத்துக் கொள்வதோ, தள்ளி விடுதலோ கூடாது.
பிறரது தர்மம் சில சமயங்களில் சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால் அதைக் கடைபிடிப்பதால் நன்மை உண்டாகாது. வினோபா கூறுவார்: "மீன்களிடம் 'நீரை விட பால் அதிக மதிப்புடையது. அதனால் நீங்கள் பாலில் வந்து வாழுங்கள்' என்று எவரேனும் சொல்வாராயின் மீன்கள் அதை ஏற்குமா? மீன்கள் நீரில் தான் வாழும். பாலில் அவை இறந்து போகும்".
அதே போல பிறரது தர்மம் சுலபமாகத் தோன்றலாம். அப்படி தோன்றி அதைக் கடைபிடித்தாலும் அது ஒருவர் வாழ்வை சிறப்பிக்காது. அர்ஜுனனுக்கு இந்த போரைச் செய்வதை விட சன்னியாசம் பெற்றுக் கொண்டு எங்காவது போய் விட்டால் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினாலும் அவனால் உண்மையாக சன்னியாசியாக முடியுமா? காட்டுக்கே போனாலும் எல்லாவற்றையும் துறந்து விட அவனால் முடியுமா? அஹிம்சையை அவனால் பின்பற்ற முடியுமா? அவனால் சும்மா இருக்க முடியுமா? ஓரிரு நாட்களுக்கு அவனது இயல்பான தன்மைகளை அவன் அடக்கி வைக்கலாம். ஆனால் அத்தன்மைகள் விரைவில் அவனையும் மீறியல்லவா வெளிப்படும்.
இது அவன் பிரச்னை மட்டுமல்ல. நம்மில் பலருடைய பிரச்னையும் தான். நமக்கு அடுத்தவர்கள் தொழில் சுலபமாகத் தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், நம்முடைய வேலைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களும் தெரியும் நமக்கு அடுத்தவர்கள் தொழில் பிரச்னை இல்லாததாகத் தெரியும். அவரவர் தொழிலில் உள்ள பிரச்னைகளை அவரவரே அறிவார்கள். அடுத்தவர் தொழிலை சில நாட்கள் செய்து பார்த்தால் தான் அதில் உள்ள சிக்கல்கள் புரியும். எனவே பிரச்னைகளைப் பார்த்து பின்வாங்கி அடுத்தவர்களுடைய கடமையோ, தொழிலோ நம்முடையதை விட சிறந்தது என்று எண்ணுவது உண்மைக்குப் புறம்பானது.
எதற்காகப் பிறந்தோமோ அதைச் செய்யாமல் யாரும் தங்கள் வாழ்வில் நிறைவையும், அமைதியையும் பெற முடியாது. இது இந்தக் காலத்திய மனிதர்கள் அலட்சியம் செய்யும் ஒரு மாபெரும் உண்மையாகும். இன்று தொழிலில் உயர்வு, தாழ்வு என்று பார்க்கிறோம். இலாப நஷ்டங்கள் பார்க்கிறோம். ஆனால் நம் இயல்புக்கும், திறமைக்கும் ஏற்ற தொழில் தானா, இதில் நமக்கு மனநிறைவு கிடைக்குமா என்றெல்லாம் பார்க்க மறந்து விடுகிறோம். இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை செய்து டாக்டர்களாக்கவும், இன்ஜீனியர்களாக்கவும் மட்டுமே ஆக்க, படாத பாடு படும் பெற்றோர்கள் இதை எண்ணிப்பார்க்க மறந்து விடுகிறார்கள்.
எதில் நமக்கு உண்மையான ஈடுபாடு உள்ளதோ அதை ஒட்டியே நம் சுதர்மம் அமையும். எது சுதர்மம் என்று அறிந்து கொள்ள அங்குமிங்கும் செல்ல வேண்டாம். மனதினுள் ஆத்மார்த்தமாகக் கேட்டுக் கொண்டால் போதும். அப்போது பதில் கிடைக்கும். சுதர்மத்தின் வழியே நடக்கையில் கிடைக்கும் சந்தோஷமே அலாதி. அப்படி நடக்கையில் தான் ஒரு மனிதன் உண்மையாக வாழ்கின்றான்.
கணித மேதை பாஸ்கலின் தந்தை அவரை கிரேக்கம், லத்தீன் போன்ற பழைய மொழிகளில் பாண்டித்தியம் பெற வைக்க எண்ணினார். ஆனால் பாஸ்கலுக்கோ கணிதம் என்றால் உயிராக இருந்தது. அவருடைய தந்தை கணித புத்தகங்கள், உபகரணங்கள் எல்லாம் அவருக்குக் கிடைக்காதபடி செய்து பாஸ்கலை ஒரு அறையில் அடைத்து வைத்துப் பார்த்தார். பாஸ்கல் பூட்டிய அறைக்குள் கரித்துண்டால் தரையில் கணிதக் குறியீடுகளால் கோட்பாடுகளை எழுதிப் பார்ப்பார். ஒரு கால காலத்தில் அவருடைய தந்தை தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. பாஸ்கல் தன் தந்தையின் கட்டாயத்துக்காகத் தன் கணித ஈடுபாட்டை தியாகம் செய்திருந்தால் இன்று இந்த உலகம் எத்தனையோ கணித மேம்பாட்டை இழந்திருக்கும்.
ஒவ்வொருவரும் அவரவர் சுயதர்மத்தின் படி, இயல்பாக அமைந்துள்ள திறமையின் படி செயல் புரியும் போது அவர்களும் நிறைவை உணர்கிறார்கள். அவர்களால் சமூகத்துக்கும் நன்மைகள் கிடைக்கின்றன. அப்படி இல்லாமல் அதற்கு எதிர்மாறாக அவர்கள் இயங்கும் போது அவர்களும் சந்தோஷமாக இருப்பதில்லை. அவர்களால் உண்மையான நற்பலன்கள் கிடைப்பதும் அரிதாக இருக்கிறது.
பண்டைய காலத்தைப் போல இக்காலத்தில் வாழ்க்கை முறை எளிமையாக இல்லை. நடைமுறைச் சிக்கல்களும் தற்போது அதிகம் இருக்கின்றன. வருமானத்தை வைத்தே வாழ்க்கையின் வெற்றி இக்காலத்தில் தீர்மானிக்கப் படுகிறது. சில துறைகளில் ஒருவருக்கு மிகுந்த ஈடுபாடும், திறமையும் இருக்கலாம். ஆனால் அத்துறையிலோ வருமானம் சிறிதும் இல்லை என்றால் அவர் எப்படி சுதர்மத்தை மேற்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமே. அப்படி வருமானத்திற்காக வேறு ஒரு தொழில் செய்ய நேர்ந்தாலும் பகுதி நேரமாவது தனக்கு இயல்பாக திறமையும் ஆர்வமும் உள்ள துறைக்கு ஒருவர் ஒதுக்க வேண்டும்.
இதைத் தான் விமானத்தைக் கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள் செய்தார்கள். பணவசதி அதிகம் இல்லாத அவர்களுக்கு விமானத்தை உருவாக்கும் முயற்சியில் முழுவதுமாக ஈடுபட முடியாத சூழ்நிலை இருந்தது. ஆராய்ச்சி பல ஆண்டுகள் நீண்டதால், அதற்கு நிறையவே பணமும் தேவைப்பட்டதால், அவர்கள் தினசரி வருமானத்துக்கு சைக்கிள் கடை ஒன்றை வைத்து பல ஆண்டுகள் தங்கள் பிழைப்பை நடத்தினார்கள். ஓய்வு நேரங்களில் அவர்கள் விமான ஆராய்ச்சிகளையும் செய்தார்கள். அதனாலேயே அவர்களால் சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.
எத்தனையோ துறைகளில் பெரும் சாதனைகள் புரியும் அளவு திறமை உள்ளவர்கள் வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேறு ஒரு தொழிலில் முழு நேரமும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை நாம் இன்று பல இடங்களில் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெறுமையினை அடிக்கடி உணர்கிறார்கள் என்பது கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய தனித் திறமையைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால் அவர்கள் முகத்தில் சோகம் படர்வதையும் பார்க்க முடியும். எது நமது உண்மையான இயல்போ, எதைச் செய்கையில் நாம் நூறு சதவீதம் நாமாக இருக்கிறோமோ, அதற்கு எதிர்மாறாக வாழ்ந்து யாரும் நிறைவைக் காண முடியாது. எனவே இக்காலத்தில் சூழ்நிலையின் காரணமாக வேறு தொழில் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தாலும் ஒருவன் சுதர்மத்தை அடியோடு மறந்து விடக்கூடாது.
சுதர்மத்தை கைவிடுவது தற்கொலைக்கு சமமானது. இதனாலேயே கிருஷ்ணன் சுதர்மத்தை மிக முக்கியமாக வலியுறுத்துகிறார். இன்னொரு இடத்தில் "சுயதர்மத்தைச் செய்கையில் ஒருவன் இறந்து போனாலும் நல்லதே" என்று கூட கூறுகிறார். சுதர்மத்தைப் பின்பற்றாமல் இருக்க எத்தனையோ காரணங்களை ஒருவன் தேடிக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அந்தக் காரணங்களில் ஒன்று கூட மேன்மையானதாக இருக்க முடியாது.
இக்காலத்தில் தொழிலில் நேர்மையில்லை, ஈடுபாடில்லை, உயிரில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் எழுவதற்குக் காரணம் மனிதர்கள் சுதர்மத்தைப் புறக்கணிப்பது தான். எந்திரங்களாய் அவர்கள் மாறிவிடக் காரணமும் அது தான்.
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை 2 - இந்த துக்கம் அர்த்தமற்றது!

Friday, April 29, 2011

PreviousNext
மதுரை சித்திரைக் கொண்டாட்டம்

''நீதான் கள்ளழகர்... உன் தங்கச்சிதான் மீனாட்சி!''
துர குலுங்கக் குலுங்க இனிதே நடந்து முடிந்து இருக்கிறது சித்திரைத் திருவிழா. விழாத் துளிகள் இங்கே கொஞ்சம்... 
  'வாறாரு... வாறாரு... அழகரு வாறாரு’ பாடல்தான் அழகருக்கான ஆரவார வரவேற்பு டோன். ஓரிடத்தில் 'அட்றா அட்றா நாக்க முக்க...’ பாட்டுக்கு மதுரை மாப்புகள் குத்தாட்டம் போட்டுக்கொண்டு இருக்க, 'பாட்டுப் புரியலை... ஆனா, மியூஸிக் சூப்பர்!’ என்று  அவர்களுடன் இணைந்து ஆடிச் சென்றார்கள் வெளிநாட்டு விருந்தினர்கள்! 
  வைகை ஆற்றை ஒட்டிப் பல இடங்களில் இலவச மோர், தண்ணீர் பந்தல் அமைத்து இருந்தார்கள். அதே ஞாபகத்தில் தமுக்கம், புதூர், தல்லாகுளம் பகுதிகளில் இருந்த சில இடங்களில் மோர் வாங்கிக் குடித்த பக்தர்கள், ரூபாய் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து, பேந்தப் பேந்த விழித்தார்கள். ''ஓசின்னு நினைச்சுக் குடிச்சுப்புட்டேன். ஸாரிம்மா!'' என ஒருவர் நழுவ, ''ஓசியில மோர் கொடுக்க நான் என்ன உன் பொண்டாட்டியா? காசைக் கொடுத் துட்டு போய்யா!'' என்று அதட்டி மிரட்டி காசை வசூலித்தார் மோர் கடைப் பெண் மணி!
 இந்தச் சித்திரை திருவிழாவில் கவனம் கலைத்த ஒரு விஷயம் ஹாரன் பீப்பி. பைக், கார் ஹாரன்கள் போலவே ஒலி எழுப்பிய அந்த பீப்பியை ஊதி, அடிக்கடிக் கூட்டத்தை கலைத்துக்கொண்டு இருந் தார்கள்  சேட்டைக்கார மச்சான்கள்!
''ஏன் அழகர் ஆத்துல இறங்குறாருப்பா?'' என்று கேட்ட தன் மகனுக்கு, ''நீதான் கள்ளழகர். உன் தங்கச்சிதான் மீனாட்சி!'' என்று கள்ளழகரின் கதையை அழகாக விளக்கிப் புரியவைத்தார் கூட்டத்தில் நசுங்கிப் பிதுங்கிக்கொண்டு இருந்த புதூரைச் சேர்ந்த முருகன் என்ற பக்தர்!
கள்ளழகரைத் தரிசிக்க முடியாதவர்கள், நேர்த்திக்கடனுக்காக கருப்பணசாமி, கள்ளழகர் வேடத்தில் வந்தவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று திருப்தி அடைந்தார்கள்!
நெருக்கித் தள்ளிய கூட்டத்தில் அடிக்கடி பலர் மயங்கி விழ, தண்ணீர் பாக்கெட்டுகளை மயக்க பார்ட்டிகளின் முகத்தில் அடித்து விழிக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள்! 
 பச்சைப் பட்டுடுத்தி வந்த கள்ளழகரின் அழகில் மயங்கியவர்கள், ''இனி எல்லாம் நல்லாவே நடக்கும்'' என்று மன நிறைவுடன் கலைந்து சென்றார்கள்!
- பூ.ஜெயராமன், படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, க.கார்த்திக்
Source - Vikatan Magazine

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

அண்ணா ஹஜாரே (எ) இந்தியன் தாத்தா

சமஸ்
இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள்
எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன

இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள்
சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன

ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்
மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது

ஒன்பது மாடி கோபுரம்
சிறு மண் குவியலிலிருந்து எழும்புகிறது

ஆயிரம் மைல் பயணம்
காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது

எனவே பெரிய விஷயங்களை
ஞானி ஒருபோதும் செய்ய முயல்வதில்லை

அதனால்தான் பெரிய விஷயங்களை
அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது!

- சீன ஞானி லாவோ ட்சு எழுதிய வரிகள் இவை. உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் அவருடைய 'தாவே தே ஜிங்’. 2,500 ஆண்டுகளைக் கடந்து இன்றும் முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படும் 'தாவே தே ஜிங்’ சொல்லும் முக்கியமான செய்தி: சின்னதில் இருந்து தொடங்குங்கள்!
உலகில் பலருடைய வாழ்வில் மகத்தான மாற்றங்களை உருவாக்கிய புத்தகம் 'ஸ்மால் இஸ் பியூட்டிஃபுல்’. பிரிட்டிஷ் பொருளாதார வல்லுநரான ஷூமேக்கர் எழுதியது. வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் சூழலியல் நலன் சார்ந்த பின்னணியில் அலசி எழுதப்பட்ட இந்தப் புத்தகம் சொல்லும் ஒரே செய்தி... சின்னதே அழகு!
நம் தேசப் பிதா காந்தியும் இதைத்தான் சொன்னார்: ''இந்தியாவுக்குத் தேவை பெரிய அளவிலான உற்பத்தி அல்ல. அதிக மக்கள் பங்கேற்கும் உற்பத்தியே நம்முடைய தேவை!''
இன்றைய உலகை ஆளும் உலகமயமாக்கல் கொள்கையின் அடிநாதமான 'பிரமாண்ட உற்பத்தி, பிரமாண்ட விற்பனை, பிரமாண்ட வாழ்க்கை’ தத்துவத்துக்கு நேர் எதிரான தத்துவம் இது!
இது என்ன விளைவை ஏற்படுத்தும்?
சுருக்கமான பதில்: உலகமயமாக்கல் என்ன விளைவுகளை எல்லாம் உருவாக்கி இருக்கிறதோ, அவற்றுக்கு நேர் எதிரான விளைவுகளை உருவாக்கும்!
இதற்கு மிகச் சிறந்த உதாரணம், ராலேகான் சித்தி. அண்ணா ஹஜாரேவிடம் இன்றைய இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய முதல் விஷயம், எதையும் சின்னதில் இருந்து தொடங்கும் அவருடைய எளிமை யான பாங்கு!
ராணுவத்தில் இருந்து ஹஜாரே விருப்ப ஓய்வு பெற்றுத் திரும்புவதற்கு முன்பே, சமூக நலன் சார்ந்த பணிகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொள்வது என்கிற முடிவை எடுத்துவிட்டார். என்ன பணியில் ஈடுபடுவது என்கிற கேள்வி எழுந்தபோது, ஏராளமான வாய்ப்புகள் அவருக்கு இருந்தன. ராணுவத்தில் இருந்து அளிக்கப்பட்ட கணிசமான தொகையும் அவர் வசம் இருந்தது. அந்த நாட்களில் அவருடைய நண்பர்கள் பலர் பம்பாயில் இருந்தார்கள். அவர்கள் அவருக்குச் சொன்ன யோசனை, எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் பம்பாயில் இருந்து தொடங்கலாம் என்பதுதான். அப்போதுதான் பெரிய அளவில் வெற்றி பெற முடியும் என்றார்கள். அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்றலாம் என்றுகூட அழைத்தவர் கள் உண்டு. ஆனால், ஹஜாரேவுக்கோ 'பெரிய’ என்கிற வார்த்தையில் எப்போதுமே நம்பிக்கை இருந்தது இல்லை. யாரும் எதிர்பாராத வகையில் தன்னுடைய சின்ன கிராமத்தில் இருந்தே தன்னுடைய பணிகளைத் தொடங்கினார்.
இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்குக் குறைந்த செலவில் அதிக பலன் தரக் கூடிய ஒரு திட்டம் என்னவாக இருக்கும் என்று கேட்டபோது, அதற்கு ஷூமேக்கர் முன்வைத்த திட்டம், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் ஆளுக்கு ஐந்து மரக்கன்றுகள் வைத்து ஐந்து ஆண்டுகள் வளர்ப்பது. ''இந்த ஐந்து ஆண்டுத் திட்டம் உங்களுடைய எந்த ஐந்து ஆண்டுத் திட்டத்தைவிடவும் செலவு குறைந்தது. மிக அதிகப் பலன் தரக் கூடியது!'' என்றார் ஷூமேக்கர்.
அண்ணா ஹஜாரே 'ஸ்மால் இஸ் பியூட்டிஃபுல்’ புத்தகத்தைப் படித்தவரோ, ஷூமேக்கரைப் பற்றி அறிந்தவரோ அல்ல. ஆனால், ராலேகான் சித்தியின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவர் செயல்படுத்திய முதல் திட்டம் அதுதான்!
அன்று தொடங்கி இன்று வரை அண்ணா ஹஜாரேவின் எல்லாப் பணிகளிலுமே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் இதுதான். எல்லோருக்கும் பயன் அளிக்கக்கூடிய, எல்லோராலும் பங்களிக்கக் கூடிய சின்ன அளவிலான திட்டங்கள் அவருடையவை. ராலேகான் சித்தியில் ஹஜாரே உருவாக்கி இருக்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள், பாசனக் குளங்கள், வாய்க்கால்கள், சிறு அணைகளில் தொடங்கி, அவருடைய போராட்டங்கள் வரை அவருடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் இந்தச் சின்ன - எளிய தத்துவத்தைப் பார்க்க முடியும். அதேபோல, பெரிய அளவிலான திட்டங்களை எப்போதுமே எதிர்த்து இருக்கிறார் ஹஜாரே!
சரி, இப்படிச் சின்னதாகச் சிந்திப்பதில் அப்படி என்ன முக்கியத்துவம் இருக்கிறது?
இயற்கை வேளாண்மை மீது உலகின் பார்வையை மீண்டும் திருப்பிய மசானபு ஃபுகோகோ சொல்கிறார்: ''நீடித்து நிலைக்கும் மகத்தான மாற்றங்களுக்கு, எளிமையான சின்னத் திட்டமிடல்களே அடிப்படை!''
இந்தியாவை இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே உருவாக்க காந்தி திட்டமிட்டார். ஆனால், இந்தியாவோ அதற்கு நேர் எதிராகவே உருவானது!
- தொடர்வோம்...

Source - Vikatan Magazine

கள்ள ஓட்டு ராஜபக்ஷே...

கள்ள ஓட்டு ராஜபக்ஷே...

மூக்குடைத்த 'டைம்'!
'உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ராஜபக்ஷே...
'டைம்’ பத்திரிகை வாக்கெடுப்பில் முந்துகிறார்!’ - கடந்த வாரம் இலங்கை ஊடகங்களில் இப்படி ஒரு
செய்தியைப் பார்த்தவர்​களுக்குப் பயங்கர அதிர்ச்சி!
அமெரிக்காவின் வார இதழான 'டைம்’, உலகின் முன்னணிப் பத்திரிகை. இதன் வாசகர்கள், உள்நாட்டில் இரண்டு கோடி பேர். வெளிநாடுகளில் 2.5 கோடி பேர். ஆகையால், 'டைம்’ பிரசுரிக்கும் விஷயங்கள், சர்வதேச கவனத்தைப் பெறும். ஆண்டுதோறும் 'மேன் ஆஃப் தி இயர்’ ஆகத் தேர்ந்து எடுக்கப்பட்டு, அந்தப் பத்திரிகையின் அட்டையில் இடம் பெறுபவர்கள், கிட்டத்தட்ட நோபல் பரிசு பெற்றதற்கு இணையான புகழைப் பெறுகிறார்கள்!
இந்த நிலையில், கடந்த 1999-ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் 'செல்வாக்கு மிக்க 100 பேர்’ பட்டியலையும் அந்தப் பத்திரிகை வெளியிடத் தொடங்​கியது. பிரபலங்களைத் தேர்ந்தெடுப்பதில், இணைய வாக்கெடுப்பின் மூலம் வாசகர்களும் பங்கேற்கலாம் என்பதால், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் பட்டியல் வெளியாகும்.
இந்தப் பட்டியலில், 'ராஜபக்ஷே இடம் பெற்று இருக்​கிறார்’ என்று வெளியிட்டன இலங்கை ஊடகங்கள்!
'ஈழப் பிரச்னையைப் பொறுத்த அளவில், 'டைம்’ எப்போதுமே இரு தரப்புத் தவறுகளையும் விமர்சித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இலங்கை அரசின் தவறுகளைத் தொடர்ந்து விமர்சிக்கும் பத்திரிகையாகவே அது இருந்து இருக்கிறது.
இத்தகைய சூழலில், இது எப்படி சாத்தியம்?’ என்று குழம்பினார்கள் வாசகர்கள். ஆனால், 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின்’ அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஏப்ரல் 17-ம் தேதி ஒரு செய்தி வெளிவந்தது. அதில், 'டைம்’ பட்டியலில் ராஜபக்ஷே இடம் பெற்று இருப்பதை உறுதி செய்ததுடன், இரண்டு லட்சத்து 3,117 வாக்குகளுடன் 4-ம் இடத்தில் அவர் இருப்பதாகவும் தெரிவித்தது. 'பயங்கரவாதத்துக்கு எதிராக ராஜபக்ஷே எடுத்த நடவடிக்கைகளுக்கும், ஜனநாயகம் செழிக்க எடுத்த நடவடிக்கைகளுக்கும் கிடைத்து இருக்கும் சர்வதேச அங்கீகாரம் இது!’ என்று குறிப்பிட்டது. அதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா 40-வது இடத்திலும், காங்கிரஸ் தலைவர் சோனியா 100-வது இடத்திலும் பின்தங்கி இருப்பதாகவும் சுட்டிக்காட்டி புளகாங்கிதம் அடைந்து இருந்தது. 'டைம்’ இதழின் இணைய தளமும் இந்தச் செய்தியை  உறுதி செய்தது.
ஆனால், ஏப்ரல் 21-ம் தேதி இந்த வாக்கெடுப்பு முடிந்து, மறுநாள் 'செல்வாக்கு மிக்க 100 பேர்’ அறிவிக்கப்பட்ட நிலையில், பட்டியலில் இருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டது ராஜபக்ஷே பெயர்!
என்ன நடந்தது பின்னணியில்?
பட்டியலில் ராஜபக்ஷே இடம் பெற்று இருக்கும் தகவல் வெளியானதுமே, 'உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு போர்க் குற்றவாளியை முன்னிலைப் படுத்துவதா?’ என்று 'டைம்’ பத்திரி​கைக்குக் கண்டனங்கள் குவிந்தன. தவிர, உலகம் வெறுக்கும் ஒரு நபர் இவ்வளவு வாக்குகளைப் பெற வாய்ப்பு இல்லை என்றும் ஏராளமானோர் சந்தேகம் எழுப்பினார்கள்.
இதே சந்தேகம் 'டைம்’ ஆசிரியர் குழுவில் உள்ளவர்​களுக்கும் எழ, தன்னுடைய தொழில்நுட்பக் குழுவிடம் ராஜபக்ஷே விவகாரத்தை ஒப்படைத்தது தேர்வுக் குழு. அந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில்தான், இலங்கை ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைக் கையில் வைத்துக்கொண்டு ராஜபக்ஷே செய்த தில்லுமுல்லு அம்பலமாகி இருக்கிறது!
இலங்கை ராணுவம் அரங்கேற்றிய போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. குழு தயாரித்துள்ள அறிக்கை வெளி வரும் போது டைம் தகவல் வந்தால் நல்லது என்று நினைத்திருக்கிறார் ராஜபக்ஷே. இதைத் தொடர்ந்து, களத்தில் இறங்கிய ராஜபக்ஷேவின் கைத்​தடிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவருக்கு ஆதரவாகக் கள்ள ஓட்டுப் போட்டனர். இலங்​கையில் ராணுவத்தின் தொழில்நுட்பத் துறையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் இந்தப் பின்னணியில் இருந்திருக்கின்றன.
ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக விழுந்த ஓட்டுகள் அவ்வளவும் கொத்துக் கொத்தாக விழுந்து இருப்பதைக் கண்டுபிடித்த 'டைம்’ தொழில்நுட்பக் குழு, 'இது திட்டமிட்ட சதி’ என்று ஆதாரப்பூர்வமாக தேர்வுக் குழுவிடம் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாகவே, ராஜபக்ஷேவின் பெயர் நீக்கப்பட்டது.
இந்தப் பின்கதையை எல்லாம் எதிர்பார்க்காமல், பட்டியல் வெளியாவதற்கு முன்னதாகவே ஆர்வக்​கோளாறில் செய்தியை இலங்கை அரசு தரப்பே சொல்லிவிட்டதால், வெளியே தலை காட்ட முடியாத அவமானத்தில் சிக்கி இருக்கிறார் ராஜபக்ஷே. போர் வெற்றிக்குப் பின் அவரது அசுர ஆட்டத்தில் ஆட்டம் கண்டு, அடங்கிப்போய் இருந்த எதிர்க் கட்சிகளும், இதையே சாக்காகவைத்து, 'சர்வதேச அளவில் இலங்கைக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டார் ராஜபக்ஷே’ என்று பிரசாரத்தில் இறங்கிவிட்டன. இதனால், கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறார் ராஜபக்ஷே!
- சமஸ்

Source - Vikatan Magazine

கலைஞர் டி.வி-க்கு ஸ்பெக்ட்ரம் பணம்!

கலைஞர் டி.வி-க்கு ஸ்பெக்ட்ரம் பணம்!

கடனா? ஊழலா? பங்கா?
.ராசாவின் தயவில், ஏர்​டெல், பி.எஸ்.​என்.எல். தவிர, கிட்டத்தட்ட எல்லாத்
தொலைபேசி நிறுவன அதிகாரிகளும் திகார் ஜெயில் நோக்கிப் பயணமாகிறார்கள். அடுத்த கட்டக் காட்சிகள் பரபரப்பாக அரங்கேறி வருகின்றன! 
கடந்த 2-ம் தேதி, சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் யுனிடெக் வயர்​லெஸ் (தமிழ்நாடு) லிமி​டெட், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய மூன்று நிறுவனங்கள் உட்பட 12 நபர்களைக் குற்றவாளி​களாக அறிவித்தது. இந்த விவகாரத்தில் கைதான ஷாகித் பால்வா மட்டுமே, டெலிகாம் நிறுவனம் சம்பந்தப்​பட்டவர். மற்ற டெலிகாம் நிறுவன உரிமையாளர்களை சி.பி.ஐ. அழைத்து விசாரித்ததே தவிர, யாரையும் கைது செய்ய​வில்லை. ஆனால், சி.பி.ஐ. அவர்களின் பெயர்களை நேரடியாகக் குற்றப் பத்திரிகையில் சேர்த்தது. இந்த டெலிகாம் நிறுவன உரிமையாளர்களும், நிர்வாகிகளும், பலம்மிக்க தொழில் அதிபர்களின் பின்புலத்தில் இருந்த காரணத்தால், நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் சி.பி.ஐ. நினைத்ததை சாதித்தது.
குற்றப் பத்திரிகையில் இடம் பெற்று இருந்த மூன்று நிறுவனங்களுக்கும் பயம் தொற்றிக்கொண்டது. 'இவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, சி.பி.ஐ. நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கோரும்’ என்று தகவல் வரவே, இந்த டெலிகாம் நிர்வாகிகள் கடந்த 13-ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
நினைத்ததை முடித்தது சி.பி.ஐ.
ஷாகித் பால்வாவின் கூட்டாளியும் ஸ்வான் டெலிகாம் இயக்குநர் மற்றும் டிபி ரியாலிட்டி எம்.டி. ஆகிய பொறுப்பில் உள்ள வினோத் கோயங்கா, மற்றும் யுனிடெக் டெலிகாம் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த கௌதம் தோஸி, ஏ.டி.ஏ.ஜி. தலைவர் சுரேந்தர பைப்பாரா, இதே நிறுவனத்தின் உதவித் தலைவர் ஹரி நாயர் ஆகிய ஐந்து பேரும் முன் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இவர்களுக்காக, முகுல் ரோத்தாக், கே.டி.எஸ்.துள்சி போன்ற பிரபல வழக்கறிஞர்கள் ஆஜாரானார்கள்.
''இவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு​களுக்கு, ஆயுள் தண்டனையோ, தூக்கு தண்டனை​யோ கிடைக்கப்போவது இல்லை. ஒரு வேளை, குற்றச்சாட்டு நிரூபணம் ஆனாலும், அதிகபட்சம் ஒரு வருடம் முதல் ஏழு வருடங்கள் வரை தண்டனை கொடுக்கப்படும். சி.பி.ஐ. புலன் விசாரணை மேற்கொண்ட சமயத்தில், அல்லது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, இவர்களைக் கைது செய்யவில்லை. சி.பி.ஐ. அழைத்த நேரத்தில் எல்லாம் விசாரணைக்கு ஒத்துழைத்தனர். இப்போது குற்றப் பத்திரிகை தாக்கல்செய்த பின்னர், இவர்களைக் கைது செய்ய வேண்டியது இல்லை. அப்படிக் கைது செய்தால், ஜாமீனில் விடுவிக்கவேண்டும்!'' என்று வாதாடினார்கள்.
இவர்களது மனுவுக்குப் பதில் அளித்த சி.பி.ஐ., ''இவர்களை வெளியேவிட்டால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களைக் கலைத்து​விடுவார்கள்!'' என்றது. மூன்று நாட்கள் தொடர்ந்து வாதங்கள் நடந்தன. இறுதியில், கடந்த 20-ம் தேதி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி, இவர்களது முன் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தததோடு, ஐந்து பேர்களையும் நீதிமன்றக் காவலில், திகார் ஜெயிலிலுக்கு அனுப்பினார். 
ஸ்வான் டெலிகாம் டைரக்டர் வினோத் கோயங்கா கதறி அழ, ஆ.ராசாவும் ஷாகித் பால்வாவும் அவரைத் தேற்றினார்கள். ரிலையன்ஸ் நிர்வாகிகளின் குடும்பத்தினரும் கண்ணீர்விட்டனர். ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத் தலைவர் சுரேந்திர பைப்பாரா, தனக்கு உள்ள இருதய நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைச் சொல்ல, சி.பி.ஐ. வழக்கறிஞர் லலித், 'அவருக்கு முன் ஜாமீன் வழங்குவதில் தடை இல்லை’ என்றார். ஆனால் நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள​ வில்லை. 'அவரது உடல்​நிலை அவ்வளவு மோசம் இல்லை’ என்றும், 'இந்த சமயத்தில் இவர்கள் வெளி​யே இருந்தால், விசாரணை பாதிக்கும்’ என்று கூறி முன் ஜாமீன் தர மறுத்தார்.
நஷ்டம் மேல் நஷ்டம்
இதன் எதிரொலியாக இந்த மூன்று டெலிகாம் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் சந்தையில் மளமளவென இறங்கின. டிபி ரியாலிட்டி நிறுவனம் 2ஜி ஊழலுக்குப் பின்னர் 77 சதவிகிதம் வரை பங்கு மார்க்கெட்டில் வீழ்ச்சி அடைந்தது. இதே மாதிரி, யுனிடெக் நிறுவனத்துக்கும் 5,000 கோடி வரை நஷ்டமாம். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ஒட்டுமொத்தமாக சுமார் 26,000 கோடி வரை இழந்து உள்ளது.
புதுமுகம்... அறிமுகம்!
கைதாகியுள்ள வினோத் கோயங்காவின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. ஷாகித் பால்வாவைப் போன்று கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனது தந்தையின் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முதலில் குதித்தார். குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட், ஹோட்டல், பால் என்று 30 விதமான தொழில்​களில் முத்திரை பதித்தவர். சரத்பவார் குடும்பத்தினரோடு பல தொழில்களில் சம்பந்தப்பட்டவர். அதுவும், ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சரான பின்னர், வினோத் கோயங்காவின் ரியல் எஸ்டேட் தொழில் கிடுகிடுவென வளர்ந்தது. பின்னர், ஷாகித் பால்வாவுடன் சேர்ந்து, டிபி ரியாலிட்டி நிறுவனத்​தை உருவாக்கி, டெலிகாம் பிசின​ஸில் ஈடுபட்டார்.
அனுபவ ரீதியில் வினோத் கோயங்காவின் ரியாலிட்டி ரியல் எஸ்டேட் பிசினஸ் வளர்ந்தது என்றால், சஞ்சய் சந்திராவும் அவரது தந்தையும் யுனிடெக் நிறுவனத்தை முறைப்படி தொழில்நுட்பத்தைப் படித்து வந்து உயர்த்தினார்கள். சஞ்சய் சந்திராவின் தந்தை ரமேஷ் சந்திரா, ஐ.ஐ.டி. காரக்பூரில் படித்து, ரூர்க்கி அரசு ஆய்வுக் கூடத்தில் பணியாற்றியவர். தந்தை வழியிலேயே மண்ணியல் சம்பந்தப்பட்ட தொழில்​நுட்பப் படிப்பைப் படித்து, அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடித்து, அங்கேயே பணியாற்றினார் சஞ்சய். பின்னர் 1965-ல் தந்தையும் மகனும், மண்ணியல் சம்பந்தப்பட்ட ஆய்வுக்கூடங்களைத் தொடங்கி, ரியல் எஸ்டேட்டில் இறங்கினார்கள். அதன் பின்னர் மின்சாரம், ஹோட்டல், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்று ஒவ்வொன்றாகக் கால் பதிக்க, இவர்களின் சொத்து மதிப்பு 40,000 கோடி வரை உயர்ந்தது. 
   சிக்கிய கலைஞர் டி.வி.!?
ஷாகித் பால்வாவின் டிபி ரியாலிட்டி மற்றும் டைன​மிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து வந்த பணம், குஸேகான் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் ரியாலிட்டி நிறுவனத்துக்கு வந்து, பின்னர் சினியுக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது. அதன் பிறகு, சினியுக் நிறுவனம் அதை, கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்கிறது. டிபி ரியாலிட்டி, குஸேகான், சினியுக் ஃபிலிம்ஸ் என்று வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், இயக்குநர்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவர்கள். கலைஞர் டி.வி-க்குக் கொடுக்கப்பட்ட பணம் தங்களுக்குத் திரும்பிவிட்டது என்று இவர்கள் கணக்கு சொல்ல, சி.பி.ஐ. சந்தேகித்துக் கைது செய்துள்ளது. சினியுக் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் முரானி, பணத்தை கலைஞர் டி.வி-க்கு முன்பணமாகக் கொடுத்தாகக் குறிப்பிட்டார். தங்களுக்கு இந்தப் பணத்தைக் கொடுத்த குஸேகான் நிறுவனம், இதை கலைஞர் டி.வி-க்கு கொடுக்கக் கூறியதாக முரானி குறிப்பிட்டார். குஸேகான் நிறுவனம், பணத்தைக் கடனாகக் கொடுத்ததாகவும், பின்னர் கலைஞர் டி.வி. பங்குகளை வாங்கத் திட்டம் இட்டதாகவும், ஆனால் விலை வித்தியாசத்தில் பணத்தைத் திரும்பப் பெற்றதாகவும் குறிப்பிட்டது. ஆனால், ஆதாரங்​களை சரியாகக் கொடுக்கத் தவறியதற்காக, குஸேகான் நிறு​வனத்தின் இயக்குநர்கள் ஆசிப் பால்வாவையும், ராஜீவ் பி. அகர்வாலையும், சி.பி.ஐ. கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த விவகாரத்தில் கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி போன்றோர் சிக்குவார்களா அல்லது சரத்குமார் மட்டும் சிக்குவாரா என்று கேள்​விகள் எழுந்த்துள்ள நிலையில், இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சரத்குமார், கனிமொழி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் கொடுக்கப்பட்டதற்காகவே, ஆ.ராசா சம்பந்தப்பட்ட கட்சியின் தொ​லைக்காட்சிக்கு இந்தப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. கருதுகிறது. ஆனால் சரத்​குமார், ''கடனாக வாங்கினோம், பின்னர் வட்டியோடு சேர்த்து திருப்பிக் கொடுத்துவிட்டோம்!'' என்று கூறியுள்ளார். கடன் கொடுத்த காரணத்தை சி.பி.ஐ. கேட்டபோது, குஸேகான் நிறுவனத்தினர், 'போர்டு மீட்டிங்கில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக’ சொன்னது. அந்த மீட்டிங்கின் மினிட்ஸ் குறிப்பு என ஒரு நகலை மட்டும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்தனர். ஒரிஜினல் மினிட்ஸ், கலைஞர் டி.வி-க்கு அனுப்பியதாகச் சொல்​கிறார்கள். ஆனால் சரத்குமார், 'எங்களுக்கு தகவல்தான் கொடுத்தார்களே தவிர, குறிப்பு அனுப்பவில்லை’ என்று பதில் கொடுத்தார். ஒரிஜினல் மினிட்ஸ் கொடுக்காத குஸேகான் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ஆசிப் பால்வாவும் ராஜீவ் பி. அகர்வாலும் கைது செய்யப்​பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த கைதுகள் இனி தொடரலாம்!
- சரோஜ் கண்பத்   
படங்கள்: ராம்கந்த் கஷ்வாஹ் 

Source - Vikatan Magazine

Thursday, April 28, 2011

கீதை காட்டும் பாதை 2 - இந்த துக்கம் அர்த்தமற்றது!

கீதை காட்டும் பாதை 2 - இந்த துக்கம் அர்த்தமற்றது!

- என்.கணேசன்
ருவர் பேசுவதை இடைமறிக்காமல் முழுவதுமாகக் கேட்பது மிகப் பெரிய அபூர்வமான கலை. அது எல்லோருக்கும் கைகூடுவதில்லை. ஒருவர் பேசப் பேச இடையிடையே தங்கள் கருத்தையும், எண்ணத்தையும் சொல்லத் தோன்றும். அதே போல அறிவுரையை யாருக்கும், எப்போதும், இலவசமாக அறிவுரை வழங்கத் தயாராக இருப்பவர்கள் அதிகம். கேட்டால் மட்டுமே, தேவைப்பட்டவர்களுக்கு மட்டுமே சரியான அறிவுரை சொல்ல முற்படுவதும் அபூர்வமே. இந்த இரண்டு அபூர்வத் தன்மைகளையும் பகவான் கிருஷ்ணனிடம் நாம் பார்க்க முடிகிறது.
திடீரென்று தத்துவஞானியாக மாறிய அர்ஜுனன் யுத்தத்தால் குலநாசம் வரும், பல தலைமுறைகளுக்கு அதர்மம் சூழும் என்றெல்லாம் கண்டுபிடித்து சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன், "உன்னை சரணடைகிறேன், எது தர்மம் என்று சொல்" என்று சொன்ன பின்னரே தன் உபதேசத்தை ஆரம்பிக்கிறார்.
பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தில் பதினோராம் சுலோகத்தில் இருந்து தான் பகவான் கிருஷ்ணனின் உபதேசம் ஆரம்பமாகிறது.
"யாருக்காக துக்கப்பட வேண்டாமோ, அவர்களுக்காக நீ துக்கப்படுகிறாய். விவேகிகள் இருப்பவர்களுக்காகவும், இறந்தவர்களுக்காகவும் வருத்தப்பட மாட்டார்கள்.
நானோ நீயோ, இந்த மன்னர்களோ ஒரு காலத்திலும் இராமலிருந்ததில்லை. இனிமேலும் நம்மில் எவரும் இராமலிருக்கப் போவதுமில்லை.
உடல் எடுத்த ஆன்மாவுக்கு இந்த உடலில் குழந்தைப் பருவம், இளமைப்பருவம், மூப்பு ஆகியவை எப்படியோ மற்றொரு உடலை அடைவதும் (அதாவது மறுபிறப்பும்). விவேகி இதற்கு மயங்குவதில்லை.
இந்த ஆன்மா ஒரு போதும் பிறப்பதில்லை. ஒரு போதும் இறப்பதில்லை. இது இல்லாதிருந்து பின் உண்டாவதில்லை. பிறப்பில்லாதது, என்றும் இருப்பது, புராதனமானது. உடல் கொல்லப்பட்டலும் ஆன்மா கொல்லப்படுவதில்லை.
கிழிந்த துணிகளைக் களைந்து எறிந்து விட்டு மனிதன் புதிய துணிகளை அணிந்து கொள்வது போல் ஆத்மா சிதைந்து போன உடம்புகளைக் களைந்து விட்டு புதிய உடம்பைப் பெற்றுக் கொள்கிறது,"
என்று பகவான் கிருஷ்ணன் உடலின் நிலையாமை குறித்தும், ஆன்மாவின் நிரந்தரத்தன்மை குறித்தும் சொல்கிறார்.
ஒரு மனிதன் தன் உடலையே தானாகவும், தன் அடையாளமாகவும் காண முற்படும் போது அவன் கணக்கற்ற துன்பங்களைப் பெற வலுவான அஸ்திவாரத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். கிட்டத்தட்ட அனைத்து துக்கங்களுக்கும் மூல காரணம் அப்படி உடலையே "நான்" என்றும் "மற்றவர்" என்றும் எடுத்துக் கொள்ளும் அறியாமையே. எனவே தான் பகவான் கிருஷ்ணன் ஆரம்பத்திலேயே அந்த அறியாமையை சுட்டிக் காட்டுகிறார்.
நம் உடலில் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான செல்கள் பிறக்கின்றன, ஆயிரக்கணக்கான செல்கள் அழிகின்றன என்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது. மனித உடல் சில மாதங்களில் முற்றிலும் புதியதாக மாறி விடுகிறது என்றும் பழைய செல்களில் ஒன்று கூட அப்போது உடலில் எஞ்சி இருப்பதில்லை என்றும் நவீன விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இன்று ஒரு தாவரத்தில் இருக்கும் செல், நாளை நம் உடம்பினுள்ளே இருக்கலாம். சில நாட்கள் கழித்து ஒரு விலங்கின் உடலில் அந்த செல்லைக் காணலாம். இப்படி உடல் இயங்கத் தேவையாக இருக்கும் செல்கள் கூட நம்மிடம் நிரந்தரமாக இருப்பதிலை.
இன்று "நான்" என்று சொல்வதில் ஒரு பகுதியாக இருந்த செல் ஒரு நாள் தாவரத்தின் 'நானாக' இருக்கிறது, இன்னொரு நாள் விலங்கின் 'நானாக' இருக்கிறது. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் உடலில் எது நம்முடையது? கணந்தோறும் மாறுவதும், கணந்தோறும் அழிவதுமான உடல் தான் நாமா?

இந்த செல்கள் பற்றிய விஞ்ஞானம் எல்லாம் எனக்குத் தெரியாது, என்னைப் பொறுத்த வரை பார்வைக்கு உடல் தொடர்ந்து இருக்கிறது என்று சொன்னால் கூட குழந்தைப் பருவம், இளமைப் பருவம், நடுத்தர வயதுப் பருவம், வயோதிகம் என்று பார்வைக்குக் கூட உடல் மாறிக் கொண்டே போகிறதே இதில் எது நீ என்ற கேள்வி எழுகிறது.
மேலும் உடலின் பிறப்புடன் ஆன்மா உருவாவதில்லை. உடல் இறக்கும் போது ஆன்மா அழிந்து போவதுமில்லை. என்றும் இருக்கும் ஆன்மாவிற்கு உடல் ஓர் ஆடையைப் போலத் தான். இந்த எண்ணம் மனதில் ஆழப்பதிந்தால் மரணம், அது யாருடையதானாலும், நம்மை வருத்தாது. தினம் தினம் உடை மாற்றுகிறோமே அதற்காக நாம் துக்கப்படுகிறோமா?
நீங்கள் உபயோகிக்கும் கருவி நீங்களாகி விட முடியாது. நீங்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவி முழுவதும் நீங்கள் உபயோகிக்கும் கருவி தான் இந்த உடல். இதை நீங்களாக அடையாளம் காணும் போது அந்த அடையாளம் அத்துடன் நின்று போவதில்லை. அதனுடன் ஒரு பட்டாளமே கூட்டு சேர்ந்து விடுகிறது. நான், எனது மனைவி, எனது கணவன், எனது பிள்ளைகள், எனது நண்பர்கள் என்று அந்த 'நானு'டன் நாம் இணைக்கும் கூட்டம் எல்லாமே சேரும் போது ஒன்றில்லா விட்டால் இன்னொன்று என்று ஏதாவது ஒரு துக்கம் நம்மைப் பாடாய் படுத்துகிறது. அத்துடன் நிற்காமல் எனது சொத்து, எனது பூமி, எனது செல்வாக்கு, எனது பதவி என்று நாம் தேடி சம்பாதித்ததும் நம்முடைய 'நானு'டன் சேரும் போது இதற்கெல்லாம் வரும் சின்ன சின்ன நஷ்டங்கள் கூட நம்மைப் பாடாய் படுத்தும் சக்தி பெற்று விடுகிறது. வருத்தப்பட நிறைய காரணங்கள் நமக்குக் கிடைத்து விடுகின்றன. எனவே தான் பகவான் கிருஷ்ணன் இத்தனைக்கும் மூல வேரான இந்த உடலை நானாக நினைக்கும் அறியாமையின் முட்டாள்தனத்தை ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டுகிறார். அந்த அறியாமை நம்மை விட்டு விலகும் போது அதனுடன் சம்பந்தப்பட்ட அத்தனை துக்கமும் நம்மிடம் இருந்து விலகுகின்றன.
பகவான் கிருஷ்ணன் மேலும் சொல்கிறார்.
"இந்த ஆன்மா எப்போதும் பிறப்பதாயும், இறப்பதாயும் நீ எண்ணினாலும் அப்போது கூட நீ துக்கப்படுவது சரியல்ல.
பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் நிச்சயம். உன்னால் தவிர்க்க முடியாததற்கு நீ வருந்தி என்ன பயன்?"
பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்காகவும், தத்துவங்களில் பெரிய நம்பிக்கை இல்லாதவர்களுக்காகவும், இன்னும் ஒரு படி இறங்கி வருகிறார். எனக்கு இந்த ஆன்மா பற்றிய தத்துவ விசாரங்கள் எல்லாம் பிடிபடவில்லை, எனக்கு உடல் தான் நான் என்று தோன்றுகிறது சொல்கிறவர்களுக்கு அவர் கேட்கும் கேள்வி தான் இது.
"நெருனல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்திவ் வுலகு"
என்று திருவள்ளுவர் சொன்னது போல உலகத்தில் நேற்று வரை வாழ்ந்தவனும் திடீர் என்று இன்று இல்லாமல் போவது இயல்பல்லவா? பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பும் நிச்சயமல்லவா?
கிங் லியர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொன்னது போல "இந்த உலகத்துக்கு வருவதைப் போலவே இந்த உலகை விட்டுப் போவதையும் நாம் சகித்துக் கொள்ளவே வேண்டும்" அல்லவா?
எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் இந்த விதிக்கு நாமும் கட்டுப்பட்டவர்களே அல்லவா? உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இது இயல்பான நிகழ்வே அல்லவா? ஒரு விதத்தில் பார்த்தால் நாம் இதை எதிர்பார்த்தே அல்லவா இருக்க வேண்டும்? பின் ஏன் நம் விஷயத்தில் நிகழும் போது நாம் பெருந்துக்கத்தில் அழுந்த வேண்டும்? மாறுதல் ஒன்றே மாறாத நியதி அல்லவா? நம் விஷயத்தில் மட்டும் அந்த நியதி மாறுபட வேண்டும் என்று ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?
இந்த உண்மைகளை எல்லாம் சொல்வது ஒருவன் 'கல் மனம்' கொண்டவனாய் மாறி விட வேண்டும் என்பதற்கல்ல. மரணம் நிகழும் போது, இழப்புகளை சந்திக்கும் போது, உடனடியாக வருத்தப்படுதல் சாதாரண மனிதர்களுக்கு இயல்பே. ஆனால் அதிலிருந்து உடனடியாக மீளுதல் மிக முக்கியம். அதைப் பெரிது படுத்தி சோகப் பெருங்கடலில் மூழ்க ஆரம்பிப்பதற்கு பதிலாக இந்த உண்மைகளை உள்ளத்தில் பதித்து, தெளிந்து, அடுத்ததாகச் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பிப்பது புத்திசாலித்தனம். நம்மை சில இழப்புகள் செயலிழக்க வைத்து விடாமல் நம் வாழ்க்கைப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேற இந்த உண்மைகள் நமக்கு பேருதவியாக இருக்கும்.
அடுத்ததாக பகவான் கிருஷ்ணன் கீதோபதேசத்தின் மிக முக்கியமான தத்துவம் ஒன்றை, வெற்றி பெற எண்ணும் ஒவ்வொரு மனிதனும் பின் பற்ற வேண்டிய ஒரு தத்துவத்தை, சொல்ல ஆரம்பிக்கிறார். அது என்ன..?
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம் : கீதை காட்டும் பாதை 1 - நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்ரம்!

Wednesday, April 27, 2011

2ஜி குற்றப்பத்திரிகை: திமுக நாளை முக்கிய முடிவு


2ஜி குற்றப்பத்திரிகை: திமுக நாளை முக்கிய முடிவு
சென்னை, ஏப்.26,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்காக திமுகஉயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடக்கிறது.
இது குறித்து திமுகபொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது சாற்றப்பெற்ற ஒரு குற்றச்சாட்டின் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியும் அதில் இணைக்கப்பட்டு-அந்த நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட்ட கடன் 200 கோடி ரூபாயும், கடனை வழங்கிய நிறுவனத்துக்கு வட்டியுடன் திரும்பச்செலுத்தி, அதற்கான வருமான வரித் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் உட்பட அனைத்தையும் ஆதாரமாகத்தரப்பட்டது.
இத்தனையும் வெளிப்படையான முறையில் நடைபெற்ற ஒன்றே தவிர - எவ்விதமான ஒளிவு மறைவோ மற்றும் சதியோ இல்லை என்பதை எடுத்துக்காட்டி நிரூபிக்கப்பட்டது. இதன் பிறகும் - வாங்கிய கடன் தொகையைக்கூட நேர்மையான முறையில் திருப்பிச்செலுத்தியுள்ள நிலையில் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் - தலைவர் கலைஞர் அவர்களின் மகள் கனிமொழி ஒரு பங்குதாரர் - அதைப்போல சரத்குமார், ஒரு நிர்வாக பங்குதாரர் என்ற முறையில் இருவருமே விசாரிக்கப்பட்டு - கலைஞரின் துணைவியார் தயாளு அம்மையாரையும் விசாரித்து இவற்றை பூதாகரமாக விளம்பரப்படுத்தினர்.
இறுதியில் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் என்ற செய்தியையும் பெரியதோர் விளம்பரமாக்கி - கனிமொழிக்கும், நிர்வாகப் பங்குதாரர் சரத்குமாருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கழகம் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றி கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கலாம் என்ற அடிப்படையில் 27-4-2011 (நாளை - புதன்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் அந்தக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
அந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் கூறியுள்ளார்.
சாட்சிப் பட்டியலில் தயாளு அம்மாள்...
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் குற்றப்பத்திர்கையில், கலைஞர் டிவியின் பங்குதாரரான கனிமொழி மற்றும் அதன் நிர்வாக இயக்குனரான சரத் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதேநேரத்தில், முதல்வர் கருணாநிதியின் மனைவியும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான தயாளு அம்மாளின் பெயர் சாட்சிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
அதேபோல், கலைஞர் டி.வி.யின் பொது மேலாளர்(நிதி) ஜி.ராஜேந்திரன், இயக்குநர் பி.அமிர்தம் ஆகியோரின் பெயர்களும் சாட்சிகளின் வரிசையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தயாளு அம்மாள் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறாததது குறித்து விளக்கம் அளிக்கும் சிபிஐ, கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாள் பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தாலும், நிறுவனத்தின் செயல்பாடுகளிலும், பணிகளிலும் அவருக்கு பங்கில்லை என்பதால், அவர் ஒரு செயல்படாத பங்குதாரராகவே இருந்திருக்கிறார் என தெரிவித்திருக்கிறது.
மேலும், கலைஞர் டி.வி.யின் செயல்பாடுகளில் கனிமொழி தீவிரமாகப் பங்கேற்றதும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் அவருக்கு இருந்த தொடர்பும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
குறிப்பாக, நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல், கலைஞர் டி.வி.யின் விவகாரங்கள் தொடர்பாக செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துடன் பேசியது ஆகியவை காரணமாகவே கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11-ன் கீழ் குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது, லஞ்சத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பான குற்றச்சாட்டை சார்ந்ததாகும்.
திமுக உறவில் மாற்றமில்லை: காங்.
இதனிடையே, சிபிஐ குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தாலும் திமுக- காங்கிரஸ் உறவில் விரிசல் வராது என்றும், எப்போதும் போல கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், 2ஜி முறைகேடு தொடர்பான சிபிஐ விசாரணைக்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
விசாரணையின் எந்த காலக்கட்டத்திலும் மத்திய அரசின் தலையீடு இருந்தது கிடையாது. சிபிஐ சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என்ற அவர், அரசியலில் யதார்த்த நிலைதான் கூட்டணியை நிர்ணயிக்கிறது. குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதால், அக் கட்சியுடனான உறவில் பாதிப்பில்லை. எனவே திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று அவர் கூறினார்.
தொடர்புடையச் செய்தி: 2ஜி ஊழல்: கனிமொழி, சரத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்



2ஜி ஊழல்: கனிமொழி, சரத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி ஊழல்: கனிமொழி, சரத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
புதுடெல்லி, ஏப்.25,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி உள்பட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதேநேரத்தில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் டிவி பங்குதாரர்களில் முதன்மையானவருமான தயாளு அம்மாள் பெயர் இடம்பெறவில்லை.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.
அதில், கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11-ன் கீழ் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது, லஞ்சத்தை ஏற்றுக் கொள்வது தொடர்பான குற்றச்சாட்டை சார்ந்ததாகும்.
கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத் குமாரின் பெயரும் இந்தக் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் முறையே 20, 60 மற்றும் 20 சதவீத கலைஞர் டிவி நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டுள்ளனர்.
சினியுக் ஃபிலிம்ஸ் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனத்தின் வழியாக கலைஞர் டிவி நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய பணம் பால்வாவின் நிறுவனம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினியுக் நிறுவனத்தின் கரீம் மொரானி, குசேகான் ரியால்டியின் ராஜீவ் அகர்வால் மற்றும் பால்வாவின் சகோதரர் ஆசிஃப் ஆகியோரின் பெயர்களும் இன்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் துணைக் குற்றப்பத்திரிகையிலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இடம்பெற்றுள்ளார். லஞ்சம் பெற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவாகியுள்ளது.
கனிமொழிக்கு சம்மன்...
மேலும் கனிமொழி, சரத் குமார், கரீம் முரானி ஆகியோர் மே 6-ம் தேதிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஓ.பி.சையினி உத்தரவிட்டார்.
2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் கனிமொழி, சரத் குமார், கரீம் முரானி ஆகியோரை சிபிஐ இதுவரை கைது செய்யவில்லை. அதேவேளையில், ஆசிஃப் பால்வா மற்றும் அகர்வால் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையச் செய்தி:

2ஜி குற்றப்பத்திரிகை.. இதயமற்று கேட்காதீர்: கருணாநிதி

2ஜி ஊழல்: ஆ.ராசா உள்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; தீவிர கண்காணிப்பின் கீழ் கலைஞர் டிவி!

2ஜி குற்றப்பத்திரிகை.. இதயமற்று கேட்காதீர்: கருணாநிதி


2ஜி குற்றப்பத்திரிகை.. இதயமற்று கேட்காதீர்: கருணாநிதி
சென்னை, ஏப்.25,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான இரண்டாவது குற்றப்பத்திரிகை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார் முதல்வர் கருணாநிதி.
மேலும், இந்தக் குற்றப்பத்திரிகையில் கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோரது பெயர் இடம்பெறுமா என்று கேட்கப்பட்டதற்கு, இதுபோல் இதயமற்ற கேள்வியைக் கேட்காதீர் என்றார் அவர்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் கருணாநிதியிடம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று பிற்பகல் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கலாவது குறித்து கேட்டதற்கு, "தாக்கலானால் அது பத்திரிகைகளில் வெளிவரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்," என்றார்.
அந்தக் குற்றப்பத்திரிகையில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரும் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளதே என்று கேட்டதற்கு, "அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது," என்றார்.
அதைத் தொடர்ந்து, ஒருவேளை அப்படி உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர் இடம்பெற்றால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து திமுக அமைச்சர்கள் வெளியேறும் வாய்ப்பு உண்டா என்று ஒரு பெண் நிருபர் கேட்டார்.
அதற்கு, "நீங்கள் ஆசைப்பட்டால், அது பற்றி யோசிக்கலாம். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இதயத்தை எடுத்து வைத்துவிட்டு இதுபோன்ற கேள்வியைக் கேட்கக் கூடாது," என்றார் முதல்வர் கருணாநிதி.


Source - Vikatan Magazine


2ஜி ஊழல்: ஆ.ராசா, 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; தீவிர விசாரணையின் கீழ் கலைஞர் டிவி!

2ஜி ஊழல்: ஆ.ராசா, 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; தீவிர விசாரணையின் கீழ் கலைஞர் டிவி!
புதுடெல்லி, ஏப்.2,2011
2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 9 பேர் மீதும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று (சனிக்கிழமை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதையொட்டி, திஹார் சிறையில் இருந்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆ.ராசா கொண்டுவரப்பட்டார்.
சிபிஐ தாக்கல் செய்த இந்த 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட முதற்கட்ட குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா உள்ளிட்ட 9 நபர்கள் மற்றும் 3 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால், ஆ.ராசா ஒருவரால் மட்டுமே ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டது என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராசா உள்ளிட்ட குற்றச்சாட்டப்பட்டவர்கள் மீது ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக சிபிஐ-யின் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.
டி.ஏ.ஜி. அதிகாரிகள் கெளதம் ஜோஷி, விரேந்திர திதாரா, ஹரி நாயர் ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற 'யுனிடெக்' நிறுவனம், தகுதியின்மை காரணமாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் மற்றும் ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் குற்றச்சதி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
மொத்தம் 125 சாட்சிகளின் பெயர்கள், 654 ஆதார ஆவணங்கள் ஆகியவையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற நபர்கள்,  நிறுவனங்களின் பெயர்களும், குற்றச்சாட்டு விவரமும்:
1. ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் - ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி.
2. ஷாகித் பால்வா, ஸ்வான் நிறுவனர் - ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி.
3. வினோத் கோயங்கா, டி.பி.ரியால்டி இயக்குனர் (பால்வாவின் பார்ட்னர்) - ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி.
4. சஞ்சய் சந்திரா, யுனிடெக் ஒயர்லெஸ் தலைவர் - எமாற்றுதல்
5. சித்தார்த் பெகுரா, முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் - ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி.
6. ஆர்.கே.சந்தோலியா, ராசாவின் முன்னாள் உதவியாளர் - ஊழல் வழக்கு, ஏமாற்றுதல், மோசடி மற்றும் குற்றச்சதி.
7. கவுதம் தோஷி, அனில் தீருபாய் அம்பானி குழுமத்தின் நிர்வாக அதிகாரி - ஏமாற்றத் தூண்டுதல்
8. விரேந்திர திதாரா, அனில் தீருபாய் அம்பானி குழுமத்தின் நிர்வாக அதிகாரி - ஏமாற்றத் தூண்டுதல்
9. ஹரி நாயர், அனில் தீருபாய் அம்பானி குழுமத்தின் நிர்வாக அதிகாரி - ஏமாற்றத் தூண்டுதல்
நிறுவனங்கள்...
1. ரிலையன்ஸ் டெலிகாம் - குற்றச்சதி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தல்
2. ஸ்வான் டெலிகாம் - குற்றச்சதி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தல்
3. யுனிடெக் ஒயர்லெஸ் - தகுதியில்லாமல் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமை பெற்றது.
தீவிர விசாரணையின் கீழ் கலைஞர் டிவி!
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், தீவிர விசாரணையின் கீழ் இடம்பெற்றுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பட்டியலில் பால்வாவின் நிறுவனத்திடம் இருந்து பணம் பரிமாறப்பட்ட கலைஞர் டிவி, சினியுக் ஃபிலிம்ஸ், கிரீன் ஹவுஸ் பிரைவட் லிமிடட், மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் முறையே 20, 60 மற்றும் 20 சதவீத கலைஞர் டிவி நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டுள்ளனர்.
சினியுக் ஃபிலிம்ஸ் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனத்தின் வழியாக கலைஞர் டிவி நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய பணம் பால்வாவின் நிறுவனம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.


Source - Vikatan Magazine


ஃபைவ் ஸ்டார் சமையல் !

ஃபைவ் ஸ்டார் சமையல் !

நிக்கேத்தனா
 'தோசைத் திருவிழா’, 'ஆப்பத் திருவிழா’ என்று  ஓட்டல் முழுக்க கட் அவுட் வைத்தும், பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தும் சென்னை, லி மெரீடியன் ஓட்டலின் செஃப் சக்திவேல், நம்மூர் அயிட்டங்களுக்கு எடுக்கும் திருவிழாக்கள் ஏக பிரபலம்!
''சொந்த ஊர் ஈரோடு. 5 ஸ்டார் ஓட்டல்கள்ல கரண்டி பிடிக்க ஆரம்பிச்சு 28 வருஷம் ஆயிடுச்சு. இத்தனை வருஷத்துல பல வி.ஐ.பி-க்களுக்கும் விருந்தளிக்கற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. ஆப்பமும் தேங்காய்ப்பாலும் அஜீத்தோட ஃபேவரைட். விஜய்னா... கல் தோசையும், வறுத்த கோழியும்தான்...'' என்று ஒரு பெரிய லிஸ்ட் வாசித்த சக்திவேலின் ஸ்பெஷல் அயிட்டங்கள் சுவாரஸ்யமானது.
''இட்லியை வைச்சு பர்கர் பண்ண முடியாதா?னு திடீர்னு ஒரு நாள் தோணும். பர்கர்ல ரெண்டு பன்னுக்கு நடுவுல சீஸ், தக்காளி, வெள்ளரிக்காய்னு வைக்கிற மாதிரி ரெண்டு இட்லிக்கு நடுவுல இட்லியோடு இயைந்து போகக் கூடிய அயிட்டங்களை செய்தா என்னனு தோணுச்சு. செஞ்சு பார்த்தேன். சூப்பரா வந்ததால அந்த 'இட்லி பர்கர்’ அயிட்டம் எங்க ஹோட்டல் மெனு கார்ட்லயும் இடம் பிடிச்சது.
இட்லி பர்கரைப் போட்டிப் போட்டுச் சாப்பிட்ட வாண்டூஸ்,  'உங்களுக்கு இட்லியில பீட்ஸாவும் செய்யத் தெரியுமா.?’னு ஆசையா கேட்க, அதையும் செய்தேன்.

இப்படி ஏதாவது புதுசு புதுசா கிச்சன்ல கண்டுபிடிச்சுட்டு இருந்தாதானே வாழ்க்கை சுவையா இருக்கும்?''
- நம்மை 'ஆமாம்’ சொல்லத் தூண்டும் அளவுக்கு சுவாரஸ்யமாகப் பேசிய சக்திவேல், இட்லி பர்கர், பீட்ஸா இட்லி இரண்டையும் 'அவள்’ வாசகிகளுக்காக சுடச்சுட செய்து பரிமாறுகிறார்!
பீட்ஸா இட்லி
தேவையான பொருட்கள்: நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மஷ்ரூம், நறுக்கிய தக்காளி, நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய கேரட் - தலா 25 கிராம், நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், மஷ்ரூம், தக்காளி, பீன்ஸ், கேரட், கொத்தமல்லி ஆகியவற்றை வதக்குங்கள். கூடவே மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலாவாக மாறும் வரை கிளறுங்கள். இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு, ஒரு இட்லியைப் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுங்கள். பிறகு, அதை நான்காக வெட்டி, தயாராக உள்ள மசாலாவை இட்லி துண்டுகளின் மீது தடவுங்கள். மேலும் சுவை சேர்க்க சீஸை துருவி அந்தத் துண்டுகளின் மீது தூவி,  அது உருகி இட்லி மீது படரும்வரை 'அவன்’-ல் வைத்தெடுங்கள். இதோடு தக்காளி, வெள்ளரிக்காய் சேர்த்துச் சாப்பிட்டால், அசல் பீட்ஸாதான்!

 இட்லி பர்கர்
தேவையான பொருட்கள்: வேக வைத்து தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு - 50 கிராம், நறுக்கிய கேரட் - 20 கிராம், நறுக்கிய பீன்ஸ் - 25 கிராம், நறுக்கிய வெங்காயம் - 50 கிராம், நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள்,     மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு... வெங்காயம், பீன்ஸ், கேரட், கொத்தமல்லித்தழை மற்றும் மிளகாய்த்தூளை சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். மசித்து வைக்கப்பட்ட உருளைக்கிழங்கை இதோடு சேர்த்து, சிறு தீயில் கிளறி இறக்குங்கள். கலவை சற்றே ஆறிய பிறகு, இட்லி வடிவத்தில் வட்ட வட்டமாகத் தட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு, இரண்டு இட்லிகளை எண்ணெயில் இட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுங்கள். பிறகு, ஜல்லிக் கரண்டி கொண்டு அதிலிருக்கும் எண்ணெயை வடிகட்டுங்கள். வட்டமாக தட்டி வைத்திருக்கும் உருளை மசாலாவை, இரண்டு இட்லிக்கு இடையே வைத்தால் இட்லி பர்கர் ரெடி.
லெட்டூஸ் இலை, சீஸ் ஆகியவற்றை இட்லிகளுக்கு இடையே வைத்து, இட்லிக்கு மேலே ஒரு செர்ரிப்பழத்தை வைத்தால் கிரீடம் சூட்டியதைப் போல ஒரு கம்பீரம் சேரும். பக்கத்தில் கொஞ்சம் ஃபிங்கர் சிப்ஸையும் சேர்த்து வைத்தால், பளிச்சென்று இருக்கும் இட்லி பர்கர்!
- பரிமாறுவோம்...
படங்கள்: கே.ராஜசேகரன், என்.விவேக்


Source - Vikatan Magazine

உங்கள் குழந்தையும் இனி நம்பர்1

உங்கள் குழந்தையும் இனி நம்பர்1

கிளிப்பேச்சு...மொழி போச்சு !
 குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
ராகுல் சென்... கொல்கத்தாவைச் சேர்ந்த இந்த நான்கு வயது சிறுவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். ''குட்டி ராகுலுக்கு என்ன ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும்?'' என தமிழில் கேட்டேன். பதில் சொல்லத் தடுமாறினான். அதையே ஆங்கிலத்தில் கேட்டேன். அதற்கும் பதிலில்லை. அவன் தாய்மொழியான பெங்காலியில் கேட்டபோதும் தடுமாற்றமே!
''இப்படித்தான்... அவனுக்குப் பேச்சும் சரியா வரல... நாம பேசறதைப் புரிஞ்சுக்கவும் சிரமப்படறான். பேச்சுலயே இவ்வளவு பிரச்னை இருந்தா, பாடமெல் லாம் எப்படிப் படிப்பான்..?'' என்றார் அவனுடைய அம்மா மனதெல்லாம் தவிப்புடன்.
அவரிடம், ''குழந்தைகிட்ட வீட்ல என்ன மொழியில பேசுவீங்க..?'' எனக் கேட்டேன். ''எங்க தாய்மொழியில தான் பேசுறோம் டாக்டர்...'' என்றார். ''அவனுடைய அப்பா அவனிடம் என்ன மொழியில பேசுகிறார்?’' என்றதற்கு, ''இங்கிலீஷ், பெங்காலினு ரெண்டு மொழி யிலயும் பேசுவார்'' என்றார். ''அக்கம் பக்கத்துல அவன் வயசு குழந்தைங்க அவன் கூட விளையாடும் போதும், ஸ்கூல்லயும் என்ன மொழியில பேசுவாங்க..?'' என்றேன். ''நாங்க இருக்கறது கொஞ்சம் வசதியான அபார்ட் மென்ட். அங்க எல்லா குழந்தைகளும் இங்கிலீஷ் மீடியத்துல படிக்கறதால பெரும்பாலும் இங்கிலீஷ்தான். ஸ்கூல்லயும் அதேதான்'' என்றார் அவனுடைய அம்மா பயத்துடனும் குழப்பத்துடனும்!
அங்குதான் பிரச்னையே! குழந்தை, தான் வளரும் சூழ்நிலையில் தமிழ், ஆங்கிலம், பெங்காலி என்று மூன்று மொழிகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறான். அங்கே, பெரும்பாலானவர்களால் பேசப்படும் மொழி ஆங்கிலம். ஆனால், அவனுடன் அதிகம் பேசும் அம்மா, பெங்காலியில் பேசியிருக்கிறார். அதனால் எந்த மொழியையும் முழுமையாக கற்றுக் கொள்ள முடியாமல் போனதால், பள்ளியிலும் சரியாகப் படிக்க முடியவில்லை; தான் பேச நினைக்கும் விஷயங்களைச் சரியாகவும் முழுமையாகவும் சொல்ல முடியவில்லை அவனால்.
மாநிலம் விட்டு மாநிலமோ, வெளிநாடு சென்றோ வாழும் இளம் பெற்றோர்களின் சிறுவயது பிள்ளைகள் சந்திக்கும் பெரும் பிரச்னை இது. இதற்கு தீர்வு..?! வாழிடத்திலும் சுற்றுப்புறத்திலும் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியையே பேசுவதுதான் குழந்தையின் பகுத்தறிவை வளர்க்கும்; நட்பு வட்டமும் விரிவடையும். இல்லையென்றால், 'எனக்கு அவங்ககிட்ட என்ன பேசுறதுனு தெரியலையே...’ என்று வீட்டுக்குள்ளயே சுருங்கிவிடும். அது, குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தடுக்கும்.
க்ருஷாங்கினியின் கதையைப் பார்ப்போம். உலக மேப்பில் எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும், சரியாகக் காட்டுவாள். ஒரு நாட்டின் கொடியைக் காண் பித்தால்... எந்த நாட்டுக் கொடி என்பதை அழகு மழலையில் அடுத்த நொடியே சொல்லி விடுவாள். வீட்டுக்கு யார் வந்தாலும் இவளைக் கூப்பிட்டு 'அதை சொல்லும்மா... இதை சொல்லும்மா’ என்று பெருமைப்படுவார்கள் பெற்றோர். ஆனால், அவளிடம் வேறு எந்த விஷயங் களைச் சொன்னாலும் உடனே புரிந்து கொள்ள மாட்டாள். காரணம், சொன்னதைச் திருப்பி சொல்லும் கிளிப்பிள்ளையாகத்தான் க்ருஷாங்கினி வளர்க்கப்பட்டிருக்கிறாள். பெற்றோர் திரும்பத் திரும்பச் சொல்லித் தந்தவற்றை மனப்பாடமாக வைத்துக் கொண்டு, யார் கேட்டாலும் 'கடகடவென’ ஒப்பித்திருக்கிறாள்.
உண்மையான மொழியறிவு என்பது சொன்னதைத் திருப்பிச் சொல்லும் 'கிளிப் பேச்சு’ அல்ல. ஒரு விஷயத்தைக் காதால் கேட்டு, கண்ணால் பார்த்து, அறிவால் புரிந்து கொண்டு பேசுவதுதான் குழந்தையின் பகுத்தறிவை ஒழுங்காகவும் சரியாகவும் வளர்க்கும். அது இருந்தால்தான் எங்கும் எதிலும் உச்சத்தை தொட முடியும்.
அறிவார்ந்த மொழிப்பேச்சு இருக்கும் குழந்தைதான் தான் நினைக்கும், உணரும் விஷயங்களைச் சரியாகச் சொல்லும். அந்தத் திறன் இருக்கிற குழந்தையால்தான் பள்ளியில் என்ன சொல்லித் தருகிறார்கள் என்பதை முழுமையாகப் புரிந்து படிக்க முடியும். அப்படியான திறன் இல்லாத குழந்தைகள், பிராக்டிகல் நாலெட்ஜில் பின்தங்குவார்கள். உதாரணமாக, 'ரைட்டிங்’ என்ற ஆங்கில வார்த்தையின் ஸ்பெல்லிங்கை மனப்பாடம் செய்து 'டிக்டேஷன்’ல் சரியாக எழுதி விடுவார்கள். ஆனால், வகுப்பில் 'ரைட்டிங்’ என்ற வார்த்தையை வைத்து ஐந்து வரிகள் சுயமாக எழுதச் சொன்னால்... விழிபிதுங்கி நிற்பார்கள்.
மாறாக, 'ரைட்டிங்’ என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை புரிந்து வைத்திருக்கும் குழந்தை, அழகான கட்டுரையையே எழுதி மிஸ்ஸிடம் 'வெரிகுட்’ வாங்கி, அந்த நிமிட ஸ்டார் ஆகிவிடுவாள்.
ஆகையால், உங்கள் குழந்தை சொன்னதைச் சொல்லும் 'கிளிப்பிள்ளை’யாக இருக்கிறதா..? அறிவார்ந்த 'மொழிப்பிள்ளை’யாக இருக் கிறதா என்பதை கூர்ந்து கவனியுங்கள். உங்கள் கவனிப்புதான் குழந்தையை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற வைக்கும் ஏணி!
வளர்ப்போம்...
படம்: என்.விவேக்

Source - Vikatan Magazine

Tuesday, April 26, 2011

கீதை காட்டும் பாதை 1 - நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்ரம்!

கீதை காட்டும் பாதை 1 - நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்ரம்!

- என்.கணேசன்

செல்வதற்கு முன்...

பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் முதல் எத்தனையோ ஞானிகள் உரை எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ பண்டிதர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறார்கள். ஒரு சாமானியனாக நான் கீதையை இன்றைய கால கட்ட மனிதர்களுக்கு எப்படி வழி காட்டுகிறது என்பதை அதனைப் படித்து ஆழ்ந்து சிந்தித்த ஆர்வத்தால் எழுத முற்படுகிறேன். கீதோபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல் யாரெல்லாம் அதை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடியது.

மகாத்மா காந்தி அதை மிக அழகாகக் கூறியுள்ளார்: "கீதை சூத்திரங்கள் அடங்கிய நூல் அல்ல. அது கவிதை உருவான மகத்தான நூல். நீங்கள் அதை எந்த அளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு அதிலிருந்து அற்புதமான அர்த்தங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். காலம் செல்லச் செல்ல அதில் உள்ள முக்கிய வார்த்தைகள் புதிய விரிவான அர்த்தங்களுடன் திகழ்கின்றன... என்னைப் பொறுத்த மட்டில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஓர் அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும் சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்".

கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள். இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன்.

எனவே, இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் அதன் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க முற்பட்டுள்ளேன். இது அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறேன்.

*

வ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தைக் காண்கிறான். தர்மம்-அதர்மம், நன்மை-தீமை, பலம்-பலவீனம், கட்டுப்பாடு-கிளர்ச்சிகள், அறிவு-அறியாமை, லட்சியம்-அலட்சியம் போன்ற அணிகள் நேரெதிராக நின்று அவனுக்குள்ளே அடிக்கடி போர் புரிந்த வண்ணம் இருக்கின்றன. அவன் அந்தப் போரில் ஒவ்வொரு ஜதையிலும் எதை ஜெயிக்க விடுகிறான் என்பதை வைத்தே அவன் அளக்கப்படுகிறான். அதை வைத்தே அவன் வாழ்க்கையின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது. 

ஆனால், அப்படி நடக்கும் போரில் எல்லா சமயங்களிலும் சரியாகத் தீர்மானித்து உறுதியாகச் செயல்படும் தெளிவை மனிதன் பெற்றிருப்பதில்லை. சில சமயங்களில் அவன் தன்னிலை இழந்து குழப்பத்தால் செயலிழந்து விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறான். சில சமயங்களில் தெரிந்தாலும் அதனைச் செயல்படுத்த திறனின்றி தவிக்கின்றான். செயல்பட வேண்டிய நேரத்தில் ஸ்தம்பித்துப் போகிற முட்டாள்தனம் அவனுள் ஏற்பட்டு விடுகிறது. செயலிழந்து நிற்கையில் பிரச்னைகள் பெரிதாக ஆரம்பிக்கின்றன. எதிர்நோக்கி நிற்கும் பிரச்னைகளின் பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் வாழ்க்கையை முடித்துக் கொள்வது நல்லது என்று கூட சிலர் முடிவு செய்கிறார்கள். சிலர் பேசாமல் சன்னியாசம் வாங்கிக் கொண்டு விலகிக் கொள்வது உத்தமம் என்று நினைக்கிறார்கள். 

அர்ஜுனன் குருக்‌ஷேத்திர பூமியில் இந்த நிலையில் தான் நிற்கிறான். அப்போது அவனுக்கு பகவான் கிருஷ்ணன் செய்யும் உபதேசம் தான் பகவத் கீதை. அந்த உபதேசம் அன்று அர்ஜுனனின் குழப்பத்தைக் களைந்து தெளிவு பெற வைத்து அவனை உறுதியுடனும் வீரத்துடனும் செயல்பட வைத்தது. அவனை வெற்றி பெறவும் வைத்தது. பகவத் கீதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்காக சொல்லப்பட்டது என்றாலும், பிற்கால மனிதர்கள் அனைவருக்காகவும், அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலும் பொருந்தும் படியாக தனித்தனியே சொல்லப்பட்டிருக்கிறது என்று உணரத்தக்க வகையில் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பேருண்மைகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் சிறப்புப் பெற்று அமரத்துவம் அடைந்து விட்டது.

முன்பு சொன்னது போல நாம் அனைவருமே சில சமயங்களில் அர்ஜுனன் நிலைக்கு வந்து விடுகிறோம். வாழ்க்கையில் பிரச்னைகள் பூதாகரமாக நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில் தெளிவாகவும், விரைவாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டியிருக்கும் கட்டத்தில் குழப்பம், பயம், துக்கம், செயலின்மை, விரக்தி ஆகியவற்றின் பிடியில் கட்டுண்டு நிற்க நேர்கிறது. எளிய தேவைகள், எளிமையான வாழ்க்கை என்றிருந்த நம் முன்னோர்களை விட அதிகமாக ஏராளமான தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கி வைத்திருக்கும் நாம் அவ்வப்போது அந்த குழப்ப நிலைக்கு வந்து விடுகிறோம். மேற்கொண்டு செல்லும் வழியறியாது தடுமாறி நிற்கிற அது போன்ற தருணங்களில் எல்லாம் அணையா விளக்காக ஒளிரும் கீதை நமக்கு தெளிவான வழியைக் காட்டுகிறது.

ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட மகத்தான இதிகாசமான மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25 முதல் 42 வரை உள்ள 18 அத்தியாயங்களே பகவத் கீதை. வியாசர் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின் முழு சாராம்சத்தையும் பகவத் கீதையில் தந்துள்ளார். குருட்டு மன்னன் திருதராஷ்டிரன் "தர்மக்‌ஷேத்ரமான குருக்‌ஷேத்திரத்தில்" என்ன நடக்கிறது என்று சஞ்சயனிட்ம் கேட்க, சஞ்சயன் வியாச முனிவரால் அளிக்கப்பட்ட ஞானதிருஷ்டியால் அங்கு நடப்பதை நேரடி ஒளிபரப்பாகக் கண்டு சொல்ல ஆரம்பிக்கிறான். ஆக பகவத்கீதையே தர்மம் என்ற சொல்லில் இருந்து தான் ஆரம்பமாகிறது.

தர்மம் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு இணையான சொல்லை எந்த மொழியிலும் சொல்வது எளிதல்ல. சரி, நியாயம், வள்ளல் தன்மை, கடமை, விதிமுறை என்று பல பொருள்கள் அதற்கு இருக்கின்றன. ஆனால் அந்த பொருள்களில் எதுவுமே தனியாக முழுமையான பொருளைத் தந்து விடுவதில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் எப்படி ஒருவன் இருக்க வேண்டுமோ அப்படி இருப்பது தர்மம். அப்படி இருக்கும் வரையில் மனிதன் தானும் அமைதி அடைகிறான், பிறர் அமைதிக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்கிறான். அப்படி இல்லாத போது, அந்த தர்ம நெறியில் இருந்து விலகும் போது மனிதன் தானும் அமைதியிழந்து பிறர்க்கும் தீங்கிழைக்கிறான். எனவே அவரவர் தர்மத்தின் படி ஒவ்வொருவரும் இருப்பார்களேயானால் உலகம் அமைதிப்பூங்காவாகி சிறப்பாக இயங்கி வரும். 

கீதையின் முதல் அத்தியாயமான அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் தன் தர்மம் மறக்கிறான். அதுவே அவன் கலக்கத்துக்கும் குழப்பத்துக்கும் காரணமாக அமைகிறது. பாண்டவ, கௌரவ சேனைகளுக்கு மத்தியில் தன் தேரை ஓட்டிச் சென்று நிறுத்தும்படி அர்ஜுனன் சொல்ல பகவான் கிருஷ்ணனும் அப்படியே செய்கிறார். இருபுறமும் அர்ஜுனன் பார்வையைச் செலுத்துகிறான். உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள், குருமார்கள் முதலானோரே இருபக்கமும் இருக்கக் கண்டான். அனைவரும் தன்னுயிரைத் துறக்கவும், பிறர் உயிரைப் பறிக்கவும் தயாராக உறுதியுடன் கூடி இருக்கும் நிலையைப் பார்த்த போது அவனுக்குள்ளே விவரிக்க முடியாத துக்கம் ஏற்பட்டது. இத்தனை பேருக்கு அழிவை ஏற்படுத்தி பெறக்கூடிய வெற்றி வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. அவன் கண்கள் கலங்கின. கையிலிருந்து காண்டீபம் நழுவியது. உடல் நடுங்கியது. போர் புரிய வேண்டாம் என்று முடிவு செய்கிறான்.

கிருஷ்ணனுக்கே அவன் போரின் தீய விளைவுகளை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். போரினால் குலம் அழியும், அதர்மம் பெருகும், மக்கள் மனம் போன படி நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள், விபசாரம் அதிகரிக்கும், பஞ்சம் வரும், பல சமூகப் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னான். அவன் சொன்ன எதிலுமே உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அவன் சொல்லாத ஒரு உண்மை அத்தனை பேச்சுக்கும் அடித்தளமாக இருந்தது. அது தன் அன்பிற்குரியவர்கள் மீது அவனுக்கு இருந்த அளவு கடந்த பாசம் தான். அவர்கள் அல்லாமல் வேறு யார் எதிரணியிலிருந்தாலும் அவர்களைக் கொன்று குவிப்பதில் அவனுக்கு எள்ளளவும் வருத்தம் இருந்திராது. அவனுக்கு யுத்தங்கள் புதிதல்ல. அவன் கொன்று குவித்த ஆட்களும் குறைவல்ல. அவனுடைய உடலெல்லாம் வீரம் நிரம்பியே இருந்தது.

அக்ஞாத வாசத்தின் இறுதியில் உத்தரனுக்காக தனியொருவனாக நின்று பீஷ்மர், திரோணர், கிருபர், துரியோதனன், கர்ணன் ஆகியோரை எதிர்கொண்டு வெற்றி பெற்றவன் அவன். ஆனால் இத்தனை நாள் வராத ஞானோதயம் இப்போது அவனுக்கு வரக் காரணம், இந்த மகத்தான யுத்தத்தில் பலருடைய மரணத்தின் மூலம் தான் வெற்றி சாத்தியம் என்பது தான். அப்படி இறக்கப் போகிறவர்கள் அவனுடைய பாசத்துக்கு உரியவர்கள் என்பது தான்.

அசோகனுக்கு கலிங்கப் போரில் ஏற்பட்ட மாற்றம் உண்மையானது. இறந்தவர்கள் அவனது உறவினர்கள் அல்ல. ஆனால் அந்த போரின் அழிவுக் காட்சிகளைப் பார்த்த போது அவன் மனதில் ஏற்பட்ட துக்கமும், போரின் வெற்றி மகிழ்ச்சிக்குப் பதிலாக ஒரு வெறுமையை உணர வைத்ததும் மன ஆழத்திலிருந்து வந்தவை. அதனால் அது அவனுடைய பிற்பகுதி வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றி விட்டது. அர்ஜுனன் மாற்றம் அப்படிப்பட்டதல்ல. கடமையை ஆற்ற வேண்டிய தருணத்தில் பாசமிகு உறவுகளையும், அன்பு வைத்த மனிதர்களையும் கண்ட பின் வந்த தயக்கம் அவனுடையது. 
சூதினாலும், சூழ்ச்சியினாலும் கவர்ந்த ராஜ்ஜியத்தை முழுவதும் கொடுக்கா விட்டாலும் ஐந்து கிராமங்களையாவது தருமாறு தர்மபுத்திரன் மிக அதிகமாகத் தாழ்ந்து வந்த போதும் ஊசிமுனை அளவு இடமும் தர மாட்டேன் என்று அகம்பாவத்தோடு மறுத்தவன் துரியோதனன். அவனைப் போன்றவனிடம் அவர்களுடைய ராஜ்ஜியத்தை விட்டு விட்டால் அவன் ஆளும் மக்களுக்கு என்ன நன்மை செய்வான்? அவர்கள் படப்போகும் துன்பங்களுக்கெல்லாம் விட்டுக் கொடுத்த இவர்களே அல்லவா முழுக்காரணமாவார்கள். நல்லாட்சி புரிந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள் சூதினால் ஆட்சியை கொடியவர்களிடம் இழந்தது மட்டுமல்லாமல் திரும்பப் பெறாமல் தத்துவம் பேசி விட்டுக் கொடுப்பது அந்த மக்களுக்கிழைக்கும் தர்மமாகுமா? அதை விடப் பெரிய அதர்மம் என்ன இருக்க முடியும்? தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக லட்சக்கணக்கான மக்களுக்கு அநீதி ஏற்படுத்துவது எந்த விதத்தில் தர்மம்?


மனம் பலவீனமாக இருக்கின்ற நேரத்தில் செயல்பட வேண்டிய மனிதன் செயல்படாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்பான். மனித சுபாவத்தில் அன்றும் இன்றும் இது இயல்பே. தன் மனதில் தோன்றிய நல்லவை, கெட்டவை அனைத்தையும் ஒளிவு மறைவின்றி அப்படியே பகவானிடம் கொட்டிய அர்ஜுனன் கடைசியில் தன் குதிரையின் கடிவாளங்களை கிருஷ்ணனிடம் ஒப்படைத்தது போலவே தன் மனதின் கடிவாளத்தையும் அவரிடம் ஒப்படைத்து சரணடைந்தான். "நான் சிறியவன். குறை மிகுந்தவன். தர்மம் எது என்பதை அறியாதவன். என் அறிவு மயங்குகிறது. அதனால் உன்னைக் கேட்கின்றேன். தர்மம் எது என்று எனக்கு உறுதியாகச் சொல். நான் உன் சீடன், உன்னையே நான் சரணடைகின்றேன்."

வாழ்க்கையில் எத்தனையோ குழப்பங்களிலும், பிரச்னைகளிலும் சிக்கி நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தை அடிக்கடி கண்டு தவிக்கும் நாமும் அர்ஜுனன் செய்ததையே செய்வோம். நம்முள்ளே அந்தர்மியாய் இறைவன் இருக்கிறார். அவர் அனைத்தும் அறிந்தவர். நம்முடைய பிரச்னைகளையும், சிக்கல்களையும், துக்கங்களையும் அவர் முன் வைத்து வழி காட்ட வேண்டும் என்று வேண்டி சரண் அடைவோம். அவர் கண்டிப்பாக வழி காட்டுவார்!

அர்ஜுனனோடு சேர்ந்து நாமும் ஞானமும் தெளிவும் பெறத் தயாராவோமா?

தொடர்வோம்...

களை இழக்கிறதா ஐ.பி.எல்.?

களை இழக்கிறதா ஐ.பி.எல்.?

- வா.கார்த்திகேயன்
"ஐ.பி.எல். என்பது மிகச்சிறந்த பிஸினஸ் மாடல் என்பதில் சந்தேகமில்லை. இதில் பெரும் பங்கு லலித் மோடிக்கு இருக்கிறது. ஆனால் இங்கு புழங்கும் எண்களை பார்க்கும் போது மிகவும் மலைப்பாக இருக்கிறது. இது வெறும் மாய எண்கள். இந்த எண்களை பிஸினஸாக மாற்றம் செய்ய முடியுமா, பார்த்துக்கொள்ளுங்கள் மோடி" என்று 2010-ம் ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் நிபுணர்கள் எச்சரித்தனர்.

பிராண்ட் மதிப்பு குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்த ஐ.பி.எல்.-ஐ பார்க்கும் ஆர்வம் மக்களுக்கு குறைந்திருக்கிறது. காரணம் உலகக்கோப்பை என்ற மிகப்பெரிய வெற்றியை சுவைத்த பிறகு ஐ.பி.எல். பார்ர்பதில் பொதுமக்களுக்கு ஆர்வம் இல்லை. ஒரு வேளை இந்த உலக்க் கோப்பையில் இந்தியா வெற்றி பெறாமல் இருந்தால் கூட உலகக் கோப்பைக்கும் ஐ.பி.எல்.போட்டிக்குமான இடைவெளி மிகக்குறைவு.
கிட்டத்தட்ட்ட இதே கருத்தை தான் தோனியும் யுவராஜ் சிங்கும் பதிவு செய்திருக்கிறார்கள். உலகக் கோப்பை வெற்றியை கூட எங்களால் சரிவர கொண்டாட முடியாமல் அடுத்த போட்டிக்கு தயாராகி விட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு வேளை நாட்கள் செல்ல செல்ல இதன் பார்வையாளர்கள் அதிகரிக்கலாம்.
கூடவே பிராண்ட் ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் ஐ.பி.எல்.யின் மதிப்பு 18,000 கோடி ரூபாய் என்று மதிப்பிட்டிருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இன்று அதே பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஐ.பி.எல்.யின் மதிப்பு சுமார் 16,440 கோடி தான் என்று மதிப்பிட்டிருக்கிறது. (இதற்கு நடுவே மோடி மீது குற்றச்சாட்டு சுமத்தி, அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றார் என்பது தனிக்கதை.)

ஏப்ரல் 8-ம் தேதி சென்னையில் தொடங்கிய ஐ.பி.எல். அடுத்த மாதம் 28-ம் தேதி சென்னையில் முடிவடைக்கிறது. 58 நாட்களில் 74 ஆட்டங்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 60 ஆட்டங்கள் தான். இருந்தபோதும் ஏன் பிராண்ட் மதிப்பு குறைவாக மதிப்பிட்டிருக்கிறோம் என்பதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறது பிராண்ட் ஃபைனான்ஸ்.
ஐ.பி.எல். மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?

ஒவ்வொரு டீமின் வருமானம் மற்றும் செலவுகளை வைத்து அந்த டீமின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. அதே போல ஐ.பி.எல்.-ன் மொத்த மதிப்பு அதன் வருமானம் மற்றும் செலவுகளை வைத்து கணக்கிடப்படுகிறது. கூடவே ஒவ்வொரு அணியின் முந்தைய வெற்றி தோல்விகள், அணி நிர்வாகம், விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் யுக்திகளை வைத்து மதிப்பிடப்படுகிறது.
இதில் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பூனே மற்றும் கொச்சி அணிகளை இப்போது தான் முதல் முறையாக விளையாடுகின்றன. அவற்றின் பிஸினஸ் மற்றும் முன் வரலாறு எதும் இல்லையென்பதால் அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
வருமானம் குறைய என்ன காரணம்?
கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது வீரர்களின் சம்பளம் மற்றும் ஏலத்தொகை அதிகம். இதனால் ஒரு போட்டியில் 30 முதல் 33% வரை இருந்த செலவுகள் இப்போது 40 முதல் 45% வரை உயர்ந்துவிட்டது. ஒரு வேளை குறைவான சம்பளம் கொடுக்கும் பட்சத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்ய முடியாது. வீரர்கள் சரியில்லை என்றால் வெற்றி கிடைக்காது. வெற்றி கிடைக்கவில்லை என்றால் ஸ்பான்ஸர்கள் வரமாட்டார்கள், வருமானம் குறையும். இதன் காரணமாக அதிகமாக செலவு செய்து வீரர்களை தேர்வு செய்கிறார்கள்.
எப்படியிருந்தாலும் எதாவது ஒரு அணி தான் வெற்றி பெறும். கடைசி நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் புதிதாக விளையாட வரும் அணிகளுக்கு இது பெரும் பிரச்னையாக இருக்கும். அவர்கள் அடுத்த வருடமும் இதே தொகையை வீரர்களுக்கும் ஃப்ரான்ஸைக்ளுக்கும் செலுத்த வேண்டி இருக்கும். இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் தோல்வியடைந்து கொண்டே வரும அணிகள் தொடந்து அணியை நடத்த முடியாமல் தடுமாற வேண்டியிருக்கும்.

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மட்டுமே பிரேக் ஈவனை அடைந்திருக்கின்றன. டெல்லி, ஹைதராபாத், கோல்கத்தா அணிகள் தகுதியும் திறமையும் இருந்தும் பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மிகுந்த போராட்டத்தில் இருப்பதாக பிராண்ட் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.

இப்படி அடுத்தடுத்த வருடங்களில் என்ன நடக்கும் சொன்னவர்கள் இதில் இருக்கும் சாதக அம்சங்களையும் சொன்னார்கள். எப்படி இருந்தாலும், அடுத்த பத்து வருடங்களுக்கு ஐ.பி.எல். கான்செப்ட் இருக்கும். காரணம் இதை மிஞ்சும் அளவுக்கு இந்திய அளவிலே உலக அளவிலே இன்னொரு அமைப்பு வரப்போவதில்லை. அதனால் ஐ.பி.எல். இருக்கும் என்று சொல்லி இருக்கிறது பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம்.
ஐ.பி.எல். தொடர்ந்து செயல்படும் என்பது சரிதான். ஆனால் இதே பொலிவோடு இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
ஒவ்வொரு அணிகளின் பிராண்ட் மதிப்பு:
அணி  2011ம் ஆண்டு 2010ம் ஆண்டு
மும்பை இந்தியன்ஸ்251.94 கோடிரூ.182.82 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்ரூ.244.18கோடி ரூ.216.88 கோடி  
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருரூ.209.82 கோடி ரூ.187.92 கோடி  
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.202.86 கோடிரூ.206.53 கோடி
டெல்லி டேர்டெவில்ஸ்ரூ.180.14 கோடிரூ.181.86 கோடி
ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்ரூ.170.93 கோடிரூ.154.44 கோடி
கிங்ஸ் லெவன் பஞ்சாப்ரூ.157.65 கோடிரூ.161.68 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.149.96கோடிரூ.202.54 கோடி
 ஒவ்வொரு அணியின் வரவு / செலவு
வரவுசெலவுகள்
ஒளிப்பரப்பு உரிமைஃபிரான்ஸைசி கட்டணம்
மத்திய ஸ்பான்ஸர்கள்வீரர்களுக்கான சம்பளம்
அணியின் பிரத்யேக ஸ்பான்ஸர்கள்ஸ்டேடியத்துக்கான கட்டணம்
டிக்கெட் வருமானம்போக்குவரத்து மற்றும் தங்கும் கட்டணம்
ஸ்டேடியங்களில் வைக்கப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம்விளம்பரத்துக்கான கட்டணம் - மற்றும் இதர செலவுகள்.
ஒப்பந்தங்கள்பரிசு தொகை
ஐ.பி.எல்.க்கான வருமானம்   
                               
டிவி உரிமை மூலம் கிடைக்கும் வருமானம்   
ஃப்ரான்ஸைசி கட்டணம்    
டைட்டில் ஸ்பான்ஸர்(டி.எல்.எஃப். மற்றும் ஹீரோ ஹோண்டா)
மைதானத்தில் இருக்கும் விளம்ப்ரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம்
நடுவர்களுக்கு ஸ்பான்ஸர் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம்
டிக்கெட் வருமானத்தில் கிடைக்கும் பங்கு
விளம்பரம்(ஆகாயவிமானம் போல் இருக்கும் பலூன்) வருமானம்
இணையதள உரிமை
தியேட்டர் வருமானம்
செலவுகள்
மார்க்கெட்டிங் செலவுகள்
நிர்வாக செலவுகள்
ஒளிபரப்பு உரிமையில் ஃபிரான்ஸைசிகளுக்கு செலுத்த வேண்டிய பங்கு
ஸ்பான்ஸர் ஷிப் உரிமையில் ஃபிரான்ஸைசிகளுக்கு செலுத்த வேண்டிய பங்கு
*


இலங்கைப் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் : ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பட்டியல்

இலங்கைப் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் : ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பட்டியல்
ஏப்.25,2011
விடுதலைப்புலிகள் உடனான இறுதிகட்டப் போரின்போது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியானதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
அரசின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாகவே அப்பாவி மக்கள் பலரும் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கும் அந்த அறிக்கை, ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என மதிப்பிட்டுள்ளது.
இலங்கைப் போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் பட்டியலிடும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் 214 பக்க ஆய்வறிக்கை அதிகாரப்பூர்வமாக முழுமையாக வெளியிடப்பட்டது. (முழுமையான அறிக்கையை தரவிறக்கம் செய்ய கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது).
இந்த அறிக்கையில் இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் போர்க் குற்றங்கள் முழுமையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

நிபுணர் குழு நிறைவாக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா., வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனைக் கருத்திக் கொண்டு இந்த விசாரணை அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன:
* இலங்கையில் 2009-ல் நடந்த இறுதிக் கட்டபோரில் ராணுவமும், விடுதலைப்புலிகளும் போர்க் குற்றங்களைச் செய்தன.
* போர்க் குற்றச் செயல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
* இலங்கை அரசின் படைகளும், விடுதலைப் புலிகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளன. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை அரசின் மீதான முக்கியக் குற்றச்சாட்டுகள்...
* இலங்கை ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்துள்ளது.
* மருத்துவமனைகள் மற்றும் மனித நேய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
* இலங்கை அரசு மனிதாபிமான உதவிகளை மறுத்துள்ளது.
* போரினால் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகளை மீறப்பட்டுள்ளது.
* ஐ.நா. மையங்கள், செஞ்சிலுவை சங்கங்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கப்பல்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்
* அப்பாவிப் பெண்களிடம் ராணுவப் படையினர் பாலியல் பலாத்காரம்.
* சிறைக் கைதிகள் சுட்டுக்கொலை
* போர் வலயத்துக்கு வெளியே ஊடக அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள்.
புலிகள் மீதான குற்றச்சாட்டுகள்...
* பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியது.
* தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களை கொலை செய்தது.
* பொதுமக்கள் நிலைகளுக்கு அருகில் ஆயுதங்களைப் பயன்படுத்தியது.
* பலவந்தமாக சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டது; தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை படுகொலை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்.
நிபுணர் குழு பரிந்துரைகள்...
* இலங்கைப் போர்க் குற்றச் செயல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியல் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* சர்வதேச விசாரணைகள் கொள்கை அடிப்படையில் அல்லாமல், கட்டயாமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
* போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தன்னிச்சையான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசும், ஐ.நா.வும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மேற்கு நாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்கள், வருமானங்கள் போன்றவற்றை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் போய்ச் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, பொதுமக்கள் பலியாகாமல் தடுக்கும் வகையில், சர்வதேச நாடுகள் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று ஐ.நா. நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை முழுமையாக தரவிறக்கம் செய்ய... http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf


Source - Vikatan Magazine




Monday, April 25, 2011

வானில் ஒரு சாதனை! - பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

வானில் ஒரு சாதனை!

5, 4, 3, 2, 1, 0 என்று கவுன்ட் டவுன் ஒலிக்க...  பி.எஸ்.எல்.வி. ராக்கெட்
தகதகவென நெருப்பைக் கக்கிய​படி விண்ணுக்குப் பறந்தது.  கண்​ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த சிக்கலும் இன்றிக் கடந்து செல்லவே, ஸ்ரீஹரிகோட்டா முழுவதும் உற்சாகமான கைதட்டல்களால் அதிர்ந்தது!   
ஆனால், கட்டுப்பாட்டு அறையில், விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் திரையில் சீரியஸாக ராக்கெட்டை அவதானிக்க ஆரம்பித்தார்கள். சில நிமிடங்கள் டென்​ஷனாக இருந்த விஞ்ஞானிகள், ராக்கெட் இரண்டாம் உயரத்தைக் குறிப்பிட்ட மணித் துளிகளுக்குள் எட்டிப் பிடிக்கவே,  சந்தோஷப்பட்டார்கள். 17 நிமிடங்கள் கழிந்த பிறகு, ராக்கெட்டில் இருந்த ரிசோர்ஸ்சாட்-2 என்ற செயற்கைக்கோள் தனி​யாகப் பிரிந்து பூமியில் இருந்து 822 கி.மீ. தூரத்​தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது. விஞ்ஞானிகள் திட்டமிட்டது 820 கி.மீட்டர். இதற்கு 20 கி.மீ. வரை கூடுதல் அல்லது குறைவாக இருக்கலாம். ஆனால், திட்டமிட்டதற்கு மிக நெருக்கமாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்​தார்கள்.
ஆனாலும், விஞ்ஞானிகளின் டென்​ஷன் குறையவில்லை. அதற்கு அடுத்த நிமிடம், இந்திய - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான யூத் சாட் செயற்கைக்கோளும் சிங்கப்பூரின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்-சாட் செயற்கைக்கோளும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்று, அதனதன் சுற்றுப்பாதையில் தங்களை வெற்றிகரமாக நிலை நிறுத்திக்கொண்ட பிறகுதான் விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி கைகுலுக்கிக்கொண்டார்கள்.
இயற்கை வளங்களைக் கண்டு அறி​வதற்காகச் செலுத்தப்பட்ட 1,206 கிலோ எடைகொண்ட ரிசோர்ஸ் சாட் - 2 செயற்கைக்​கோளில் சக்தி வாய்ந்த மூன்று கேமராக்கள் உள்ளன. இது குறித்துப் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் ராதாகிருஷ்ணனிடம், ''செயற்கைக்கோள்கள் அனுப்பும் புகைப்படங்கள் எல்லாம் பெரும்​பாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை என்று சில  மாதங்களுக்கு முன்பு சி.ஏ.ஜி. குற்றம் சுமத்தியதே?'' என்று கேட்கப்பட, அவர், ''சி.ஏ.ஜி. கொடுத்த மிகப் பெரிய அறிக்கையின் இடையில் இருந்து இரண்டு வரிகளை எடுத்து, அதற்குத் தனியாக அர்த்தம் கொடுத்து பூதாகாரப்படுத்திவிட்டார்கள். எங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, எங்களைப் பாராட்டி இருக்கிறார்கள்!'' என்றார்.
''செயற்கைக்கோள்கள் அனுப்பும் படங்கள் எல்லாம் எந்த அளவுக்குப் பயன்படுகின்றன?'' என்று மீண்டும் கேட்கப்பட்டது.
''பருவ நிலையில் மாற்றங்கள் நிகழ்வது பற்றி ஆராய வேண்டும் என்றால், 50 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட தகவல்களும் புகைப்படங்களும் வேண்டும். அவை ஆவணக் காப்பகம் போன்றது. எது, எப்போது எந்த ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் என்று சொல்ல முடியாது. செயற்கைக்கோள்கள் எடுத்து அனுப்பும் அத்தனை புகைப்படங்களையும் இன்றே பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது!'' என்றார்.
விஞ்ஞானிகளுக்கு இந்த வெற்றி, சின்ன இளைப்பாறுதல் மட்டுமே. இந்த ஆண்டு முடிவதற்குள் மேலும் மூன்று ராக்கெட்டுகள் விண்ணில் பாய இருக்கின்றன. சந்திராயன் - 2, விண்ணுக்கு மனிதனை அனுப்புவது போன்ற ஏராளமான திட்டங்களும் இருக்கின்றன.
வெற்றிகள் தொடரட்டும்!
- பி.ஆரோக்கியவேல்
படங்கள்: என்.விவேக்

Source - Vikatan Magazine