Monday, December 26, 2011

வாழ்க வளமுடன்! - 'நம்மால் முடியும், நம்பு!'

வாழ்க வளமுடன்!

'நம்மால் முடியும், நம்பு!'
னவளக்கலை பயிற்சி என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. மனத்தை வளப்படுத்தி, உடலை செம்மைப் படுத்துகிற காரியம் மட்டுமே இந்தப் பயிற்சியில் இருப்பதாக நினைக்காதீர்கள். ஒட்டுமொத்தமாக நம் வாழ்க்கையையே மாற்றி, நல்வழிப்படுத்துகிற விஷயங்கள், இந்த மனவளக்கலைப் பயிற்சியில் பொதிந்திருக்கின்றன. இதைச் சொன்னால் புரியாது. செயலில் இறங்கி, அனுபவித்துப் பார்த்தால்தான் உணரமுடியும்!

'எனக்குத் தாழ்வு மனப்பான்மை ரொம்பவே அதிகம். எதை எடுத்தாலும், இது என்னால முடியாது; என்னை யாருமே மதிக்க மாட்டேங்கிறாங்க; இந்த விஷயத்தைச் செய்யறதுக்கு உண்டான திறமையோ தகுதியோ எனக்கு இல்லைனு தோணும். சில நேரம், நான் வாழறதே வேஸ்ட்டுன்னுகூட நினைச்சுப்பேன்!’ என்றார், சென்னையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர். கூடுவாஞ்சேரி அறிவுத் திருக்கோயிலில் என்னை நேரில் சந்தித்து, அவர் இப்படிச் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அடக்கமாட்டாமல் முகம் பொத்தி, முதுகு குலுங்கி, அழத் தொடங்கிவிட்டார்.
அவரின் தோள் தொட்டு, கைகளைப் பற்றிக்கொண்டு, 'திறமையையும் தகுதியையும் விடுங்க. அதை எப்ப வேணாலும், எப்படி வேணாலும் வளர்த்துக்க முடியும். ஆனா,
நல்லவன்னு பேரு எடுக்கறதுதான் மிகச் சிறந்த தகுதி. நீங்க ரொம்ப நல்லவர். இந்த ஒரு தகுதியே, அடுத்தடுத்த திறமைகளை உங்களுக்குக் கொடுத்துடும், தெரியுமா?’ என்றேன்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
'நீங்கள் ரொம்ப நல்லவர். எனவே, எவரையும் எப்போதும் எள்முனையளவும் காயப்படுத்தமாட்டீர்கள். எவருக்கும் எந்தத் தருணத்திலும் தீங்கிழைக்கமாட்டீர்கள். மிகக் கஷ்டமான நிலையில்கூட, அடுத்தவரின் பொருளை அபகரிக்கமாட்டீர்கள். பிறரைக் காயப்படுத்தாமல், பிறருக்கு எந்தத் தீமையும் செய்யாமல், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருக்கிறீர்களே..! இதைவிட, மிகப் பெரிய அருங்குணம் வேறு என்னவாக இருக்க முடியும்?
எவரையும் ஏமாற்றாமல் வாழ்கிற நீங்கள், உங்கள் குடும்பத்தாரையும் உங்கள் முதலாளியையும் ஏமாற்றுவீர்களா, என்ன? அலுவலகத்தில் ஏமாற்றாமல் வேலை செய்தால், வீட்டில் மனைவி- குழந்தைகளுடன் நிம்மதியாக வாழலாம். இதுவரை, இப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள், நீங்கள்!’ என்றேன். மெள்ள அவர் முகத்தில் மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. வெறுமை நிலையில் இருந்து விடுபடுவதற்கு அவர் மனம் தயாராக இருந்தது.
'சரி... சின்ன பயிற்சி ஒன்றைச் செய்து பார்ப்போமா? நன்றாக அமர்ந்துகொள்ளுங்கள். முதுகை நேராக்கிக் கொள்ளுங்கள். இடது கை பெருவிரலால், உங்கள் மூக்கின் இடது துவாரத்தை அடைத்துக் கொள்ளுங்கள். வலது துவாரத்தின் வழியே மூச்சை நன்றாக, வேகமாக வெளியே விடுங்கள். அப்படி விட்ட பின்பு, மீண்டும் வலது துவாரத்தின் வழியே மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொள்ளுங்கள். அடுத்து, ஆள்காட்டி விரலால் வலது துவாரத்தை அடைத்துக்கொண்டு, இடது துவாரத்தின் வழியே, மூச்சை வேகமாக வெளியே விடுங்கள். பின்பு, சட்டென்று வேகமாக உள்ளே இழுங்கள். இப்படிப் பத்து முறை செய்யுங்கள். இடது, வலது என்பதாக, தினமும் காலையில் எழுந்ததும், இரவு தூங்குவதற்கு முன்பும் இரண்டு வேளையும், குறைந்தது பத்து நாட்களுக்கு இதுபோல் செய்து முடித்துவிட்டு, இங்கே வாருங்கள்’ என்று கபாலபதி எனும் மூச்சுப் பயிற்சியை அவருக்குச் சொல்லிக் கொடுத்தேன்.
மனவளக்கலையின் மிக முக்கியமான பயிற்சி இது. மூளைகளின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் இந்தப் பயிற்சி தருகிற வீரியம் சென்று, கதவு தட்டி உசுப்பிவிடும் என்பது நிஜம்.
இடது கை பெருவிரலால், மூக்கின் இடது துவாரத்தை அடைத்துக் கொள்ளவேண்டும். வலது துவாரத்தின் வழியே முதலில் மூச்சை நன்றாக வெளியேற்றவேண்டும். பிறகு அதே துவாரம் வழியாக, உள்ளிழுக்க வேண்டும். அதாவது மூச்சை வேகமாக வெளியேற்றி, வேகமாக உள்ளிழுத்து... என மாறி மாறிச் செய்யவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், ஒரேயரு விநாடி மூச்சை அப்படியே நிறுத்திக்கொள்ளும் செயலைச் செய்யவே செய்யாதீர்கள். அதேபோல், வெளியே விட்டு உள்ளே இழுக்கிற அந்தத் தருணங்களில், உங்கள் வாய் வழியே மூச்சை வெளியேற்றவும் வேண்டாம்; மூச்சை இழுத்துக் கொள்ளவும் தேவையில்லை!
உயர் ரத்த அழுத்தம் எனப்படும் பி.பி. பிரச்னை உள்ளவர்கள், குடல் இறக்கம் மற்றும் இதய நோயாளிகள் இந்தப் பயிற்சியைச் செய்யவேண்டாம். இவர்களைத் தவிர, எவர் வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
மழை மற்றும் குளிர் காலங்களில், சைனஸ் தொந்தரவால் அவதிப்படுபவர்கள், கபாலபதி பயிற்சியை மேற்கொண்டால், சைனஸ் தொந்தரவு முற்றிலுமாக நீங்கிவிடும். மூச்சுக் குழலிலும் நுரையீரல்களிலும் படிந்திருக்கக்கூடிய சின்னச் சின்ன தூசிகளும் வேறு ஏதேனும் பொருட்களும்கூட, சட்டென்று வெளியேறிவிடும். பிறகு, நுரையீரலில் ஒரு சுதந்திரத்தையும், மூச்சுக் குழலில் இலகுவான நிலையையும் உணர்ந்துகொள்ளலாம்.
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டங்கள், சீராகச் செல்லத் துவங்கும். மூளையில் போதிய அளவு ரத்தம் பாய்கிற உடற்சூழ்நிலை இருந்துவிட்டால், அயர்ச்சிக்கும் சோர்வுக்கும் அவசியமே இருக்காது. மறந்தும்கூட, ஞாபக மறதியில் சிக்கிக் கொள்கிற அவலத்துக்கு வழியே இல்லை. 'செய்யக்கூடிய காரியத்தில் முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறேன். நீ ரெடியா?’ என்று மூளை கட்டளையிட, 'நீங்கள் தயாராக இருந்தால், நானும் தயாராகத்தானே இருப்பேன்! நான் உங்கள் அடிமை அல்லவா! நீங்கள் உட்காரச் சொன்னால் உட்காருவேன்; ஓடச் சொன்னால் ஓடுவேன்’ என்று உடலானது, தயார் நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டும். ஒரு வேலையை உடலும் புத்தியும் கைகோத்து, ஆழ்ந்து செய்வதைத்தான், ஆத்மார்த்தமாக ஈடுபடுதல் என்கிறோம்!
அந்த சென்னை இளைஞர் பத்து நாட்கள் கழித்து, மீண்டும் வந்தார். அவர் முகத்தில் சின்னதாக ஒரு தெளிவு. சாட்டைக் குச்சியைச் சொடுக்குவதற்காகக் காத்திருப்பார் வண்டியோட்டி. 'அவர் எப்போது சாட்டையைச் சொடுக்குவார்’ என்று குதிரையும் தயாராக இருக்கும், பார்த்திருக்கிறீர்களா? அந்தக் குதிரை போன்று, அந்த இளைஞரின் உடலானது, புத்தியின் கட்டளையை நிறைவேற்றக் காத்திருப்பதாகவே எனக்குப் பட்டது.
சுவிட்சைப் போட்டால்தானே விளக்கு எரியும்! சின்ன தீக்குச்சியைக் கொண்டு பற்ற வைத்தால்தானே மிகப் பெரிய தீப்பந்தத்தை ஏற்றி, இருளை அகற்றலாம்! அந்த இளைஞர் எனும் அழகிய விளக்கு, ஸ்விட்ச் போட்டதும் எரிவதிலும், பிரகாசம் தருவதிலும் வியப்பென்ன இருக்கிறது!
கபாலபதி பயிற்சியில் இல்லாத சில விஷயங்களையும் அவருக்குச் சொன்னேன். அது, அந்த இளைஞருக்கான விஷயம் மட்டுமின்றி, எல்லோருக்குமானதும்கூட!
அது என்ன என்கிறீர்களா?
எந்தவொரு காரியத்தில் இறங்குவதாக இருந்தாலும், ஒரு நிமிடம்... ஒரேயரு நிமிடம்... மூளையை உசுப்புகிற கபாலபதி பயிற்சியையும் செய்துவிட்டு, கண்கள் மூடி, நெஞ்சில் கைவைத்து, மனதார உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்...
'என்னால் முடியாவிட்டால், வேறு யாரால் முடியும்!’
- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 12(ஆசை கொள்ள முடியாத பாசப் பறவைகள் ! )

ரொமான்ஸ் ரகசியங்கள்!

ஆசை கொள்ள முடியாத பாசப் பறவைகள் !
ஓவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
ஆண், பெண் ரொமான்ஸ் உறவின் அடிப்படையே.... உடல்ரீதியான தொடர்புதான். அது இயல்பான ஒன்று. ஆனால், பல்வேறு உடல் மற்றும் மனரீதியான காரணங்களால் இது பாதிக்கப்படுவதும் இயல்பான ஒன்றாகவே இன்று ஆகிவிட்டது.
பரத்தின் அக்கா மகள் நித்யா. இருவருக்கும் வயது வித்தியாசம் எட்டு ஆண்டுகள். சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் தோழர்களாகவே வளர்ந்தார்கள். நித்யாவைத் தூக்கி வளர்த்திருக்கிறான் பரத். மடியில் படுக்கவைத்து தூங்கவும் வைத்திருக்கிறான். அண்ணன், தங்கை போன்ற உறவுகூட இருவராலும் உணரப்பட்டிருக்கிறது. வீட்டுப் பெரியவர்களோ, 'எதிர்கால தம்பதி' என்று சொல்லியே வளர்த்தார்கள்.
பரத், மத்திய அரசுப் பணியிலும்... நித்யா டீச்சராகவும் வேலை செய்து கொண்டிருந்தனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும் என்றாலும், தங்களைக் கணவன், மனைவியாகக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. ஆனால், குடும்பத்தினரின் பிடிவாதத்தை மீறி அவர்களால் எதுவும் செய்யவும் முடியவில்லை.
திருமணமும் கோலாகலமாக நடந்தது. ஆனால், அதற்குப் பிறகு நடந்ததுதான் பரிதாபம். நித்யா, பரத் இருவராலும் தாம்பத்ய உறவுகொள்ள முடியவில்லை. மூடிய அறைக்குள் இரு துருவங்களாக வாழ ஆரம்பித்தனர்.
ஆண்டுகள் ஒன்று, இரண்டு என ஓடின. வாரிசு எதுவும் உருவாகாததால்... இருதரப்புப் பெற்றோரும் கவலைகொண்டு, கோயில் கோயிலாக கூட்டிச் சென்றனர். பரிகாரங்களையெல்லாம் செய்தனர். புத்திசாலியான ஓர் உறவினர்தான், பரத் - நித்யா இருவரின் வாழ்க்கையில் ஏதோ சிக்கல் இருப்பதைப் புரிந்து, மருத்துவரிடம் கூட்டிச் சென்றார். உண்மை மெள்ள வெளிப்பட்டது. பெற்றோர் இடிந்து போனார்கள். இனி இந்த பந்தத்தைத் தொடர்வதில் அர்த்தமே இல்லை என்பது அழுத்தம் திருத்தமாக அவர்களுக்குப் புரிய, மணவிலக்குக்கு ஏற்பாடு செய்தார்கள். இன்று பரத், நித்யா இருவரும் அடுத்த வாழ்க்கைக்காக காத்திருக்கிறார்கள்.
ஒரு சிறுவனிடம், 'இவள் உன் எதிர்கால மனைவி’ என்று ஒரு சிறுமியைக் காட்டி, அந்த வயதிலேயே கருத்தைத் திணிப்பது விபரீதத்தில்தான் கொண்டுபோய் விடும் என்பதற்கு உதாரணமானதைத் தவிர, வேறு எதையும் சாதிக்கவில்லை... பரத் - நித்யாவின் வாழ்க்கை.
'உன் கண்ணில் நீர் வழிந்தால்...’, கணவன் - மனைவி உறவின் அற்புதத்தை விளக்கும் உன்னதமான பாடல். 'வேரென நீ இருந்தாய், அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’, 'என் தேவையை யார் அறிவார், உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்’ போன்ற காலத்தால் அழியாத வரிகளைக் கொண்ட பாடல் அது.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி கூட்டை விட்டுப்பிரிந்த பிறகு, ஒரு புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இத்தனை நாள் ஓடி ஒடி உழைத்த களைப்பு, அப்போது ஓய்வெடுக்கச் சொல்லும். உடலும் தன்னுடைய வலுவையும் ஆரோக்கியத்தையும் மெள்ள இழந்து, சாய்ந்துகொள்ள ஒரு தோளைத் தேடும். அப்போதுதான் கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஜெயந்தி, ரமேஷ் தம்பதிக்கு... அது தொடர்பான ஒரு கசப்பான அனுபவம், வாழ்க்கையின் ஆரம்ப காலங்களிலேயே ஏற்பட்டது. இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். ரமேஷ் மார்க்கெட்டிங் துறையில் இருப்பதால், எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுவான். ஜெயந்திக்கு மாலை ஐந்து மணிக்கெல்லாம் வேலை முடிந்துவிடும் அரசாங்கப் பணி. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
ஜெயந்திக்கு வயிற்றில் ஏற்பட்ட கட்டிக்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, ஒரு மாதமாவது ஓய்வெடுக்க வேண்டிய கட்டாய சூழல் வந்து சேர்ந்தது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளைக் கவனிக்கவும் ஊரில் இருந்து ஒரு பெண்மணியை வரவழைத்த ரமேஷ், ஆஸ்பத்திரிக்கு பணத்தைக் கட்டிவிட்டு, கடமை முடிந்ததாக நினைத்தான். ஆபரேஷன் அன்றுகூட மனைவியின் அருகே இல்லாமல், ஆபீஸ் வேலையாக மும்பை சென்று விட்டான்.
அது, ஜெயந்தியின் மனதை மிகவும் பாதித்தது. பைத்தியம் பிடித்தவள்போல் ஆனாள். 'எப்படி இருக்கிறாய்?’ என்றுகூட விசாரிக்காமல், 'நல்ல காலம் முழு இன்ஷூரன்ஸ் பணம் வந்துவிட்டது’ என்று சந்தோஷப்பட்டான் ரமேஷ்.
ஒரு சில மாதங்கள் உருண்டோடிய நிலையில்... 'முதுகுத்தண்டில் இன்ஃபெக்ஷன்' காரணமாக படுத்த படுக்கையானானான் ரமேஷ். ஆறு மாதங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இப்போதுதான், பழைய கோபங்களை மீட்டெடுத்தாள் ஜெயந்தி. 'அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்க முடியாது' என்றவள், கணவனை சம்பிரதாயத்துக்கு மட்டுமே கவனித்துக் கொண்டாள். ரமேஷ§க்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. படுக்கையில் படுத்தபடியே சண்டையிட்டான். மனதுக்குள் பூட்டி வைத்திருந்த வேதனைகளை எல்லாம் ஜெயந்தியும் கொட்டினாள். தன் தவறு புரிந்து, அதிர்ந்தவன், கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டான். வாழ்வு மறுபடி இனிக்க ஆரம்பித்தது அவர்களுக்கு!
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள்! -11 (காதல் காதல்தன்...நட்பு நட்புதான் ! )

ரொமான்ஸ் ரகசியங்கள்!

காதல் காதல்தன்...நட்பு நட்புதான் !
அகிலன் சித்தார்த்
ஓவியம்: மணியம் செல்வன்

சில ஆண்டுகளுக்கு முன் அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை சந்திக்க நேர்ந்தது. சண்முகம், 17 வயது இளைஞன். வேலூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து, அம்மாவுடன் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்திருந்தான். சிறிய ஓட்டு வீட்டில் தங்கியிருந்தார்கள். சண்முகம் வேலை தேடிக் கொண்டிருக்க... அக்கம்பக்க வீடுகளில் பாத்திரம் தேய்த்து சொற்பப் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார் அம்மா. அவ்வப்போது சண்முகத்துக்கு சிறு சிறு வேலைகள் கொடுத்து, கொஞ்சம் பணமும் கொடுப்பது என் வழக்கம். அம்மாவின் கனவெல்லாம், சண்முகம் தலையெடுத்து குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்பதுதான்.
அவர்களுக்குப் பக்கத்து வீட்டிலேயே அக்காவுடன் தங்கியிருந்தாள் அர்ச்சனா. சினிமாவில் 'ரிச் கேர்ள்ஸ்’ என்று சொல்வார்கள். பின்னணியில் நடமாடும் துணை நடிகைகள். அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாள் அர்ச்சனா. சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியில் உடைகள், செருப்புகள், மேக்கப் சாமான்களை வாங்கிவிடுவாள். அவளுடைய வேலைக்கு அது தேவையாக இருந்தது என்பது வேறு விஷயம்.
சண்முகத்துக்கும் அவளுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாத வகையிலான சுத்தமான நட்புதான். சண்முகம் அவளை ஆராதித்தான். 'உலகத்தில் எனக்கு இருக்கும் ஒரே ஃப்ரெண்ட்’ என்பான். அடிக்கடி அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பான். அர்ச்சனாவும் அவனிடம் விகல்பம் இல்லாமல் பழகினாள். 'ஏதாவது விபரீதத்தில் முடியுமோ?' என்கிற பயம் சண்முகத்தின் அம்மாவிடம் இருந்தது.
ஒருநாள் திடீரென்று சண்முகம் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டான். எங்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சி. 'எனக்கும் அர்ச்சனாவுக்கும் இருந்த புனிதமான நட்பை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் சாவதன் மூலம் அந்த புனிதத்தன்மையை இந்த உலகத்துக்கு உணர்த்துகிறேன். அர்ச்சனா நல்ல வாழ்க்கை வாழ என் வாழ்த்துக்கள்!’ என்றது அவன் எழுதி வைத்திருந்த கடிதம்.
அர்ச்சனாவிடம் பிறகு பேசியபோது, சண்முகத்தை அவளுடைய அக்கா சந்தேகப் பட்டதாகவும், தன் தங்கையை அவன் திட்ட மிட்டு கவர முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய தாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் சொன்னாள்.
'நட்பு’ என்கிற விஷயத்தை அவன் குழப்பிக் கொண்டிருக்கிறான். சரியான கவுன்சிலிங், சரியான நேரத்தில் கிடைத்திருந்தால், அப்படிச் செய்திருக்கமாட்டான் என்று நினைத்தேன். அவன் உள்மனதில் அர்ச்சனாவின் மேல் காதல்கூட இருந்திருக்கலாம். ஆனால், அவனுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தேவைப்பட்டிருக்கிறது. நட்பு என்று பெயரிட்டு அதை அணிந்திருக்கிறான். அதற்குக் காரணம் அர்ச்சனாவிடம் அவனுக்கு இருந்த காம்ப்ளக்ஸ். அவள் நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே அவனை மிகக் கவர்ந்திருந்தாலும், அவளுடன் பழகுவதற்கான அங்கீகாரமாக நட்புதான் அவனுக்குப் பயன்பட்டிருக்கிறது. அந்த கவசம் உடைந்து போனதில் அப்செட் ஆனவன்... தற்கொலையை நாடியிருக்கிறான்.
பால்ய பருவத்திலிருந்து வாலிப பருவத்துக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும் இளம் உள்ளங்கள் நட்பு, காதல் இவை பற்றிய தெளிவான புரிதல்களை அடைய வேண்டும். அதுவும் இளம் பருவத்துக் காதல் என்பது மிகவும் அபாயகரமானது. தமிழ் சினிமாவில் சர்வ சாதாரணமாக சிறு வயதில் ஏற்படும் காதலைப் பெருமைப்படுத்திக் காண்பிக்கிறார்கள். அந்த வயதில் ஏற்படும் உணர்வு என்பது வெறும் நட்புதான்... காதல் அல்ல. இருபால் கவர்ச்சி என்பது அதில் இலைமறை காயாக இருக்கலாம். அதுவே எல்லாமும் கிடையாது.
நிறையபேர் 'புனிதம்’ என்ற சொல்லை வைத்துக்கொண்டு, வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். உலகில் எல்லாமே இயல்பானதுதான். புனிதம் என்பதெல்லாம் அதீதமான வார்த்தை. பரத் - நித்யா இருவரையும் பற்றி தெரிந்து கொண்டால்... நான் சொல்வதில்இருக்கும் உண்மை உங்களுக்கே புரியும்!

Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 10 (இரட்டை வாழ்க்கை இம்சை !)


ரொமான்ஸ் ரகசியங்கள் !

இரட்டை வாழ்க்கை இம்சை !
அகிலன் சித்தார்த்
ஓவியம்: மணியம் செல்வன்
'ஆணும் பெண்ணும் சமம்' என்பதுதான் மார்க்ஸ் முதல் பாரதி வரை உலக முற்போக்கு சிந்தனையாளர்கள் படித்துப் படித்துச் சொன்ன விஷயம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் சமூகத்தில் அந்த நிலை, பெரும்பான்மையாக உருவாகவில்லை... குறிப்பாக கணவன் - மனைவி இடையே! கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சரிசமமாக நடத்தக்கூடிய தாம்பத்யத்தில்... ரொமான்ஸ் என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதே உண்மை!
முரளி, சுலோச்சனா... அந்த விதி பழகாத தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். சுலோச்சனா, மத்திய அரசுத் துறையில் நல்ல பொறுப்பில் இருப்பவர். கிராமப்புற பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்தில் அரசாங்கம் தொடங்கிய ஒரு துறையில், கிரியேட்டிவான முறையில் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி நிறைய விருதுகளையும், பதவி உயர்வுகளையும் வாங்கியவர். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு நிம்மதி இல்லை.
தன்னால் இயன்றவரை வீடு, அலுவலகம் என்று இரண்டு பொறுப்புகளை சுலோச்சனா சுமந்தாலும், கணவர் எப்போதும் கரித்துக் கொட்டிக் கொண்டே இருப்பார். தன் அலுவல் தொடர்பாக மேற்கல்வி படித்து அதில் முனைவர் பட்டமும் பெற்றார் சுலோச்சனா. கை நிறைய சம்பளம். எந்நேரமும் அவரிடம் தங்கள் பிரச்னைகளைச் சொல்லி விவாதிக்க வரும் கிராமத்தினரின் கூட்டம், அரசியல்வாதிகள், கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் காட்டும் மரியாதை, அரசு தந்த கார் என்று மிக மரியாதையான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்தாலும், கணவர் முரளிக்கு அவர் தன் கை மீறிப்போய் விட்டதாக எண்ணம்.
''ரொம்ப படிச்சவனு திமிரு!''
''ஊர்ல எல்லாரும் மதிக்கிறாங்க இல்லை... அதான் என்னைப் போட்டு மிதிக்கிறே.''
''வீட்டை முழுசா பார்த்துக்க வக் கில்லை... உனக்கெல்லாம் ஏன் குடும்பம், புருஷன், புள்ளகுட்டிங்க?''
''போகிற போக்கை பார்த்தா எலெக்ஷன்ல நின்னு மந்திரி ஆயிடுவபோல. அப்புறம் என்னைத் துரத்தி விட்டுட்டு வேற ஆள் பார்த்துப்ப.''
- கணவன் கூசாமல் கொட்டும் இந்தக் கொடும் சொற்களுக்கு, ஆரம்பகாலத்தில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் சுலோச்சனா. நாட்கள் செல்லச் செல்ல முரளியின் குரூரமும், வக்கிர சிந்தனையும் அதிகமாகிக் கொண்டே வந்ததால், வெறுத்துப் போய் மௌனம் காக்க ஆரம்பித்தார். அதற்கும் வசை தொடர்ந்தது. 'அம்மாவை உலகமே பாராட்டுகிறதே... அப்பாவுக்கு மட்டும் ஏன் விபரீத சிந்தனை' என்று அவர்களின் குழந்தைகளுக்குப் புரியவே இல்லை... பாவம்தான்.
வெளியுலகில் ஒரு வாழ்க்கை, வீட்டுக்குள் ஒரு நரக வாழ்க்கை என்று சுலோச்சனாவின் இரட்டை நிலை இன்றும் பரிதாபமாகத் தொடர்கிறது. அவர்களுக்குள் காதல் என்கிற வார்த்தையே அடிபட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறன்றன.
மாறி வரும் இன்றைய சூழலில், தடைகளைத் தாண்டி அலுவலக வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் வெற்றிகரமாக பெண்கள் நடத்திவரும் பெரும் சாதனையை, ஆண்கள் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.
இந்த விஷயத்தை ஒரு தம்பதிக்கு மட்டுமல்ல, ஊருக்கே... ஏன் உலகுக்கே பிராக்டிகலாக புரிய வைக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், நேரடியாக இறங்கிய அனுபவத்தை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
''தமிழ்நாட்டின் புதிரன்கோட்டை கிராமத்தில் நடந்திருந்தது ஒரு மௌனப்புரட்சி. ஆயிரக்கணக்கான படிப்பற்ற கிராமத்தவர்களை, மிகவும் குறுகிய காலத்தில், 'என்.ஏ.எஃப்' (NAF) எனப்படும் தேசிய விவசாய ஃபவுண்டேஷன் தன்னுடைய முயற்சியினால் படிப்பறிவு பெற்றவர்களாக மாற்றிஇருந்தது. கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பாடத் திட்டத்தில், நவீனமுறையில் அளிக்கப்பட்ட பயிற்சி அது.
அதிகாலையில் வெள்ளி முளைக்கும்போது எழுந்திருக்கும் பெண்கள்... வீட்டு வேலை, குழந்தைகளைப் பராமரிப்பது, சமையல் இவற்றுடன் காடு, கழனி என்று வயல்வேலையும் பார்த்துவிட்டு, இரவு கண்களை மூடிப் படுக்கும்போது நிலவு உச்சிக்கு வந்திருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு நேரம் கண்டுபிடித்து எழுத்தறிவிப்பது, சாதாரண விஷயமல்ல. அவர்களுக்கான கல்வியை இரவு நேரத்தில்தான் கொடுக்க முடியும். 'என்.ஏ.எஃப்' அப்படித்தான் செயல்பட்டது.
நான் அங்கே சென்றிருந்தபோது சுமார் 4,200 பேர் இரவு பாடசாலை மூலம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அதில் 80 சதவிகிதத்தினர் பெண்கள். அந்தச் சுற்றுவட்டார கிராமங்களில் 288 சுய உதவிக் குழுக்களையும் 'என்.ஏ.எஃப்' உருவாக்கியிருந்தது. அவர்களின் மொத்த சேமிப்பு 48 லட்சம் ரூபாயை எட்டியிருந்தது. சுமார் 70 லட்சம் ரூபாய்க்கான தொழில் கடன்களை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தது.
கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் ஒரு பெண். அவருடைய கணவர் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றார். நான் அந்தப் பஞ்சாயத்துத் தலைவியிடம், 'நீங்கள் சுதந்திரமாகச் செயல்பட உங்கள் கணவர் விடுகிறாரா? அல்லது தலையிடுகிறாரா?' என்று கேட்டேன். அந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்ல தடுமாறினார்.
நிலைமையைச் சமாளிக்கும்பொருட்டு, 'அவ்வப்போது சில உதவிகளைச் செய்வதுண்டு' என்று பூசி மெழுகினார் கணவர். உண்மையில் அந்தப் பெண்மணியின் வேலைகளில் அவர் தலையிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. நம் நாட்டில் பெரும்பான்மையான பெண் பஞ்சாயத்துத் தலைவிகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
'இதோ பாருங்கள், நீங்கள் உங்கள் மனைவியைச் சுதந்திரமாக வேலை பார்க்கவிட வேண்டும். அவரால் சிறப்பாகப் பணியாற்ற முடியும். உங்கள் மனைவியின் வேலைகளில் தலையிட மாட்டேன் என்று உங்களால் உறுதி கூற முடியுமா?' என்றேன். அவர் 'நிச்சயமா சார்!' என்றார். சுற்றி நின்றிருந்த பெண்கள் எல்லாம் அதற்குக் கரகோஷம் செய்தார்கள். அந்தக் கரகோஷம், அவர்களும் அப்படிப்பட்ட சுதந்திரத்தையே விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியது. பெண்கள் லீடர்ஷிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், அதற்கு ஆண்கள் முழுமனதோடு வழிவிட வேண்டும் என்பதே என் எண்ணம்''
- இப்படி எழுதியிருக்கிறார் அப்துல் கலாம்.
பொதுவாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட மண வாழ்க்கையிலும் இனி ஆண்கள், பெண்களை அடக்கி ஆளாமல் அவர்களின் சுதந்திரத்துக்கும், திறமைக்கும் வழிவிட்டு நடந்தால்... அவர்களின் காதல் வாழ்க்கையும் கடைசி வரை இனிக்கும். இது 21-ம் நூற்றாண்டின் புதிய விதிகளில் ஒன்று.
'காதல் ஒருவனைக் கைபிடித்து, அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து...' என்பது பெண்ணுக்கு மட்டுமில்லை, ஆணுக்கும் பொருந்தும்.
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

Money Money Money - (அவசரத்துக்கு கைகொடுக்கும் ஆர்.டி!)

Money Money Money

அவசரத்துக்கு கைகொடுக்கும் ஆர்.டி!
பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர்
நிதி ஆலோசகர் அனிதா பட்
சேமிப்பு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது... 'சிறுவாடு’க்கு அப்புறம், தபால் அலுவலக ஆர்.டி (RD - Recurring Deposit)! ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரக் குடும்பம் என அனைவருக்கும் கை கொடுக்கும் நல்ல திட்டம் இது. 10 ரூபாய் தொடங்கி... 50, 100, 1,000 என உங்களால் முடிந்ததை ஆர்.டி. மூலமாக சேமித்து வரலாம். இதற்கான வட்டிகூட அண்மையில் கூடியுள்ளது என்பது அனைவரையும் சந்தோஷப்படுத்தும் சங்கதி!
ஆர்.டி.-யில் சேமிக்கும்போது, ஐந்து ஆண்டுகளுக்கு கட்டாயம் தொடர்ந்து பணம் கட்ட வேண்டும். இதில் ஒரு ப்ளஸ் பாயின்ட் என்னவென்றால், மாதந்தோறும் கட்டும் ஆர்.டி. தொகையை ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்கு முன்கூட்டியே மொத்தமாக கட்டினால், கணக்கு வைத்திருப்பவரை ஊக்குவிக்க, ஆறாயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய் வீதம் ஊக்கத் தொகை கிடைக்கும்!
அவசரத் தேவைகளுக்கு அடுத்தவர் கையை எதிர்பார்க்காமல், உங்கள் ஆர்.டி. கணக்கில் அதுவரை நீங்கள் கட்டியிருக்கும் தொகையில் 50% கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வட்டி... ஆர்.டி கொடுக்கப்படும் வட்டியைவிட இரண்டு சதவிகிதம் கூடுதலாக இருக்கும். கடனை இடையிலேயே திரும்பச் செலுத்திவிடலாம். அல்லது ஆர்.டி. முடியும்போது, கடன் தொகை பிடித்தம் போக, மீதமிருக்கும் சேமிப்புத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் கடனை திரும்பச் செலுத்திவிடுவதே, நமக்கு லாபகரமானதாக இருக்கும்.
அடுத்து, தபால் நிலைய டைம் டெபாஸிட். அதாவது உங்களிடம் ஓர் தொகை இருக்கிறது. அது ஐந்து ஆண்டுகள் கழித்து மகளின் திருமணத்துக்குத் தேவைப்படும் என்றால், அதை ஐந்து ஆண்டு டைம் டெபாஸிட்-ல் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம்... ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் என முதலீடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு வட்டி முறையே 7.7%, 7.8%, 8% மற்றும் 8.3%. இதில் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.
பணி ஓய்வு பெறப் போகிறவர்கள், மாதந்தோறும் வருமானம் வேண்டும் என்று நினைப்பவர்கள்... தபால் நிலைய மாத வருமான சேமிப்பு திட்டத்தில் (மன்த்லி இன்கம் ஸ்கீம்) முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை, 1,500. தனிநபர் 4.5 லட்சம் வரையிலும், கணவன்- மனைவி ஒன்பது லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். இதற்கான 8.2 சதவிகித வட்டியை மாதந்தோறும் பெற்றுக் கொள்ளலாம்.
தேசிய சேமிப்பு பத்திரம் என்பதும் நல்லதொரு முதலீடுதான். இந்த பணத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. இதற்கு 8.4 சதவிகித வட்டி மற்றும் வருமான வரிச் சலுகையும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த பத்திரத்தை நகை போலவே வங்கியில் அடமானம் வைத்து உடனடியாக கடனும் பெற முடியும்.
சேமிப்புக்கு மட்டும் இல்லை... இதையே ஒரு தொழிலாக எடுத்து சம்பாதிப்பதற்கும் வழிகள் இருக்கின்றன! நிதி சார்ந்த முதலீடுகள் மற்றும் அது சார்ந்த வேலை வாய்ப்பு பற்றி அடுத்தடுத்து பார்க்கலாம்!
- பணம் பெருகும்...
மெடிக்ளைம் மோசடி உஷார்!
சென்ற இதழில் (6.12.2011) வெளியான 'மெடிக்ளைம் பாலிசி' பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு, கோயம்புத்தூர் வாசகர் பிந்துமாதவன் நமக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ''தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தேன். எனக்கும் என் மனைவிக்கும் ரத்த அழுத்தம் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஏஜென்ட்டிடம் பாலிசி எடுத்தேன். ஜூலை மாத இறுதியில் எனக்கு நெஞ்சு வலி வந்தது. அதற்கு பைபாஸ் சர்ஜரி செய்தார்கள். மருத்துவச் செலவுகளுக்கு க்ளைம் வாங்குவதற்காக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு ஆவணங்களை அனுப்பினேன். 'முன்கூட்டியே ரத்த அழுத்தம் இருந்ததால் க்ளைம் கிடைக்காது' என்று சொல்லிவிட்டார்கள். இதைப் பற்றி ஏஜென்ட்டிடம் சொல்லியிருந்தேன். ஆனால், அவர் அதைப் பற்றி குறிப்பிடாமல், எனக்கு பாலிசி எடுத்துக் கொடுத்துவிட்டார். ரத்த அழுத்தம் இருப்பதைக் குறிப்பிட்டால், பாலிசிக்கு அதிக தொகை செலுத்த வேண்டும். அதைச் சொன்னால், நான் பாலிசி எடுக்காமல் போய்விடுவேன் என்று ஏஜென்ட்டாகவே முடிவு செய்துவிட்டதுதான் பிரச்னைக்குக் காரணம். அவர் செய்த தவறுக்கு... எனக்குத் தண்டனை'’ என வேதனையுடன் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
''பொதுவாக பாலிசி எடுக்கும்போது ஏற்கெனவே இருக்கும் நோய்கள், அறுவை சிகிச்சை விவரங்கள் என அனைத்தையும் மறைக்காமல் குறிப்பிட வேண்டியது மிகமிக அவசியம். ஆனால், உங்களுக்கு இருக்கும் ரத்த அழுத்தத்தைப் பற்றி ஏஜென்ட்டிடம் சொல்லியும், அவர் அதை மறைத்து பாலிசி எடுத்திருக்கிறார். இதனால் உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் நிச்சயம் கஷ்டமானதுதான். ஆனால், அது கற்பித்த பாடம் முக்கியமானது. ஏஜென்ட் தெரிந்தவராக இருந்தாலும், அவரிடம்தான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோமே என்று இருந்துவிடாமல், பாலிசிப் பத்திரம் வந்தவுடன் அதை சரியாகப் படித்துப் பார்க்க வேண்டும். அதில் இதுபோல ஏதேனும் தவறுகள் இருந்தால், உடனே அந்த ஏஜென்ட் மூலமாகவே அவற்றை சரி செய்து கொள்ள வேண்டும்.
இதுபோன்று தவறுகளினால் க்ளைம் கொடுக்க மறுத்தால், சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் இன்ஷூரன்ஸ் ஆம்புட்ஸ்மேனில் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் விசாரித்து உண்மையாக இருக்கும்பட்சத்தில் க்ளைம் கிடைப்பதற்கு உதவி செய்வார்கள்.

Source from Viktan Magazine

தங்க நகைச் சீட்டு எது பெஸ்ட்?

தங்க நகைச் சீட்டு எது பெஸ்ட்?

தங்க நகைச் சீட்டு கட்டாத ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் தேடிக் கண்டுபிடிப்பது கடினமான வேலை. மாதச் சம்பளம் 5,000 ரூபாயோ, 50,000 ரூபாயோ அக்கம்பக்கம் இருக்கும் நகைக் கடையில் நகைச் சீட்டு போட்டு தங்கம் வாங்க நினைக்காத பெண்களே இல்லை.

ங்க முதலீட்டில் பலப்பல திட்டங்கள் வந்தபிறகும், பெண்களுக்கு நகைச் சீட்டின் மீது இருக்கும் மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. யாரும் எளிதாகப் புரிந்துகொண்டு ஈஸியாக பணத்தைக் கட்ட முடியும் என்பதால் தங்க நகைச் சீட்டுகளுக்கு இருக்கும் மவுசு அதிகம்.
கடந்த சில ஆண்டுகளாக தங்கம் 'ஜிவ்’வென ஏறுவதைப் பார்த்த பெண்கள், தங்கம் விலை இன்னும் அதிகரிக்குமோ என்ற பயத்தில் தங்கக் காசுகளாக வாங்கி வருகின்றனர். பெண்கள் இப்படி ஆர்வமாக வந்து வாங்குவதைப் புரிந்து கொண்ட நகைக் கடைகளும் புதுப்புது தங்க நகை சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன.
இன்றைக்கு தமிழகம் முழுக்க உள்ள தங்க நகைச் சேமிப்புத் திட்டங்களை மூன்று வகையாக பிரித்துவிடலாம். பழைய திட்டம், புது திட்டம், லேட்டஸ்ட் திட்டம் என தற்போது நகைச் சீட்டில் மூன்று வகையான திட்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்று திட்டங்களில் எதில் பணத்தைப் போடுவது லாபகரமாக இருக்கும் என்பதை அறிய களத்தில் இறங்கி, விரிவாக விசாரித்தோம். எது பெஸ்ட் என்பதைச் சொல்லும் முன்பு மூன்று தங்க நகைத் திட்டங்களையும் பார்த்து விடுவோம்.
பழைய திட்டம்!
மாதம் 1,000 ரூபாய் வீதம் பணம் கட்டினால், பதினைந்தாவது மாதத்தில் நாம் 15,000 கட்டியிருப்போம். இதற்கு போனஸாக ஆயிரம் ரூபாய் சேர்த்து 16,000 ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக ஐந்நூறு ரூபாய்க்கு கிஃப்ட் பொருள் அல்லது அந்த தொகைக்கும் சேர்த்து நகையாக வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தை தமிழகம் முழுக்க இருக்கும் சிறிய, பெரிய நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. இந்த திட்டங்களின் கீழ் நகை வாங்குபவர்களுக்கு செய்கூலி, சேதாரம், மதிப்புகூட்டு வரி போன்றவைகளில் சலுகைகள் தருவதாக நகைக் கடைகள் விளம்பரம் செய்கின்றன. ஆனால், இந்த திட்டம் முடியும்போது நகைகளாகவோ அல்லது காசுகளாகவோதான் வாங்க முடியும்.
புதிய திட்டம்!
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்க விலை எப்போதாவது ஒருமுறைதான் அதிகளவில் மாற்றம் காணும். ஆனால், இப்போது தினம் தினம் மாறுவதோடு, அந்த மாற்றம் பற்றிய செய்தி அடுத்த நிமிடமே டி.வி.-யிலும் இன்டெர்நெட்டிலும் வந்துவிடுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 2011-ம் ஆண்டில் மக்கள் அதிகளவில் வாங்கியது தங்க காசுகள்தான் என்று தெரிய வந்துள்ளது. தங்கம் விலை தாறுமாறாக ஏறுவதால் பின்வரும் நாட்களில் நகை வாங்க முடியாமல் போகுமோ என்கிற பயத்தில்தான் மக்கள் இப்படி காயின்களாக வாங்கி சேமித்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் நகைக் கடை வியாபாரிகள். இதனால் புதிதாக ஒரு சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இந்த புதிய திட்டத்தின்படி தங்கத்தின் விலை குறையும் அன்று கடைக்குச் சென்று பணத்தைக் கட்டி தங்கத்தை 'ரிசர்வ்’ செய்து கொள்ளலாம். அதாவது, இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் கட்டலாம். மொத்தம் பதினைந்து மாதங்கள் கட்ட வேண்டும். உதாரணமாக, 2012 ஜனவரி மாதம் தொடங்கினால் 2013 மார்ச்சில் முடியும். இதில் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியிலிருந்து 31-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் அந்த மாதத்திற்கான தவணையை கட்டிக் கொள்ளலாம்.
இதில் கூடுதல் வசதி என்னவெனில், ஆயிரம் ரூபாய்தான் கட்ட வேண்டும் என்றில்லை. அந்த மாதத்தில் உங்களிடம் அதிக பணமிருந்தாலோ, இல்லை தங்கம் விலை குறைந்ததால் அதிகமான பணத்தை நீங்கள் கட்ட நினைத்தாலோ தாராளமாக கட்டலாம். இந்த கூடுதல் தொகை என்பது ஆயிரங்களின் பெருக்கமாகவே இருக்கும். இதற்கான தங்கம் உங்களுக்கு அன்றைய விலைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.
சில கடைகளில் இத்திட்டத்தின் முடிவில் தங்க நகைகள் மட்டுமே வாங்க முடியும்; காயின்களாக வாங்க முடியாது என்கின்றனர். சில கடைகளில் தங்க காயின்களும் வாங்கிக் கொள்ளலாம் என்கின்றனர். இது கடைக்கு கடை மாறுபடுகிறது. முதல் மாதம் கட்டும் தொகையில் 50% பதினைந்தாவது மாத முடிவில் இருக்கும் அன்றைய விலைக்கு நிகரான தங்கம் போனஸாக கொடுக்கப்படுகிறது. பதினைந்தாவது மாத முடிவில் நீங்கள் மொத்தம் கட்டியிருக்கும் பணத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தங்கம் மற்றும் போனஸ் தங்கம் ஆகியவற்றிற்கு என மொத்தமாக நகை வாங்கிக் கொள்ளலாம். சேதாரம், செய்கூலி, வாட் உள்ளிட்டவை உண்டு.
லேட்டஸ்ட் திட்டம்!
குறிப்பிட்ட மாதங்களுக்கு என இருக்கும் இந்த திட்டத்தில் மாதம் குறைந்தபட்ச தொகையாக கட்டும் தொகையைவிட கூடுதலாகவோ, குறைவாகவோ கட்டிக் கொள்ளலாம். அதாவது, 2,000 ரூபாய் மாதம் கட்டும் திட்டத்தில் சேர்ந்தால், அடுத்த மாதத்தில் 5,000 ரூபாய் கட்டிக் கொள்ளலாம். அதற்கு அடுத்த மாதம் 500 ரூபாய்கூட கட்டிக் கொள்ளலாம். உங்களின் விருப்பம்போல் பணத்தின் இருப்பை பொறுத்து கட்டிக் கொள்ளலாம். திட்டம் நிறைவடையும் மாதத்தில் கூடுதலாக போனஸ் தொகையும் வழங்கப்படும்.

எது பெஸ்ட்?
மேற்சொன்ன இந்த மூன்று திட்டங்களுக்கும் மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தாலும், இதில் எது பெஸ்ட் என்பதுதான் முக்கியமான விஷயம். பழைய திட்டத்தின்படி 2010, செப்டம்பர் மாதம் சீட்டு ஆரம்பித்து மாதம் 1,000 ரூபாய் கட்டிவந்தால் நவம்பர் 2011-ல் சீட்டு முடியும். ஆனால் டிசம்பர் மாதம் தான் நகை வாங்க முடியும் என்பதால் அந்த மாதத்தில் (20-ம் தேதி 2,590) ஒரு கிராம் தங்கத்தின் விலைப்படி 6.33 கிராம் வாங்கலாம்.
இதுவே புதிய திட்டத்தின்படி செப்டம்பர் 2010-ல் சீட்டு போட்டு 2011 நவம்பர் மாதத்தில் முடித்திருந்தால் அந்த மாதங்களில் தங்கத்தின் அதிகவிலையோ அல்லது குறைந்த விலையோ எப்படி நீங்கள் பணம் கட்டியிருந்தாலும் சுமார் 7 கிராம் தங்கம் வாங்கலாம். இது பழைய திட்டத்தைவிட பத்து சதவிகிதம் அதிகம். லேட்டஸ்ட் திட்டத்திலும் இதே அளவு வாங்க முடியும். இன்னும் தங்கத்தின் விலை நிலவரங்களை எஃப்.எம்., டி.வி., இன்டெர்நெட் என பல வகைகளில் உடனே தெரிந்து கொள்ள முடியும் என்பதால், விலை குறையும் நாளை பார்த்து பணத்தைக் கட்டினால் இன்னும் கூடுதலாக தங்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் எது பெஸ்ட் என்று சொல்லிவிட்டோம். பாரம்பரியம், நம்பிக்கை, நாணயம் கொண்ட நகைக் கடைகள் நடத்தும் திட்டங்களில் சேர்ந்து பலன் அடைய வேண்டியது நீங்கள்தான்!
- பானுமதி
(Source fromVikatan Magazine)

Tuesday, December 13, 2011

கீதை காட்டும் பாதை 15 : மின்சாரக் கண்ணா!

கீதை காட்டும் பாதை 15 : மின்சாரக் கண்ணா!

- என்.கணேசன்


அவதார ரகசியத்தை உணர்வதால் மட்டுமே இறைவனைச் சேரலாம் என்றால் அந்த அளவு சூட்சும அறிவு இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி தானாக எழுகிறதல்லவா? அதற்கும் ஞான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.
'விருப்பு, பயம், கோபம் இவற்றை விட்டு நானே நினைவாகி, என்னையே அடைக்கலம் என்று நம்பி ஞான அக்னியால் பரிசுத்தமாகி என்னுடன் ஒன்றாக ஐக்கியமடைந்தவர்கள் பலர்.'
பெரும்பாலானோர் இறைவனை நினைப்பதே ஏதோ ஒரு பொருளுக்கோ, செல்வத்திற்கோ, நிலைக்கோ ஆசைப்பட்டுத் தான். அது எதுவும் தேவை இல்லாத போது அடுத்த தேவை உணரப்படும் வரை இறைவன் வசதியாக மனிதர்களால் மறக்கப்பட்டு விடுகிறார். அடுத்ததாக அவர்கள் இறைவனை வழிபட இன்னொரு காரணம் பயம். கும்பிடாவிட்டால் ஏதாவது பிரச்னையை உண்டாக்கி விடுவாரோ, தங்களைக் காப்பதை அவர் நிறுத்தி விடுவாரோ என்ற பயமும் சிலருக்கு இருக்கிறது. அதனால் எதற்கு வம்பு என்று வணங்கி இறைவனை திருப்தியாகவே வைத்துக் கொள்ளும் ஜாக்கிரதை உணர்வின் காரணமாகவும் இறைவனை வணங்குகிறார்கள்.
ஆனால் விட்டு விட வேண்டிய மூன்று குணங்களில் முதலிரண்டாக இவற்றையே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். இந்த இரண்டும் உண்மையான இறையுணர்வுக்கு உகந்ததல்ல. தேவையாலும், பயத்தாலும் பூஜிக்கப்பட வேண்டியவனல்ல இறைவன். அடுத்ததாக அவர் சொல்வது கோபம். கோபம் இருக்கும் நேரத்தில் அது ஒன்று தான் பிரதானமாக இருக்கிறது. எல்லா நல்ல தன்மைகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன. சொல்லாலும், செயலாலும் தனக்கே தீங்கு இழைத்துக் கொள்ளும் பலவீனமான நிலையில் இருக்கிற மனிதன் மனதில் எந்த நல்ல விஷயமும் புக முடியாது. அப்படி இருக்கையில் இறையுணர்வு எப்படி உள்ளே புக முடியும்?
இந்த மூன்றையும் விலக்கி விடும் போது இறைவனின் நினைவிலேயே தங்கி விடுவது எளிதாகிறது. இறை ஞானம் என்ற அக்னியால் மற்ற அழுக்குகளும் சுட்டெரிக்கப்பட்டு அகம் பரிசுத்தமாகிறது. அகம் பரிசுத்தமாகும் போது மனிதன் தானாக இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான்.
அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் சுலோகம் மிகவும் பொருள் பொதிந்தது. 'மனிதர்கள் எவ்வழியில் என்னை நாடினாலும் அதே வழியில் நான் அவர்களிடம் நெருங்குகின்றேன், பார்த்தனே! ஒவ்வொரு விதத்திலும் மனிதர்கள் பின்பற்றும் வழி எனதே ஆகும்.'
இறைவனை ஒவ்வொருவரும் காணும் விதங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.
அப்படி காணும் விதங்கள் ஒன்று போலவே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை. கண்ணனை பாரதியார் தாயாக, தந்தையாக, அரசனாக, சற்குருவாக, இறைவனாக, சேவகனாக, சீடனாக, காதலனாக மற்றும் காதலியாகக் கண்ட கவிதைகள் மிகவும் பிரசித்தம். இப்படி ஒருவரே பல விதமாய் இறைவனைக் காண்பது அபூர்வம். பலரும் இறைவனை ஏதாவது ஒரு வழியில் காண்கிறார்கள், வழிபடுகிறார்கள். இந்த வழிகளில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று இறைவன் பார்ப்பதில்லை. ஏனென்றால் எல்லாமே தன் வழிகள் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். அப்படி அவரவர் நாடிய வழியிலேயே அந்தந்த மனிதர்களை நெருங்குவதாக அவர் கூறுகிறார்.
இதே கருத்து தான் திருவாய்மொழியிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவரென அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் வழிவழி அடைய நின்றாரே.
இறைவன் அவரவர் தன்மைக்கேற்ப நெருங்குவதை இன்னொரு உதாரணம் மூலமாகவும் விளக்கலாம். இறைவன் மின்சாரத்தைப் போன்றவர். மின்சாரம் ஒன்றே ஆனாலும் அது பாயும் மின் கருவிகளுக்கேற்ப விதவிதமான பலனைத் தருகிறது. மின்சாரம் விளக்குகளில் பாயும் போது ஒளியாகிறது, வானொலியில் ஒலியாகிறது, தொலைக்காட்சியில் ஒலியும், ஒளியும் ஆகிறது, சூடேற்றும் கருவியில் உஷ்ணமாகிறது, குளிர்சாதனக் கருவியில் குளிர்ச்சியாகிறது. இப்படி கருவிகளின் தன்மைக்கேற்ப, ஊடுருவும் மின்சாரம் பலனளிப்பது போல இறைவனும் அவரவர் தன்மைக்கேற்ப மனிதர்களை அனுக்கிரகிக்கிறார்.
இறைவனின் நோக்கு விசாலமானது. குறுகிய எண்ணங்களும், கோட்பாடுகளும் அவருடைய அகராதியில் கிடையாது. இதை ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் உணர்வதில்லை. அவர்களுடைய வழிபாடுகள் குறித்த சிந்தனைகள் திட்டவட்டமானவை. ஏதாவது ஒரு ஆன்மிக நூலை மேற்கோள் காட்டி அப்படித்தான் இறைவனைக் காண வேண்டும், வணங்க வேண்டும், வழிபாட்டு முறை இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வழி தான் சிறந்தது, மற்றவை எல்லாமே தாழ்ந்தது என்று மிக கெட்டியாக வழிமுறைகளைப் பிடித்துக் கொள்ளும் இவர்கள் இறைவனைத் தவற விட்டு விடுகிறார்கள்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும், வேடுவனான கண்ணப்ப நாயனாரும் இறைவனை வழிபட்ட முறைகள் சாஸ்திரங்களால் ஒத்துக் கொள்ளப்பட்டவை அல்லவே. ஆண்டாள் இறைவனுடன் கலந்ததாகவும், கண்ணப்ப நாயனாரிடம் இறைவனே "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க" என்று சொன்னதாகவும் படிக்கிறோமே. இவர்கள் வழிபட்ட முறைகளை இறைவன் ஏற்றுக் கொண்டதையும், ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் சொன்னதையும் பார்க்கையில் இறைவனை நாங்கள் அணுகும் முறை தான் சிறந்தது என்று யாரும் சொல்வதில் உண்மையில்லை என்ற முடிவுக்கே அல்லவா நாம் வரவேண்டி இருக்கிறது.
அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். 'மனிதர்கள் செயல்களுக்குப் பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் வழிபடுகிறார்கள். ஏனென்றால் இந்த மனித உலகில் செயல்களால் வெகு விரைவில் பலன் கிடைக்கிறது.'
முன்பே சொன்னது போல வழிபாடு என்றாலே இறைவனிடம் யாசித்தல் என்பது தான் பொதுவாக இருக்கிறது. அதைக் கொடு, இதைக் கொடு என்று பட்டியல் வைத்துக் கொண்டு தான் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். இறைவன் கொடுப்பாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் வந்தால் பேரம் பேசும் வேலையும் நடக்கிறது. 'நீ எனக்கு இதைச் செய்தால் நான் உனக்கு அதைச் செய்கிறேன்' என்று பேரம் பேசுகிறார்கள். இறைவனுக்கு இவர்களிடமும் வேலையாக வேண்டியிருப்பது போன்ற பாவனையில் இறைவனை அணுகுகிறார்கள். இதில் மேல்மட்டம், கீழ்மட்டம் என்றெதுவும் இல்லை. எல்லா மட்டங்களிலும் யாசிக்கும் வேலை தான் நடக்கிறது.
ஒரு சக்கரவர்த்தியிடம் ஒரு பிச்சைக்காரன் நிதி கேட்டுப் போனான். பிச்சைக்காரன் போன போது சக்கரவர்த்தி பிரார்த்தனையில் இருந்தார். 'அந்த நாட்டை நான் வெல்ல அருள் புரி, இந்த நாட்டை வெல்ல அருள் புரி, அந்த செல்வத்தைக் கொடு, இந்த செல்வத்தைக் கொடு...' என்று இடைவிடாமல் கோரிக்கைகளைச் சக்கரவர்த்தி சத்தமாக வைத்துக் கொண்டிருந்தார்.
பொறுத்து பொறுத்துப் பார்த்த பிச்சைக்காரன் கிளம்பி விட்டான். 'நானே தேவலை போல இருக்கிறது. என்னை விடப் பெரிய பிச்சைக்காரனாய் இந்த சக்கரவர்த்தி இருக்கிறார். என்னை விடப் பெரிய பட்டியல் வைத்து பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு பிச்சைக்காரன் தன்னை விட மோசமாக தேவைகளில் இருக்கும் பிச்சைக்காரனிடம் பிச்சை எடுப்பது நியாயமல்ல' என்று நினைத்துக் கொண்டான்.
ஒரு விதத்தில் அவன் நினைத்தது உண்மையே. இரண்டுமே பிச்சை தான். பிச்சைக்காரன் உணவையும், காசுகளையும் பிச்சை கேட்டால், அரசர் நாடுகளையும், பல செல்வங்களையும் பிச்சை கேட்கிறார். பிச்சைக்காரனின் பிச்சைத்தட்டு சிறியது, சக்கரவர்த்தியின் பிச்சைப்பாத்திரமோ பெரியது.
இப்படித் தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது என்பது யாசகம் கேட்பதாய் இருக்கிறது. தேவைகளைப் பொருத்த வரை அரசன் முதல் ஆண்டி வரை சரி சமமாகவே இருக்கிறார்கள்.
ஆனால் இதைக்கூட ஸ்ரீகிருஷ்ணர் இழிவாகச் சொல்லாமல் ஒரு தகவலைச் சொல்கிறாற் போலவே சொல்வது கவனிக்கத் தக்கது. பலனை எதிர்பாராமல் செயலைச் செய்யச் சொன்னவர், தன்னை அடையும் வழியில் கூட விருப்பைக் களையச் சொன்னவர், பெரும்பாலானோர் பலனைக் கருதி வழிபடும் விதத்தைக் குறைபாடாகச் சொல்லாமல் அப்படி லௌகீக எதிர்பார்ப்பில் செய்யும் வழிபாட்டுச் செயல்களுக்கு விரைவில் பலன் கிடைப்பதாகச் சொல்கிறார்.
ஏன் லௌகீக செயல்களில் விரைவில் பலன் கிடைக்கிறது தெரியுமா? கேட்டதில் பெரும்பாலானவற்றை இறைவன் கொடுத்துக் கொண்டே இருந்தாலும், அப்போதும் போதாமல், மேலும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு நிற்கிற மனிதனுக்கு அப்போதாவது புத்தி வருகிறதா என்று பார்க்கிறார். அப்படித் தரவில்லையென்றால் இது மட்டும் கிடைத்திருந்தால் நான் மிகவும் திருப்தியுடன் இருந்திருப்பேன் என்கிற பொய்யான அபிப்பிராயத்திலேயே மனிதன் வாழ்ந்திருப்பான். ஆசைகளை எத்தனை தான் நிறைவேற்றினாலும் புதிது புதிதாக வேறு வேறு ஆசைகள் கிளம்புவதை உணர்ந்து, முடிவில்லாத இந்த ஆசைகள் காட்டும் ஆசையில் மனிதன் சலிப்படைந்து, ஒரேயடியாய் இதை விட்டொழித்து கடைத்தேறத்தான் விரைவில் பலன் தருகிறார்.
இது மனிதன் அனுபவித்து, அறிந்து தெளிய வேண்டிய சமாச்சாரம். தானாகத் தெளிவடைந்தால் ஒழிய இதை விட்டொழிக்க முடியாது. இது கடக்க வேண்டிய பாதையே ஒழிய, ஒதுக்கக் கூடிய பாதை அல்ல.
கடற்கரையில் கிடக்கும் கிளிஞ்சல்களைப் பொக்கிஷம் போல சேர்த்து வைத்துக் கொள்ளும் குழந்தைகளைப் பார்த்து 'இதெல்லாம் மதிப்புடையவை அல்ல, சும்மா குப்பைகளைச் சேர்க்காதீர்கள்' என்று பெற்றோர் சொன்னால் குழந்தைகள் கேட்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்து எடுத்து வீசிப்பாருங்கள். ஆத்திரமடைந்து அழுது தீர்ப்பார்கள். ஆனால் வளர்ந்து விட்ட பிறகு அதைத் தானாகவே வெளியே வீசி விடுவார்கள். கிளிஞ்சல்கள் விஷயத்தில் குழந்தைகள் வளர்ந்து விடுபடுகிறார்கள். ஆனால் ஆசைகள் விஷயத்தில் மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் வளர்ந்து பக்குவம் பெற்று விடுபடுவதில்லை. அதுவே பொதுவான உலக இயல்பாக இருக்கிறது.
மேலும் பிரார்த்தித்துப் பெறும் பொருள்களை மனிதனால் அளக்க முடிகிறது. அதனால் சீக்கிரம் கிடைத்ததாக மனிதன் உணர்கிறான். ஆனால் பொருளல்லாத மற்ற மேம்பட்ட உணர்வுகளையும் அனுபவங்களையும் மனிதனால் அளக்க முடிவதில்லை. அதனால் அவற்றைப் பிரார்த்தித்துக் கேட்பவர்களும், கிடைத்தால் உண்மையாக உணர்பவர்களும் வெகு சொற்பமே.
பாதை நீளும்....

முந்தைய அத்தியாயம் - கீதை காட்டும் பாதை 14 - நல்லதுக்கு காலமுண்டு!

கீதை காட்டும் பாதை 14 - நல்லதுக்கு காலமுண்டு!

கீதை காட்டும் பாதை 14 - நல்லதுக்கு காலமுண்டு!

என்.கணேசன்
து வரை சொன்ன யோக ரகசியங்கள் ஆதிகாலத்திலேயே தன்னால் உபதேசிக்கப்பட்டது என்றும், பின் வழிவழியாக சொல்லித்தரப்பட்டு பாதுகாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் மறக்கப்பட்டு விட்டது என்றும் ஸ்ரீகிருஷ்ணர் ஞான யோகத்தின் துவக்கத்திலேயே சொல்ல, அர்ஜுனனிற்கு சந்தேகம் வருகிறது. "நீயோ இந்தக் காலத்தவன், நீ எப்படி ஆதிகாலத்திலேயே உபதேசித்திருக்க முடியும்?" என்று கேட்கிறான்.



கீதையின் மிகப் பெரிய சிறப்பு 'நான் உபதேசித்துக் கொண்டே போகிறேன், நீ கேட்டுக் கொண்டே வா' என்ற விதத்தில் இல்லாதது தான். கண்மூடித்தனமாக பின்பற்றுதல் இங்கு ஊக்குவிக்கப்படவில்லை. நிறைய இடங்களில் அர்ஜுனன் கேள்விகள் அறிவுபூர்வமான சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றன. அறிவுக்கு ஒத்து வராததை அர்ஜுனன் உடனடியாக ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல அதை வெளிப்படையாகவே சொல்லவும் செய்கிறான்.

எதிர் கேள்விகள் கேட்பது மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. என்னை எப்படி நீ சந்தேகப்படலாம் என்பது போன்ற கோபத்தையும் ஸ்ரீகிருஷ்ணர் எழுப்பவில்லை.

ஸ்ரீகிருஷ்ணரைத் தன் நெருங்கிய உறவினராகவும், நண்பனாகவும் மட்டுமே கண்டு வந்த அர்ஜுனனின் இந்த நியாயமான கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கிறார்.

"அர்ஜுனா! எனக்கு எத்தனையோ ஜென்மங்கள் கழிந்து விட்டன. உனக்கும் அப்படியே. அந்த ஜென்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்.

நான் பிறப்பற்றவனாகவும், அழிவற்றவனாகவும், சகல பூதங்களுக்கும் ஈசனாகவும் இருந்த போதிலும் என்னுடைய மாயையினால் இயற்கையை வசமாக்கிக் கொண்டு அவதாரம் செய்கின்றேன்.

பரதகுமாரனே! எப்போதெல்லாம் தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன்.

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்கிறேன்."

அர்ஜுனனும், ஸ்ரீகிருஷ்ணரும் அந்தந்த உருவத்தில் மட்டும் மஹாபாரத காலத்தினவரே தவிர, இருவருக்கும் அது ஒரே ஒரு பிறவி அல்ல. எத்தனையோ பிறவிகள் முன்பே எடுத்திருக்கின்றனர். ஆனால் இறை நிலையில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கு அனைத்துப் பிறவிகளும் நினைவு இருப்பதும் மனித நிலையில் இருக்கும் அர்ஜுனனுக்கு அவை குறித்த எந்த நினைவும் இல்லாமல் இருப்பதே வித்தியாசம்.

கீழ்நிலையில் இருந்து இறைநிலையை அடையும் வரை மனிதன் எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கிறது. அவனது ஆத்ம ஞானத்தை மறைக்கும் எத்தனையோ திரைகளை விலக்க அந்தப் பிறவிகள் அவனுக்குத் தேவையாக இருக்கின்றன. உண்மையான 'நான்' என்பதை அவன் உணரும் முன் எத்தனையோ பொய்யான 'நான்'களை அந்தப் பிறவிகளில் பாவித்து பின் அதெல்லாம் 'நான்' அல்ல என்று தெளிவடைய வேண்டி இருக்கிறது. அதே போல ஒரு பிறவியில் செய்த கர்மங்களின் பலன்கள் அனுபவிக்க மீதி இருந்தால், அப்போதும் அவனுக்கு இன்னொரு பிறவி தேவைப்படுகிறது.

இந்த நிலைமை மனிதனுக்குத் தானே இறைவனுக்கில்லையே, பின் ஏன் இறைவன் பிறவி எடுக்கிறார் என்ற கேள்வி எழுவது இயற்கை. அனைத்தும் அறிந்தவருக்கு இனி அறியவோ, தெளியவோ ஏதுமில்லை என்பதால், இறைவன் கர்மங்களால் கட்டுண்டவர் அல்ல என்பதால் இந்தக் கேள்வி எழுகிறது. அதற்கு பதிலாகத் தான் ஸ்ரீகிருஷ்ணர், தர்மத்திற்குத் தாழ்வு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தன்னை சிருஷ்டித்துக் கொள்வதாகவும், நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிக்க ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் எடுப்பதாகவும் கூறுகிறார்.

தனிமனிதன் பிறவி எடுப்பது தன்னைக் கண்டு கொண்டு உய்வடைய என்றால் இறைவன் அவதாரம் எடுப்பது தர்மத்தை நிலைநாட்ட - தர்மத்தைக் கடைபிடிப்பவர்களைக் காப்பாற்ற. அதர்மம் மேலோங்கும் போது துன்புறும் நல்லவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் விதமாகவே இறைவன் தோன்றுகிறார். பிறப்பும் இறப்பும் இல்லா இறைவன் அவ்விரண்டிற்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதும், பிறவியினால் வரும் அனைத்து அசௌகரியங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்வதும், நல்லவர்கள் மேல் உள்ள எல்லையில்லாத கருணையினால் தான்.

அதர்மம் வெளிப்பார்வைக்கு எப்போதுமே பலமுள்ளதாகத் தான் தோன்றும். அதற்குக் கிடைக்கும் ஆரம்ப வெற்றிகள் அதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும். அதனாலேயே அது அதிக கர்வத்தையும் ஏற்படுத்தும். அத்துடன் அதர்மத்தின் தன்மையே ஒரு அளவோடு நிற்காமலிருப்பது தான். அப்படி கர்வத்துடன் அதர்மம் அத்துமீற ஆரம்பிக்கும் போது 'நல்லதுக்கு காலமில்லை' என்ற விரக்தியை பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்துவதுண்டு.

அப்படி அதர்மம் மேலோங்கும் எல்லா சமயங்களிலும் இறைவன் தோன்றுவதாக கீதை சொல்கிறது. அந்த எல்லா சமயங்களிலும் இறைவன் தனி உருவம் எடுத்தே தோன்ற வேண்டும் என்பதில்லை. இறைவன் பலர் மனதிலும் எண்ணமாகவும், சக்தியாகவும், தைரியமாகவும் உருவெடுக்கலாம்.

அடக்குமுறை, அராஜகம் ஆகியவற்றிற்கு அசைந்து கொடுக்காமல், ஆசை காட்டும் போது விலை போகாமல், அதர்மத்தை உறுதியாக எதிர்த்து நிற்கும் அபூர்வ மனிதர்களைக் காணும் போது மனிதசக்திக்கும் மீறிய சக்தி அவர்களை உந்துவதை நம்மால் உணர முடியும். அந்த சக்தி இறைவனுடையதாகவே இருக்கிறது. அந்த சக்தியின் முன் அதர்மம் தோற்று விடுகிறது.

பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரையான வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு விளங்காமல் போகாது. ஒவ்வொரு காலத்திலும் அநியாயங்களும், அக்கிரமங்களும் தலை விரித்தாடும் போது, அதைச் செய்கிறவர்களின் அதிகாரம் எல்லையில்லாததாக இருக்கும் போது அவர்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்றே எண்ணத் தோன்றும். புராண காலத்தில் கூறப்பட்ட அரக்கர்களை விட மோசமாக அவர்கள் நடந்து கொண்டு தங்கள் பலத்தை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் அசைக்க முடியாதவர்கள் என்று எண்ணப்பட்ட அவர்கள், வானளாவிய அதிகாரம் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்த அவர்கள் கடைசியில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு இருக்கிறார்கள். அதை செய்யக்கூடிய மனிதனோ, மனிதர்களோ உருவாகியிருப்பது தெய்வ சங்கல்பத்தாலேயே. அதை செய்து முடிக்கிற வரையில் இறைசக்தி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

அப்படியானால் தனி அவதாரம் இறைவன் எடுப்பது எப்போது? அது நீண்ட கால இடைவெளிகளிலேயே நிகழ்கிறது. தீமைகளும் அதர்மங்களும் சில தனி மனிதர்களிடத்தில் மட்டும் இல்லாமல் பெரும்பாலான மனிதர்களிடமும் காணப்படுகையில், சமூகத்தில் சீர்கேடுகள் புரையோடிப் போயிருக்கையில், ஒரு முழுமையான சீர்திருத்தமும், மாற்றமும் தேவைப்படுகையில், ஒரு அவதார புருஷர் பிறவி எடுக்கிறார். அந்த அவதார புருஷர் மகத்தான மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறார். அவர் வருகையால் சமூகத்தின் மனப்போக்கும், வாழ்க்கை முறையும் அடியோடு மாறி ஒரு மறுமலர்ச்சி ஏற்படுகிறது.

மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் :

"அர்ஜுனா! திவ்யமான என்னுடைய அவதார ரகசியத்தையும் என்னுடைய செயல்களையும் எவனொருவன் அறிந்து கொள்கிறானோ அவன் உடலை விட்டுப் பிரிந்தபின் மறுபடியும் பிறக்க மாட்டான். அவன் என்னையே அடைந்து விடுவான்."

இறைவனுடைய அவதார ரகசியத்தையும், எல்லாவற்றிலும் இறை சக்தியின் செயல்பாடுகளையும் அறிய முடிந்தவனுக்கு மேலும் அறிந்து கொள்ள எதுவுமில்லை. அறியாமை நீங்கி விடுவதால் அதனால் விளையும் கர்மவினைகளும் அவனைப் பிணைப்பதில்லை. எனவே மரணத்திற்குப் பிறகு மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லாத அவன் இறைவனை அடைந்து விடுவான்.

"பிறவாமை வேண்டும்" என்று காரைக்கால் அம்மையாரும், "இருப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் அன்னை கருப்பையூர் வாராமற் கா" என்று பட்டினத்தாரும் இறைவனிடம் வேண்டியதைப் படித்திருக்கிறோம். பிறவிப் பெருங்கடலில் சிக்கி, சுக துக்க அலைகளால் ஓயாமல் அலைக்கழிக்கப்பட ஞானிகள் விரும்புவதில்லை. எனவே அதில் சிக்காமல் இருப்பதே அவர்களின் லட்சியமாக இருக்கிறது. அதற்கான வழியையே இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கிறார்.
பாதை நீளும்..

கீதை காட்டும் பாதை 13 - பாவம் செய்யத் தூண்டுவது எது?

கீதை காட்டும் பாதை 13 - பாவம் செய்யத் தூண்டுவது எது?

- என்.கணேசன்

நன்மை எது தீமை எது என்பதை சாதாரண அறிவுள்ள மனிதன் கூட அறிவான். நல்ல செயல்களால் நன்மையும் தீய செயல்களால் தீமையும் விளையும் என்பதையும் அவன் அறிவு அவனுக்கு உணர்த்துகிறது. ஆனால் செயல் என்று வரும் போது தினசரி வாழ்க்கையில் தீய செயல்களில் சர்வ சாதாரணமாக அவன் ஏன் ஈடுபடுகிறான்? அவன் அறிவையும் மீறி அவனைத் தீய செயல்களில் ஈடுபடத் தூண்டுவது எது என்ற யதார்த்த கேள்வி அர்ஜுனன் மனதில் எழுகிறது.

அர்ஜுனன் கேட்கிறான். “வார்ஷ்ணேயா (விருஷ்ணி குலத்தில் பிறந்த கிருஷ்ணா), மனிதன் தானாக விரும்பாவிட்டாலும் பலாத்காரமாக ஏவப்பட்டவன் போல பாவம் செய்கிறானே! அவனை அப்படி பாவம் செய்யத் தூண்டுவது எது?”

இந்தக் கேள்வி நம் மனதிலும் எழாமல் இருக்க முடியாது. கர்ம யோகத்தின் மிக உயர்ந்த கருத்துகளைப் படிக்கும் போது இவையெல்லாம் உண்மை என்ற உணர்வு நம்முள் ஏற்பட்டாலும் அர்ஜுனனைப் போல நம் மனதிலும் குழப்பத்துடன் அந்தக் கேள்வி எழுகிறது. “படிக்க எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. உண்மை என்றும் தோன்றுகிறது. ஆனால் நடைமுறை என்று வருகையில் நம்மால் அப்படி இருக்க முடிவதில்லையே. அதற்கு எதிர்மாறாக அல்லவா நாம் பெரும்பாலும் நடந்து கொள்கிறோம். அது எதனால்?”

ஸ்ரீகிருஷ்ணர் இதற்குப் பதிலளிக்கிறார்.
“அது தான் காமமும் கோபமும். அது ரஜோ குணத்திலிருந்து உண்டாவது. அது எல்லோரையும் பாவம் செய்யத் தூண்டுவது. மனிதனின் பரம விரோதி அது தான் என்பதை அறிந்து கொள். புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.

ஆசை என்னும் காலாக்னியானது ஞானியின் அறிவை சூழ்ந்து கொண்டு அன்றாட விரோதியாக உள்ளது.



புலன்கள், மனம், அறிவு ஆகியவையே காமத்தின் இருப்பிடம். அது ஞானத்தை மறைத்து மனிதனை ஆட்டிப்படைத்து மயக்கத்தில் ஆழ்த்துகின்றது.”

காமம் என்ற சொல்லைத் தமிழில் பொதுவாக ஒரு குறிப்பிட்ட உணர்விற்கு நாம் பயன்படுத்தினாலும் இங்கு அந்த சொல் ஆசை என்ற விரிவான அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய எல்லாத் தவறுகளுக்கும் ஆரம்பம் ஆசையில் இருந்து தான் ஆரம்பமாகிறது. சாங்கிய யோகத்தில் ஆசையில் ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படி சென்று முடிகிறது என்று ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியதைப் பார்த்தோம்.

சரி என்று தோன்றுவதை நடைமுறைப்படுத்த முடியாமல் தவறை நோக்கிச் செல்லும் நம் வாழ்க்கை முறைக்கு ஆசையும் அதன் மூலமாக வரும் கோபமும் தான் காரணம் என்றும், அதனால் அதுவே நம் உண்மையான விரோதி எனவும் ஸ்ரீகிருஷ்ணர் மறுபடியும் கூறுகிறார்.

உண்மையான ஞானம் நம்முள் ஒளிர்கிற போது மிகத் தெளிவாக இருக்கிறோம், எந்தப் பிரச்னையும் இல்லை. ஞானம் மறைந்திருக்கும் போது தான் ஆசை தலையெடுக்கிறது. ஆசை வந்து விட்டாலோ அதனுடன் அத்தனை பிரச்னைகளும் கூடவே வந்து விடுகின்றன. ஞானத்தை மனிதனின் ஆசாபாசங்கள் மறைத்து விடுகின்றன.

இங்கு ’புகையினால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும், கருப்பையினால் கருவும் மூடப்பட்டிருப்பதைப் போல காமத்தினால் ஞானம் மறைக்கப் பட்டிருக்கிறது’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் உதாரணம் ஆழ்ந்த பொருள் கொண்டது. இந்த உதாரணங்கள் முறையே மனிதர்களின் சத்வ, ரஜோ, தாமச குணாதிசயங்களுக்கு ஏற்ப சொல்லப்பட்டிருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால் சத்வ குணம் நற்குணங்கள், அமைதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ரஜோ குணம் சுறுசுறுப்பானது என்றாலும் அது ஆசை, பரபரப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. தமோ குணம் அறியாமை, சோம்பல், ஜடத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்த மூன்று குணங்களுமே ஞானத்தை மறைக்கும் தன்மை உடையவை. இம்மூன்று குணங்களையும் கடந்தால் மட்டுமே ஞானம் சாத்தியம். இந்தக் குணங்கள் இருக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் அவை ஞானத்தை மறைத்துக் கொண்டே இருக்கும்.

புகையினால் நெருப்பு மூடப்பட்டிருப்பது சத்வகுணம் உள்ளவர்களுக்கான உதாரணம். புகை மறைத்தாலும் இடையிடையே தீயின் ஜுவாலைகளும் தெரியாமல் இருப்பதில்லை. இந்த மறைத்தல் அரைகுறையானது. இடையிடையே ஞானமும் ஒளிரும். அதே நேரத்தில் புகையும் மறைக்கும். சத்வ குண ஆசைகள் உயர்ந்தவையாக இருந்தாலும் அவையும் ஞானத்திற்கு அவ்வப்போது ஒரு திரையே.

அழுக்கினால் கண்ணாடி மூடப்பட்டிருப்பது ரஜோ குணத்தவர்களுக்கான உதாரணம். அழுக்கு அதிகமாக கண்ணாடியில் மண்டிக் கிடக்குமானால் உருவம் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அது மிக மங்கலாகவும், தெளிவில்லாமலும் இருக்கும். இங்கு ஞானம் சத்வ குணத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மறைக்கப்படுகிறது.

கருப்பையினால் கரு மூடப்பட்டிருப்பது தாமச குணத்திற்கான உதாரணம். இங்கு ஞானத்தைக் காண வாய்ப்பே இல்லை. வளர்ச்சி அடையும் வரை ஞானம் மறைந்த நிலையிலேயே இருக்கும்.

காற்று வீசி புகையை விலக்கினாலும், இயல்பாகவே புகை குறைந்தாலும் தீயைப் பார்க்க முடிவது போல சத்வ குணத்தவருக்கு ஞான தரிசனம் எளிதில் கிடைக்கலாம். அழுக்கைத் துடைத்து நீக்கினால் மட்டுமே கண்ணாடியில் தெளிவாகக் காண முடிவது போல முயற்சி எடுத்தால் மட்டுமே ரஜோ குணத்தவருக்கு ஞானத்தைக் காண முடியும். வளர்ச்சி பெற்று கருப்பையிலிருந்து வெளிவரக் காலம் எடுத்துக் கொள்வது போல் தாமச குணத்தவருக்கு மேலும் அதிக காலம் தேவைப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி அடைந்து பக்குவம் பெற்றுத் தயாரான பின்னரே அவர்கள் ஞானமடைய முடியும்.

தீயின் இயல்பு சுடுவது. எல்லாவற்றையும் அறிந்தவனே ஆனாலும் அவன் ஆசை என்னும் தீயினால் சூழப்பட்டால் துன்பம் என்ற சூடுபட்டே ஆக வேண்டும். எனவே அன்றாடம் அவனை சூழக்கூடிய ஆசை என்னும் தீயை விரோதியாக எண்ணி அதனிடம் ஞானி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆசை ஆரம்பத்தில் சேருமிடம் புலன்கள். புலன்களைக் கட்டுப்படுத்தி வைத்திரா விட்டால் அங்கு ஆசைகள் அடைக்கலம் சேரும். புலன்வழிச் செய்திகளில் மனம் மயங்கி நிற்கும் போது ஆசைகள் மனத்தையும் ஆட்கொள்கிறது. புலனின்பத்தில் ஈடுபட்டு அதன் நினைவுகள் குறித்த சிந்தனைகள் அறிவிலும் அதிகமாகப் பதியுமானால் ஆசைகள் அறிவையும் ஆட்கொள்கிறது. இப்படி புலனிலிருந்து அறிவு வரை ஆதிக்கம் செய்ய முடியும் போது ஆசைகள் நம் அறிவை மறைத்து விடுகிறது.

சரி, இந்த ஆசையின் ஆதிக்கத்திலிருந்து எப்படித் தான் மீள்வது? அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் வழி சொல்கிறார்.

”நீ புலன்களைக் கட்டுப்படுத்து. பின்னர் ஞானத்தையும், பகுத்தறிவையும் அழிக்கும் இந்தக் காமம் என்ற பாவியை நீ ஒழித்து விடு.

புலன்கள் நுட்பமானவை தான். ஆனால் அவற்றை விட மனம் நுட்பமானது. மனத்தைக் காட்டிலும் அறிவு மிகவும் நுட்பமானது. அறிவைக் காட்டிலும் ஆன்மா மிக நுட்பமானது.

தோள்வலி மிக்கவனே! அறிவைக் காட்டிலும் மிக நுட்பமான ஆத்மாவை அறிந்து, மனதை ஆத்மசக்தியால் அடக்கி, காமம் என்னும் கொடிய விரோதியை அழித்திடுவாயாக!”

ஆசையின் ஆரம்ப நுழைவிடமான புலன்களைக் கட்டுப்படுத்தி கவனமாக இருந்தால் அதுவே ஆசையை ஒழிக்க மிக சுலபமான வழி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

புலன்கள், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கும் மனிதனிடம் உள்ளன. புலன்களை விட அதிகமாக மனமும், மனதை விட அதிகமாக அறிவும், அறிவை விட அதிகமாக ஆன்மாவும் சக்தியிலும், நுட்பத்திலும் உயர்ந்தவை.

ஐன்ஸ்டீன் மிக அருமையாகக் கூறுவார். “ஒரு பிரச்னையை உருவாக்கிய நிலையில் இருந்து கொண்டே அதனைத் தீர்த்து விட முடியாது”. அது முற்றிலும் உண்மை. அதிலேயே உழன்று கொண்டிருக்கையில் தீர்வும் தெரியாது, தீர்க்கும் சக்தியும் இருக்காது. அதைத் தீர்க்க வேண்டுமானால் அதை விட மேம்பட்ட, அதிக நுட்பமான உணர்வு நிலைக்குச் சென்றால் மட்டுமே தீர்வுக்கு வழி சுலபமாகத் தெரியும், தீர்த்து வைக்கும் சக்தியும் கிடைக்கும்.

எனவே ஆசைகள் புலன்கள், மனம், அறிவு என்ற மூன்றையும் ஆட்கொண்டு நமக்கு விரோதியைப் போல சதா துன்பத்தில் ஆழ்த்தி வருவதால் அந்த விரோதியை அந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஆத்ம ஞானத்தால் மூன்றையும் அடக்கி ஆசையை அழித்து விடச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இத்துடன் கர்மயோகம் நிறைவுறுகிறது. இனி ஞான யோகம் ஆரம்பிக்கிறது.
பாதை நீளும்...

கீதை காட்டும் பாதை 12 : உபதேசம் தவிர்ப்போம்.. உதாரணமாக இருப்போம் !

கீதை காட்டும் பாதை 12 : உபதேசம் தவிர்ப்போம்.. உதாரணமாக இருப்போம் !

- என்.கணேசன்
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:
"பார்த்தா.. பாமரன் பற்றுதலுடன் எல்லாச் செயல்களையும் செய்வது போல் பண்டிதன் மனிதகுல நலனிற்காக பற்றின்றி செயல் புரிய வேண்டும்.
கர்மத்தில் பற்றுள்ள பாமரனின் மனதை பண்டிதன் குழப்பி விடக்கூடாது. அதற்கு மாறாக பண்டிதன் பற்றின்றி எல்லாக் கர்மங்களையும் செய்ய வேண்டும். பாமரனையும் அவ்விதமே செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.
ஞானி கூட அவனது இயல்பின்படியே நடக்கின்றான். எல்லா உயிர்களும் அவற்றின் குணங்களையே பின்பற்றுகின்றன. அப்படி இருக்கையில் நிர்ப்பந்தப்படுத்துவதால் என்ன பயன்?"
இந்த இடத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாமரனின் மனோதத்துவத்திற்கேற்ப தன் உபதேசத்தைத் தொடர்கிறார். பாமரன் தன் சுயநலத்திற்காக ஒரு செயலை மிகுந்த அக்கறையுடன் செய்கிறான். கர்மயோகி அதே அக்கறையுடன் அந்த செயலை மனிதகுல மேம்பாட்டிற்காகச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
பொதுச் செயல் என்று வந்து விட்டாலே பலருக்கும் ஒரு அலட்சிய மனோபாவம் வந்து விடுகிறது. அந்த அலட்சியத்தைத் தவிர்த்து தனக்காகவும், தான் நேசிக்கின்ற மனிதர்களுக்காகவும் செய்கின்ற போது ஒரு காரியத்தை எப்படி ஆத்மார்த்தமாகச் செய்வோமோ அதே போல் ஆத்மார்த்தமாக அந்த காரியத்தைப் பொதுநலனுக்காகச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
எல்லோரும் அவரவர் இயல்பின்படியே நடக்கின்றனர். ஞானியானாலும் சரி, பாமரனானாலும் சரி, மற்ற உயிரினங்களானாலும் சரி அவரவர் இயல்பின்படி நடப்பதே இயற்கையாக இருக்கிறது. அப்படி இருக்கையில், எத்தனை உயரிய தத்துவமானாலும் கேட்பவர் அறிவுக்கே எட்டாத தத்துவமானால் அதை அவரிடம் உபதேசிப்பது வீண் தான்.
அறிவுக்கு எட்டும் போதே அதை நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டு வருவது எப்படிப்பட்ட பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது என்பது ஆன்மிகப் பாதையில் சிறிது தூரம் சென்றவர்களுக்குக் கூடத் தெரியும். அப்படி இருக்கையில் ஒருவனது அறிவுக்கே எட்டாத விஷயத்தை அவனுக்கு உபதேசிப்பதும், அவனை அந்த வழியின்படி நடக்க நிர்ப்பந்திப்பதும் பயனில்லாத செயல் அல்லவா? ஏதோ தனக்கிருக்கும் சில்லறை அறிவுக்கேற்ப வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு போகும் அவன், தன் வாழ்க்கை ஓட்டத்தை அறிந்தவன். அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி முடக்கிவிடக் கூடாது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
நிர்ப்பந்தத்தால் யாரும் எந்த நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. தானாகக் கனிவதற்கும், தடியால் அடித்துக் கனிய வைப்பதற்கும் உள்ள வித்தியாசம் கனியின் ருசியில் கண்டிப்பாகத் தெரிந்து விடும். எனவே உண்மையான ஞானிகள் எதையும் யாரிடமும் கட்டாயப்படுத்துவதில்லை. நிர்ப்பந்தங்கள் இருக்கையில் வேஷங்களும், நடிப்புகளும் அதிகமாகி மனிதன் உண்மையை விட்டு விலகி ஒரு பொய் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறான். எனவே எந்த ஒரு கட்டாயமும் ஆன்மிக மார்க்கத்தில் எதிர்விளைவுகளையே விளைவிக்கும்.



அப்படியானால் அறியாதவர்களை அப்படியே விட்டுவிடுவதா? அறிவுக்கு எட்டாததை விளக்கவும் கூடாது, கட்டாயப்படுத்தவும் கூடாதென்றால் அறிந்தவர்கள் அவர்களை எப்படித்தான் உயர்த்துவது?
இந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான், நல்ல முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி அவனையும் அப்படியே வாழ உற்சாகப்படுத்து என்கிறார். பல சித்தாந்தங்களையும், வேதாந்தங்களையும் விட அதிகமாக கண்முன் இருக்கும் உதாரணம் ஒருவனை மேல்நிலைக்கு மாற்ற வல்லது. எனவே புரியாதவனிடம் பிரசங்கம் செய்யாமல் நல்ல உதாரணமாக வாழ்ந்து காட்டி புரிய வை என்கிறார்.

இரண்டாம் உலகப் போரும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டமும் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்க பத்திரிகையாளர் இருவர் கண் முன்னால் இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை அப்போது அறிவித்திருந்தார். உடனே மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. ஆனாலும் அவர் காட்டிய வழியில் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேய சிப்பாய்களை ஓரிடத்தில் எதிர் கொள்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒரு குழு முன்னே செல்கிறது. ஆங்கில சிப்பாய்கள் தடியால் அடித்து காயப்படுத்துகிறார்கள். ஒரு சுதந்திரப் போராட்ட வீரன் கூட திருப்பி அந்த சிப்பாய்களைத் தாக்க முற்படவில்லை. அடிபட்டு ஒரு குழு வீழ்கிறது. அடுத்த குழு சிப்பாய்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது. அதுவும் அப்படியே அடிபட்டு வீழ்கிறது. அந்தக் குழுவினரிலும் ஒருவர் கூடத் திரும்ப ஆங்கிலேயர்களைத் தாக்க முனையவில்லை. மூன்றாவது குழு முன்னேறுகிறது. ஆங்கிலேய சிப்பாய்கள் அவர்களை அடிக்க முடியாமல் விக்கித்து நிற்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே!
இந்த நிகழ்ச்சியை மெய்சிலிர்க்கப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் அதைப் புகைப்படம் எடுத்து ஒரு அதிசய செய்தியாக தங்கள் நாட்டில் வெளியிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி உலகின் எந்த மூலையிலும் நடந்ததில்லை என்றும் சத்யாகிரகம் முன் அடக்குமுறை பலமிழந்து போனதைத் தங்கள் கண்களால் காண முடிந்தது என்றும் எழுதினார்கள். அத்தனை பெரிய கூட்டத்தினர் சாத்வீக முறையில் போராடிய விதத்தை நேரில் கண்டிராவிட்டால் தங்களாலேயே இந்தச் செய்தியை நம்ப முடிந்திருக்காது என்று எழுதினார்கள்.
வெறுமனே அந்த செய்தியைப் படிக்காமல் அந்த சுதந்திர போராட்ட வீரர்கள் நிலையில் நம்மை இருத்திப் பார்த்தால் தான் அந்த நிகழ்வின் மகத்துவம் புரியும். பல அடிகள் வாங்கி காயமடைந்த பின்னும் அங்கிருந்து ஓடாமல், திருப்பித் தாக்கவும் முற்படாத அத்தனை போராட்ட வீரர்களும் மகாத்மா காந்தியின் சத்யாகிரகத்தைப் படித்தோ, பிரசங்கங்களைக் கேட்டோ அப்படி உருவானவர்கள் அல்ல. மகாத்மா காந்தியின் நிஜ வாழ்க்கையில் சத்யாகிரகத்தைக் கடைபிடித்ததை முன்னுதாரணமாக நேரில் கண்டு உருவானவர்கள் அவர்கள். அதனால் தான் அறிவுபூர்வமாக அவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ, இதயபூர்வமாக அவர்களால் அதை ஏற்று பின்பற்ற முடிந்திருக்கிறது. அறிவுபூர்வமாக மட்டும் புரிந்திருந்தால் வாங்கிய முதல் அடியிலேயே புரிந்தது காணாமல் போய் ஓட்டமோ, பதில் தாக்குதலோ நடந்திருக்கும். கலவரம் வெடித்திருக்கும்.
எனவே பாமரனிடம் பக்கம் பக்கமாகப் பேசாமல் வாழ்ந்து காட்டு, புரிந்து கொள்வான் என்கிற இந்த வகை உபதேசம் மிகவும் பொருள் பொதிந்தது. இன்றைய அரசியல், ஆன்மிக, சமூகத் தலைவர்களுக்கு எட்ட வேண்டிய உபதேசம் இது. இன்று வாய் கிழியப் பேசும் தலைவர்களும், அறிவுஜீவிகளும் பெருகி விட்டார்கள். முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டும் மனிதர்களைப் பார்ப்பது தான் அரிதாக இருக்கிறது.
அப்படி கஷ்டமான காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டால் உடனே ஏற்படுவது ஆத்ம திருப்தி. ஆனால் சிறிது ஏமாந்தால் கூட இன்னொன்றும் கூடவே தலையைத் தூக்கி நிற்கும். அது தான் கர்வம். 'என்னால் தானே இப்படி முடிந்தது' என்கிற எண்ணம் வந்து விட்டால், கர்மயோகம் அங்கு காணாமல் போய் விடும். 'நான்' என்கிற அகங்காரத்தை மேலும் வளர்க்கும் எண்ணம் தான் மேலோங்கும். பொது நலன் அமுங்கி விடும்.
எனவே தான் உடனடியாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்: "இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் எல்லா தொழில்களும் நடைபெறுகின்றன. ஆணவத்தால் மதி மயங்கியவனே தான் செய்ததாக நினைக்கின்றான்.

தோள்வலி படைத்தவனே! இயற்கையின் குணத்தையும், அதில் தன் செய்கையையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவனே 'எல்லாம் இயற்கையின் இயக்கமே' என்று பற்றில்லாமல் இருப்பான்."
எல்லாமே இயற்கையின் வசதிகளாலும் தூண்டுதலாலும் தான் நடக்கின்றன. எந்த ஒரு உயர்ந்த காரியத்திற்கும் இயற்கை எதிராக இருந்தால் அது கண்டிப்பாக நடக்க முடியாது. ஒவ்வொரு பெருங்காரியத்தையும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு நிலையிலும் இறைவனின் ஆசிர்வாதம் அதற்கு இருந்திருப்பதை உணரலாம். எத்தனையோ அனுகூலமான விஷயங்கள் பல பாகங்களில் இருந்தும் வந்திருப்பது புரிய வரும். எதிரான விஷயங்கள் பலமிழந்து போக வைக்கப் பட்டிருப்பதையும் உணரலாம். எனவே தான் மகான்கள் "எல்லாம் அவன் செயல்" என்று சுருக்கமாகச் சொல்லி முடித்து விட்டார்கள்.
அடுத்த ஒரு சுலோகத்தில் கர்மயோகத்தை அடக்கிச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்: "உள்ளே இருக்கும் ஆன்மாவிடம் மனத்தை நிலை நிறுத்தி உன்னுடைய எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து விடு. பலனைப் பற்றிய கவலை இல்லாமலும் 'எனது' என்ற உணர்வின்றியும் மன வேதனையை உதறித் தள்ளி போர் செய்"
செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்ற தைரியம் தானாக வந்து விடும். பலனைக் குறித்த கவலையோ, கலக்கமோ, வேதனையோ தானாக விலகி விடும். தான் செய்கின்ற ஒவ்வொன்றையும் அப்படி அர்ப்பணிக்க முடிந்தவன் எல்லா அலைகளாலும் தொட முடியாத உறுதியான உயரமான பாறையிலே நிற்பவனைப் போன்றவன் ஆகிறான்.
இதே கருத்து குரானிலும் சொல்லப்பட்டிருக்கிறது. "யாராக இருந்தாலும் நல்ல காரியத்தைச் செய்கையில் தனது நோக்கத்தை அல்லாவிடம் அர்ப்பணம் செய்து விட வேண்டும். அவ்விதம் செய்பவன் அல்லாவின் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டவனாகிறான்." (குரான் 31.22)
எல்லா மதங்களிலும் இது போன்ற கருத்துகளை நாம் காண முடியும். இப்படி பற்றில்லாமலும், கர்வம் இல்லாமலும், இறைவனுக்கு அர்ப்பணித்துச் செய்கின்ற உயர்ந்த செயல்களாலேயே மனிதகுல மேம்பாடு சாத்தியமாகும்.
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம் - கீதை காட்டும் பாதை 11 : முன்மாதிரி யார்?

கீதை காட்டும் பாதை 11 : முன்மாதிரி யார்?

கீதை காட்டும் பாதை 11 : முன்மாதிரி யார்?

என்.கணேசன்



செயல்படாமல் இருக்க முடியாத தன்மையை உடைய அர்ஜுனனுக்கு கர்ம யோகம் தான் சிறந்த வழி என்றும் அதிலும் செயலின் நோக்கமும், பாவனையும் மிக முக்கியம் என்றும் உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.
"சிறந்த மனிதன் என்ன செய்கிறானோ அதையே தான் மற்றவர்களும் செய்வார்கள். அவன் காட்டும் உதாரணத்தையே உலகம் பின்பற்றுகிறது.
பார்த்தா! மூன்று உலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை எதுவுமே இல்லை. நான் அடைய வேண்டியது என்று ஒன்று இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை. அப்படியிருந்தும் கூட நான் எப்போதும் செயல் புரிந்தவனாகவே இருக்கிறேன்.
நான் தூக்கமின்றி செயலில் ஈடுபடாவிட்டால் மனிதர்கள் ஒவ்வொரு வழியிலும் என்னைப் பின்பற்றி தொழில் செய்யாதிருந்து விடுவார்கள்."
யாரை மிக உயர்வாக நினைக்கிறார்களோ, அவர் செய்வதைப் பின்பற்றித் தானும் அப்படியே செய்ய முற்படுகிற தன்மை மனிதர்களுக்கு இருக்கிறது. எனவே சிறந்த முன்மாதிரிகள் இருப்பது ஒட்டு மொத்த சமுதாயமே சிறப்படைய ஒரு உந்துசக்தி என்பது எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உண்மை.
இக்காலத்தில் நடக்கும் எத்தனையோ சீரழிவுகளுக்கு நமக்கிடையே நல்ல முன்மாதிரிகள் மிகவும் குறைவு என்பதும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று வாய் நிறையப் பேசுபவர்கள் அதிக அளவில் இருந்தாலும், அதன்படி வாழ்ந்து காட்டி மனதில் பதிய வைக்கிற மனிதர்கள் இக்காலத்தில் மிக மிகக் குறைவே அல்லவா?
அவதார புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணருக்கு செய்ய வேண்டிய கடமையோ, அதன் மூலம் அடைய வேண்டிய நன்மைகளோ இந்த உலகில் இல்லாவிட்டாலும் சும்மா இருந்து ஒரு மோசமான முன்னுதாரணமாக இருந்து விடாமல் கர்ம யோகியாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
மகாபாரதப் போரில் ஆயுதம் ஏந்துவதில்லை என்ற கொள்கையில் இருந்த ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனிற்கு சாரதியாக இருக்க ஒத்துக் கொள்கிறார். பரம்பொருளானவர் பார்த்தனுக்கு சாரதி அல்லது தேரோட்டியாக இருப்பதா என்று கௌரவம் பார்க்கவில்லை. தொழில் எதுவாக இருந்தாலும் அதில் பெருமை, சிறுமை என்பதில்லை என்று அறிவுறுத்தும் கண்ணன், தன் விஷயத்திலும் அதைக் கடைபிடிக்கத் தயங்கவில்லை.
அந்தக் காலத்தில் சாரதி என்பவனுடைய கடமைகள் எளிதானதாக இல்லை என்பதை இந்தக் கட்டத்தில் நாம் நினைவில் கொள்வது முக்கியம். தேரில் போர் புரியும் வீரன் யுத்தம் ஆரம்பிக்கையில் தேர் ஏறி அது முடிந்த பின் விட்டு விட்டுப் போவது போல சாரதி இருந்து விட முடியாது. அதிகாலையில் குதிரையைக் குளிப்பாட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது ஒரு சாரதியின் வேலை. அதே போல மாலை போர் முடிந்த பின்னும் குதிரைக்குத் தண்ணீர் காட்டி, கொள்ளு கொடுத்து, அதன் உடலில் உள்ள உண்ணிகளை அகற்றி விட்டு அதை இளைப்பாற வைப்பது வரை சாரதியின் வேலை தொடர்கிறது.
இத்தனையும் ஸ்ரீகிருஷ்ணர் செய்தார் என்பது வியாசரின் மகாபாரதம் முழுமையாகப் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். தன் பட்டுப் பீதாம்பரத்தின் நுனியில் கொள்ளு எடுத்துக் கொண்டு போய் குதிரைகளுக்குக் கொடுக்கும் கண்ணனின் செயல்களை வர்ணிப்பதில் வியாசருக்கு சலிப்பே இல்லை.
இதெல்லாம் ஒரு காரணத்தின் பொருட்டே அக்காலத்தில் செய்யப்பட்டது. சாரதிக்கும், குதிரைக்கும் இடையே மிக நெருங்கிய அன்பு இருந்தால் தான் யுத்தகளத்தில் சாரதியின் எல்லாக் கட்டளைகளையும் குதிரை உற்சாகமாக நிறைவேற்றும். அந்த நெருக்கத்தை ஏற்படுத்தத் தான் குதிரைக்குத் தேவையான அத்தனை வேலைகளையும் சாரதி செய்கிறான். அதனுடன் இருக்கும் நேரத்தை அதிக அளவில் வைத்துக் கொள்கிறான். யுத்தகளத்தில் குதிரை சாரதி இழுத்த இழுப்பிற்கு இயங்காவிட்டால் தேரில் இருப்பவன் தோற்பது உறுதி. எனவே சாரதி என்ற வேலையை ஏற்றுக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் அதை மிகவும் கச்சிதமாக எந்த அருவருப்பும் கொள்ளாமல் ஆனந்தமாக அதை ஆத்மார்த்தமாகச் செய்தார் என்பதை மகாபாரதம் சொல்கிறது.
அதே போல தேரில் இருந்து போர் புரியும் வீரன் எந்தப் பக்கம் தேரைத் திருப்ப வேண்டும் என்று வாய்ச் சொல்லால் சொல்ல பல நேரங்களில் முடியாது. யுத்த களத்தின் ஆரவாரத்தில் அவன் சொல்வது சாரதி காதில் சரியாக பல சமயங்களில் விழாது. எனவே எந்தப்பக்கம் போக வேண்டும் என்பதை வீரன் தன் சாரதியின் தோளை மிதித்து தான் சமிக்ஞை செய்வான். வலது தோளை மிதித்தால் வலது புறம் செல்ல வேண்டும், இடது தோளை மிதித்தால் இடது புறம் செல்ல வேண்டும்.
இறை அவதாரமான தான் அர்ஜுனன் காலால் மிதிபடுவது கேவலமானது என்று நினைக்காத ஸ்ரீகிருஷ்ணர் மகாபாரதப் போரின் பதினெட்டு நாள்களிலும் அர்ஜுனனின் கால்மிதிகளை வாங்கிக் கொண்டு சாரதி வேலை பார்த்திருக்கிறார் என்பதையும் நினைத்துப் பார்த்தால் தான் கண்ணன் கர்மயோகியாய் இருந்ததன் பெருமை விளங்கும்.
அது மட்டுமல்ல ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தை எந்த அளவு போற்றினார் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். மஹாராஷ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் புண்டலீகன் என்ற கிருஷ்ணபக்தன் தன் வயதான பெற்றோருக்கு எல்லா விதமான சேவைகளையும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். ஓரிரு நாள் சேவை செய்வது எளிது. ஆனால் பல காலம் தொடர்ந்து அப்படி சேவை செய்வது என்பது உண்மையில் மகத்தான விஷயமே.
தன் பக்தனின் சேவையை மெச்சி விட்டலன் என்ற வடிவில் ருக்மிணி சகிதம் புண்டலீகன் முன்பு காட்சியளித்தார் ஸ்ரீகிருஷ்ணர். அவர் வந்த போது தாய் தந்தையரின் உடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தான் புண்டலீகன். தான் வணங்கும் தெய்வத்தை நேரிலேயே காணும் பாக்கியம் கிடைத்த போதும் அந்த வேலையைக் கை விட்டு கடவுளை வணங்க அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் அவன் துணி துவைத்த அழுக்கு நீர் பகவானின் காலைத் தொடுவதையும் விரும்பவில்லை.
"என் பெற்றோரின் வேலையில் ஈடுபட்டிருப்பதால் தங்களை உடனடியாக கவனிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இறைவனே என்னை மன்னியுங்கள். நான் வேலையை முடிக்கும் வரையில் இந்த செங்கல்லில் நில்லுங்கள்" என்று கூறிய புண்டலீகன், விட்டலனும் ருக்மணியும் அழுக்கு நீர் கால்களில் படாமல் நிற்க ஒரு செங்கலையும் அவர்கள் பக்கம் தள்ளி விடுகிறான்.
துகாராம் இதை மராத்திய மொழியில் அழகாக வியந்து பாடுவார்:
"என்ன பைத்தியக்கார அன்பிது
விட்டலனை நிறுத்தி வைத்ததே
என்ன முரட்டுத் துணிவிது
விட்டலன் நிற்கக் கல்லைக் காட்டியதே"
தன் பக்தனின் கர்ம சிரத்தையை மெச்சிய இறைவன் அங்கேயே ருக்மிணியுடன் நிரந்தரமாக சிலையாக நின்று விடுகிறார். இன்றும் பண்டரிபுரத்தில் இறை விக்கிரகம் ஒரு செங்கல்லில் நிற்பதாகவே இருக்கிறது. தன்னைவிட அதிகமான முக்கியத்துவத்தை தன் கடமைக்குக் கொடுத்த பக்தனை மெச்ச முடிந்த இறைவனை நீங்கள் வேறெங்கே பார்க்க முடியும்?
இறைவன் ஒரு உதாரணமாக இருப்பதைக் குறிக்கும் வாசகம் பைபிளிலும் வருகிறது. "என் நுகத்தடியை நீங்கள் வாங்கிக் கொண்டு என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். என் நுகத்தடியைத் தூக்குவது எளிது. என் சுமை பளுவாக இல்லை"
பற்றுதலை விட்டு விட்டால் உழைப்பாகிய நுகத்தடியை சுமப்பது எளிதாகிறது என்று கிறிஸ்துவமும் இந்த வாசகம் மூலம் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் சுமை என்பது எதிர்பார்ப்பாலும், விளைவின் மீது வைக்கும் அதீதப் பற்றினாலும் ஏற்படுகிறது. கடமையை பலன் எதிர்பாராமல் செய்யும் போது அது ஏசுநாதர் சொன்னது போல மிக எளிமையாகிறது.
இனி ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை - 10 : செயலில் பாவனை மிக முக்கியம்!

கீதை காட்டும் பாதை - 10 : செயலில் பாவனை மிக முக்கியம்!

கீதை காட்டும் பாதை - 10 : செயலில் பாவனை மிக முக்கியம்!

- என்.கணேசன்
ஸ்ரீகிருஷ்ணர் இது வரையில் சொன்னதையெல்லாம் கேட்ட பிறகு அர்ஜுனனுக்கு அவர் பற்றற்ற நிலையையே உண்மையான அறிவு என்று சொல்வது புரிந்தது. உடனே அவன் "செயலைக் காட்டிலும் அந்த அறிவே சிறந்தது என்றால் இந்தக் கொடுமையான காரியத்தில் என்னை ஏன் புகுத்துகிறாய்? புதிராகப் பேசி என்னைக் குழப்பாமல் எதைச் செய்தால் எனக்கு மோட்சம் கிடைக்குமோ அந்த ஒரு வழியை மாத்திரம் எனக்குச் சொல்" என்று பொறுமையிழந்து சொல்கிறான்.
வாழ்க்கையின் சிக்கலான கேள்விகளுக்கு எளிமையான ஓரிரு வார்த்தைகளில் பதில் கிடைத்தால் தேவலை என்று தோன்றுவது மனிதனுக்கு இயல்பே. அர்ஜுனனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஓரிரு வார்த்தைகள் பதிலில் வாழ்க்கையின் ரகசியங்கள் முழுமையாக விளங்கி விடுவதில்லை. எனவே ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் மூன்றாம் அத்தியாயமான கர்மயோகத்தில் அர்ஜுனன் கேள்விக்கு விரிவான பதிலை சொல்ல ஆரம்பிக்கிறார்.
"பாவமற்ற அர்ஜுனா! இந்த உலகில் அடைய வேண்டிய இரண்டு நிலைகள் பற்றி உனக்கு கூறியிருக்கிறேன். ஒன்று சாங்கியர்களின் ஞான யோக நிலை, மற்றொன்று யோகிகளின் கர்மயோக நிலை.
ஒருவன் தொழிலே செய்யாமல் இருப்பதால் செயலற்ற நிலையை அடைவதும் இல்லை. இன்னொருவன் துறவியாவதால் ஈடேறுவதுமில்லை.
எந்த மனிதனும் ஒரு கணம் கூட இயங்காமல் இருப்பதில்லை. இயற்கையில் உள்ள குணமே மனிதனைத் தொழில் புரிய வைக்கின்றது."
ஒரு மனிதனால் செயலற்று இருக்க முடியுமா என்றால் முடியாது என்பதே உண்மையான பதில். சும்மா இருப்பது சுகம் என்று தோன்றினாலும் சும்மா இருப்பது சுலபமில்லை. அதை முயன்று பார்த்தவர்களுக்குப் புரியும். வேலை எதுவும் இல்லை என்றால் யாரிடமாவது பேச்சுக் கொடுப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, ஏதாவது வேடிக்கை பார்ப்பது என்று எதிலாவது ஈடுபடுவார்கள். அதையும் மீறி சும்மா இருக்க நேர்ந்தால் கடைசியில் காலையாவது ஆட்டிக் கொண்டிருப்பார்கள். அமைதியாக அமர்ந்திருப்பது அவர்களுக்கு இயலாத காரியமே.
இது புறத்தில் நடக்கும் வேலைகள். மனிதனின் அகத்தில் நடக்கும் வேலைகளுக்கோ ஓய்வே இல்லை. ஆழ்ந்த உறக்க நிலைக்குச் செல்லும் நேரம் தவிர மனதின் அலைதலுக்கு ஒரு அளவே இல்லை. 'கள் குடித்த குரங்குக்கு தேளும் கடித்து பேயும் பிடித்துக் கொண்ட நிலை'யை மனதின் நிலையாக சுவாமி விவேகானந்தர் வர்ணிப்பார். குரங்கின் இயல்பே ஒரு கணம் சும்மா இருக்க முடியாதது. அது கள்ளும் குடித்து, அதைத் தேளும் கடித்து, பேயும் பிடித்தால் அதை விட ஒரு அதிக செயல்களும், குழப்பமும், ஆர்ப்பாட்டமும் உள்ள ஒரு நிலையை ஒருவரால் சித்தரித்து விட முடியாது. அப்படிப்பட்ட நிலையில் தான் பெரும்பாலும் மனித மனம் இருக்கிறது. வெளியே சும்மா இருப்பது போலத் தோன்றினாலும் உள்ளே உள்ள நிலைமை இப்படியாக இருக்கையில் செயலற்ற நிலை என்பது பரிபூரணமாக அமைவது கோடிகளில் ஒருவருக்குத் தான் சாத்தியம்.
உலகில் உள்ள பெரும்பாலான பிரச்னைகள் மனிதனால் சும்மா இருக்க முடியாததாலேயே ஏற்படுகின்றன. செய்ய உருப்படியான வேலைகள் இல்லாதவர்களே சும்மா இருக்க முடியாமல் அடுத்தவர்கள் விஷயங்களில் அனாவசியமாய் தலையிட்டும், செய்யக் கூடாதவற்றை செய்தும் தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு அவரவர் இருந்தார்களேயானால் எத்தனையோ அனாவசியப் பிரச்னைகளும், குழப்பங்களும் குறையும்.
எனவே ஞான மார்க்கம் சிறந்தது என்றாலும் அந்த மார்க்கத்தில் செல்வது அவ்வளவு சுலபமில்லை என்று ஸ்ரீகிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார். ஆரம்பத்தில் துறவியாகப் போவது மேல் என்ற முடிவுக்கு அர்ஜுனன் வந்ததல்லவா. அது சொன்ன அளவுக்கு கடைபிடிப்பது சுலபமில்லை என்று புரிய வைக்கிறார்.
மனிதனின் இயற்கையாக உள்ள குணங்கள் பண்பட்ட அறிவால் மாறினால் ஒழிய அவை தன்னிஷ்டப்படி அவனை ஆட்டிப்படைக்கவே செய்யும். வெளித்தோற்றத்தை மாற்றிக் கொள்வதால் எந்த உண்மையான மாற்றமும் ஒருவரிடத்தில் உண்டாகி விடப்போவதில்லை.
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.. "கர்மேந்திரியங்களை அடக்கும் ஒருவன் புலன்களுக்கான சாதனங்களை மனதில் சிந்தித்த வண்ணம் இருப்பானாயின் அத்தகைய மூடனை ஒரு மோசக்காரன் என்றே கூற வேண்டும்."
போலித் துறவிகள் இன்றைய சமூகத்தில் மலிய இதுவே காரணம். தோற்றங்களை மாற்றத் தெரிந்த அவர்களுக்கு தங்கள் சிந்தனைகளையும், எண்ணப்போக்கையும் மாற்றத் தெரியவில்லை என்பதே உண்மை. அவர்களில் சிலரது ஆரம்ப நோக்கம் உயர்வாகவே இருந்திருக்கலாம்.
ஆனால் அந்த நோக்கத்தின் பிரதிபலிப்பாகவே எண்ணங்களும் வாழ்க்கை முறையும் இருந்தால் மட்டுமே அவர்களால் தெய்வீக நிலையை அடைய முடியும். இல்லா விட்டால் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் முட்டாள்களாகவே இருந்து விட நேரிடும். ஸ்ரீகிருஷ்ணர் அவர்களை கடுமையாக மூடர்கள், என்றும் மோசக்காரர்கள் என்றும் வர்ணிக்கிறார்.
இதே கருத்தை திருவள்ளுவரும் கூறுகிறார்.
"ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கா
பேதையின் பேதையார் இல்."
உயர்ந்த புனித நூல்களைப் படித்துணர்ந்தும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லியும் அதன்படி தான் அடங்கி நடக்காமல் இருப்பவனைப் போன்ற முட்டாள்களில் மோசமான முட்டாள் யாரும் இருக்க முடியாது என்கிறார் வள்ளுவர். அறியாதவன் தறிகெட்டு நடப்பதில் பெரிய அதிசயமில்லை. ஆனால் அறிந்தவன் அப்படி நடந்தால் அறிவு இருந்தும் அது அவனுக்குப் பயன்படாமல் போவது பரிதாபமே அல்லவா?
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார், "உனக்கு இடப்பட்டுள்ள கடமையை நீ செய். செயலற்று இருப்பதை விடச் செயல் மேலானது. செயலற்றிருந்தால் உடம்பே உனக்கு பாரமாய் போய் விடும்.
பற்றின்றி செய்யப்படும் தொழில்கள் தவிர மற்ற தொழில்கள் எல்லாம் மனிதனுக்கு விலங்கு. ஆதலால் அர்ஜுனா, பற்றை விட்டு விட்டு எத்தொழிலையும் ஈஸ்வர கடமை எனக் கருதிச் செய்"
மொத்தத்தில் செயலற்று இருப்பது சுலபமல்ல, மனிதனின் இயல்பான குணங்கள் அவனைப் பலவிதங்களில் செயல்படத் தூண்டும் என்பதால் மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்வது மேன்மையானது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். கடமைகளைச் செய்யாதவன் சும்மா இருந்து விடப் போவதில்லை. தேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவான், வீணாய் போவான் என்பதால் கடமைகளையே செய்து கடைத்தேறுவது புத்திசாலித்தனம் என்கிறது கீதை. அதையும் பற்றில்லாமல் இறைவன் விதித்த கடமை என்ற உணர்வுடன் சிறப்பாகச் செய்யவும் கீதை வலியுறுத்துகிறது.
முன்பே விளக்கியது போல பற்றில்லாமல் செய்வது என்றால் வேண்டா வெறுப்பாக செயல்புரிவதல்ல. மாறாக விளைவுகள் குறித்த கவலையோ, பயமோ, அதீத பற்றோ இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன் செயல் புரிவதன் நோக்கம் முக்கியம் என்கிற செய்தியை இங்கே கூடுதலாகச் சொல்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
எந்த ஒரு செயலும் எந்த பாவனையுடன் செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பு அமைகிறது. சாதாரண மனிதன் சுயநலத்தோடு ஒரு செயலைச் செய்வதால் அதன் மதிப்பு அற்பமாகவே இருக்கிறது. கர்மயோகி சுயநலமின்றி செயல்புரிவதால் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்ததாகி விடுகிறது.
டால்ஸ்டாய் கூறுகிறார்... "மக்கள் ஏசுநாதரது தியாகத்தை வெகுவாகப் புகழ்கிறார்கள். ஆனால் உலக வாழ்வில் உள்ள இந்த மக்கள் தினந்தோறும் தம் ரத்தம் சுண்ட எவ்வளவு ஓடியாடி உழைக்கிறார்கள்! இரண்டு கழுதைச் சுமையை முதுகிலே தாங்கிக் கொண்டு வளைய வரும் இந்த மக்களுக்கு ஏசுநாதரை விட எவ்வளவு அதிகக் கஷ்டமும் அவமானமும் ஏற்படுகிறது! இதில் பாதியளவாவது இறைவனுக்காகப் பாடுபடுவார்களேயானால் உண்மையில் இவர்கள் ஏசுவையும் மிஞ்சி விடுவார்களே!."


எனவே எதையும் எவ்வளவு பாடுபட்டு செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த பாவனையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம். வினோபா அழகாகக் கூறுகிறார். "கர்மத்தை ரூபாய் நோட்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள். பாவனை என்ற முத்திரைக்குத் தான் மதிப்பே அன்றி செயல் என்ற காகிதத்துக்கு மதிப்பில்லை."
ஒரு கதையை நீங்கள் படித்திருக்கக் கூடும். மூன்று பேர் ஒரு கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு கல்லுடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வழிப்போக்கன் மூன்று பேரிடமும் என்ன செய்கிறீர்கள் என்று தனித்தனியே கேட்டான். ஒருவன் சொன்னான்.. "கல்லுடைத்துக கொண்டிருக்கிறேன்." இரண்டாமவன் சொன்னான்.. "வயிற்றுப் பிழைப்புக்கு வேலை செய்து கொண்டிருக்கிறேன்." மூன்றாமவன் சொன்னான்.. "கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்." மூவர் செய்வதும் ஒரே வேலை என்றாலும் பாவனைகள் இங்கு வேறு வேறாகத் தான் இருக்கின்றன. மூவருக்குமே கூலி கண்டிப்பாகக் கிடைக்கத் தான் போகிறது என்றாலும் ஒவ்வொருவரும் அந்த வேலையால் அடைகிற நிறைவு ஒரே போல இருக்கப் போவதில்லை அல்லவா?
பாவனை மேன்மையாக இருந்தால் மட்டுமே சிறிய செயலோ, பெரிய செயலோ அதன் மதிப்பும், அதில் கிடைக்கும் நிறைவும் உயர்வாக இருக்கும். ஒவ்வொரு கடமையையும் 'இது இறைவன் எனக்கு விதித்தது. இதை நான் சிறப்பாகச் செய்ய வேண்டும்' என்ற பாவனையுடன் செய்து பாருங்கள். வாழ்க்கையே தெய்வீகமாக மாறி விடும்.
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

Next
கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

- என்.கணேசன்
நிலைத்த மதியுடையவனை விவரிக்கையில் ஸ்ரீகிருஷ்ணர் ஓர் அருமையான உதாரணத்தைச் சொல்லி சாதாரணமான மனிதர்களில் இருந்து எப்படி நிலைத்த மதியுடையவன் வித்தியாசப்படுகிறான் என்பதை விளக்குகிறார்.
"சாதாரணமான ஜீவன்களுக்கு இரவாக இருக்கையில் புலன்களை அடக்கிய மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான். மற்ற எல்லா ஜீவன்களும் விழித்துக் கொண்டிருக்கையில் அவன் உறங்குகின்றான்."
நிலைத்த மதியுடையவனும், ஆசைகளில் அலை மோதும் சாதாரண மதி உடையவனும் விழித்திருக்கும் நேரங்களும், உறங்குகின்ற நேரங்களும் நேர் எதிரானவை. சாதாரணமான மனிதன் உறங்குகையில் தான் கவலைகள், லாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மறந்திருக்கிறான். ஆனால் நிலைத்த மதியுடைய ஞானியோ விழித்திருக்கையிலேயே அவற்றில் எல்லாம் விடுபட்டு அமைதியாக இருக்கிறான். உலக விஷயங்கள், ஆசாபாசங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ மற்றவர்கள் விழித்திருக்க அவன் நிம்மதியாக உறங்குகின்றான்.
சாதாரண மனிதன் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நிலைத்த அறிவையுடையவனுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். அதே போல நிலைத்த அறிவுடையவன் முக்கியம் என்று நினைக்கும் விஷயங்கள் சாதாரண மனிதர்களுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும்.
சாதாரணமான மனிதனுக்கு பணம், பதவி, அதிகாரம், புகழ் எல்லாம் தான் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகவும், வெற்றியாகவும் தோன்றும். அதன் பின்னால் ஓடி ஓடிக் களைத்தாலும், அதனால் எத்தனை பாடு பட்டாலும், அவன் தன் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதில்லை. மாறாக அவனது ஓட்டமும், அவற்றின் மேல் உள்ள ஆசையும் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றன. உறக்கத்தில் மட்டுமே அவன் அதையெல்லாம் மறந்திருக்கிறான். சில சமயங்களில் உறங்கக் கூட மறக்கிறான். அவனது ஆசைகளினால் ஏற்படும் கவலையின் தாக்கத்தில் அவன் உறங்கக் கூட முடியாமல் தவிக்கிறான்.
மாறாக நிலைத்த மதியுடையவனுக்கு பணம், பதவி, புகழ், அதிகாரம் ஆகியவை துக்கத்துக்கான தூண்டில்கள் என்றும், எந்த நேரமும் எப்படியும் மாறக்கூடியவை என்றும் தெளிவாகத் தெரிவதனால் அந்தத் தூண்டில்களில் சிக்காமல் விலகி இருக்கிறான். அவன் முக்கியம் என்று உணரும் ஆத்ம சிந்தனைகளும், தர்ம நியாயங்களும் சாதாரண மனிதனுக்கு வெற்றுப் பேச்சுகளாகவும் யதார்த்த வாழ்க்கைக்கு பயனில்லாததாகவும் தோன்றுகின்றன. இப்படி இருவரும் உலகையும், வாழ்க்கையையும் அணுகும் கோணங்கள் நேர் எதிர் கோணங்களாக இருக்கின்றன.
சாதாரணமான மனிதன் புறத்தோற்றத்துக்கு மிக அதிக முக்கியத்துவம் தருகிறான். அடுத்தவர் கண்ணில் அழகாகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும், பாராட்டுக்குரியவனாகவும் தெரிய ஆசைப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சகல முயற்சிகளும், உழைப்புகளும் அந்த நோக்கத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. பிரபலமாக இருந்தால், பலர் பொறாமைப்படுகிற மாதிரி இருந்தால் அதுவே வெற்றி என்று நினைக்கிறான். எத்தனை குறைபாடுகள் தன்னிடம் இருந்தாலும் அவை மற்றவர்களுக்குத் தெரியாத வரை அவன் அதுகுறித்து கவலை கொள்வதில்லை. ஆக அவன் கவனம் புறத்திலேயே இருக்கிறது. அகமோ ஒழுங்குமுறை இல்லாமல் இருக்கிறது. அகத்திற்கும், புறத்துக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக அதிகமாக அவன் அமைதியின்மையும், துக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
ஆனால் நிலைத்த மதியுடையவன் புறத்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவன் தன் வெற்றியை அடுத்தவர்கள் அபிப்பிராயத்தில் பார்ப்பதில்லை. எப்படித் தெரிகிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம் என்று நினைக்கிறான். அவன் மகத்தான செயல்களை செயல்களைச் செய்வதில் நிறைவடைகிறான்.
அந்த செயல்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்து அவன் கவலை கொள்வதில்லை. அவன் அகத்தூய்மையில் அதிக கவனம் வைக்கிறான். அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். அவனுடைய அகத்திற்கும், புறத்துக்கும் இடையே இடைவெளி இருப்பதில்லை. எனவே நடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருப்பதில்லை. உள்ளொன்று புறமொன்று இல்லாததால், அடுத்தவருக்குத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் அவன் உணராததால் அமைதியும் நிறைவும் இயற்கையாகவே அவனுக்கு அமைந்து விடுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உதாரணத்தையும் கூறுகின்றார்.
"நதிகளிலிருந்து எப்போதும் தண்ணீர் கடலில் விழுந்த வண்ணமிருந்தாலும் அது நிரம்பி வழிவதில்லை. அது போல எல்லா ஆசைகளும் யாரிடத்தில் அடங்கி விடுகின்றனவோ அவன் சாந்தியடைகிறான். ஆசைகளில் ஆசை வைப்பவன் மனச்சாந்தி அடைவதேயில்லை."
இதை எட்வின் ஆர்னால்டு அருமையாக விளக்குகிறார். "ஆன்மா மகாசமுத்திரத்தைப் போன்றது. எல்லா பிரதேசங்களில் இருந்தும் தினந்தோறும் வெள்ளத் தண்ணீர் வந்து விழுகின்றது. ஆனால் அதன் காரணமாக சமுத்திரம் ஒருபோதும் ததும்பி வழிவதில்லை. அதன் தண்ணீர் கரையைத் தாண்டிச் செல்வதில்லை. நதிகளிலிருந்து ஏராளமான தண்ணீர் வந்து விழுந்தும் கூட சமுத்திரம் பொங்குவதில்லை. குற்றம் குறையற்ற நிறை மனிதனும் அப்படித்தான். அவன் ஆன்மாவாகிய கடலில் புலன்களின் உலகத்திலிருந்து மாயையாகிய நதிகள் வந்து விழுகின்றன. எனினும் அவன் நிலை குலைவதில்லை."
நிலைகுலைய சந்தர்ப்பங்களே இல்லாத போது அமைதியுடன் இருப்பது பெரிய விஷயமில்லை. அதற்குப் பெரிய தகுதியும் வேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் இருந்தும் அலைக்கழிக்க ஆயிரம் சந்தர்ப்பங்கள் வரும் போது தன்னிலை குலையாமலிருப்பது தான் உண்மையான ஞானம். அது அத்தனை சுலபமில்லை என்பதை நாம் நம் அனுபவங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
உபாசனா போன்ற தியான வகுப்புகளுக்குச் சென்று அங்கு பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர்கள் அந்த பத்து நாட்களில் தங்களில் பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். ரம்மியமான இயற்கை சூழல் உள்ள இடம், தியானத்திற்கேற்ற சுற்றுப்புறம், காலையில் இருந்து இரவு வரை நல்லோர் சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவுகள், நல்ல புத்தகங்கள் போன்ற அனைத்துமே ஒரு பெரிய மாற்றத்தை அந்த பத்து நாட்களில் அடைவது இனி வரப் போகும் நாட்கள் எல்லாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை அவர்களிடம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் வழக்கமான வாழ்க்கை சூழலுக்குத் திரும்பியவுடன் அந்த பத்து நாட்கள் மாற்றம் காணாமல் போய் விடுவதை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். யதார்த்த உரசல்களில் மேலோட்டமாய் அடைந்த அமைதி தேய்ந்து காணாமல் போய் விடுவதில் ஆச்சரியம் இல்லை.
சமுத்திரம் நதி நீரையும், வெள்ள நீரையும் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியாதோ அது போல நாமும் புலன்கள் அனுப்பும் தகவல்களையும், தானாக வந்து சேரும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மறுத்து விலக முடியாது. வந்து சேர்வது அவற்றின் இயல்பு. அவற்றில் நம் அமைதியை இழந்து விடாமல் இருக்கும் ஆழமான ஞானத்தைப் பெற்று உறுதியாக நிற்கும் வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளே வேண்டாம் என்று சொல்வது வாழ்க்கையையே புறக்கணிப்பது போலத் தான். நம் காலுக்கு செருப்பு போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய கல்லும் முள்ளும் இல்லாத பாதைகளே வேண்டும் என்று ஆசைப்படுவது அறிவீனம்.




அகம் மாறும் போது புறம் தானாக மாறி விடுகிறது. நிலைத்த மதி உடையவன் பெரும்பாலானோரைப் பின்பற்றி பந்தயக்குதிரையாய் ஓடி மற்றவர்களை ஜெயிக்க முற்படுவதில்லை. தன்னை ஜெயித்து, தன்னுடைய அறியாமையை ஜெயித்து தெளிவு பெறுகிறான். என்னைப் பாதிக்கிற எந்த சபலத்தையும், சூழ்நிலைகளையும் அனுப்பாதீர்கள் என்று அவன் இறைவனிடம் விண்ணப்பம் செய்வதில்லை. வருவதைத் தெளிவுடன் சந்தித்து பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறான். வருகின்றவற்றை உள்ளே இருந்து ஏதோ ஒன்று வரவேற்றால் அல்லவா அவை உள்ளே நுழையும். வரவேற்பில்லை என்றால் வருபவை தானாக விலகி விடுமல்லவா? எனவே அவன் உலகை மாற்ற முயற்சிப்பதில்லை. அது முடியாத காரியம் என்பதை அவன் அறிவான். மாறாக தன்னை மாற்றிக் கொண்டால் உலகம் தானாக மாறி விடும் என்பதையும் அவன் அறிவான். இப்படித் தான் நிலைத்த மதியுடையவன் நிறையவே சாதிக்கிறான். அதே நேரத்தில் தன் அமைதி நிலை மாறாமல் இருக்கிறான்.
இத்துடன் சாங்கிய யோகம் நிறைவு பெறுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சாங்கிய யோகத்தில் மேலோட்டமாய் சொன்ன கர்மயோகத்தை விரிவாகவே விளக்க முற்படுகிறார். இனி மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தில் பயணிப்போம்
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை 8 : ஆசையிலிருந்து அழிவு வரை..!