Friday, July 22, 2011

சக்சேனா வழக்கில் திடுக் திருப்பம்

சக்சேனா வழக்கில் திடுக் திருப்பம்

ஆவணங்களை அள்ளிப்போனது யார்?
 
த்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்களே, அந்த நிலையில் இருக்கிறார் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. ஒரு வழக்கில் அவர் ஜாமீன் வாங்குவதற்குள் இன்னொரு வழக்கில் அவரைக் கைது செய்வது, விசாரணை செய்வது என்று தொடர்ந்து அடுத்தடுத்து விழுகிறது அடி.
'மாப்பிள்ளை’ பட விநியோகம் தொடர்​பாக, ஹித்தேஷ் ஜபக் என்ற தயாரிப்பாளர் சக்சேனாவுக்கு எதிராக ஒரு புகார் கொடுத்து இருந்தார். இந்த வழக்கில் ஏற்கெனவே சக்சேனாவைக் கைது செய்துவிட்ட போலீ​ஸார், கடந்த 15-ம் தேதி இரண்டு நாள் போலீஸ் காவல் எடுத்து மீண்டும் துருவி இருக்கிறார்கள்.
விசாரணையின் போக்கு குறித்து காக்கிகள் வட்டாரத்தில் கேட்டபோது, ''மாம்பலம் ஏ.சி-யான ஞானசேகர் மேற்பார்வையில், சக்சேனாவிடம் விசாரணை நடந்தது. தொடக்கத்தில் கேள்விகளுக்குச் சரிவரப் பதில் கொடுக்காமல் மௌனமாகவே இருந்தார். தன் அலுவலகத்தில் அமர்ந்தபடி, இதை லைவ்வாகக் கேட்டுக்கொண்டு இருந்த ஓர் உயர் அதிகாரிக்கு செம டென்ஷன். உடனடியாக போனைப் போட்டு, 'சக்சேனா வாங்கிக் குவித்துள்ள நிலங்கள், பங்களாக்கள், வெளி மாநில முதலீடு மற்றும் சினிமாத் தொடர்புகள்...’ என மொத்த விவரங்களையும் புட்டுவைத்து, 'விசாரணைக்கு ஒத்துழைக்கலைன்னா, இதில் இருந்தும் பிரச்னை கிளம்பும்’னு சொல்லுங்க’ என்று சிடுசிடுக்க... அதன் பிறகு சக்சேனாவிடம் இருந்து தடங்கல் இல்லாமல் பதில்கள் வந்தன!'' என்றனர்.
சக்சேனா தரப்பிலோ, ''ஹித்தேஷ் ஜபக்கை சக்சேனா மிரட்டவில்லை. நீண்ட நாட்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடனும், சக்சேனாவுடனும் நெருங்கிய நட்பு பாராட்டிய ஜபக், தான் தயாரித்த பல படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கே தொடர்ந்து கொடுத்து வந்தார். அவருக்கு உரிய லாபம் கிடைக்கவில்லை என்றால், எப்போதோ வியாபாரத் தொடர்புகளை துண்டித்து இருக்கலாமே? சக்சேனாவுக்கு மேலும் நெருக்கடி உண்டாக்கும் நோக்கில், காவல் துறையில் உள்ள சிலரே ஜபக்கை மிரட்டிப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள்!'' என்று ஆதங்கப்பட்டனர்.
இதனிடையே சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்லி ஹார்ட் பீட்டை எகிறவைக்கிறார் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர். ''சில தினங்களுக்கு முன் சக்சேனா வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல் ஒன்று, அங்கு இருந்து பல ஆவணங்களை சத்தம் இன்றி அள்ளிக்கொண்டு போய்விட்டது. 'இதற்கு மூளையாக செயல்பட்டது யார்? அவை என்ன ஆவணங்கள்?’ என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம்!'' என்று பகீர் கிளப்பினார்.
தயாரிப்பாளர் ராஜா நம்மிடம் பேசும்போது, ''நான் தயாரித்த 'வல்லக்கோட்டை’ படத்தை முதலில் 1.25 கோடி ரேட் பேசி, சன் பிக்சர்ஸுக்கு வாங்கிக்கொள்வதாக என்னிடம் உறுதி கூறி இருந்தார் சக்சேனா. ஆனால் கடைசி நேரத்தில், 'அவ்வளவு எல்லாம் தர முடியாது’ என்று பின்வாங்கியதோடு, வேறு யாரும் என் படத்தை வாங்க முடியாதபடி பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டார். இதனால், எனக்குப் பெரும் நெருக்கடி. வேறு வழி இல்லாமல் சக்சேனா சொன்னபடி அவரது உறவினரான சுரேஷ் என்பவருக்கு, வெறும்  70 லட்சத்துக்கு படத்தை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்.  இறுதியில், சுரேஷ் மூலமாக எனது  படம் சன் தரப்புக்கு  1.25 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது!'' என்று கொதித்தார்.
இந்தப் பிரச்னையை வெளியே கொண்டுவந்து மொத்த விவகாரத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த ஒரு சினிமா வி.ஐ.பி,  ''அவருக்கு இவ்ளோ பிரச்னைகள் வரும்னு சத்தியமா நான் நினைச்சுப் பார்க்கலை. எனக்கு வர வேண்டிய  6 கோடி வந்து சேர்ந்தா, அவர் வெளியே வர என்னால் ஆன உதவியை நிச்சயம் செய்றேன்!'' என்று சில நலம் விரும்பிகள் மூலம் இப்போது தூதுவிடுகிறாராம்!
- தி.கோபிவிஜய்
படம்: வீ.நாகமணி
Source - Vikatan Magazine

இடிக்கப்படுமா அழகிரியின் சைபர் பார்க்?


இடிக்கப்படுமா அழகிரியின் சைபர் பார்க்?

மதுரை அதிரடி
ர்ச்சைக்குரிய மூன்று விவ​காரங்களால்... மதுரை மாநக​ராட்சியே குலுங்​குகிறது!
மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், ''கடந்த ஐந்து ஆண்டுகளின் மாநகராட்சி நிர்வாக முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்...'' என தி.மு.க. துணை மேயர் மன்னனின் மனைவி பெயரில் கட்டப்படும் காம்ப்ளெக்ஸ் தொடர்பாகப் பிரச்னையைக் கிளப்​பினார், அ.தி.மு.க-வின் மாமன்றக் குழுத் தலைவர் சாலைமுத்து.
அடுத்து, மாட்டுத்தாவணி அருகே கட்டப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா சைபர் பார்க் கட்டடம் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்டதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரச்னை எழுப்பினார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்றக் குழுத் தலைவர் கணேசன். இந்தப் புகார்கள் குறித்து, 'விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அடுத்ததாக, காமராஜர்புரத்தில் கட்டி முடித்த மண்ணெண்ணெய் பங்க்கைத் திறக்க அனுமதி கேட்டு, தி.மு.க-வின் கிழக்கு மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி பிரச்னை கிளப்பினார். 'அனுமதிக்கப்பட்ட இடத்துக்கும் கூடுதலான இடத்தை ஆக்கிரமித்து உள்ளனர்’ எனச் சொல்லி, அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த விவகாரங்கள் தொடர்பாகப் பேசிய சாலைமுத்து, ''மாநகராட்சியில் அத்தனையும் ஊழல். மன்னன், தன் மனைவி பெயரில் கட்டும் காம்ப்ளெக்ஸில் அனுமதிக்கப்பட்ட பிளானை மீறிட்டாங்க. பாதைக்காக சிந்தாமணி கால்வாயில் பாலம் போட்டு இருக்கிறார் மன்னன். இதை பொதுமக்கள் எதிர்த்ததால், அனுமதியை கேன்சல் செய்தது பொதுப் பணித் துறை. ஆனாலும் அந்தக் கட்டடம் தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. 500 மீன் கடைகளுக்கு சமீபத்தில் அனுமதி கொடுக்கப்பட்டதில், ஒவ்வொரு கடைக்கும் தலா  25 ஆயிரம் வசூல் நடந்தது. கிடைச்ச வரை லாபம்னு தி.மு.க-காரங்க சுருட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு எல்லாம் பதில் சொல்லியே ஆகணும்!'' என்றார்.
மார்க்சிஸ்ட் தலைவர் கணேசன், ''தயா சைபர் பார்க் கட்டடத்துக்கு இடைஞ்சல்னு சம்பைக்குளம் சுடுகாட்டை இடிச்சு அப்புறப்படுத்த நினைச்சாங்க. மக்களைத் திரட்டிப் போராடித் தடுத்தோம். சுடுகாட்டில் இருந்து 150 அடி தூரம் கட்டடம் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி, தயா சைபர் பார்க் கட்டப்பட்டு உள்ளது!'' என்றார்.
இதனிடையே, ''மண்ணெண்ணெய் பங்க் திறக்கக் கோரி மக்களைத் திரட்டி, சாகும் வரைஉண்ணாவிரதப் போராட்டம் இருப்பேன்...'' என குருசாமி அறிவித்தார். உடனே சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்ற மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், ''விதி மீறிக் கட்டப்பட்டதால்தான் பங்க் திறக்க முடியவில்லை. இதுக்குக் காரணம், மண்டலத் தலைவர் குருசாமிதான்!'' என்று மக்களிடம் சொல்ல, ஆடிப்போன குருசாமி, ''என்ன சார், என்னையக் கோத்துவிடுறீங்க?'' என்று கோபமானார்.
அப்போது, ''மண்ணெண்ணெய் வாங்க வந்தப்ப என் 10 பவுன் செயினை அத்துட்டாங்க சார்!'' என்று ஒரு பெண்மணி சொல்ல... ''அதை யார் பறிச்சு இருப்பாங்கன்னு மண்டலத் தலைவருக்குத் தெரியும். அவரையே கேளுங்க!'' என்று கமிஷனர் சொல்ல... டென்ஷனான குருசாமி, ''என்ன சார், இப்பிடிப் பேசுறீங்க?'' என்று எகிறத் தொடங்கினார்.
''உங்க ஏரியா என்பதால், உங்க ஆளுங்கதானே எடுத்து இருப்பாங்க... உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?'' என்று அசராமல் அடித்த கமிஷனர், பொதுமக்கள் நலன் கருதி மண்ணெண்ணெய் மையத்தைத் திறக்க அனுமதி அளித்தார். விதி மீறலைக் கண்காணிக்காத மாநகராட்சி உதவிப் பொறியாளர் காமராஜை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.
நம்மிடம் பேசிய குருசாமி, ''மண்ணெண்ணெய் பங்க்கைத் திறக்கச் சொன்னா, அந்த ஆளு என் மேல சேற்றை வாரி இறைச்சிட்டார். கமிஷனரே இந்த பங்க்கை மூணு முறை இன்ஸ்பெக்ஷன் பண்ணியிருக்கார். அப்பெல்லாம் விதி மீறல் தெரியலையாமா? 'செயினை அறுத்தது யாருன்னு மண்டலத் தலைவரைக் கேளுங்க’ன்னா, நான் என்ன களவாணிப் பயலா? இதுக்காக மான நஷ்ட வழக்குப் போடுவேன்!'' என்று கொதித்தார்.
மன்னன், இலங்கைக்குச் சென்று இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ''காம்ப்ளெக்ஸ் கட்டடப் பிரச்னையில் மன்னன் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறார். நிச்சயம் நியாயம் கிடைக்கும். தயா சைபர் பார்க் விவகாரத்தில் இம்மியளவும் விதிமுறைகள் மீறப்படவில்லை!'' என்றனர்.
கமிஷனர் செபாஸ்டின், ''துணை மேயருக்கு சொந்தமான கட்டடம் பிளானை மீறி இருப்பதால், நோட்டீஸ் கொடுத்தோம். கோர்ட்டில் ஸ்டே வாங்கி இருக்கிறார். அதை உடைக்கும் வேலை நடக்கிறது. தயா சைபர் பார்க்குக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பெர்மிஷன் கொடுத்து உள்ளனர். சுடுகாட்டுக்கு 150 அடி தூரத்தில் கட்டடங்கள் இருக்கக் கூடாதுன்னு ஹெல்த் ஆபீஸர் சொல்கிறார். அந்த வரம்புக்குள் வருகிறதான்னு பார்த்துத்தான் நடவடிக்கை எடுக்கப்படும். மண்ணெண்ணெய் பங்க்கில், அனுமதித்ததைவிட கூடுதலான இடம் ஆக்கிரமித்து உள்ளனர். இதற்குக் காரணம், குருசாமி. அந்த உண்மையைத்தான் சொன்னேன். உடனே, செயினைப் பறிகொடுத்த பெண்ணை என்னிடம் கைகாட்டினார். அதனால், பறிச்சது யாருன்னு எனக்கு எப்படி தெரியும்? மண்டல தலைவர்கிட்டயே கேளுங்கன்னு சொன்னேன்...'' என்றார்.
மாநகராட்சியில் இன்னும் என்னென்ன வண்டவாளங்கள் வெளிவரப் போகுதோ?
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Source - Vikatan Magazine

விக்ரம் அப்பா நம்பர் 1

விக்ரம் அப்பா நம்பர் 1

கி.கார்த்திகேயன்
படங்கள் : என்.விவேக்
 
ள்ளங்கை மடக்கி விரல்களில் முகம்வைத்து, 'நிலா வந்தாச்சு... நிலா வந்தாச்சு!’ என்றபடியே வந்து அமர்கிறாள் சாரா அர்ஜுன். தெய்வத் திருமகளாக மும்பையில் இருந்து முகம் காட்டியிருக்கும் 'நிலா’!
 கண்கள், உதடு, உடல்மொழி... அனைத்திலும் குறும்பு கொப்பளிக்கிறது. அவள் உயரத்தில் பாதிக்கு வளர்ந்திருக்கிறது கூந்தல். முழுதாக ஒரு நிமிடம் அவளை ஒரு இடத்தில் அமரவைப்பது அம்மா சானியாவுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. ''பையா பையா... ('இந்தியில் அண்ணா’) கேட் அண்ட் மவுஸ் விளையாடுவோமா? நான்தான் மவுஸ்... என்னை நீங்க கேட்ச் பண்றீங்களா?''- அம்மா பக்கம்பார்த்துக் கொண்டே ரகசியமாகக் கேட்கிறாள் சாரா! (முடியாது என்று சொல்லவே முடியவில்லை. சில நிமிட 'ஓடிப் பிடிச்சு’ விளையாட்டுக்குப் பிறகுதான் பேட்டி துவங்கியது!)   
''ஐ யம் சாரா அர்ஜுன். ஐ யம் சிக்ஸ் இயர்ஸ் ஓல்டு. மும்பை லே ஃபெஸ் ஸ்கூல்ல ஃப்ர்ஸ்ட் கிளாஸ் படிக்கிறேன். எங்க ஃபேமிலியில், நான், அப்பா அர்ஜுன், தம்பி சுஹான் மூணு பேரும் ஆக்டர்ஸ். அம்மா சானியா, ஒரு டான்ஸர். ஸோ... நாங்க ஒரு ஆர்ட்டிஸ்ட் ஃபேமிலி. 'தெய்வத் திருமகள்’ ஃபிலிம்ல குட்டிப் பாப்பா நிலாவா நடிச்சிருக்குமே ஒரு பாப்பா... அது என் தம்பி சுஹான். நான் ரெண்டு வயசுல இருந்தே, அமீர் கான், ராணி முகர்ஜிகூட எல்லாம் விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். அடுத்து, ஷாரூக் அங்கிளோட நடிக்கப்போறேன். ஏற்கெனவே, விஜய் அண்ணா டைரக்ட் பண்ண விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். 'தெய்வத் திருமகள்’ பிலிம் நல்லா இருந்துச்சா?''
''சூப்பர்ப்! எப்படி இப்படிலாம் நடிச்ச... க்ளைமாக்ஸ்ல அழவெச்சுட்ட தெரியுமா?''
''ஹைய்யோ... நீங்களும் அழுதீங்களா? நானும் தான். அப்பா அழுதுட்டே நடிக்கிறதைப் பார்க்க வும் நானும் அழுதுட்டேன். படத்துல யாராவது அப்பாவை அடிக்கிறப்போலாம் நானும் அழுதுரு வேன். அந்த ஸீன்லாம் பார்க்கவே மாட்டேன். அப்பா ரொம்ப சூப்பரா நடிச்சிருந்தார்ல! ஐ லவ் அப்பா!''
''அப்பாவா... யாரு? விக்ரம் அங்கிளைச் சொல்றியா?''
''ஏய் அடி.... விக்ரம் அங்கிள் இல்லை... அப்பா! அவரை நான் அப்பான்னுதான் சொல்வேன். இன்னொண்ணு தெரியுமா... என் டாடி அர்ஜுனும் நல்லா நடிப்பாரு. ராம்கோபால் வர்மா அங்கிளோட 'கம்பெனி’, 'டி’, 'கயாம்’ படங்களில் நடிச்சிருக்கார். அவரு டாடி... விக்ரம் அப்பா. விக்ரம் அப்பா என்னை எவ்ளோ நல்லாப் பார்த்துக்கிட்டாரு தெரியுமா? எனக்கு மேக்கப் போடுவார், ஸ்நாக்ஸ் ஊட்டுவார், ஷூ லேஸ் கட்டுவார், நிறையக் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்வார். வெரிகுட் அப்பா... ஐ லவ் ஹிம் ஸோ மச்!''
''ஓ... விஜய் அண்ணா, விக்ரம் அப்பா... யாரை ரொம்பப் பிடிக்கும் சாராவுக்கு?''
(மூக்கின் மீது குட்டி விரல் தட்டி யோசிக்கிறாள்) ''ரெண்டு பேருமே பிடிக்குமே... ஏன் இப்படிலாம் கேக்குறீங்க?''
''சும்மா... யாருக்கு நம்பர்-1 ப்ளேஸ் கொடுப்ப?''
''ம்ம்ம்... விக்ரம் அப்பாவுக்கு நம்பர்-1. விஜய் அண்ணாவுக்கு... ம்ம்ம்ம்... விஜய் அண்ணாவுக்கும் நம்பர் 1. சூப்பர்ல!''
''நீ ரொம்ப உஷார் சாரா... அப்போ நம்பர்-2 ப்ளேஸ் யாருக்குக் கொடுப்ப... அனுஷ்காவா, அமலா பாலா?''
''ரெண்டு பேருக்கும் கிடையாது... மார்ட்டினா தீதி!''
''அவங்க யாரு?''
''விஜய் அண்ணா அசிஸ்டென்ட். ரொம்ப லவ்லி தீதி. எனக்கு ஸீன்லாம் சொல்லித் தந்து ரொம்பப் பத்திரமாப் பார்த்துக்கிட்டாங்க!''
''சூப்பர்... படத்துல எந்த ஸீன் நடிக்க ரொம்பக் கஷ்டப்பட்ட நீ?''
''எந்த ஸீனுமே இல்லையே... நானும் என் தம்பி சுஹானும் 'ஒன் டேக் ஓ.கே.’ ஆர்ட்டிஸ்ட் தெரியுமா. க்ளைமாக்ஸ் ஸீன் லாம் ஒரே ஷாட்ல ஓ.கே. பண்ணிட்டேன். பட்... வெரைட்டிக்காக வேற வேற மாதிரி ஷூட் பண்ணாங்க!
எனக்கு நடிக்க ரொம்பப் பிடிக்கும். டூ டேஸ் மேல ஸ்கூல் லீவ் இருந்தா, போர் அடிக்கும். ஆனா, ஸ்கூல்லயும் நான் குட் கேர்ள். எப்பவும் 'டிஸ்டிங்ஷன்’தான் வாங்குவேன். பையா பையா... இப்போ ஹைட் அண்ட் சீக் விளையாடலாமா? ஒன்லி டூ மினிட்ஸ்... ஓ.கே!''
(டூ மினிட்ஸ் 'ஹைட் அண்ட் சீக்’ விளையாட்டுக்குப் பிறகு...)
''தமிழ் கத்துக்கிட்டீங்களா... தமிழ்ல என்னலாம் தெரியும் சாராவுக்கு?''  
''வணக்கம்... உக்காருங்க... காக்கா ஏம்ப்பா கறுப்பா இருக்கு? யானை ஏன் குண்டா இருக்கு? அப்ப நாம நல்லவங்க இல்லையாப்பா? ஷூட்டிங் ஆரம்பிக்கிற ரெண்டு மாசம் முன்னாடியே தமிழ் கத்துக்கிட்டேன். படத்தோட எல்லா டயலாக்கும்பேசுவேன். ஆனா, மீனிங் தெரியாது. ஆங்... ஆங்... ஒண்ணு மறந்துட்டேனே... 'டீ... காபேய்... டீ காபேய்... டீ... டீ... டீ... காபேய்’ இதுவும் தெரியும் எனக்கு.சந்தானம் அங்கிள் நடிச்ச அந்த ஸீன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆ... டீ... காபேய்... டீ... காபேய்!''
(எழுந்து காபிக் கோப்பை தட்டுகளை ஏந்தி இருப்பதுபோலக் கைகளை வைத்துக்கொண்டு  ரயில்வே ஜங்ஷன் நடை நடந்து காட்டுகிறாள்!)
''கமான் சாரா... உக்காரு கொஞ்ச நேரம்... இன்னும் டூ மினிட்ஸ்தான். அனுஷ்கா ஆன்ட்டி என்ன சொன்னாங்க?''
''ஓ வாவ்... என்னா ஒரு பியூட்டி தெரியுமா அவங்க! நான் அடிக்கடி அவங்க கன்னத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிட்டே இருப்பேன். செம சாஃப்ட்டா இருக்கும் அவங்க ஸ்கின்.அவங்களை மாதிரி எனக்கும் ஸ்கின்இருக் கணும்னா, ஆய்லி ஃபுட்ஸ் சாப்பிடக் கூடாதுன்னு டிப்ஸ் கொடுத்தாங்க. ஆனா, நான் இஷ்டத்துக்குச் சாப்பிட்டுட்டு இருப் பேன். திட்டித் திட்டி அப்புறம் அவங்களே எனக்கு டயட்டீஷியன் ஆகிட்டாங்க. நானும் அனுஷ்கா தீதி மாதிரி அழகா வரணும். அப்புறம் நான் அவங்களை மாதிரியே  உயரமா வரணும்!''
(சட்டென்று சோபாவில் இருந்து துள்ளிக் குதித்து குதிகால்களை உயர்த்தி அனுஷ்கா போல நடந்து, நடித்துக் காட்டுகிறாள்!)
''இவ்வளவு சேட்டைக்காரியா இருக்கே... உன்னை யாரும் ஷூட்டிங் ஸ்பாட்ல அதட்ட மாட்டாங்களா?''
''ம்ஹும்... நான்தான் எல்லாரையும் நைஸ் பண்ணிருவேனே! மும்பை ஸ்கூல்ல எனக்கு சப்னா, புஷ்பா, சோனியான்னு மூணு மிஸ் இருக்காங்க. அவங்களை நான் விக்ரம் அப்பா, விஜய் அண்ணா, கேமரா மேன் நீரவ் ஷா அங்கிளுக்கு இன்ட்ரோ பண்ணிக் கொடுக்குறேன்னு சொல்லிட்டேன். அதனால, நான் என்ன சேட்டை பண்ணாலும் திட்ட மாட்டாங்க. ஆனா, அந்த தியாகராஜன்தான் என்னைப் பயமுறுத்திட்டே இருப்பார். அவர்தான் நிஜமாவே பெரிய டைனோசர். இல்லை இல்லை, பெரிய அனகோண்டா!''         
''யார் தியாகராஜன்..?''
''படத்துல அப்பாவுக்கு ஃப்ரெண்டா ரொம்ப ஹைட்டா ஒரு அங்கிள் நடிச்சி இருப்பாரே... அவர்தான். ரொம்பப் பய முறுத்திட்டே இருப்பாரு. பேட் பாய்!''
''சாராவுக்கு வேற என்ன பிடிக்கும்?''
''சாக்லேட் பிடிக்காது, ஐஸ்க்ரீம் பிடிக்கும். கேம்ஸ் பிடிக்கும், டி.வி. பிடிக்காது. அமீர் கான் பிடிக்கும். சல்மான் கான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அப்புறம், இப்போலாம் நிலா பிடிக்குது. மும்பையில இருந்து ஃப்ளைட்ல வந்தப்போ நிலாவும் என் கூடவே வந்தது. நான் அதுகூட பேசிட்டே வந்தேன். வீட்ல எனக்குச் செல்லப் பேரு முன்னி. அப்டின்னா, ரொம்பக் குட்டின்னு அர்த்தம். நிலாவும் என்னை அப்படித்தான் கூப்பிட்டது. ஐ லவ் நிலா. ஓ.கே... போதும் பையா... போலீஸ் தீவ்ஸ் விளையாடலாமா... நான்தான் தீஃப். நீங்களும் சுஹானும் போலீஸ். என்னை கேட்ச் பண்ணுங்க பார்ப்போம்!''
கால் முளைத்து தத்தித் தாவி ஓடுகிறது நிலா!
Source - Vikatan Magazine

Thursday, July 21, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள்!

ரொமான்ஸ் ரகசியங்கள்!

 அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்:மணியம் செல்வன்
'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' (A smooth sea, never made a skillful sailor) என்பார்கள். அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி - மழை மிரட்டிப் பார்க்கும் கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்... அவர் அனுபவம் மிக்க திறமையாளராக ஆகிவிடுவார்.
ஆண் - பெண் மண வாழ்க்கையும் அப்படித்தான். திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும்போது இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வரும். அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்.
தொடக்க நிலையில் வரும் சிறுசிறு தடைகளை(Hiccup)வெற்றிகரமாக தாண்டிவிட்டால், அதன் பிறகு சுவையான வாழ்க்கை காத்திருக்கிறது. அதேநேரம் அந்த இனிய உறவை வாழ்நாள் முழுவதும் வெற்றிகரமாக தொடர்ந்து நடத்திச் செல்ல சில புரிதல்களும் தேவை. அதன் ஃபார்முலாக்களை ஒரு உதாரண தம்பதியின் மூலம் சொல்கிறேன்.
அந்தத் தம்பதி சென்னை புறநகர் பகுதியில் வசிப்பவர்கள். 'வாலன்டரி ரிட்டையர்மென்ட்’ வாங்கியவர்கள். ஒரு மகன், மகள். இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். பணம் காசுக்குக் குறைவில்லை. இவர்கள் மிக ஆச்சர்யமான தம்பதி... ஏதோ நேற்றுதான் திருமணம் ஆனவர்களைப் போல் அத்தனை அந்யோன்மாக, சந்தோஷமாக சிரித்துப் பேசியபடி இருப்பார்கள்.
சென்னையில் நடந்த ஒரு புத்தகக் கண்காட்சி விழாவில் அந்தத் தம்பதியை தற்செயலாகப் பார்த்தேன். எழுத்தாளர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், பிஸினஸ்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களிடமும் சென்று பேசியபடி இருந்தார்கள். பலரைப் பாராட்டிக் கொண்டும் இருந்ததைப் பார்த்தேன். குறிப்பாக, ஓர் இளம் சினிமா கவிஞரிடம் அவர் எழுதிய பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டி அவர்கள் பாராட்டியதைக் கவனித்தேன். கவிஞரும் மிக உற்சாகமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
எனக்கு அவர்கள் மேலிருந்த ஈடுபாடு இன்னும் அடர்த்தியாக, ஒரு கட்டத்தில் தனியாக இருந்த அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனே கை கொடுத்து, 'ஃப்ரெண்ட்லி' ஆகிவிட்டார்கள்.
'கல்யாணம் ஆனதில்இருந்து இப்படித்தான் அந்யோன்யமாக இருக்கிறீர்களா? சண்டையே வருவதில்லையா?'' என்றேன்.
'அதை ஏன் கேட்கிறீர்கள்? கல்யாணம் ஆன புதிதில் தினமும் சண்டைதான். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டைகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்று ஒரு கட்டத்தில் பேசிக்கொண்டோம். சில சிம்பிள் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், புரிதல்கள் என்று அட்டவணை போட்டுக் கொண்டோம். அதன்படி நடந்து கொண்டதில் நாளுக்கு நாள் எங்களுக்கு அன்பு கூடியது!' என்றார் கணவர்.
'ஆச்சர்யமாக இருக்கிறதே... இப்படி பேசி வைத்துக் கொண்டுகூட வாழ முடியுமா?' என்றேன்.
'ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வாருங்கள்... நல்ல விருந்து சாப்பிட்டு விட்டுப் பேசலாம்' என்று அன்புடன் அழைத்தார் அப்பெண்மணி. அடுத்த ஞாயிறே அவர்களின் வீட்டில் ஆஜரான நான், அங்கிருந்த சில மணி நேரங்களிலேயே அவர்களுடைய 'சக்சஸ் ஃபார்முலா'வின் பல விதிகள் எனக்குப் புரிந்துவிட்டன.
இருவரும் ஒருவரின் மீது ஒருவர் கடுஞ்சொற்கள் வீசுவதில்லை. தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள். இவர் இன்ன வேலையைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. என்னிடம் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் உள்ளே காபி தயாரித்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் இருக்கும் மகளிடம் போனில் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் வீட்டைக் கூட்டிக் கொண்டிருந்தார். சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை மனைவி கணவனுக்குக் கொடுத்தார். கணவனுக்கு நகம் வெட்டினார். இருவரிடமும் சகஜமான 'தொடுதல்’ இருந்தது. 'இன்றைக்கு இரவு நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம்’ என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் மனைவி.
இருவரும் வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளவில்லை. காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, அரை மணி நேரம் யோகா, நாற்பது நிமிடங்கள் வாக்கிங், அடுத்து பேப்பர். வீட்டு வேலைகள் தொடர்கின்றன. தினமும் புத்தகம் படிக்கும் பழக்கமும் இருவருக்கும் இருந்தது.
இருவருக்குமான அன்பும் ஒருவரை ஒருவர் சார்ந்திருந்ததையும், அது திட்டமிட்டு வளர்க்கப்பட்டிருந்ததையும் அதிசயமாகப் பார்த்தேன். கணவன்- மனைவி இருவரின் உறவும் மேற்பட அவர்களிடமிருந்து நான் அறிந்து கொண்ட சில ஃபார்முலாக்களை, பத்து விதிகளாகச் சுருக்கிச் சொல்கிறேன்...
1. ஒருவரின் மீது ஒருவர் எப்போதும் கடுஞ்சொற்களைப் பேசக் கூடாது.
2. வீட்டு வேலைகளைச் செய்வதில் சமத்துவம் வேண்டும்.
3. சிறிய தவறு செய்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.
4. இருவரில் யார் எந்தத் தவறு செய்தாலும், பெரிதாக்காமல் உடனே மன்னிக்க வேண்டும்.
5. தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டையாக மாற்றிவிடக் கூடாது.
6. வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.
7. யார் மீதும் யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சுதந்திரம் என்பது மிக முக்கியம்.
8. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.
9. வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
10. 'எந்நாளும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும்.
ஆனந்தமான ரொமான்ஸ் வாழ்க்கையின் பத்து அடிப்படை ரகசியங்களாகவே இவை எனக்குத் தோன்றுகின்றன. மனித மனம் என்பது காட்டாறு போன்றது. அதை முறையாகக் கட்டுப்படுத்தத்தான் இதைப் போன்ற பல விதிமுறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.
‘To love and to be loved is the greatest happiness of human existence’எனும் பொன்மொழி... எத்தனை சத்தியம்!
         - நெருக்கம் வளரும்...

Source - Vikatan Magazine

Tuesday, July 19, 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 - அவர்கள் 'சுயம்பு'வாக உருவெடுக்கட்டுமே !

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

அவர்கள் 'சுயம்பு'வாக உருவெடுக்கட்டுமே !
 சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
ஸ்கூலில் இருந்து களைப்பாக வந்த ஷாலினி, அரை மணி நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். பிறகு, ''அம்மா டிரெஸ் மாத்தி விடுங்க'' என்றாள். மாற்றிவிட்ட அம்மா, ''ஷாலு, டிபன் சாப்பிடு, டியூஷனுக்கு நேரமாச்சு'' என்றபடியே ஊட்டிவிட்டார். பாடப் புத்தகங்களை பையில் அடுக்கி, அவளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று, டியூஷனில் விட்டார்.
இரவு மணி ஏழு மணிக்கு திரும்பச் சென்று அழைத்து வந்து, சாப்பாடு ஊட்டிவிட்டு, வாயைத் துடைத்துவிட்டு படுக்க வைத்தார். பக்கத்திலேயே படுத்து, பாட்டுப் பாடி ஷாலினி அயர்ந்து தூங்குகிறாள் என்பதை உறுதி செய்த பின்தான் எழுந்து வந்தார்... கிச்சனுக்கு மீதமிருக்கும் வேலைகளை முடிக்க.
ஷாலினி படிப்பது, எட்டாம் வகுப்பு!
''ஏழாவது, எட்டாவது படிக்கிற என் பையனுக்கும் பொண்ணுக்கும்... இதேமாதிரிதான் நான் பண்றேன். இதுல என்ன தப்பு?'' என்கிற பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தை எதிர்காலத்தில் எந்த சுய விருப்பங்களும், சுய தேடல்களும் இல்லாமல், தன்னம்பிக்கை கொஞ்சமும் இல்லாமல் எல்லாவற்றுக்கும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்த்து இருக்க நீங்கள் விரும்பினால்.... இந்தச் செயல்களைத் தொடருங்கள்.
அப்படியன்றி... மிடுக்கான, தன்னம்பிக்கை நிறைந்த, எந்த அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடியக் குழந்தையாக வளர்க்க விரும்பினால்... குழந்தையே சுயமாக சில வேலைகளைச் செய்வதற்கு அனுமதியுங்கள். அதுதான் குழந்தையின் பண்பை, ஆளுமையை வளர்க்கும் காரணி! அவனுடைய உலகத்தில் அவனே போரிடவும், போட்டியிடவும், வெற்றி பெறவும், தோல்வியை கம்பீரமாக எதிர்கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்; அவனாகவே கற்றுக் கொள்ளவும் அனுமதியுங்கள். அதன் முலம்தான் அவனுடைய பலமும் பலவீனமும் அவனுக்கே புரிய வரும்.
உதாரணமாக, ஓவியப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறாள் உங்கள் ஆசை மகள் என்றால், முதலில் அனுமதியுங்கள். ஒரு விஷயத்தில் பங்கெடுப்பதுதான் முக்கியம். அதில் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இரண்டாம் பட்சம்தான் என்பதை அவளுடைய அனுபவத்தின் வாயிலாகவே கற்றுக் கொள்வதுதான் எந்தச் செயலிலும் தொடர்ந்து போராட வைக்கும். ஒருவேளை உங்கள் மகள் அந்தப் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டால், ''அந்த டீச்சருக்கு கலரிங் சென்ஸே கிடையாது. நீ எவ்வளவு நல்லா பண்ணியிருந்தே...'' என்று நெகட்டிவ் கமென்ட்ஸ் கொடுக்காதீர்கள். இது, தன் இயலாமைக்கு அடுத்தவர் மேல் பழி சொல்லும் குணத்தை குழந்தைக்குக் கற்றுக்கொடுக்கும். அது தீவிரமானால், குறுக்கு வழியில் வெற்றியைப் பெறுவதற்கான சிந்தனையில் ஆழ்ந்துவிடும்.
உங்கள் அணுகுமுறையும் வார்த்தைகளும் நேர்மையாகவும் நேர்மறையாகவும் இருப்பது, உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை கம்பீரமாக மாற்றும் வல்லமை கொண்டது. ''நீ அழகா வரைஞ்சிருந்தேடா... ஆனா, ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கின பொண்ணு கலர் பண்றதுல ஸ்கோர் பண்ணிட்டா. அடுத்த முறை நீயும் கவனமா பண்ணினா கண்டிப்பா பரிசு உனக்குத்தான்'' என்று அவளுடைய ஓவியத்தின் மீதான நேர்மையான விமர்சனம், அவளுக்கு அந்தப் பிழையை உணர வைத்து, அடுத்த முறை திருத்தச் செய்யும்தானே?!
சரி, ஒரு பரிசோதனை. இந்தக் குணங்கள் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா..?
1-3 வயதில் பிடிவாதம் நிறைந்தவளாக, எதற்கெடுத்தாலும் மூச்சைக் கட்டி, அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாளா? தன் விருப்பத்துக்கு எதிராக எது நடந்தாலும் அழுகிற 'சென்ஸிடிவ்’ குழந்தையா?
 3-9 வயதில் உள்ள குழந்தை, வீடியோ கேம்ஸ் வாங்கித் தரவில்லை என்று ஊரே கேட்கும்படி கத்திக் கத்தி அழுது, தரையில் மண்டையைப் போட்டு முட்டிக் கொள்கிறதா, கடித்துத் துன்புறுத்துகிறதா?
 9 வயதுக்கு மேற்பட்ட குழந்தை, மற்றவர்களை அடிப்பது, பொருட்களை உடைப்பது என்றிருக்கிறதா..?
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை, வீட்டில் உள்ளவர்கள் ஒரு வார்த்தை சொன்ன தற்காக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சாப்பிடாமல் அடம் பிடிக்கிறதா?
'ஆமாம்... ஆமாம்!’ என்றால் பயந்து விட வேண்டாம். எப்போதாவது ஒருநாள் என்றால்... அது குழந்தைக்குரிய இயல்பு; நோ பிராப்ளம். எப்போதுமே இப்படித்தான் என்றால்... குழந்தையிடம் பிரச்னை என்று அர்த்தம். அதை தீர்ப்பதற்கான வழிகளை செய்யுங்கள்... அன்போடும் அக்கறையோடும்!
- வளர்ப்போம்...


Source - Vikatan Magazine

கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

கீதை காட்டும் பாதை 9 : நேரெதிர் கோணங்கள்!

- என்.கணேசன்
நிலைத்த மதியுடையவனை விவரிக்கையில் ஸ்ரீகிருஷ்ணர் ஓர் அருமையான உதாரணத்தைச் சொல்லி சாதாரணமான மனிதர்களில் இருந்து எப்படி நிலைத்த மதியுடையவன் வித்தியாசப்படுகிறான் என்பதை விளக்குகிறார்.
"சாதாரணமான ஜீவன்களுக்கு இரவாக இருக்கையில் புலன்களை அடக்கிய மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான். மற்ற எல்லா ஜீவன்களும் விழித்துக் கொண்டிருக்கையில் அவன் உறங்குகின்றான்."
நிலைத்த மதியுடையவனும், ஆசைகளில் அலை மோதும் சாதாரண மதி உடையவனும் விழித்திருக்கும் நேரங்களும், உறங்குகின்ற நேரங்களும் நேர் எதிரானவை. சாதாரணமான மனிதன் உறங்குகையில் தான் கவலைகள், லாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மறந்திருக்கிறான். ஆனால் நிலைத்த மதியுடைய ஞானியோ விழித்திருக்கையிலேயே அவற்றில் எல்லாம் விடுபட்டு அமைதியாக இருக்கிறான். உலக விஷயங்கள், ஆசாபாசங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ மற்றவர்கள் விழித்திருக்க அவன் நிம்மதியாக உறங்குகின்றான்.
சாதாரண மனிதன் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நிலைத்த அறிவையுடையவனுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். அதே போல நிலைத்த அறிவுடையவன் முக்கியம் என்று நினைக்கும் விஷயங்கள் சாதாரண மனிதர்களுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும்.
சாதாரணமான மனிதனுக்கு பணம், பதவி, அதிகாரம், புகழ் எல்லாம் தான் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகவும், வெற்றியாகவும் தோன்றும். அதன் பின்னால் ஓடி ஓடிக் களைத்தாலும், அதனால் எத்தனை பாடு பட்டாலும், அவன் தன் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதில்லை. மாறாக அவனது ஓட்டமும், அவற்றின் மேல் உள்ள ஆசையும் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றன. உறக்கத்தில் மட்டுமே அவன் அதையெல்லாம் மறந்திருக்கிறான். சில சமயங்களில் உறங்கக் கூட மறக்கிறான். அவனது ஆசைகளினால் ஏற்படும் கவலையின் தாக்கத்தில் அவன் உறங்கக் கூட முடியாமல் தவிக்கிறான்.
மாறாக நிலைத்த மதியுடையவனுக்கு பணம், பதவி, புகழ், அதிகாரம் ஆகியவை துக்கத்துக்கான தூண்டில்கள் என்றும், எந்த நேரமும் எப்படியும் மாறக்கூடியவை என்றும் தெளிவாகத் தெரிவதனால் அந்தத் தூண்டில்களில் சிக்காமல் விலகி இருக்கிறான். அவன் முக்கியம் என்று உணரும் ஆத்ம சிந்தனைகளும், தர்ம நியாயங்களும் சாதாரண மனிதனுக்கு வெற்றுப் பேச்சுகளாகவும் யதார்த்த வாழ்க்கைக்கு பயனில்லாததாகவும் தோன்றுகின்றன. இப்படி இருவரும் உலகையும், வாழ்க்கையையும் அணுகும் கோணங்கள் நேர் எதிர் கோணங்களாக இருக்கின்றன.
சாதாரணமான மனிதன் புறத்தோற்றத்துக்கு மிக அதிக முக்கியத்துவம் தருகிறான். அடுத்தவர் கண்ணில் அழகாகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும், பாராட்டுக்குரியவனாகவும் தெரிய ஆசைப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சகல முயற்சிகளும், உழைப்புகளும் அந்த நோக்கத்துக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. பிரபலமாக இருந்தால், பலர் பொறாமைப்படுகிற மாதிரி இருந்தால் அதுவே வெற்றி என்று நினைக்கிறான். எத்தனை குறைபாடுகள் தன்னிடம் இருந்தாலும் அவை மற்றவர்களுக்குத் தெரியாத வரை அவன் அதுகுறித்து கவலை கொள்வதில்லை. ஆக அவன் கவனம் புறத்திலேயே இருக்கிறது. அகமோ ஒழுங்குமுறை இல்லாமல் இருக்கிறது.  அகத்திற்கும், புறத்துக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக அதிகமாக அவன் அமைதியின்மையும், துக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.
ஆனால் நிலைத்த மதியுடையவன் புறத்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவன் தன் வெற்றியை அடுத்தவர்கள் அபிப்பிராயத்தில் பார்ப்பதில்லை. எப்படித் தெரிகிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம் என்று நினைக்கிறான். அவன் மகத்தான செயல்களை செயல்களைச் செய்வதில் நிறைவடைகிறான்.
அந்த செயல்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்து அவன் கவலை கொள்வதில்லை. அவன் அகத்தூய்மையில் அதிக கவனம் வைக்கிறான். அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். அவனுடைய அகத்திற்கும், புறத்துக்கும் இடையே இடைவெளி இருப்பதில்லை. எனவே நடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருப்பதில்லை. உள்ளொன்று புறமொன்று இல்லாததால், அடுத்தவருக்குத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் அவன் உணராததால் அமைதியும் நிறைவும் இயற்கையாகவே அவனுக்கு அமைந்து விடுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உதாரணத்தையும் கூறுகின்றார்.
"நதிகளிலிருந்து எப்போதும் தண்ணீர் கடலில் விழுந்த வண்ணமிருந்தாலும் அது நிரம்பி வழிவதில்லை. அது போல எல்லா ஆசைகளும் யாரிடத்தில் அடங்கி விடுகின்றனவோ அவன் சாந்தியடைகிறான். ஆசைகளில் ஆசை வைப்பவன் மனச்சாந்தி அடைவதேயில்லை."
இதை எட்வின் ஆர்னால்டு அருமையாக விளக்குகிறார். "ஆன்மா மகாசமுத்திரத்தைப் போன்றது. எல்லா பிரதேசங்களில் இருந்தும் தினந்தோறும் வெள்ளத் தண்ணீர் வந்து விழுகின்றது. ஆனால் அதன் காரணமாக சமுத்திரம் ஒருபோதும் ததும்பி வழிவதில்லை. அதன் தண்ணீர் கரையைத் தாண்டிச் செல்வதில்லை. நதிகளிலிருந்து ஏராளமான தண்ணீர் வந்து விழுந்தும் கூட சமுத்திரம் பொங்குவதில்லை. குற்றம் குறையற்ற நிறை மனிதனும் அப்படித்தான். அவன் ஆன்மாவாகிய கடலில் புலன்களின் உலகத்திலிருந்து மாயையாகிய நதிகள் வந்து விழுகின்றன. எனினும் அவன் நிலை குலைவதில்லை."
நிலைகுலைய சந்தர்ப்பங்களே இல்லாத போது அமைதியுடன் இருப்பது பெரிய விஷயமில்லை. அதற்குப் பெரிய தகுதியும் வேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் இருந்தும் அலைக்கழிக்க ஆயிரம் சந்தர்ப்பங்கள் வரும் போது தன்னிலை குலையாமலிருப்பது தான் உண்மையான ஞானம். அது அத்தனை சுலபமில்லை என்பதை நாம் நம் அனுபவங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
உபாசனா போன்ற தியான வகுப்புகளுக்குச் சென்று அங்கு பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர்கள் அந்த பத்து நாட்களில் தங்களில் பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். ரம்மியமான இயற்கை சூழல் உள்ள இடம், தியானத்திற்கேற்ற சுற்றுப்புறம், காலையில் இருந்து இரவு வரை நல்லோர் சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவுகள், நல்ல புத்தகங்கள் போன்ற அனைத்துமே ஒரு பெரிய மாற்றத்தை அந்த பத்து நாட்களில் அடைவது இனி வரப் போகும் நாட்கள் எல்லாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை அவர்களிடம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் வழக்கமான வாழ்க்கை சூழலுக்குத் திரும்பியவுடன் அந்த பத்து நாட்கள் மாற்றம் காணாமல் போய் விடுவதை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். யதார்த்த உரசல்களில் மேலோட்டமாய் அடைந்த அமைதி தேய்ந்து காணாமல் போய் விடுவதில் ஆச்சரியம் இல்லை.
சமுத்திரம் நதி நீரையும், வெள்ள நீரையும் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியாதோ அது போல நாமும் புலன்கள் அனுப்பும் தகவல்களையும், தானாக வந்து சேரும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மறுத்து விலக முடியாது. வந்து சேர்வது அவற்றின் இயல்பு. அவற்றில் நம் அமைதியை இழந்து விடாமல் இருக்கும் ஆழமான ஞானத்தைப் பெற்று உறுதியாக நிற்கும் வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளே வேண்டாம் என்று சொல்வது வாழ்க்கையையே புறக்கணிப்பது போலத் தான். நம் காலுக்கு செருப்பு போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய கல்லும் முள்ளும் இல்லாத பாதைகளே வேண்டும் என்று ஆசைப்படுவது அறிவீனம்.


அகம் மாறும் போது புறம் தானாக மாறி விடுகிறது. நிலைத்த மதி உடையவன் பெரும்பாலானோரைப் பின்பற்றி பந்தயக்குதிரையாய் ஓடி மற்றவர்களை ஜெயிக்க முற்படுவதில்லை. தன்னை ஜெயித்து, தன்னுடைய அறியாமையை ஜெயித்து தெளிவு பெறுகிறான். என்னைப் பாதிக்கிற எந்த சபலத்தையும், சூழ்நிலைகளையும் அனுப்பாதீர்கள் என்று அவன் இறைவனிடம் விண்ணப்பம் செய்வதில்லை. வருவதைத் தெளிவுடன் சந்தித்து பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறான். வருகின்றவற்றை உள்ளே இருந்து ஏதோ ஒன்று வரவேற்றால் அல்லவா அவை உள்ளே நுழையும். வரவேற்பில்லை என்றால் வருபவை தானாக விலகி விடுமல்லவா? எனவே அவன் உலகை மாற்ற முயற்சிப்பதில்லை. அது முடியாத காரியம் என்பதை அவன் அறிவான்.  மாறாக தன்னை மாற்றிக் கொண்டால் உலகம் தானாக மாறி விடும் என்பதையும் அவன் அறிவான். இப்படித் தான் நிலைத்த மதியுடையவன் நிறையவே சாதிக்கிறான். அதே நேரத்தில் தன் அமைதி நிலை மாறாமல் இருக்கிறான்.
இத்துடன் சாங்கிய யோகம் நிறைவு பெறுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சாங்கிய யோகத்தில் மேலோட்டமாய் சொன்ன கர்மயோகத்தை விரிவாகவே விளக்க முற்படுகிறார். இனி மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தில் பயணிப்போம்
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம்: கீதை காட்டும் பாதை 8 : ஆசையிலிருந்து அழிவு வரை..!

Sunday, July 17, 2011

சூடு பிடிக்கும் நித்தி வீடியோஸ்!

சூடு பிடிக்கும் நித்தி வீடியோஸ்!

அது நிஜமா? மார்ஃபிங்கா?
'நித்தியானந்தா - ரஞ்சிதா' என்று ஒரு வீடியோ திடீர் 'ஈவினிங் ஷோ'வாக தொலைக்காட்சியில் வெளியாகி... தமிழக மக்களை மூச்சுத் திணறவைத்தது பழைய பரபரப்பு. ''இந்த வீடியோ ஃபோர்ஜரியாகத் தயாரிக்கப்பட்டது. இதைத் தயாரித்தவர்கள் யார்? இதன் பின்னணி என்ன என்பதை இப்போது சொல்ல மாட்டேன். சொன்னால், என்னுடைய உயிருக்கேகூட அது ஆபத்தாக மாறிவிடும்!'' என்று ஆரம்பத்தில் சொல்லி வந்த நித்தியானந்தா... அதன் பிறகு மெதுமெதுவாக சில 'மோட்டிவ்'களை இலைமறை காயாகச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தார். இப்போதோ ''அது மொத்தமும் மார்ஃபிங்... பின்னால் இருந்தது பிளாக்மெயில் மோட்டிவ்!'' என்ற கோஷத்துடன்
படுஸ்பீடாக சென்னையை வலம் வர ஆரம்பித்துள்ளார். முதல் நாள் நடிகை ரஞ்சிதாவும், மறு நாள் நித்தியானந்தா - கம் - ரஞ்சிதாவுமாக குரு - பக்த சமேதராக சென்னை மீடியாக்களுக்கு கடந்த 13-ம் தேதி 'தரிசனம்’ கொடுத்தார்கள்.
'வீடியோ விவகாரத்துக்குப் பிறகு சென்னை பக்கமே தலைவைத்துப் படுக்காமல் இருந்தவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, சன் குழுமத்துக்கு எதிராகப் புகார் கொடுக்க வைத்ததே ஜெயலலிதா அரசுதான்!’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நித்தியானந்தா தொடர்பான வீடியோ உண்மையானதுதான் என்று கர்நாடக மாநில போலீஸார் சொல்கிறார்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''இது உண்மையானதுதான் என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளோம். இது தொடர்பான வழக்கு வரும்போது, கோர்ட்டில் நிரூபிப்போம். மற்றபடி நித்தியானந்தா சென்னை சென்று மீடியாக்களில் பேசுவதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அதில் பொலிடிக்கல் மோட்டிவ் உள்ளது!'' என்று சொன்னார்.
பெங்களூருவைச் சேர்ந்த தடயவியல் துறையின் முன்னாள் இயக்குநர் சந்திரசேகரிடம் பேசினோம். ''அந்த படுக்கை அறை வீடியோ வெளியானதுமே ஒரு தனியார் டி.வி. சேனல் மூலமாக எனக்கு ஒரு சி.டி. கொடுத்தார்கள். அதை நான் ஆராய்ந்து பார்த்ததில் மார்ஃபிங் செய்யப்பட்டதைப்போலத் தெரியவில்லை. கேமராவை ரகசியமாக ஒரு இடத்தில் ஃபிக்ஸ் செய்துவைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. மார்ஃபிங் என்றால் வெவ்வேறு கேமராக்களில் பதிவான காட்சிகளின் கலவையாக இருக்க வேண்டும். ஆனால், இந்த வீடியோவில் உள்ள காட்சிகளை எடுக்க ஒரே கேமராதான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது!'' என்று உறுதியாகச் சொன்னார்.
அப்படி இருக்க நித்தியானந்தா தரப்பின் வாதம்தான் என்ன?
சென்னை வந்த நடிகை ரஞ்சிதாவை, தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் சந்தித்தோம். ''எனக்கு வாழ்வு கொடுத்து ஆளாக்கியது சென்னைதான். ஆனால், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த மண்ணில் என்னைக் கால் மிதிக்கவிடாமல் செய்துவிட்டார்கள். தப்பு செய்து அதற்காகத் தண்டனை கொடுத்து இருந்தால், கவலைப்பட்டு இருக்க மாட்டேன். ஆனால், செய்யாத தப்புக்கு நான் தண்டனை அனுபவித்தேன். அனுபவித்த எனக்குத்தான் அந்த வலி புரியும். ஒவ்வொரு நாளும் தூக்கம் இல்லாமல் நான் பட்ட வேதனைகள் கொஞ்சம்நஞ்சம் இல்லை...'' என்றவரிடம் கேள்விகள் கேட்டோம்.
''அந்த வீடியோ பற்றி என்னதான் சொல்கிறீர்கள்?''
''ஒரு நாள் திடீர் என்று லெனின் கருப்பன் என்கிற தர்மானந்தா, என்னை சந்திக்க வந்தார். ஆசிரமத்தின் முன்னாள் சீடரான அவர் அந்த வீடியோவை என்னிடம் காட்டினார். பார்த்ததும் அதிர்ந்து​விட்டேன். 'இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லையே... அப்புறம் எப்படி?’ என்று கத்தினேன். 'அது எங்களுக்கும் தெரியும். இது நாங்களே உருவாக்கிய வீடியோ. இதை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், நாங்கள் சொல்​வதை நீ கேட்கணும்!’ என்று சொன்ன லெனின், இந்த வீடி​யோவைக் காட்டி என்னிடம் தவறாக நடந்துகொள்ளவும் முயற்சி செய்தார். நான் அவரைத் திட்டி அனுப்பினேன்.
அதற்குப் பிறகு, 'நாங்கள் நான்கு பேர் சேர்ந்துதான் இதைத் தயாரித்தோம். வீடியோவை சன் டி.வி-யிலும், போட்டோவை நக்கீரன் பத்திரிகையிலும் வெளி​யிடாமல் இருக்க வேண்டும் என்றால், 60 கோடி கொடுக்கணும்’ என அடுத்த மிரட்டல் வந்தது. 'போலியான வீடியோவை வைத்து உங்களால் என்ன பண்ண முடியும்?’ என்று கேட்டேன். 'அது நமக்கு மட்டும்தானே தெரியும். எங்களுடைய நோக்கம் சாமியின் பேரைக் கெடுக்கணும்!’ என்று சொன்னார்கள். நான் எவ்வளவோ பேசிப் பார்த்தேன். அவர்கள் கேட்கும் மன நிலையில் இல்லை.
அடுத்த சில நாட்களில் டி.வி-யிலும், பத்திரிகையிலும் வெளியிட்டு, எங்களை எவ்​வ​ளவு கேவலப்படுத்த முடியு​மோ... அவ்வளவு கேவலப்​படுத்தினார்கள்!''
''அந்த வீடியோவில் அத்தனை விவரமாகவும் துல்லியமாகவும் உள்ள காட்சிகளை 'மார்ஃபிங்' செய்து ஒட்டுவேலையில் காட்டி இருக்க முடியாது என்று சொல்கிறார்களே?''
''அது மார்ஃபிங் செய்யப்​பட்டதுதான்!
அந்த வீடியோ ஒளிபரப்பான அன்று இரவு, 'நீங்க சாமிக்கு எதிராகத்தான் பேட்டி கொடுக்​கணும். அதையும் மீறி ஏதாவது வாய் திறந்தீங்கன்னா, என்ன நடக்கும்னு தெரியாது’ என்று எனக்கு மிரட்டல் வந்தது. உடனே, மிரட்டியவர்கள் மீது புகார் கொடுக்கக் கிளம்பினேன். மறுபடியும் டி.வி. தரப்பில் இருந்து போன் வந்தது. 'மெட்ராஸ் பக்கம் காலெடுத்து வைத்தால், பொய் கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ளுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். நீ வாயே திறக்கக் கூடாது!’ என மிரட்டினார்கள். அந்தச் சூழ்நிலையில் ஆட்சி, அதிகாரம் எல்லாம் அவர்கள் கையில் இருந்தது. அதை மீறி நான் கொடுத்து இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள்.
இப்போது ஆட்சி மாறிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா மேடம், தப்பு செய்தவர்களை உள்ளே தள்ளிக்கொண்டு இருக்கிறார். இந்த சமயத்தில் நாமும் புகார் கொடுத்தால் நீதி கிடைக்கும் என்று நம்பித்தான், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்தேன்.
'சம்பந்தமே இல்லாத என்னை சுவாமியோடு இணைத்து ஒரு வீடியோ தயாரித்து, அதை வெளியிட்ட டி.வி. மீதும், என்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என்று புகார் கொடுத்தேன். சன் குழுமத்தைச் சேர்ந்த சிலரது பெயரையும் என் புகாரில் சொல்லி இருக்கிறேன். 'அவங்க பேரை இப்போது வெளியில் சொன்னால், அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிப் போக வாய்ப்பு இருக்கிறது. அதனால், விசாரணை முடியும் வரை அதை வெளியில் சொல்ல வேண்டாம்’ என போலீஸ் தரப்பில் சொன்னார்கள். அதனால் அதை உங்களிடம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்!'' என்று சொல்கிறார் ரஞ்சிதா.
''அந்த வீடியோ முழுக்கவுமே பொய்க் காட்சி. அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று கூறும் நித்தியானந்தா தரப்பு, தங்கள் பக்தர்களிடம் பணமும் நிலமும் கேட்டு சிலர்  பிளாக்மெயில் செய்தததாகவும் அதில் சிலர் பணம் கொடுத்துவிட்டதாகவும் கூறுவது எப்படி?
நித்தியானந்தா குரூப்பைப் பார்த்தால், தப்பே செய்யாமல் மிரட்டலுக்குப் பணிகிற ரகம் மாதிரியா தெரிகிறது?'' என்று சிலர் கேட்பதற்குத்தான் பதிலே இல்லை!
- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: சு.குமரேசன்
''மிரட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது!''
சென்னை எழும்பூரில் உள்ள மெரினா டவர் ஹோட்டலில் பத்திரிகை யாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் நித்தியானந்தா. அவர் வந்த சில நிமிடங்களில் ரஞ்சிதாவும் ஏக சிரிப்போடு வந்து அமர்ந்தார்.
''தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று நல்லாட்சி நடத்திக்கொண்டு இருக்கும் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தியான பீடத்தின் சார்பாக வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்...'' என ஜெ. புராணத்தோடுதான் பேச்சை ஆரம்பித்தார் நித்தியானந்தா.
''சென்னையில் எங்களது ஆசிரமத்தின் கிளையைத் தொடங்க பக்தர் ஒருவர் நிலம் கொடுப்பதாகச் சொல்லி இருந்தார். அதைக் கைப்பற்ற சன் டி.வி-யை சேர்ந்தவர்கள் முயற்சித்தார்கள். அது முடியாமல் போனது. அந்தக் கோபத்தில் தான் என்னைப் பழிவாங்க மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவை ஒளிபரப்பி அசிங்கப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. வீதிக்கு வீதி அசிங்கமான போஸ்டர்களை ஒட்டினார்கள். பணத்துக்காக அந்த வீடியோவைக் கோடி கோடியாக விற்பனை செய்தார்கள்!'' என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார்.
எக்குத்தப்பான கேள்விகள் சில நிருபர்களிடம் இருந்து வந்தபோது, அதற்கெல் லாம் அசராமல் நித்தியானந்தா தந்த பதில்களைப் பார்த்தால்... அவருக்குப் பின்னாலும் இப்போது பக்காவான அரசியல் பலம் சேர்ந்துவிட்டது என்பது தெளிவாகப் புரிந்தது!  

Source - Vikatan Magazine

ஜெயலலிதாவின் அதிரடியில் இ.டி.ஏ. ஸ்டார்!

ஜெயலலிதாவின் அதிரடியில் இ.டி.ஏ. ஸ்டார்!

விசாரணைக்குள் வருகிறார் சலாவுதீன்!
லைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. முந்தைய தி.மு.க. அரசின் பல திட்டங்களை ஜெயலலிதா தவிடுபொடி ஆக்கினாலும், 'புதிய தலைமை செயலகத்துக்கு விசாரணை கமிஷன், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நிறுத்தம்’ ஆகியவைதான் கூடுதல் அரசியல் அர்த்தத்தோடு பார்க்கப்படுகிறது. காரணம், இந்த இரண்டு திட்டங்களுக்கும் கருணாநிதிக்கு நெருக்கமான சலாவு​தீனின் இ.டி.ஏ. ஸ்டார் ஒப்பந்தம் எடுத்திருந்தது!
இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் வளர்ச்சி!
கீழக்கரையில் வைர வியாபாரம் செய்துவந்த பி.எஸ்.அப்துல் ரஹ்மான், இலங்கை, ஹாங்காங், துபாய் என்று தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்​கினார். மதுரையில் அவரது சேது பிலிம்ஸ் நிறுவனம் 'இதயக் கனி,’ 'உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படங்களைத் தயாரிக்கப் பல வகைகளில் உதவியது. எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தாலும், கருணாநிதி, மூப்பனார் போன்றவர்களோடும் சமமாகப் பழகினார் அப்துல் ரஹ்மான்.
கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம், வள்ளுவர் கோட்டம் போன்றவை அப்துல் ரஹ்மானின் இ.டி.ஏ. நிறுவனம் கட்டியவைதான். இந்த  நிறுவனத்தில், தனது தூரத்து உறவினரான சையத் சலாவுதீனை வேலைக்கு அமர்த்தினார்.
ஆனால், கொஞ்ச காலத்திலேயே அப்துல் ரஹ்மானுக்குப் போட்டியாக 'இ.டி.ஏ. ஸ்டார்’ என்ற புதிய நிறுவனத்தை சலாவூதீன் தொடங்கிவிட்டார். அப்துல் ரஹ்மானைப்போலவே இவரும் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.
கட்டுமானம், சாலைப் பணிகள், ரியல் எஸ்டேட், மின் மற்றும் வணிகத் திட்டங்​கள், கப்பல் போக்குவரத்து, துறைமுக மேலாண்மை, மெட்ரோ ரயில், ஏர்கண்டிஷன் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல்ஸ், மின் இயந்திரவியல் பயன்பாடு என்று பல தொழில்களில் விரிந்துகிடக்கிறது சலாவூதீனின் சாம்ராஜ்யம்.
22 நாடுகளில் 50-க்கும் அதிகமான நிறுவனங்கள் அவர் கண் அசைவில் செயல்படுகின்றன. 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். தமிழகத்தில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், ரஹேஜா டவர்ஸ், கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள புதிய நூலகக் கட்டடம் என்று இ.டி.ஏ. ஸ்டார் தொடாத இடங்களே இல்லை. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனத்தின் ஆண்டு விற்பனை மதிப்பு சுமார் 16,000 கோடிக்கு மேல் என்கிறார்கள்.
தி.மு.க. தொடர்பு...
புதிய தலைமைச் செயலகம் கட்டிய 'ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்’, இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் ஓர் அங்கம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,750 கோடி செலவில், 350 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஒருங்​கிணைக்கப்பட்ட நகரியத்தை அமைக்க முந்தைய தி.மு.க. அரசு முடிவு செய்தது. இந்தப் பணியை இ.டி.ஏ. ஸ்டார் ப்ராப்பர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், சலாவுதீ​னுடன் கருணாநிதிக்கு இருக்கும் நெருக்கம் தான். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு 517 கோடியை பிரிமியமாக அரசு செலவழித்தது. முதல் ஆண்டில், பயனாளிகளுக்காக மருத்துவ​மனை களுக்குச் செலுத்தப்​பட்ட தொகை சுமார் 415 கோடி மட்டுமே. இரண்டாவது ஆண்டில், 750 கோடி பிரிமியம் செலுத்தப்பட்டது. ''மக்களின் வரிப் பணம், பன்னாட்டு கம்பெனிக்கு போய்க்கொண்டு இருந்தது. மக்களின் வரிப் பணத்தில், சுமார் 400 கோடி லாபம் ஈட்டி இருக் கிறது!'' என்று புகார் வாசிக்கப்படுகிறது.
புதிய தலைமைச் செயலகம்
'முதலில் 700 கோடிக்கு தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி,  பிறகு 1,200 கோடி வரையில் பணத்தை செலவழித்தார்கள்!’ என்பது ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு. வரைபடம் தயாரித்துக் கொடுத்த ஜெர்மன் கம்பெனி, முன்னாள் பொதுப் பணித் துறை செயலாளர் ராம சுந்தரம், அரசு அதிகாரிகள், தோட்டா தரணி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் அதிகாரிகளை எல்லாம் விசாரணை கமிஷன் விரைவில் விசாரிக்கப்போகிறது.
ஸ்பெக்ட்ரம்
ஆ.ராசாவின் தயவால் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று, ஸ்வான் டெலிகாம் நிறுவனம். ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு, அதை 9 மாதங்கள் கழித்து, துபாயின் பிரபல தொலைபேசி நிறுவனமான எடிஸாலட் நிறுவனத்துக்கு 5.7 சதவிகிதப் பங்குகளை அதிக விலைக்கு விற்றது. பிறகு, எடிஸாலட் டிபி என அந்த நிறுவனத்தின் பெயர் மாறுகிறது. மூன்றே மாதத்தில் 380 கோடி மதிப்புள்ள பங்குகளை, எடிஸாலட் டிபி-யிடம் இருந்து வாங்குகிறது இன்னொரு நிறுவனம். அதன் பெயர் 'ஜெனிக்ஸ் எக்ஸிம் வெண்டர்ஸ்’. சென்னையைச் சேர்ந்த இந்த நிறுவனம், வெறும் 1 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தின் தலைவர் சலாவுதீனின் மகனைச் சார்ந்தது. இ.டி.ஏ. ஸ்டார் 7.1.2008 அன்று, சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு 1 கோடி கொடுத்தது.
இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கும் ஜெயலலிதா, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்!
- எம்.பரக்கத் அலி

Source - Vikatan Magazine

அல்கொய்தாவா? ஐ.எஸ்.ஐ-யா? - மீண்டும் மும்பை அதிர்ச்சி

அல்கொய்தாவா? ஐ.எஸ்.ஐ-யா?

மீண்டும் மும்பை அதிர்ச்சி
ரியாக 31 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் மும்பையில் குண்டு வெடிப்புகள்!
93-ம் ஆண்டு மும்பையில் குண்டு வெடிப்புக் கலாசாரத்தை துவக்கிவைத்தது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு. அன்று தொடங்கி, 2008, நவம்பர் தாக்குதல் வரை ஐ.எஸ்.ஐ-யின் அட்டூழியம் நேரடியாகவே இருந்தது. அந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கில், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் மீது நேரடியாக வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், மீண்டும் குண்டு வெடிப்புகள்!
கடந்த 13-ம் தேதி மாலை 6.50 முதல் 7.04 மணிக்குள் மும்பையின் ஜவேரி பஜார், தாதர், ஓப்ரா ஹவுஸ் ஆகிய முக்கிய இடங்களில் அடையாளம் காண இயலாத வகையிலான டிஃபன் பாக்ஸ், டேப் ரிக்கார்டர் மற்றும் கார்களில் பொருத்தப்பட்டு இருந்த குண்டுகள் வெடித்து, 18 பேர் உயிர் இழந்தார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைய, 23 பேரின் நிலைமை கவலைக்கிடம்.
ஜவேரி பஜார், மும்பையின் மிகப் பெரிய தங்க நகைக் கடைகள் இருக்கும் பகுதி. ஓப்ரா ஹவுஸ், இந்தியாவின் மிகப் பெரிய வைர வியாபார ஸ்தலம். தாதர் மார்க்கெட், வீட்டு உபயோகப் பொருட்கள் வியாபாரம் நடக்கும் இடம். இந்த இடங்களில் நாச வேலையை செய்து இருப்பதன் மூலம், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க தீவிரவாத அமைப்புகள் முயன்று இருக்கின்றன. இதற்குக் காரணம் இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே மும்பையை மட்டுமே தீவிரவாதிகள் குறிவைக்கக் காரணம், அதன் பொருளாதாரம். இந்தியாவின் அரசியல் தலைநகரம் டெல்லி என்றால், பொருளாதாரத் தலைநகரம் மும்பை. ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், துறைமுகம், தொழிற்​சாலைகள் எனப் பொருளாதார வளர்ச்சியில், கணிசமான பங்கு மும்பைக்கு உண்டு. இதனால்தான், மும்பையில் க்ரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ முனுசாமி என்கிற வரதராஜ முதலியார், தாவூத் இப்ராஹிம், டைகர் மேமோன் போன்ற நிழல் உலக தாதாக்கள் உருவானார்கள். தவிர, கராச்சியில் இருந்து கடல் வழியே மும்பை குறுகிய தொலைவுதான். அதனால்தான், அஜ்மல் கசாப் அண்ட் கோ மும்பை கடல் வழியே கரை ஏறியது!
முதல் முறையாக ஐ.எஸ்.ஐ. அமைப்பு 93-ம் ஆண்டு மார்ச் 12-ல் மும்பையில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நிரூபணமானது. அப்போது, தான் உண்டு... தனது கடத்தல் தொழில் உண்டு என இருந்த தாவூத் இப்ராஹிமை, அவரது கடத்தல் சரக்கு ஒன்றை கராச்சியில் மடக்கிவைத்துக்கொண்டு ஐ.எஸ்.ஐ. அவரிடம் பேரம் பேசியது. அதன்படி, டைகர் மேமோன் மூலம் மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் 275 பேர் இறந்தார்கள்.
அதன் பின்பும் மும்பையை விடவில்லை ஐ.எஸ்.ஐ. கடந்த 13-ம் தேதி தாக்குதலோடு சேர்த்து, இதுவரை மொத்தம் எட்டு தாக்குதல்கள். சுமார் 750 பேர் பலியானார்கள். 2008 நவம்பரில் நடத்தப்பட்ட தாக்குதலில் நமக்குக் கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு... கசாப். மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அவனது பிறந்த நாள் அன்று, இந்த தாக்குதல் நடந்து இருப்பது, தீவிரவாத இயக்கம் அவனுக்குக் கொடுத்த பரிசாகவே கருதப்படுகிறது.
அமோனியம் நைட்ரேட் மருந்தைக்கொண்டு டிரிக்கரை அழுத்தி அல்லது டைமர் பொருத்திக் குண்டுகளை வெடிக்கச் செய்திருக்கலாம் என்கிறார்கள். இந்த வகை குண்டுகளை கடந்த காலங்களில் அதிக அளவு பயன்படுத்தியது, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு. உத்தரப் பிரதேசத்தைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் சிமி அமைப்புக்கும் இந்த அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரம்ப காலத்தில் சிமி அமைப்பில் இருந்து பின்னர் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு வந்தவன், அப்துல் சுபான் க்யூரேஸி என்கிற தவ்ஹீர். டெல்லி, வாரணாசி, அகமதாபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய இவனே, இந்த குண்டு வெடிப்புக்கும் மாஸ்டர் மைண்டாக இருக்கலாம் என்று கருதுகிறது உளவுத் துறை.
பின்லேடன் கொலைக்குப் பின், பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தாக்குவோம் என்று அல்கொய்தா பகிரங்க மிரட்டல் விடுத்தது. சில மாதங்களிலேயே கராச்சியின் கப்பல் படைத் தளத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது. அதனால், அல்கொய்தாவுக்கும் தற்போதைய தாக்குதலுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் உளவுத் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்தத் தாக்குதலை, 'தீவிரவாத அமைப்புகளின் கூட்டு முயற்சி’ என்று சொல்லி இருக்கிறார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக பீதியிலேயே கழிகிறது மும்பை மக்களின் வாழ்க்கை. மும்பை காவல் துறை, 'வீட்டுக்குள் இருந்து வெளியே வர வேண்டாம்’ என்று மக்களை எச்சரிக்கிறது.
எத்தனை காலம்தான் வீட்டுக்குள் அடைபட்டுக்​கிடப்பது?
- டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: லைவ் போட்டோஸ்

Source - Vikatan Magazine

வெள்ளைத் தாடி... துள்ளல் நடை! - வந்தாச்சு ரஜினி

வெள்ளைத் தாடி... துள்ளல் நடை!

வந்தாச்சு ரஜினி
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவ மனையில் ஒன்றரை மாதங்கள் சிகிச்சை முடிந்து மீண்டும் சென்னை மண்ணில் கால் வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
 கடந்த 13-ம் தேதி, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரஜினி வந்து இறங்க... மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த ரசிகர்கள் தேனீக் களைப்போல் மொய்த்தனர். 'சாமியே ரஜினியே... கடவுளே ரஜினியே...’ என்று ரசிகர்கள் எழுப்பிய 'ரஜினி கோஷம்’ விமான சத்தத்தை மீறி ஒலித்தது. 'எந்த வழியில் ரஜினி வெளியே வருவார்’ என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடாமல் இருக்கவே, ரசிகர்கள் தவித்துக்கொண்டு அலை பாய்ந்தனர். கடைசியில், வி.வி.ஐ.பி-க்களுக்கான 6-ம் எண் வாசல் வழியாகத்தான் ரஜினி வருகிறார் என்று தெரிய வந்ததும், அங்கே எல்லோரும் குவிந்தனர். ரஜினி வரும் வழியில் முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டது.
'விமான நிலையத்தில் சில அடிகள் நடப்பார். சுற்றி உள்ள மீடியா மற்றும் ரசிகர்களுக்கு கை அசைப்பார். பின்னர் தன் இன்னோவா காரில் புறப்படுவார்’ என்று பலர் கற்பனைக் குதிரையை ஓடவிட்டனர். வேறு சிலர், 'ரஜினி வீல் சேரில் வருவாரோ... ஒருவேளை யாருக்கும் தெரியாமல் அவர் போயஸ் கார்டன் போய்விடுவாரோ?’ என்று சந்தேகத்தை எழுப்பினர்.
சரியாக இரவு 10-மணிக்கு 6-ம் எண் கேட் வழியாக அனைவரின் அனுமானத்தையும் தவிடுபொடியாக்கி, 'சிங்கம் ஒன்று புறப்பட்டதே...’ ஸ்டைலில் துள்ளிக் குதித்து வந்தார் ரஜினி. ரசிகர்கள் கூட்டத்தில் அவரது இன்னோவா கார் மிதந்தது. இரவு 10-மணிக்கு மேல் பெண்கள் கூட்டம் பெரும் திரளாகக் கூடியதைப் பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தினர்.  ஆனாலும் ரஜினியை வரவேற்க ஒரு சினிமா புள்ளிகூட வரவில்லை. நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எட்டிப் பார்க்கவில்லை.
மீனம்பாக்கத்தில் மேடை அமைத்து மீடியா வுக்குப் பேட்டியும், ரசிகர்களுக்கு நன்றியும் சொல்லும்விதமாக முதலில் திட்டமாம்.
''உங்களுக்குக் கிட்னி கோளாறா?'' என்பது போன்ற கேள்விகளால் ரஜினி மனசு சங்கப் படும் என்பதால், அந்தத் திட்டத்தைத் தவிர்த்து விட்டனர். போயஸ் கார்டன் வீட்டில் ரஜினியை தங்கவைத்தால், குசலம் விசாரிக்க அதிக எண்ணிக்கையில் ஆட்கள் வருவார்கள். அவரது ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதால், கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில், ஆசிரியர் கள் பிரச்னை, அரசு ஊழியர்கள் போராட்டம் என்று பல பிரச்னைகள் தலை விரித்து ஆடின. ஆட்சியும் தடுமாறத் தொடங்கியது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் உடல்நிலையில் திடீரென கோளாறு ஏற்பட... உடனே, எம்.ஜி.ஆர் மீது இருந்த சின்னச் சின்னக் கோபதாபங்களை மறந்துவிட்டு, தமிழ்நாடே அலகு குத்தி, பால் குடம் எடுத்து அவர் நலம் பெற வேண்டும் என இறைஞ்சியது.
அதுபோலவே, கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ் சினிமாவே கருணாநிதி குடும்பத்தின் பிடியில் அகப்பட்டு தவித்துக்கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ரஜினியோ, கருணாநிதியின் குடும்பக் கல்யாணத்துக்காக மதுரைக்குப் போனார், அந்தக் கட்சியின் விழாக்களிலும் கலந்துகொண்டார். இதனால் சினிமாக்காரர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியிலும் ரஜினி மீது சின்னக் கசப்பு இருந்தது. ஆனால், ரஜினி எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரோ... அடுத்த நிமிடமே அத்தனை கசப்பும் காணாமல் போக... தமிழ் நாட்டில் மசூதி, சர்ச், கோயில் என எல்லா இடங்களிலும் மனமுருகப் பிரார்த்தனைகள் செய்தனர்.
இதோ, வெள்ளித் தாடியோடு மீண்டும் துள்ளி வந்துவிட்டார் ரஜினி!
- எம். குணா
படம்: வி.செந்தில்குமார்

Source - Vikatan Magazine

யோகா பயிற்சி முகாம் - முள்ளிப்பள்ளம் : சோழவந்தான் அருகே...

முள்ளிப்பள்ளம் : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களுக்கு யோகா பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி கல்வி இயக்குனரின் உத்தவுப்படி, மாணவர்களுக்கு அறிவுத்திறன், ஞாபகசக்தி, பண்பு பயிற்சி ஏற்பட, வேதாந்திரி மகரிஷி மனவளக்கலை இயக்கத்தின் சார்பில் நடந்த முகாமிற்கு தலைமை
ஆசிரியர் ஜே.ஜமுனா தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் பாலசுப்பிரமணியம் துவக்கினார். பயிற்சி பயிற்றுனர்கள் ரங்கநாயகி, நாகஜோதி, சுமதி, சுப்பிரமணியம் ஆகியோர் ஐநூறு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். தினமும் 45 நிமிடம் யோகா பயிற்சி வகுப்பு பள்ளியில் நடைபெறும்.

Source - Vikatan Magazine

ஜக்கி வாசுதேவ் - பேசுகிறார்

ஓங்கி உயர்ந்த மலைக் குன்றுகள். அதை, எட்டிப் பிடிக்க முயலும் பாக்கு மரங்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் முடிவில் துவங்குகிறது ஈஷா யோக மையம். தொலை தூரத்தில் கேட்கும் உளியின் ஓசையில், ஆளுயர பாறைகள், அதனதன் உருவம் பெறுகின்றன. மொத்தத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே சந்திக்கிறார். நேரம் கடப்பது தெரியாதபடி பேசுகிறார். இனி அவர்:

அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், பெஜாவர் பீடாதிபதி வரிசையில், நீங்கள் எப்போது உண்ணாவிரதம் இருக்கப் போகிறீர்கள்?
ஒரு கோரிக்கையை வன்முறை கொண்டும் நிறைவேற்றலாம்; உண்ணாவிரதம் இருந்தும் நிறைவேற்றலாம். இரண்டும் இல்லாமல், எதையும் சாதிக்க முடியாதது துரதிர்ஷ்டமே. இங்கு, ஊழல், கற்பனையே பண்ண முடியாத உயரத்தை எட்டிவிட்டது. நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி எல்லாம் தாண்டி, லட்சம் கோடி ஊழல்கள் நடக்கின்றன. இதனால் தான் நம் முன்னேற்றம் தடைபட்டிருக்கிறது.
தலைவர்கள் சரியாக இருந்தால், தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத்தும், பீகாரும் முன்னுதாரணங்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மாதிரி இருக்கிறது. குஜராத்தும், பீகாரும் மட்டும் வேறு தேசம் போலிருக்கிறது.நல்லவர்கள் முதல்வர்களாகவோ, பிரதமர்களாகவோ இருந்தால், கடைசி வரை அவர்கள் தான் அந்தப் பதவியில் இருப்பர். ஆனால், யாருமே அப் படி செய்யவில்லையே.கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைப்பவர்களை, தேசத் துரோகிகள் என்றழைக்காமல், வேறெப்படி சொல்வது? ஒரு பக்கம் மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடும்போது, இவர்கள் கறுப்புப் பணத்தில் திளைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?இந்த கொடுமைகளை எல்லாம் தடுப்பதற்கு, மக்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். நாட்டு நடப்புகளில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதற்கு, லோக்பால் வரவேண்டும். ஊழல், இங்கு கலாசாரமாகவே ஆகிவிட்டது. யாருக்கும் அதுபற்றிய குற்ற உணர்ச்சி இல்லை. இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, சமூக ஆர்வலர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஒரு கருவியாக இருக்கின்றன.

இப்படி ஆளாளுக்கு கிளம்பிவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு?
அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மாதிரியே நடந்து கொள்வதில்லையே! ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலல்லவா நடந்து கொள்கின்றனர். அதனால் தானே இத்தகைய போராட்டங்களுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. செய்ய வேண்டிய வேலையை அரசு செய்யாததால் தானே, தங்கள் வேலையை விட்டுவிட்டு, மக்கள், வீதிக்கு வரவேண்டியுள்ளது.

அதற்காக, சாமியார்கள் அரசியல் செய்யலாமா?
ஏன்? அவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம் இல்லையா? அவர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும் தானே! அவர்கள் பின்னால், லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அந்த மக்களுக்கு எது நல்லதோ, அதை அவர்கள் செய்கின்றனர். அரசியலில் தலையிடுவதா, வேண்டாமா என்பதெல்லாம், அவரவர் விருப்பம் இல்லையா?

அன்னா ஹசாரே விளம்பரப் பிரியராக இருக்கிறாரோ...
போராட்டத்துக்கு முன்பு வரை, அவர் காந்தியவாதியாகத் தெரிந்தார். வழிக்கு வரவில்லை என்றதும், இப்படி பட்டம் கட்டிவிட்டனர். ஹசாரேவுக்கு மாற்றாக பாபா ராம்தேவைப் பயன்படுத்த நினைத்தனர். முடியவில்லை என்றதும், அவர் பெயரையும் கெடுக்க முயற்சிக்கின்றனர்.ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லும் விதம் சரியில்லாவிட்டால் தான் என்ன? அவர் சொன்ன விஷயம் சரியா என்று பார்க்க வேண்டியது தானே.

ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை, பாபா ராம்தேவ் மழுங்கடித்துவிட்டாரா?
நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தடுமாறிவிட்டார் என்று சொல்வேன். அவர் இப்பிரச்னையைச் சரியாகக் கையாண்டிருந்தால், இன்னும் நாலு பேர் சேர்ந்திருப்பர். மிகப் பெரிய போராட்டமாக வலுப்பெற்றிருக்கும்.
அது இருக்கட்டும். படுத்துக்கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது ஓர் அரசால் எப்படி தடியடி நடத்த முடிந்தது? அதுவும் தலைநகரில்! நாலாபுறமும் தடுப்புச் சுவர் கொண்ட மைதானத்தில், பெண்கள் என்றும் பாராமல் தாக்கினரே. ஜனங்களை அடிக்கும் அரசு எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்! பழிவாங்கும் செயலுக்காக போலீசையும், வருமான வரித் துறையையும் பயன்படுத்த ஆரம்பித்தால் நாடு எப்படி உருப்படும்?

ஆனால், தன் அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, அவரே சொல்லியிருக்கிறார்.
என்ன தப்பு? அந்த அறக்கட்டளை, மக்களால் நடத்தப்படுவது. அவர் ஓர் அடையாளம் மட்டுமே. அதை அவர், தன் பெயரிலேயே நடத்தியிருந்தால், யார் தடுத்திருக்க முடியும்? அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தாலென்ன? அவர் எளிமையாகத் தானே இருந்தார்? தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லையே! அந்தச் சொத்துக்களுக்கு தணிக்கை நடந்து, கணக்கு காட்டியிருக்கிறாரே.அவரைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். நன்கொடை வழங்குகின்றனர். நல்லது செய்யப்போய்த் தானே அவரைத் தேடிச் செல்கின்றனர்! நேற்று வரை நல்லவராகத் தெரிந்தவர், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததும் கெட்டவராகி விட்டாரா?

சாய் பாபாவின் படுக்கை அறையிலிருந்து, 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது...
அவரது உயரத்துக்கு, 12 கோடி ரூபாயெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்த அறையில் எவ்வளவு இருந்தது என்று, அவருக்கே தெரிந்திருக்காது.
பக்தர்கள் கொடுத்ததை, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார். அந்தப் பணத்தைப் பதுக்கி, அவர் என்ன செய்யப்போகிறார்? அவரைத் தேடி கோடிகள் கொட்டப்பட்டபோது, எதற்கு இந்தச் சிறிய தொகையை லட்சியம் செய்யப்போகிறார்! அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் உண்மை!

பத்மநாபசுவாமி கோவிலில் கிடைத்த பல கோடி நகைகளை என்ன செய்யலாம்?
அங்கு மட்டுமா இருந்தது? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இருந்தது. முஸ்லிம் மன்னர்களும், வெள்ளைக்காரர்களும் அதைக் கொள்ளையடிக்கத் தானே இங்கு வந்தனர்! அப்போது கொள்ளையடித்த பணத்தில் தான், ஐரோப்பிய பொருளாதாரம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் கொள்ளையடித்தது போக, மீதமிருந்த கோவில்களின் நகை எல்லாம் எங்கே? அதைக் கேட்காமல், இதை என்ன செய்வது எனக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் அரசாங்கம் கட்டட்டும். சுதந்திரம் கொடுத்தால், தனியார்கள் கட்டுவர். கோவில் சொத்தில் ஏன் கட்ட வேண்டும்? சுரண்டுவதை நிறுத்தினாலே அரசாங்கத்துக்குத் தேவையான பணம் கிடைத்துவிடும்.
எந்த நாட்டிலும் இப்படி ஒரு அநீதி கிடையாது. ஒரு மதத்தினர் மட்டும், அவரது விருப்பத்துக்கு ஏற்ப வழிபாட்டுத் தலம் கூட நடத்த முடியாது. அரசு எடுத்துக்கொள்ளும் என்று பயம்.

 கோவிலை ஆன்மிகவாதிகள் நடத்த வேண்டுமா?
அரசு கிளார்க்குகள் நடத்த வேண்டுமா? மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் இப்படிச் செய்ய முடியுமா? தேசம் எரிந்துவிடும் என்பதால் தானே இந்து மதத்தில் மட்டும் பண்ணுகிறீர்கள்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது...மாநிலம், தொழில் துறையில் நல்ல வளர்ச்சி பெற்று வந்தது. ஆனால், ஊழல் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. அரசு மாறிவிட்டது.புதிய அரசு, பல்வேறு விஷயங்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறது. தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்கள் பணியாற்ற என்னுடைய அன்பும் ஆசிகளும்!

ஆர்.ரங்கராஜ் பாண்டே-http://www.dinamalar.com/News_Detail.asp?Id=276611