Thursday, April 21, 2011

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
ஒரு குடம் தண்ணி ஊத்தி.... ஒரே பூ பூத்துச்சாம் !
ரவி தேஜா... வீட்டில் ஒரே குழந்தை. அக்கம் பக்கத்தில் அவனுடன் சேர்ந்து விளையாடும் வயதில் குழந்தைகள் யாரும் இல்லாததால், தனியாகத்தான் விளையாடுவான். கிரிக்கெட் பேட்டை வைத்து, பந்தை அடித்து அடித்து விளையாடும் நேரங்களில் அவனுக்கே, அவனை நினைத்து பாவமாக இருக்கும்!
குழந்தையாக இருக்கும்போது வறுமை மட்டும் கொடுமை அல்ல; இப்படி விளையாட சரியான தோழமை இல்லாததும் கொடுமைதான்! என்னிடம் பேசிய பல குழந்தைகள், 'தோழமை இல்லை' என் பதை தங்கள் மழலையில் திக்கித் திணறி சொல்லும் போது, 'என் வேலை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, இவர்களுடன் கொஞ்ச நேரம் விளையாடினால் என்ன தவறு...?’ என்று நினைப்பேன். சில நேரங்களில் சின்னச் சின்னதாக விளையாடியும் இருக்கிறேன்.
ஒரு குடும்பத்தில் நான்கைந்து குழந்தைகள் இருந்து, அவையெல்லாம் வீட்டுக்குள்ளேயே கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி, பொழுதைக் கழித்த அற்புதமான அனுபவங்களுக்கு... இரண்டு தலைமுறைக்கு முன்பே 'முற்றும்’ போடப்பட்டு விட்டது, பெருகும் மக்கள்தொகை பிரச்னை. இன்றைய தலைமுறையில் வீட்டுக்கு ஒரு குழந்தை! அந்தக் குழந்தை, தன் வீட்டுக்குள் தோழன், தோழிகளோடு ஆனந்தமாக விளையாடும் வகையில் சகோதர, சகோதரி உறவுகள் இல்லை.
இன்றைய வாழ்க்கைச் சூழலில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் நட்புறவு கொண்டாடுவதற்குகூட நேரம் இல்லாததால், பக்கத்து வீட்டில் சாத்திய கதவுகளுக்குள் இருக்கும் மனிதர்களின் முகம் தெரியாமலேயே நாட்களை நகர்த்துகிறோம். இந்தச் சூழ்நிலையில் குழந்தையுடன் சேர்ந்து விளையாட வேண்டியது யார்? சந்தேகமில்லாமல், உங்கள் ஆசைக் குழந்தையைப் பெற்றெடுத்த நீங்களும், உங்கள் கணவரும்... குழந்தைகளின் தாத்தா, பாட்டியும்தான்!
''என்ன டாக்டர் வெளையாடுறீங்களா நீங்க? சமைக்கறதுக்கும் குடும்பத்தைப் பாத்துக்கறதுக்குமே நேரமில்ல. இதுல அவகூட சேர்ந்து விளயாடணுமா?'' என்று உணர்ச்சிவசப் படாதீர்கள். 'நேரமில்லை’ என்ற காரணம், உங்கள் குழந்தையை 'ஒபிஸிட்டி’க்குள் தள்ளலாம். ஏனென்றால், சேர்ந்து விளையாடுவதற்கு ஆள் இல்லாத குழந்தைகள் பெரும்பாலான நேரம் டி.வி. பெட்டியின் முன் உட்கார்ந்து கொண்டு, 'பென்-10’ சீரியலையும், பவர் ரேஞ்சர்களின் சாகஸத்தையும் சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே ரசிக்கின்றன. விளைவு... ஒபிஸிட்டி பிரச்னையும், பாடங்களில் அக்கறையின்மையும் உருவாகிறது.
குழந்தைக்கு இத்தகைய பிரச்னைகள் வராமல் தடுப்பதற்கான தீர்வுகள்... உங்களிடம்தான் இருக்கின்றன. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் டி.வி. சீரியல்களுக்கு 'பை... பை...’ சொல்லிவிட்டு குழந்தையுடன் ஜாலியாக விளை யாடிப் பாருங்கள். உங்களுக்கு உங்கள் பால்ய காலம் மீண்டு வந்தது போல் இருக்கும்; புத்துணர்ச்சியைக் கொடுக்கும் - உங்களுக்கும், குழந்தைக்கும்! குழந்தையுடன் நீங்கள் அரை மணி நேரம் விளையாடினாலும், அந்த 'குவாலிட்டி டைம்’... இருவருக்கும் இடையில் இறுக்கமான பிணைப்பை உண்டு பண்ணும்.
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் அன்பான பிணைப்பு இல்லாத காரணத்தினால்தானே, சில பிள்ளைகள் தடம் பிறழ்கிறார்கள்..? விளையாடும்போது, 'டே தம்பி... அப்படி போடு, இப்படி போடு, அதை எடுத்து வா, இங்க போயி வை’ என்று நீங்கள் பேசும்போது, அது 1 - 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களிடத்தில் பேசும் திறனையும், ஒரு விஷயத்தை சரியாகச் சொல்லும் திறனையும் வளர்க்கிறது.
யோசித்துப் பாருங்கள் 20, 25 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலோ, கூடத்திலோ, வாசலிலோ... தாவணி போட்ட அக்கா, பாவாடை-சட்டை போட்ட தங்கை ஆகியோரோடு அவர்களின் அம்மாவும் உட்கார்ந்து தாயம், பல்லாங்குழி விளையாடுவார்கள். அந்த நேரத்தில்தான் அந்த பாவாடைக் குழந்தை பல வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளும்.
நம் கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா இவர்களெல்லாம் விளையாடிய பல இண்டோர், அவுட்டோர் கேம்ஸுக்குள் பல விஷய ஞானங்கள் அடங்கியிருக்கின்றன. 'ஒரு குடம் தண்ணி ஊத்தி... ஒரே பூ பூத்துச்சாம், ரெண்டு குடம் தண்ணி ஊத்தி, ரெண்டே பூ பூத்துச்சாம்...’ என்று தொடரும் பாட்டில்... ஒரு குழந்தை பள்ளிக்குப் போவதற்கு முன்பே எண்களைத் தெரிந்து கொள்ளும்.
பல்லாங்குழி விளையாடும்போது, 'இந்தக் குழியில் ஆரம்பித்து, இத்தனை முத்துக்களைப் போட்டால், இத்தனையாவது சுற்றில் இந்தக் குழியில் உள்ள அத்தனை முத்துக்களும் நமக்குத்தான் கிடைக்கும்’ என்று மனக்கணக்குப் போட்டு விளையாடுவார்கள். இது ஒரு விஷயத்தின் மீது கவனம் குவிக்கும் திறனை அதிகமாக்கும், ஒரு விஷயத்தை இது இப்படித்தான் போகும் என கணிக்கும் விளையாட்டால் மூளையின் செயல்திறன் மேம்படும். அப்படி குழந்தையாக இருக்கும்போது மூளையை விளையாட்டாக பிரயோகப்படுத்தியவர்கள்தான், இன்று ஊர் மெச்சும் உயரத்தில் ஜொலிக்கிறார்கள்.
பூப்பறிக்க வருகிறோம்; பூப்பறிக்க வருகிறோம், கிட்டிப்புல், தாயக்கட்டை, கல்லா- மண்ணா, சில்லு, கிச்சுக்கிச்சு தாம்பாளம், தட்டாங்கல், பாண்டி, பச்சக்குதிரை, களிமண் பொம்மை செய்தல், ஊஞ்சல் என்ற ஏராளமான விளையாட்டுக்கள் குழந்தைகளை மேதைகளாக்கின. அந்த மேதைகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அப்படினால்... உங்கள் குழந்தைக்கும் அந்த வாய்ப்பைக் கொடுங்கள்.
காரணம், நான் பார்த்த பெரும்பாலான பெற்றோர்கள்... நம் மண் சார்ந்த விளையாட்டுக்களை அலட்சியமாக நினைக்கிறார்கள். 'இந்த விளையாட்டெல்லாம் ஊர் பசங்கதான் விளையாடும், நீ ஏன் விளையாடுற...’ என்று திட்டும் பெற்றோர்களே, 'ஓல்ட் இஸ் கோல்ட்’! அது நம் பாட்டன் பூட்டன் விளையாட்டுக்கும்தான்!
குழந்தை விளையாட வீட்டில் விளையாட்டுப் பொருள் இல்லை என்றால்... வீட்டுக்குள் இருக்கும் பொருளை வைத்து என்ன விளையாடலாம் என்பதைக் கற்றுக் கொடுங்கள். அது பணத்தை மிச்சப்படுத்துவதோடு, குழந்தையின் கற்பனைத் திறனையும் தூண்டும். இனி விளையாட்டை... விளையாட்டாக நினைக்க மாட்டீர்கள்தானே பேரன்ட்ஸ்..?!
- வளர்ப்போம்...
படங்கள் : கே. குணசீலன்


Source - Vikatan Magazine

உங்கள் குழந்தையும் இனி நம்பர்1

உங்கள் குழந்தையும் இனி நம்பர்1
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
குழந்தை மனநல மருத்துவர்ஜெயந்தினி
எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !
இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக அச்சுறுத்தும் விஷயமாக இருப்பது... 'ஒபிஸிட்டி' (Obesity)எனப்படும் உடல் பருமன் பிரச்னை. 5 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினரிடையே பெரும் பிரச்னையாக இது உருவெடுத்து நிற்கிறது.
'இந்தியாவின் பெரும் பலம் என்று கருதப்படும் மனித வளத்தையே, இந்த ஒபிஸிட்டி, எதிர்காலத்தில் நலம் இழக்கச் செய்துவிடும்' என்று மருத்துவ உலகம் பெரும் கவலையோடு சொல்லிக் கொண்டிருக்கிறது.
இப்படியரு அச்சுறுத்தலாக எழுந்து நிற்கும் 'உடல் பருமன்' பிரச்னைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, 'குழந்தைகளுக்கு போதுமான உடல் இயக்கம் இல்லை' என்பதுதான்! சுருக்கமாகச் சொன்னால்... 'அவர்கள் விளையாடுவது இல்லை' என்பதுதான்.
மாறி வரும் காலச் சூழலும் வாழ்க்கை முறையும் விளையாட்டை இரண்டாம்பட்சமாகக் கருத வைத்துவிட்டன. பள்ளிக்கூடத்தில், 'ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்து இருக்கலாகாது பாப்பா’ என பாரதியாரின் பாடலை அழகாகப் படித்துவிட்டு, வீட்டுக்கு வரும் குழந்தை... டியூஷன், டி.வி, சாப்பாடு, தூக்கம் என ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொள்கிறது. அந்த வட்டத்துக்குள், விளையாட்டு என்பது நேரத்தைக் கொல்லும் விஷயமாகவே பெரும்பாலான பெற்றோர்களால் பார்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைக்கு வெறும் படிப்பு மட்டும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விடாது... விளையாட்டும் அவர்களின் வாழ்க்கையையும் அந்தப் பருவத்தையும் அழகாக்கும்; அர்த்தமுள்ளதாக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!
''அப்படி என்ன நல்லது செய்துவிடும் விளையாட்டு?'' என்கிறீர்களா தோழிகளே?! விளையாட்டு உங்கள் குழந்தையின் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எப்படி? ஒரு குழந்தை விளையாடும்போது அதன் உடலில் இருக்கும் உறுப்புகளான கண், கை, கால் மூட்டுகள், காது, மூக்கு, தொடும் உணர்வு என அனைத்து இயக்கங்களும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து செயல்படுவதால், குழந்தையின் உடம்பு சீராக இயங்கும். அத்தகைய சீரான இயக்கமின்மைதானே பல நோய்களுக்கு பந்தி வைத்துக் கொண்டிருக்கிறது!
நன்றாக விளையாடும் குழந்தைக்கு உடலிருந்து அதிக கலோரி வெளியேறுவதால், நன்கு பசிக்கும். நன்றாகச் சாப்பிடுவார்கள். ''காலையில எழுந்து கஷ்டப்பட்டு ருசியா, வெரைட்டியா சமைச்சுக் கொடுத்தா... லஞ்ச்சை அப்படியே திருப்பிக் கொண்டு வந்துடுறா எங்க பூஜா'' என்று புலம்ப வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். குழந்தையின் ஜீரண உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்யும்.

ஓடியாடி விளையாடி, நன்கு சாப்பிட்டுப் படுத்தால்... குழந்தை ஆழ்ந்து உறங்கும். தினமும் சரியான அளவுக்குத் தூங்கும் குழந்தை... எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதன் மனது, உடல், செய்கைகள் தெளிவாக இருக்கும். சரியாகத் தூங்காமல் பள்ளிக்குப் போய், கணக்கு டீச்சர் அல்ஜீப்ரா நடத்தும்போது அசந்து தூங்கி, கடைசி வரை அந்தக் குழந்தைக்கு அல்ஜீப்ரா புரியாமலே போகலாம்.
ஆக... விளையாட்டு, நல்ல விஷயங்களை அள்ளித் தருகிறது என்பது உறுதியாகிறது. பிறகென்ன... குழந்தைகளை விளையாடவிட வேண்டியதுதானே... அம்மாக்களே-அப்பாக்களே!
பண்புள்ளவர்களாக, பொறுப்புள்ளவர்களாக, புத்திசாலியாக, திறமைசாலியாக குழந்தையை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற உங்களின் லட்சியம் நிறைவேற, இந்த விளையாட்டுதான் கை கொடுக்கும்.
உதாரணத்துக்கு, உங்கள் தெரு குழந்தைகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 'கண்ணாமூச்சி’ விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு குழந்தை மட்டும் ''தேன்மொழி, அமுதா, ரம்யா, சுரேஷ், கண்ணன் எல்லாரும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடலாம்... வர்றீங்களாப்பா?'' என்று ஒவ்வொருவரிடமும் கேட்டு, அந்தக் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் (Organising).
அடுத்து, யார் கண்ணைப் பொத்திக் கொள்வது, கண்டுபிடிப்பது என்பதைத் திட்டமிடுவார்கள் (Planning). இடையில் யாராவது 'சுரேஷ் தென்னை மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்கான்’ என்று சைகை காட்ட... பிரச்னை வந்து, அவனை விளையாட்டிலிருந்து வெளியேற்றலாம் என்று யாராவது முடிவு செய்தால்... ''சரிப்பா, இந்த ஒருமுறை மட்டும் இவனை மன்னிச்சு சேர்த்துக்கலாம்'' என்று விட்டுக் கொடுக்கும் குணத்தை (Adjustment and adaptability) பழகுவார்கள்.
கபடி போன்ற டீம் விளையாட்டுகளில், ''நம்ம டீம் கண்டிப்பா ஜெயிக்கணும்'' என்று உறுதி ஏற்கும்போது... அவர்களுக்குள் குழு மனப்பான்மையும் (Team spirit),, ''டேய், நம்ம டீம்ல ஆள் பத்தல, அடுத்த தெரு சங்கரை சேர்த்துக்கலாமா... கூட்டிட்டு வாங்கடா'' என்கிற முடிவில் சமூகமயமாதல் பண்பும் (Socialisation)வளர்கின்றன!
இவற்றையெல்லாம் சிறுவயதிலேயே கற்றுக் கொள்ளும் குழந்தைதான்... வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனைச் செயல்படுத்துகிறது. அதுதான் அவர்களை திறமையுள்ளவராகவும் மனிதநேயம் மிகுந்த மனிதர்களாகவும் மிளிர வைக்கிறது.
''எல்லாம் சரி. முன்ன மாதிரியெல்லாம் விளையாடறதுக்கு எங்க இடமிருக்கு... போதுமான நேரமும் இல்லையே?'' என்ற கேள்வியை ரெடியாக வைத்திருக்கிறீர்கள்தானே?!
- வளர்ப்போம்...
படம்: என்.விவேக்

Source - Vikatan Magazine

ஃபைவ் ஸ்டார் சமையல் !

ஃபைவ் ஸ்டார் சமையல் !

புதிய பகுதி
நிக்கேத்தனா
 வீடுகளில் சமைப்பது பெண்கள்தான் என்றாலும் 'ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்'களில் சமைப்பது 'நளபாகத்து’க்கு காப்புரிமை கொண்டாடும் ஆண்கள்தான்! ஆண்களின் கோட்டையாக இருக்கும் ஸ்டார் ஹோட்டல் சமையல் அறையில் தனக்கென்று ஓரிடத்தை உருவாக்கி இருக்கிறார் 'செஃப்' கவிதா! சென்னையிலிருக்கும் 'ஹோட்டல் சவேரா'வின் தென்னக உணவு மையமான 'மால்குடி’ மணப்பது, கவிதாவின் கைப்பக்குவத்தில்தான்!
கவிதா
''எனக்கு மூணே மூணு அக்கா, மூணே மூணு தம்பி, மூணே மூணு தங்கச்சி. அப்பா, அம்மா, அண்ணிங்க, அத்தான், நண்டு, சிண்டுனு எல்லாத்தையும் சேர்த்தா... எங்க வீட்டுல மொத்தம் ஐம்பது டிக்கெட் தேறும். சுருக்கமா சொன்னா, எங்க வீடு 'குக்’கிராமம். அங்க சமைச்சு பழகிட்டதால... பல நூறு பேர் வரும் இப்படிப்பட்ட ஹோட்டல்ல வேலை செய்றது எனக்கு சிரமமாவே தெரியல!'' என்று ரசிக்க ரசிக்கப் பேசும் கவிதாவின் கைப்பக்குவத்துக்கு... அத்வானி, மு.க.ஸ்டாலின், வைரமுத்து, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, குஷ்பு, சுகாசினி, சுதா ரகுநாதன் என்று பல வி.ஐ.பி. ரசிகர்கள் இருக்கிறார்கள்!
''ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் உணவு வகைகள்னா ஏதோ அரிய பெரிய விஷயம் மாதிரியும், அதுக்கான 'ஹை காஸ்ட்’ சேர்மானங்கள் நம்ம கிச்சனுக்கு எல்லாம் வாய்க்காதுங்கற மாதிரியும் பலரும் நினைச்சுட்டு இருக்காங்க. அது உண்மையில்ல... தாராளமா நம்ம அஞ்சறைப் பெட்டியில இருக்கறதை வெச்சே நம்ம கிச்சன்லயும் 'ஃபைவ் ஸ்டார்' டிஷ்களை மணக்க வைக்கலாம்!'' என்று சொல்லும் கவிதா, 'அவள் விகடன்’ வாசகிகளுக்கு புதுவித, ருசிகர ஸ்டார் சமையலைப் பரிமாறுகிறார்!
இங்கே கவிதா நமக்காக செய்து காட்டி அசத்தியிருப்பது... பசலைக்கீரை பச்சை பூரி!
படங்கள்: கே.ராஜசேகர்
பச்சை பூரி ஜிங்குச்சா... சிவப்பு பூரி ஜிங்குச்சா...
 கீரையைக் கொடுத்தால்... 'வ்வே...' என்று பல குழந்தைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும். ஆனால், கீரையைச் சாப்பிட்டுவிட்டு பத்து பேரை அடிக்கும் கார்ட்டூன் கேரக்டரான பாப்பாய் போன்றவற்றைக் காட்டிவிட்டு, இந்த பசலைக்கீரை பச்சை பூரியை கொடுத்தால்... குழந்தைகள் நிச்சயம் கீரை கட்சிக்கு மாறுவது உறுதி!
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 250 கிராம், கீரை பேஸ்ட் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
கீரையை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். கீரை வேக வைத்த தண்ணீரில் உப்பு கலந்து, கோதுமை மாவு மற்றும் மசித்த கீரையைச் சேர்த்து நன்கு பிசையவும் (முதலில் அதிகமாக தண்ணீர் சேர்த்துவிட்டு, பூரியை உருட்டும்போது அதில் மாவு சேர்த்து சமாளிக்கும் வழக்கமான ஐடியா இங்கே கை கொடுக்காது. பூரி கறுப்பாகிவிடும்... ஜாக்கிரதை!). மாவின் மீது மஸ்லின் துணியன்றைப் போட்டு பத்து நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். பிறகு, பூரியாக தேய்த்து வாணலியில் கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுத்தால்... பசலைக் கீரை பச்சை பூரி ரெடி.
முளைக்கீரை, அரைக்கீரை என்று எந்தக் கீரையிலும் செய்யலாம். பீட்ரூட்டை நன்றாகத் துருவி, மிக்ஸியில் அரைத்து பூரி மாவோடு சேர்த்தால்... சிவப்பு பூரி! மாம்பழத்தின் ஜூஸை எடுத்து, பூரி மாவோடு கலந்தால் மஞ்சள் பூரி! இப்படி கிரேப், பப்பாளி என்று எதை வேண்டுமானாலும்  பயன்படுத்திக் குழந்தைகளை அசத்தலாம்!
- பரிமாறுவோம்...
Source - Vikatan Magazine

30 வகை பிக்னிக் ரெசிபி !

30 வகை பிக்னிக் ரெசிபி !

பிக்னிக், டூர் என்றாலே, 'போகிற இடத்தில் நல்ல சாப்பாடு கிடைக்குமா?' என்கிற கேள்வி வந்து நிற்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் கட்டுச்சோறுடன் கிளம்பினார்கள் நம்மவர்கள். 'இப்ப அதுக்கெல்லாம் ஏது நேரம்?'னு சொல்பவர்களுக்காக... நொடியில் தயாரிக்கக்கூடிய பலவிதமான ரெடி மிக்ஸ்களை இங்கே பார்சல் கட்டித் தருகிறார் சென்னையைச் சேர்ந்த 'சமையல் கலைஞர்' தேவிகா காளியப்பன்.

பெட்டிப் படுக்கைகளைத் தூக்கும் போதே... ஒரு இன்டக்ஷன் ஸ்டவ்  மற்றும் சில பாத்திரங்களோடு இந்த மிக்ஸ்களையும் கையில் எடுத்துக் கொண்டால் போதும்... போகிற இடத் தில் ஆரோக்கியமான மற்றும் அறுசுவையான உணவுக்கு நீங்கள்தான் உத்தரவாதம்!
சரி, சமையல் ரெசிபிகள் தொடர்பான அளவுகளை ஒரு டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு கப் என்றெல்லாம்தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த அளவுகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொண்டு குழம்புவது சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது.
'ஒரு கப் உளுந்துனு போட்டிருக் காங்களே... அது எத்தனை கிராமா இருக்கும்? நூறு கிராம் அரிசினு போட்டிருக்காங்களே அது கால்படியா... அரைக்கால் படியா ஒண்ணும் புரியலையே!' என்றெல்லாம் ஆரம்பித்து, எல்லாவற்றி லுமே சந்தேகம் எட்டிப் பார்த்து... சமயங் களில் சமையலையே அது காலி செய்துவிடுவதும் உண்டு.
அவர்களுக்கெல்லாம் உதவுவதற்காக குறிப்பிட்ட சில அளவு முறைகள் இங்கே இடம் பிடிக்கின்றன. பொதுவாக படிக் கணக்கு என்பது இன்னமும் வீடுகளில் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அரைப்படி, கால்படி, அரைக்கால்படி எனப்படும் அந்த அளவைகள்... உரி, உழக்கு, ஆழாக்கு என்று பகுதிக்கு பகுதி வெவ்வேறு பெயர்களில் இவை வழங்கப்படுகின்றன. அவற்றில் கால்படியில் தானியங்கள் மற்றும் மாவுகளை அளந்தால் எத்தனை கிராம் இருக்கும் என்பது மேலே தரப்பட்டிருக்கிறது.
 சத்துமாவு மிக்ஸ்
தேவையானவை: கோதுமை, ராகி - தலா 100 கிராம், கம்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், பாதாம், முந்திரி - தலா 10, வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, நெய், பால் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கோதுமை, ராகி, கம்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தேவைப்படும்போது இந்த மாவுடன் சர்க்கரை, நெய் சேர்த்து சத்து உருண்டையாக செய்து சாப்பிடலாம். மாவில் தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து கஞ்சி போல் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.
இதனை சாப்பிட்டால்... சத்தும், நல்ல புத்துணர்வும் கிடைக்கும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.
 ரவா தோசை மிக்ஸ்
தேவையானவை: வெள்ளை ரவை - 100 கிராம், அரிசி மாவு - 75 கிராம், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரி - 10 (சிறு துண்டுகளாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.
தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ரவை, அரிசி மாவு, மைதா மாவு, பொடித்த மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, ரவா தோசை மிக்ஸ்,  உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு ரவா தோசை பதத்தில் கரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து  இதில் சேர்க்கவும்.
சூடான தோசைக்கல்லில் கரைத்த மாவை பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுமொறுப்பாக வந்ததும் ஹோட்டல் தோசை போல் திருப்பிப் போடாமலே எடுத்துப் பரிமாறவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 தேங்காய் பொடி
தேவையானவை: தேங்காய் - அரை மூடி, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4. கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பையும் காய்ந்த மிளகாயையும் சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.
இட்லி மிளகாய்ப்பொடிக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். வித்தியா சமான சுவையில் இருக்கும். சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிட லாம். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
சேமியா பகாளாபாத் மிக்ஸ்
தேவையானவை: சேமியா - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கி காய வைத்த இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 2, முந்திரி - 10, திராட்சை - 10. உலர்ந்த கறிவேப்பிலை, நெய், எண்ணெய் - சிறிதளவு.
பகாளாபாத் செய்ய:  உப்பு, புளிப்பில்லாத தயிர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... சீரகம், இஞ்சி, மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை போட்டு வறுத்து, திராட்சை சேர்த்து வறுக்கவும். சேமியாவைத் தனியாக நெய் விட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
சேமியா பகாளாபாத் தேவைப்படும்போது கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு சேமியா கலவைக்கு இரண்டு பங்கு தண்ணீர்),  கொதித்ததும் சேமியா கலவை, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி ஆற வைத்து, புளிப்பில்லாத தயிர் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
ரெடிமேட் வத்தக்குழம்பு மிக்ஸ்
தேவையானவை: கத்திரிக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து, புளி சேர்த்து நன்றாக வதக்கிப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் மற்றும் வற்றலை சேர்த்து வறுக்கவும். இதை அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
வத்தக்குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் குழம்பு மிக்ஸுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும். இந்த மிக்ஸை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 உப்புமா கொழுக்கட்டை மிக்ஸ்
தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.
உப்புமா கொழுக்கட்டை செய்ய: தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை மிக்ஸியில் ரவையாக உடைத்து சலிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உடைத்த ரவையில் கொட்டிக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
உப்புமா கொழுக்கட்டை தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவை கலவைக்கு 2 பங்கு தண்ணீர்) கொதிக்க வைத்து அரிசி ரவை மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வைக்கவும். அரிசி ரவை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாயே போதும். சட்னிகூட தேவையில்லை. மூன்று வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
மோர்க்குழம்பு மிக்ஸ்
தேவையானவை: துவரம்பருப்பு,  கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, பெருங்காயத்தூள் - சிறிதளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், எண்ணெய் - சிறிதளவு.
மோர்க்குழம்பு செய்ய: தயிர் - 100 கிராம், தேங்காய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு, ஏதேனும் ஒரு காய்கறி (வெண்டை, பூசணி, வாழை), எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: பருப்பு வகைகள், அரிசி,  தனியா, சீரகம், 5 காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, 2 காய்ந்த மிளகாய் தாளித்து... மிக்ஸியில் அரைத்த பொடியுடன் சேர்த்துக் கலக்கி, சேமித்து வைக்கவும்.
மோர்க்குழம்பு தேவைப்படும்போது தயிரை நன்றாகக் கடைந்து, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். தயாரித்து வைத்திருக்கும் மோர்க்குழம்பு மிக்ஸை இதனுடன் கலந்து மஞ்சள்தூள் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும்  இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காயைப் போட்டு வறுத்து, மோர்க்குழம்பில் சேர்க்கவும். இரண்டு வாரங்கள் வைத்திருந்து இந்த மிக்ஸை பயன்படுத்தலாம்.
ரெடிமேட் சாம்பார் மிக்ஸ்
தேவையானவை: துவரம்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு, தனியா, கடலைப்பருப்பு, கொப்பரைத் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.
சாம்பார் செய்ய: நறுக்கிய முருங்கை, கத்திரிக்காய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: வெறும் கடாயில் பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்துப் பொடிக்கவும். புளி, கொப்பரை துருவலையும் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும்.  இரண்டு பொடிகளையும் ஒன்றாக சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் கலந்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சேமித்து வைக்கவும்.
சாம்பார் தேவைப்படும்போது முருங்கைக்காய், கத்திரிக்காயை நறுக்கி உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரைத்த சாம்பார் மிக்ஸை தேவைப்படும் அளவுக்கு இதில் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சாம்பார் வாசனை வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 ரவா உப்புமா மிக்ஸ்
தேவையானவை: வெள்ளை ரவை - 200 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 10, காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - சிறிதளவு.
உப்புமா, கிச்சடி செய்ய: மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய், நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ரவையைப் போட்டு நன்றாக வறுத்து, தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், முந்திரி, கறி வேப்பிலை போட்டு சிவக்க வறுத்து, ரவையில் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
உப்புமா தேவைப்படும்போது, கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து (ஒரு பங்கு உப்புமா மிக்ஸ் சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர்), ஒரு டம்ளர் உப்புமா மிக்ஸ், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். ரவை வெந்ததும் நெய் அல்லது எண்ணெய் விட்டு மூடி வைத்து, 5 நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்கினால் உப்புமா தயார்.
தண்ணீர் கொதிக்கும்போதே மஞ்சள்தூள், வதக்கிய காய்கறிகளை சேர்த்து, ரவா கிச்சடி போலவும் செய்யலாம். ஐந்தே நிமிடத்தில் செய்துவிடக்கூடிய அருமையான டிபன் இது. இந்த மிக்ஸை இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 அரிசி உப்புமா மிக்ஸ்
தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் - சிறிதளவு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, துவரம்பருப்பைக் கலந்து மெல்லிய ரவையாக மிக்ஸியில் உடைத்து சலித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைப் போட்டு சிவக்க வறுத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து, உடைத்த ரவையுடன் கலந்து சேமித்து வைக்கவும். அரிசி உப்புமா தேவைப்படும்போது, கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு ரவைக்கு 3 பங்கு தண்ணீர்), உடைத்து சலித்த ரவை, உப்பு சேர்த்துக் கிளறி, நன்றாக வேக விடவும். ரவை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் 5 நிமிடம் வைத்து இறக்கி, சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: உப்புமா கிளறும்போது தண்ணீர் பற்றாமல் போனால், கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் கிளறலாம். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 தேங்காய் சட்னி மிக்ஸ்
தேவையானவை: தேங்காய் துருவல் - 200 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, புளி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுக்கவும். புளி, உப்பு சேர்த்து அரைத்து, மூடியிட்ட பாத்திரத்தில் சேமிக்கவும்.
இது... புளி சாதம், தயிர் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்ற ஜோடி.
குறிப்பு: தேவைப்படும் போது தண்ணீரைச் சேர்த்து சட்னியாக தயார் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்தி ருந்து பயன்படுத்த லாம்.
கோதுமை தோசை மிக்ஸ்
தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 150 கிராம், சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்.
தோசை செய்ய: கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவைப் பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுகலானதும் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி, சட்னி சரியான சைட் டிஷ். மாதக்கணக்கில் இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம். .
 வெண் பொங்கல் மிக்ஸ்
தேவையானவை: பச்சரிசி - 150 கிராம், பாசிப்பருப்பு - 75 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, உலர்ந்த கறிவேப்பிலை, காய்ந்த இஞ்சித் துண்டுகள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும். மிளகு, சீரகத்தை வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். கறிவேப்பிலை,   இஞ்சித் துண்டுகள், பெருங்காயத்தூளை சேர்த்து வறுக்கவும். எல்லாவற்றையும் அரிசி, பாசிப்பருப்புடன் சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.
பொங்கல் தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் பொங்கல் கலவையுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து (ஒரு பங்கு கலவைக்கு நான்கு பங்கு தண்ணீர்) குக்கரில் வைத்து, 5 அல்லது 6 விசில் வந்ததும் இறக்கவும். மேலாக நெய் விட்டு பரிமாற வும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 மிளகு ரச மிக்ஸ்
தேவையானவை: மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெயிலில் காயவைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பூண்டுப் பல் - 4, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: வெறும் கடாயில் புளியை நன்றாக வறுக்கவும். மிளகு, சீரகம், தனியா ஆகியவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் வறுத்த புளியைச் சேர்த்து அரைத்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.
ரசம் தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி, தேவையான தண்ணீர், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்றாக நுரை வந்ததும் இறக்கி, நெய்யில் பூண்டை வதக்கிச் சேர்க்கவும்.
ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 வெந்தயக் குழம்பு
தேவையானவை: வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள், குழம்பு வடகம் - தலா 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, உரித்த பூண்டு - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். காய்ந்த மிளகாயையும் சேர்த்து வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். சிறிது எண்ணெயில் பூண்டு, குழம்பு வடகத்தை சிவக்க வறுத்து... வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, புளியைக் கெட்டியாக கரைத்து விடவும். உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள், வெல்லம் இதில் சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். 
குழம்பு கொதிக்கும்போது வீடே மணக்கும். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். 
குறிப்பு: சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
 இஞ்சி புளி
தேவையானவை: இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 10, கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கி, ஒன்றிரண்டாக இடிக்கவும். பச்சை மிளகாயையும் இடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, சுருள வதக்கவும். இதில் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
இதை தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 எலுமிச்சம்பழ சாத மிக்ஸ்
தேவையானவை: வேர்க்கடலை, நல்லெண்ணெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, முந்திரி - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 1.
எலுமிச்சம்பழ சாதம் செய்ய: எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதில் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து வறுத்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்தால் எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் ரெடி! 
எலுமிச்சம்பழ சாதம் தேவைப்படும்போது, சாதத்தை உதிராக வடித்து... அதில் எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் கலந்து பரிமாறவும்.
ஒரு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 புளிக் காய்ச்சல்
தேவையானவை: புளி - பெரிய எலுமிச்சம்பழ அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெல்லம் - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எள் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) இவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து  வறுக்கவும். வேர்க்கடலை (அ) முந்திரி,  கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, கெட்டியான புளிக் கரைசலை விடவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் போட்டு, நன்றாக கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும்.  மேலாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
வெளியூர் பயணத்தின்போது இதை கையோடு எடுத்து சென்றால்,  தேவையானபோது உதிரான சாதத்தில் கலந்து கொள்ளலாம்.
குறிப்பு: வறுத்துப் பொடிக்கும்போது, சிறிது ஜாதிக்காயை உடைத்து, வறுத்துப் பொடித்து சேர்க்கலாம். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

தக்காளி சாத மிக்ஸ்
 தேவையானவை: பழுத்த தக்காளி - 10, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியில் மூழ்கும்வரை தண்ணீர் விட்டு, 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆறியதும் தோல் நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கியதும் இறக்கி, சேமித்து வைக்கவும்.
இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன் படுத்தலாம். தேவைப்படும் போது, சாதத்தை உதிராக வடித்து தக்காளி மிக்ஸை கலந்து சாப்பிடலாம்.
 சீரக குழம்பு
தேவையானவை: சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு, குழம்பு மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சீரகத்தைப் போட்டு பொரிக்கவும். காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றவும். உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
குழம்பு வடகத்தை தாளித்தும் சேர்க்கலாம். ஆறிய சாதத்தில் இந்தக் குழம்பை விட்டு, நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட லாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 பஜ்ஜி மிக்ஸ்
தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பச்சரிசி - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 8, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பமான காய் (வாழைக்காய், வெங்காயம், கத்திரிக்காய், பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, கேரட்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சேமித்து வைத்துக் கொள்ளவும். இதுதான் பஜ்ஜி மாவு.
பஜ்ஜி தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பஜ்ஜி மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். விருப்பமான ஏதாவது ஒரு காயை நன்றாக சீவி, ஒவ்வொரு துண்டாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
குறிப்பு: சோடா உப்புக்கு பதிலாக, ஒரு டேபிள்ஸ்பூன் புளித்த தோசை மாவை பஜ்ஜி மாவுடன் சேர்த்தாலும் உப்பலாக வரும்.  இரண்டு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 ரவா இட்லி மிக்ஸ்
தேவையானவை: ரவை - 100 கிராம், முந்திரி - 10, ஒன்றிரண்டாக பொடித்த மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கி காய வைத்த இஞ்சி - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு. 
ரவா இட்லி செய்ய: தயிர் - 2 கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ரவையை கடாயில் நன்றாக வாசனை வரும்வரை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உடைத்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி சேர்த்து வறுத்து, ரவையுடன் சேர்த்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.
ரவா இட்லி தேவைப்படும்போது அரை மணி நேரத்துக்கு முன்பாக, ரவை கலவையில் தயிர், உப்பு,  சோடா உப்பு கலந்து கொத்தமல்லி போட்டு கலக்கவும். இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, வெந்ததும் எடுக்கவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.
 தனியா குழம்பு
தேவையானவை: தனியா - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, புளி - நெல்லிக்காய் அளவு, நறுக்கிய பூண்டுப் பல் - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் தனியா, மிளகாயை சிவக்க வறுத்துப் பொடிக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து... வறுத்துப் பொடித்த தனியா - மிளகாய்தூளை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும் இறக்கவும். சிறிது எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி, குழம்பில் சேர்க்கவும்.
இது பத்திய குழம்பு. பசி எடுக்க வைக்கும். ஜீரணத்துக்கு நல்லது.
குறிப்பு: இதை இரண்டு வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். வறுத்துப் பொடிக்க நேரமில்லாதவர்கள், தனியாத் தூள், மிளகாய்த்தூள் வாங்கி சேர்க்க லாம்.
 அடை மிக்ஸ்
தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், பச்சரிசி - 50 கிராம், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 75 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.
அடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ரவை போல் அரைத்தால்... அடை மிக்ஸ் ரெடி! அதிக அளவு மாவு தேவையாக இருந்தால் மெஷினில் அரைக்கலாம்.
அடை தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு அடை மாவு மிக்ஸ், உப்பு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு அடை மாவு பதத்தில் கரைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, சூடான தோசைக்கல்லில் மாவை சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு மொறுமொறுவென எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள வெல்லம், வெண்ணெய், தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும். இந்த மிக்ஸை மாதக்கணக்கில் பயன்படுத்தலாம்.
 குழம்பு பவுடர்
தேவையானவை: மிளகு - 75 கிராம், சீரகம், தனியா - தலா 50 கிராம்.
குழம்பு செய்ய: புளி - நெல்லிக்காய் அளவு, பூண்டுப் பல் - 10,    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மிளகு, சீரகம், தனியாவை ஒன்றாக மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றி... உப்பு, மஞ்சள்தூள், அரைத்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி குழம்பில் சேர்த்து இறக்கவும் 
சூடான சாதத்தில் கலந்து நெய் சேர்த்து சாப்பிடலாம். இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்த லாம்.
 அரிசி - பருப்பு சாதம்
தேவையானவை: சாப்பாட்டு புழுங்கலரிசி - கால் கிலோ, துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் (அ) நறுக்கிய வெங்காயம், குழம்பு வடகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு - 3 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள்,     மஞ்சள்தூள், பூண்டு, உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, குழம்பு வடகம் தாளித்து, தேங்காய் துருவல் (அ) நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கலந்து, சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.
இதற்கு வறுத்த வெங்காய வடகம், அப்பளம் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.
அரிசி - பருப்பு தோசை மிக்ஸ்
தேவையானவை: இட்லி புழுங்கலரிசி - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தனியா - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், காய்ந்த கறிவேப்பிலை, சீரகம் - சிறிதளவு. 
தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ரவை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தோசை தேவைப்படும்போது, அரைத்த மாவை தேவையானஅளவு எடுத்து... உப்பு, தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். 2 மணி நேரம் கழித்து, வெங்காயம் சேர்த்துக் கலந்து, காயும் தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
சட்னியுடன் சூடாகப் பரிமாறலாம். இந்த தோசையை செய்வதும் ஈஸி... சுவையும் வித்தியாசமாக இருக்கும். ஆறு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 வெங்காய குழம்பு
தேவையானவை: பொடி யாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 50 கிராம், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, குழம்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு, குழம்பு மிளகாய்தூள், மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து, குழம்பு நன்றாக மனம் வந்து கொதித்ததும் இறக்கவும்.
இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 உளுந்து வடை மிக்ஸ்
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 100 கிராம், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு (அ) காய்ந்த மிளகாய் - தேவையான அளவு, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.
வடை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, மிளகு (அ) மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
வடை தேவைப்படும்போது, இந்த மாவுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் விட்டு வடை மாவு பதத்தில் பிசையவும். 10 நிமிடம் ஊற வைத்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.  ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 பருப்பு வடை மிக்ஸ்
தேவையானவை: கடலைப்பருப்பு - 2 கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த இஞ்சி, உலர்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.
வடை செய்ய: நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு, தனியா, பெருங்காயத்தூள், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும்.
வடை தேவைப்படும்போது, அரைத்த மிக்ஸுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, நெய், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசையவும். பதினைந்து நிமிடத்தில் வடை மாவு நன்றாக ஊறிவிடும். இந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
 தொகுப்பு: ரேவதி,
படங்கள்: எம்.உசேன்,
வி.செந்தில்குமார்
Source - Vikatan

டோனி C.E.O.

டோனி C.E.O.


''எந்த ஒரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு டீம் இருக்கிறது. அந்த டீமை வழிநடத்திச் செல்ல ஒரு தலைவன் இருக்கிறான். டீம் என்னதான் சிறப்பாக இருந்தாலும், அதை வழிநடத்திச் செல்லும் தலைவன் திறமை மிக்கவனாக இருந்தால் மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும்!''.
விளையாட்டு அணியாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, கார்ப்பரேட் நிறுவன மாக இருந்தாலும் சரி, வெற்றிக்கான அடிப்படை சூத்திரம் இது. அந்த வகையில் இன்றைக்கு எல்லோருமே பாராட்டும் ஒரு தலைவன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனிதான்.
28 ஆண்டு காலமாக  கைக்கெட்டாமலே போன உலகக் கோப்பையை நமக்கு வெற்றிகரமாக வாங்கித் தந்தவர் டோனி. அவர் மாதிரி ஒரு கேப்டன் ஒவ்வொரு பிஸினஸ் நிறுவனத்துக்கும் கிடைத்தால், அந்த நிறுவனம் வெற்றி பெறுவது நிச்சயம்.

அந்த வகையில், ஒரு பிஸினஸ் நிறுவனத்தின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாடங்களை டோனியிடமிருந்து கற்றுக் கொள்ள முடியுமா? டோனியின் தலைமைப் பண்புகளை தனித்தனியாக எடுத்துச் சொல்ல முடியுமா? என 'கிரேட் லேக்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’-ன் பேராசிரியர் ஆர்.எஸ்.வீரவல்லியிடம் கேட்டோம். உற்சாகமாக எடுத்துச் சொன்னார் அவர்.
''விளையாட்டும் பிஸினஸும் ஒன்றல்ல. இரண்டையும் இயக்கும் விதிகள் வேறு வேறானவை. ஆனால், ஒரு பிஸினஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. அல்லது எம்.டி. என்பவர் எப்படிப்பட்ட தலைமைப் பண்புகளைக் கொண்டிருந்தால் அந்த நிறுவனத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதை டோனியிடமிருந்து நிறையவே கற்றுக் கொள்ள முடியும். அந்த விஷயங்களை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.''
தீர்க்க தரிசனம்!
ஆங்கிலத்தில் இதை 'விஷன்’ என்பார்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நம் இலக்கு என்ன அல்லது நாம் எதை அடையப் போகிறோம் என்கிற 'விஷன்’ முக்கியம். சுதந்திர இந்தியா என்பது காந்தியின் விஷனாக இருந்தது. சுயசார்பு பொருளாதாரம் நேருவின் விஷனாக இருந்தது. அது மாதிரி டோனிக்கும் கிரிக்கெட்டில் ஒரு தெளிவான 'விஷன்’ இருந்தது. உலகக் கோப்பையை நாம் மீண்டும் பெற வேண்டும் என்பதே அந்த 'விஷன்’. எந்த ஒரு பிஸினஸ் நிறுவனமாக இருந்தாலும் இது மாதிரி ஒரு 'விஷன்’ கட்டாயம் வேண்டும்.
ஒருங்கிணைப்பது!
ஒரு சரியான குழுவினைத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைப்பது என்பது ஒரு சிறந்த தலைவனின் அடுத்த பணி. இதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, குழுவின் ஒவ்வொரு அங்கத்தினரும் திறமையானவராக இருக்க வேண்டும், அதோடு அவர்கள் எல்லோரையும் முழுமையாக ஒருங்கிணைக்க வேண்டும்.  லட்சியம் எதுவாக இருந்தாலும்  குழு உறுப்பினர்கள் அனைவரையும் அதை நோக்கி ஒருசேர அழைத்துச் செல்வது ஒரு தலைவனின் முக்கியப் பணி.
'விஷன்’ எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதை தனது குழு உறுப்பினர்களிடம் எடுத்துச் சொல்லி, பரபரப்பையும் உத்வேகத்தையும் அவர்களிடம் உருவாக்க வேண்டும். பல நேரங்களில் நமது லட்சியத்தை அடைய முடியாமல் போவதற்கு காரணம், நமது குழு உறுப்பினர்களிடம் நம் லட்சியத்தை சரிவரச் சொல்லாமல் விட்டுவிடுவதுதான்.நமது பிஸினஸ் நிறுவனங்களில் நான் பார்க்கும் முக்கியமான குறைபாடு இது என்றுகூட சொல்வேன்.
உலக கிரிக்கெட் போட்டியின்போது டோனி கொடுத்த ஒவ்வொரு பேட்டியிலும் தனது அணியால் கோப்பையை பெற முடியும் என்பதை திரும்பத் திரும்ப சொல்லி, நம்பிக்கையை வளர்த்தார். இந்திய அணி வீரர்கள் கடைசி வரை உற்சாகமாக விளையாட இதுவே காரணம்.
வெற்றிக்கான உத்திகள், ராஜ தந்திரம்!
நோக்கம் இன்னதென்று தெரிந்தவுடன் அதை நடைமுறைச் சாத்தியமான விஷயமாக மாற்றும் திறமை ஒரு தலைவனுக்கு வேண்டும். எந்த இலக்கானாலும் அதை அடையத் தகுந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நம் முன் இருக்கும் சவால்கள் என்ன, தடைகள் என்ன, வாய்ப்புகள் என்ன என்பதை ஆராய வேண்டும். நமது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை விருப்பு, வெறுப்பில்லாமல் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
வெற்றிக் கோப்பையைப் பெறத் தேவையான சூழலை டோனி நமது அணி வீரர்களிடம் சிறப்பாக உருவாக்கினார். அதற்கு அவரது, சூழ்நிலையினை துல்லியமாக உணரும் திறன் ஒரு முக்கியமான காரணம். மேனேஜ்மென்ட் படிப்பில் இதனை 'ஸ்வாட் அனாலிசிஸ்’ (ஷிகீளிஜி ணீஸீணீறீஹ்sவீs) என்கிறோம்.   பல சமயங்களில் நாம் லட்சியத்தை அடைய முடியாமல் போகக் காரணம் வெற்றி நோக்கிச் செல்வதற்கான உத்தியை, வழியை, வியூகத்தை (stக்ஷீணீtமீரீஹ், tணீநீtவீநீs) அமைப்பதில் நாம் கோட்டை விட்டுவிடுவதுதான்!

திட்டமிடல்!
எந்த லட்சியத்தை, எத்தனைபேர் உதவியோடு அடையப் போகிறோம் என்பதோடு, அதை எப்படி அடையப் போகிறோம் என்பதைத் திட்டமிட வேண்டும். இந்த விஷயத்தில் நம் பிஸினஸ் நிறுவனங்கள் கொஞ்சம் வீக் என்பது இன்னொரு பெரிய குறைபாடு. உற்பத்தியை இருமடங்காகப் பெருக்குவது என தீர்மானித்துவிட்டால்,  மூலப்பொருளை எங்கிருந்து வாங்குவது? அதற்கான பணத்தை எங்கிருந்து திரட்டுவது என்பதை கவனிக்க வேண்டும். எத்தனை பெரிய லட்சியமாக இருந்தாலும் அதை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து, அதை உங்கள் டீம் முழுக்க கொண்டு போய் சேர்த்தாலே  நிச்சயம் வெற்றிதான்.
நிர்வாகம், வழி நடத்துதல்!
திட்டமிட்டால் மட்டும் போதாது; அதை நடைமுறைப்படுத்த வேண்டும். உலகக் கோப்பை போட்டிகளின்போது, எந்த அணியோடு மோதும் போது எந்த விதமான ஆட்டமுறையை பின்பற்ற வேண்டும்? நிதானமான ஆட்டமா, இல்லை அதிரடி ஆட்டமா? முதலில் யாரை களத்தில் இறக்குவது? யாருக்கு எத்தனை ஓவர்? என்பது போன்ற அத்தனை விஷயங்களையும் சரியாகவே தீர்மானித்து அதன்படியே நிறைவேற்றியதால்தான் டோனியால் ஆஸ்திரேலியா போன்ற மிகப் பெரிய அணியைக்கூட எளிதில் வெற்றிகாண முடிந்தது.
ஒரு திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியபிறகு, ஒரு தலைவன் ஓயாது தன் குழுவினை இயக்கி - தட்டிக் கொடுத்து, நிறைகுறைகளைக் கூர்ந்து கவனித்து, நெறிப்படுத்தி, இலக்குகளை அடையும் வரையில், முன்நடத்திச் செல்ல வேண்டும்.
வெற்றியைக் கொண்டாடுவது!
வெற்றி இலக்கினை எட்டியவுடன் ஒரு தலைவன், குழுவினரின் பங்களிப்பைப் பாராட்டிப் புகழ்ந்து அதனைக் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும். சிறப்பாக விளையாடிய வீரர்களை, அங்கத்தினரை கௌரவித்துப் பரிசுகள் அளிக்க வேண்டும். உலகக் கோப்பையில், ஒவ்வொரு போட்டி முடிந்தபிறகும் ஆட்ட நாயகனை அறிவித்து பரிசளித்து கொண்டாடியதை நாம் டி.வி-யில் பார்த்தோம்.
நம் பிஸினஸ் நிறுவனங்கள் வெற்றி என்று வரும்போது சில சமயம் அதை செயல்படுத்திய மேனேஜர்களையும் ஊழியர்களையும் பாராட்ட மறந்து விடுகின்றன. தோல்வி என்று வரும்போது அவர்களை மட்டுமே குறை சொல்கின்றன. எல்லோரும் இணைந்து பெறுவதுதான் வெற்றி என்பதை உணர்ந்து நடக்கும் நிறுவனமே வெற்றி பெறும்.
தலைவனின் நடத்தை!
ஒரு தலைவன் செயல்படும் விதத்தைக் கண்டு பலரும் பாராட்டலாம்; விமர்சிக்கலாம். சில சமயங்களில் கடுமையாகத் திட்டக்கூட செய்யலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் சமமாக எடுத்துக் கொண்டு வெற்றியை நோக்கி தனது குழுவை அழைத்துச் செல்லும் திறமை டோனிக்கு இருந்தது. வெற்றி பெற்றபோது அதை தனது குழுவின் சாதனையாகவும் தோல்வி என்று வரும்போது அதை தனது தவறாகவும் எடுத்துக்கொள்பவனே சிறந்த தலைவன்.  ஒரு அணியின் தலைவனை அந்த அணியின் உறுப்பினர்கள் அனைவருமே கருத்து வேறுபாடு இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். டீமின் சீனியர் - ஜூனியர் உறுப்பினர்கள் அனைவருமே மதித்து நடப்பவராக அவர் இருக்க வேண்டும். சீனியர் வீரரான சச்சின் டெண்டுல்கர்கூட டோனியை தனது தலைவனாக ஏற்றுக் கொண்டார்.
எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தலைவனால்தான் எந்த லட்சியத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்ட முடியும்!''
- ஏ.ஆர்.குமார்


Source - Vikatan Magazine