3-வது குற்றப் பத்திரிகையில் ஜெகத் கஸ்பர்?
விரிகிறது ஸ்பெக்ட்ரம் வலை
அலைக்கற்றை ஊழலில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கடந்த டிசம்பர் 15-ம் தேதி, ஜெகத் கஸ்பர் நடத்தும் 'தமிழ் மையம்’ அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. மீடியாக்களில் முகம் வந்துவிடுமோ என, ரெய்டுக்குப் பிறகும் இருட்டு அறையிலேயே உட்கார்ந்திருந்த கஸ்பர், நீண்ட நேரத்துக்குப் பின் வெளியே வந்து, பத்திரிகையாளர்களைத் தவிர்க்க முடியாமல் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு ஓடினார்.
மறுநாள் செய்தியாளர்களைச் சந்தித்த கஸ்பர், ''அலைக்கற்றை ஊழலில் தமிழ் மையம் மற்றும் என் மீது சந்தேகங்களை எழுப்புவது அபாண்டமானது. அரசியல் ஆளுமைகளோடு இணைந்து செயல்படும் ஒரே காரணத்துக்காக சந்தேகப்படுவது அநீதியானது!'' என்று சீற்றம் காட்டினார். மேலும், ''நிரந்தரக் குழப்பவாதிகளான சோ.ராமசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகிய இருவரும், இந்த சி.பி.ஐ. சோதனையைப் பயன்படுத்தி, தமிழ் மையம் மூலமாக அலைக்கற்றை ஊழல் பணம் விடுதலைப் புலிகளுக்குச் சென்று இருக்கலாம் என்பது போலப் பேசி வருவது விஷமத்தனமானது. அவர்களின் பேச்சு அவதூறு பரப்பும் நோக்கம்கொண்டது. அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்வோம்...'' என்று அறிவிக்கவும் செய்தார் ஜெகத் கஸ்பர்.
தமிழ் மையத்துக்கு நிதி அளித்தவர்களின்பட்டியல் குறித்துக் கேட்டபோது, ''கணக்குகள் எல்லாம் முறையானவை. விவரமாகப் பார்க்க வேண்டுமானால், இன்னொரு நாள் எங்கள் அலுவலகத்துக்கு வந்து பார்க்கலாம்...'' எனக் கூறியவர், நன்கொடை கொடுத்தவர்களைப்பற்றி மட்டும் கடைசி வரை வாய் திறக்கவில்லை.
'அவதூறு’களை சட்டப்படி எதிர்கொண்டாரோ இல்லையோ... சட்டம் அவரை எதிர்கொள்வதற்கான முகாந்திரங்கள் தெரிகின்றன. தமிழ் மையத்துக்கு அள்ளிக் கொடுத்த நிறுவனங்களின் விவரம் இப்போது நீதிமன்றப் படியேறி உள்ளது.
'முறைகேடாக அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தமிழ் மையத்துக்கு நன்கொடை கொடுத்துள்ளன. அதுபற்றி சி.பி.ஐ. விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என, பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து, அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்து உள்ளார். 'ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் இன்று சாட்டை சுழற்றுவதற்கு முக்கியக் காரணமான இந்த பிரசாந்த் பூஷண்,
'அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாக, கனிமொழி மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த நன்கொடை விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அலைக்கற்றை ஊழலுடன் தொடர்பு உடையதாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்’ என்கிறார்.
2007-ம் ஆண்டு முதல், கோடிகளில் செலவிடப்படும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் சுற்றுலாத் துறைதான் பெரும்பாலான உதவிகளைச் செய்கிறது. இந்த நிலையில், 2008-ம் ஆண்டு ஜனவரியில்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களும், தமிழக அரசின் ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களும், தமிழ் மையத்துக்கு லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து இருக்கின்றன.
2ஜி ஒதுக்கீடு செய்யப்பட்ட அதே ஜனவரி மாதத்தில், 5 மற்றும் 7-ம் தேதிகளில் யுனிடெக் நிறுவனம் 50 லட்சம், டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் 25 லட்சம், ஷ்யாம் டெலிகாம் 10 லட்சம், ரிலையன்ஸ் கேபிட்டல் 25 லட்சம் எனத் தமிழ் மையத்துக்கு வாரி வழங்கி உள்ளன.
'அலைக்கற்றை ஊழலில் கூட்டுச் சதியாளராக நிற்கும் கனிமொழி, தன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் தவறாகப் பயன்படுத்தி இந்த நன்கொடையைப் பெற்றுள்ளார். ஊழல் பணத்தை நன்கொடையாகப் பெற்ற காரணத்தால், தமிழ் மையமானது 2ஜி வழக்கில் சேர்க்கப்படுவது தவிர்க்க முடியாதது!’ என்கிறார்கள் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள். தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் என்ற முறையில், பாதிரியார் ஜெகத் கஸ்பர் உட்பட சிலர் மீது, விரைவில் (மூன்றாவது) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்கிறது சி.பி.ஐ. வட்டாரம்!
- தமிழ் சிற்பி
அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த இந்தியா புல்ஸ் நிறுவனம், 31.7.2007 அன்று தமிழ் மையத்துக்கு 50 லட்சம் பணம் கொடுத்து உள்ளது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கீடு கிடைக்கவில்லை. இது தவிர, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா 2 லட்சம், நல்லி குப்புசாமி 4.94 லட்சம், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் 5 லட்சம் (தமிழக அரசின் மது சப்ளையர்ஸ்), சாதிக் பாட்சாவின் கிரீன் ஹவுஸ் லிமிடெட் 5 லட்சம், மெட்ராஸ் சிமென்ட்ஸ் 2.5 லட்சம், ராம்கோ சிமென்ட்ஸ் 7.5 லட்சம் கொடுத்து உள்ளார்கள். இந்த நிறுவனங்களைத் தவிர, தமிழக அரசில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தி வரும் ஈ.டி.ஏ. ஸ்டார் நிறுவனம் 7.1.2008 அன்று, தமிழ் மையத்துக்கு 1 கோடி கொடுத்து உள்ளது. ஈ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு சுமார் 750 கோடியை தமிழக அரசு பிரீமியத் தொகையாக செலுத்துகிறது. இந்த நிலையில்தான், சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒரு கோடி நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது என்பதால், இதுவும் ஊழல்தான் என்றும் தனிப் பிரச்னை கிளம்பி இருக்கிறது!
Source - Vikatan Magazine