Saturday, May 7, 2011

30 வகை தயிர் -மோர் ரெசிபி !

நாக்குக்கு ருசியாக என்பதோடு... உடலுக்குப் பொருத்தமானதாகவும் சாப் பாடு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமல்லவா! அதனால், அதீத குளிர்ச்சி தேவைப்படும் இந்தக் கோடைக்கேற்ப 30 வகை தயிர்-மோர் ரெசிபிகளை இங்கே சமைத்திருக்கிறார் 'சமையல் கலை வித்தகி' கிருஷ்ண குமாரி ஜெயக்குமார்!
ருசியாக சமைப்பதோடு, அதை ரசனையுடன் பரிமாறுவதிலும்தான் இருக்கிறது நளபாக சூட்சமம். அந்த வகையில், நாவில் நீர் ஊறவைக்கும் இந்த 30 வகை ரெசிபிகளை இங்கே அழகாக அலங்கரித்திருக்கிறார் 'செஃப்' ரஜினி (சென்னை அருகேயுள்ள பள்ளிக்கரணையில் 'ஸ்டார் கார்விங்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், திருமண வைபவங்கள், விழாக்கள், வீட்டு விசேஷங்களில் காய்கறி மற்றும் பழங்களை அலங் கரித்துத் தருவதோடு, காய்கறி, பழங்கள், ஐஸ், பட்டர், சாக்லேட் மற்றும் தெர்மகோலில் கார்விங் செய்வது பற்றிய பயிற்சியையும் கொடுக்கிறார்).
இருவரின் கை வண்ணத்தில் இங்கே மிளிரும் தயிர்-மோர் ரெசிபி கள், 'ஜில்லுனு ஒரு கோடைக்காலத்தை' உங்களுக்கு உரித்தாக்கட்டும்!
எப்போதும் காரசாரமாக சாப்பிடுபவர் கள், இந்த சீஸனில் காரத்தை முற்றிலும் குறைத்துக் கொள்வது நல்லது.
 வெங்காயம் உடலைக் குளிர்ச்சியாக் கும் தன்மை கொண்டது.
 வெயில் காரணமாக நாம் அதிக அளவில் இழக்கும் சக்தியை திரும்பவும் மீட்டுத் தருவதில் எலுமிச்சைக்கு நிகர் இல்லை.
 தக்காளி ஜூஸில் சிறிது தேன் கலந்து பருகும்போது வெயிலால் உண்டான உடல் உஷ்ணம் தணியும்.
 கோடை வெயிலில் தவிர்க்க முடியாமல் சுற்ற வேண்டியிருந்தால்.. கையோடு இஞ்சியை அரைத்து சாறெடுத்து சிறிது தேன், தண்ணீர் ஊற்றி கலந்து பாட்டிலில் எடுத்துச் செல்லுங்கள். பயணத்துக்கு ஏற்ற பானம் இது.
 சூரிய உஷ்ணத்தால் உடலிலிருந்து வெளியேறக்கூடிய தாது உப்பு மற்றும் சக்தியை ஈடு செய்ய உதவுகிறது வெள்ளரிக்காய்.
 உடல் சீதோஷணத்தை சீராக வைத்துக் கொள்வதில் வாழைப்பழத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
 உடல் உஷ்ணத்தையும், தாகத்தையும் தணித்து, வயிற்றைக் குளுமையாக்கும் தர்பூசணி, கண்ணுக்கும் நல்ல குளிர்ச்சியைத் தரும்.
அதிக அளவு தாது உப்புக்கள் நிறைந்த இளநீர், தாகத்தை தணிப்ப துடன், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
 ஸ்ரீகண்ட்
தேவையானவை: கெட்டித் தயிர் - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 25 கிராம், குங்குமப்பூ (பாலில் ஊற வைக்கவும்) - கால் டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி தண்ணீர் வடியும் வகையில் 2 மணி நேரம் வைக்கவும். தண்ணீர் முழுவதுமாக வடிந்ததும் தயிரை ஒரு பாத்திரத்தில் போடவும். இதில் பொடித்த சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை சிறிய கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.
 பூசணி - தயிர் பச்சடி
தேவையானவை: வெண் பூசணி - ஒரு கீற்று, தயிர் - 100 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூசணிக்காயைத் துருவி நீரை வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பூசணித் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பச்சை மிளகாய், சீரகம் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். வதக்கிய பூசணியை, தயிர் கலவையுடன்  கலந்து பரிமாறவும்.
 மின்ட் கூலர்
தேவையானவை: மோர் - 150 மில்லி, புதினா இலை - 12, இஞ்சித் துருவல், மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புதினா, இஞ்சி, மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, மோரில் கலக்கவும். நன்றாக குளிர வைத்துப் பரிமாறவும்.
 மாம்பழ ஸ்மூத்தி
தேவையானவை: மாம்பழம் - 1, பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், கெட்டித் தயிர் (துணியில் கட்டி நீரை வடித்து எடுக்கவும்) - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - சிறிதளவு.
செய்முறை: மாம்பழத்தை நறுக்கி துண்டுகளாக்கவும். கொஞ்சம் துண்டுகளை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதியை கூழாக்கவும். இதில் சர்க்கரை, வடிகட்டிய தயிர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிய கப்களில் மாம்பழக் கலவையை ஊற்றி, மாம்பழத் துண்டுகளை மேலாகத் தூவி, குளிர வைத்துப் பரிமாறவும்.
வெள்ளரி மோர்
தேவையானவை: தயிர் - 100 கிராம், சிறிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் - தலா 1, நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளரிக் காயை நறுக்கி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு முறை சுற்றி... தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். வடிகட்டி குளிர வைத்துப் பரிமாறவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
 இஞ்சி - தயிர் பச்சடி
தேவையானவை: இஞ்சித் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தயிர் - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந் ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப் பிலை சேர்த்து தாளிக்கவும். துருவிய இஞ்சியை அதில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். தயிரில் உப்பு சேர்த்துக் கலக்கி, வதக்கிய இஞ்சித் துருவல் கலவையுடன் கலந்து பரிமாறவும்.
இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.
 கார்ன் தயிர் வடை
தேவையானவை: சோள முத்துகள் - 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, தயிர் - 100 கிராம், பெருங்காயத் தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய கறிவேப்பிலை கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோளத் துடன் இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல் அரைக்கவும். அரைத்த மாவை வடை போல் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தயிருடன் உப்பு சேர்த்து அடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து தயிரில் சேர்க்கவும். வடைகளின் மேலாக தயிரை ஊற்றி... மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
 சேமியா பகாளாபாத்
தேவையானவை: சேமியா - 100 கிராம், தயிர் - 50 கிராம், பால் - 50 மில்லி, இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, திராட்சை, மாதுளை முத்துக்கள் - ஒரு கைப்பிடி, ஆப்பிள் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, ஒரு நிமிடம் வைத்திருந்து வடிகட்டவும், கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும். இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை தாளிப்புடன் சேர்த்துக் கலக்கவும். இதை சேமியாவில் சேர்த்துக் கலந்து... பால், பழங்களை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
அப்படியே சாப்பிடலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
 பழ தயிர் பச்சடி
தேவையானவை: ஆப்பிள், வாழைப்பழம் - தலா 1, கறுப்பு, பச்சை திராட்சை (சேர்த்து) - 50 கிராம், மாதுளை முத்துக்கள் - 2 டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு சுளைகள் - 10, பப்பாளி - ஒரு பெரிய துண்டு, ஸ்ட்ராபெர்ரி - 4, தயிர் - 100 கிராம், தேன் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: பழங்களைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லாப் பழங்களையும் போட்டு, தயிர் சேர்த்து நன்றாகக் கிளறவும். மேலாக தேனை ஊற்றிப் பரிமாறவும்.
விருந்தில் பரிமாறுவதற்கு ஏற்ற ரிச்சான பச்சடி இது!
 வெந்தய தயிர் பச்சடி
 
தேவையானவை: முளைகட்டிய வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன், தயிர் - 100 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய வெந்தயத்தை ஆவியில் 5 முதல் 8 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். வேக வைத்த வெந்தயத்தை சேர்த்துக் கிளறி... தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு ஏற்ற குளுமையான பச்சடி இது.
 டிரை ஃப்ரூட்ஸ் ரெய்தா
தேவையானவை: முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் (பொடியாக நறுக்கவும்) - தலா 2 டீஸ்பூன், பேரீச்சம்பழத் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், தயிர் - 100 கிராம், காய்ந்த திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: நெய்யில் திராட்சையை வறுக்கவும். தயிரில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட்டை தயிர் கலவையுடன் சேர்க்கவும். பேரீச்சம்பழத் துண்டுகள், வறுத்த திராட்சையையும் அதில் சேர்த்துக் கலக்கவும்.
விருந்துக்கு ஏற்ற சுவையான டிரை ஃப்ரூட்ஸ் ரெய்தா ரெடி!
 மலாய் லஸ்ஸி
தேவையானவை: தயிர் - 100 கிராம், பால் ஏடு, பொடித்த சர்க்கரை - தலா 2 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,  ரோஸ் வாட்டர் - 3 சொட்டு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: தயிருடன் உப்பு, சீரகத்தூள், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி மேலாக பால் ஏடு, ரோஸ் வாட்டரை சேர்த்துப் பரிமாறவும்.
இது... ஜீரண சக்தியைக் கூட்டும்.
 தயிர் மினி இட்லி
தேவையானவை: மினி இட்லி - 20, தயிர் - 100 கிராம், சாட் மசாலா - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு - தலா கால் டீஸ்பூன், மாதுளை முத்துக்கள், முளைகட்டிய பயறு - தலா 4 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை: தயிருடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், சாட்மசாலா சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மாதுளை முத்துக்கள், முளைப்பயறு, மினி இட்லி சேர்த்துக் கலந்து, கொத்துமல்லி தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் ஆப்பிள், திராட்சை, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சேர்க்கலாம்.
சத்தான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு இது.
 ஜவ்வரிசி மோர் தோசை
தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், புழுங்கலரிசி - 150 கிராம், பச்சை மிளகாய் - 8, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மோர் - 100 மில்லி, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைத் தண்ணீரிலும், ஜவ்வரிசியை மோரிலும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, முதலில் அரிசியைத் தனியே அரைக்கவும். மோரில் ஊறிய ஜவ்வரிசியுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாக சேர்த்து... வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.
காரச் சட்னி இதற்கு சரியான ஜோடி
 புளி சேரி
தேவையானவை: தயிர் - 100 கிராம், வெண் பூசணி - ஒரு கீற்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், சீரகம், துருவிய இஞ்சி - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 6, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூசணியைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீர்,
மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். தேங்காயுடன் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைத்து, வெந்த பூசணி, சின்ன வெங்காயம் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். தயிர் சேர்த்துக் கிளறவும். தேங்காய் எண்ணெயைக் காய வைத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வெந்த பூசணி-தயிர் கலவையில் சேர்த்துப் பரிமாறவும்.
கேரளாவில் விருந்து, பண்டிகை நாட்களில் இந்த பதார்த்தம் கட்டாயம் இடம் பெறும், பெரிய வெள்ளரி அல்லது சுரைக்காய் பயன்படுத்தியும் செய்யலாம்.
 கத்திரிக்காய் - தயிர் கிரேவி
தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ (நீளமாக நறுக்கவும்), தயிர் - 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கவும்),
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
கிரேவிக்கு அரைக்க: பட்டை, இஞ்சி - தலா ஒரு சிறிய துண்டு, சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், மிளகு - 8, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 6.
செய்முறை: தயிருடன் இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளதை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி... அரைத்த விழுதைச் சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, தயிர் கலவை, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது வதக்கிய கத்திரிக்காய் சேர்த்து மூடி, அடுப்பை 'சிம்’மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
 உருளை - தயிர் கிரேவி
தேவையானவை: சிறிய உருளைக்கிழங்கு - 12, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 5, சோம்பு - கால் டீஸ்பூன்,  பட்டை - ஒரு சிறிய துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 1, நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். தேங்காயுடன் பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கி உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் தயிர் சேர்த்துக் கலந்து இறக்கி, கொத்தமல்லி, புதினா தூவவும்.
 தஹி பிண்டி
தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, தயிர் - 100 கிராம், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு 3 நிமிடம் வதக்கி தனியே வைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி... சீரகத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, இஞ்சித் துருவல், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். வதக்கிய வெண்டைக்காய், தயிர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
இது, சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்!
 தஹி பக்கோடா
தேவையானவை: பச்சைப் பயறு - 100 கிராம், கறுப்பு உளுந்து - 50 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தயிர் - 150 கிராம், மிளகாய்த்தூள், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பயறு, உளுந்து இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து... இஞ்சி, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக் கவும். இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்த வற்றை தண்ணீரில் போட்டு தனியே எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில், தயிரை விட்டு உப்பு, சேர்த்துக் கலக்கவும். இதில் பக்கோடாக் களைப் போட்டு... மிளகாய்த் தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
 தஹி பூரி
தேவையானவை: மைதா - 50 கிராம், ரவை, கேரட் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், வேக வைத்த உருளைக்கிழங்கு - 2, சாட் மசாலா - அரை டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், தயிர் - 100 கிராம், நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதாவில் ரவை, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து... சிறு சிறு பூரிகளாக இட்டு, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெந்த உருளைக்கிழங்கை மசித்து... கேரட் துருவல், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். தயிரில் மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா சேர்த்துக் கலக்கவும்.
பூரிகளின் நடுவே சிறு ஓட்டை போட்டு, அதனுள் மசித்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து, மேலாக தயிர் ஊற்றி... கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.
 மார்வாரி கடி
தேவையானவை: புளித்த தயிர் - 100 கிராம், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பிரிஞ்சி இலை - 2, கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தயிருடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விட்டு கலந்து, மிதமான தீயில் 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். மற்றொரு கடாயில் நெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள், பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும். மிளகாய்த்தூளை ஒரு டீஸ்பூன்
தண்ணீரில் கரைத்து, தயிர் கலவையில் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
 உருண்டை மோர்க்குழம்பு
தேவையானவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா 50 கிராம், சோம்பு, மஞ்சள்தூள், கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, மோர் - 200 மில்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து... சோம்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தேங்காயுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து, தண்ணீர் விட்டு நீர்க்க கரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து... உப்பு, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை 'சிம்’மில் வைத்து ஒவ்வொரு உருண்டைகளாகப் போடவும். எல்லாம் சேர்ந்துக் கொதித்ததும், மோரில் சிட்டிகை உப்பு,
மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி, குழம்புடன் சேர்த்து, கொதித்து வரும்போது இறக்கவும். தேங்காய் எண்ணெயை மேலாக ஊற்றவும்.
 ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி
தேவையானவை: தயிர் - 100 கிராம், ஸ்ட்ரா பெர்ரி பழம் - 4, பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாக நுரை வரும்வரை மிக்ஸியில் அடிக்கவும். குளிர வைத்துப் பரிமாறவும்.
 சூரத் கடி
தேவையானவை: தயிர் - 150 கிராம், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, சர்க்கரை, நெய், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தயிரை நன்றாகக் கடைந்து, கடலை மாவு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர், சீரகம், இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய், எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கறிவேப்பிலை தாளித்து, தயிர் கலவையை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து வரும்போது கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். சூடான சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.
 தஹி ரிங் சாட்
தேவையானவை: அரிசி மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சாட் மசாலா - அரை டீஸ்பூன், ஓமப்பொடி - 2 டேபிள்ஸ்பூன், கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தயிர் - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவுடன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை கையில் எடுத்து சிறு சிறு வளையம் போல் வட்ட வடிவமாக (ரிங்) சுற்றிக் கொள்ளவும். இதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெந்த ரிங்க் துண்டுகள், கேரட் துருவல், வெங்காயம், சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், சாட் மசாலா, தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஓமப்பொடி, கொத்த மல்லியை மேலாகத் தூவி பரிமாறவும்.
 இன்ஸ்டன்ட் தயிர் வடை
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 8, தயிர் - 50 கிராம், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி விழுது - தலா ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட் துண்டுகளின் ஓரத்தை வெட்டி எடுத்துவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தயிர், கேரட், வெங்காயம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, உதிர்த்த பிரெட்டை சேர்த்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதில் சிறிது எடுத்து வடை போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். பரிமாறும்போது தயிரை சிறிது சிறிதாக ஊற்றி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
 தஹி பனீர்
தேவையானவை: பனீர் - 200 கிராம், தயிர் - 100 கிராம், இஞ்சி, பட்டை - தலா ஒரு சிறிய துண்டு, மஞ்சள்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 4, கசகசா, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, வெங்காயம் - 1 (நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகம், கசகசா, பச்சை மிளகாய், பட்டை ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும், கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும்  பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் பனீர் துண்டுகள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தயிருடன் உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி, பனீர் கலவையுடன் சேர்த்துக் கிளறி... புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சப்பாத்தி, புலாவ் வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.
 கம்பு மோர்க்கூழ்
தேவையானவை: கம்பு மாவு - 100 கிராம், மோர் - 150 மில்லி, சின்ன வெங்காயம் - 6, சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து... அதில் கம்பு மாவு, உப்பு, சீரகம் சேர்த்துக் கூழாக காய்ச்சவும். காய்ச்சிய கூழை ஆற வைத்து, மோர் சேர்த்துக் கலக்கவும். இதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துப் பருகவும்.
 மாம்பழ மோர்குழம்பு
தேவையானவை: மாம்பழம் - 1, தயிர் - 100 கிராம், இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொதிக்கவிடவும். இதில் உப்பு, கடைந்த தயிர், மாம்பழத் துண்டுகள் சேர்த்து, கொதித்து வந்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.
 மோர் வடை
தேவையானவை: புழுங்கலரிசி, புளித்த மோர் - தலா 200 கிராம், ஜவ்வரிசி - 50 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 5, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை மோரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து... இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து மீண்டும் அரைக்கவும். ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து, அரைத்த மாவுடன் சேர்க்கவும். இதனுடன் உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து, சிறிய வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
 தொகுப்பு: ரேவதி, படங்கள்: எம்.உசேன்
Source - Vikatan Magazine

Friday, May 6, 2011

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !

வாசகிகள் பக்கம்
 வாசகிகளோட 'டூ மினிட்ஸ் சமையல் ரேஸ்...' ரொம்ப ஃபாஸ்ட் ஃபார்வேர்ட்ல போயிக்கிட்டே இருக்கு. குவியல் குவியலா கிடக்கற ரெசிபிகள்ல இருந்து, இந்த இதழுக்கு 'பகாரா தொக்கு’, 'ரெடிமேட் பால்கோவா’ ரெசிபிகளைத் தேர்ந்தெடுத்து தந்திருக்காங்க 'சமையல் திலகம்’ ரேவதி சண்முகம் - கமென்ட்ஸோட!
 பகாரா தொக்கு
இரண்டு கத்திரிக்காயைப் பொடியாக நறுக்கி, நல்லெண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயம், 3 பூண்டு பல், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், கொஞ்சம் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறினால்... படுடேஸ்ட்டான பகாரா தொக்கு ரெடி!
- ரேவதி, கூடுவாஞ்சேரி.
கமென்ட்: கத்திரிக்காயை எண்ணெயில் பொரித்து வதக்கும்போது, வாசனை போய்விடும். சுட்டு வதக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
ரெடிமேட் பால்கோவா
பால் திரிந்துவிட்டால், தூக்கிக் கொட்டிவிட வேண்டாம். அதில் நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்கினால்... நொடியில் பால்கோவா ரெடி!
- லட்சுமி சுவாமிநாதன், கொல்கத்தா
கமென்ட்: பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை ஒன்றிரண்டாகப் பொடித்து மேலாக தூவிக் கொடுக்கலாம். நிறைய சத்துக்கள் கிடைக்கும்.
நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! சிறந்த ரெசிபிகளுக்கு சிறப்பான பரிசு உண்டு! ரெசிபிகள் விகடன் டாட் காம் (WWW.Vikatan.com) மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே வலம் வரும்!
உங்கள் செல்போனிலிருந்து
04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய ரெசிபியைச் சொல்லுங்கள்.
 வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.
 படங்கள்: எம்.உசேன்
Source - Vikatan Magazine

Thursday, May 5, 2011

வள்ளிக்கிழங்கு கீர்

 வாசகிகள் கைமணம்!
வள்ளிக்கிழங்கு கீர்
தேவையானவை: பெரிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் - தலா 2, பால் - ஒரு லிட்டர், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பாதாம் எசன்ஸ் - ஒரு சொட்டு, முந்திரி - 6, திராட்சை - 10, பிஸ்தா, சாரைப்பருப்பு - சிறிதளவு, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.


செய்முறை: பாலை பாதியாக சுண்டக் காய்ச்சவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட்டை தோல் நீக்கி நெய்யில் வதக்கவும் அதே நெய்யில் முந்திரி, திராட்சை, பிஸ்தா, சாரைப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும்.
வதக்கிய கிழங்கு, கேரட்டை சுண்டிய பாலில் போட்டு அடிபிடிக்காமல் கிளறவும். நன்றாகக் கொதித்ததும் பாதாம் எசன்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா சாரைப்பருப்பை சேர்க்கவும்.
- தாரா, கோவை
சோள இனிப்பு சுண்டல்
தேவையானவை: உதிர்த்த சோளம் - 2 கப், வெல்லத்தூள் - அரை கப், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய், தேன் - தலா ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை தலா - 2 டீஸ்பூன்.
செய்முறை: சோளத்தை நன்றாக வேக வைக்கவும். கடாயில் சிறிது நெய் விட்டு, தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி பாகு காய்ச்சவும். தேங்காயுடன் வெந்த சோளம், பாகு சேர்த்துக் கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். கடைசியில், தேன் சேர்த்துக் கலக்கினால் சூப்பர் சுண்டல் ரெடி!
- ஜெயலக்ஷ்மி, புதுச்சேரி
 வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன் அவருடைய கமென்ட்ஸ்...
வள்ளிக்கிழங்கு கீர்: சிறிது திக்கான தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
சோள இனிப்பு சுண்டல்: சுக்குப்பொடி சேர்த்துக் கொள்ளலாம். வாசனை தூக்கலாக இருக்கும்.
படங்கள்: எம்.உசேன்

Source - Vikatan Magazine

Wednesday, May 4, 2011

கீதை காட்டும் பாதை - 7 : நிலைத்த அறிவுடையவன் யார்?

கீதை காட்டும் பாதை - 7 : நிலைத்த அறிவுடையவன் யார்?

- என்.கணேசன்

வாழ்க்கையின் முக்கியத் தத்துவங்களை சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லக் கேட்ட அர்ஜுனனுக்கு தன்னுடைய தற்போதைய நிலை, இருக்கும் இடம் எல்லாம் மறந்தே போய் விட்டது. உண்மையை முழுமையாக அறியும் ஆர்வத்தினால் தன்னை மறந்து போன அவன் இந்த வாழ்க்கைத் தத்துவங்களை எல்லாம் முழுமையாகக் கடைப்பிடிக்கிற மனிதன் - ஸ்திதப்ரக்ஞன் (நிலைத்த அறிவு உடையவன்)-  எப்படி இருப்பான், எப்படி நடந்து கொள்வான், எப்படி வாழ்வான் என்றறிய ஆசைப்பட்டான். தத்ரூபமாக அப்படிப் பட்ட மனிதனை விவரிக்கும் படி ஸ்ரீகிருஷ்ணரைக் கேட்டான்.
ஸ்ரீகிருஷ்ணர் லட்சிய மனிதனான ஸ்திதப்ரக்ஞனை அடுத்த பதினெட்டு சுலோகங்களில் விவரிக்க ஆரம்பித்தார். இந்த 18 சுலோகங்களில் கீதையின் 18 அத்தியாயங்களின் சாராம்சமே விளக்கப்பட்டு விட்டது என்று கூட சொல்லலாம்.
மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் அவருடைய ஆசிரமத்திலும், அவருடைய நெறிகளை முழுமையாகப் பின்பற்றிய பலர் வீடுகளிலும் இந்த 18 சுலோகங்களும் மாலை நேரத்துப் பிரார்த்தனையின் போது ஓதும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. தினமும் இந்த சுலோகங்களைப் படிப்பதோடு அவற்றின் பொருளை சிந்திக்கவும் செய்தால் அவை கண்டிப்பாக மனிதனை உயர்வழியில் நெறிப்படுத்தும் என்று அவர்கள் நம்பினார்கள்.
முதலில் நிலைத்த அறிவுடையவன் யார் என்று ஸ்ரீகிருஷ்ணர் விவரிக்கிறார்.
"பார்த்தா (அர்ஜுனனின் பல பெயர்களில் இதுவும் ஒன்று), ஒரு மனிதன் மனதில் எழும் ஆசைகளை எல்லாம் உதறித் தள்ளி விட்டு தன் ஆன்மாவிலேயே ஆனந்தம் அடைவானாயின் அவனே ஸ்திதப்ரக்ஞன் எனப்படுகிறான்.


துக்கங்களைக் கண்டு யாருடைய மனம் கலங்கவில்லையோ, யார் இன்பங்களுக்காக ஏங்கவில்லையோ, இச்சை, பயம், கோபம் இவற்றிலிருந்து யார் விடுபட்டிருக்கிறானோ அவனே உறுதியான அறிவுடையவன்.
எவனுக்கு எதிலும் பற்று இல்லையோ, தனக்கு நன்மைகள் ஏற்படுகையில் மகிழ்ச்சியோ, தீமை விளைகையில் கோபமோ இராமல் எவன் உள்ளானோ அவனது புத்தியே உறுதியானது.
ஆமை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தன் உறுப்புகளை உள்ளே இழுத்துக் கொள்வதைப் போல் ஒருவன் தனது புலன்களை வெளிப் பொருள்களில் இருந்து உள்ளடக்கிக் கொள்ளும் போது அவன் புத்தி உறுதியான நிலையை அடைகிறது.
ஒரு மனிதன் புலன்களைப் பட்டினி போடுகையில் புலன்களுக்கான சாதனங்கள் அவனிடமிருந்து விலகி விடுகின்றன. ஆனால் அவற்றின் மேல் உள்ள ஆசை மறைந்து விடுவதில்லை. ஆனால் பரம்பொருளைக் கண்டவுடன் அந்த ஆசையும் மறைந்து விடுகிறது.
கௌந்தேயா (இதுவும் அர்ஜுனன் பெயர்), விவேகம் உள்ளவன் எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட அடங்காப் பிடாரியான புலன்கள் பலாத்காரமாக மனதைத் தடுமாறச் செய்து விடுகின்றன.
அவற்றை எல்லாம் நன்றாக அடக்கி யோகத்தில் அமர்ந்தவனாக என்னையே அடைக்கலமாகக் கொண்டு புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ அவனது அறிவே நிலையானது."
இந்த சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்திதப்ரக்ஞனின் மூன்று முக்கிய குணாதிசயங்களை விவரிக்கிறார்.
1) ஆசைகளைத் துறத்தல்
2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்
3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்
ஆசைகளைத் துறத்தல்:
ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர். வெளி உலகம் உள் உலகின் பிரதிபலிப்பே. யாருமே தனக்குள்ளே கிடைக்காததை வெளியில் இருந்தும் பெற முடியாது என்பது ஆணித்தரமான உண்மை.
வெளியில் ஆனந்தத்தைத் தேடுகிறோம். தோன்றும் தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்தால் அந்த ஆனந்தம் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. சரி என்று ஆசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அந்த முயற்சியிலேயே குறுக்கீடுகள் வந்தால் குமுறுகிறோம், அழுகிறோம், அங்கலாய்க்கிறோம்.
ஒருவழியாக அந்த தேவைகளையும், ஆசைகளை எப்படியோ பூர்த்தி செய்து விடுகிறோம். சரி இனியாவது ஆனந்தமாய் இருந்து விட வேண்டியது தானே. அப்படி எந்த மனிதனும் ஆனந்தமாய் இருந்ததாய் இது வரை வரலாறு இல்லை. இனியும் அப்படி ஒரு வரலாறு உருவாகப் போவதில்லை.
கிடைக்கின்ற ஆனந்தம் அலுத்துப் போகிறது. அந்த மகிழ்ச்சிக்கு எப்போதும் அற்பாயுசு தான். மனம் அடுத்த ஆசைகளையும், தேவைகளையும் அடையாளம் காட்டுகிறது. இது கிடைத்தால் தான் ஆனந்தம் என்று சொல்கிறது. மறுபடி அவற்றைப் பூர்த்தி செய்யப் போராட ஆரம்பிக்கிறோம். இந்த சக்கர வட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் தான் தெளிவு பிறக்குமே ஒழிய அதிலேயே பிரயாணித்து இதற்கு ஒரு முடிவை எட்டி விடலாம் என்று எண்ணுவது புத்திசாலித்தனமல்ல. வட்டப் பாதையில் முடிவு என்பது எங்கே இருக்கிறது?
திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்...
"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்."
(ஒரு பொழுதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால், ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாத இன்பத்தைத் தரும்)
ஆசைகளின் இயல்பே பூர்த்தியாகாத நிலை தான் என்கிறார் திருவள்ளுவர். அதனால் ஆசையையே ஒழித்தால் தான் நிலைத்த சந்தோஷம் என்கிறார். இதே கருத்தைத் தான் கீதையிலும் பார்க்கிறோம்.
2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்:
இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த நாணயத்தை நீங்கள் எடுத்தீர்களானால் இரண்டு பக்கங்களையும் நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏற்றுக் கொள்ள முடியா விட்டால் இந்த நாணயத்தை எடுத்துக் கொள்வதையே தவிருங்கள்.
இந்த தத்துவத்தை கம்ப ராமாயணத்திலும் ஓரிடத்தில் ராமன் மூலமாகக் கம்பனும் சொல்கிறான். 14 வருடங்கள் வன வாசம் ராமன் செல்கின்ற போது மந்திரி சுமந்திரன் மிகுந்த வருத்தம் அடைகிறான். அவனைத் தேற்றி ராமன் சொல்கிறான்.
"இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத்
துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?"

(இன்பம் வந்த போது இனியதாக இருக்குமானால் துன்பம் வரும் போது மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?)
3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்:
ஐம்புலன்களும் நல்ல சேவகர்கள். ஆனால் மோசமான எஜமானர்கள். சேவகர்களாக அவை இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு எஜமானராக இருக்க வேண்டும். அப்படி இருக்கா விட்டால் தானாக அவை எஜமானர்களாக மாறி உங்களை சேவகனாக ஆக்கி விடும். மோசமான ஒரு எஜமானிடம் சேவகனாக இருப்பதே பெரும்பாடு. இதில் பல எஜமானர்களிடம் ஒரு சேவகன் அகப்பட்டுக் கொண்டால் அந்த பரிதாப நிலையை விளக்க வேண்டியதில்லை.
புலன்களைப் பயன்படும் வேலையில் மட்டும் பயன்படுத்தி பின் அடக்கி வைக்க வேண்டும். இல்லா விட்டால் அவை தான் தோன்றித் தனமாக நடந்து கொண்டு தேவையில்லாத பல தகவல்களை நம்மிடம் சொல்லி, நம்மை நம்ப வைத்து, அதன் விருப்பப்படி எல்லாம் செயல்பட வைத்து நம்மை சிக்கலில் ஆழ்த்தி விடும். எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் ஆமை தன் உறுப்புகளை எப்படி தேவைப்படும் போது உள்ளடக்கிக் கொள்கிறதோ அப்படி நம் புலன்களை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உபதேசிக்கிறார்.
இந்த ஆமை உதாரணத்தை திருவள்ளுவரும் சொல்கிறார்.
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து."
ஐம்புலன்களையும் ஆமை போல் அடக்கியாளும் வல்லமை ஒரு பிறவியில் பெற்றால் கூட அது ஏழு பிறவிகளிலும் அவனைக் காக்கும் என்கிறார் அவர்.
இவ்வாறெல்லாம் செய்து பரம்பொருளை அடைக்கலம் அடைந்தால் அந்த அறிவு சிரஞ்சீவியாய் சாசுவதமாக ஒருவனிடம் நிலைத்து விடுகிறது என்கிறது கீதை. பின் எக்காலத்திலும் ஒருவன் பின் நோக்கவோ வருத்தப்படவோ அவசியம் இல்லாமல் போகிறது.
இனி அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் ஆசை அழிவுக்கு எப்படிக் காரணமாக இருக்கிறது என்பதை படிப்படியாக கணிதக் கோட்பாடு போல் விளக்க ஆரம்பிக்கிறார்.
பாதை நீளும்...
முந்தைய அத்தியாயம் - கீதை காட்டும் பாதை  6 : உயர்ந்த செயலின் ரகசியம்

Source - Vikatan Magazine

பின்லேடனைக் காட்டிக் கொடுத்தது தபால்காரரா?

பின்லேடனைக் காட்டிக் கொடுத்தது தபால்காரரா?

'கிட்னி ஃபெயிலியரால் ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார்.’ 'டைஃபாய்ட் வந்து இறந்து​விட்டார்.’ 'பின்லேடனைக் கொன்று, அவரது ஆட்களே புதைத்துவிட்டார்கள்’ - இதுவரைக்கும் எந்தத் தனிமனிதனைப்பற்றியும் இத்தனை வதந்திகள் வந்து இருக்காது. இது முளைக்கும்போதெல்லாம் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து, டி.வி. சேனல்களுக்கு வீடியோ டேப் அனுப்புவார் பின்லேடன். ஆனால், இந்த வாரம் வந்த இறப்புச் செய்தியை மறுத்து இதுவரை கேசட் வரவில்லை. 'ஒசாமா,  கொல்லப்பட்டார்’ என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தொலைக்காட்சியில் ஒப்புக் கொண்டுள்ளார்.  இந்தச் செய்தியை ஒபாமா அறிவித்தபோது, அமெரிக்​காவில் ஞாயிற்றுக்கிழமை - பின்னிரவு நேரம். இருந்தும், ஏராளமான அமெரிக்க மக்கள், வெள்ளை மாளிகையின் முன்பு திரண்டு 'யு.எஸ்.ஏ... யு.எஸ்.ஏ.’ என்று பெருமையோடு அடிவயிற்றில் இருந்து சத்தமாகக் குரல் எடுத்து, மணிக்கணக்கில் கொண்டாடினார்கள். சரிந்துகொண்டு இருந்த ஒபாமாவின் செல்வாக்கு அன்று இரவு முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துஇருக்கிறது.
ஆஃப்கானிஸ்தானில் ஆட்சி செய்வது அமெரிக்​காவின் கைப்பாவை அரசு. பாகிஸ்தானோ... அமெரிக்காவின் கையை எதிர்பார்த்து காலம் தள்ளும் இரவல் நாடுகளில் ஒன்று. இந்த இரண்டு நாடுகளின் ராணுவம், ஆயிரக்கணக்கான வீரர்கள், ஆயுதங்கள், பீரங்கிகள், விமானங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக பல செயற்கைக்கோள்கள்... என்று அனைத்தையும் பயன்படுத்தி அமெரிக்கா, ஒசாமாவை சல்லடை போட்டுத் தேடியது. இருந்தும், அவரது இருப்பிடத்தை 10 வருடங்களாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சவுதி அரேபியாவில் செல்வந்தனின் மகனாகப் பிறந்து, அரபு நாடுகளுக்காக, அமெரிக்காவை எதிர்த்துப் போராடி, பல ஆண்டு காலம் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் மறைந்து வாழ்ந்த 54 வயது ஒசாமா பின்லேடனுக்கு மொத்தம் நான்கு அல்லது ஐந்து மனைவிகள். 11 பிள்ளைகள் என்றும், இல்லை இல்லை... 23 பிள்ளைகள் என்றும் சத்தியம் செய்கிறவர்கள் உண்டு. உண்மை, பின்லேடனுக்கு மட்டுமே வெளிச்சம்!
பின்லேடனைப் பிடிக்க ஆயுதங்களும், தொழில்​நுட்பமும் இருந்தால் மட்டும் போதாது, மிகச் சரியான தொடர்புகள் வேண்டும் என்பதால், ஒசாமாவின் நான்காவது மகனான ஒமர் மூலமாக அவரைப் பிடித்துவிடலாம் என்று கணக்குப்போட்டு, அவரைத் தனது வெள்ளை மாளிகைக்கே அழைத்துப் பார்த்தார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்.
அல் ஜஸீரா சேனல் மூலமாக அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து ஒசாமா பின்லேடன் அனுப்பும் ஒவ்வொரு வீடியோ டேப்பையும் அமெரிக்கா, இன்ச் இன்ச்சாக அலசும். அதன் கண்ணில் மண்ணைத் தூவ வேண்டும் என்று ஒசாமா, தனது டேப்புகளின் பின்னணியில் மண்ணைத் தவிர வேறு எதையுமே காட்டுவது இல்லை. இருந்தாலும் அதையே ஒரு க்ளூவாக வைத்து மண்ணியியல் அறிஞர்களைக்கொண்டு, 'இது பாகிஸ்தான் மண்ணா? காஷ்மீரை ஒட்டியிருக்கும் மண்ணா? இல்லை... ஆஃப்கானிஸ்தான் மண்ணா?’ என்று கண்ணில் விளக்கெண்ணெய் போட்டு அலசியது அமெரிக்கா.
அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது, 'நானோ, அமெரிக்​காவோ, இஸ்லாமியர்​களுக்கு விரோதி அல்ல’ என்ற செய்தியை  ஒபாமா அழுத்தம் திருத்தமாக உலகின் இஸ்லாமிய நாடுகளுக்குப் பிரகடனப்படுத்தினார். அப்போது, 'இந்த கதை எல்லாம் வேணாம்’ என்று ஒபாமாவைப் புறம்தள்ளிய பின்லேடன், அமெரிக்க மக்களைப் பார்த்து, ''உங்கள் ஜனாதிபதி சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக அமெரிக்கா தொடுத்திருக்கும் யுத்தத்தை நிறுத்த, ஒபாமாவால் முடியாது. ஆட்சி அதிகாரத்தில் நீக்கமற நிறைந்து இருக்கும் யூதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து, நீங்கள் உங்கள் நாட்டை மீட்டால் மட்டுமே இது சாத்தியப்படும்!’ என்று சொல்லி ஒபாமாவுக்கே ஓமக் கஷாயம் கொடுத்தார்!
பின்லேடனின் இருப்பிடத்தை அமெரிக்கா கடைசியாக எப்படிக் கண்டுபிடித்தது? 'அமெரிக்கா கொடுத்த அழுத்ததைத் தாக்குப்​பிடிக்க முடியாமல், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. போட்டுக் கொடுத்து இருக்கும்’ என்று ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்புகின்றன.
எட்டு மாதங்களுக்கு முன்பே, அதாவது கடந்த ஆகஸ்ட் மாதமே, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் இருக்கும் அபோட்டோபாத் என்ற சிற்றூரில், பின்லேடன் தங்கி இருக்கும் வீட்டை அமெரிக்கா அடையாளம் கண்டுகொண்டது. அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற வீடுகளைவிட அது சுமார் எட்டு மடங்கு பெரியது. வீட்டைச் சுற்றி சிறையைப்போல் உயரமான மதில் சுவர். அந்த வீட்டில் தொலைபேசியோ, இன்டர்நெட் இணைப்போ இல்லை என்பதால்,  உளவு பார்ப்பது அமெரிக்காவின் உளவுத் துறையினருக்கு சுலபமானதாக இல்லை. அந்த வீட்டில் இருந்து வெளி உலகத்தோடு தொடர்புவைத்து இருப்ப​வர்கள், இரண்டே இரண்டு நபர்கள்தான். ஒருவர், வேலைக்காரப் பெண்மணி. இன்னொருவர், பின்லேடனுக்கும், அவரது ஆட்​களுக்கும் பாலமாக செயல்படும் தனிப்பட்ட தபால்​காரர். இவரைவைத்துத்தான் அமெரிக்க உளவு அதிகாரிகள் முக்கியமான பல தகவல்களைப் பெற்றிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இவர்கள் தவிர, பின்லேடன் அவரது இரண்டு மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகளும் இங்கே வசித்தனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு... பின்லேடனின் வீட்டுக்குச் செல்லும் சாலைகளை 'சீல்’ செய்துவிட்டு, அமெரிக்க ராணுவம் அந்தப் பகுதியில் புகுந்தது. சில ஹெலிகாப்டர்களும் உதவி செய்ய... நள்ளிரவு 1.15 மணிக்கு அதிரடிக் காட்சிகள் ஆரம்பமாகின. ஆனால், 'அதற்குப் பிறகு என்ன நடந்தது? எப்படி நடந்தது?’ என்று தெரியவில்லை. தீப்பிடித்து எரியும் ஒரு ஹெலிகாப்டரையும், உயர்ந்த மதில் சுவர்களைக்கொண்ட ஒரு வீட்டையும் காட்டிவிட்டு, 'பின்​லேடன் இறந்துவிட்டார். இந்த அதிரடித் தாக்குதலில், அமெரிக்கா சிப்பாய்கள் யாரும் பலியாகவில்லை’ என்று ஒபாமா சொல்லி, தனது பாப்புலாரிட்டி ரேட்டிங்கைக் கூட்டிக்கொண்டு இருக்​கிறார்.
பின்லேடன் மறைந்து வாழ்ந்த வீட்டுக்கும், பாகிஸ்தானின் மிலிட்டரி அகாடமிக்கும் இடையே இருந்தது மிகச் சில மீட்டர்களே என்பதுதான், இதில் கவனிக்க வேண்டிய விஷயம். 'ஒசாமா, பாகிஸ்தானில்தான் மறைந்து  இருக்கிறார்’ என்று கோபக் குரல்கள் எழுந்தபோது, அதை மறுத்த பாகிஸ்தான், 'பின்லேடன் கொல்லப்பட்டதில், தனக்கும் பங்கு இருப்பதாக’ இப்போது சொல்ல ஆரம்பித்து உள்ளது.
எந்த வகையில் பார்த்தாலும் பின்லேடனின் மரணம்கூட பிரமாண்டமானதுதான்!
- பி.ஆரோக்கியவேல்
Source - Vikatan Magazine

கனிமொழி கைதா? 6ம் எண் சிறையா?

கனிமொழி கைதா? 6ம் எண் சிறையா?
விறுவிறு சி.பி.ஐ.
மூன்றாவது குற்றப் பத்திரிகையை மே-31 அன்று சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு, சட்டப்படி கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், ஆயுள் முழுக்கவும்கூட சிறையில் கழிக்க வேண்டி இருக்குமாம். அதனால், இந்தக் கோணத்திலும் தனியாக வழக்குப் போட ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரிக்கிறது.
யார் இந்த அமிர்தராஜ்?
ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த, மறைந்த சாதிக் பாட்சாவின் பி.ஏ-வாக இருந்தவர் அமிர்தராஜ். சாதிக் சம்பந்தப்​பட்ட அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் முழுமையாக விசாரணை செய்ததாக அறிந்து, டெல்லி அதிகாரிகளிடம் பேசினோம்.
''ஷாகித் பால்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனமும், சாதிக்கின் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனமும் கிட்டத்தட்ட ஒரே நிர்வாகத்தின் கீழ்தான் இயங்கி வந்ததாக அமிர்தராஜ் சி.பி.ஐ-யிடம் சொல்லி இருக்கிறார். உலகத் தரத்தில் ஊழியர்கள் வேண்டும் என்பதற்காக, நேர்முகத் தேர்வு நடத்தி க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு பால்வாவின் மும்பை நிறுவன அதிகாரிகள் உதவி செய்தார்களாம். சாதிக்கின் நிறுவனத்துக்கு பால்வாவின் நிறுவனங்களில் இருந்து பல கோடிகளில் பணப் பரிவர்த்தனை நடந்து இருக்கிறது.
மும்பைத் தொழிலதிபர்கள் ஷாகித் பால்வாவும், வினோத் கோயங்காவும், தொழில் முறை நண்பர்கள். இருவரும் இப்போது திகார் சிறையில் இருக்கிறார்கள். வினோத்தின் தந்தை கிருஷ்ணன் முராரி, இளைய சகோதரர் பிரமோத் கோயங்காவின் பின்னணி​களையும் சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்கிறது. இவர்களுடன் சாதிக் பாட்சா நெருக்கமான தொடர்புவைத்து இருந்த ஆதாரங்கள் சி.பி.ஐ. வசம் வந்துவிட்டன...'' என்கிறார்கள்.
தாவூத் ஆல்பத்தில் பிரமோத் கோயங்கா
பாகிஸ்தானின் கராச்சி நகரில் பலத்த பாதுகாப்புடன் இருந்து​கொண்டு, இந்தியாவில் பயங்கரவாதத்தை ரிமோட்டில் இயக்கி வருகிறார் தாவூத் இப்ராஹிம். அப்படிப்பட்ட தாவூத்தின் இளைய சகோதரன் ஹுமாயுனின் திருமண நிகழ்ச்சியில் முக்கிய விருந்தாளியாக பிரமோத் கலந்துகொண்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மும்பையை மிரட்டிவிட்டு, போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்று பதுங்கிய அபுசலீமை, அந்த நாட்டு போலீஸ் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைத்தது. அபுசலீமின் வாக்குமூலத்தில், திருமணத்தில் பிரமோத் கலந்துகொண்டதைச் சொல்லி இருக்கிறார். மும்பையைச் சேர்ந்த பில்டர் ராஜேஷ் என்பவரை, கடந்த 2003-ம் ஆண்டு நிழல் உலக தாதாக்கள் சுட்டுக் கொன்றனர். அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், தனது மரணத்தின் பின்னணியில் கிருஷ்ண முராரி இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
தாரிக் பாய் என்று அழைக்கப்படும் கராச்சியைப் பூர்வீகமாகக்​கொண்ட தொழிலதிபர் இந்திய போலீஸாரிடம் பிடிபட்டபோது, 'கிருஷ்ணன் முராரி, வினோத் கோயங்கா, பிரமோத் கோயங்கா ஆகிய மூவருக்கும் தாவூத்தின் 'டி' கம்பெனிக்கும் தொடர்பு உண்டு. இவர்களின் ரியல் எஸ்டேட் தொழிலில் தாவூத்தின் பணம் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது’ என்றும் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது. அதனால், சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் பிரமோத்தையும் தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டுவர இருக்கிறார்​களாம்.
தயார் நிலையில் 6-ம் எண் சிறை?
மே 6-ம் தேதி கனிமொழியும், கலைஞர் டி.வி-யின் நிர்வாகி சரத்குமாரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜ​ராகிறார்கள். அன்றைய தினமே, அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படலாம் என்று டெல்லியில் திடுக்கிடும் வகையில் பேச்சு வலம் வருகிறது. பெண்களுக்கு என்று தனியாக 6-ம் எண் சிறை இருக்கிறது. இங்கே 1,200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் இருக்கிறார்கள். 'கனிமொழி கைது செய்யப்பட்டால் இங்கேதான் அடைக்கப்படுவார்’ என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். இந்த சிறையில் தமிழக போலீஸின் ஆயுதப் படையைச் சேர்ந்த 30 பெண் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்கே இரண்டு ஃபைல்கள்?
''சமீபத்தில் இரண்டு ஃபைல்கள் காணவில்லை. அதற்குக் காரணமானவர்களை முதலில் பிடித்து திகார் சிறையில் தள்ளினால்தான், மற்றவர்கள் திருந்துவார்கள்போல் தெரிகிறது...'' என்று டென்ஷன் ஆகிறார் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர்.
'ஊழல் செய்த உயர் அதிகாரிகள் சிலரைக் காப்பாற்றும் நோக்கில் அந்த இரண்டு ஃபைல்கள் எங்காவது ஒளித்துவைக்கப்பட்டு இருக்கிறதா... அல்லது, ஒரேயடியாக எரித்துவிட்டார்களா?’ என்று சி.பி.ஐ. தேடுகிறது. அதில் ஒரு ஃபைல், ஆ.ராசா மந்திரியாக இருந்தபோது, தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் தினசரி அலுவலகப் பணிகளைப் பதிவு செய்த விவரங்களை உள்ளடக்கியது. மற்றொரு ஃபைல், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்று, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி அரசுக்கு விண்ணப்பித்தது தொடர்பானது. இந்த இரண்டு ஃபைல்களுடன் தொடர்புடைய வேறு சில விவரங்கள் சி.பி.ஐ-க்குக் கிடைத்துவிட்டது. என்றாலும், ஒரிஜினல் ஃபைல்களைத் தேடும் பணி மும்முரமாக நடக்கிறது. இந்த ஃபைல்களை வைத்திருந்த அதிகாரிகளிடம் சி.பி.ஐ. வாக்குமூலம் பதிவு செய்துவிட்டது. ஒருவேளை, காணாமல்போன ஃபைல்கள் கிடைக்கவில்லை என்றால், இந்த வாக்குமூலத்தை ஆதாரமாகப் பயன்படுத்தவும் சி.பி.ஐ.யிடம் திட்டம் இருக்கிறது!
- சூர்யா

Source - Vikatan Magazine

கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த பாதை!

கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த பாதை!

தேதிகள் சொல்லும் சேதிகள்!
லைஞர் டி.வி-க்கு பணம் கைமாறியதை 'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தை விசாரிக்கும் சி.பி.ஐ. மிக சீரியஸ் கண்ணோட்டத்தில் பார்க்கிறது!
'கடனாக வாங்கினோம். கடனை அடைத்துவிட்டோம்.’ என்று முதல்வர் கருணாநிதியும் கலைஞர் டி.வி-யும் சொல்லி வர... இந்தப் பணம் வந்த வழிமுறைகள் அத்தனையையும் அம்பலப்படுத்தி உள்ளது சி.பி.ஐ.
இந்த விவகாரம் வெளியில் வந்ததுமே கலைஞர் டி.வி-யின் இயக்குநர் சரத்குமார் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
'2007-08 ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்துக்கும், 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியுக் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2009-ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம், பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்து இருந்தது. ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2009 ஆகஸ்ட் வரை பெறப்பட்ட 200 கோடி ரூபாயைக் கடனாகப் பாவித்து, மொத்தப் பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தால் திருப்பித் தரப்பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக 31 கோடி ரூபாய் தரப்பட்டது. இந்தப் பரிவர்த்தனை வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் செலுத்தப்பட்டது. இந்த மொத்தப் பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உட்பட்டு, உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே!’ - இதுதான் கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்!
இதற்கிடையே, 'சன் டி.வி-யில் இருந்த தனது பங்குகளைப் பிரித்து வாங்கிய வகையில், 100 கோடி ரூபாய் என் மனைவி தயாளுவுக்குக் கிடைத்தது. அதைத்தான் கலைஞர் டி.வி-யில் அவர் முதலீடு செய்தார்.' என்று பணத்தின் ஒரு பகுதிக்கு முதல்வர் கருணாநிதி திடீரென்று ஒரு கணக்கு சொல்லியிருக்கிறார்.
மாறாக, 'கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்த விவகாரத்தில் நிச்சயமாக முறைகேடு நடந்து உள்ளது' என்று ஆதாரங்களுடன் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது!
'அதாவது, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில், 2008 டிசம்பர் மாத இறுதியில், ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த எட்டிஸாலட் நிறுவனம் 3,228 கோடியும் ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 381 கோடியும் முதலீடு செய்து பங்குகளை வாங்கின. ஆ.ராசாவிடம் இருந்த செல்வாக்கின் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, மேற்கண்ட நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றதற்கு நன்றிக் கடனாக, ஸ்வான் நிறுவனம் பணத்தை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்தது!’ என்கிறது சி.பி.ஐ.
ஸ்வான் டெலிகாமை சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா இருவரும் நடத்தும் மற்றொரு நிறுவனம்தான் டிபி ரியாலிட்டி. இது, பங்குச் சந்தையில் பதிவு பெற்ற நிறுவனம். இந்த டிபி ரியாலிட்டி, டைனமிக்ஸ் ரியாலிட்டி என்ற மற்றொரு நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறது. இந்த டைனமிக்ஸ் நிறுவனத்துக்கு, கட்டுமானத்தில் ஈடுபடும் இரண்டு துணை நிறுவனங்களும் உண்டு. இப்படி சிலந்தி வலையாகப் பரவி இருக்கும் நிறுவனங்களில், ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசீப் பால்வா, ராஜீவ் அகர்வால் போன்றவர்கள் இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். இப்படிப் பல பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கி... அதன் பெயர்களில் கடன்கள் வாங்கி, அந்தப் பணத்தை வேறு காரணங்களுக்குத் திசை திருப்பிவிடுவார்கள். இதில் டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம்தான் 200 கோடியை கலைஞர் டி.வி-க்கு வெவ்வேறு தேதிகளில் வழங்கியது என்று சொல்லும் சி.பி.ஐ., இந்தப் பணமும் நேரடியாகச் செல்லவில்லை என்​கிறது.
'இந்த டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனம், 209 கோடியை குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்குக் கடனாகக் கொடுக்கிறது. 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட் வரை வெவ்வேறு தவணைகளில் இந்த பணத்தைக் கொடுத்து உள்ளார்கள் (இது பற்றி தனியாக ஒரு பெட்டிச் செய்தி). ஷாகித் பால்வாவின் சகோதரர் ஆசிப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும் இதில் இயக்குநர்கள். இந்த நிறுவனம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வியாபாரங்களுக்காகப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் தனது பெயரை குஸேகான் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்று மாற்றிக்கொண்டு, கடன் வாங்குவதும் மற்ற கம்பெனி​களுக்கு கடன் கொடுப்பதுமான பணிகளைச் செய்தது. இதன்படி, டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 209 கோடியில், 200 கோடியை சினியுக் நிறுவனத்துக்கு குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் கொடுத்தது. அதே 2008 டிசம்பர் 23 முதல் 2009 ஆகஸ்ட் 7 வரையிலான கால கட்டங்களில் கிட்டத்தட்ட ஏழு தவணைகளில் டைனமிக்ஸ் மாதிரியே குஸேகானும் கொடுத்தது.
இதையடுத்து சினியுக் நிறுவனம் இதே காலகட்டத்தில் (23.12.2008 முதல் 7.8.2009) ஆறு தவணைகளில் இந்த 200 கோடியை கலைஞர் டி.வி-க்குக் கொடுத்து உள்ளது...’ என்கிறது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை. பணம் நேரடியாகக் கொடுக்கப்படாமல்,  சுற்றிவளைத்து கணக்குக் காட்டப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. பல்வேறு ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
1. குஸேகான் நிறுவனம், சினியுக் நிறுவனத்துக்குக் கொடுத்த 200 கோடியை, அப்படியே 2009 ஆகஸ்ட் மாதத்துக்குள் கலைஞர் டி.வி-க்கு, சினியுக் மீடியா நிறுவனம் கொடுத்துவிடுகிறது. இதே 2009 அக்டோபர் மாதம்தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். போட்டு விசாரணையும் தொடங்கியது. அதனால், சினியுக் மற்றும் குஸேகான் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டு அவசரமாக சில ஒப்பந்தங்கள் போட்டன. 27.1.2010 அன்று குஸேகான் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசீப் பால்வாவும் ராஜீவ் அகர்வாலும், சினியுக் இயக்குநர் கரீம் முரானியோடு ஒப்பந்தம் போடுகின்றனர். இதன்படி, சினியுக் நிறுவனத்தில் டிபி குரூப்பைச் சேர்ந்த குஸேகான் நிறுவனம் 49 சதவிகிதப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததுடன் (ஒரு பங்கு 510 என்ற விலையில் 1,22,000 பங்குகளை வாங்கியது), 200 கோடியை கடனாக மாற்றிக்கொள்ளவும் ஓர் ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் போட்டுள்ளன. முரானி குடும்பத்தினர் பல ஹிந்திப் படங்களை எடுத்தவர்கள். 'சினிமாத் தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத குஸேகான் நிறுவனம் சினியுக் நிறுவனத்துக்கு ஏன் கடன் கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது சி.பி.ஐ.
2. சினியுக் நிறுவனத்துக்கும் கலைஞர் டி.வி-க்கும் இடையே உருவான ஒப்பந்தங்கள் 'வேடிக்கை'யாக இருப்பதையும் சி.பி.ஐ. குறிப்பிடுகிறது. கலைஞர் டி.வி. ஒரு தனியார் லிமிடெட் நிறுவனம். இந்த நிறுவனம் 2009 மார்ச் 31 அன்று தாக்கல் செய்யப்பட்ட இருப்பு நிலை தொகைக் குறிப்பில் 31,82,21,171 பணத்தை உதிரி மற்றும் இதரக் கடன்கள் மூலம் வந்தவை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த 31 கோடியில் 25 கோடி சினியுக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததற்கு அடுத்த ஆண்டு (31.3.2010) கலைஞர் டி.வி. தாக்கல் செய்த இருப்பு நிலைத் தொகைக் குறிப்பில் சினியுக் நிறுவனம் கொடுத்த பணத்தைக் கழித்துவிட்டு, மீதி உள்ள சுமார் 6 கோடி மட்டுமே காட்டப்பட்டது. இதே ஆண்டில் மேலும் பல கோடிகளை சினியுக் நிறுவனம் கலைஞர் டி.வி-க்கு கொடுத்து இருக்க, இதே பேலன்ஸ் ஷீட்டில் பழைய 25 கோடியையும் சேர்த்து உதிரி மற்றும் கடன்கள் மூலம் 214,86,54,109 வந்ததாகக் காட்டி உள்ளனர். அதாவது யார் பணம் கொடுத்தார்கள், இந்த 214 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் இல்லை. கலைஞர் டி.வி. இயக்குநர்களான கனிமொழியும் சரத்குமாரும் திட்டமிட்டு இந்த மாற்றங்களை மேற்கொண்டனர் என்று சி.பி.ஐ. சொல்கிறது.
3. மேலும், கொடுத்த பணத்துக்கும் வாங்கிய பணத்துக்கும் கணக்குக் காட்ட, ஒரு சில ஒப்பந்த வளையங்களுக்குள் இரு நிறுவனங்களும் வலுக்கட்டாயமாக வந்தன. 19.12.2008 அன்று சினியுக் நிறுவனமும் கலைஞர் டி.வி-யும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டதாம். அதன்படி, சினியுக் நிறுவனம் அளித்துள்ள நிதியினைக்கொண்டு, கலைஞர் டி.வி-யின் பங்குகளை சுமார் 35 சதவிகிதம் வரை வாங்கிக்கொள்ளும் என்றும், ஒருவேளை இந்த பங்குப் பரிவர்த்தனை திட்டப்படி நிறைவேறவில்லை என்றால், இதைக் கடனாக மாற்றிக்கொள்ளும் என ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளனர். இந்த ஒப்பந்தங்களைப் போட்டுள்ள சரத்குமார், மற்ற இயக்குநர்களின் சார்பிலும், அவரே முடிவு எடுத்துள்ளார். ஆனால் சி.பி.ஐ., 'சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைக்கூட இவர்கள் போடவில்லை. குறைந்தபட்சம் முத்திரைத் தாளில்கூட இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. வாங்கிய பணத்துக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே, இப்படி ஓர் ஒப்பந்தத்தை (தயாரித்து) காட்டி வழக்கின் புலனாய்வைத் திசை திருப்புகிறார்கள். இது 2008-ல் போடப்பட்ட உண்மையான ஒப்பந்தம் என்றால், 2009-ம் ஆண்டு அறிக்கையில் இதையும் சொல்லியிருக்க வேண்டும். 2009 மார்ச் மாதம் வரை சினியுக் நிறுவனத்திடம் இருந்து 25 கோடியை கலைஞர் டி.வி. வாங்கி இருந்தது. இந்தத் தொகையைப் பங்குத் தொகையாகவோ அல்லது பங்கு விண்ணப்பத் தொகையாகவோ காட்டியிருக்கலாம். ஆனால், அந்த ஆண்டு அறிக்கையில் கடன் கணக்கில்தான் இந்த 25 கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது. 2ஜி விசாரணை தொடங்கப்பட்ட பின்னரே 2010ம் ஆண்டு அறிக்கையில், தப்பித்துக் கொள்ளும் வகையில் கணக்குகளை மாற்றினார்கள்...’ என்கிறது.
4. பணத்தைத் திருப்பிக் கொடுத்த விவகாரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் சி.பி.ஐ., 'கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்ட பணம் ஒரு வருடமாக அப்படியே இருந்தது. ஆ.ராசாவை நாங்கள் அழைத்து விசாரிக்கத் தொடங்கியவுடன், 200 கோடியை கலைஞர் டி.வி. அவசரம் அவசரமாகத் திருப்பிக் கொடுத்ததாகச் சொல்கிறது. 2010 டிசம்பர் 24 அன்று ஆ.ராசா சி.பி.ஐ. முன்பு ஆஜராகி விசாரணைக்கு உட்பட்ட தினத்தில்தான், கலைஞர் டி.வி. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்கியது. டிசம்பர் 24 முதல் 2011 பிப்ரவரி 3 வரை எட்டு தவணைகளில் 200 கோடியை கலைஞர் டி.வி. கொடுத்துவிட்டது. ஆ.ராசாவை பல முறை அழைத்து விசாரித்து பின்னர், பிப்ரவரி 2 அன்று கைது செய்தோம். இந்த சமயத்தில் பணத்தை முழுமையாகத் திருப்பிக் கொடுத்துவிட்டது கலைஞர் தொலைக்காட்சி. பணத்தைக் கொடுத்த அதே தேதிகளில், சினியுக் நிறுவனமும் குஸேகான் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து இருக்கிறது. இறுதியில் குஸேகானும் இந்த 200 கோடியை வட்டியோடு டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்தது. இரண்டு நிறுவனங்களைத் தாண்டி பணம் வருவதும் போவதும் பலவிதமான தொடர்புகளை உறுதிப்படுத்துகிறது!’ என்கிறது.
இந்த விவகாரத்தில், கலைஞர் டி.வி. சுமார் 30 கோடியை வட்டியாக சினியுக் நிறுவனத்துக்கும், சினியுக் நிறுவனம் சுமார் 25 கோடியை குஸேகான் நிறுவனத்துக்கும், குஸேகான் சுமார் 23 கோடியை டைனமிக்ஸ் நிறுவனத்துக்கும் வட்டியாகக் கொடுத்து உள்ளன. கடனைத் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி. தனது விளம்பர வருமானத்திலும் மற்றும் அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் ( 70 கோடி) இந்தியன் வங்கியில் ஓ.டி-யாக கடன் வாங்கியும் சமாளித்ததாகக் கூறப்படுவதை குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ. மிக விவரமாக ஆராய்ந்து இருக்கிறது.
''கிரிமினல் வழக்குகளைப் பொறுத்த வரை, தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான முகாந்திரங்கள் இருப்பதைக் காட்டினாலே, குற்றம் நிரூபணம் ஆகிவிடும். ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் ஆகியோர் தவறான வழிகளில் ஆதாயம் அடைந்ததற்கான சாட்சியங்கள் ஏராளமாக உள்ளன!'' என்கிறார் வழக்கின் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷினி.
வரும் மே 6 அன்று, செம்மொழி விருது வழங்கும் நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. அதே தினம் கோர்ட்டில் ஆஜராகப்போகும் கனிமொழிக்கு சி.பி.ஐ. கொடுக்க இருக்கும் விருது எப்படி இருக்கும் என்பதை இந்தியாவே எதிர்பார்க்கிறது!
- சரோஜ் கண்பத்

Source - Vikatan Magazine