Showing posts with label ரொமான்ஸ் ரகசியங்கள். Show all posts
Showing posts with label ரொமான்ஸ் ரகசியங்கள். Show all posts

Monday, December 26, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 12(ஆசை கொள்ள முடியாத பாசப் பறவைகள் ! )

ரொமான்ஸ் ரகசியங்கள்!

ஆசை கொள்ள முடியாத பாசப் பறவைகள் !
ஓவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
ஆண், பெண் ரொமான்ஸ் உறவின் அடிப்படையே.... உடல்ரீதியான தொடர்புதான். அது இயல்பான ஒன்று. ஆனால், பல்வேறு உடல் மற்றும் மனரீதியான காரணங்களால் இது பாதிக்கப்படுவதும் இயல்பான ஒன்றாகவே இன்று ஆகிவிட்டது.
பரத்தின் அக்கா மகள் நித்யா. இருவருக்கும் வயது வித்தியாசம் எட்டு ஆண்டுகள். சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் தோழர்களாகவே வளர்ந்தார்கள். நித்யாவைத் தூக்கி வளர்த்திருக்கிறான் பரத். மடியில் படுக்கவைத்து தூங்கவும் வைத்திருக்கிறான். அண்ணன், தங்கை போன்ற உறவுகூட இருவராலும் உணரப்பட்டிருக்கிறது. வீட்டுப் பெரியவர்களோ, 'எதிர்கால தம்பதி' என்று சொல்லியே வளர்த்தார்கள்.
பரத், மத்திய அரசுப் பணியிலும்... நித்யா டீச்சராகவும் வேலை செய்து கொண்டிருந்தனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடிக்கும் என்றாலும், தங்களைக் கணவன், மனைவியாகக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. ஆனால், குடும்பத்தினரின் பிடிவாதத்தை மீறி அவர்களால் எதுவும் செய்யவும் முடியவில்லை.
திருமணமும் கோலாகலமாக நடந்தது. ஆனால், அதற்குப் பிறகு நடந்ததுதான் பரிதாபம். நித்யா, பரத் இருவராலும் தாம்பத்ய உறவுகொள்ள முடியவில்லை. மூடிய அறைக்குள் இரு துருவங்களாக வாழ ஆரம்பித்தனர்.
ஆண்டுகள் ஒன்று, இரண்டு என ஓடின. வாரிசு எதுவும் உருவாகாததால்... இருதரப்புப் பெற்றோரும் கவலைகொண்டு, கோயில் கோயிலாக கூட்டிச் சென்றனர். பரிகாரங்களையெல்லாம் செய்தனர். புத்திசாலியான ஓர் உறவினர்தான், பரத் - நித்யா இருவரின் வாழ்க்கையில் ஏதோ சிக்கல் இருப்பதைப் புரிந்து, மருத்துவரிடம் கூட்டிச் சென்றார். உண்மை மெள்ள வெளிப்பட்டது. பெற்றோர் இடிந்து போனார்கள். இனி இந்த பந்தத்தைத் தொடர்வதில் அர்த்தமே இல்லை என்பது அழுத்தம் திருத்தமாக அவர்களுக்குப் புரிய, மணவிலக்குக்கு ஏற்பாடு செய்தார்கள். இன்று பரத், நித்யா இருவரும் அடுத்த வாழ்க்கைக்காக காத்திருக்கிறார்கள்.
ஒரு சிறுவனிடம், 'இவள் உன் எதிர்கால மனைவி’ என்று ஒரு சிறுமியைக் காட்டி, அந்த வயதிலேயே கருத்தைத் திணிப்பது விபரீதத்தில்தான் கொண்டுபோய் விடும் என்பதற்கு உதாரணமானதைத் தவிர, வேறு எதையும் சாதிக்கவில்லை... பரத் - நித்யாவின் வாழ்க்கை.
'உன் கண்ணில் நீர் வழிந்தால்...’, கணவன் - மனைவி உறவின் அற்புதத்தை விளக்கும் உன்னதமான பாடல். 'வேரென நீ இருந்தாய், அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்’, 'என் தேவையை யார் அறிவார், உன்னைப்போல் தெய்வம் ஒன்றே அறியும்’ போன்ற காலத்தால் அழியாத வரிகளைக் கொண்ட பாடல் அது.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி கூட்டை விட்டுப்பிரிந்த பிறகு, ஒரு புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இத்தனை நாள் ஓடி ஒடி உழைத்த களைப்பு, அப்போது ஓய்வெடுக்கச் சொல்லும். உடலும் தன்னுடைய வலுவையும் ஆரோக்கியத்தையும் மெள்ள இழந்து, சாய்ந்துகொள்ள ஒரு தோளைத் தேடும். அப்போதுதான் கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஜெயந்தி, ரமேஷ் தம்பதிக்கு... அது தொடர்பான ஒரு கசப்பான அனுபவம், வாழ்க்கையின் ஆரம்ப காலங்களிலேயே ஏற்பட்டது. இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். ரமேஷ் மார்க்கெட்டிங் துறையில் இருப்பதால், எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுவான். ஜெயந்திக்கு மாலை ஐந்து மணிக்கெல்லாம் வேலை முடிந்துவிடும் அரசாங்கப் பணி. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
ஜெயந்திக்கு வயிற்றில் ஏற்பட்ட கட்டிக்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, ஒரு மாதமாவது ஓய்வெடுக்க வேண்டிய கட்டாய சூழல் வந்து சேர்ந்தது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளைக் கவனிக்கவும் ஊரில் இருந்து ஒரு பெண்மணியை வரவழைத்த ரமேஷ், ஆஸ்பத்திரிக்கு பணத்தைக் கட்டிவிட்டு, கடமை முடிந்ததாக நினைத்தான். ஆபரேஷன் அன்றுகூட மனைவியின் அருகே இல்லாமல், ஆபீஸ் வேலையாக மும்பை சென்று விட்டான்.
அது, ஜெயந்தியின் மனதை மிகவும் பாதித்தது. பைத்தியம் பிடித்தவள்போல் ஆனாள். 'எப்படி இருக்கிறாய்?’ என்றுகூட விசாரிக்காமல், 'நல்ல காலம் முழு இன்ஷூரன்ஸ் பணம் வந்துவிட்டது’ என்று சந்தோஷப்பட்டான் ரமேஷ்.
ஒரு சில மாதங்கள் உருண்டோடிய நிலையில்... 'முதுகுத்தண்டில் இன்ஃபெக்ஷன்' காரணமாக படுத்த படுக்கையானானான் ரமேஷ். ஆறு மாதங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இப்போதுதான், பழைய கோபங்களை மீட்டெடுத்தாள் ஜெயந்தி. 'அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்க முடியாது' என்றவள், கணவனை சம்பிரதாயத்துக்கு மட்டுமே கவனித்துக் கொண்டாள். ரமேஷ§க்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. படுக்கையில் படுத்தபடியே சண்டையிட்டான். மனதுக்குள் பூட்டி வைத்திருந்த வேதனைகளை எல்லாம் ஜெயந்தியும் கொட்டினாள். தன் தவறு புரிந்து, அதிர்ந்தவன், கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டான். வாழ்வு மறுபடி இனிக்க ஆரம்பித்தது அவர்களுக்கு!
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள்! -11 (காதல் காதல்தன்...நட்பு நட்புதான் ! )

ரொமான்ஸ் ரகசியங்கள்!

காதல் காதல்தன்...நட்பு நட்புதான் !
அகிலன் சித்தார்த்
ஓவியம்: மணியம் செல்வன்

சில ஆண்டுகளுக்கு முன் அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை சந்திக்க நேர்ந்தது. சண்முகம், 17 வயது இளைஞன். வேலூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து, அம்மாவுடன் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்திருந்தான். சிறிய ஓட்டு வீட்டில் தங்கியிருந்தார்கள். சண்முகம் வேலை தேடிக் கொண்டிருக்க... அக்கம்பக்க வீடுகளில் பாத்திரம் தேய்த்து சொற்பப் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார் அம்மா. அவ்வப்போது சண்முகத்துக்கு சிறு சிறு வேலைகள் கொடுத்து, கொஞ்சம் பணமும் கொடுப்பது என் வழக்கம். அம்மாவின் கனவெல்லாம், சண்முகம் தலையெடுத்து குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்பதுதான்.
அவர்களுக்குப் பக்கத்து வீட்டிலேயே அக்காவுடன் தங்கியிருந்தாள் அர்ச்சனா. சினிமாவில் 'ரிச் கேர்ள்ஸ்’ என்று சொல்வார்கள். பின்னணியில் நடமாடும் துணை நடிகைகள். அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாள் அர்ச்சனா. சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியில் உடைகள், செருப்புகள், மேக்கப் சாமான்களை வாங்கிவிடுவாள். அவளுடைய வேலைக்கு அது தேவையாக இருந்தது என்பது வேறு விஷயம்.
சண்முகத்துக்கும் அவளுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாத வகையிலான சுத்தமான நட்புதான். சண்முகம் அவளை ஆராதித்தான். 'உலகத்தில் எனக்கு இருக்கும் ஒரே ஃப்ரெண்ட்’ என்பான். அடிக்கடி அவளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பான். அர்ச்சனாவும் அவனிடம் விகல்பம் இல்லாமல் பழகினாள். 'ஏதாவது விபரீதத்தில் முடியுமோ?' என்கிற பயம் சண்முகத்தின் அம்மாவிடம் இருந்தது.
ஒருநாள் திடீரென்று சண்முகம் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டான். எங்கள் எல்லோருக்கும் பேரதிர்ச்சி. 'எனக்கும் அர்ச்சனாவுக்கும் இருந்த புனிதமான நட்பை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் சாவதன் மூலம் அந்த புனிதத்தன்மையை இந்த உலகத்துக்கு உணர்த்துகிறேன். அர்ச்சனா நல்ல வாழ்க்கை வாழ என் வாழ்த்துக்கள்!’ என்றது அவன் எழுதி வைத்திருந்த கடிதம்.
அர்ச்சனாவிடம் பிறகு பேசியபோது, சண்முகத்தை அவளுடைய அக்கா சந்தேகப் பட்டதாகவும், தன் தங்கையை அவன் திட்ட மிட்டு கவர முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய தாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் சொன்னாள்.
'நட்பு’ என்கிற விஷயத்தை அவன் குழப்பிக் கொண்டிருக்கிறான். சரியான கவுன்சிலிங், சரியான நேரத்தில் கிடைத்திருந்தால், அப்படிச் செய்திருக்கமாட்டான் என்று நினைத்தேன். அவன் உள்மனதில் அர்ச்சனாவின் மேல் காதல்கூட இருந்திருக்கலாம். ஆனால், அவனுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தேவைப்பட்டிருக்கிறது. நட்பு என்று பெயரிட்டு அதை அணிந்திருக்கிறான். அதற்குக் காரணம் அர்ச்சனாவிடம் அவனுக்கு இருந்த காம்ப்ளக்ஸ். அவள் நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே அவனை மிகக் கவர்ந்திருந்தாலும், அவளுடன் பழகுவதற்கான அங்கீகாரமாக நட்புதான் அவனுக்குப் பயன்பட்டிருக்கிறது. அந்த கவசம் உடைந்து போனதில் அப்செட் ஆனவன்... தற்கொலையை நாடியிருக்கிறான்.
பால்ய பருவத்திலிருந்து வாலிப பருவத்துக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும் இளம் உள்ளங்கள் நட்பு, காதல் இவை பற்றிய தெளிவான புரிதல்களை அடைய வேண்டும். அதுவும் இளம் பருவத்துக் காதல் என்பது மிகவும் அபாயகரமானது. தமிழ் சினிமாவில் சர்வ சாதாரணமாக சிறு வயதில் ஏற்படும் காதலைப் பெருமைப்படுத்திக் காண்பிக்கிறார்கள். அந்த வயதில் ஏற்படும் உணர்வு என்பது வெறும் நட்புதான்... காதல் அல்ல. இருபால் கவர்ச்சி என்பது அதில் இலைமறை காயாக இருக்கலாம். அதுவே எல்லாமும் கிடையாது.
நிறையபேர் 'புனிதம்’ என்ற சொல்லை வைத்துக்கொண்டு, வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். உலகில் எல்லாமே இயல்பானதுதான். புனிதம் என்பதெல்லாம் அதீதமான வார்த்தை. பரத் - நித்யா இருவரையும் பற்றி தெரிந்து கொண்டால்... நான் சொல்வதில்இருக்கும் உண்மை உங்களுக்கே புரியும்!

Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 10 (இரட்டை வாழ்க்கை இம்சை !)


ரொமான்ஸ் ரகசியங்கள் !

இரட்டை வாழ்க்கை இம்சை !
அகிலன் சித்தார்த்
ஓவியம்: மணியம் செல்வன்
'ஆணும் பெண்ணும் சமம்' என்பதுதான் மார்க்ஸ் முதல் பாரதி வரை உலக முற்போக்கு சிந்தனையாளர்கள் படித்துப் படித்துச் சொன்ன விஷயம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் சமூகத்தில் அந்த நிலை, பெரும்பான்மையாக உருவாகவில்லை... குறிப்பாக கணவன் - மனைவி இடையே! கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சரிசமமாக நடத்தக்கூடிய தாம்பத்யத்தில்... ரொமான்ஸ் என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதே உண்மை!
முரளி, சுலோச்சனா... அந்த விதி பழகாத தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். சுலோச்சனா, மத்திய அரசுத் துறையில் நல்ல பொறுப்பில் இருப்பவர். கிராமப்புற பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்தில் அரசாங்கம் தொடங்கிய ஒரு துறையில், கிரியேட்டிவான முறையில் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி நிறைய விருதுகளையும், பதவி உயர்வுகளையும் வாங்கியவர். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு நிம்மதி இல்லை.
தன்னால் இயன்றவரை வீடு, அலுவலகம் என்று இரண்டு பொறுப்புகளை சுலோச்சனா சுமந்தாலும், கணவர் எப்போதும் கரித்துக் கொட்டிக் கொண்டே இருப்பார். தன் அலுவல் தொடர்பாக மேற்கல்வி படித்து அதில் முனைவர் பட்டமும் பெற்றார் சுலோச்சனா. கை நிறைய சம்பளம். எந்நேரமும் அவரிடம் தங்கள் பிரச்னைகளைச் சொல்லி விவாதிக்க வரும் கிராமத்தினரின் கூட்டம், அரசியல்வாதிகள், கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் காட்டும் மரியாதை, அரசு தந்த கார் என்று மிக மரியாதையான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்தாலும், கணவர் முரளிக்கு அவர் தன் கை மீறிப்போய் விட்டதாக எண்ணம்.
''ரொம்ப படிச்சவனு திமிரு!''
''ஊர்ல எல்லாரும் மதிக்கிறாங்க இல்லை... அதான் என்னைப் போட்டு மிதிக்கிறே.''
''வீட்டை முழுசா பார்த்துக்க வக் கில்லை... உனக்கெல்லாம் ஏன் குடும்பம், புருஷன், புள்ளகுட்டிங்க?''
''போகிற போக்கை பார்த்தா எலெக்ஷன்ல நின்னு மந்திரி ஆயிடுவபோல. அப்புறம் என்னைத் துரத்தி விட்டுட்டு வேற ஆள் பார்த்துப்ப.''
- கணவன் கூசாமல் கொட்டும் இந்தக் கொடும் சொற்களுக்கு, ஆரம்பகாலத்தில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் சுலோச்சனா. நாட்கள் செல்லச் செல்ல முரளியின் குரூரமும், வக்கிர சிந்தனையும் அதிகமாகிக் கொண்டே வந்ததால், வெறுத்துப் போய் மௌனம் காக்க ஆரம்பித்தார். அதற்கும் வசை தொடர்ந்தது. 'அம்மாவை உலகமே பாராட்டுகிறதே... அப்பாவுக்கு மட்டும் ஏன் விபரீத சிந்தனை' என்று அவர்களின் குழந்தைகளுக்குப் புரியவே இல்லை... பாவம்தான்.
வெளியுலகில் ஒரு வாழ்க்கை, வீட்டுக்குள் ஒரு நரக வாழ்க்கை என்று சுலோச்சனாவின் இரட்டை நிலை இன்றும் பரிதாபமாகத் தொடர்கிறது. அவர்களுக்குள் காதல் என்கிற வார்த்தையே அடிபட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறன்றன.
மாறி வரும் இன்றைய சூழலில், தடைகளைத் தாண்டி அலுவலக வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் வெற்றிகரமாக பெண்கள் நடத்திவரும் பெரும் சாதனையை, ஆண்கள் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.
இந்த விஷயத்தை ஒரு தம்பதிக்கு மட்டுமல்ல, ஊருக்கே... ஏன் உலகுக்கே பிராக்டிகலாக புரிய வைக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், நேரடியாக இறங்கிய அனுபவத்தை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
''தமிழ்நாட்டின் புதிரன்கோட்டை கிராமத்தில் நடந்திருந்தது ஒரு மௌனப்புரட்சி. ஆயிரக்கணக்கான படிப்பற்ற கிராமத்தவர்களை, மிகவும் குறுகிய காலத்தில், 'என்.ஏ.எஃப்' (NAF) எனப்படும் தேசிய விவசாய ஃபவுண்டேஷன் தன்னுடைய முயற்சியினால் படிப்பறிவு பெற்றவர்களாக மாற்றிஇருந்தது. கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பாடத் திட்டத்தில், நவீனமுறையில் அளிக்கப்பட்ட பயிற்சி அது.
அதிகாலையில் வெள்ளி முளைக்கும்போது எழுந்திருக்கும் பெண்கள்... வீட்டு வேலை, குழந்தைகளைப் பராமரிப்பது, சமையல் இவற்றுடன் காடு, கழனி என்று வயல்வேலையும் பார்த்துவிட்டு, இரவு கண்களை மூடிப் படுக்கும்போது நிலவு உச்சிக்கு வந்திருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு நேரம் கண்டுபிடித்து எழுத்தறிவிப்பது, சாதாரண விஷயமல்ல. அவர்களுக்கான கல்வியை இரவு நேரத்தில்தான் கொடுக்க முடியும். 'என்.ஏ.எஃப்' அப்படித்தான் செயல்பட்டது.
நான் அங்கே சென்றிருந்தபோது சுமார் 4,200 பேர் இரவு பாடசாலை மூலம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அதில் 80 சதவிகிதத்தினர் பெண்கள். அந்தச் சுற்றுவட்டார கிராமங்களில் 288 சுய உதவிக் குழுக்களையும் 'என்.ஏ.எஃப்' உருவாக்கியிருந்தது. அவர்களின் மொத்த சேமிப்பு 48 லட்சம் ரூபாயை எட்டியிருந்தது. சுமார் 70 லட்சம் ரூபாய்க்கான தொழில் கடன்களை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தது.
கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் ஒரு பெண். அவருடைய கணவர் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றார். நான் அந்தப் பஞ்சாயத்துத் தலைவியிடம், 'நீங்கள் சுதந்திரமாகச் செயல்பட உங்கள் கணவர் விடுகிறாரா? அல்லது தலையிடுகிறாரா?' என்று கேட்டேன். அந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்ல தடுமாறினார்.
நிலைமையைச் சமாளிக்கும்பொருட்டு, 'அவ்வப்போது சில உதவிகளைச் செய்வதுண்டு' என்று பூசி மெழுகினார் கணவர். உண்மையில் அந்தப் பெண்மணியின் வேலைகளில் அவர் தலையிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. நம் நாட்டில் பெரும்பான்மையான பெண் பஞ்சாயத்துத் தலைவிகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
'இதோ பாருங்கள், நீங்கள் உங்கள் மனைவியைச் சுதந்திரமாக வேலை பார்க்கவிட வேண்டும். அவரால் சிறப்பாகப் பணியாற்ற முடியும். உங்கள் மனைவியின் வேலைகளில் தலையிட மாட்டேன் என்று உங்களால் உறுதி கூற முடியுமா?' என்றேன். அவர் 'நிச்சயமா சார்!' என்றார். சுற்றி நின்றிருந்த பெண்கள் எல்லாம் அதற்குக் கரகோஷம் செய்தார்கள். அந்தக் கரகோஷம், அவர்களும் அப்படிப்பட்ட சுதந்திரத்தையே விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியது. பெண்கள் லீடர்ஷிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், அதற்கு ஆண்கள் முழுமனதோடு வழிவிட வேண்டும் என்பதே என் எண்ணம்''
- இப்படி எழுதியிருக்கிறார் அப்துல் கலாம்.
பொதுவாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட மண வாழ்க்கையிலும் இனி ஆண்கள், பெண்களை அடக்கி ஆளாமல் அவர்களின் சுதந்திரத்துக்கும், திறமைக்கும் வழிவிட்டு நடந்தால்... அவர்களின் காதல் வாழ்க்கையும் கடைசி வரை இனிக்கும். இது 21-ம் நூற்றாண்டின் புதிய விதிகளில் ஒன்று.
'காதல் ஒருவனைக் கைபிடித்து, அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து...' என்பது பெண்ணுக்கு மட்டுமில்லை, ஆணுக்கும் பொருந்தும்.
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

Tuesday, December 13, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 9 - திருமணம் என்றொரு சூதாட்டம்?

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 9

திருமணம் என்றொரு சூதாட்டம்?
ஒவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
சமீபத்தில் ஓர் இளைஞனைச் சந்தித்தேன். பெயர் நவீன். 24 வயது. சாஃப்ட்வேர் இன்ஜீனியர். நல்ல சம்பளம். வசதியான குடும்பம்.
குழம்பிய மனதோடு இருந்தவன், ''உடனே திருமணம் செய்துகொள் என்று என் பெற்றோர் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்'' என்றான்.
''சரியான வயதுதானே உனக்கு... கோ அஹெட்'' என்றேன்.

அடுத்து, அவன் கேட்ட கேள்வி, திகைக்க வைத்தது - ''என்னுடைய சரியான வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்வு செய்வது?''
திருமணத்தைப் பற்றி எத்தனையோ பழமொழிகளும், மேற்கோள்களும் இருக்
கின்றன. 'அது, லைசென்ஸ் கொடுக்கப்
பட்ட விபச்சாரம்’ என்கிற லெவலுக்கு விமர்சனம் செய்தார் பெர்னார்ட்ஷா. தந்தை பெரியாரோ, திருமணம் என்பதையே ஒரு 'அமைப்பு’ என உருவகப்படுத்தி கிழி கிழி என்று கிழித்தார். 'ஒவ்வொரு திருமணமும் படுக்கையில் முடிவுக்கு வந்து விடுகிறது.’, 'திருமணம் என்பது ஒரு சீட்டாட்டம். உங்கள் கையில் நல்ல கார்டு கிடைக்க அதிர்ஷ்டம் வேண்டும்’ என பல பொன்மொழிகளும் இருக்கின்றன.
நவீன் குழப்பத்தில் இருந்தாலும், அதுவே ஒரு தெளிவினால் ஏற்பட்டதுதான். ''சார்... ஒரு பெண்ணும் நானும் தீவிரமாகக் காதலித்தோம். ஆனால், கடவுள் நம்பிக்கை, சடங்குகள், சினிமா, பொழுதுபோக்குகள், புத்தகம் என்று எல்லாவற்றிலுமே தனக்கு என்ன ஆர்வமோ... அவற்றை என் மீது அவள் திணிக்க ஆரம்பித்தாள். 'விஜய் படத்துக்குப் போக வேண்டாம், சிவன் கோயிலுக்குப் போகக் கூடாது, கிரிக்கெட் பார்க்கக் கூடாது' என்றெல்லாம் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வைக்க ஆரம்பித்தாள்.
'இவளைக் கல்யாணம் செய்தால் வாழ்க்கை முழுவதும் நாம் அடிமைதான்' என்று உணர்ந்தபோது, 'ஸாரி... உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. நண்பர்களாகப் பிரிவோம்’ என்றேன். 'நோ பிராப்ளம்’ என்று பைபை சொல்லி விட்டாள்.''
நவீனை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.... அவன் தொடர்ந்தான். ''கொஞ்ச நாளில் அவள் என்னிடம் மறுபடி வருவாள் என்று உள்மனம் எதிர்பார்த்தது போலவே அவள் வந்தாள், தன் திருமண அழைப்பிதழோடு. நவீனப் பெண்களைப் பற்றிய என் நம்பிக்கைகளே ஆட்டம் கண்டன'' என்றான்.
''சரிப்படாது என்று எப்போது நீ சொல்லி விட்டாயோ, அப்போதே அவள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரத்தை அவள் பெற்றுவிட்டாளே...'' என்றேன்.
''கரெக்ட்தான். கொஞ்ச நாளிலேயே நானும் சரியாகிவிட்டேன்.''
''சரி, அடுத்து?''
''இப்போது என் அப்பா, அம்மாவுக்குப் பேரன், பேத்தி வேண்டுமாம். ஒரு பெண்ணை பார்த்து விட்டார்கள். அவளிடம் பேசிப் பார்க்குமாறும் சொன்னார்கள். அவர்களுக்காக போய் பார்த்தேன். கணவனே கண்கண்ட தெய்வம் ரேஞ்சுக்கு இருந்தாள். கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேசவே கூச்சப்பட்டாள். சமைப்பது, வீட்டு வேலை செய்வது தவிர வேறு எதிலுமே நாட்டம் இல்லை. 'ஆபீஸ் முடிந்து நேராக வீட்டுக்கு வந்து விடுவீர்களா, கெட்ட பழக்கம் கிடையாதுதானே?’ என்றெல்லாம் தயங்கித் தயங்கிக் கேட்டாள். இவள் சரிப்பட மாட்டாள் என்று மனதில் பட்டுவிட்டது.''
''ஏன் அப்படி தோன்றியது?''
''எனக்கு பல்வேறு ஆர்வங்கள் இருக்கின்றன. சேட்டன் பகத் புத்தகம் படிப்பேன். கிரிக்கெட், ஃபுட்பால் என்று விளையாட்டுகள் டெக்னிக்கலாகத் தெரியும். இலக்கியப் புத்தகங்களை தேடித் தேடி வாங்குவேன். அந்தக் காலத்து எடித் பியாஃபிலிருந்து இப்போது வந்திருக்கும் செலீனா கோம்ஸ் வரை இசை கேட்பேன். வார இறுதியில் பிராந்தியும் பருகுவேன். ஆபீஸுக்கு லீவு போட்டு அன்னா ஹஜாரே ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்டேன். ஈரானிய சினிமா, உலக சினிமா டி.வி.டி-க்கள் என்றால் உயிர்..''
''ஓகே... அதற்கும் உன் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்?''
''இவற்றில் என் வாழ்க்கைத் துணைக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்தால்தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்? அப்பாவைக் காட்டிலும் அம்மா பல மடங்கு கிரேட் பர்சனாலிட்டி. ஆனால், அப்பாவுக்காக நிறைய தன்னை மாற்றிக் கொண்டார். அம்பையின் ஒரு கதையில் வருவதுபோல், அவரே அப்பா போல் மாறிவிட்டார். என்னுடைய உயிர் நண்பன் ஆனந்த், தவறாக ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து, கடைசியில் தற்கொலையில் உயிர்விட்டான். எனக்கும் அப்படி ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது'' என்றான்.
''பெண்கள் எல்லோரும் மோசமும் இல்லை... ஆண்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. உண்மையில் காதல் என்பது திருமணத்துக்கு அப்புறம்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வலுவாக மாறுகிறது. நவீன பெண்ணோ, பழமையான பெண்ணோ... எல்லோரும் மனிதர்கள்தான். முழுக்க முழுக்க உனக்குப் பிடித்தால்தான் திருமணம் என்று பிடிவாதம் பிடிக்காதே. ஈரானியப் படங்களில் கணவன் - மனைவி உறவும், காதலும், குடும்பப் பிடிமானமும் எத்தனை அழகாகச் சொல்லப்படுகிறது? சாக்ரடீஸுக்குக் கொடுமைக்கார மனைவி கிடைத்ததும், காரல் மார்க்ஸுக்கு ஜென்னி கிடைத்ததும் யாரும் திட்டமிட்டதல்ல. ஓரளவுக்கு மனதுக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய். அவளுக்காக விட்டுக்கொடு. உனக்காக அவளும் விட்டுக் கொடுப்பாள். பயம் என்கிற கண்ணாடியோடு இந்த உறவை நீ பார்த்தால், எதுவுமே தெளிவாகத் தெரியாது'' என்றேன்.
நவீன், சற்றுத் தெளிவானவன்போல் தெரிந்தாலும், ''அப்படியென்றால்... திருமணம் என்பது ஒரு சூதாட்டம் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?'' என்றான் சிரித்தபடி.
''சூதாட்டம்தான். ஆனால் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல அது. காதல், புரிதல், விட்டுக்கொடுத்தல், மனித நேயம் போன்ற டெக்னிக்கல் திறமைகளோடு விளையாட வேண்டிய சுவாரஸ்யமான விளையாட்டு!'' என்றேன்.
''ஐ வில் ட்ரை!'' என்று விடைபெற்றான் நவீன். அவனுக்குப் பதில் சொல்லிவிட்டேனே தவிர, அவன் கேட்ட கேள்வி என்னை ரொம்பவே டிஸ்டர்ப் செய்தது. உண்மையிலேயே திருமண உறவு என்பது சூதாட்டம்தானா?!
- நெருக்கம் வளரும்...

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 8 = பொய் சொல்லப் போறேன்...பொய் சொல்லப் போறேன் !

ரொமான்ஸ் ரகசியங்கள்!

பொய் சொல்லப் போறேன்...பொய் சொல்லப் போறேன் !
ஓவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
ஆண் - பெண் உறவில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. 'நன்மை விளையும் என்றால்... பொய் சொல்வதில்கூடத் தவறில்லை' என்கிறார் திருவள்ளுவர்.
லதா - சஷாங் ஜோடி, திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், தங்களின் ஃப்ளாஷ்பேக் காதலைப் பற்றி பரஸ்பரம் பிரஸ்தாபித்து, திருமணமே நின்று போன கதையை, கடந்த இதழில் பார்த்தோம். அதன் மூலம் வரும் நீதி... சில உண்மைகளைக் கல்லறைகளைத் தோண்டி வெளியெடுப்பதில் பயன் ஒன்றும் இல்லை என்பதுதான்!

அப்படியென்றால் 'ஆண் - பெண் உறவில் வெளிப்படைத் தன்மை இருக்கவே கூடாதா... அதைச் சொன்னால் பிரச்னைதான் ஏற்படுமா?' என்பது போன்ற கேள்விகள்... ஏன், கோபமேகூட எழலாம். ஆனால், பலநூறு ஆண்டுகளாக, வழிவழியாக புகட்டப்பட்டிருக்கும் பாடங்களின் வழி நடக்கும் மானிட சாதியின் மிச்சம்தான் நாம் என் பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் முதலில் நமக்கு வேண்டும்.
'அந்தரங்கம் புனிதமானது’ என்பார்கள். ஆனால், அது ரகசியமானது என்பது மட்டும்தானே சரியானதாக இருக்கும். அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது மானுட விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிலம், வீடு, கார் போல்... சக மானுட துணையும் ஒரு நுகர்பொருள் ஆகிவிட்டது.
தன் மனைவியின் பழைய காதல் வாழ்க்கையை அறிந்துகொண்டு அதைப் பெருந்தன்மையோடு அணுகும் அறிவு முதிர்ச்சியான கணவன் பற்றிய பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’, 'அந்த ஏழு நாட்கள்’ போன்றவை அந்த ரகம். 'அவள் அப்படித்தான்’, 'அவர்கள்’ போன்ற படங்கள் பெண்களின் காதல் வாழ்க்கையை மிக முற்போக்காகக் காட்டிய உன்னதமான படங்கள். தமிழ் இலக்கியங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனையோ கதைகள் அப்படி வந்திருக்கின்றன.
உலகின் வெவ்வேறு திசைகளில் ஆண், பெண் உறவு மாற்றம் என்பது காட்டாறுபோல் பாய்ந்து ஓடிக் கொண்டுஇருக்கிறது. அந்த டிரெண்டை புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பின்னோக்கித் தள்ளப்படுவோம் என்பது வரலாற்று உண்மை.
சரி, மேட்டருக்கு வருவோம். ஆண் - பெண் உறவில் எதை வெளிப்படையாகச் சொல்லலாம்? எதைச் சொல்லக்கூடாது என்பது ஒரு கலை.
கணவன் - மனைவி இருவருமே ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொள்ளக்கூடிய புரிதல் கொண்ட துணையா என்பதுதான் அது. அவர் அப்படிப்பட்ட மிகச்சரியான துணை என்பதில் நீங்கள் 'கன்வின்ஸ்’ ஆகிவிட்டால்... உங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றிய எந்த உண்மைகளையும் சுதந்திரமாகச் சொல்லலாம். அதேநேரம், அவர் தொட்டாற்சிணுங்கி டைப், மிகவும் பிற்போக்கான சிந்தனைகள் கொண்டவர் என்பது புரிந்தபின், அவரிடம் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. இது உங்களின் தவறு அல்ல. அதனால் குற்ற உணர்ச்சி எதுவும் தேவை இல்லை.
'உண்மைகளைக்கூட சுதந்திரமாகப் பேச முடியாத ஒரு உறவு தேவைதானா?' என்கிற ஒரு கேள்வி, ஒரு நிலையில் உங்களுக்கு ஏற்படக்கூடும். இது வெறும் காதல் ஃப்ளாஷ்பேக் என்கிற குறுகிய வட்டத்தோடு நிறுத்திவிட முடியாது. இந்த சிந்தனை, பூமி அதிர்ச்சி சுழல்போல பல திசைகளையும் பாதிக்கக் கூடியது.
உதாரணமாக... நித்யாவின் கதை. சென்னையைச் சேர்ந்த மிடில் கிளாஸ் பெண் அவள். ஒரே ஒரு ஹால், சமையலறை கொண்ட சிறிய வீடு. அப்பா அரசாங்க வேலையில் குமாஸ்தா. அம்மா குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் எளிய ஹவுஸ் வொய்ஃப். இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. கம்ப்யூட்டர் அறிவில் தேர்வுபெற்று ஒரு நல்ல வேலையில் சேர்ந்தாள் நித்யா.
ரவிச்சந்திரன் என்றொரு வாலிபன் அவள் வாழ்வில் வந்தான். ஆரம்பத்தில் மிகவும் பெருந்தன்மையான ஆண்மகன் போன்ற தோற்றத்தைக் காண்பித்தான். காதல் கவிதைகள் பேசினான். தன் ரத்தத்தால் காதல் கடிதங்கள் எழுதினான். நித்யாவும் காதல் வயப்பட்டாள். ரிட்டையர்ட் ஆகிவிட்ட நிலையில், நித்யாவின் வருமானத்தை மனதில் வைத்து குடும்பத்தைக் கொஞ்சமேனும் கரை சேர்த்துவிடலாம் என்று நினைத்த தந்தை, தடுமாறினார். ஆனாலும், மகளுக்குத் திருமணம் செய்து வைப்பது கடமை என்பதை உணர்ந்து, ஏகப்பட்ட கடன் வாங்கி அவள் விருப்பப்படியே திருமணத்தை நடத்தினார்.
பெற்றோரின் விருப்பத்துக்காக வரதட் சணை பெற்றுக்கொண்ட ரவிச்சந்திரனை ஜீரணிக்க முடியவில்லை. என்றாலும், பொறுத்துக் கொண்ட நித்யாவுக்கு, ரவிச்சந்திரனின் முழு நிஜமுகம் பிற்பாடு தான் மெள்ள தெரிய ஆரம்பித்தது. 'நான், என் குடும்பம், என் அப்பா, என் அம்மா’ இதுதான் அவனுடைய எளிமையான ஃபிலாசபி. நித்யாவின் குடும்பத்தைத் தன் குடும்பமாக என்றுமே அவன் ஏற்றுக் கொண்டதில்லை. தவிர்க்க முடியாது சந்திக்க நேரிட்டால்... போனால் போகிறது என்கிற தொனியிலேயே பேசி கட் செய்வான்.
கணவனின் குணம் கண்டு அதிர்ந்தாலும், எதிர்காலத்தை மனதில் கொண்டு அப்படியே ஏற்றுக் கொண்டாள் நித்யா. தன் தங்கைகளின் பள்ளிக்கூட ஃபீஸுக்குக்கூட கணவனுக்குத் தெரிந்து உதவ முடியவில்லையே என்று நொந்து கொண்டவள், ஆபீஸில் லோன் போட்டு ஈடு செய்தாள். கணவனுக்குத் தெரிந்தால் ரணகளமாகும் என்பதால்... மறைத்தாள். இந்த நிகழ்வுகள் நீண்ட தொடர்கதை ஆகிவிட்டது. இன்று தன் குடும்பத்துக்குப் பல வகைகளில் உதவி செய்கிறாள் நித்யா. தன் பெற்றோரை, உடன் பிறந்தவர்களை மிகவும் அன்போடு கவனித்துக் கொள்கிறாள். ஆனால், எதுவுமே கணவனுக்குத் தெரியாமல்தான்.
இதையெல்லாம் 'பொய்' என்று சொல்வதா? 'பொய்' என்கிற வார்த்தை இதற்குப் பொருந்துமா? இல்லவே இல்லை. பெருந்தன்மையற்ற ஒரு கணவன் வாய்த்ததால், எதற்காக இப்படிப்பட்ட உன்னதமான விஷயங்களை அவனிடம் சொல்லி தன் குடும்பத்தின் அமைதியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற புரிதலால் நித்யா எடுத்த முடிவு இது.
அற்புதமான ஆண் - பெண் உறவில் 'பொய்மை' என்கிற இத்தகைய களை தோன்றுவதற்குக் காரணம், 'நல்லவர்'கள் அல்ல. பிற்போக்குத்தனமான பழமைவாதிகள்தான்!
- நெருக்கம் வளரும்...

ரொமான்ஸ் ரகசியங்கள்! 7 - கணவனின் காதலியும்... மனைவியின் காதலனும் !

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 7

கணவனின் காதலியும்... மனைவியின் காதலனும் !
 அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்
கணவன் - மனைவி, காதலன் - காதலி... இந்த உறவுகளின் இனிமையான தொடர்புக்கு அடிப்படையானது 'டிரான்ஸ்பரன்ஸி’ எனப்படும் வெளிப்படைத்தன்மை. இது கொஞ்சம் சிக்கலானது. தன்னுடைய ரகசியங்கள், அந்தரங்கங்கள் எல்லாவற்றையும் இருவரும் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டுமா? இதற்கு... 'ஆமாம்', 'இல்லை' என்று இரண்டு பதில்களையுமே சொல்லலாம்.
முன்பின் தெரியாத இரண்டு நபர்கள் நிரந்தர உறவு கொண்டு குடும்பம் என்கிற நீண்டகால அமைப்பை நிறுவுவதுதான் திருமணம் என்கிற பந்தம். கணவன் - மனைவி இருவருக்கும் திருமணத்துக்கு முன்பு வேறு காதல் இருந்திருக்கலாம். நெருங்கிய நட்பு இருந்திருக்கலாம். அவை எல்லாம் வெறும் கடந்த காலம்தான். அலமாரியில் வைத்துப் பூட்டப்பட்ட உயிரற்ற எலும்புக்கூடுகள்தான் என்றாகிவிட்ட நிலையில், 'உண்மைகளைச் சொல்கிறேன் பேர்வழி’ என்று அத்தனையையும் தன் துணையிடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
மேல்நாடுகளில் இந்த விஷயம் சர்வ சாதாரணமானது. 'உன் குழந்தைகளும் என் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடுகிறார்கள்’ என்பது அங்கே சகஜமான ஒன்று. ஆனால் நம் சமூகத்தில் 'பொஸஸிவ்னஸ்’ எனப்படும் உரிமை எண்ணம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அது பல நேரங்களில் ஆபத்தான வடிவங்களுக்கு மாறக்கூடியது.
ஒரு கேஸ் ஹிஸ்டரியை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம். சென்னையைச் சேர்ந்த ஜோடி... லதா-சஷாங். இருவரும் நன்றாகப் படித்தவர்கள். இவர்களுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. 'அரேஞ்டு 'கம்’ லவ் மேரேஜ்’ என்று சொல்லலாம். இணையதளத்தில் ஒரு திருமண நிலையத்தின் தளத்தில்தான் இருவரைப் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்கள் இவர்களின் பெற்றோர். நேரில் வந்து பெண் பார்த்து இரு தரப்பினருக்கும் பிடித்துவிட்டது. நிச்சயதார்த்தம் நடந்தது. சஷாங்குக்கு நார்வே நாட்டுக்கு வேலை நிமித்தம் செல்லக் கூடிய வாய்ப்பு விரைவில் வரக்கூடும் என்கிற நிலையில், அதை வைத்துத் திருமண தேதியை நிச்சயித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.
குறைந்தது ஆறு மாதமாவது பிடிக்கும் என்கிற சூழலில்... இருவரும் காதலர்கள் போல் பழக ஆரம்பித்தார்கள். கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்தது. ஒருவரை ஒருவர் பிரிய முடியாத அளவுக்கு நெருங்கிப் பழகினார்கள். மணிக்கணக்காக செல்போனில் பேசினார்கள். ஊர் சுற்றினார்கள். சின்னச் சின்ன உடலின்பங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
ஒரு நாள் கடற்கரையில் சஷாங்கின் மடியில் சாய்ந்திருந்த லதா, ''சஷாங்... உனக்கு இதுக்கு முன்னாடி ஏதாவது காதல் அனுபவம் இருந்திருக்கா?'' என்று வில்லங்கமான கேள்வியைக் கேட்டாள். சஷாங் சிரித்தபடி, ''இல்லாமல் இருக்குமா?'' என்றான். லதாவும் சிரித்தபடி, ''என்ன அது சொல்லு?'' என்று கேட்டாள். ''விடு... அதெல்லாம் முடிஞ்சு போன கதை. இப்ப எதுக்கு அதெல்லாம்?'' என்று அவாய்ட் செய்த சஷாங்கை லதா விடவில்லை. சொல்லியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள். சஷாங் அவன் 'ஃப்ளாஷ்பேக்’கைச் சொல்ல ஆரம்பித்தான்.
சஷாங்கின் அலுவலகத்திலேயே டிரெய்னியாக வந்து சேர்ந்தாள் அனுபமா கவுர். பஞ்சாபி பெண். சஷாங்கின் அழகும், படிப்பும், பேச்சும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சஷாங்கும் அவள் அழகில் மயங்கிவிட்டான். இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஏறக்குறைய இரண்டு வருடங்கள் காதல் நீடித்தது. விஷயம் இரண்டு வீட்டுக்கும் தெரிந்து ரணகளம் ஆனது. தமிழன், பஞ்சாபி என்கிற தேசிய வேற்றுமைப்பாடு விஸ்வரூபம் எடுத்தது.
இருவருக்கும் வேறு வழி தெரியவில்லை... பிரிவதைத் தவிர. உணர்ச்சிகரமாகப் பேசி, ஒரே ஒரு முத்தத்துடன் காதலை முறித்துக் கொண்டார்கள். அனுபமாவுக்கு இன்னொரு பஞ்சாபி இளைஞனுடன் திருமணமானது. இன்னும் அவள் சஷாங்கின் அலுவலகத்திலேயே மற்றொரு டிபார்ட்மென்டில்தான் வேலை செய்கிறாள். ஆனால், அவள் முகத்தில் சந்தோஷம் இல்லை. எப்போதாவது சஷாங்கை சந்திப்பாள். ஆறுதல் சொல்லி, சந்தோஷமாக இருக்கும்படி கேட்டுக் கொள்வான்.
எல்லாவற்றையும் சஷாங் சொல்லி முடிக்க... லதா மௌனமாக இருந்தாள். அவளை உலுக்கி, ''ஏய், என்ன ஃபீல் பண்றியா? அதான் சொன்னேனே... அதெல்லாம் முடிஞ்சு போன கதைனு'' என்றவன், ''சரி... நான் எவ்வளவு ஃபிராங்கா என் காதலைப் பத்திச் சொன்னேன். உனக்கு ஏதாவது லவ் இருந்திருக்கா?'' என்றான். சற்று நேர அமைதிக்குப் பிறகு, ''இருந்திருக்கு'' என்றாள் மெதுவாக. அவள் மனதில் சஷாங்குக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு பொங்கியிருந்தது.
அவன் பெயர் நாகேந்தர். பெங்களூருவில் ஒரு கான்ஃப்ரன்ஸுக்காகச் சென்றிருந்தபோது சந்தித்த சென்னைப் பையன். பார்த்ததும் பிடித்துவிட்டது. ஒரு காபி ஷாப்புக்குச் சென்றவர்கள், அன்று மாலையே ஒரு திரைப்படத்துக்குப் போனார்கள். இருவரையும் பற்றிப் பகிர்ந்து கொண்டார்கள். மொத்தம் ஐந்து நாட்கள் நடந்த கான்ஃப்ரன்ஸில் ஏதோ ஐம்பது வருடப் பழக்கம் போல் ஓர் உறவு தென்பட்டது. ஊருக்குத் திரும்பும் தினத்தில் 'ஐ லவ் யூ’ சொல்லிக் கொண்டார்கள். சென்னையிலும் அவர்களின் காதல் செழித்து வளர்ந்தது.
நாகேந்திரனுக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்டுகள் என்கிற உண்மை, லதாவுக்கு மெதுவாகத்தான் தெரிந்தது. சிலர் அவளிடம் நேரில் வந்து சண்டை போட்டது மட்டுமின்றி, அவனிடம் ஜாக்கிரதையாகப் பழகும்படி எச்சரித்தார்கள். நாகேந்திரனோ... தான் அப்படி இருந்தது உண்மைதான் என்றும், லதாவை எப்போது சந்தித்தானோ அப்போது முதல் உண்மைக் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டதாகவும், அவனை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டான். ஆனால், லதா மன்னிக்கத் தயாராக இல்லை. பெற்றோரிடம் மாப்பிள்ளை பார்க்கச் சொல்ல... அப்படி வந்தவன்தான் சஷாங்.
லதா சொல்லி முடித்ததும், சஷாங் தரப்பிலும் ஆழ்ந்த மவுனம். இதுவரை கலகலப்பாகச் சென்று கொண்டிருந்த காதல், திடீரென்று தடம் புரண்டது போல் ஓர் உணர்வு. இருவரும் கடற்கரையில் இருந்து எழுந்தார்கள். ஒரு சின்ன இடைவெளி விழுந்திருந்தது இருவரிடமும். ''அந்த அனுபமா தினமும் உங்களைப் பார்க்கிறாளா?'' என்றாள் லதா. ''இதே கேள்வியை நானும் கேட்கலாமா? அந்த நாகேந்தர் உன் கூட தினமும் பேசறானா? அவனைப் பார்த்தா உனக்குப் பாவமா இருக்கா?'' என்று திருப்பிக் கேட்டான் சஷாங்.
சாதாரண ஊடல் போல் ஆரம்பித்தது... சமாதானம் செய்ய யாரும் இல்லாததால் நாளுக்கு நாள் அதிகரித்தது. இருவரும் நவீன யுகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிப்படையான பேச்சை எதிர்கொள்ளும் நேர்மை இல்லாதவர்கள். லதா - சஷாங் உறவு விரைவில் முறிந்தது என்பது சோகமான விஷயம்.
கணவன், மனைவிக்கிடையே வெளிப்படைத்-தன்மையே இருக்கக்கூடாதா? எதில் இருக்கலாம்? எதில் இருக்கக்கூடாது? இது ரொமான்ஸ் ரகசியங்களிலேயே மிக முக்கியமானது!
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 6

ரொமான்ஸ் ரகசியங்கள்!

அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்:மணியம் செல்வன்
'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' (A smooth sea, never made a skillful sailor) என்பார்கள். அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி - மழை மிரட்டிப் பார்க்கும் கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்... அவர் அனுபவம் மிக்க திறமையாளராக ஆகிவிடுவார்.

ஆண் - பெண் மண வாழ்க்கையும் அப்படித்தான். திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும்போது இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வரும். அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்.
தொடக்க நிலையில் வரும் சிறுசிறு தடைகளை(Hiccup)வெற்றிகரமாக தாண்டிவிட்டால், அதன் பிறகு சுவையான வாழ்க்கை காத்திருக்கிறது. அதேநேரம் அந்த இனிய உறவை வாழ்நாள் முழுவதும் வெற்றிகரமாக தொடர்ந்து நடத்திச் செல்ல சில புரிதல்களும் தேவை. அதன் ஃபார்முலாக்களை ஒரு உதாரண தம்பதியின் மூலம் சொல்கிறேன்.
அந்தத் தம்பதி சென்னை புறநகர் பகுதியில் வசிப்பவர்கள். 'வாலன்டரி ரிட்டையர்மென்ட்’ வாங்கியவர்கள். ஒரு மகன், மகள். இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். பணம் காசுக்குக் குறைவில்லை. இவர்கள் மிக ஆச்சர்யமான தம்பதி... ஏதோ நேற்றுதான் திருமணம் ஆனவர்களைப் போல் அத்தனை அந்யோன்மாக, சந்தோஷமாக சிரித்துப் பேசியபடி இருப்பார்கள்.
சென்னையில் நடந்த ஒரு புத்தகக் கண்காட்சி விழாவில் அந்தத் தம்பதியை தற்செயலாகப் பார்த்தேன். எழுத்தாளர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், பிஸினஸ்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களிடமும் சென்று பேசியபடி இருந்தார்கள். பலரைப் பாராட்டிக் கொண்டும் இருந்ததைப் பார்த்தேன். குறிப்பாக, ஓர் இளம் சினிமா கவிஞரிடம் அவர் எழுதிய பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டி அவர்கள் பாராட்டியதைக் கவனித்தேன். கவிஞரும் மிக உற்சாகமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
எனக்கு அவர்கள் மேலிருந்த ஈடுபாடு இன்னும் அடர்த்தியாக, ஒரு கட்டத்தில் தனியாக இருந்த அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனே கை கொடுத்து, 'ஃப்ரெண்ட்லி' ஆகிவிட்டார்கள்.
'கல்யாணம் ஆனதில்இருந்து இப்படித்தான் அந்யோன்யமாக இருக்கிறீர்களா? சண்டையே வருவதில்லையா?'' என்றேன்.
'அதை ஏன் கேட்கிறீர்கள்? கல்யாணம் ஆன புதிதில் தினமும் சண்டைதான். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டைகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்று ஒரு கட்டத்தில் பேசிக்கொண்டோம். சில சிம்பிள் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், புரிதல்கள் என்று அட்டவணை போட்டுக் கொண்டோம். அதன்படி நடந்து கொண்டதில் நாளுக்கு நாள் எங்களுக்கு அன்பு கூடியது!' என்றார் கணவர்.
'ஆச்சர்யமாக இருக்கிறதே... இப்படி பேசி வைத்துக் கொண்டுகூட வாழ முடியுமா?' என்றேன்.
'ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வாருங்கள்... நல்ல விருந்து சாப்பிட்டு விட்டுப் பேசலாம்' என்று அன்புடன் அழைத்தார் அப்பெண்மணி. அடுத்த ஞாயிறே அவர்களின் வீட்டில் ஆஜரான நான், அங்கிருந்த சில மணி நேரங்களிலேயே அவர்களுடைய 'சக்சஸ் ஃபார்முலா'வின் பல விதிகள் எனக்குப் புரிந்துவிட்டன.
இருவரும் ஒருவரின் மீது ஒருவர் கடுஞ்சொற்கள் வீசுவதில்லை. தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள். இவர் இன்ன வேலையைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. என்னிடம் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் உள்ளே காபி தயாரித்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் இருக்கும் மகளிடம் போனில் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் வீட்டைக் கூட்டிக் கொண்டிருந்தார். சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை மனைவி கணவனுக்குக் கொடுத்தார். கணவனுக்கு நகம் வெட்டினார். இருவரிடமும் சகஜமான 'தொடுதல்’ இருந்தது. 'இன்றைக்கு இரவு நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம்’ என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் மனைவி.
இருவரும் வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளவில்லை. காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, அரை மணி நேரம் யோகா, நாற்பது நிமிடங்கள் வாக்கிங், அடுத்து பேப்பர். வீட்டு வேலைகள் தொடர்கின்றன. தினமும் புத்தகம் படிக்கும் பழக்கமும் இருவருக்கும் இருந்தது.
இருவருக்குமான அன்பும் ஒருவரை ஒருவர் சார்ந்திருந்ததையும், அது திட்டமிட்டு வளர்க்கப்பட்டிருந்ததையும் அதிசயமாகப் பார்த்தேன். கணவன்- மனைவி இருவரின் உறவும் மேற்பட அவர்களிடமிருந்து நான் அறிந்து கொண்ட சில ஃபார்முலாக்களை, பத்து விதிகளாகச் சுருக்கிச் சொல்கிறேன்...
1. ஒருவரின் மீது ஒருவர் எப்போதும் கடுஞ்சொற்களைப் பேசக் கூடாது.
2. வீட்டு வேலைகளைச் செய்வதில் சமத்துவம் வேண்டும்.
3. சிறிய தவறு செய்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.
4. இருவரில் யார் எந்தத் தவறு செய்தாலும், பெரிதாக்காமல் உடனே மன்னிக்க வேண்டும்.
5. தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டையாக மாற்றிவிடக் கூடாது.
6. வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.
7. யார் மீதும் யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சுதந்திரம் என்பது மிக முக்கியம்.
8. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.
9. வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
10. 'எந்நாளும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும்.
ஆனந்தமான ரொமான்ஸ் வாழ்க்கையின் பத்து அடிப்படை ரகசியங்களாகவே இவை எனக்குத் தோன்றுகின்றன. மனித மனம் என்பது காட்டாறு போன்றது. அதை முறையாகக் கட்டுப்படுத்தத்தான் இதைப் போன்ற பல விதிமுறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.
‘To love and to be loved is the greatest happiness of human existence’எனும் பொன்மொழி... எத்தனை சத்தியம்!
- நெருக்கம் வளரும்...

Tuesday, July 5, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 5


ரொமான்ஸ் ரகசியங்கள்!

பேசு மனமே...பேசு !
அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்

'கடிதோச்சி மெல்ல எறிக’ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 'விமர்சனம் செய்தாலும், அதை எதிராளி மனம் புண்படாதவாறு இனிமையுடன் இடித்துரை' என்பதை இப்படி சொல்லி வைத்திருக்கிறார் திருவள்ளுவர். இனிய உறவுகளுக்கான தாரக மந்திரமாகவும் இதைச் சொல்லலாம்.
உரையாடல்... மனிதர்களிடையே உறவை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. குறிப்பாக ஆண் - பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல... வெறுப்பை அடர்த்தியாக்குவதும் அதே பேச்சுதான்.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, குதர்க்கமாகப் பேசுவது, குத்திக்காட்டுவது, எரிச்சல் வரவழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது. அதுவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட பல ஆண்களுக்கு, 'பெண்கள் நம் அடிமைகள்' என்கிற நினைப்பு இருப்பதால்... பெண்களிடம் கனிவுடனோ, அன்புடனோ பேசுவதே இல்லை. இத்தகையோரிடம் பெண்களுக்கு பயம் இருக்கலாமே தவிர... உன்னதமான அன்பு இருக்கவே முடியாது!
பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை. 'முதல் மரியாதை’ படத்தில் வரும் வடிவுக்கரசி கேரக்டரின் அச்சு அசல் மாறாமல் முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அன்பின் ரகசியம் அறியாதவர்கள். காதலின் மகத்துவம் தெரியாதவர்கள். இயந்திரம் போல் வாழ்க்கை நடத்தும் ஜீவன்கள் இவர்கள்.
பேச்சு என்பது எப்படி உறவுகளைச் சிதைக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்...
தமிழ்நாட்டு மக்களுக்கு ஓரளவுக்கு அறிமுகமான ஜோடிதான் அவர்கள். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த இருவரும் காதலித்தார்கள். முற்போக்குவாதிகளான இருவருமே குடும்ப எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டார்கள்.
அந்தப் பெண் அழகானவர். பல திறமைகள் கொண்டவர். வாழ்க் கையில் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்கிற முனைப்பு கொண்டவர். அவர் இருக்கக் கூடிய துறை, பல ஆண்களிடம் சகஜமாகப் பழக வேண்டிய ஒரு துறை. கணவரும் பரபரப்பான வேலையில் இருப்பவர்தான். இருவரும் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால்... மீண்டும் வீடு திரும்ப இரவு பதினோரு மணி ஆகிவிடும்.
மண வாழ்க்கை மூன்று ஆண்டுகள்தான் தாக்குப் பிடித்தது. பிறகு, தினமும் சண்டை. 'என்னை விட சாதியில் தாழ்ந்தவரை காதலித்து திருமணம் செய்தேன்...’ என்று பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொள்வது அப்பெண்ணின் வழக்கம். இது கணவனுக்கு எரிச்சலூட்டியது. ஆரம்ப காலத்தில் மனைவி பல ஆண்களுடன் பழகியது சாதாரணமாக தெரிந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல கணவனுக்கு எரிச்சல் அதிகமானது. இருவரும் 'விவாகரத்து’ முடிவுக்கு வந்தனர்.
வக்கீலுக்கே மலைப்பாக இருந்தது. அந்த அளவுக்கு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்த குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை. 'எனக்கு என் கணவன் மீது உடல் ரீதியாக எந்தக் கவர்ச்சியும் இல்லை... காதலும் இல்லை..!’ என்றார் மனைவி அதிரடியாக.
'நாளுக்கு ஒரு ஆணுடன் படுக்கும் ஒருத்தி மீது எனக்கு மட்டும் எப்படி அன்பு பிறக்கும்? நான் காதலித்த பெண் வேறு, இப்போது இருக்கும் பெண் வேறு!’ என்று பகிரங்க பதிலடி கொடுத்தார் கணவன்.
வக்கீலுக்கு, 'முற்றிய கேஸ்’ என்று தோன்றியது. இருவரிடமும் தனித்தனியாகப் பேசிப் பார்த்தார். பல நாட்கள் நடந்த கவுன்சிலிங் பயனளிக்கவில்லை. 'உங்கள் இருவருக்கும் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற ஆவல் கொஞ்சம்கூட இல்லை. அதனால் நீங்கள் பிரிந்து செல்வதே நல்லது. இன்னும் பல பாதிப்புகளை அது குறைக்கும்’ என்று சொல்லி வழி அனுப்பினார் நீதிபதி. பிரிவது என்பதுகூட சில சமயங்களில் நல்ல தீர்வாக அமைவது வாழ்க்கையின் விநோதம்தான்!
இந்த இருவரின் பிரச்னையும் பேச்சுதான் என்கிறார் அந்த வக்கீல். பேச்சு என்றால், ஏடாகூடாமான பேச்சு.
''என் செல்போன் எங்கேனு பார்த்தியா?''
''ஏன்... இப்ப எவ கூட கடல போடணும்?''
''காலையில அஞ்சு மணிக்கு அலாரம் வெச்சு என்னை எழுப்பி விடறீங்களா?''
''வீட்டை விட்டு ஓடிப் போகப் போறியா? யார் கூட?''
''இன்னிக்கு சாயங்காலம்... சினிமாவுக்குப் போகலாமா?''
''மட்டமான படம். உங்க ரசனைக்குச் சரியா இருக் கும். போயிட்டு வாங்க...''
''இன்னிக்கு டாக்டரைப் பார்க்கப் போறேன்...''
''ஏன் பீரியட்ஸ் தள்ளிப் போச்சா? எவன் காரணமோ அவனைத் துணைக்குக் கூட்டிட்டுப் போ!'' இப்படியேத்தான் இருந்திருக்கின்றன அவர்களுடைய உரையாடல்கள். இவை யெல்லாம் இடைவெளியை அதிகரிக்காமல்... வேறென்ன செய்யும்? விரைவிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து போனார்கள்.
இதயங்கள் பேசிக் கொள்ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்... விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்! பொதுவாகவே கணவன்-மனைவி இருவரி டையேயான உரையாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்றுதான் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. பேச வேண்டிய எல்லாவற்றையுமே முதல் சில ஆண்டுகளிலேயே பேசி முடித்து விடுகிறார் களாம். அதற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போகிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத்தரப் பருவத்தில் வாழ்க்கை இயந்திர மயமாகிப் போகிறது. அதற்குப் பின் வெறும் பாதுகாப்புக்காகவே இணைந்து வாழ்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.
வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் - மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி விடுகிறது? அல்லது ஒரு கட்டத்தில் ஏன் முறிந்து விடுகிறது?
பேச்சுதான் அத்தனைக் கும் காரணம். சுவாரஸ்யமான உரையாடல்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பை நாளுக்கு நாள் செம்மைப்படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். இசை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, சமூகம் என்று ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன பேசுவதற்கு.
ஆனால், அதைப் பற்றி எல்லாம் பேச நம்மில் பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை. எப்போது இன்கிரிமென்ட் வரும், எப்போது நகை வாங்கலாம் என்றே யோசித்துக் கொண்டு, அதையே பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தை என்பதே நாளடைவில் போரடித்துப் போகிறது.
இன்னொரு தம்பதியும் என்னால் மறக்க முடியாதவர்கள். 'லட்சியத் தம்பதி', 'ஆதர்ச கணவன்-மனைவி' அப்படியெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது உண்மை. அதற்காக அவர்கள் சில ஃபார்முலாக்களை வைத்திருக் கிறார்கள்.
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

Tuesday, June 7, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 4

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 4

அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்:மணியம் செல்வன்
பிரபல ரஷ்ய எழுத்தாளர், ஆண்டன் செகாவ். ரஷ்யாவில் ஒரு ஸ்டார் அந்தஸ்துடன் வாழ்ந்தவர். அவரைத் திருமணம் செய்து கொள்ள எத்தனையோ அழகான பெண்கள் ஏங்கினார்கள். அதையெல்லாம் அசட்டை செய்த செகாவ், தானுண்டு தன் எழுத்துண்டு என்று பல காலம் பிரம்மச்சாரியாகவே இருந்தார். ஆனால், அவருக்கும் ஒரு நாள் காதல் வந்தது. அந்த இளம் பெண் ணுக்கு... செகாவ் தன்னைக் காதலிப்பதில் சொல்லொண்ணா மகிழ்ச்சி. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
 
 
ஆனால், திருமணத்துக்கு வினோதமான கண்டிஷன்களைப் போட்டார் செகாவ். திருமணத்துக்கு பின் ஒரே ஊரில், ஒரே வீட்டில் வசிக்கக்கூடாது... மனைவி வேறொரு ஊருக்குச் சென்றுவிட வேண்டும்; அவ்வப்போதுதான் ஒருவரை ஒருவர் சந்தித்து ஒரே இடத்தில் இருக்க வேண்டும்; ஒரு சில நாட்களுக்குள் இருவரும் தத்தம் இல்லங்களுக்குத் திரும்பிவிட வேண்டும்.
இந்த நிபந்தனைகள் மிக வினோதமானவைகளாக இருந்தாலும், செகாவின் மீதுள்ள காதலால் அதற்கு ஒப்புக் கொண்டாள் அப்பெண். அந்த மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் நீடித்தது.
இதில் இருந்து தெரியும் உண்மை என்ன?
பிரிவு என்பது காதலை அதிகரிக்கும், பிணக்குகளைத் தீர்த்து வைத்து காதலர்களுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும். 'உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருள் இருக்கும்’, 'பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி...’ என்பதெல்லாம் தமிழில் ஹிட் பாடல்கள்.
செகாவ் அளவுக்கு நம்மூரில் பிரிந்திருந்து வாழ்க்கை நடத்துவது சாத்தியமில்லை என்றாலும் சின்னச் சின்னப் பிரிவுகள், ஊடல்கள், சண்டைகள் கணவன் - மனைவிக்கிடையேயான அன்பை அதிகரிக்கவே செய்யும்.
பிரபுவும், சாருலதாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். திரு0மணத்துக்கு முன் தத்தமது வீடுகளில் காலையில் பெட்காபி முதல் இரவு படுக்கை வரை எல்லாமே அவர்களுக்கு ரெடியாக இருக்கும். அதனால், எந்த வேலையும், பொறுப்பும் அவர்களுக்குப் பழக்கமில்லை. ஆனால், திருமணம் என்கிற தனிக்குடித்தன கூட்டுக்கு வந்தவர்கள்... சமையல், காய்கறி, மளிகை, கரன்ட் பில் என்று தங்கள் கடமைகளைச் செய்ய முடியாமல் திணறிப் போனார்கள். 'இந்த வேலையை நான்தான் செய்யணுமா? நீ செய்யக் கூடாதா?’ என்பதில் ஆரம்பித்து தினமும் தகராறுதான். அவர்களின் வாழ்க்கையில் காதலும், கவர்ச்சியும் இருந்தாலும், அதையெல்லாம் அவர்களின் சண்டைகள் ஓவர்டேக் செய்தன. ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் வாழ ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில், 'இனி... நமக்குள் சரிப்படாது, விவாகரத்து ஒன்றுதான் வழி’ என்று முடிவு செய்து கோர்ட்டுக்கு சென்றனர். முதலில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அடுத்து, 'சமாதானம் செய்துகொள்ள மேலும் ஆறு மாதங்கள் அவகாசம். அப்போதும் சமாதானம் ஆகவில்லை என்றால் விவாகரத்து வழக்கை ஆரம்பிக்கலாம்' என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தது கோர்ட். பிரபுவும், சாருவும் தத்தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சென்றிருக்கும். தன் அப்பா, அம்மாவுக்கு இடையில் சிறுசிறு சண்டைகள் எழுந்தாலும், அவை சீக்கிரமே அடங்கி இருவரும் சிரித்துப் பேசுவதைப் பார்த்தபோது, சாருவுக்கு வாழ்க்கையின் ருசி புரிந்தது. தன் தங்கையும், தங்கையின் கணவரும் வீட்டுக்கு ஜோடியாக வந்து போவதைப் பார்க்கும்போதெல்லாம், ஏக்கமாக உணர்ந்தான் பிரபு. 'திருமணமாகி பத்தே மாசத்துல இவ பிறந்துட்டா... ஃபர்ஸ்ட் வெடிங் ஆனிவர்ஸரியை குழந்தையோட கொண்டாடப் போறோம்’ என்று வெட்கமும், மகிழ்ச்சியும் வழிய தன் தோழி சொன்னதைக் கேட்ட தருணத்திலேயே, விட்ட இடத்தில் இருந்து பிரபுவுடன் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் போலிருந்தது சாருவுக்கு.
ஒருவரை ஒருவர் அத்தனை மிஸ் செய்வதை இருவருமே உணர்ந்தார்கள். தயக்கம், ஈகோ எல்லாத்தையும் வீசி எறிந்துவிட்டு, பிரபுதான் முதல் எஸ்.எம்.எஸ். கொடுத்தான். 'உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது... கடற்கரையில் சந்திக்கலாமா?’ அவ்வளவுதான்... சாரு விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள். அக்கம் பக்கம் மறந்து அவர்கள் அழுகையோடு கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டதைப் பார்த்தவர்கள், 'இந்த லவ்வர்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா...’ என்று முணங்கிச் சென்றார்கள்; சாருவும், பிரபுவும் சத்தமாகச் சிரித்துக் கொண்டார்கள்.
கணவன் - மனைவிக்கு இடையே சின்னச் சின்னப் பிரிவுகள் தேவை. அவை அன்பை வளர்க்கும். அதேநேரத்தில் இதில் ஒரு சிறிய அபாயமும் இருக்கிறது. நீண்ட நாள் பிரிவுகளின்போது சரிவர கம்யூனிகேஷனோ, டெடிகேஷனோ இல்லாவிட்டால்... அது நிரந்தரப் பிரிவுக்கோ அல்லது வேறு விதமான புதிய தொடர்புகளுக்கோ வழி ஏற்படுத்திவிடும். இதை 'அவுட் ஆஃப் டச்... அவுட் ஆஃப் மைண்ட்' (Out of touch, Out of mind) என்பார்கள். அந்த ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வது அவர்களின் எமோஷனல் பிணைப்புகளில்தான் இருக்கிறது!
சொல்ல மறந்துவிட்டேன்... இப்போது பிரபு-சாருவுக்கு இரண்டு குழந்தைகள். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறைகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சாரு, அம்மா வீட்டுக்குச் சென்றுவிட... 'எப்போடா லீவ் முடியும்..?’ என்று ஏங்கிக் கிடப்பான் பிரபு. அங்கு சாருவையும் வாட்டும் பிரிவுத் துயர். விடுமுறை முடிந்து வீடு திரும்பும் நாளில் குழந்தைகளுக்கு நிறைய கிஃப்ட் வாங்கி வைத்திருப்பான் பிரபு. சாருவுக்கு..?! அவளை எவ்வளவு மிஸ் பண்ணினான் என்பதை அவள் கண்கள் பார்த்துச் சொல்வான். இந்த நாட்களில் அவளுக்காக தான் சேமித்து வைத்திருந்த அன்பையும், காதலையும் திகட்டத் திகட்டக் கொடுத்து, பெறுவான்!
சில நாட்களுக்கு முன்பு 'அபவுட் ஷ்மெட்’ (About Schmidt) என்று ஒரு படம் பார்த்தேன். ஜாக் நிக்கல்சன் என்கிற அற்புதமான நடிகன் நடித்த படம். ஜாக், தன் மனைவியின் உணர்வுகளைப் பற்றி என்றுமே கவலைப்படாத மனிதன். அவளோ ஒரு நல்ல மனைவியாக அவனுடைய தேவைகளை சரிவர பார்த்துக் கொள்பவளாக இருந்தாள். திடீரென்று ஒருநாள் அவள் இறந்து போகிறாள். அப்போதுதான் அவளின் அன்பு அவனுக்குப் புரிகிறது. மனைவியை வாழ்க்கை முழுக்கப் புறக்கணித்த குற்ற உணர்வு அவனை ஓசையில்லாமல் உலுக்குகிறது. படத்தின் கடைசி காட்சி கவிதை போல் என் மனதில் நிலைத்து விட்டது.
நட்சத்திரங்கள் மின்னும் வானத்தின் கீழ், காரின் பேனட் டில் மேல் அமர்ந்து அந்த நட்சத்திரங்களுடன் ஜாக் பேசு கிறான்... 'அன்பான மனைவியே... இன்று எனக்கு யாருமில்லை. நீ இல்லாத தனிமை என்னைக் கொல்கிறது. அந்த நட்சத்திரங்களில் ஒன்றாக நீ இருப்பாய் என்று தோன்றுகிறது. உன்னைச் சரியாகக் கவனிக்காததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்... அன்பு மனைவியே..!’ என்று சொல்லி கண்கலங்குவான் ஜாக்!
- நெருக்கம் வளரும்

Source - Vikatan Magazine

Tuesday, May 24, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 3

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 3

அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்
 ஆண், பெண்ணின் காதல் வாழ்க்கைக்கு முக்கியமான இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள். ஒன்று... பேச்சு. மற்றொன்று... தொடுதல்!
'ஸ்வீட் நத்திங்ஸ்' (Sweet nothings) என்பார்கள். காதலிக்கும் பருவத்தில் காதலர்கள் கண்டதையும் பேசிக்கொண்டே இருப்பார்கள். பார்த்த சினிமா, கேட்ட பாடல், ஜோக்குகள், பிடித்த மழை, பிடிக்காத மனிதர்கள்... என்று இந்தப் பேச்சுதான், காதல் என்கிற நீண்ட உறவின் ஆரம்பம். செல்போன் வந்துவிட்ட பிறகு. அர்த்தமற்ற ஸ்வீட்டான பேச்சுகளுக்கு அளவே இல்லா மல் போய்விட்டது.; அதுதான் காதலின் நெருக்கத்தையும் வளர்க்கிறது!
'கணவனும் மனைவியும் முதல் இரண்டு வருடங்களிலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு பேசுவதற்கு ஏதும் இல்லாமல், அல்லது பேசப் பிடிக்காமல் மௌனமே அவர்களின் உறவை ஆக்கிரமிக் கிறது’ என்கிறது ஒரு தியரி.
நம் சமூகத்தில் உள்ள பல தம்பதிகளைக் கவனித்துப் பார்த்தால்... இதில் இருக்கும் உண்மை விளங்கும். வாழ்க்கையின் சம்பிரதாயக் கடமை களை செய்து முடிப்பதில்தான் பெரும்பாலும் கவனமாக இருப்பார்கள். அவர்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத சுவர் ஒன்று இருக்கும்.
'ஒரே ஒரு துணையுடன் வாழ்க்கை முழுக்க வாழ்வதா... அது எப்படி சாத்தியம்?' என்று நம்மூர் ஜோடிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் மேல்நாட்டினர். பேச்சு, உடல் உறவு, மனப்பகிர்வுகள் குறைந்து போகும் நிலையில்... அந்த உறவை விவாகரத்தின் மூலம் துண்டித்து விட்டு, புதிய உறவுகளைத் தேடுவது அவர்களின் வழக்கம். ஆனால், நம்முடைய கலாசாரம் வேறு. ஒருவனுக்கு ஒருத்தி, காதல் உணர்வு, குடும்பப் பாசம், கடமை உணர்வுகள் எல்லாம் கலந்தது நம்மூர் ரொமான்ஸ்! ப்ளஸ், மைனஸ் இரண்டுமே இதில் உண்டு.
காதலிக்கும் பருவத்தில், பேச்சிலிருந்து ஆரம்பிக்கும் உறவு, இன்பம் தரும் ஸ்பரிசங்களாக மெள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. அகஸ்மாத் தாகப் பட்டுக் கொள்ளும் விரல்கள், உடலின் கவர்ச்சிகரமான பாகங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொள்வதெல்லாம் அந்தப் பருவத்தின் கிக்கான விஷயங்கள். அதிலும் முதல் முத்தம் என்பது ஆண், பெண்ணை பரவச நிலைக்கே எடுத்துச் செல்கிறது. 'தினமும் மூன்று முறையாவது உதட்டோடு முத்தமிட்டுக் கொள்ளும் ஜோடிகளால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடிகிறது' என்கிறது அறிவியல் உண்மை.
துரதிருஷ்டவசமாக நம்மூரில் இந்தத் 'தொடுதல்’ எனும் அற்புதமான விஷயம், வெகு சீக்கிரம் ஜோடிகளிடமிருந்து விடுபட்டு விடுகிறது. 'தொடுதல்’ என்றால் உடலுறவு அல்ல; அது சில நிமிடங்களில் முடிந்து போகிற 'பேஸிக் இன்ஸ்டிங்க்ட்' (Basic Instinct). ஆனால், தொடுதல் எப்போதும் நிகழக் கூடியது. முத்தமிடுவது, அணைப்பது, விரல்களைப் பின்னிக் கொள்வது, உச்சி முகர்வது, கிள்ளுவது, வருடுவது, இடுப்பை அணைத்துக் கொள்வது என்று எல்லாமே அந்தத் தொடுதலில் வருகிறது.
காலம் காலமாக பெண்களை அடுப் படியில் அடிமையாகவே வைத்திருந்த மனோபாவத்தில் இருக்கும் இந்திய ஆண்களுக்கு, பெண்களை எப்படி அணுகுவது என்பது பெரும் பிரச்னை.
அமெரிக்காவில் சாஃப்ட்வேர் தொழி லில் இருந்துவிட்டு, படம் இயக்கும் ஆசையுடன் இப்போது கோடம்பாக் கத்தில் செட்டிலாகியிருக்கும் ஒரு நண்பர் சொன்னார்... ''தமிழ் சினிமாவின் ஹீரோக்களைப் பாருங்கள்... அவர் களுக்கு ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது, எப்படி அணுகுவது போன்ற வற்றைப் பற்றிப் பெரிய பிரச்னை இருக் கிறது. அந்தக் கால எம்.ஜி.ஆரிடம் இருந்து இப்போதைய சிம்பு வரை பெண்களுக்கு அட்வைஸ் செய்வதையே காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். அல்லது மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். 'இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள’ என்று பாடினார் எம்.ஜி.ஆர். இன்றைய ஹீரோவோ 'தலையில கல்லைத் தூக்கிப் போட்டு கொன்னுடுவேன். மரியாதையா காதலிச் சுடு’ என்று பெண்ணை மிரட்டுகிறான். மற்றொருவன் 'அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்சா விட்டுட்டுப் போயிட்டே இருப்பீங்கடி...’ என்று பிதற்றுகிறான். இதில் உச்சகட்டமாக காதலிக்கவில்லை என்பதற் காக கதாநாயகியின் மீது கோர்ட்டில் வழக்கே போட்டு விடுகிறான் மற்றொரு ஹீரோ.
பெண் என்பவள் ஒரு சக மனுஷி, அவளிடம் நிதானமாக, அன்பாகப் பேச முடியும், விவாதிக்க முடியும் என்று ஏன் இவர்களுக்குத் தோணுவதில்லை?’' என்று அந்த இயக்குநர் கேட்டபோது, அதிலிருக்கும் நியாயத்தை உணர முடிந்தது.
நம் ஆண்களுக்கு பெண்ணிடம் பேசவேண்டிய மென்மொழியே தெரியாமல் போகிறது. பகிரங்க ரொமான்ஸ் ரகசியங்களான இந்தப் பேச்சும், சின்ன சின்ன ஸ்பரிசங்களும் கணவன் ஜாதிகளுக்குப் புரியாமல் போகிறது.
பெண்களும் இந்தத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற நல்ல உறவுக்கான அடிப்படை விஷயங்களில் கட்டுப்பெட்டித்தனமாகவும், தொட்டாற்சிணுங்கியாகவும் இருக்கிறார்கள் என்பது மற்றொரு பிரச்னை.
தொடுதல் என்கிற 'ஹீலிங் டச்’ மிக அற்புதமான பல சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய மருத்துவம். அது ஒருவகையான மஸாஜ்தான். ஆதாமைக் கடவுள் தொட்டு ஆசீர்வதிப்பது போல்தான் பிரபல ஓவியத்தை வரைந்தார், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஓவியர் மைக்கேல் ஆஞ்சலோ. நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஹிப்போகிரேட்ஸ்... 'மஸாஜ் மற்றும் தொடுதல் ஆகியவை பெரும்பாலான நோய்களைத் தீர்க்கின்றன' என்று பிரசாரமே செய் தவர். 'ஹீலிங் டச்’ எனப்படும் தொடுதல் மருத்துவம் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாகத் தொடும்போது... மூளையில் 'எண்டோர்ஃபின்’ (Endorphin)எனும் ரசாயனம் சுரந்து உற்சாகமூட்டு வதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆதலினால் அன்புக்குரிய ஜோடிகளே... நிறைய பேசுங்கள். அவை அர்த்தமற்ற பேச்சாகக்கூட இருக் கட்டும், பேசுங்கள். அதேபோல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடுங்கள். தழுவுங்கள், முத்த மிடுங்கள், கரங்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு ரகசியங்களையும் கடைப்பிடித்தால்... உங்கள் ரொமான்ஸ் நாளுக்கு நாள் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
'தொடுதல் எனும் காதலுணர்வால், மனிதர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்' என்றார் தத்துவ அறிஞர் பிளாட்டோ. கவிஞர்களாக மட்டுமல்ல, அவர்கள் நல்ல காதலர்களாகவும் ஆகிறார்கள்!
                  - நெருக்கம் வளரும்...
ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 4

Source - Vikatan Magazine

Saturday, May 21, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 2

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 2

 அகிலன் சித்தார்த்
ஓவியங்கள் : மணியம் செல்வன்
 'நான் சரி, நீ சரியல்ல’ (I am ok, you are not ok ) - பிரபல 'செக்ஸாலஜிஸ்ட்' கோத்தாரி வகைப்படுத்தும் மூன்று வகை மனிதர்களில் இவர்களும் ஒருவர். தாங்கள் முழுக்க முழுக்க மிகச் சரியானவர்கள், மற்றவர்கள் எல்லோருமே தப்பு செய்பவர்கள் எனும் எண்ணத்தில் வாழும் இவர்களைப் பற்றி சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன்.
இவர்களின் மனதை ஆக்கிரமிப்பது காதலும் ரொமான்ஸும் அல்ல; தான் என்கிற அகம்பாவமும், தான் செய்வதுதான் சரி என்கிற ஈகோவும்தான். பிரபாவதியின் கேஸ் அதற்கு ஓர் உதாரணம்.
பிரபாவதி, அவளுடைய அம்மாவின் அச்சு வார்ப்பு. அம்மாவுக்கு அரசு உத்யோகம். கொஞ்சம்போல நிலபுலன்கள் உண்டு. ஆனால் ''நாம் பணக்காரர்...'' என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தார் பிரபாவதியை. உடை, உணவு, பயணம் எல்லா வற்றுக்குமே தகுதிக்கு மீறிச் செலவழிப்பாள். ஏழைப் பிள்ளைகளை அண்டவிட மாட்டார். பிரபாவதி அழகாக வேறு பிறந்துவிட்டதால், ''உலகிலேயே மிக அழகான பெண் நீதான்'' என்று அடிக்கடி சொல்வார். இவை எல்லாமே பிரபாவதியின் மனதில் நெகட்டிவாகப் பதிந்தன. அம்மா காண்பித்த உலகமும் சிந்தனைகளும்தான் வாழ்க்கை என்று அவள் சின்ன வயதிலேயே நம்ப ஆரம்பித்தாள்.
பிரபாவதியின் அப்பா, ஓர் அப்பாவி. நிரந்தரமான வேலைக்குச் செல்லா விட்டாலும், கிடைத்த வேலையைச் செய்து பணம் எடுத்து வருவார். அம்மா அதை என்றுமே மதித்ததில்லை. அப்பாவை உட்கார வைத்துக்கூட பேச மாட்டார். மகளின் மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால், தன் மனைவி தவறான வழியில் குழந்தையை வளர்ப்பது கண்டு மனம் வெதும்பிக் கொள்வார். ஒரு கட்டத்தில் குடிகாரராகிப் போனார். பிரபாவதியின் அம்மாவுக்கு, லோக்கல் அரசியல்வாதி ஒருவருடன் தொடர்பு இருந்தது. அவருடன் கம்பேர் செய்து, கணவனை அடிக்கடி கிண்டல் செய்ததால், வீட்டுக்கு வருவதை அறவே நிறுத்திய கணவர், ஒரு நாள் மின்சார ரயிலின் முன் பாய்ந்து இறந்து போனார். ''நம்ம மேல எந்தத் தப்பும் இல்ல பிரபா. அந்தக் குடிகாரன் வீணா செத்துப் போனா... நாமளா பொறுப்பு?'' என்று நியாயம் பேசி விஷயத்தை முடித்தார் அம்மா.
இந்நிலையில்தான் கல்லூரியில் படிக்கும்போது காதல் வயப்பட்டாள் பிரபாவதி. அவள் அழகைக் கண்டு மயங்கிக் காதலித்த ரவிக்குமார், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த புத்திசாலிப் பையன். கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் மாஸ்டர் டிகிரி வாங்கி, கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கனவு கொண்டிருந்தான். இடையே, பிரபாவதியின் காதல், அவனை தடுமாற வைத்தது.
காதலை, அம்மாவிடம் சொல்லிவிட்டு, ரவிகுமாரை வீட்டுக்கு அழைத்து வந்தாள். அவள் அம்மாவின் தோரணையும், தன் குடும்பத்தைப் பற்றி விசாரித்து அடித்த கமென்ட்டுகளும் ரவிக்குமாரை எரிச்சல் அடைய வைத்தன. பிரபாவதிக்காகப் பொறுத்துக் கொண்டான். பிரபா எதை ஆசைப்பட்டாலும் அதை 'என்ன விலை கொடுத்தாலும்’ வாங்கித் தந்துவிட வேண்டும் என்று நினைக்கும் அம்மா, ரவிக்குமாரின் சம்பந்தத்தை வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார்.
திருமணம் முடிந்தது. உள்ளப் பகிர்தல்களைவிட, உடல் ரீதியாக ரவிக்குமாரை ஏறக்குறைய தன் அடிமையாகவே ஆக்கினாள் பிரபாவதி. அவள் தரும் நீண்ட முத்தங்களில் தன் வாழ்க்கை, கனவு, குடும்பம், லட்சியம், வேலை எல்லாவற்றையும் மறந்து போனான். அம்மா கொடுத்த பணத்தில் சென்ற 'ஹனிமூன்’ டிரிப்களில் ரவிக்குமாரை முழுக்க முழுக்க தன் அரவணைப்பில் கரைத்துக் கொண்டாள் பிரபாவதி. நாட்கள் நகர்ந்தன. பிரபாவதியின் திமிர் பிடித்த பிஹேவியர் ரவிக்குமார் குடும்பத்தை மிரளச் செய்தது. ஒரு கட்டத்தில், 'ஏண்டா இவளைச் சந்தித்தோம்’ என்று ரவிக்குமாரே நொந்து போகும் அளவுக்கு பந்தாக்கள் எல்லை மீறின.
தனியாக வீடு பார்த்து அவர்களைக் குடியமர்த்தினார் பிரபாவதியின் அம்மா. வாழ்க்கை இன்னும் கலவரமாக ஆரம்பித்தது. வீட்டில் பிரபாவதி வைத்ததுதான் சட்டம். அவள் நினைத்ததுதான் சாப்பாடு. அவள் சொன்ன உடையைத்தான் ரவிக்குமார் அணிய வேண்டும். அலுவலகத்துக்கு லீவு போட வேண்டும் என்றால் போட வேண்டும். அவனுடைய தாய், தந்தை உறவினர்களிடம் பேசக்கூடாது. அவர்களும் வீட்டுக்கு வரக் கூடாது. ஆனால், பிரபாவதியின் அம்மா மட்டும் தினமும் வருவாள். அம்மாவும் மகளும் தனியே சிரிக்க சிரிக்கப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
செக்ஸ்கூட அவள் விருப்பத்தின் மேல்தான் நிகழ வேண்டும். அது காலையோ, மதியமோ, நள்ளிரவோ, அதிகாலையோ அவள் விரும்பினால் அவன் தயாராக இருக்க வேண்டும். இருவருக்கும் சண்டை வரும் போதெல்லாம், ''நான் செய்றதெல்லாம் சரிதான். ஆனா, நீதான் எதுலயுமே சரியில்ல. யோசிச்சுப் பாரு... உனக்கென்ன குறைச்சல்? அழகான பொண்டாட்டி கிடைச்சிருக்கேன். எதிர்காலத்துல என் சொத்தும் உனக்குத்தான் வரப்போகுது. ஆனா, நீ எதுக்காச்சும் லாயக்கா..? அழகும் இல்ல, சொத்தும் இல்ல. அந்த விஷயத்துலகூட உன் மேல எனக்கு திருப்தி இல்ல. எல்லாம் என் தலையெழுத்து...'' என்று ஒரு நாள் அவள் உச்சகுரலில் கத்தியபோது உள்ளுக்குள் உடைந்து போனான் ரவிக்குமார்.
'பொறுத்தது போதும்' என்று பொங்கி எழுந்து, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினான். அப்போதும் கலங்கவில்லை பிரபாவதியும் அவளுடைய தாயும். ''நாம 'ஓ.கே’தான். அவன்தான் சரியில்ல. உன் அழகையும், அந்தஸ்தையும் அவனால தாக்குப் பிடிக்க முடியல. நமக்கெல்லாம் பணக்காரங்கதான் சரி. இந்த மாதிரி ஜென்மங்கள் சரிப்படாது...'' என்று அம்மா சொன்னதை ஏற்றுக் கொண்ட பிரபாவதி, இன்று தனி மரமாக... நோய்வாய்ப்பட்ட அம்மாவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இது, வளர்ப்புக் கோளாறு அவளுக்கு தந்த பரிசு!
ரவிக்குமாரோ... மொத்தத்தையும் கெட்ட கனவாக மறந்து, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 'நான் சரி, நீ சரியல்ல’ என்ற வகைப் பெண்ணான பிரபாவதியைப் போல், பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களிடம் காதலும் இருக்காது, ரொமான் ஸும் இருக்காது. உண்மையில் இவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே!
- நெருக்கம் வளரும்...

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 3


Source - Vikatan Magazine

Friday, May 20, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 1

ரொமான்ஸ் ரகசியங்கள் ! - 1

புதிய பகுதி
அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்

உங்கள் தாம்பத்ய வாழ்வில் இறுக்கத்தை இளக்கி, நெருக்கத்தை கூட்டும் 'ரொமான்ஸ் ரகசியங்களை’ இனி இதழ்தோறும் பேச வருகிறார், எழுத்தாளர் அகிலன் சித்தார்த். ''இன்பத் தேன் எடுக்கும் வழி சொல்ல நான் ரெடி, பருக பி ரெடி!'' என்றபடி...அகிலன் இனி உங்களுடன்..!
'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு. காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும். சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!
நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி. காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள். ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.
இரண்டு ஜோடிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
செல்வகுமார் - சமிக்ஷா... காதல் திருமணம் செய்து நான்கு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஓர் ஆண் குழந்தை. இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள். என்ன ஆச்சு?
குழந்தை பிறக்கும் வரை ரொமான்டிக்கான விஷயங்களுக்கு இருவருக்குமே நிறைய நேரம் இருந்தது. அடிக்கடி கிளம்பி எங்காவது ரிஸார்ட்டுக்குப் போய்விடுவார்கள். செக்ஸ் என்பதை வீட்டில் நான்கு சுவர்களுக்குள் மட்டும் அனுபவிக்காமல்... வெவ்வேறு லொகேஷன்களில் ருசித்தார்கள். 'முத்தம்’ என்பதில் கிடைக்கும் எனர்ஜியும், எலெக்ட்ரி சிட்டியும் உற்சாகத்தைத் தரக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார்கள். ஒரு நாளைக்கு பத்து முத்தங்களாவது கொடுத்துக் கொள்வார்கள்.
செல்வகுமார் சர்ப்ரைஸ் கிஃப்ட்டுகள் கொடுப்பதில் வல்லவன். முக்கியமாக வகை வகையான வண்ணங்களைக் கொண்ட உள்ளாடை களைப் பரிசாகக் கொடுத்து, மனைவியைச் அணியச் சொல்லி ரசிப்பான். அந்த இரவு உடைகள் எல்லாம் 'ஸீ த்ரூ’ பாணியில் மிகவும் செக்ஸியாக இருக்கும். முதலில் சமிக்ஷா வெட்கப்பட்டாலும், உள்ளூர அதில் மிகவும் மகிழ்ந்தாள். பதிலுக்கு அவளும் செல்வ  குமாருக்கு நிறைய பரிசுகளை வழங்குவாள். அவனைக் குளிக்க வைத்து, தானும் நனைவாள். செக்ஸில் முழு ஈடுபாடு காட்டுவாள். காதலர்கள் போல் சினிமா தியேட்டர் இருட்டறைகளில் அவன் கொடுக்கும் முத்தங்களை வாங்கிக் கொள்வாள்.
ஆனால், தொடர்ந்த மாதங்களில் அவரவர் அலுவலகங்களில் புரமோஷன் பெற்று, ஹவுஸிங் லோன், பிரசவ நெருக்கடிகள், குழந்தை பறித்துக் கொண்ட நேரம் போன்றவற்றால் அந்நியோன்யத்துக்கான நேரம் மெள்ள குறைந்து போனது- பேச்சும்கூட! இரவு வீட்டுக்கு வந்ததும் கொஞ்ச நேரம் டி.வி. பார்த்துவிட்டு உடனே தூங்குவதற்குத்தான் மனமும் உடலும் அவர்களுக்கு இடம் தந்தன. இருவருக்கும் உள்ளுக்குள்ளே காதல் இருந்தாலும், தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக எடுத்துக் கொள்ள தேவைப்பட்ட ரொமான்ஸ் இல்லாமல் போனதால், அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. முக்கிய மான பிரச்னையே, இருவரும் பேசிக் கொள்ளாமல் போனதுதான்.
பிரபல செக்ஸாலஜி டாக்டர் கோத்தாரி, 'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்னையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். ஓபனாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்!' என்கிறார்.
மற்றொரு தம்பதி, பிருந்தா - சரவணன். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே காதலும் இல்லை, ரொமான்ஸும் இல்லை. அரேஞ்சுடு மேரேஜ். இயந்திர மயமாக உடலுறவில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளையும் பெற்று விட்டார்கள். ஆனால், பரஸ்பர வெறுப்பும், மனதில் வெறுமையும் இருவரை யும் பாதித்துக் கொண்டே இருந்தது. கோர்ட் படி ஏறாமலே தனித்தனி யாகப் பிரிந்துவிட்டனர். குழந்தைகளையும் பிரித்துக் கொண்டார்கள்.
'ஓர் உண்மையான பாராட்டு என்னைப் பல மாதங்களுக்கு உற்சாகமாக வைத்திருக்கும்' என்றார் எழுத்தாளர் மார்க் ட்வைன். இது கணவன் - மனைவி உறவுக்கும் மிகவும் பொருந்தும். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.
மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.
இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்னைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.
இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும். அப்படி ஒரு கேஸ் ஹிஸ்டரியை அடுத்த இதழில் பார்க்கலாம்.


- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine