Wednesday, June 8, 2011

கனிமொழி, சரத்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!


கனிமொழி, சரத்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!
புதுடெல்லி, ஜூன் 8,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், இவ்விருவரும் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பின்னர் கனிமொழி, சரத்குமார் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மே 20 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மே 23 ஆம் தேதி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 24-ம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் பரிகோகே, அதன் மீதான உத்தரவை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும், இந்த ஜாமீன் மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, இவ்விருவரின் ஜாமீன் மனு மீதான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலையில், கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
தன்னுடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிவதால், மகனை தாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதநேய அடிப்படையில் ஜாமீன் வழங்குமாறு கனிமொழி கோரியிருந்தார்.
இந்த வழக்கில் சாட்சிகளை தங்கள் செல்வாக்கால் வளைத்துவிடுவதற்கான சாத்தியம் உண்டு என்பதால், இருவருக்கும் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை அறிந்ததும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்த ராஜாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார்.
இதையடுத்து, கனிமொழியும் சரத்குமாரும் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் திகார் சிறையிலேயே அடைக்கப்படுவர்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளதால், இருவரும் இனி உச்ச நீதிமன்றத்தை நாடுவர் எனத் தெரிகிறது.
வழக்கின் பின்னணி...
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் சிபிஐ குற்றப்பத்திரிகையில் 'கூட்டுச் சதியாளர்' என சேர்க்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் முறையே 20, 60 மற்றும் 20 சதவீத கலைஞர் டிவி நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டுள்ளனர்.
கலைஞர் டிவியின் செயல்பாடுகளின் பின்னணியில் கனிமொழி முக்கியப் பங்கு வகிக்கிறார் என்றும்,
2009-ல் ஆ.ராசாவை தொலைத்தொடர்பு அமைச்சராக மீண்டும் நியமிப்பது தொடர்பாக திமுக தலைமையகம் மற்றும் இடைத்தரகர்களுடன் கனிமொழி தொடர்ந்து தொடர்புகொண்டு பேசிவந்துள்ளார் என்றும் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.
சினியுக் ஃபிலிம்ஸ் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் ஆகிய நிறுவனத்தின் வழியாக கலைஞர் டிவி நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய ரூ.214 கோடி பணம் பால்வாவின் நிறுவனம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதே சிபிஐ-யின் குற்றச்சாட்டு.
கலைஞர் டிவியின் செயல்படாத இயக்குனராகவே கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இருப்பதால், அவரை சாட்சிப் பட்டியலில் சிபிஐ சேர்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Source - Vikatan Magazine

No comments:

Post a Comment