Monday, June 6, 2011

சிறையில் கனிமொழி:மத்திய அரசு மீது கருணாநிதி சாடல்


சிறையில் கனிமொழி:மத்திய அரசு மீது கருணாநிதி சாடல்
திருவாரூர், ஜூன், 6,2011
மத்திய அரசின் உத்தரவாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ கனிமொழி சிறையில் உள்ளதாக, திமுக தலைவர் கருணாநிதி குறைகூறியுள்ளார்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி... திமுக கொள்கைகளை கூர்தீட்டுவதற்கு மக்கள் தந்த வாய்ப்பு என்று அவர் கூறியுள்ளார்.
தன்னை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த திருவாரூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியது:
"திருவாரூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்துள்ளீர்கள். என்னை முதல்வராக்க வேண்டும் என்றும் பல்வேறு தொகுதிகளில் வாக்கு அளித்தவர்களும், வாக்கு அளிக்க நினைத்தவர்களுக்கும், வாக்கு அளிக்க இயலாதவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்கள் என்னை ஏமாற்றினாலும், திருவாரூர் தொகுதி மக்கள் எனக்கு தூக்க முடியாத சுமையை ஏற்றி உள்ளனர். அது சுமையாக இருந்தாலும் சுகமான சுமையாக இருக்கிறது.
எம்.எல்.ஏ.வாக பணியாற்றுவேன்..
நான் நீங்கள் விரும்பியபடி முதல்வராக ஆகவில்லை என்றாலும், உங்கள் எம்.எல்.ஏ.வாக ஆகி விட்டேன். ஒரு எம்.எல்.ஏ.வாக செய்ய வேண்டிய பணியை உங்களுக்கு நான் நேரடியாக ஈடுபட்டோ அல்லது திமுகவின் முக்கிய பிரமுகர்களை வைத்தோ செய்து தருவேன் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்.
திமுக இந்த தேர்தலில் தோற்று விட்டது என்று யாராவது சொன்னால் நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது தோற்பது திராவிட இயக்கத்தின் உணர்வு, கொள்கைகள் அல்ல. அவைகளை மேலும் கூர்மைப்படுத்தி, வலிமைப்படுத்த இந்த தோல்வி அமையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமுக அரசு பாராட்டு...
புதிய ஆட்சி வந்திருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள். புதிய ஆட்சியில் ஆளுனர் உரை வந்திருக்கிறது. அந்த உரையை நான் படித்து பார்த்தேன். ஆளுனர் உரையை கூட நின்று நிதானமாக, அச்சு பிழையின்றி, தயாரிக்கிற பொறுமை இந்த ஆட்சிக்கு இல்லை என்பது ஆளுனர் உரையை படிக்கும் போதே தெரிகிறது. பிழை திருத்தும் பணி சரியாக நடைபெறவில்லை. பேரறிஞர் என்பதற்கு பேராறிஞர் என்று அச்சு கோர்க்கப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தில் 2-ம் பக்கத்தில் 3-வது பாராவில் அவர்களை அறியாமலே ஒரு உண்மையை குறிப்பிட்டு உள்ளனர். அதில், இந்த புதிய அரசும் ஏழைகளின் நலனையே முன்னிறுத்தி செயல்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்படி என்றால், பழைய அரசும் அப்படிதான் செயல்பட்டது. புதிய அரசும் அதை முன்னிறுத்தி செயல்படும் என்று தங்களை அறியாமலேயே தெரிவித்து உள்ளனர். அந்த பிழையை, பிழை என்று பாராமல் நான் நமக்கு கிடைத்த பாராட்டு என்று தான் எடுத்துக்கொள்வேன்.
புதிய தலைமைச் செயலகம்...
தமிழ்மொழியின் பெருமையை உலகம் அறிய செய்வோம் என்று கூறிப்பிட்டு உள்ளனர். பழைய சட்டமன்ற கட்டிடத்தில் செம்மொழி மைய அலுவலகம், நூலகம் இருந்தது. அது என்ன ஆகி விட்டது என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எவ்வளவு காலம் தான் சட்டமன்றம் செயல்படும் என்று சிலர் கேள்வி கேட்டனர். இதையடுத்து புதிய சட்டமன்றம் கட்டினோம்.
அந்த கட்டடத்தை பற்றி பாராட்டாத ஏடுகளே கிடையாது. அந்த கட்டிடத்துக்கு கிடைத்த புகழை, நசுக்க, சீரழிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அந்த இடத்தையே மாற்றி பழைய முறையிலேயே சட்டமன்றம் நடக்கும் என்று கூறினால் அதற்கு என்ன பெயர். மாற்றம் வரும், மாற்றம் வரும் என்று சொன்னார்கள். இந்த மாற்றம் தானா. இப்படிப்பட்ட மாற்றத்தை தான் தமிழர்கள் விரும்பினார்களா என்பதற்கு பதில் வேண்டாமா. மாற்றம் வேண்டும் என்பது காலாகாலமாக கூறி வருவது. அந்த மாற்றம் ஏற்பட்டே தீரும்.
வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற திட்டம் போட்டு முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவித்து அவ்வாறே 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. அந்த திட்டத்தையும் கைவிடப்படுவதாக அறிவித்தால் நியாயம் தானா? என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
குடிசை வீடுகளில் யார் இருக்கிறார்கள். சீமான்களா, பணக்கார அதிபர்களா? மிட்டா மிராசுகளுக்காகவா, மாடமாளிகையில் இருப்பவர்களுக்காக இல்லை. குடிசைகளில் உள்ள பாட்டாளி, பாட்டாளியின் மனைவி, குழந்தைகளுக்காக இந்த திட்டத்தை அறிவித்து ஆண்டுதோறும் இந்த திட்டத்திற்கு உதவித்தொகையை உயர்த்தி அறிவித்து வந்துள்ளேன். முதலில் ரூ.75 ஆயிரம் அதன் பின்னர் 1 லட்சத்து 25 ஆயிரம் என்றெல்லாமல் உயர்த்தினேனே அந்த பெரும் திட்டத்தை கைவிடுகிறேன் என்று இந்த அரசு கூறி உள்ளது.
தேர்தல் என்பதற்காக இலவச திட்டங்களை நாங்கள் அறிவிக்கவில்லை. தொடர்ந்து எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டம். இது நீண்ட கால திட்டம். திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இலவச மின்சாரம் திமுக ஆட்சியில் தான் அறிவிக்கப்பட்டது. இடையில் சில பிரச்சினை காரணமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்கான தடங்கல்களை மக்கள் சிரமப்பட்டு ஏற்றுக்கொண்டார்கள்.
திமுகவை இது போன்ற செயல்பாடுகளால், இது போன்ற நிகழ்வுகளால் வீழ்த்தி விடலாம் என்று எண்ணிப்பார்ப்பவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.
திகார் சிறையில் கனிமொழி...
என்னைப் பற்றி, எனது மகன்களை, மகள்களை பற்றி, பேரன்களை பற்றி பல்வேறு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் கருத்து விஷமாகி திராவிட இயக்கம் என்ற அந்த சொல்லையே வீழ்த்தி விடலாம் என்று. திராவிட இயக்கம் என்ற சொல்லை அழித்து விட, வீழ்த்தி விட எந்த கொம்பனும் பிறக்கவில்லை.
எனது மகள் கனிமொழி டெல்லி திகார் சிறையில் உள்ளார். எனது மூத்த மகள் செல்வி இங்கு வந்துள்ளார். அவர் திருவாரூர் தொகுதியில் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். அவரின் உழைப்பை யாரும் மறக்க முடியாது.
செல்வியோடு கனிமொழியும் ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்து தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டார். ஆனால் அவர் இன்று மத்திய அரசின் உத்தரவாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ சிறையில் உள்ளார்.
கனிமொழி செய்த தவறு என்ன? கலைஞர் டி.வி.யில் பங்கு தாரராக இருந்த ஒரே காரணம் தான். அதனால் தான் சிறையில் வாடுகிறார். அதுவும் ஒரு மலரை வைத்தால் 10 நிமிடத்தில் வாடிவிடும். அப்படிப்பட்ட இடத்தில் அடைபட்டு இருக்கிறார். நானும், செல்வியும் டெல்லி சென்று பார்த்த போது, அவர் கலைப்படாதீர்கள் என்று கூறி விட்டு, செல்வியிடம் அப்பாவை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். நான் கவலைப்பட வில்லை. எதையும் எதிர்கொள்ளும் சக்தியை திராவிட இயக்கம் எனக்கு வழங்கி உள்ளது என்று கூறினார். கனிமொழியே சொல்லும் அளவுக்கு அந்த சக்தியை பெற்று உள்ளார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம்... நான் செய்த குற்றம்...
ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணம் விரயமாகி விட்டது என்று கூறினார்கள். அதன் பின்னர் அது குறைந்து 30 ஆயிரம் கோடி என்றார்கள். ஆனால் அதில் யார் குற்றவாளி என்ற குழப்பத்தில் கனிமொழி கைது செய்யப்பட்டு உள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதைப்பற்றி அதிகம் பேச வேண்டாம்.
கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். காரணம், கலைஞர் டி.வி.யில் பங்குதாரராக இரு என்று நான் கூறினேன். அவர் வேண்டாம் என்று கூறினார். நான் வற்புறுத்திய காரணத்தால் தான் பங்குதாரராக கனிமொழி சேர்ந்தார். வேதனையை பகிர்ந்துகொள்வதற்காக நான் வரவில்லை. நீங்கள் எனது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்பதால் உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
திராவிட இயக்கத்தின் லட்சியத்துக்காக, கொள்கைக்காக, எந்த காரியம் செய்ய வேண்டுமோ? அதை செய்துவிட்டுத்தான் மறைவேன் என்று உங்களிடம் கூறி விடைபெற்றுக்கொள்வதற்காகத்தான் வந்தேன். இப்படி சொல்வதால் பொதுவாழ்க்கையில் இருந்து அல்ல. இந்த இயக்கத்தை எல்லோரும் ஒன்று சேர்ந்து காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்," என்றார் கருணாநிதி.


Source - Vikatan Magazine

No comments:

Post a Comment