Friday, July 22, 2011

சக்சேனா வழக்கில் திடுக் திருப்பம்

சக்சேனா வழக்கில் திடுக் திருப்பம்

ஆவணங்களை அள்ளிப்போனது யார்?
 
த்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்களே, அந்த நிலையில் இருக்கிறார் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. ஒரு வழக்கில் அவர் ஜாமீன் வாங்குவதற்குள் இன்னொரு வழக்கில் அவரைக் கைது செய்வது, விசாரணை செய்வது என்று தொடர்ந்து அடுத்தடுத்து விழுகிறது அடி.
'மாப்பிள்ளை’ பட விநியோகம் தொடர்​பாக, ஹித்தேஷ் ஜபக் என்ற தயாரிப்பாளர் சக்சேனாவுக்கு எதிராக ஒரு புகார் கொடுத்து இருந்தார். இந்த வழக்கில் ஏற்கெனவே சக்சேனாவைக் கைது செய்துவிட்ட போலீ​ஸார், கடந்த 15-ம் தேதி இரண்டு நாள் போலீஸ் காவல் எடுத்து மீண்டும் துருவி இருக்கிறார்கள்.
விசாரணையின் போக்கு குறித்து காக்கிகள் வட்டாரத்தில் கேட்டபோது, ''மாம்பலம் ஏ.சி-யான ஞானசேகர் மேற்பார்வையில், சக்சேனாவிடம் விசாரணை நடந்தது. தொடக்கத்தில் கேள்விகளுக்குச் சரிவரப் பதில் கொடுக்காமல் மௌனமாகவே இருந்தார். தன் அலுவலகத்தில் அமர்ந்தபடி, இதை லைவ்வாகக் கேட்டுக்கொண்டு இருந்த ஓர் உயர் அதிகாரிக்கு செம டென்ஷன். உடனடியாக போனைப் போட்டு, 'சக்சேனா வாங்கிக் குவித்துள்ள நிலங்கள், பங்களாக்கள், வெளி மாநில முதலீடு மற்றும் சினிமாத் தொடர்புகள்...’ என மொத்த விவரங்களையும் புட்டுவைத்து, 'விசாரணைக்கு ஒத்துழைக்கலைன்னா, இதில் இருந்தும் பிரச்னை கிளம்பும்’னு சொல்லுங்க’ என்று சிடுசிடுக்க... அதன் பிறகு சக்சேனாவிடம் இருந்து தடங்கல் இல்லாமல் பதில்கள் வந்தன!'' என்றனர்.
சக்சேனா தரப்பிலோ, ''ஹித்தேஷ் ஜபக்கை சக்சேனா மிரட்டவில்லை. நீண்ட நாட்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடனும், சக்சேனாவுடனும் நெருங்கிய நட்பு பாராட்டிய ஜபக், தான் தயாரித்த பல படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கே தொடர்ந்து கொடுத்து வந்தார். அவருக்கு உரிய லாபம் கிடைக்கவில்லை என்றால், எப்போதோ வியாபாரத் தொடர்புகளை துண்டித்து இருக்கலாமே? சக்சேனாவுக்கு மேலும் நெருக்கடி உண்டாக்கும் நோக்கில், காவல் துறையில் உள்ள சிலரே ஜபக்கை மிரட்டிப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள்!'' என்று ஆதங்கப்பட்டனர்.
இதனிடையே சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்லி ஹார்ட் பீட்டை எகிறவைக்கிறார் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர். ''சில தினங்களுக்கு முன் சக்சேனா வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல் ஒன்று, அங்கு இருந்து பல ஆவணங்களை சத்தம் இன்றி அள்ளிக்கொண்டு போய்விட்டது. 'இதற்கு மூளையாக செயல்பட்டது யார்? அவை என்ன ஆவணங்கள்?’ என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம்!'' என்று பகீர் கிளப்பினார்.
தயாரிப்பாளர் ராஜா நம்மிடம் பேசும்போது, ''நான் தயாரித்த 'வல்லக்கோட்டை’ படத்தை முதலில் 1.25 கோடி ரேட் பேசி, சன் பிக்சர்ஸுக்கு வாங்கிக்கொள்வதாக என்னிடம் உறுதி கூறி இருந்தார் சக்சேனா. ஆனால் கடைசி நேரத்தில், 'அவ்வளவு எல்லாம் தர முடியாது’ என்று பின்வாங்கியதோடு, வேறு யாரும் என் படத்தை வாங்க முடியாதபடி பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டார். இதனால், எனக்குப் பெரும் நெருக்கடி. வேறு வழி இல்லாமல் சக்சேனா சொன்னபடி அவரது உறவினரான சுரேஷ் என்பவருக்கு, வெறும்  70 லட்சத்துக்கு படத்தை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்.  இறுதியில், சுரேஷ் மூலமாக எனது  படம் சன் தரப்புக்கு  1.25 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது!'' என்று கொதித்தார்.
இந்தப் பிரச்னையை வெளியே கொண்டுவந்து மொத்த விவகாரத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த ஒரு சினிமா வி.ஐ.பி,  ''அவருக்கு இவ்ளோ பிரச்னைகள் வரும்னு சத்தியமா நான் நினைச்சுப் பார்க்கலை. எனக்கு வர வேண்டிய  6 கோடி வந்து சேர்ந்தா, அவர் வெளியே வர என்னால் ஆன உதவியை நிச்சயம் செய்றேன்!'' என்று சில நலம் விரும்பிகள் மூலம் இப்போது தூதுவிடுகிறாராம்!
- தி.கோபிவிஜய்
படம்: வீ.நாகமணி
Source - Vikatan Magazine

No comments:

Post a Comment