Tuesday, December 13, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 9 - திருமணம் என்றொரு சூதாட்டம்?

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 9

திருமணம் என்றொரு சூதாட்டம்?
ஒவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
சமீபத்தில் ஓர் இளைஞனைச் சந்தித்தேன். பெயர் நவீன். 24 வயது. சாஃப்ட்வேர் இன்ஜீனியர். நல்ல சம்பளம். வசதியான குடும்பம்.
குழம்பிய மனதோடு இருந்தவன், ''உடனே திருமணம் செய்துகொள் என்று என் பெற்றோர் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்'' என்றான்.
''சரியான வயதுதானே உனக்கு... கோ அஹெட்'' என்றேன்.

அடுத்து, அவன் கேட்ட கேள்வி, திகைக்க வைத்தது - ''என்னுடைய சரியான வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்வு செய்வது?''
திருமணத்தைப் பற்றி எத்தனையோ பழமொழிகளும், மேற்கோள்களும் இருக்
கின்றன. 'அது, லைசென்ஸ் கொடுக்கப்
பட்ட விபச்சாரம்’ என்கிற லெவலுக்கு விமர்சனம் செய்தார் பெர்னார்ட்ஷா. தந்தை பெரியாரோ, திருமணம் என்பதையே ஒரு 'அமைப்பு’ என உருவகப்படுத்தி கிழி கிழி என்று கிழித்தார். 'ஒவ்வொரு திருமணமும் படுக்கையில் முடிவுக்கு வந்து விடுகிறது.’, 'திருமணம் என்பது ஒரு சீட்டாட்டம். உங்கள் கையில் நல்ல கார்டு கிடைக்க அதிர்ஷ்டம் வேண்டும்’ என பல பொன்மொழிகளும் இருக்கின்றன.
நவீன் குழப்பத்தில் இருந்தாலும், அதுவே ஒரு தெளிவினால் ஏற்பட்டதுதான். ''சார்... ஒரு பெண்ணும் நானும் தீவிரமாகக் காதலித்தோம். ஆனால், கடவுள் நம்பிக்கை, சடங்குகள், சினிமா, பொழுதுபோக்குகள், புத்தகம் என்று எல்லாவற்றிலுமே தனக்கு என்ன ஆர்வமோ... அவற்றை என் மீது அவள் திணிக்க ஆரம்பித்தாள். 'விஜய் படத்துக்குப் போக வேண்டாம், சிவன் கோயிலுக்குப் போகக் கூடாது, கிரிக்கெட் பார்க்கக் கூடாது' என்றெல்லாம் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வைக்க ஆரம்பித்தாள்.
'இவளைக் கல்யாணம் செய்தால் வாழ்க்கை முழுவதும் நாம் அடிமைதான்' என்று உணர்ந்தபோது, 'ஸாரி... உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. நண்பர்களாகப் பிரிவோம்’ என்றேன். 'நோ பிராப்ளம்’ என்று பைபை சொல்லி விட்டாள்.''
நவீனை ஆச்சர்யமாகப் பார்த்தேன்.... அவன் தொடர்ந்தான். ''கொஞ்ச நாளில் அவள் என்னிடம் மறுபடி வருவாள் என்று உள்மனம் எதிர்பார்த்தது போலவே அவள் வந்தாள், தன் திருமண அழைப்பிதழோடு. நவீனப் பெண்களைப் பற்றிய என் நம்பிக்கைகளே ஆட்டம் கண்டன'' என்றான்.
''சரிப்படாது என்று எப்போது நீ சொல்லி விட்டாயோ, அப்போதே அவள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரத்தை அவள் பெற்றுவிட்டாளே...'' என்றேன்.
''கரெக்ட்தான். கொஞ்ச நாளிலேயே நானும் சரியாகிவிட்டேன்.''
''சரி, அடுத்து?''
''இப்போது என் அப்பா, அம்மாவுக்குப் பேரன், பேத்தி வேண்டுமாம். ஒரு பெண்ணை பார்த்து விட்டார்கள். அவளிடம் பேசிப் பார்க்குமாறும் சொன்னார்கள். அவர்களுக்காக போய் பார்த்தேன். கணவனே கண்கண்ட தெய்வம் ரேஞ்சுக்கு இருந்தாள். கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேசவே கூச்சப்பட்டாள். சமைப்பது, வீட்டு வேலை செய்வது தவிர வேறு எதிலுமே நாட்டம் இல்லை. 'ஆபீஸ் முடிந்து நேராக வீட்டுக்கு வந்து விடுவீர்களா, கெட்ட பழக்கம் கிடையாதுதானே?’ என்றெல்லாம் தயங்கித் தயங்கிக் கேட்டாள். இவள் சரிப்பட மாட்டாள் என்று மனதில் பட்டுவிட்டது.''
''ஏன் அப்படி தோன்றியது?''
''எனக்கு பல்வேறு ஆர்வங்கள் இருக்கின்றன. சேட்டன் பகத் புத்தகம் படிப்பேன். கிரிக்கெட், ஃபுட்பால் என்று விளையாட்டுகள் டெக்னிக்கலாகத் தெரியும். இலக்கியப் புத்தகங்களை தேடித் தேடி வாங்குவேன். அந்தக் காலத்து எடித் பியாஃபிலிருந்து இப்போது வந்திருக்கும் செலீனா கோம்ஸ் வரை இசை கேட்பேன். வார இறுதியில் பிராந்தியும் பருகுவேன். ஆபீஸுக்கு லீவு போட்டு அன்னா ஹஜாரே ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்டேன். ஈரானிய சினிமா, உலக சினிமா டி.வி.டி-க்கள் என்றால் உயிர்..''
''ஓகே... அதற்கும் உன் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்?''
''இவற்றில் என் வாழ்க்கைத் துணைக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்தால்தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்? அப்பாவைக் காட்டிலும் அம்மா பல மடங்கு கிரேட் பர்சனாலிட்டி. ஆனால், அப்பாவுக்காக நிறைய தன்னை மாற்றிக் கொண்டார். அம்பையின் ஒரு கதையில் வருவதுபோல், அவரே அப்பா போல் மாறிவிட்டார். என்னுடைய உயிர் நண்பன் ஆனந்த், தவறாக ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து, கடைசியில் தற்கொலையில் உயிர்விட்டான். எனக்கும் அப்படி ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது'' என்றான்.
''பெண்கள் எல்லோரும் மோசமும் இல்லை... ஆண்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. உண்மையில் காதல் என்பது திருமணத்துக்கு அப்புறம்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வலுவாக மாறுகிறது. நவீன பெண்ணோ, பழமையான பெண்ணோ... எல்லோரும் மனிதர்கள்தான். முழுக்க முழுக்க உனக்குப் பிடித்தால்தான் திருமணம் என்று பிடிவாதம் பிடிக்காதே. ஈரானியப் படங்களில் கணவன் - மனைவி உறவும், காதலும், குடும்பப் பிடிமானமும் எத்தனை அழகாகச் சொல்லப்படுகிறது? சாக்ரடீஸுக்குக் கொடுமைக்கார மனைவி கிடைத்ததும், காரல் மார்க்ஸுக்கு ஜென்னி கிடைத்ததும் யாரும் திட்டமிட்டதல்ல. ஓரளவுக்கு மனதுக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய். அவளுக்காக விட்டுக்கொடு. உனக்காக அவளும் விட்டுக் கொடுப்பாள். பயம் என்கிற கண்ணாடியோடு இந்த உறவை நீ பார்த்தால், எதுவுமே தெளிவாகத் தெரியாது'' என்றேன்.
நவீன், சற்றுத் தெளிவானவன்போல் தெரிந்தாலும், ''அப்படியென்றால்... திருமணம் என்பது ஒரு சூதாட்டம் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?'' என்றான் சிரித்தபடி.
''சூதாட்டம்தான். ஆனால் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல அது. காதல், புரிதல், விட்டுக்கொடுத்தல், மனித நேயம் போன்ற டெக்னிக்கல் திறமைகளோடு விளையாட வேண்டிய சுவாரஸ்யமான விளையாட்டு!'' என்றேன்.
''ஐ வில் ட்ரை!'' என்று விடைபெற்றான் நவீன். அவனுக்குப் பதில் சொல்லிவிட்டேனே தவிர, அவன் கேட்ட கேள்வி என்னை ரொம்பவே டிஸ்டர்ப் செய்தது. உண்மையிலேயே திருமண உறவு என்பது சூதாட்டம்தானா?!
- நெருக்கம் வளரும்...

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 8 = பொய் சொல்லப் போறேன்...பொய் சொல்லப் போறேன் !

ரொமான்ஸ் ரகசியங்கள்!

பொய் சொல்லப் போறேன்...பொய் சொல்லப் போறேன் !
ஓவியம்: மணியம் செல்வன்
அகிலன் சித்தார்த்
ஆண் - பெண் உறவில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. 'நன்மை விளையும் என்றால்... பொய் சொல்வதில்கூடத் தவறில்லை' என்கிறார் திருவள்ளுவர்.
லதா - சஷாங் ஜோடி, திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், தங்களின் ஃப்ளாஷ்பேக் காதலைப் பற்றி பரஸ்பரம் பிரஸ்தாபித்து, திருமணமே நின்று போன கதையை, கடந்த இதழில் பார்த்தோம். அதன் மூலம் வரும் நீதி... சில உண்மைகளைக் கல்லறைகளைத் தோண்டி வெளியெடுப்பதில் பயன் ஒன்றும் இல்லை என்பதுதான்!

அப்படியென்றால் 'ஆண் - பெண் உறவில் வெளிப்படைத் தன்மை இருக்கவே கூடாதா... அதைச் சொன்னால் பிரச்னைதான் ஏற்படுமா?' என்பது போன்ற கேள்விகள்... ஏன், கோபமேகூட எழலாம். ஆனால், பலநூறு ஆண்டுகளாக, வழிவழியாக புகட்டப்பட்டிருக்கும் பாடங்களின் வழி நடக்கும் மானிட சாதியின் மிச்சம்தான் நாம் என் பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் முதலில் நமக்கு வேண்டும்.
'அந்தரங்கம் புனிதமானது’ என்பார்கள். ஆனால், அது ரகசியமானது என்பது மட்டும்தானே சரியானதாக இருக்கும். அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது மானுட விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிலம், வீடு, கார் போல்... சக மானுட துணையும் ஒரு நுகர்பொருள் ஆகிவிட்டது.
தன் மனைவியின் பழைய காதல் வாழ்க்கையை அறிந்துகொண்டு அதைப் பெருந்தன்மையோடு அணுகும் அறிவு முதிர்ச்சியான கணவன் பற்றிய பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’, 'அந்த ஏழு நாட்கள்’ போன்றவை அந்த ரகம். 'அவள் அப்படித்தான்’, 'அவர்கள்’ போன்ற படங்கள் பெண்களின் காதல் வாழ்க்கையை மிக முற்போக்காகக் காட்டிய உன்னதமான படங்கள். தமிழ் இலக்கியங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனையோ கதைகள் அப்படி வந்திருக்கின்றன.
உலகின் வெவ்வேறு திசைகளில் ஆண், பெண் உறவு மாற்றம் என்பது காட்டாறுபோல் பாய்ந்து ஓடிக் கொண்டுஇருக்கிறது. அந்த டிரெண்டை புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பின்னோக்கித் தள்ளப்படுவோம் என்பது வரலாற்று உண்மை.
சரி, மேட்டருக்கு வருவோம். ஆண் - பெண் உறவில் எதை வெளிப்படையாகச் சொல்லலாம்? எதைச் சொல்லக்கூடாது என்பது ஒரு கலை.
கணவன் - மனைவி இருவருமே ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொள்ளக்கூடிய புரிதல் கொண்ட துணையா என்பதுதான் அது. அவர் அப்படிப்பட்ட மிகச்சரியான துணை என்பதில் நீங்கள் 'கன்வின்ஸ்’ ஆகிவிட்டால்... உங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றிய எந்த உண்மைகளையும் சுதந்திரமாகச் சொல்லலாம். அதேநேரம், அவர் தொட்டாற்சிணுங்கி டைப், மிகவும் பிற்போக்கான சிந்தனைகள் கொண்டவர் என்பது புரிந்தபின், அவரிடம் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. இது உங்களின் தவறு அல்ல. அதனால் குற்ற உணர்ச்சி எதுவும் தேவை இல்லை.
'உண்மைகளைக்கூட சுதந்திரமாகப் பேச முடியாத ஒரு உறவு தேவைதானா?' என்கிற ஒரு கேள்வி, ஒரு நிலையில் உங்களுக்கு ஏற்படக்கூடும். இது வெறும் காதல் ஃப்ளாஷ்பேக் என்கிற குறுகிய வட்டத்தோடு நிறுத்திவிட முடியாது. இந்த சிந்தனை, பூமி அதிர்ச்சி சுழல்போல பல திசைகளையும் பாதிக்கக் கூடியது.
உதாரணமாக... நித்யாவின் கதை. சென்னையைச் சேர்ந்த மிடில் கிளாஸ் பெண் அவள். ஒரே ஒரு ஹால், சமையலறை கொண்ட சிறிய வீடு. அப்பா அரசாங்க வேலையில் குமாஸ்தா. அம்மா குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் எளிய ஹவுஸ் வொய்ஃப். இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. கம்ப்யூட்டர் அறிவில் தேர்வுபெற்று ஒரு நல்ல வேலையில் சேர்ந்தாள் நித்யா.
ரவிச்சந்திரன் என்றொரு வாலிபன் அவள் வாழ்வில் வந்தான். ஆரம்பத்தில் மிகவும் பெருந்தன்மையான ஆண்மகன் போன்ற தோற்றத்தைக் காண்பித்தான். காதல் கவிதைகள் பேசினான். தன் ரத்தத்தால் காதல் கடிதங்கள் எழுதினான். நித்யாவும் காதல் வயப்பட்டாள். ரிட்டையர்ட் ஆகிவிட்ட நிலையில், நித்யாவின் வருமானத்தை மனதில் வைத்து குடும்பத்தைக் கொஞ்சமேனும் கரை சேர்த்துவிடலாம் என்று நினைத்த தந்தை, தடுமாறினார். ஆனாலும், மகளுக்குத் திருமணம் செய்து வைப்பது கடமை என்பதை உணர்ந்து, ஏகப்பட்ட கடன் வாங்கி அவள் விருப்பப்படியே திருமணத்தை நடத்தினார்.
பெற்றோரின் விருப்பத்துக்காக வரதட் சணை பெற்றுக்கொண்ட ரவிச்சந்திரனை ஜீரணிக்க முடியவில்லை. என்றாலும், பொறுத்துக் கொண்ட நித்யாவுக்கு, ரவிச்சந்திரனின் முழு நிஜமுகம் பிற்பாடு தான் மெள்ள தெரிய ஆரம்பித்தது. 'நான், என் குடும்பம், என் அப்பா, என் அம்மா’ இதுதான் அவனுடைய எளிமையான ஃபிலாசபி. நித்யாவின் குடும்பத்தைத் தன் குடும்பமாக என்றுமே அவன் ஏற்றுக் கொண்டதில்லை. தவிர்க்க முடியாது சந்திக்க நேரிட்டால்... போனால் போகிறது என்கிற தொனியிலேயே பேசி கட் செய்வான்.
கணவனின் குணம் கண்டு அதிர்ந்தாலும், எதிர்காலத்தை மனதில் கொண்டு அப்படியே ஏற்றுக் கொண்டாள் நித்யா. தன் தங்கைகளின் பள்ளிக்கூட ஃபீஸுக்குக்கூட கணவனுக்குத் தெரிந்து உதவ முடியவில்லையே என்று நொந்து கொண்டவள், ஆபீஸில் லோன் போட்டு ஈடு செய்தாள். கணவனுக்குத் தெரிந்தால் ரணகளமாகும் என்பதால்... மறைத்தாள். இந்த நிகழ்வுகள் நீண்ட தொடர்கதை ஆகிவிட்டது. இன்று தன் குடும்பத்துக்குப் பல வகைகளில் உதவி செய்கிறாள் நித்யா. தன் பெற்றோரை, உடன் பிறந்தவர்களை மிகவும் அன்போடு கவனித்துக் கொள்கிறாள். ஆனால், எதுவுமே கணவனுக்குத் தெரியாமல்தான்.
இதையெல்லாம் 'பொய்' என்று சொல்வதா? 'பொய்' என்கிற வார்த்தை இதற்குப் பொருந்துமா? இல்லவே இல்லை. பெருந்தன்மையற்ற ஒரு கணவன் வாய்த்ததால், எதற்காக இப்படிப்பட்ட உன்னதமான விஷயங்களை அவனிடம் சொல்லி தன் குடும்பத்தின் அமைதியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற புரிதலால் நித்யா எடுத்த முடிவு இது.
அற்புதமான ஆண் - பெண் உறவில் 'பொய்மை' என்கிற இத்தகைய களை தோன்றுவதற்குக் காரணம், 'நல்லவர்'கள் அல்ல. பிற்போக்குத்தனமான பழமைவாதிகள்தான்!
- நெருக்கம் வளரும்...

ரொமான்ஸ் ரகசியங்கள்! 7 - கணவனின் காதலியும்... மனைவியின் காதலனும் !

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 7

கணவனின் காதலியும்... மனைவியின் காதலனும் !
 அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்
கணவன் - மனைவி, காதலன் - காதலி... இந்த உறவுகளின் இனிமையான தொடர்புக்கு அடிப்படையானது 'டிரான்ஸ்பரன்ஸி’ எனப்படும் வெளிப்படைத்தன்மை. இது கொஞ்சம் சிக்கலானது. தன்னுடைய ரகசியங்கள், அந்தரங்கங்கள் எல்லாவற்றையும் இருவரும் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டுமா? இதற்கு... 'ஆமாம்', 'இல்லை' என்று இரண்டு பதில்களையுமே சொல்லலாம்.
முன்பின் தெரியாத இரண்டு நபர்கள் நிரந்தர உறவு கொண்டு குடும்பம் என்கிற நீண்டகால அமைப்பை நிறுவுவதுதான் திருமணம் என்கிற பந்தம். கணவன் - மனைவி இருவருக்கும் திருமணத்துக்கு முன்பு வேறு காதல் இருந்திருக்கலாம். நெருங்கிய நட்பு இருந்திருக்கலாம். அவை எல்லாம் வெறும் கடந்த காலம்தான். அலமாரியில் வைத்துப் பூட்டப்பட்ட உயிரற்ற எலும்புக்கூடுகள்தான் என்றாகிவிட்ட நிலையில், 'உண்மைகளைச் சொல்கிறேன் பேர்வழி’ என்று அத்தனையையும் தன் துணையிடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
மேல்நாடுகளில் இந்த விஷயம் சர்வ சாதாரணமானது. 'உன் குழந்தைகளும் என் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடுகிறார்கள்’ என்பது அங்கே சகஜமான ஒன்று. ஆனால் நம் சமூகத்தில் 'பொஸஸிவ்னஸ்’ எனப்படும் உரிமை எண்ணம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அது பல நேரங்களில் ஆபத்தான வடிவங்களுக்கு மாறக்கூடியது.
ஒரு கேஸ் ஹிஸ்டரியை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம். சென்னையைச் சேர்ந்த ஜோடி... லதா-சஷாங். இருவரும் நன்றாகப் படித்தவர்கள். இவர்களுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. 'அரேஞ்டு 'கம்’ லவ் மேரேஜ்’ என்று சொல்லலாம். இணையதளத்தில் ஒரு திருமண நிலையத்தின் தளத்தில்தான் இருவரைப் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்கள் இவர்களின் பெற்றோர். நேரில் வந்து பெண் பார்த்து இரு தரப்பினருக்கும் பிடித்துவிட்டது. நிச்சயதார்த்தம் நடந்தது. சஷாங்குக்கு நார்வே நாட்டுக்கு வேலை நிமித்தம் செல்லக் கூடிய வாய்ப்பு விரைவில் வரக்கூடும் என்கிற நிலையில், அதை வைத்துத் திருமண தேதியை நிச்சயித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.
குறைந்தது ஆறு மாதமாவது பிடிக்கும் என்கிற சூழலில்... இருவரும் காதலர்கள் போல் பழக ஆரம்பித்தார்கள். கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்தது. ஒருவரை ஒருவர் பிரிய முடியாத அளவுக்கு நெருங்கிப் பழகினார்கள். மணிக்கணக்காக செல்போனில் பேசினார்கள். ஊர் சுற்றினார்கள். சின்னச் சின்ன உடலின்பங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
ஒரு நாள் கடற்கரையில் சஷாங்கின் மடியில் சாய்ந்திருந்த லதா, ''சஷாங்... உனக்கு இதுக்கு முன்னாடி ஏதாவது காதல் அனுபவம் இருந்திருக்கா?'' என்று வில்லங்கமான கேள்வியைக் கேட்டாள். சஷாங் சிரித்தபடி, ''இல்லாமல் இருக்குமா?'' என்றான். லதாவும் சிரித்தபடி, ''என்ன அது சொல்லு?'' என்று கேட்டாள். ''விடு... அதெல்லாம் முடிஞ்சு போன கதை. இப்ப எதுக்கு அதெல்லாம்?'' என்று அவாய்ட் செய்த சஷாங்கை லதா விடவில்லை. சொல்லியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள். சஷாங் அவன் 'ஃப்ளாஷ்பேக்’கைச் சொல்ல ஆரம்பித்தான்.
சஷாங்கின் அலுவலகத்திலேயே டிரெய்னியாக வந்து சேர்ந்தாள் அனுபமா கவுர். பஞ்சாபி பெண். சஷாங்கின் அழகும், படிப்பும், பேச்சும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சஷாங்கும் அவள் அழகில் மயங்கிவிட்டான். இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஏறக்குறைய இரண்டு வருடங்கள் காதல் நீடித்தது. விஷயம் இரண்டு வீட்டுக்கும் தெரிந்து ரணகளம் ஆனது. தமிழன், பஞ்சாபி என்கிற தேசிய வேற்றுமைப்பாடு விஸ்வரூபம் எடுத்தது.
இருவருக்கும் வேறு வழி தெரியவில்லை... பிரிவதைத் தவிர. உணர்ச்சிகரமாகப் பேசி, ஒரே ஒரு முத்தத்துடன் காதலை முறித்துக் கொண்டார்கள். அனுபமாவுக்கு இன்னொரு பஞ்சாபி இளைஞனுடன் திருமணமானது. இன்னும் அவள் சஷாங்கின் அலுவலகத்திலேயே மற்றொரு டிபார்ட்மென்டில்தான் வேலை செய்கிறாள். ஆனால், அவள் முகத்தில் சந்தோஷம் இல்லை. எப்போதாவது சஷாங்கை சந்திப்பாள். ஆறுதல் சொல்லி, சந்தோஷமாக இருக்கும்படி கேட்டுக் கொள்வான்.
எல்லாவற்றையும் சஷாங் சொல்லி முடிக்க... லதா மௌனமாக இருந்தாள். அவளை உலுக்கி, ''ஏய், என்ன ஃபீல் பண்றியா? அதான் சொன்னேனே... அதெல்லாம் முடிஞ்சு போன கதைனு'' என்றவன், ''சரி... நான் எவ்வளவு ஃபிராங்கா என் காதலைப் பத்திச் சொன்னேன். உனக்கு ஏதாவது லவ் இருந்திருக்கா?'' என்றான். சற்று நேர அமைதிக்குப் பிறகு, ''இருந்திருக்கு'' என்றாள் மெதுவாக. அவள் மனதில் சஷாங்குக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு பொங்கியிருந்தது.
அவன் பெயர் நாகேந்தர். பெங்களூருவில் ஒரு கான்ஃப்ரன்ஸுக்காகச் சென்றிருந்தபோது சந்தித்த சென்னைப் பையன். பார்த்ததும் பிடித்துவிட்டது. ஒரு காபி ஷாப்புக்குச் சென்றவர்கள், அன்று மாலையே ஒரு திரைப்படத்துக்குப் போனார்கள். இருவரையும் பற்றிப் பகிர்ந்து கொண்டார்கள். மொத்தம் ஐந்து நாட்கள் நடந்த கான்ஃப்ரன்ஸில் ஏதோ ஐம்பது வருடப் பழக்கம் போல் ஓர் உறவு தென்பட்டது. ஊருக்குத் திரும்பும் தினத்தில் 'ஐ லவ் யூ’ சொல்லிக் கொண்டார்கள். சென்னையிலும் அவர்களின் காதல் செழித்து வளர்ந்தது.
நாகேந்திரனுக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்டுகள் என்கிற உண்மை, லதாவுக்கு மெதுவாகத்தான் தெரிந்தது. சிலர் அவளிடம் நேரில் வந்து சண்டை போட்டது மட்டுமின்றி, அவனிடம் ஜாக்கிரதையாகப் பழகும்படி எச்சரித்தார்கள். நாகேந்திரனோ... தான் அப்படி இருந்தது உண்மைதான் என்றும், லதாவை எப்போது சந்தித்தானோ அப்போது முதல் உண்மைக் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டதாகவும், அவனை மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டான். ஆனால், லதா மன்னிக்கத் தயாராக இல்லை. பெற்றோரிடம் மாப்பிள்ளை பார்க்கச் சொல்ல... அப்படி வந்தவன்தான் சஷாங்.
லதா சொல்லி முடித்ததும், சஷாங் தரப்பிலும் ஆழ்ந்த மவுனம். இதுவரை கலகலப்பாகச் சென்று கொண்டிருந்த காதல், திடீரென்று தடம் புரண்டது போல் ஓர் உணர்வு. இருவரும் கடற்கரையில் இருந்து எழுந்தார்கள். ஒரு சின்ன இடைவெளி விழுந்திருந்தது இருவரிடமும். ''அந்த அனுபமா தினமும் உங்களைப் பார்க்கிறாளா?'' என்றாள் லதா. ''இதே கேள்வியை நானும் கேட்கலாமா? அந்த நாகேந்தர் உன் கூட தினமும் பேசறானா? அவனைப் பார்த்தா உனக்குப் பாவமா இருக்கா?'' என்று திருப்பிக் கேட்டான் சஷாங்.
சாதாரண ஊடல் போல் ஆரம்பித்தது... சமாதானம் செய்ய யாரும் இல்லாததால் நாளுக்கு நாள் அதிகரித்தது. இருவரும் நவீன யுகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெளிப்படையான பேச்சை எதிர்கொள்ளும் நேர்மை இல்லாதவர்கள். லதா - சஷாங் உறவு விரைவில் முறிந்தது என்பது சோகமான விஷயம்.
கணவன், மனைவிக்கிடையே வெளிப்படைத்-தன்மையே இருக்கக்கூடாதா? எதில் இருக்கலாம்? எதில் இருக்கக்கூடாது? இது ரொமான்ஸ் ரகசியங்களிலேயே மிக முக்கியமானது!
- நெருக்கம் வளரும்...
Source - Vikatan Magazine

ரொமான்ஸ் ரகசியங்கள்! - 6

ரொமான்ஸ் ரகசியங்கள்!

அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்:மணியம் செல்வன்
'அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது' (A smooth sea, never made a skillful sailor) என்பார்கள். அலைகள் ஆர்ப்பரிக்கும், புயல் காற்று சுழற்றியடிக்கும், இடி - மழை மிரட்டிப் பார்க்கும் கடல்தான் ஒரு மாலுமிக்கு சவால்! அவற்றை வெற்றிகரமாக கடந்துவிட்டால்... அவர் அனுபவம் மிக்க திறமையாளராக ஆகிவிடுவார்.

ஆண் - பெண் மண வாழ்க்கையும் அப்படித்தான். திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும்போது இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வரும். அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்.
தொடக்க நிலையில் வரும் சிறுசிறு தடைகளை(Hiccup)வெற்றிகரமாக தாண்டிவிட்டால், அதன் பிறகு சுவையான வாழ்க்கை காத்திருக்கிறது. அதேநேரம் அந்த இனிய உறவை வாழ்நாள் முழுவதும் வெற்றிகரமாக தொடர்ந்து நடத்திச் செல்ல சில புரிதல்களும் தேவை. அதன் ஃபார்முலாக்களை ஒரு உதாரண தம்பதியின் மூலம் சொல்கிறேன்.
அந்தத் தம்பதி சென்னை புறநகர் பகுதியில் வசிப்பவர்கள். 'வாலன்டரி ரிட்டையர்மென்ட்’ வாங்கியவர்கள். ஒரு மகன், மகள். இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். பணம் காசுக்குக் குறைவில்லை. இவர்கள் மிக ஆச்சர்யமான தம்பதி... ஏதோ நேற்றுதான் திருமணம் ஆனவர்களைப் போல் அத்தனை அந்யோன்மாக, சந்தோஷமாக சிரித்துப் பேசியபடி இருப்பார்கள்.
சென்னையில் நடந்த ஒரு புத்தகக் கண்காட்சி விழாவில் அந்தத் தம்பதியை தற்செயலாகப் பார்த்தேன். எழுத்தாளர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், பிஸினஸ்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களிடமும் சென்று பேசியபடி இருந்தார்கள். பலரைப் பாராட்டிக் கொண்டும் இருந்ததைப் பார்த்தேன். குறிப்பாக, ஓர் இளம் சினிமா கவிஞரிடம் அவர் எழுதிய பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டி அவர்கள் பாராட்டியதைக் கவனித்தேன். கவிஞரும் மிக உற்சாகமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
எனக்கு அவர்கள் மேலிருந்த ஈடுபாடு இன்னும் அடர்த்தியாக, ஒரு கட்டத்தில் தனியாக இருந்த அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனே கை கொடுத்து, 'ஃப்ரெண்ட்லி' ஆகிவிட்டார்கள்.
'கல்யாணம் ஆனதில்இருந்து இப்படித்தான் அந்யோன்யமாக இருக்கிறீர்களா? சண்டையே வருவதில்லையா?'' என்றேன்.
'அதை ஏன் கேட்கிறீர்கள்? கல்யாணம் ஆன புதிதில் தினமும் சண்டைதான். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டைகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்று ஒரு கட்டத்தில் பேசிக்கொண்டோம். சில சிம்பிள் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், புரிதல்கள் என்று அட்டவணை போட்டுக் கொண்டோம். அதன்படி நடந்து கொண்டதில் நாளுக்கு நாள் எங்களுக்கு அன்பு கூடியது!' என்றார் கணவர்.
'ஆச்சர்யமாக இருக்கிறதே... இப்படி பேசி வைத்துக் கொண்டுகூட வாழ முடியுமா?' என்றேன்.
'ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வாருங்கள்... நல்ல விருந்து சாப்பிட்டு விட்டுப் பேசலாம்' என்று அன்புடன் அழைத்தார் அப்பெண்மணி. அடுத்த ஞாயிறே அவர்களின் வீட்டில் ஆஜரான நான், அங்கிருந்த சில மணி நேரங்களிலேயே அவர்களுடைய 'சக்சஸ் ஃபார்முலா'வின் பல விதிகள் எனக்குப் புரிந்துவிட்டன.
இருவரும் ஒருவரின் மீது ஒருவர் கடுஞ்சொற்கள் வீசுவதில்லை. தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள். இவர் இன்ன வேலையைத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. என்னிடம் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் உள்ளே காபி தயாரித்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் இருக்கும் மகளிடம் போனில் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது, கணவர் வீட்டைக் கூட்டிக் கொண்டிருந்தார். சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை மனைவி கணவனுக்குக் கொடுத்தார். கணவனுக்கு நகம் வெட்டினார். இருவரிடமும் சகஜமான 'தொடுதல்’ இருந்தது. 'இன்றைக்கு இரவு நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம்’ என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார் மனைவி.
இருவரும் வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளவில்லை. காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, அரை மணி நேரம் யோகா, நாற்பது நிமிடங்கள் வாக்கிங், அடுத்து பேப்பர். வீட்டு வேலைகள் தொடர்கின்றன. தினமும் புத்தகம் படிக்கும் பழக்கமும் இருவருக்கும் இருந்தது.
இருவருக்குமான அன்பும் ஒருவரை ஒருவர் சார்ந்திருந்ததையும், அது திட்டமிட்டு வளர்க்கப்பட்டிருந்ததையும் அதிசயமாகப் பார்த்தேன். கணவன்- மனைவி இருவரின் உறவும் மேற்பட அவர்களிடமிருந்து நான் அறிந்து கொண்ட சில ஃபார்முலாக்களை, பத்து விதிகளாகச் சுருக்கிச் சொல்கிறேன்...
1. ஒருவரின் மீது ஒருவர் எப்போதும் கடுஞ்சொற்களைப் பேசக் கூடாது.
2. வீட்டு வேலைகளைச் செய்வதில் சமத்துவம் வேண்டும்.
3. சிறிய தவறு செய்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.
4. இருவரில் யார் எந்தத் தவறு செய்தாலும், பெரிதாக்காமல் உடனே மன்னிக்க வேண்டும்.
5. தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியே பேசாமல் பொது விஷயங்களைப் பற்றி தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டையாக மாற்றிவிடக் கூடாது.
6. வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.
7. யார் மீதும் யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சுதந்திரம் என்பது மிக முக்கியம்.
8. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.
9. வாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம். நகைச்சுவைக்கான ரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
10. 'எந்நாளும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்’ என்கிற நம்பிக்கையை ஒருவர் மனதில் இன்னொருவர் ஆழமாக விதைக்க வேண்டும்.
ஆனந்தமான ரொமான்ஸ் வாழ்க்கையின் பத்து அடிப்படை ரகசியங்களாகவே இவை எனக்குத் தோன்றுகின்றன. மனித மனம் என்பது காட்டாறு போன்றது. அதை முறையாகக் கட்டுப்படுத்தத்தான் இதைப் போன்ற பல விதிமுறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.
‘To love and to be loved is the greatest happiness of human existence’எனும் பொன்மொழி... எத்தனை சத்தியம்!
- நெருக்கம் வளரும்...

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1
பெற்றோர்களே... நீங்கள் நம்பர் 1 ஆகுங்கள்!
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
'என் குழந்தை, கிளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கணும். எங்க யும், எதுலயும் அவதான் ஃபர்ட்ஸ்டா வரணும்’ என்கிற ஆசையில் இருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் இருக்கிற குறைபாடு களைக் கண்டு உணர்வது இல்லை.
''ஏண்டா... எப்பப் பார்த்தாலும் 'கரி’னு எழுத வேண்டிய வார்த்தையை 'கறி’னு மாத்தி மாத்தி எழுதறே? எத்தனை முறை சொல்லித் தர்றது?'’ என்று அலுத்துக்கொள்ளும் முன், ஏன் அவன் அப்படி எழுது கிறான் என்று யோசித்தது உண்டா? யோசித்திருந்தால்... அந்தக் குழந்தைக்குக் 'கற்றலில் குறைபாடு’ உள்ளது என்பதைக் கண்டறிந்து இருக்கலாம்.
ஆம், 5-10 சதவிகித குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை உள்ளது. இந்தக் குழந்தைகள் படிப்பில் பின் தங்கியே இருப்பார்கள். இந்தக் 'கற்றலில் குறைபாடு’ பிரச்னை யில் பல வகைகள் உண்டு. நன்றாக எழுதத் தெரிந்த குழந் தைக்கு, அதை வாசிப்பதில் பிரச்னை இருந்தால், குழந் தைக்கு 'டிஸ்லெக்ஸியா' (Dyslexia) எனும் குறைபாடு இருக் கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

'கிஸீபீ’ என்பதை ‘Dna’ என்றும், ‘Diary’ என்பதை ‘Dairy’ என்றும், ‘Trial’ என்பதை ‘Trail’ என்றும்... இப்படிச் சில வார்த்தைகளுக்குத் தொடர்ந்து ஸ்பெல்லிங்கை மாற்றி எழுதினால், 'டிஸ்லெக்ஸியா கிராபியா' (Dyslexia graphia) எனப்படும் 'எழுதுவதில் குறைபாடு' நம் குழந்தைக்கு உள்ளது என்று உணர வேண்டும். சிம்பிளான கூட்டலும், கழித்தலும் தெரியும். ஆனால், அதையே கொஞ்சம் யோசிக்கும் வகையில் கொடுத்தால், உதாரணமாக, கடன் வாங்கிக் கழிக்கும் கழித்தல் முறை கணக்கு போடும்போது தடுமாறிக் கொண்டே இருந்தால்... அது 'டிஸ்லெக்ஸியா கால்குலியா' (Dyslexia calculia)’ எனப்படும் 'கணக்கிடுவதில் குறைபாடு' என்று உணர வேண்டும்.
வீட்டில் பேசும் தாய்மொழி ஒன்றாக இருந்து, படிக்கும் மொழி வேறாக இருந்தால்... அவர்கள் படிப்பதிலும், படித்ததை எழுதுவதிலும், சொல் வதிலும் பிரச்னைகள் இருக்கும். உதாரணமாக, 'இந்த பேனாவைப் பற்றி இரண்டு வரி எழுது' என்று ஆசிரியர் சொன்னால், குழந்தை எழுதத் தெரியாமல் திருதிருவென விழிக்கும். ஆனால், 'இந்த பேனா என்ன கலர், என்ன வகை ரீஃபில், எத்தனை ரூபாய்?' என்று ஒவ்வொரு கேள்வியாக தாய்மொழியில் கேட்டால், 'டக் டக்’ பதில் வந்துவிழும்.
ஆக, இந்தக் குழந்தைக்கு அந்த விஷயத்தைப் பற்றிய அறிவு இருக்கிறது. ஆனால்... வேற்று மொழியில் எழுதி வெளிப்படுத்துவதில் சிரமம் இருக்கிறது. அதேபோல், 'எனது லட்சியம் மருத் துவர்’ என்ற வாக்கியத்தை படிக்கத் தெரிந்து இருக்கலாம். ஆனால், அதனை புரிந்து படிக் கிறார்களா என்பதுதான் பிரச்னை. வாசிக்கத் தெரிந்து இருக்கிறது என்பதே புரிந்து இருக்கிறது என்று அர்த்தம் ஆகாது.
சரி... இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியாதா..? இந்தப் பிரச்னை நம் மூளையில் 'மொழி’ சம்பந்தப்பட்ட பகுதியில் ஏற்படும் குறைபாட்டால் வருவதால்... இதனை சரிசெய்ய இயலாது. இம்மாதிரி குறைபாடு உடைய குழந்தைகள், தாய்மொழியிலேயே கற்பது நல்லது; சிரமத்தின் அளவு குறையும்.
இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு படிப்பது மட்டும்தான் சிரமமே தவிர, வரைவது, விளையாடுவது, இசைக்கருவிகள் வாசிப்பது போன்ற எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸில் 'கிங்’ ஆகவும், மற்ற எல்லா விஷயங்களிலும் எந்தப் பிரச்னையும் இன்றி வெகு இயல்பான, ஸ்மார்ட்டான குழந்தைகளாகவும் இருப்பார்கள். படிப்பில் பின்தங்கி இருந்தாலும், இவர்கள் சராசரி குழந்தைகளைவிடவும் மேலான 'ஐ.க்யூ’ உடைய குழந்தைகள்.
'ஆனாலும், இயற்கையால் வந்த இந்தக் குறை பாட்டால்... எனது குழந்தை படிப்பில், பரீட்சை யில் தோற்க வேண்டுமா?’ என்பவர்களுக்கு, ஆறுதலான, ஆதரவான பதில் இருக்கிறது. பொதுவாக எல்லாக் குழந்தைகளும் மூன்று மணி நேரம் பரீட்சை எழுதுவார்கள். ஆனால், இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு எழுதுவதில் சிரமம் இருப்பதால், அரசு இக்குழந் தைகளின் சிரமத்தை உணர்ந்து 14 வருடங்களுக்கு முன் சில சலுகைகளைக் கொடுத்துள்ளது.
இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு பரீட்சையின்போது எக்ஸ்ட்ராவாக 1 மணி நேரம் வழங்கப்படும். இக்குழந்தைகளின் பதிலில் 'கன்டென்ட்’ இருக்கிறதா என்று பார்க்க வேண் டுமே தவிர, ஸ்பெல்லிங் மிஸ்டேக், கிராமர் மிஸ்டேக் எல்லாம் பார்க்கத் தேவையில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கணக்கில் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு, கால்குலேட்டரை பயன் படுத்தலாம் என்றும் அனுமதி அளித்துள்ளார்கள்.
இவர்கள் இரண்டாம் மொழியாக என்ன பாடத்தை எடுத்துள்ளார்களோ, அதற்குத் தேர்வு எழுத வேண்டாம் என்றும், தேர்வை இவர்கள் சொல்ல, இன்னொருவர் எழுதக் கூடிய 'ஸ்க்ரைப்’ முறையையும் பின்பற்றலாம் என்றும் சலுகை அளித்துள்ளது அரசு. தகுதி வாய்ந்த குழந்தைநல மருத்துவரிடம் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா குறைபாடு உள்ளது என்று சான் றிதழ் வாங்கி, அதனை தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பித்து, அவர்கள் கொடுக்கும் சான்றிதழை வைத்து இந்த சலுகைகளைப் பெற முடியும். எனவே, கவலை மறந்து உங்கள் குழந்தைகளின் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் ஆதர்ஷ மூளையாக இருங்கள் தோழிகளே!
குழந்தைகள் 'நம்பர் ஒன்’ ஆவது அவர்கள் கைகளில் பாதியும், உங்கள் அன்பில் மீதியும் பொதிந்து இருக்கிறது. அவர்களை அன்பால் வழிநடத்துங்கள். உங்கள் குழந்தை 'நம்பர் ஒன்’ என விளங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பு வதுபோல, தங்கள் பெற்றோர்தான் 'நம்பர் ஒன்’ எனக் கொண்டாட அவர்கள் மனதும் ஏங்கும்தானே?! அதற்கும் உங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ளுங்கள்... குழந்தைகள் உடனான உங்கள் புரிதலால்!
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நிறைவடைந்தது
தொகுப்பு: நாச்சியாள்