'நோ' சொல்லக் கற்றுக் கொடுங்கள் !
நாச்சியாள்,
க.நாகப்பன்
'ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கும், ஏதோ ஒரு பெண் மீது... ஏதோ ஒரு வடிவில் வன்முறை நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு 9 நிமிடத்துக்கும், யார் வீட்டிலாவது ஒரு பெண் கணவனால் அடி, உதை என கொடுமைக்கு ஆளாகிறாள். ஒவ்வொரு 29 நிமிடத்துக்கும், ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறாள். ஒவ்வொரு 77 நிமிடத்துக்கும், வரதட்சணைக் கொடுமையால் ஒரு பெண்ணின் உயிர் பறிபோகிறது.'க.நாகப்பன்

கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி என்று நதிகள்கூட பெண் பெயரால் அழைக்கப்படுவது பாரதமாதாவின் இந்தத் திருநாட்டில்தான்!
தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி என எந்த மொழி செய்தித்தாள்களை புரட்டினாலும் ஊர், பெயர்களில் மட்டுமே வித்தியாசம் காட்டி வரும் செய்திகள்... பெண் மீது பாலியல் பலாத்காரம், மனைவி எரித்துக் கொலை, மாணவி மீது ஆசிட் வீச்சு போன்ற வைதான். பள்ளி, கல்லூரி, பணியாற்றும் அலுவலகம், பேருந்து, நடமாடும் சாலை, வீடு என எல்லா இடங்களுமே பாதுகாப்பு அற்ற இடங்களாகவே இருக்கின்றன - பெண்களுக்கு.
'இது யுகம் யுகமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தானே’ என்று நொடிப்பொழுதில் கருத்து சொல்லி, இப்போதும்கூட பிரச்னையைக் கடப்பது, பெண் இனத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம். பெண் இனத்தின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போய், நாட்டின் சில இடங்களில் இன்று 1,000 ஆண்களுக்கு 847 பெண்கள் என்று இருக்கிற அபாயகரமான, அவமானகரமான நிலையிலும்கூட, அந்த துரோகத்தை இச்சமூகம் தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் வேதனை!
ஒரு பெண்ணின் பாதுகாப்பு என்பது அவள், கருவாகத் தாயின் கருப்பையில் உருக்கொண்ட நாளில் இருந்தே ஆரம்பிக்கிறது. பிறந்த பிறகு, அவளின் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவழிக்கும் இடம் பள்ளிக்கூடம்தான். அங்கேயும், அதற்கு வெளியிலும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதைச் சொல்கிறார் பள்ளி ஆசிரியை பூமாதேவி...
''பெண் குழந்தைகள் மட்டுமல்ல, 5-10 வயதுக் குழந்தைகள் அனைவருமே பள்ளி முகவரி, வீட்டு முகவரி, அம்மா-அப்பா செல்போன் நம்பர் என முக்கிய விலாசங்களை மனப்பாடமாகத் தெரிந்து கொள்வது மிக முக்கியம். சில சமயங்களில் கடத்தப்படுகிற குழந்தைகள், இந்த முகவரிகளையும் போன் நம்பர்களையும் சரியாகத் தெரிந்து வைத்திருந்ததாலேயே சமயோஜிதமாகத் தப்பித்து வந்த உதாரணங்கள் உள்ளன. பள்ளிக்கு பெண் குழந்தைகளை தனியார் வேன், ஆட்டோக்களில் அனுப்பும் பெற்றோர்... அந்த வாகன ஓட்டுநரின் முகவரி, செல்போன் நம்பரைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர், குறிப்பிட்ட அந்த பள்ளிக்கு நீண்ட காலமாக வாகனம் ஓட்டுபவராகவும் தெரிந்தவராகவும் இருப்பது கூடுதல் பாதுகாப்பானது.

''அம்மா, அப்பா, வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா போன்ற உறவுகள் தவிர... தெரியாதவர்கள் யாராவது வந்து, 'சாக்லேட் வாங்கித் தர்றேன், அங்க வாம்மா’ என்று எங்கு கூப்பிட்டாலும் போகக்கூடாது. என்று 'அலர்ட்’ செய்யுங்கள்'' என்றார் பூமா அக்கறையுடன்.
கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்குமான பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்!
படம்: ச.இரா.ஸ்ரீதர்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment