மண்ணைக் கவ்விய மந்திரிகள்!
அவுட்... டவுட்!
'அய்யோ பாவம்’ அன்பழகன்!
'துறைமுகம் தொகுதியில் இருந்து வில்லிவாக்கத்துக்கு மாறினாலும் அன்பழகனுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை!’ எனச் சொல்லி இருந்தோம். அது அப்படியே நிகழ்ந்தது. அடாவடி, முறைகேடு உள்ளிட்ட புகார்கள் அறவே இல்லை என்றாலும், ஆக்கபூர்வமான பணி எதுவுமே இல்லை என்பதால், 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார் இந்த பழுத்த அரசியல்வாதி!

தடாலடிக்குக் குறைவு இல்லாத வீரபாண்டி ஆறுமுகம் தற்காப்பு முயற்சியாக இந்தத் தேர்தலில் சங்ககிரி தொகுதிக்கு மாறினார். ஆனாலும், மக்களின் ஆவேசத்தில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. சேலத்தில் ஒரே வீட்டில் நடந்த ஆறு படுகொலைகளும், அதில் வீரபாண்டியாரின் உறவினரான பாரப்பட்டி சுரேஷ் வளைக்கப்பட்டதும், சொத்துக் குவிப்புகளும் மாவட்டத்தையே திகைக்கவைத்தது. போதாக் குறைக்கு ஸ்டாலினுடன் மோதல் வேறு. எல்லாமும் சேர்ந்துதான் தலை குப்புறத் தள்ளிவிட்டது, இந்தத் தடாலடிப் புள்ளியை!
பொன்முடியைப் புரட்டிய 'எரிச்சல்!’
பொன்முடி, கட்சிக்காரர்களிடம் எரிந்து விழும் வழக்கம்கொண்டவர். இவரை வீழ்த்த சரியான ஆயுதமாக, மென்மைப் புள்ளியான சி.வி.சண்முகத்தை அ.தி.மு.க. நிறுத்தியது. அப்போதே உஷாராகி இருக்கவேண்டிய பொன்முடி, கரன்ஸியை நம்பினாரே தவிர, கட்சிக்காரர்களைக் கடுகளவும் மதிக்கவில்லை. தேர்தல் முடிந்த ஒரு மாத இடைவெளியில், பொன்முடியின் கல்லூரிக்காக 30 பேருந்துகள் வாங்கப்பட்டன. 'மீண்டும் உயர் கல்வித் துறை அமைச்சர் ஆவார்’ என்கிற நம்பிக்கையில் அவற்றை வாங்கி வந்தது பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி. மக்களின் மனநிலை புரியாமல் 'பெருக்குவதிலேயே’ தீவிரமாக இருந்ததால்தான், பொன்முடிக்கு இந்தப் பொளேர் அடி!
நெளிய முடியாத நேரு!
'ஊரையே வளைத்துப் போட்டுள்ள நேருவின் அடாவடிகளே, திருச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க-வை அமோகமா ஜெயிக்கவெச்சிடுவாங்கம்மா!’ என ஜெயலலிதாவிடம் சொன்னார் நேருவை எதிர்த்துக் களம் இறங்கிய மரியம் பிச்சை. 'திருச்சியில் மலைக்கோட்டையை மட்டும்தான் விட்டுவெச்சிருக்கியா நேரு?’ என கருணாநிதியே நேரடியாக நேருவை கிண்டல் அடித்ததாகச் சொல்வார்கள். தேர்தல் நேரத்தில் நேருவின் உறவினருக்குச் சொந்தமான எம்.ஜெ.டி. பேருந்தில், ஐந்தரை கோடி ரூபாய் பிடிபட்டது. நேருவின் சகோதரர்கள் சேர்த்துவைத்த 'நல்ல’ பெயர்களும் சந்தி சிரித்தன. தொகுதி முழுக்கப் பண மழை பொழிந்தும் நேரு வெல்ல முடியாததற்குக் காரணம், அதே பணம்!
பரிதாபப் பரிதி!
பரபரப்பும் விறுவிறுப்புமாக பரிதியைப் பார்த்து பலவருடங்களாகிவிட்டன. மிகச் சொற்பமான வாக்குகள் முன்னும் பின்னுமாக ஏறி இறங்கியபோது, 'என் தொகுதி என்னைக் கைவிடாது’ என நம்பிக்கையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார் பரிதி. கட்சியின் அடிமட்டத் தொண்டன் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் தேர்தலுக்கு முன்னால் கண்டுகொள்ளவில்லை என்ற கோபம் இவர் மீது இருந்தது!
அடங்காத அன்பரசன்!
ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டே இருப்பது தா.மோ.அன்பரசனின் வழக்கம். அதனாலேயே இவருடைய பெயரை டவுட் பட்டியலில் எழுதி இருந்தோம். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே பல்லாவரம் தொகுதி நிர்வாகிகளைச் சரிக்கட்டி, பெரும் வெற்றிக்குத் தயாராக இருந்தார். தேர்தல் நேரத்திலும் தீராத பண மழை... ஆனாலும், ஸீட் கிடைக்காத வருத்தத்தில் இருந்த இ.கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகளை, அன்பரசனால் சரிக்கட்ட முடியவில்லை.மணல் விவகாரம் தொடங்கி பல விவகாரங்கள், அவருடைய வெற்றிக்கு ஆப்புவைத்தன!
இடியில் சிக்கிய எம்.ஆர்.கே.!
'நிச்சயம் ஜெயிப்பார்!’ எனக் கட்சி இவரை உறுதியாக நம்பியபோதும், இவர் தேறுவது கடினம் என்றே எழுதி இருந்தோம். கடுகடு முகம்... சிடுசிடு வார்த்தை... எனக் கட்சிக்காரர்களிடம் எம்.ஆர்.கே. சம்பாதித்த 'நல்ல’ பெயருக்கு அளவே இல்லை. 'அவரை வளர்ப்பது... இவரை வளைப்பது’ எனக் கோஷ்டி அரசியலை கொம்பு சீவிவிட்டதிலும் எம்.ஆர்.கே-வுக்கு பெரிய 'புண்ணியம்.’ யாரையும் மதிக்காத 'மாண்பே’ இவரை இடியில் சிக்கவைத்தது!
ஒன்றும் செய்யாத உபயதுல்லா!
மூன்று முறை தொடர்ந்து தஞ்சாவூரில் வென்று இருந்தாலும், தொகுதிக்கு உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. 'நான் நிச்சயம் தோற்றுவிடுவேன்’ எனப் பிரசாரத்தின்போது வெளிப்படையாகப் பேசி, பீதியைக் கிளப்பினார். மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்தின் உள்ளடி வேலைகளைத்தான் அப்படி சூசகமான வார்த்தைகளால் சொன்னார். அது அப்படியே பலித்தது!
மன்றாடிய மதிவாணன்!
'மதிவாணனுக்கு பால் பொங்குவது கஷ்டம்!’ என சொல்லி இருந்தோம். கீழ்வேளூர் தொகுதியின் மீனவர் பகுதி வாக்குகள் இவரைத் தலைகுப்புறத் தள்ளித் தோற்கடித்தன. ஆரம்பத்தில் ஓலைக் குடிசையில் வாழ்ந்த மதிவாணன், பங்களா கட்டி பால் காய்ச்சியபோதே, அய்யாவின் செல்வாக்கு அவுட். 'அங்கே சொத்து... இங்கே ஃபேக்டரி...’ என எதிர்க் கட்சிகள் கிளப்பிய பிரசாரமும் நன்றாக எடுபட்டது!
செல்வாக்கு இழந்த செல்வராஜ்!
வனத் துறை அமைச்சராக இருந்த செல்வராஜ், கோஷ்டி அரசியலை தீவிரமாக முன்னெடுத்தவர். நேருவுக்கும் இவருக்கும் நேரடியாகவே மோதல் நடந்தது. சாதிய வாக்குகளை மட்டுமே நம்பியதும், உள்ளடி வேலைகளும்தான் செல்வராஜின் செல்வாக்கை ஓட்டையாக்கின!
சுறுசுறு இழந்த சுரேஷ்ராஜன்!
அசராத சுறுசுறுப்பாலேயே அமைச்சர் பதவி பெற்றவர். எளிமையும் சுறுசுறுப்பும் சைரன் கார் சத்தத்தில் சைலன்ட்டானது. உள்ளடிப் பூசல்களும் நிறைய. உறவு வட்டமும் கட்சியை ஆட்டிப் படைத்ததால், இவருடைய தோல்வியில் கட்சித் தலைமைக்கே பெரிய ஆச்சர்யம் இல்லை!
புகழ் இழந்த பொங்கலூர் பழனிசாமி!
அமைச்சர் ஆனது முதல் 'கோஷ்டி’ அக்கப்போரில் இறங்கியதும், கட்சி வேலைகளைவிடச் சொந்த சம்பாத்தியங்களில் கவனம் செலுத்தியதும்தான் இவரது தோல்விக்குக் காரணம். உள்ளடி உபத்திரவங்களே பழனிசாமியைப் பஞ்சராக்கின!
சக்தி இழந்த சாத்தூர் ராமச்சந்திரன்!
சாத்தூரைத் தவிர்த்துவிட்டு, அருப்புக்கோட்டையில் போட்டியிட்டார். கட்சிக்காரர்களுக்குப் பெரிதாக ஏதும் செய்யாததும், உறவினர்களைக் கட்சிக்குள் வளரவிட்டதும், சாத்தூராரின் சக்தியைக் குறைத்துவிட்டன!
வீழ்த்தப்பட்ட 'வெள்ளக்கோவில்’!
''சொல்லிக்கொள்ளும்படி என்ன செய்தார்?'' எனத் தொகுதிக்குள் பட்டிமன்றமே நடத்தலாம். தொகுதி மாறியதால், தொல்லை இருக்காது என நினைத்தார். பண இறைப்பை நிகழ்த்தினார். ஆனாலும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சண்முகவேலு கையே ஓங்கியதால் வீழ்ந்தார்!
தடுமாறிய தமிழரசி!
'உன்னைப்பற்றிய ரிப்போர்ட் சரி இல்லையே... அதனால், அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்!’ என கருணாநிதி பகிரங்கமாகச் சொன்னபோதே, தலைவரின் வார்த்தைகளை தமிழரசி ஏற்று இருக்கலாம். 'எப்படி இருந்த தமிழரசி இப்படி ஆயிடிச்சு?’ எனத் தென் மாவட்டமே திகைத்தது. அழகிரி பெயரை அதிகமாகப் பயன்படுத்தி தொகுதியைக் கவனிக்காததன் விளைவு இது!
சாமியை வீழ்த்திய தாட்பூட்!
கே.பி.பி.சாமி அமைச்சரான பிறகும், அவருடைய தடாலடி முகம் மாறாததுதான் ஆச்சர்யம். சாமியின் பேரைச் சொல்லி திருவொற்றியூர் தொகுதி முழுக்கக் கட்டப் பஞ்சாயத்து, வெட்டுக் குத்து என மிரட்டல்கள். சாமி தடுக்கவும் இல்லை; தட்டிக் கேட்கவும் இல்லை. இந்த நிலைகுலைவுக்கு அதுதான் காரணம்!
புஸ்ஸான பூங்கோதை!
'என்னதான் சிரமப்பட்டாலும் தேறுவது கடினம்!’ என்றே இவருடைய நிலவரம் குறித்து எழுதி இருந்தோம். அதன்படியே நூலிழையில் வெற்றியைப் பறிகொடுத்து இருக்கிறார் பூங்கோதை. கட்சிக்காரர்கள் மத்தியிலான வெறுப்பு, தொகுதிக்குப் பெரிதாக ஏதும் செய்யாதது என மைனஸ் பட்டியலின் நீளம் அதிகம்!
'கிர்’ கீதா ஜீவன்!
முரட்டு பக்தர் பெரியசாமியின் மகள். தந்தையின் தலையீடுகளே கீதா ஜீவனைக் கிறுகிறுக்கவைத்தன. 'தொகுதிக்கு இன்னும் செய்திருக்கலாம்’ என்கிற ஏக்கமும் மீனவர்கள் விவகாரமும், கீதாவுக்குப் பின்னடைவைக் கொடுத்தன. தனிப்பட்ட புகார்கள் ஏதும் இல்லை என்றாலும், தாளித்து எடுத்த புயலுக்கு இவர் தப்பவில்லை!
- இரா.சரவணன்
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment