Tuesday, May 31, 2011

தாக்குப் பிடிப்பாரா உளவுத்துறை ராமானுஜம்?

தாக்குப் பிடிப்பாரா உளவுத்துறை ராமானுஜம்?

ளவுத் துறையின் டி.ஜி.பி. என்கிற மகுடத்தை ராமானுஜத்துக்கு சூட்டி உள்ளார் ஜெயலலிதா. கூடவே, காவல் துறையின் நம்பர் ஒன் பதவி (சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி)யையும் கூடுதலாக கவனிக்கும்படி உத்தரவு. கடந்த சில பல ஆண்டுகளாக உளவுத் துறை அரசியல் சாயம் பூசப்பட்டுக்கிடந்தது. அந்த இடத்துக்கு ராமானுஜம் வந்திருப்பது, அந்தக் களங்கத்தை ஓரளவாவது துடைக்கும் என்கிறார்கள் காவல் துறையில்!
தமிழக போலீஸின் உரை கல் என்று அழைக்கப் படுபவர் ராமானுஜம். 33 வருடங்களாகப் பணியில் இருக்கும் இவர், உளவுத் துறையில் 14 வருடங்கள் பணி புரிந்த அனுபவசாலி. 2000-ம் ஆண்டில், சென்னையில் சிறைத் துறைத் தலைவர் அலுவலக வாசல் உட்பட ஐந்து ஊர்களில் முஸ்லிம் தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் வைத்திருந்ததை முன்னரே கண்டறிந்து, உரிய நேரத்தில் துப்பு கொடுத்தவர். தனி நாடு கோஷங்களை முழங்கிய பல்வேறு தீவிரவாதக் குழுக்களை தலை தூக்கவிடாமல் அடக்கியதில் ராமானுஜத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்கள் அனைத்தையும் கம்ப்யூட்டரால் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவரத் திட்டம் வகுத்தவரும் இவர்தான்!
ஆரம்பத்தில் வங்கி அதிகாரியாகத் பணியைத் துவக்கியவர் ராமானுஜம். சவால் எதுவும் இல்லாமல் வாழ்க்கை நகர்வதை ரசிக்காமல்,  ஐ.பி.எஸ். தேர்வு எழுதினார். 1978-ம் வருட பேட்ச்சில் 'ஆல் ரவுண்டர்’ விருது பெற்று தமிழகக் காவல் பணியில் சேர்ந்தார்.
தன்னுடன் பணிபுரியும் அனைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்க விரும்புவார். இக்கட்டான தருணங்களில், கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் ஒப்பிட்டு, 'இதுதான் சரியான தீர்வு' என்று ஆணித் தரமாக சொல்வார். அதற்கான ஆதாரங்களையும் தன் லேப்டாப்பில் தயாராக வைத்திருப்பார். 'அவர் மூளை ஒரு கம்ப்யூட்டர் என்றால், அவரது லேப்-டாப் ஒரு தகவல் லாக்கர்!' என்று வர்ணிக்கிறார்கள், அதி காரிகள். ''தனிமை விரும்பி. லேட்டரல் திங்கிங் மேன். எப்போதும் ஏதாவது ஒரு சப்ஜெக்ட்டை யோசித்துக்கொண்டே இருப்பார்...'’ என்கிறார்கள் சக ஊழியர்கள்.
வார்த்தைகளை அளந்து பேசும் ராமானுஜம், கொஞ்சம் ரிசர்வ்டு டைப். அவர் சிரித்துப் பார்த்த வர்களை, விரல்விட்டு எண்ணலாம். வீட்டுக்குப் போன மறு நிமிடமே, அரசு காரை அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்.  பெரும்பாலும் லேப்-டாப்பில் மூழ்கிவிடுவார். ராமானுஜத்தின் திறமைக்கு உதாரணமாக இரண்டு சம்பவங்கள்: 
* கன்னட நடிகர் ராஜ்குமாரை, சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது, காட்டுக்குள் தகவல் பரிமாற்றத்துக்காக சென்ற ஒரு நபர் கொண்டுபோன பார்சலில் ஜி.பி.எஸ். வசதி உள்ள கருவியை ராமானுஜம் ரகசியமாக அனுப்பிவிட்டாராம். இதன்படி வீரப்பனின் நடமாட்டத்தை, வான் வழியாக, ராணுவ வரைபடங்கள் உதவியுடன் கண்காணித்தாராம். ராஜ்குமாரை விடுவித்ததும், வீரப்பன் இருக்கும் இருப்பிடம் பற்றிய துல்லியமான தகவலை அதிரடிப் படையினருக்குத் கொடுத்தாராம். செவ்வந்திமலை என்கிற இடத்துக்கு அருகே போலீஸ் தன்னைச் சுற்றி வளைத்து விட்டதைக் கவனித்த வீரப்பன், சந்தேகப்பட்டு செக் பண்ணியபோது அந்தக் கருவி சிக்க... அதை உடைத்துப் போட்டுவிட்டுத் தப்பிவிட்டான்.
* ஊழல் ஒழிப்புத் துறையில் ராமானுஜம் இருந்தபோது, 'சாதாரணப் பதவியில் உள்ள அரசு ஊழியர்களைப் பிடிப்பதைவிட, உயர் பதவிகளில் லஞ்சம் வாங்குபவர்களைப் பிடியுங்கள்!' என்பாராம். மருத்துவத் துறை இயக்குநர், போக்குவரத்துத் துறை நிர்வாக இயக்குநர் போன்ற நூற்றுக்கும் அதிகமானவர்களைப் பொறிவைத்து பிடித்தார்களாம். வீடியோ பைரஸி போலீஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர், வெளியூர் அதிகாரிகளை மாதாமாதம் சென்னைக்கு வரழைத்துக் கூட்டம் போடுவதாகச் சொல்லி, மாமூல் வசூலிப்பாராம். இதைக் கேள்விப்பட்டு, கூட்டம் நடந்த நாளில், லஞ்ச ஒழிப்பு போலீஸை அதிரடியாக உள்ளே அனுப்பி ரெய்டு நடத்த... மாமூல் கொண்டுவந்த அதிகாரிகள் சுவர் ஏறி குதித்துத் தலை தெறிக்க ஓடினார்களாம். இதுமாதிரி பல உயர் அதிகாரிகளை பீதியில் நடுங்கவைத்தவர்.
ராமானுஜத்தை நன்கு தெரிந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ''நேர்மை, கண்டிப்புக்கு உதாரணமே அவர்தான். உளவுத் துறையின் முக்கிய அதிகாரியாக ராமானுஜம் இருந்த காலகட்டத்தில் வந்த தேர்தல்களில், அப்போதைய ஆளும் கட்சியினர் தோல்வியை சந்தித்தார்கள். இதை ராமானுஜத்தின் தேர்தல் சென்டிமென்ட் என்றுகூட  சொல்வார்கள். ஆனால், அவரது ஸ்டைல், அரசியல் உளவு வேலை பார்க்க மாட்டார். அவருக்கு வரும் தகவல்கள் அடிப்படையில், அலசி ஆராய்ந்து தன் மனதுக்குப் பட்டதை அப்படியே ஆட்சியாளர்களிடம் சொல்லிவிடுவார். அதுவே அரசியல் தலைவர்களுக்குப் பிடிக்காது. தி.மு.கழக ஆட்சியின்போது உளவுத் துறையில் இருந்த காரணத்துக்காக அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, முதல் வேலையாக ராமானுஜத்தைத் தூக்கி, திருச்சி மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாகப் போட்டார்கள். ம.தி.மு.க. தலைவர் வைகோ, தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, ஜெயலலிதாவிடம் போய் சேர்ந்ததற்கு ராமானுஜமும் ஒரு காரணம் என்று யாரோ பொறியைக் கொளுத்திப்போட... கடந்த தி.மு.கழக ஆட்சியின் ஆரம்பத்தில் டம்மியான பதவிகளிலே போட்டார்கள். பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பதவியில் நியமித்தனர். மதுரையில் 'பவர்' ஆன போலீஸ் அதிகாரி ஒருவரின் ஆபீஸில், ரெய்டு நடத்தி லஞ்சப் பணத்தைக் கைப்பற்றிய இன்ஸ்பெக்டரை, திடீரென்று வேறு பிரிவுக்கு மாற்றினார்கள். தன்னைக் கேட்காமல், அந்த இன்ஸ்பெக்டரை மாற்றியதை தட்டிக் கேட்டார். விளைவு, லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து டம்மியான துறைக்கு அனுப்பப்பட்டார்.
ராமானுஜத்தின் குணம் முதல்வரின் அணுகுமுறையோடு எவ்வளவு தூரம் சரிப்பட்டு வரும் என்று தெரியவில்லை. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் ஓய்வுபெறப்போகிறார் ராமானுஜம்!'' என்றார்.
'ஹானஸ்ட் குப்புசாமி’ என்று திருச்சி மாவட்ட மக்களிடத்தில் பெயர் வாங்கியவர் ராமானுஜத்தின் அப்பா. ரிட்டயர்டு டி.எஸ்.பி. மகனோ... சின்சியர் டி.ஜி.பி.!
- சூர்யா

Source - Vikatan Magazine

No comments:

Post a Comment