Friday, June 3, 2011

கலைஞர் காப்பீடு, கான்கிரீட் வீடு திட்டங்கள் ரத்து


கலைஞர் காப்பீடு, கான்கிரீட் வீடு திட்டங்கள் ரத்து
சென்னை, ஜூன் 3,2011
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மற்றும் கான்கிரீட் வீடு வழங்கும் திட்டங்களை ரத்து செய்துவிட்டு, அவற்றுக்கு மாற்றான திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று ஆளுனர் உரையில் வெளியான அறிவிப்பு:
கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த ஊரக வீட்டு வசதித் திட்டம் பல குறைபாடுகளுடன் உள்ளது.
கட்டுமானச் செலவு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில் அத்திட்டத்தில் ஒரு அலகிற்கு வழங்கப்படும் நிதியான ரூபாய் 75 ஆயிரம் மிகக் குறைந்த அளவாக உள்ளது. இதனால் ஏழை எளிய குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர்.
இதன் காரணமாக மிக அதிக எண்ணிக்கையில் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, இத்திட்டத்தினை கைவிடுவதென இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு மாற்றாக, கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் 'சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்' தொடங்கப்படும்.
இத்திட்டத்தில் சுமார் 300 சதுர அடி அளவில் ரூபாய் 1.80 இலட்சம் செலவில் அரசே வீடு கட்டிக்
கொடுக்கும். அதே போல், நகர்ப்புர ஏழைகளின் வீட்டுவசதிக்காக மத்திய அரசு செயல்படுத்தும்
திட்டங்களின் நிதியை ஒருங்கிணைத்து ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை நகரில் ஆற்றோரங்களில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான நவீன வீடுகள்
வழங்கப்படும்.
காப்பீட்டுத் திட்டம்..
அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய தரமான மருத்துவச் சேவையை வழங்குவதே இந்த அரசின்
நோக்கமாகும். தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மக்களின் தேவைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் முழுமையாக இல்லை என்பதால், இத்திட்டம் கைவிடப்படும்.
அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த
இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தும். நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏழை மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் 24 மணி நேரம் செயல்படும் மையங்களாக மாற்றியமைக்கப்படும். மருத்துவச் சுற்றுலாவை ஒரு பெரிய அளவில் ஊக்குவிக்க ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய
மருத்துவ நகரங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.
மருத்துவத் துறையில் தனியார் மூலதனத்தை அதிகரிக்கும் வகையில் தெளிவான
வழிமுறைகளை இந்த அரசு வகுக்கும்.

Source - Vikatan Magazine

No comments:

Post a Comment